Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் விலகிச் செல்கின்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் விலகிச் செல்கின்றதா?

முத்துக்குமார்

தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல,மெல்ல விலகிச் செல்கின்றதா என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என கிழக்கின் முன்னேறிய பிரிவினர் சிலர் நினைப்பதும், உடனடிப் பிரச்சனையாக முஸ்லிம்களுடனான முரண்பாடு இருப்பதால் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அதற்கு முகம் கொடுக்க முடியும் எனக் கருத முற்படுவதும் இச் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இந்தப் போக்கு ஆரம்பத்தில் கல்முனையில் தோன்றி இன்று மட்டக்களப்பு, திருகோணமலை என கிழக்கு மாகாணம் முழுவதும் பரவுகின்றது. கல்முனையில் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை மூடப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும் கல்முனை தமிழ்ப் பிரதிநிதிகள் கொழும்பு சென்று பொதுபலசேனாவை அழைத்து வந்தனர். இன்று தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை தரம் உயர்த்தும் போராட்டங்களையும் நடவடிக்கைகளையும் பொதுப்பலசேனா தலைமையிலேயும், கல்முனை பௌத்த விகாரபதி தலைமையிலேயுமே கல்முனை தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அம்பாறை மாவட்ட சிங்கள அரசியல் தலைவர்களும் இதற்கு ஒத்துழைக்கின்றனர்.

அமைச்சர்களுடனான சந்திப்பு, கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் வீதி பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புப் போராட்டம் எல்லாம் இவர்கள் தலைமையிலேயே இடம்பெற்றன. தங்களது செயற்பாடுகளை குழப்பிவிடும் என்பதற்காக கூட்டமைப்பினர் இவற்றில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற அருண் தம்பிமுத்து, தங்கேஸ்வரி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

இது விடயத்தில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் முஸ்லிம் சூத்திரத்தையே பின்பற்ற முனைகின்றனர். இலங்கை மட்டத்தில் முதல் இரு சமூகங்களாக தமிழர்களும், சிங்களவர்களும், இருக்கின்ற நிலையில், சிங்கள சமூகத்துடன் இணைந்திருப்பதே தங்களுக்கு பாதுகாப்பானது என முஸ்லிம்கள் கருதினர். இதனை முஸ்லிம் ஆய்வாளர் ஒருவர் 'தமிழரும் சிங்களவரும் முரண்பட்டால் நாங்கள் நீந்துவோம். அவர்கள் ஒன்றுபட்டால் நாங்கள் மூழ்குவோம்'என வர்ணித்தார்.

இதே சூத்திரத்தையே தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் பிரயோகிக்க விரும்புகின்றனர். அங்கு பிரதான முரண்பாடாக சிங்கள-முஸ்லிம் முரண்பாடு இருப்பதனால் சிங்கள சமூகத்துடன் இணைந்து செயற்படுவதே தங்களுக்கு பாதுகாப்பானது என கருத முற்படுகின்றனர்.

பொதுபல சேனாவையும், அம்பாறை மாவட்ட சிங்கள அரசியல் சக்திகளையும் பொறுத்தவரை தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக இரண்டு இலக்குகள் உள்ளன. அதில் முதலாவதும் பிரதானதுமான இலக்கு தமிழ்த் தேசியத்தை சிதைப்பது. இரண்டாவது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வது.

முதலாவது இலக்கை பொறுத்தவரை தமிழ்த்தேசியத்துடனான தமது பற்றுறுதியை கிழக்குத் தமிழர்கள் போர் முடிவடைந்த பின்னரும் வெளிக்காட்ட தவறவில்லை. பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சிசபைத் தேர்தல், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பவற்றில் கருணா, பிள்ளையான் போன்றோரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தெளிவாக வெளிக்காட்டியிருந்தனர். இது சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு வித அச்சத்தை கொடுத்தது. எப்படியாவது இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என நினைத்தது. கிழக்கு தமிழர்கள் முஸ்லீம் ஆதிக்கம் தொடர்பாக அதிருப்தியுற்றிருப்பதால் அதனை பயன்படுத்த முற்படுகின்றது.

இரண்டாவது இலக்கான அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் ஆதிக்கத்தை இல்லாதொழித்தல் விடயத்தில் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டால்தான் அதனைச் சாத்தியமாக்க முடியும் எனச் சிங்கள சமூகம் கருதுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் முதல் நிலையிலும் சிங்களவர்கள் இரண்டாவது நிலையிலும், தமிழர்கள் மூன்றாவது நிலையிலும் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளனர். எனினும் முஸ்லீம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான எண்ணிக்கை வேறுபாடு மிகவும் குறைவானதாகும். தமிழர்கள் 20 வீதத்திற்கு குறைவாகவே உள்ளனர்.

அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல, கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடு உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்வதால் அங்கு அதிகமாக உள்ளது. கல்முனைப் பகுதியிலேயே இம் முரண்பாடு மிகவும் அதிகம். கல்முனை நகரத்தின் பெரும் பகுதி தமிழ்ப் பிரதேசமாக இருப்பதால் முஸ்லீம் தரப்பு அதனை எப்படியும் அபகரிக்க முயல்கின்றது. அதனால் தான் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்படுவதை அது அனுமதிக்க பின்னிற்கின்றது. அஸ்ரப் காலத்திலிருந்தே இந்நிலை நீடிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியிலும், மட்டக்களப்பு தொகுதியின் காத்தான் குள-ஆரையம்பதி எல்லைப் பிரதேசத்திலும் இம் முரண்பாடு அதிகமாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் சிங்கள ஆதிக்கத்திற்கு முகங்கொடுப்பதால் இம் முரண்பாடு சற்று குறைவு எனலாம்.

மூன்று மாவட்டத்திலும் முஸ்லீம்களுடன் முரண்பாடு உள்ளதால் சிங்கள தேசத்துடனான முரண்பாட்டை விட முஸ்லீம்களுடனான முரண்பாட்டையே தமிழர்கள் பெரிதாகப் பார்க்கின்றனர். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், 'தங்கள் பிரதேசத்தில் விகாரை கட்டுவதா?, பள்ளிவாசல் கட்டுவதா? ஏன்ற பிரச்சினை வந்தால் நாம் விகாரையை கட்டுங்கள் எனக் கூறுவோம்' எனத் தெரிவித்தமை முரண்பாட்டின் உச்சத்தை காட்டுகின்றது.

'சிங்கள அரசியலைச் சார்ந்து இயங்குதல்' என்ற இந்தப் போக்கின் உச்ச நிலையை மார்ச் 9ம் திகதி கல்முனையில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காட்டியது. ஆரம்பத்தில் ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவே பௌத்த பிக்கு இதனை ஒழுங்கு செய்திருந்தார். பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் ஜனாதிபதிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்காவின் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துடன் பொதுபலசேனா தமிழ்த் தேசியத்தை கிழக்கில் சிதைத்தல் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து விட்டது என்றே கூற வேண்டும். 1ம் கட்டத்தில் தமிழ்-முஸ்லீம் முரண்பாட்டினைப் பயன்படுத்தி அது தமிழ் மக்களுக்குள் நுழைந்தது. இரண்டாம் கட்டத்தில் பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக கிழக்குத் தமிழர்களை இறக்கும் முயற்சியில் இறங்குகின்றது. எதிர்காலத்தில் வடக்கிற்கு எதிராக கிழக்கு மக்களை இறக்கும் முயற்சியில் அது இறங்கும்.

இத்தனைக்கும் அது வாக்குறுதி அளித்த மாதிரி தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவை தரமுயர்த்தும் செயற்பாட்டை செய்து முடிக்கவில்லை. ஆரம்பத்தில் எல்லாம் முடிந்தது போன்று இருந்தது. ஆனால் தொடர்ந்து காலம் இழுத்தடிக்கப்படுகின்றது. இப் பிரச்சனை இருக்கும் வரை தான் கல்முனை தமிழ்மக்கள் தம்முடன் நிற்பர் என்பதால் பிரச்சினையை தொடர்ந்து தக்கவைக்க அது விரும்பக் கூடும். இது வெற்றியடைந்தால் கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் இந்த வெற்றி அலை பாயலாம். அதன் பின்னர் கிழக்கு தமிழ்மக்கள் அனைவரும் பொதுபலசேனாவிற்கு பின்னால் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

ஆனால் இனப்பிரச்சினை தீர்விற்கு வரும் வரை முஸ்லீம்கள் அரசாங்கம் கைவிடும் எனக் கூறுவது மிகவும் கடினம். கிழக்கு சிங்கள தலைமைகளின் விருப்பம் வேறாக இருந்தாலும் சிங்களத் தேசியத் தலைமை முஸ்லீம்களை இலகுவில் கைவிடாது. இதற்காக கிழக்கில் சுயாதீனமான முஸ்லீம் அதிகாரம் ஒன்று எழுச்சியடைவதையும் அது அனுமதிக்கப் போவதில்லை.

