Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞன் - பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி )

அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது.

மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப்பொதியுடன் மீண்டும் அவன் வருவதைப்பார்த்தேன். வந்ததும் அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றித்தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்துகளையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன்நடந்துபோய் மேடையின் மறுகோடியில் இருந்த தண்ணீர்க்குழாயில் முகம் கைகால் கழுவிவிட்டுவந்துநிலத்தில் சம்மணமிட்டமர்ந்து பொதியை அவிழ்த்துச் சாவகாசமாகச் சாப்பிட்டான். பின்ஜாக்கெட்டுப்பையிலிருந்து ஒரு பியர் கானை எடுத்துக்கொஞ்சம் குடித்துவிட்டு அதையும்இரும்புவாங்கில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு தானும் அதில் சற்றே தள்ளி அமர்ந்து சிகரெட் ஒன்றைஅனுபவித்துப்பிடித்தான். அப்போது நாலாவதோ ஐந்தாவதோ மேடையில் நகரத்துள் மட்டும் ஓடும் S – Bahnஎனப்படும் விரைவு தொடருந்து ஒன்று நூறு கி.மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கைபார்த்தான். பின் பியர்க்கானைக் கையில் எடுத்துக்கொண்டு அம் மேடையின் முழு நீளத்துக்கும் ஆறேழுதடவைகள் நடந்தான். அவன் நடந்து அணுக்கமாக வந்தபோது தெருவிளக்கின் வெளிச்சத்தில் இன்னும்அவனைத்தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உயர்ந்த ஒல்லியான தேகம். சதா சிந்தனை வயப்பட்டவன்போல்தோற்றமளித்தான். சாயம்வெளிறியும் அங்கங்கு தேய்ந்துமிருந்த டென்னிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.தலையை வாரிவிடுவதில் அக்கறை எதுவுமில்லை, ஒரு கிழமை வயதான தாடி, கண்வலயத்தில்லேசான ஐரோப்பியச்சுருக்கங்கள். அவனுக்கு 35-க்கும், 50-திற்கும் இடையில் அகவைகள்எத்தனையுமிருக்கலாம்.

மறுநாள் அவன் வெளியேபோய் வரும்போது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அக மிக மகிழவல்லதோற்பை ஒன்றைக் கொண்டுவந்தான். தினமும் இரவில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்துகொண்டுவருவதும், சாப்பிட்டுவிட்டுத்தூங்குவதும், பின் மறுநாள் பகல்வெளியேறுவதும் தினப்படிநடவடிக்கைகளாக இருந்தாலும் எங்கேயும் வேலை பார்ப்பவன் போலவுந்தெரியவில்லை. சில நாட்களில்மதியம்வரை தூளியைவிட்டிறங்காமல் படுத்திருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டியகாரியங்கள் ஒன்றுமில்லாமலிருக்கவேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்கவேண்டும். தொடருந்துநிலையத்துக்கு குடிவந்து ஒருமாத மேலாகியும் அவன் தன் காற்சட்டையையோ ஜாக்கெட்டையோமாற்றாததிலிருந்து அந்தத்தோற்பையில் ‘மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பான்’ என்ற என் ஊகமும்நசித்துப்போனது. தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலைசெய்தாலோ,செய்திப்பத்திரிகை விநியோகித்தாலோகூட இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றிராஜகுமாரனாகவே வாழலாம்.

