Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும் – பாகம் 1 -

23 ஆகஸ்ட் 2014

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்:-

Jail1_CI.jpg

இன்று அரசியற்கைதிகள் என்றால் யார் என்று கேட்குமளவிற்கு போரின் பிந்திய தமிழரின் அரசியற்போக்கு இருக்கும் இந்தக் கேவலமான சூழ்நிலையில் அரசியற்கைதிகள் என்றால் யார் என்ற கேள்வியிலிருந்தே இப்பத்தியினை எழுத வேண்டும்.

சுருங்கக்கூறின் சிங்களப் பேரினவாத அரசு யாரையெல்லாம் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பட்டியற்படுத்தி சிறைகளிலும் தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றதோ அவர்கள் எல்லோரும் அரசியற்கைதிகளாவார்கள்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான அரசியற் கைதிகள் மகசீன், வெலிக்கடை, CRP, போகம்பரை, அனுராதபுரம், பொலநறுவை, காலி, மொனராகலை,யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற சிறைகளிலும் பூசா, நாலாம் மாடி, ஆறாம் மாடி, மற்றும் உள்ளுர் காவல்நிலையங்கள் போன்ற தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் சிங்களப் பேரினவாத்தின் நீதித்துறையின் விசித்திரத்தினால் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள் (சிறைகளில் நீண்டகாலம் அடைபட்டு துன்பப்படாமல் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றாவது வெளியே வர முயற்சிப்போரும், சிறைகளில் நீண்டகாலம் அடைபட்டு துன்பப்படாமல் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால் விரைவாக விடுதலையாகலாம் என்று கூறி ஏமாற்றப்பட்டோரும் இதில் அடங்குவர்), உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு காத்திருப்போர் (உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யும் படி தீர்ப்பு வழங்கவே இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம்), தண்டனைக் கைதிகள் என்போர் அடங்குவர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் பயங்கரவாதச் சந்தேக நபர்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரே தடுப்பு நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தகாலப் பகுதியில் கைது செய்யப்பட்டோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களாகவும், யுத்தத்திற்குப் பின்பான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டோர் விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்க முனைந்தவர்கள், அரசிற்கெதிரான போராட்டங்களைத் தூண்டுபவர்கள், புலம்பெயர் புலி ஆதரவுச் சக்திகளுடன் தொடர்பினைப் பேணியவர்கள் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ற்கு பின்பான கைதுகளில் புலம்பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு வரும் போது கைது செய்யப்பட்டோரும், புலம்பெயர் நாடுகளிலிருந்து விடுதலைப்புலிச் செயற்பாட்டாளர் என்று கூறி நாடு கடத்தப்பட்டோரும் அடங்குகின்றனர். 2009 ற்கு பின்னர், தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றி சிந்திப்போர் ஏதோவொரு வகையில் பொறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை என்னும் பேரில் தடுத்து வைக்கப்படுகின்றனர். குற்றச்சாட்டில் பிரதானமானவர்கள் சிங்களப் பேரினவாதத்தின் நீதித்துறையால் விடுவிக்கப்பட்ட பின்பும் உடந்தைகளாகவும் அவர்களிற்கு உதவியவர்களாகவும் குற்றம் சுமத்தப்பட்டோர் சிறைகளில் வாடுகின்றனர்.

அரசியற் கைதிகளைப் புலிகள் என்று மட்டும் சொல்லிப் புலிகள் மீது மட்டும் பழிபோட்டு விட்டு எல்லாப் பிரச்சனைகளிற்கும் புலிகளைக் காரணம் காட்டியே வயிற்றுப் பிழைப்பை நடத்திவந்தோர், 2009 ற்கு பின்பான கைதுகளைப் பற்றிப் பாராமுகமாக இருப்பது அவர்களின் அரசியற் போக்கிரித்தனத்தையே காட்டுகின்றது.

தமிழரின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்ட வேட்கையை வாக்குகளாக்குவதை மட்டும் கைங்கரியமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தலைமைகள், தேர்தல் காலங்களில் சிறைகளிற்கு சுற்றுலா செல்வது நிர்க்கதியான அரசியற் கைதிகளை மேலும் வேதனையில் வெந்து போகச் செய்கின்றது.

சிங்களப் பேரினவாதத்தின் யுத்தக் குற்றங்களையும் இனவழிப்புக் கொடூரங்களையும் சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்துகின்றோம் என்று சொல்லும் பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்கள், அரசியற் கைதிகளின் அவலங்கள் பற்றியும் அவர்களிற்கு எதிராக நடக்கும் மனித குல விரோதங்கள் பற்றியும் அறிந்து கொண்டு சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றாலே போதும் மனிதம் பற்றிப் பேசுவோரும் இணைந்து வாழ வகுப்பெடுக்கும் அரசியல் மேதாவிகளும் வாயடைத்து நிற்பார்கள்.