இங்கே எழுப்பவேண்டிய கேள்வி கிழக்கு தமிழ்மக்கள் இவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தூண்டிய அகக் காரணிகள் என்ன என்பதாகும். புறக்காரணி மிகவும் தெளிவானது. அது கிழக்கில் வளர்ந்து வரும் முஸ்லீம் ஆதிக்கமே. இதுவரை காலமும் தென்கிழக்கு தமக்கு சொந்தம் எனக் கூறிய முஸ்லீம்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் முழு கிழக்குமே தமக்கு சொந்தம் என நினைக்க முற்படுகின்றனர். வடக்கு தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கட்டும். கிழக்கு முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருக்கட்டும் என அவர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர். முன்னர் வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக நின்ற விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லீம்களும் இன்று அதனைக் கைவிட்டுள்ளனர்.

புறக்காரணிக்கு அப்பால் அகக்காரணி என்று பார்க்கும் போது பிரதான காரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளே தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை இழக்கச்செய்து கிழக்குத்தமிழ் மக்களை பொதுபலசேனாவிற்கு பின்னால் செல்வதற்கு தூண்டியிருக்கின்றது.

அதில் முதலாவது, வடக்கு-கிழக்கு பிரிந்த மாகாண சபைகளில் போட்டியிட்டமை ஆகும். வட-கிழக்கினை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பிரித்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிடாத வரை வட-கிழக்கு இணைப்பு என்பதற்கு ஓர் அரசியல் அந்தஸ்து இருந்தது. கூட்டமைப்பு பிரிந்த மாகாணசபைகளில் போட்டியிட்டதோடு அந்த அரசியல் அந்தஸ்தும் இல்லாமல் போய்விட்டது. இதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலுடன் இணைந்திருப்தன் மூலம் கிழக்கு தமிழ் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது என அவர்கள் நினைக்கப் பார்க்கின்றனர்.

அதுவும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மாகாண அதிகாரம் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றதனால் தற்காப்பு நிலையைக் கூட இழந்து விட்டோம் என்ற உணர்வு அவர்கள் மத்தியில் வளரத் தொடங்கியது. கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தபோது பல ஆய்வாளர்கள் இந்த நிலை வரலாம் என்ற அச்சத்தை சுட்டிக்காட்டியிருந்தனர். தேர்தலில் போட்டியிட்டு வடக்கு-கிழக்கு பிரிப்பிற்கும், மாகாணசபைத் தீர்விற்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டனர்.

கூட்டமைப்பினர் அவற்றையெல்லாம் செவிசாய்க்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை. தாம் மாகாண சபை நிர்வாகத்தைக் கைப்பற்றுவோம் என்ற மாயத் தோற்றத்தை கொடுக்க முனைந்தனர். கிழக்கின் சமூக அமைப்பு தமிழர்கள் தனித்து பெரும்பான்மையைப் பெற ஒருபோதும் இடம் கொடுக்காது என்பது சம்பந்தன் தலைமைக்கு தெரியாததல்ல.

ஏற்கனவே வடக்கு-கிழக்குப் பிரிக்கப்பட்ட பின், கிழக்கின் நிர்வாக அதிகாரிகளாக முஸ்லீம்களே அதிகமாக இருந்தனர். இந்த அதிகாரமும் முஸ்லீம்கள் அமைச்சர்களாக இருப்பதனால் உருவான அதிகாரமும் இணைந்து தம்மை புறக்கணிப்பதாகவே கிழக்குத் தமிழர்கள் கருதுகின்றனர். மாகாண சபை நிர்வாகமும் அவர்களின் கைகளில் சென்று, மூன்று முனைகளில் தாம் புறக்கணிக்கப்படுவதால் தற்காப்பு நிலையைக் கூட நாம் இழந்துவிட்டதாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாவது, அண்மைக் காலமாக கூட்டமைப்பினர் வடக்கு-கிழக்கு என்று மட்டும் பேசி வடக்கினை முக்கியத்துவப்படுத்துவதாகும். அதுவும் வட மாகாண சபைத் தேர்தல் வெற்றியின் பின்னர் செல்லுமிடங்களிலெல்லாம் வடக்கிற்கு அதிகாரத்தை தாருங்கள் என்றே கேட்கின்றனர். கிழக்குத் தமிழர்கள் பற்றி வாயே திறப்பதில்லை. இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களும் வடக்கிற்கு சென்று முதலமைச்சர் உட்பட சிவில் சமூகத்தவர்களை சந்திக்கின்றனர்களே தவிர கிழக்கிற்கு செல்வதில்லை. கிழக்கிற்கும் செல்லுங்கள் என கூட்டமைப்பினரும் கேட்பதில்லை. வெளிநாடுகளுக்கு பயணங்கள் செல்கின்றபோது கிழக்கின் தலைவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்நிலை எல்லாம் வடக்கு தங்களைப் புறக்கணிக்கின்றது என்ற உணர்வை கிழக்கு தமிழர்களுக்கு வழங்குகின்றது என்றே கருதப் பார்க்கின்றனர்.

