Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானம்: இந்தியா காலை வாரியது ஏன்?

Featured Replies

India-mahinda%20-Genf%2014.jpg

ஜெனிவா தீர்மானம்:

இந்தியா காலை வாரியது ஏன்?

  • ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒருவழியாக நிறைவேறியுள்ள போதிலும், இதில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்து விட்டது என்பதில், மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.. ஏனென்றால், இந்தியா உள்நாட்டு அரசியல் சூழல் கருதி, இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக எப்படியும் வாக்களிக்கும் என்றே ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே, முதல் இரண்டு தீர்மானங்களையும் தமிழக அரசியல் அழுத்தங்களினால் தான், இந்தியா ஆதரிக்கத் தலைப்பட்டது. ஆனால், இம்முறை, தமிழக கூட்டணி அழுத்தங்கள் இல்லாது போனாலும், தேர்தல் அழுத்தங்கள் மத்திய அரசின் நிலைப்பாட்டில் தாக்கத்தைச் செலுத்தும் என்றே கருதப்பட்டது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளிப்படையாகவே கூறியும் இருந்தார். அத்துடன், 13வது திருத்தச்சட்டம், மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இந்தியா வலியுறுத்தும் விடயங்களையும், தீர்மான வரைவு உள்ளடக்கியிருந்ததால், அதற்கு இந்தியாவினது ஆதரவு உறுதி என்றே நம்பப்பட்டது. 

    முதலிரண்டு ஆண்டுகளிலும், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கலாம் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, நிச்சயம் ஆதரிக்கும் என்ற நிலையும், எதிர்பார்ப்புமே மிகையாக இருந்தது.  கடந்த இரண்டு முறையும், தீர்மானத்தை இந்தியா ஆதரித்த போது, மிகப்பெரிய இராஜதந்திர தவறு என்று விமர்சித்த புதுடெல்லி ஊடகங்கள் இம்முறை, தீர்மானத்தை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை என்றே சுட்டிக்காட்டியிருந்தன. ஏனென்றால் தீர்மான வரைவு இந்தியாவினது நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையிலானதாக இருந்தது. புதுடெல்லிக்கு எல்லாமே சாதகமானதாக இருந்தும், இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறது.  

    எதற்காக இவ்வாறு இந்தியா நடந்து கொண்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    ஏனென்றால், இந்தியாவினது முடிவெடுப்பதில் தளம்பல் நிலையில் இருப்பதான சூழல் ஒன்று இருந்திருந்தால், இவ்வாறான அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்தியாவின் பக்கத்தில் இருந்து தெளிவான சமிக்ஞைகள் காட்டப்பட்ட நிலையில் தான், இது அதிர்ச்சி தரும் முடிவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவினது ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே, அமெரிக்கா தனது தீர்மான வரைவில் கடைசி நேரத்தில், விசாரணைக்கான காலவரையறையைச் சேர்த்து திருத்தம் கொண்டு வந்தது. 

    இந்தியா தீர்மான வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா அறிவித்த பின்னர், அமெரிக்கப் பிரதிநிதி தனது உரையில், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றே காலவரையையை தீர்மான வரைவில் சேர்த்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு குறிப்பிட்டது முக்கியமாக இந்தியாவைத் தான். ஆனாலும், இந்தியா அந்த வரைவு தெளிவாக்கத்துக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை. இந்த தீர்மான வரைவு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இந்தியா கருத்துகளை வெளியிடுவதை தவிர்த்து வந்ததை கவனிக்க வேண்டும். எந்தவொரு சந்தரப்பத்திலும், தமது கருத்தை பகிரங்கமாக வெளியிடாமல், இந்தியா காத்து வந்த மௌனம், கடைசி நேரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்துவதற்காகவே என்பது உறுதியாகியுள்ளது.

    இந்தியாவினது இந்த முடிவு கொள்கை ரீதியானது என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

    ஆனால், கடந்த காலங்களில் அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்த இந்தியா, இந்தமுறை மட்டும் கொள்கை ரீதியான முடிவை எடுக்க ஏன் முற்பட்டது? 

