Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்தப் பிரதேசத

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்தப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல் நடத்த முடியும்: சரத் பொன்சேகாவுக்கு எழிலன் எச்சரிக்கை

[வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 20:59 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா இராணுவத்தின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானிப்பவர்களாக இருந்தால் அது எந்த பிரதேசத்துக்குள்ளும் இருந்தாலும் அந்த இலக்கை அழிக்கக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும் தாக்குதல் திறன் எப்போதும் விடுதலைப் புலிகளிடம் இருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பாதுகாக்கவே சம்பூரைக் கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்த பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல் நடத்தக்கூடிய திறன் புலிகளுக்கு உண்டு சி. எழிலன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாகவும் கள நிலைமைகள் தொடர்பாகவும் புலிகளின் குரல் வானொலிக்கு இன்று வெள்ளிக்கிழமை சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்:

சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிற நடவடிக்கையே தற்போதைய தாக்குதல்கள். தங்களது நிலைகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

ஏனெனில் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இருந்து கொண்டிருந்த போதுதான் திருகோணமலை கடற்படைத் தளத்திலே எங்களுடைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் கலங்கள் அழிக்கப்பட்டு பாரிய வெற்றிகளை நாம் பெற்றிருந்தோம்.

அதேபோல் இந்த சம்பூர் பகுதியானது சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த காலத்தில்தான், சீனன்குடா விமானத் தளத்துக்குள் எங்கள் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த விமானங்கள் அழிக்கப்பட்டன. இப்படியான நிலையில் தாக்குதல்களை தடுப்பதற்காக சம்பூரை கைப்பற்றுவது என்பது வேடிக்கையான விடயம்.

நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தாக்கியபோது அதற்கான தாக்குதல் பிரதேசத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்ல முடியாது.

இலக்குகள் அழிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானிப்பவர்களாக இருந்தால் அது எந்த பிரதேசத்துக்குள்ளும் அந்த இலக்கை அழிக்கக் கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும் தாக்குதல் திறன் எப்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதன் மூலமாகத்தான் சிறிலங்கா இராணுவத்தினர் தங்களுடைய பாதுகாப்பை மேற்கொள்ள முடியும் என்பது பொய்யான விடயம்.

ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில் இந்த பிரதேசங்களை நிர்மூலமாக்கி இங்கிருக்கிற தமிழ் மக்களை வெளியேற்றி திருகோணமலையை எப்போதுமே ஒரு சிங்களப் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கின்றனர். அதற்கேற்ற வகையில் இங்குள்ள மக்களை விரட்டியடித்து இதனை ஒரு சூனியப் பிரதேசமாக்கி தாங்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆக்கிரமிப்பை நடத்த வேண்டும் என்பதற்கான நடவடிக்கையாகத்தான் இந்தத் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை நாங்கள் ஒரு வலிந்த தாக்குதலாக நடத்தவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் இதே கடற்படைத் தளத்திலிருந்து சம்பூர் பிரதேசங்களை நோக்கி பல்குழல் பீரங்கிகளால் எறிகணைகள் வீசப்பட்டு 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பொதுமக்கள் காயமடைந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் நீடித்தே இருந்தன. விமானங்கள் மூலமான குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் என்று கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் முதல் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்தன. இதனால் இங்குள்ள மக்களினது சொத்துக்களை அழித்து விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்தப் பிரதேசத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் தாக்குதல் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தினோம். எமது தாக்குதல்கள் துல்லியமாக முகாம்களுக்குள் மட்டுமே விழுந்தன. கடற்படைத் தளம் மற்றும் விமானத் தளத்துக்குள்தான் எமது இலக்குள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை- காயப்படவில்லை. அந்த அளவுக்கு துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களானது இந்தப் பிரதேச மக்களின் மீது நடத்தப்பட்டு மக்களை வெளியேற்றியது. மக்கள் கொல்லப்படும் நிலை உருவாகியது. இந்தப் பிரதேசத்தில் 95-க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

கட்டைப்பறிச்சான், சேனையூர், சம்பூர் பிரதேசங்கள் தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நிர்மூலமாக்கப்பட்டு சூனிய பிரதேசமாகிவிட்ட பிரதேசத்தைத்தான் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று முற்றுகையிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலானது யுத்த நிறுத்தத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கையாகத்தான் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் உள்ளது.