ஏற்கனவே இங்கு பிரதேசவாதப் பிரச்சினை ஒன்று உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே? ஆனாலும் தமிழ்த் தேசிய அரசியல் இவற்றை மேவி நின்று கிழக்கினை இணைத்து வைத்திருந்தது. இன்று அது ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது.

மூன்றாவது, கிழக்கு மாகாண சபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் வினைத்திறன் அற்று செயற்படுவதாகும். கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைமை ஸ்தானம் கூட்டமைப்பிடமே இருக்கின்றது. இது மக்களினுடைய பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவதற்கு பயன்படுத்தக்கூடிய களமாகும். ஆனால் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் இச் செயற்பாட்டை சிறிது கூட மேற்கொள்வதில்லை. எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருக்கின்றார் என்பதே தற்போது பலருக்கு மறந்து விட்டது. வடக்கு மாகாண சபையில் அதிரடித் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவது போல அங்கு எதுவும் கொண்டு வரப்படுவதில்லை. குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கைகளாவது விடலாம். அதுவும் நடைபெறுவதில்லை. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களின் அறிக்கைகள் தான் அவ்வப்போது வெளிவருகின்றது. அவை கூட பெறுமதி வாய்ந்தவையாக இருப்பதில்லை.

மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் அவ்வப்போது காத்திரமான அறிக்கைகளை விடுவார். தற்போது அதையும் காணோம். சம்பந்தன் தலைமையின் கட்டுப்பாடு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவர் கூட்டமைப்பின் உறுப்பினராக அல்லாது தனித்த உறுப்பினராக இருந்தபோது சற்று வினைத்திறனுடன் செயற்பட்டிருந்தார். இன்று அதுவும் இல்லை. கூட்டமைப்பிற்குள் வந்துவிட்டால் செயற்பாட்டாளர்களும் பலவீனமாகி விடுவார்களோ!

நான்காவது, அம்பாறை மாவட்ட தமிழர்கள் தொடர்பாக கூட்டமைப்பாளர் போதிய அக்கறை செலுத்தாமை ஆகும். கூட்டமைப்பினர் எவர் தொடர்பாகவுமே அக்கறை செலுத்துவதில்லை என்பது வேறு கதை. இன்று சிறையில் உள்ளவர்கள், விதவைகள், தாய் தந்தையை இழந்திருக்கும் சிறுவர்கள், அங்கவீனர்கள், போர்ப்பாதிப்புக்கு உள்ளாகி விசேட மருத்துவ தேவைகளையுடையோர் என்போர் விசேட கவனத்திற்குரியவர்கள். அவர்கள் எவர் பற்றியும் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்துவதில்லை. கூட்டமைப்பிற்குள் ஒரு சில தனிநபர்கள் மட்டும் சில பணிகளை செய்கின்றனர். கூட்டமைப்பு சார்பில் நிறுவன ரீதியான பணி எதுவும் இல்லை. தேர்தல் கூத்துக்கு செலவிடுகின்ற பணத்தில் சிறிதளவாவது இதற்கு செலவிட்டிருந்தால் குறைந்த மட்டத்திலாவது தேவைக்குரியவர்களின் நலன்கள் பேணப்பட்டிருக்கும்.

விசேட தேவையற்றவர்களே கவனிக்கப்படாமல் இருக்கும் போது பிரதேசங்கள் கவனிக்கப்படும் என எதிர்பார்ப்பதற்கில்லை. விசேட தேவையுள்ளோர் போலவே விசேட தேவையைக் கொண்டிருக்கும் பிரதேசங்களும் உள்ளன. அப் பிரதேசங்கள் தாங்களாகவே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாதவை. தமிழர் தாயகத்தில் அம்பாறை மாவட்டமும், திருகோணமலை மாவட்டமுமே இத் தேவைகளை வேண்டி நிற்கும் பிரதேசங்களாக உள்ளன.