Inline மற்றும் Roller Skates படுவேகமாக இளசுகளிடையே ஒரு மோஸ்தர் போலப்பரவியபோது 70அகவைக்கும் மேலிருக்கக்கூடிய பெண்கள் பலர் தலைக்கவசமும், முட்டி மற்றும், பிட்டக்கவசங்கள்அணிந்துகொண்டு பார்க்குகளிலும், நடைமேடைகளிலும் Skates ஓடப்பழகியதைக்கண்டிருக்கிறேன்.மனிதன் வாழ்வுபூராவும் எதையாவது செய்துகொண்டு பிஸியா இருந்துவிட்டால் சோர்வும் விரக்தியும்விச்ராந்தியும் அணுகாதாம். ‘வயசு எழுபதாகிறதா…..பரவாயில்லை உடனே பரதநாட்டியம் கற்கஆரம்பித்துவிடு.’ என்பாராம் ஒஸ்கார் வைல்ட். மனிதனின் மரபான வாழ்வுமுறை சலிக்கும்பொதுதான்அநேகமான ஐரோப்பிய இளைஞர்கள் சிலர் வேறொரு வாழ்க்கைமுறையை முயன்று பார்க்கின்றனர்.இவ்வாறு மரபுவாழ்க்கையை உதறி வித்தியாசமான வாழ்வுமுறையைத் தேர்பவர்கள் தனியனாகவும் ,ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பதுபேர்கொண்ட கூட்டமாகவும் வாழ்வதுண்டு. எடுத்துக்காட்டாக‘ஒட்டோநோம்’ குமுகாயத்தினரைக்கூறலாம். இவர்கள் தங்கள் கூட்டுவாழ்வுக் குமுகங்களில்நாய்களையும் வேறுபிராணிகளையும் விரும்பிச் சேர்த்துகொண்டுமிருப்பார்கள். இவனும் ஒரு‘ஒட்டோநோம்’ குமுகாயத்திலிருந்து விலகி வந்தவனைப் போலிருந்தான்.

ஒருநாள் இரவு சாப்பாட்டைமுடித்துக்கொண்டு Warshau விலிருந்து Paris க்குச் செல்லும் நடுஇரவு Intercityதொடருந்தை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டு படுக்கை, தலையணை உறைகளைமாற்றிக்கொண்டிருந்தேன். Johann Sebastian Bach இன் பிரசித்த மெலோடியான ‘Jesus Christus meine Verlangen’ இன்அருமையான பல்லவி ஸோலோவாக சக்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. யாரோ சவுண்ட்சிஸ்டத்தையோ, தொலைக்காட்சியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்று இருந்தேன். ஒரு Contrad bass ன்ஒத்திசைவுகூட இல்லாமல் சக்ஸபோன் தனித்தே பல சுருதிகளிலும் பிளிறுவது மெலிதானசந்தேகத்தையுண்டுபண்ண ஜன்னலுக்கு வந்து பார்த்தேன். அவன் Dressel வீதியின் சோடியம் ஆவிவிளக்கில் மேடையின் இரும்புவாங்கில் ஆரோகணித்தமர்ந்து ஒரு சக்ஸபோனை வைத்துவாசித்துக்கொண்டிருந்தான். அதன் பின்னும் பீத்ஹோவனின் ஒரு அழகான கோர்வையைஅரைமணிக்கும் மேலாக உற்சாகம் ததும்ப வாசித்தான். அவனது கற்பனைகளும் அலாதியான கமகப்பிரயோகங்களின்போது அக்கருவியில் மட்டும் வரும் இனியபிளிறல்களும் செறிந்த இசை மிகவும்வித்தியாசமாக சுகமாக இருந்தது. அது முடிந்தபின் ஷம்பேன் போத்தலைத்திறந்து தொண்டையைநனைத்தபின் வேறொரு கோர்வை. அந்த இரவு வெகுநேரம் ஆனந்த பரவசத்துடன்நெளிவுசுழிவுகளுடன்கூடிய மிகநுட்பமான இசை அவனது சக்ஸபோனிலிருந்து பொங்கிப்பிரவகித்துCharlottenburg பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்து மேவியது.

பாவம்………… இவனும் ஒரு கலைஞன்!