இது தொடர்பில் நேற்று முன்நாள் திருகோணமலை மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவருடன் தொடர்பு கொண்டு கலந்துரையடினோம். அப்போது இந்தத் தாக்குதலைப் பொறுத்த வரையில் திருகோணமலையில் ஒரு முழுமையான யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக கருதமுடியுமா என்று கேட்டோம்.

இனம்காணப்பட்ட இலக்குகள் மீதான ஒரு தற்காப்புத் தாக்குதல் என்று சிறிலங்கா இராணுவத்தினர் கூறிக்கொண்டனர். எனவே அதே மாதிரியான ஒரு தற்காப்புத் தாக்குதலையும் இனம் காணப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதலையும் நாங்களும் மூதூர் பிரதேசம் நோக்கிச் செய்துவிட்டு எங்களுடைய நிலைகளுக்குத் திரும்பியிருந்தோம். அது சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.

தற்போது சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கியிருப்பது ஆக்கிரமிப்பு யுத்தம். அந்தப் பிரதேச மக்களைக் கொலை செய்து வெளியேற்றிவிட்டு அந்தப் பிரதேசத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஒரு யுத்தமாக இது தொடங்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுத்தவரையில் சிறிலங்கா இராணுவம் யுத்தத்தைத் தொடங்கிவிட்டதாகக் கொள்ளலாமா என்று கண்காணிப்புக் குழுவிடம் கேட்டோம். அவர்கள் பரிசீலித்துவிட்டுச் சொல்வதாகக் கூறியுள்ளனர்.

களத்தில் சிறிலங்கா இராணுவத்தின் நிலைமை என்ன?

கட்டைப்பறிச்சான், சேனையூர் பகுதிகளில் முன்னேறுகிற நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எங்களினால் அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோப்பூர் செல்வநகர்- பட்டியடிப் பகுதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு புதிய வழியைத் திறப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அந்தத் தாக்குதல் நடவடிக்கை இன்று முறியடிக்கப்பட்டு அவர்கள் தங்களது நிலைகளுக்கு பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சம்பூரில் மக்கள் இப்போது உள்ளனரா?

சம்பூர் பகுதியிலிருந்து மக்கள் முற்று முழுதாக வெளியேறியிருக்கின்றனர். அதற்கு அருகில் உள்ள சில கிராமங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்கள் ஈச்சிலம்பற்று மற்றும் வாகரை பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர்.

வாகரை மற்றும் மூதூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அரச சாரபற்ற நிறுவனங்களுக்கு சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஏதேனும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனரா?

ஐ.நா.வின் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினர் இன்று வெள்ளிக்கிழமை வாகரைப் பிரதேசத்துக்கு வருகை தந்தனர். அவர்களது முதலாவது பயணமாக இது இருந்தது. இப்பகுதிக்கு வருவதற்கு அவர்களுக்கும் தொடர்ச்சியான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்கள் பேணப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் பல அழுத்தங்களைக் கொடுத்தே அவர்கள் இன்று வந்துள்ளனர்.

வாகரையில் அவர்களை நான் சந்தித்தேன். தங்களுடைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பிலான தங்களது வேலைத்திட்டங்கள் மற்றும் தங்களுடைய பாதுகாப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.

அண்மையில் மூதூர் பிரதேசத்தில் அக்சன் பார்ம் நிறுவன பணியாளர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலினால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சம் கொண்டிருந்தமையால் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

எங்களுடைய தரப்பிலிருந்து முழுப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களினது நிலைமை எப்படி உள்ளது?