    என்ற கேள்வி இப்போது எழுகிறது. 

    ஏற்கனவே இந்திய வெளிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், உள்நாட்டு அரசியலின் தாக்கம் தீர்மான வாக்கெடுப்பில் எதிரொலிக்கும் என்று தெளிவாக கூறியிருந்த போது கூட, கொள்கை முடிவுக்கு இடமில்லை என்றே கருதப்பட்டது. 

    ஆனால், கடைசி நேரத்தில், இந்திய பிரதமர் மன்மாகன்சிங் தான், இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

    எவ்வாறாயினும், இந்தமுறை இந்தியா அரசியல் முடிவை எடுக்காமல் தவிர்த்துக் கொண்டதற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன. 

    முதலாவது, 

    எல்லாக் கட்சிகளுமே தேர்தல் பிரசாரத்தில் மூழ்கியிருந்ததால், தீர்மானத்தை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு வலுவான அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. கடந்த முறைகளில், தமிழகத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால், தீர்மானம் எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி தலைமையுடன் மத்திய அரசு கூடிக் கூடி ஆலோசனை நடத்தியது. ஆனால் இந்த முறை அப்படியான எந்த ஆலோசனைகளுமே நடக்கவுமில்லை, அதற்கான பரபரப்பு புதுடெல்லியில் இருக்கவுமில்லை. 

    இரண்டாவது, 

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஓரம்கட்டப்பட்டு, எல்லா இடங்களிலும் தோற்கடிக்கப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், அரசியல் ரீதியான முடிவை எடுத்து எதற்கு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கருதியிருக்கலாம். அதாவது, முழுக்க நனைந்து விட்ட பிறகு முக்காடு எதற்கு என்பது போல, தோல்வி உறுதியான பின்னரும், எதற்காக தீர்மானத்துக்கு ஆதரவளித்து, கொள்கை முடிவுக்கு குறுக்கே நிற்க வேண்டும் என்று கருதியிருக்கலாம். 

    மூன்றாவது, 

    இந்திய அரசு தவறான வெளிவிவகாரக் கொள்கையை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, இந்தக் கடைசி வாயப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம்.  

    நான்காவது, 

    தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் எதிரொலியாகக் கூட, இந்தியா கொள்கை முடிவின் பக்கம் தாவியிருக்கலாம். தேவ்யானியை முதலில் அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த போதும், அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. 

    எனவே சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை புதுடெல்லி பயன்படுத்த முற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணிகள் தான், ஜெனிவா தீர்மானத்தின் மீது அரசியல் முடிவு எடுக்கப்படாமல் போனதில் தாக்கம் செலுத்தியதாக கருதப்படுகிறது. அதேவேளை, கொள்கை சார்ந்த முடிவாக, இதனை இந்தியா எடுத்துள்ளது என்று குறிப்பிட்டாலும் அதிலும் கூட ஆங்காங்கே பல முரண்பாடுகள் இருக்கத் தான் செய்கிறது. 

    இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையுடனான உறவுகளில் மேலும் இடைவெளி ஏற்பட்டு விடாதபடி, தடுக்கவே இந்தியா இந்த முடிவை எடுத்ததாக ஒரு நியாயம் கூறப்படுகிறது. அவ்வாறாயின், இலங்கையில் சீனத் தலையீடுகள் குறித்தோ, முதலீடுகள் குறித்தோ இந்தியா கவலை கொள்ளவில்லை என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் போன்றவர்கள் கூறியது பொய்யான கூற்றா? 

    சில வாரங்களுக்கு முன்னரே, சீனா பற்றிக் கவலை கொள்ளவில்லை என்று கூறிய இந்தியா, அதை முன்னிறுத்தி இத்தகைய கொள்கை முடிவை எடுத்ததாக கூறமுற்படுவது அபத்தமானது. இன்னொரு பக்கத்தில், இந்த விசாரணை, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையிலான - அந்த நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால், தான் இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கியது என்றும் ஒரு நியாயம் கூறப்படுகிறது. 