கலை மனிதனை ஆகர்ஷிக்க வல்லதுதான், அதுவே போதையாகி அதற்கே அடிமையாகி அதைத்தவிரவேறெதுவுமில்லையாகி அதைக்கொண்டு வாழ்வை நகர்த்தமுடியாத நிலை வந்தபின்னாலும் அதையேகட்டிப்பிடித்துக்கொண்டும் விலக்கமுடியாமலும் தவித்துச் சோம்பேறியாகிப்போகும்பட்டினிக்கலைஞர்கள் உலகம் முழுவதும்தான் உள்ளனர். வாழ்க்கையின் மறுபரிமாணங்களைக்காணத்தவறுவது, தவறவிடுபவை பற்றிய பிரக்ஞை இன்றி இருப்பதுவும் இவர்களின் பொதுக்குணங்கள். ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்கவித்துவான் இருந்தார். அடுப்பங்கரை நிலமை அடுப்புக்கால்களைநாய் நகர்த்தி விளையாடும் அளவுக்கு இருக்கும். மனிதன் விடிந்ததிலிருந்து மிருதங்கத்தைஎடுத்துவைத்து அதைத்தடவித்தடவி ‘குமுக்கு’ ‘குமுக்கு’ என்று கும்மிக்கொண்டிருப்பாரே தவிரஇந்தண்டையிருக்கிற துரும்பை எடுத்து அந்தண்டை போடமாட்டார். கர்ப்பிணி மனைவிவிறகுடைப்பாள். இவர் திண்ணையில் ஒருகாலை மடித்துத் தொடையின்மேல் போட்டுக்கொண்டுபான்பராக்கோடு வெற்றிலையைச் சேர்த்துக் குதப்பியபடி சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார். “விடுங்கோமாமி” என்றுவிட்டு கோடலியை வாங்கி நான் உடைத்துக்கொடுத்தால் ” கடினவேலை செஞ்சா அப்புறம்எனக்கு விரல்கள் ஜதிக்கட்டுக்களுக்கு வசையிறதில்லையடா அம்பி.” என்பார். குடல் காயத்தொடங்கினபிறகும் என்ன சாம்பலுக்குத்தான் ஜதி வேண்டிக்கிடக்கோ?

மறுநாள் இந்த சக்ஸபோன் கலைஞன் மேடையில் ஒரு புல்லை வைத்துக்கடித்துக்கொண்டுஅணில்களும் புலுணியும் ஓடிப்பிடித்து விளையாடுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனிடம் போய் ஒரு ‘ஹலோ’ சொல்லவேணும் போலிருந்தது. என்ன செய்வானோ…………பேசுவானோ முறைப்பானோ தெரியவில்லை. கிறுக்கர்களாகவும் சில கலைஞர்கள் இருப்பதுண்டு.பாவம், குளிர்காலம் வர என்னதான் செய்யப்போகிறான்? என் அறையில் ஒரு கட்டிலைப்போடவிடலாந்தான், அதற்கு வீட்டுச்சொந்தக்காரியிடம் அனுமதி பெறவேண்டும், அவளும் இந்தச்சாக்கில்வாடகையை உயர்த்திவிடலாம். அறையைக் கொடுத்தபின்னால் அவன் ஷாம்பேன் போத்தல்களையும்,பியர் புட்டிகளையும் கொண்டுவந்து நிரப்பினால்? உடுப்பையே மாற்றிக்கொள்ளாதவன்குளிப்பதில்லையென்று ஒரு கொள்கையைக்கூட வைத்திருக்கலாம், யார் கண்டா? பின்னர் கிடாய்மொச்சை கமழும் பெம்மானுடன் மானுஷன் உறைவதெங்கனம்? வானத்தால் போன பிசாசைஏணிவைத்து இறக்கின கதையாகிவிடலாம். அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவவேண்டும் என்கிறசிந்தனை தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒரு வாரம் ஆகியிருக்கும். திடீரென அந்தக் கலைஞனைக் காணவில்லை. அவனுக்கு வேறெங்காவதுஇதைவிட நல்ல ஜாகை வாய்த்திருக்கலாம் அல்லது வேறெங்காவது பரதேசம் புறப்பட்டிருக்கலாம்; தன்கூட்டத்தினருடன் போதை வஸ்த்தின் லாகிரியில் அமிழ்ந்து மீள்வதில் காலம் எடுத்திருக்கலாம் எனஎண்ணிக்கொண்டிருக்கையில் மீண்டும் ஒருநாள் திரும்பவும் வந்தான். அன்றும் இளம் நெல்வயலில்இளங்காற்றடித்ததுபோல இசை நளின அலைகளைக் கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக்குதித்துப்பரவசப்பட்டது. விமானம் ஒன்று இறங்குவதைப்போல தாழ்சுருதியில் பதிந்துசமதரையைத்தொடுவதுபோல இறங்கிப் பின் திடுப்பெனக் ‘கொங்கோடெ’னச் சிலிர்த்துப்பிளிறிச்செங்கோணத்தில் மேலே எழுந்து உயர்ந்து வித்தாரங்காட்டியது.