இடம்பெயர்ந்த மக்களைப் பொறுத்த வரையில் அவர்களது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலக உணவுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் பேருக்காக மட்டுமே இரண்டாவது கட்ட விநியோகங்கள் இன்று வழங்கப்பட்டன.

ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த பிரதேசத்தில் மொத்தம் 40 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

1,750 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இப்போதும் திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து திருகோணமலை மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் சில்வாவிடம் தெரிவித்த போது எந்த ஒரு மக்களும் இங்கு இல்லை- அவர்கள் முழுமையாக இடம்பெயர்ந்துவிட்டனர் என்று கூறினார்.

மேலும் அந்தப் பிரதேசத்துக்குள் வாழ்கிற மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது என்ற செய்தியை எமக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

அதனால் அந்த மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் இருந்தன. அவர்களது வாழ்நிலைமைகள் குறித்து யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்திடம் இன்று தெரியப்படுத்தினோம். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அந்த மக்கள் அந்த இடங்களில் இருப்பதைப் பார்வையிட்டுள்ளனர்.

ஊடகங்களில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய பின்னடவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனவே?

திருகோணமலை நிலப்பிரதேசத்தில் எங்கள் நிலைகளை நாங்கள் சரியாக வைத்துக் கொண்டுள்ளோம். இந்த நகர்வுகளால் என்பது முற்று முழுதாக எங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

எங்களது தேவைக்கேற்ற நடவடிக்கையை நாம் செய்து கொண்டே இருப்போம்.

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் எவை?

திருகோணமலையில் 4 வெவ்வேறு பிரதேசங்கள் எமது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களைக் கொண்ட மொத்தமாக 26 கிராம சேவகர் பிரிவுகள் எமது நிர்வாகத்தின் கீழ் இருப்பதாக வரைபடத்தில் கொடுத்துள்ளோம்.

சம்பூர் தொடக்கம் கட்டைப்பறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூரின் பின்பகுதி- அதனூடாக ஈச்சிலம்பற்றின் முழுமையாக பிரதேசங்களும் மாவிலாறு வரை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் கொடுத்த வரைபடத்தில் எங்களுடைய பிரதேசங்களாக குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரதேசமாக திருகோணமலையின் கடற்படைத் தளத்துக்கு நேர் எதிரே உள்ள உப்பாறு பிரதேசமும் எங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக உள்ளது. இறால்குழியிலிருந்து நாவலடி, குரங்குப்பாஞ்சான் உள்ளிட்ட பிரதேசங்களும் உப்பாறு பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

தியாகவனம் பகுதியில் மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள பெரும்காட்டுப்பகுதி. அதையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வரையறுத்து கண்காணிப்புக் குழுவிடம் தெரியப்படுத்துள்ளோம்.

4 ஆவது பிரதேசமாக நிலாவெளி- கண்ணியா ஆகியவற்றின் பின்பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களும் எமது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளோம்.

தற்போது சிறிலங்கா இராணுவத்தினர் இந்த எல்லை வரைகோட்டை தாண்டியுள்ளனரா?

ஆம். எமது எல்லைப்பகுதிகளைத் தாண்டித்தான் கட்டைப்பறிச்சான், சேனையூரில் உள்நுழைந்திருக்கிறார்கள்.

இந்த எல்லை மீறல்களுக்குப் பின்னர் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா?

இந்தத் தாக்குதல் நடந்த போது நேற்று முன்நாள் இது குறித்து முறையிட்டோம்.

ஆனால் பாதுகாப்புகாக கண்காணிப்புக் குழுவினர் வரவில்லை. தொலைபேசியூடாக அவர்களுக்குத் தெரிவித்தோம். எழுத்து மூலமாகவும் எமது முறைப்பாட்டை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

சிறிலங்கா இராணுவத்தினது தாக்குதலானது எமது வரையறுக்கபட்ட பிரதேசத்துக்குள்ளான ஆக்கிரமிப்பு யுத்தம் என்று அதில் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார் சி.எழிலன்.

முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி

http://www.eelampage.com/?cn=28587

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 2 நாள் தானே இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.