Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு காங். இழைத்த 10 துரோகம்: ஜெ. பட்டியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார்.

 

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:

 

"2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள்.

அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947-ஆம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947-ஆம் ஆண்டு எந்தத் தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய,

நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள். அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது.

 

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு; ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

 

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார் ஜெயலலிதா.

 

விரைவில் மின்வெட்டு இல்லாத தமிழகம்

 

தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டவர், "மின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். இதன் விளைவாக மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். எதிர்கால மின் தேவைக்காக 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க-வையும் மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் விடை.

 

மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக, மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.

 

இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.

 

மத்திய அரசு இழைத்த துரோகம் 10

 

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இது முதல் துரோகம்.

 

போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும்; இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனப் படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்; தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! இலங்கை அரசுக்கு சாதகமாகத் தானே மத்திய காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது! இது இரண்டாவது துரோகம்.

 

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. இது மூன்றாவது துரோகம்.

 

கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது நான்காவது துரோகம். தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஐந்தாவது துரோகம்.

 

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஆறாவது துரோகம்.

 

தமிழகத்திற்குரிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஏழாவது துரோகம். ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். அனுமதி வழங்க மறுக்கின்ற அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது எட்டாவது துரோகம்.

 

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அமைக்காதது ஒன்பதாவது துரோகம். மாதா மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி விலைவாசி உயர வழிவகுத்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது பத்தாவது துரோகம்.

 

இப்படி மத்திய காங்கிரஸ் அரசால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழக அரசுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அதிகாரங்களை பறித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. மாநில காவல் துறையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்த முனைந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

 

திமுகவுக்கு பாடம் புகட்டுக

 

மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை குறைக்கக் கூடிய வகையில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த முனைந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்திய அரசு மத்திய காங்கிரஸ்

கூட்டணி அரசு. பண வீக்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதற்கும்; இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் காரணமாக இருந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

 

மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை குறைத்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. விவசாய பயிர்களுக்கான பிரீமியம் தொகையை உயர்த்தி ஏழை எளிய விவசாயிகளின் வயிற்றில் அடித்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. உர விலைகள் உயரக் காரணமாக இருந்த அரசு மத்திய காங்கிரஸ் அரசு.

 

இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க-வுக்கும் பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு தற்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்துவீர்களா? காங்கிரசுக்கு பாடம் புகட்டுவீர்களா? திமுக-வுக்கு பாடம் புகட்டுவீர்களா?

 

பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த வேண்டும்!

 

வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்க நமது பாதுகாப்புத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், நமது ராணுவத்தை, கடற் படையினை, விமானப் படையினை நவீனமயம் ஆக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

 

கடந்த 52 ஆண்டுகளில் அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தான் பாதுகாப்புத் துறைக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் தரைப் படைக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட தொகையில் 92 விழுக்காடு தொகை ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கு சென்றுவிடும். மீதமுள்ள வெறும் 8 விழுக்காட்டினை வைத்து தான் புதிய

ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு இந்திய ராணுவத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆளாக்கியுள்ளது.

 

மூலதனச் செலவுக்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும்; புதியதாக ஆயுதங்கள் தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் ஆன நிதி ஒதுக்கீடு மிகமிகக் குறைவு. மேலும் நவீனமயம் ஆக்கலுக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் நீண்ட தாமதம் ஏற்படுவதால் அதற்கான மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் நவீன போர்க் கருவிகள் வாங்குவதற்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நீண்டகால ஒருங்கிணைக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டம் மற்றும் ஐந்தாண்டு கொள்முதல் திட்டம் ஆகியவை வெறும் காகித வடிவிலேயே உள்ளன. இந்தத் திட்டங்களுக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விமானப் படையை நவீனமயம் ஆக்குவதற்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்புத் துறையில் நடக்கும் ஊழல்களை களைய ஆயுதங்களை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். இது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் மேற்கொள்வதைவிட அந்த நாட்டின் அரசு மூலமாக ஒப்பந்தம் மேற்கொள்வது ஊழலை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்புத் துறையில் இவற்றை எல்லாம் செய்யாமல் கடந்த பத்து ஆண்டுகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. முப்படையில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை.

 

முப்படையை வலுப்படுத்துவோம்

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையினருக்கு பல்வேறு படிகள், வீட்டு வசதி, கேண்டீன் வசதி, குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த அளவு சலுகைகளை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் வழங்கவில்லை. நாட்டுப் பற்றுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் காவல் துறையினர் தங்கள் பணிகளை, பொதுமக்களை காக்கும் பணிகளை மேற்கொள்ள இவை வழி வகுத்துள்ளன. இது தவிர நவீன ஆயுதங்கள் தளவாடங்கள் ஆகியவை காவல் துறையினருக்காக வாங்கப்பட்டு காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல் துறை எப்படி விளங்குகிறதோ அதே போன்று மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்திய பாதுகாப்புத் துறை விளங்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அண்டை நாடுகளிலிருந்து வரும் சவால்களை சமாளிக்கும் வகையில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான நவீன ஆயுதங்களும், தளவாடங்களும் வாங்கப்படும். மொத்தத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக பாதுகாப்புத் துறை பலப்படுத்தப்படும். இது தவிர தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க ஓர் அக்கறையுள்ள அரசு இருக்கின்றது என்று முப்படையில் பணிபுரிவோர் கூறும் அளவுக்கு, அவர்களுக்கு தேவையான அனைத்துச் சலுகைகளையும் நாங்கள் செய்து தருவோம். இவ்வாறு முப்படையினரை ஊக்கப்படுத்துவது அவர்கள் மேலும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பணிபுரிய வழி வகுக்கும். இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்றார்.

 

இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட அவர், "எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

கருணாநிதி மீது சாடல்

 

இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை ஆகும். கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு எதையாவது செய்ததா? 'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள்

நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட கட்சிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும். வழங்குவீர்களா?" என்று கூறி, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார் முதல்வர் ஜெயலலிதா. 

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article5746837.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.