அவன் பசி எடுத்தால்தான் இசைப்பானோ, இல்லை வயிறு நிரம்பியுள்ள குஷியில் இசைப்பானோவென்றுஒன்றுந்தீர்மானமாகச்சொல்ல முடியாது. ஷாம்பேன்போல ஒன்று தொண்டையை நனைக்கப்போதுமாயிருந்தால் போதும். அவனது சக்ஸபோன் குதிகொள்ளும். குளிர் காற்று மிதமாகவீசத்தொடங்கவும் இசைக்குச் சிறிய ஒரு இடைவெளிவிட்டுவிட்டு பெரியதொரு அட்டைப்பெட்டியைமூலைவிட்டமாக வெட்டி அதன் ‘ட’ ஒதுக்கில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்துஅலுமினியத்தாளில்சுற்றி வைத்திருந்த ‘கலமாறிஸை’ (கணவாய்மீன் பஜ்ஜி) ‘ஸோஸ்’ ஒன்றில்தொட்டுச்சாப்பிட்டான். பின் ஷாம்பேன். அன்று வழக்கத்தைவிட முன்னதாக ஆரம்பித்திருந்தும்அடிக்கொருதடவை கடந்து செல்லும் தொடருந்துகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் தொடருந்து சென்ற பின்னாலும் வெகுநேரம் இசைவேள்வி நடத்தினான். மீண்டும் ரேவதியின் சாயலில்நிறைய ஏக்கமும், பெற்றோரைத் தவறவிட்டுவிட்ட ஒரு பிள்ளையின் தவிப்பும் கலந்திருந்த ஒருசாஸ்திரீயக் கோர்வையை அனுபவித்து அனுபவித்து வாசித்தான். அடுத்து ‘Lilly was here’. இப்படியாகத்தொடர்ந்தது அவ்விரவு. மறுநாள் மதியம் வரையில் ஒருகாலை வெளியே தொங்கவிட்டபடிதன் தூளியுள் படுத்திருந்தான். பின் எப்போ எழுந்து போனானோ தெரியாது.

அவனது இசை கேட்டு ஒருமாதமாவது ஆகியிருக்கும். ஆளை அந்தப்பக்கம் காணவே இல்லை. ஒருநீண்ட சனிக்கிழமை (மாதத்தின் முதலாவது) மாலையில் Ku’Damm Karrie Passage இனுள் அவனைக்கண்டேன். அன்று வியாபாரஸ்தலங்கள் எல்லாம் மாலை 22.00 மணிவரை திறந்திருக்கும்.அதற்குள்ளிருந்த ஒரு மதுவகத்தின் வாசலில் நின்று இவன் தன் சக்ஸபோனைவாசித்துக்கொண்டிருந்தான். அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தொப்பியுள் அவ்விடத்தைக்கடந்துபோவோரும் , அம்மதுவகத்திலிருந்து வெளிப்படுவோரும் காசுகள் போட்டனர்.பரட்டைத்தலையுடன் அநாதைபோல் தென்பட்ட ஒரு பத்துவயதுச்சிறுவன் வத்தகைப் பழக்கீறல் ஒன்றை(தர்ப்பூசணி) நாடியால் தண்ணீர் சொட்டச்சொட்டச் சுவைத்துக்கொண்டு இவன் சக்ஸபோன் வாசிப்பதைவேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கலைஞனோ சேரும் சில்லறையில் கருத்தின்றிக்கண்களைமூடித் தன் சங்கதிகளில் ஒன்றி ஸ்வரப்ரதாபங்களில் உருகியுருகி வாசித்துக்கொண்டிருந்தான்.

இந்த Ku’Damm Karrie Passage இனுள் உணவகங்களும், மதுவகங்களும் நிறைந்துள்ளன. அதன்சுற்றுவட்டத்திலும் அநேகம் ஷொப்பிங் மோல்களும் இருப்பதால் அந்த இடம் எப்போதும்ஜனநடமாட்டத்துடன் ஜே’ஜே’ என்றிருக்கும். எனக்கும் மெல்ல வயிற்றைக்கிள்ளவே அங்கிருந்த ‘Imbiss’ஒன்றில் சூடாக உருளைக்கிழங்கு சிப்ஸும் பியரும் வாங்கிக்கொண்டு சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துஅவனை நானும் ரசித்தேன். Herbert-Von-Karajan இன் சில கற்பனைகளைத் தந்துவிட்டுத் திடுப்பெனச் ‘Sailing’என்ற ஜனரஞ்சகமான றொக் பிட்டுக்கு சுழன்றுவந்தபோது கும்பல் கணிசமாகவே சேர்ந்துவிட்டது. அவன்வாசிப்பில் கிறங்கிப்போவிட்ட சுவைஞர் ஒருவர் பெரிய கிளாஸில் நுரை ததும்ப ததும்ப பியர்வாங்கிவந்து கொடுத்தார். அதில் தொண்டையைக் கொஞ்சம் நனைத்துவிட்டு சில ‘அண்டர்கிரவுண்ட்’இசைச்சித்தர்களுடன் சஞ்சரிக்கலானான். எதுவுமே முன்பொருநாளுந்தான் கேட்டறியாதஇசைக்கோலங்கள். கேட்பவர் அனைவரையும் கிறங்கடித்தான்.