    ஆனால், இன்னொரு நாட்டின் இறைமை குறித்து பேசும் தகைமை இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. 

    வடக்கில், விமானங்களின் மூலம் உணவுப் பொதிகளைப் போட்ட போது, இதே காங்கிரஸ் அரசுக்கு இலங்கையின் இறையாண்மை மறந்து போனது. சந்தர்ப்பத்தை சாட்டாக வைத்து, ஜே.ஆருடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலம், 1987இல் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிய போது, அது இன்னொரு நாடு என்ற எண்ணம் புதுடெல்லிக்கு வந்திருக்கவில்லை. அப்போது இலங்கையின் இறையாண்மை எங்கே போனது? 

    ஒருவேளை அது இலங்கை அரசின் ஒப்புதலுடன் நடந்தது என்று இந்தயா நியாயப்படுத்தலாம். எவ்வாறாயினும், இந்தியப் படைகளின் நிலைகொள்ளலுக்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்தாலும், இலங்கைக் குடிமக்கள் மீது போரை நடத்தியது இறைமையாண்மை மீறல் இல்லையா? அதற்கு இந்தியாவுக்கு எந்த சட்டபூர்வ அதிகாரத்தையும் இலங்கை கொடுத்திருக்கவில்லை.  

    1989ம் ஆண்டு ஜுலை மாதமே இந்தியப்படைகளை வெளியேறும் படி, அப்போதைய ஜனாதிபதி பிறேமதாச உத்தரவிட்ட போதும், தொடர்ந்து 1990 மார்ச் வரை அங்கு நிலைகொண்டிருந்த போது இந்தியாவுக்கு இன்னொரு நாட்டின் இறைமை பற்றிய சிந்தனை வந்திருக்கவில்லை. ஜே.ஆருடன் உடன்பாடு கையெழுத்தாகிய சில மணிநேரங்களுக்குள் பலாலியில், தனது படைகளை கொண்டு வந்து இறக்கிய இந்தியாவுக்கு, அந்தப் படைகளை வெளியேற்றுவதற்கு இலங்கை ஜனாதிபதி விதித்த காலக்கெடுவுக்கும் அப்பால், எட்டுமாதங்கள் தேவைப்பட்டன. 

    அது இலங்கையின் இறைமைக்குச் சவாலான விடயமில்லையா? 

    இப்படியாக இலங்கை விவகாரத்திலேயே ஏராளமான இறையாண்மை சரச்சைக்குள் சிக்கியுள்ள இந்தியா, ஜெனிவாவில் தனது முடிவுக்கு நியாயம் தேடுவதற்காக, இறைமை என்பதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.  

    காஷ்மீர் மனிதஉரிமை மீறல்கள் குறித்தும், 1984இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழத் தொடங்கியதும் இந்தியா இந்த முடிவை எடுத்ததற்கு இன்னொரு காரணமாக குறிப்பிடலாம். இதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமது விவகாரத்திலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மூக்கை நுழைத்து விடமோ என்று இந்தியா பயந்து இந்தக் கொள்கை முடிவை எடுத்திருக்கலாம். இந்தியாவினது இந்த முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டதாக கூற முடியாது. 

    ஏனென்றால்,

     இந்தியா இந்த முடிவை முன்னரே எடுத்து விட்டதால் தான், இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக புதுடெல்லியில் அழைப்புக்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் நழுவிக் கொண்டது. அதேவேளை, போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான மறுநாளே, இந்திய அரசு இந்த முடிவை வெளிப்படுத்தியது. இது மத்திய அரசின் குழப்பநிலையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

    எதுஎவ்வாறாயினும்,

    இந்த முடிவில் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை இந்தியா கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இந்தப் புதிய உறவின் மூலமோ, கொள்கை முடிவின் மூலமோ, தனக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் என்று இந்தியா நம்புமானால், இலங்கையிடம் இந்தியா இன்னமும் நிறையவே பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றே கருத வேண்டும்.

கபில் தொல்காப்பியன் ..நன்றி தாய் நாடு .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.