எமது அரசியற் கைதிகள் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி தினம் தினம் பல ஆபத்துக்களிற்கு முகம்கொடுத்துக்கொண்டு தமது பிரச்சனைகளை வெளியே சொல்ல வழியின்றி உச்சக்கட்டக் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, உண்ணக்கூடிய உணவுமின்றி, சித்திரவதைகளால் மன அழுத்தங்களிற்கு உள்ளாகியதால் நோய்வாய்ப்படும் இவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் போது அங்கு வேறு சிங்களக் கைதிகளுடனும் சித்தசுவாதீனமற்றவர்களுடனும் தங்க வைக்கப்பட்டுப்பின் தவறுதல் போல பாசாங்கு செய்து திட்டமிட்டே மனநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கும் மருந்துகளையும் கசம் போன்ற நோய்களிற்கு வழங்கும் மருந்துகளையும் குடிக்கக் கொடுத்து அவர்களை பலவீனமானவர்களாகவும் உடல், உள உபாதைகளிற்கு உள்ளாபவர்களாகவும் மாற்றி உலகிலேயே சகிக்க முடியாத மனித குல விரோதங்களைச் சிங்கள அரசு செய்கின்றது. இது பற்றி கேள்வி கேட்கும் அரசியற்கைதிகள் குட்டிமணி, தங்கத்துரை போல் சிங்களக் காடையர்களை ஏவி விடுவதன் மூலம் கொல்லப்படுவார்கள் எனச் சிறைச்சாலை நிர்வாகம் மிரட்டுகிறது. இவ்வாறான கொலைகள் பல தடவைகள் நடந்துமிருக்கின்றன.

வழக்குத்தாக்கல் செய்ய பணமில்லாமலும், அவர்களின் குடும்பங்கள் குடும்பத்தலைவன் இல்லாமல் பொருளாதார ஏதிலிகளாகவும், அவர்களை வந்து பார்வையிடவே முடியாத வறுமையில் தவிர்க்கும் அவர்களின் குடும்பங்களுமாக அரசியற் கைதிகளின் நிலை தொடர்கையில், விடுதலையின் பேரில் ஒன்று கூடி மகிழும் பெரும்பாலான புலம்பெயர் சமூகம் இது பற்றிப் புரிந்து ஆரோக்கியமான பாதையில் பயணித்து அவர்களிற்கு உதவிபுரிய முன்வராதா?

தமிழரிற்கான நிரந்தரத் தீர்விற்காக மக்களுடன் சேர்ந்து போராடாமல், தமது கையாலாகத்தனங்களை இராஜதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியற் கைதிகளின் விவகாரங்கள் போன்ற பிரச்சனைகளை என்றாலும் சரியான திட்டவரைபுடன் முன்னெடுக்காது இருப்பது, தமிழர்கள் தமக்கான ஒரு தலைமை இல்லாதிருப்பதை உணர வைக்கின்றது.

அரசியற் கைதிகளின் நிலை தொடர்பில் கவனம் எடுத்து, அவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தி, எமது ஒவ்வொரு அரசியற் கோரிக்கைகளின் போதும் அரசியற்கைதிகள் விவகாரத்தை முன்னிறுத்திச் செயற்படாவிட்டால், எமது மக்கள் அரசியற் கைதிகளாக்கப்பட்டே அநாதரவாவார்கள். அரசியற் கைதிகளின் அவலங்களை எழுதி முடிக்க முடியாதென்பதால், பாகங்களாக அவர்களின் அவலங்களை வெளிக்கொண்டு வந்து நகைப்பிற்கிடமான சிங்களப் பேரினவாதத்தின் நீதித்துறை பற்றி தெரியவைக்க வேண்டிய கட்டாய பணியை நாம் செய்வோம்.

-இனியவன்-

குறிப்பு

எல்லோராலுமே கைவிடப்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் குறித்து தொடராக தமிழிலும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் கட்டுரைகளை பிரசுக்க உள்ளோம். இந்த தொடருக்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்….

பரிதாபத்திற்கு உரிய தமிழ் அரசியற் கைதிகள் குறித்து தமிழ் மக்கள் மத்தியிலும், உலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எமது முயற்சிக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்கள் என முழுமையாக நம்புகிறோம். அத்துடன் அரசியல் கைதிகள் குறித்து உங்களிடம் இருக்கும் தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நடராஜா குருபரன்..

குளோபல் தமிழ்ச் செய்திகள்..

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110857/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.