தெருப்பாடகர்கள், வயலின்வாசிப்போர்களென்று எத்தனையோ வீதிக்கலைஞர்களைச்சந்தித்திருக்கிறேன். சீமான்களது இசை அரங்குகளில் சீமான்கள்போலவே மெட்டாக உடுத்திப்போய்எத்தனையோ சிம்போனிகளைக் கேட்டிருக்கிறேன். இருந்தும் அவனது காயலான்கடை ரக (லுண்டாரக)வாத்தியத்திலிருந்து கிளம்பும் நாதத்தில் தோய்ந்துள்ள மாயலாகிரி எனக்குள் ஏற்படுத்தும்அதிர்வுகளைப்போல் முன்னொரு வாத்தியமும் ஏற்படுத்தியதில்லை. அவனது இசையோடு சேர்ந்துஏதோவொரு அலைவரிசையில் வரும் விபரிக்க முடியாத காந்தக்கதிர்கள் என்னை அவனோடுகட்டிப்போடுகிறது, கிளர்த்துகிறது, பஞ்சாகக்கிளப்பி மேலே மேலே முகில்களோடு மிதக்கவைக்கிறது.

வாசித்து நன்றாகவே களைத்தபின்னால் ‘Udo Lindenberg’ இன் ‘Auf wiedersehen’ என்ற மெலோடியை (மீண்டும்சந்திப்போம்) மென்சோகம் தோய்த்து மங்களமாக வாசித்தபோது சுவைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து”தயவுசெய்து மீண்டும் ஒரு முறை ” “மீண்டும்” என்று கேட்கவும் சம்மதித்து மீண்டும் ஒருமுறைவாசித்தான். ‘இத்தனை வித்தகனுக்கு சொந்தமாய் ஒரு கூரை இல்லை’ என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

அவனை அன்று பார்த்ததுதான். உயிர்தரித்திருக்க ஒரு மனுஷனுக்குத் தேவையான உணவு, உடை,படுக்கை, சூடான ஒருவதிவிடம் இவற்றைத்தேடி அக்கலைஞன் உலகத்தின் எக்கோடிக்குக்குத்தான்சென்றாலும் பரவாயில்லை என்று மனம் விரும்பினாலும் தினமும் காலையில் எழுந்ததும் கண்கள்அவன் வந்திருக்கிறானா, தூளியுள் தூங்குகிறானா என்றே தேடுகின்றன.

அதன் பின் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவின் நிற்கும் Gold-regen (தங்கமழையென்றுஅர்த்தம்) மரங்களின் மெலிந்தடர்ந்த நீண்ட கிளைகளின் பொன்மஞ்சள் பூம்பாளைகள் எல்லாம்ஏககாலத்தில் மலர்வதால் பூக்களின் பாரந்தாங்காமல் அவை தலைகீழாக விழுதுகள்போலத்தொங்குகின்றன. கஸ்டானியன் மரங்களும் தவறாமல் பழுத்துத் தம் விதைகளை நிலமெங்கும்இறைத்துவிடுகின்றன. அவனது தூளியும் தோற்பையும் அவனுக்காகக் காத்துக்கொண்டு இன்னும்அங்கேயே இருக்கின்றன. அணிலும் புலுணியும் மேடைகள் பூராவும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன.பாரீஸ் தொடருந்தும் தவறாது 23.05க்குக் கடந்து விடுகிறது.

இசை மட்டும் இல்லை.

*

’( காலச்சுவடு’ வெளியீடாக வெளிவந்துள்ள பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் நினைவுகள்’ நினைவலைகளிலிருந்து ஒரு அத்தியாயம். )

http://malaigal.com/?p=5313

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.