இங்கு வாழ்வாதாரம், பாதுகாப்பு என்கின்ற இரண்டுமே பிரச்சனைகளாக உள்ளன. அம்பாறை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு பிரதேசத்திலும் இந்நிலை உள்ளது. வாழ்வாதாரப் பிரச்சனையில் தமிழ் மக்களின் சமூக முதலீடுகளை இப்பகுதிகளுக்கு பாய்ச்ச வேண்டிய தேவை உள்ளது. தமிழ் சமூக முதலீடுகள் வடக்கில் பாய்ச்சப்படுகின்ற அளவிற்கு கிழக்கிற்கு பாய்ச்சப்படுகின்றது எனக் கூற முடியாது.

பாதுகாப்பு பிரச்சினை மிகவும் முக்கியமானது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முஸ்லீம் ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். மூதூர் கிழக்கு மக்கள் சிங்கள ஆதிக்கத்திற்கு முகம் கொடுக்கின்றனர். இது அவர்களுடைய இருப்பு சம்பந்தமானது. ஒவ்வொரு நாளும் தங்களுடைய இருப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் விவகாரம் சர்வதேச மட்டத்திற்கு சென்ற நிலையில் சர்வதேச சமூகத்தைக் கொண்டு இதற்கு ஒரு பாதுகாப்புச் சுவரை கட்டியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை என்னவென்றால் அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ்ப் பிரதிநிதி கிடையாது. பியசேனா அரசாங்கத்திற்கு தாவிய பின்னர் அம்பாறை மாவட்டத்தை கவனிக்க சுமந்திரனே நியமிக்கப்பட்டிருந்தார். சுமந்திரன் அம்பாறை மாவட்டத்தை எட்டியே பார்ப்பதில்லை. வழக்குகளை விட்டுவிட்டு இவற்றிற்கெல்லாம் அவரால் நேரம் ஒதுக்க முடியாது. அம்பாறை மாவட்டத்திற்கு கூட செல்ல வேண்டாம். விபரங்களை அறிந்து உரிய இடங்களில் அதனை முன்வைத்திருக்கலாம். அவற்றையும் செய்யவில்லை.

திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலை தான். அங்கு சம்பந்தன் தேர்தல் காலத்திற்கு மட்டும் செல்வார், ஏனைய காலங்களில் செல்வதில்லை. அங்கு தமிழ்ப் பிரதிநிதி இருந்தும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

இவற்றை விட அரசியல் தீர்வு என வரும்போது அம்பாறை மாவட்டத்தை முஸ்லீம்களிடம் கூட்டமைப்பு கொடுத்துவிடும் என்ற அச்சமும் மாவட்ட தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. முஸ்லீம்கள் நிலத் தொடர்ச்சியற்ற அதிகார அலகை வேண்டி நிற்கும் போது தமிழ்த் தரப்பும் ஏன் அவ்வாறு கேட்கக் கூடாது என்பதற்கு இங்கு பதில் இல்லை.

ஐந்தாவது, கிழக்கில் தமிழ்-முஸ்லீம் முரண்பாடு தொடர்பாக கூட்டமைப்பினர் நழுவல் போக்கினைக் கடைப்பிடிப்பதாகும். இந்த முரண்பாடு நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். மக்களே அதனைச் சுமக்கட்டும் என நழுவிப்போவது ஒரு தலைமைக்கு அழகல்ல.

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுப் பிரச்சனை ஒரு நீண்டகாலப் பிரச்சினை ஆகும். இதனை மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பினர் தங்கள் கைகளில் எடுத்திருக்க வேண்டும். முஸ்லீம் தரப்போடு பேசியிருக்க வேண்டும். முடியாவிட்டால் போராட்டங்கள் தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டும். அம்பாறை மாவட்ட நண்பர் ஒருவர் கூறினார். 'கூட்டமைப்பிற்கு இது விடயத்தில் விருப்பமும் இல்லை, இயலுமையும் இல்லை'. இது தான் நடைமுறை உண்மை.

கிழக்கு மாகாணத்தின் அண்மைக்காலப் போக்கு தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் வலுவாகச் சிதைக்கக் கூடியது. கூட்டமைப்பு 2009 இலேயே தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டுள்ளமையினால் இச் சிதைவுகள் பற்றி எந்த வித கவலைகளும் அதற்கு கிடையாது.

ஆனால் தமிழ்த் தேசிய சக்திகள் இதில்  அக்கறையற்று இருக்க முடியாது. அவர்கள் உடனடியாக அக்கறையைக் குவிக்க வேண்டும். அதன் ஆரம்பமாக இது பற்றி ஆரோக்கியமான கலந்துரையாடல்களை சகல மட்டங்களிலும் நடாத்துவது நல்லது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=6e9ee2ed-4940-4d01-a176-43929ef5c94f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.