Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடில்லா புத்தகங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 21: எழுத்தாளனின் சமையலறை!

 

bank_2307965f.jpg

 

மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் அவர்கள் ஐந்து பேரையும் பார்த்தேன். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஒரு மகள். ஐந்து பேரும் ஆளுக்கு ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டுவந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பமே ரயிலில் புத்தகம் படித்துக் கொண்டுவருவதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

 
ஜப்பானில் ரயில் பயணம் செய்தபோது ஏதோ ஓடும் நூலகம் ஒன்றினுள் உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது. அத்தனை பேர் கையிலும் புத்தகங்கள். சிலர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு இசை கேட்டபடியே படித்தார்கள்.
 
ரயில் பயணத்தில் படிப்பது ஒரு சுகம். அதுவும் பகல்நேர ரயில் பயணத்தில் படிப்பது மகிழ்வூட்டும் அனுபவம். இரவில் படிப்பது விழித்தபடியே கனவு காணும் அனுபவம். இரண்டையும் நிறைய அனுபவித்திருக்கிறேன்.
 
இன்றைய ரயில் பயணங்களில் மாத, வார இதழ்கள், நாளிதழ்கள் படிப்பவர் களே அதிகம் இருக்கிறார்கள். பெரும் பான்மையினர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, செல்போன் பேசிக்கொண்டே வருவது, வீடியோ கேம் ஆடுவது, அல்லது உறங்கிவிடுவது என நேரத்தை கொல் கிறார்கள். இந்தச் சூழலில் குடும்பமே புத்தகத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டது உற்சாகமாக இருந்தது.
 
என்ன புத்தகம் படிக்கிறார்கள் எனக் கூர்ந்து கவனித்தேன். தாத்தா படித்துக் கொண்டிருந்த புத்தகம் ‘ராபர்ட் கனிகல்’ எழுதிய ‘அனந்தத்தை அறிந்தவன்’ என்ற கணிதமேதை ராமானுஜன் பற்றிய புத்தகம். பாட்டி படித்துக் கொண்டிருந்த புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டிருந்தது. அதனால், என்ன புத்தகம் எனத் தெரியவில்லை.
 
அப்பா படித்துக் கொண்டிருந்தது ‘அமிஷ் திரிபாதி’ எழுதிய ‘மெலுஹா’. அம்மா படித்துக் கொண்டிருந்த புத்தகம் ‘வாழ்விலே ஒரு முறை’ என்ற அசோகமித்திரன் சிறுகதைகள். ஐந்து பேரில் கல்லூரி மாணவி போன்ற தோற்றத்தில் இருந்த மகளின் கையில் இருந்த ஆங்கிலப் புத்தகம் ‘பால்சாக்ஸ் ஆம்லேட்’.
 
ரயில் நிலையங்களில் தரமான புத்தகக் கடைகள் அரிதாக உள்ளன. பெரும்பான்மை புத்தகக் கடைகளில் வார, மாத இதழ்கள், பொழுதுபோக்குப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் கிடைப்பதில்லை. பயணத்தில் படிப்பதற்கு எளிதாக ‘கிண்டில் பேப்பர் வொயிட்’ போன்ற மின் புத்தகப் படிப்பான்கள் வந்துவிட்டன. ஆனால், அதைப் பலரும் அறிந்திருக்கவில்லை.
 
‘பால்சாக்ஸ் ஆம்லேட்’ புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் நடைபெற்ற மலிவு விலை புத்தகக் காட்சியில் கிடைத்த சுவாரஸ்யமான புத்தகம் அது.
 
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ‘பால்சாக்’ தனது படைப்புகளில் என்ன உணவு வகைகளைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்? அன்று இருந்த புகழ்பெற்ற உணவகங்கள் எவை? இலக்கியவாதிகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றிச் சுவைபட எழுதியிருக்கிறார் ஆன்கா.
 
நீங்கள் என்ன விரும்பி சாப்பிடுகிறீர் கள்? எங்கே போய்ச் சாப்பிடுகிறீர்கள்? எந்த நேரம் சாப்பிடுகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள், நீங்கள் யார் என்பதைச் சொல்லிவிடுவேன் என்கிறார் ஆன்கா. அப்படித்தான் பால்சாக்கையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
 
இரண்டு விதங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது. ஒன்று, பால்சாக்கின் கதாபாத்திரங்கள் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? ஏன் சாப்பிடுகிறார்கள்? இதன் ஊடாக அவர்களின் வசதி அல்லது வறுமை எப்படிச் சுட்டிக் காட்டப்படுகிறது என்பதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இப்படி ஆய்வு செய்வது எளிதான விஷயமில்லை. பால்சாக்கின் அத்தனை படைப்புகளையும் எழுத்து எண்ணிப் படித்திருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.
 
இரண்டாவது பால்சாக் காலத்தில் பாரீஸின் இலக்கியச் சூழல் எப்படி யிருந்தது? எங்கே விருந்துகள் நடை பெற்றன? பால்சாக்கின் அன்றாட உணவுப் பழக்கம் எப்படியிருந்தது என அறியப்படாத, சுவையான தகவல் கள், நிகழ்வுகளை வெளிப்படுத்தியிருக் கிறார்.
 
பால்சாக்கை படித்தவர்களுக்குத் தெரியும், அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிடுவார்கள். அதை ரசித்து ரசித்துப் பால்சாக் எழுதியிருப்பார். படிக்கும்போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
 
பால்சாக் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். ஒரு நாளில் 15 மணி நேரம் எழுதினார் என்கிறார்கள். இரவில் நெடுநேரம் எழுதக் கூடியவர் என்பதால், அவரது காலை உணவு எளிமையானது. ஒரு துண்டு மீனும், அவித்த முட்டையும், ரொட்டியும் மட் டுமே சாப்பிடுவார். அதிகம் பசியிருந்தால் கோழி இறைச் சியோ, ஆட்டு இறைச்சியோ உடன் சேர்த்துக்கொள்வது உண்டு.
 
மதிய உணவை அவர் 4 அல்லது 5 மணிக்குச் சாப்பிடுவார். அதன் பிறகு உறங்கிவிடுவார். நள்ளிரவில் எழுந்துகொண்டு மீண்டும் எழுத ஆரம்பிப்பார்.
 
கோப்பைக் கோப்பையாக, சூடான பிளாக் காபி குடித்தபடியே விடியும் வரை எழுதுவார். அதுவும் சக்கரை இல்லாத காபி.
 
வாரத்தில் சில நாட்கள் அவரது பசி அதிகமாகிவிடும். அது போன்ற நாட்களில் பிரபலமான உணவகத்துக்குச் சென்று விதவிதமாக சாப்பிடுவார். சாப்பாட்டுப் பிரியர் என்பதால் விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்வார்.
 
அதாவது சூடான சூப், வேகவைத்து சுவையூட்டிய நூறு சிப்பிகள், வெங்காயம், தக்காளி போட்டு வெண்ணெயில் வதக்கிய மாட்டு நாக்கு, இரண்டு முழுக் கோழிகள், 12 ஆட்டு இறைச்சித் துண்டுகள். ஒரு முழு வாத்து. பொரித்த காடை. பொரித்த நாக்கு மீன். 10 ரொட்டித் துண்டுகள், உடன் இனிப்பு வகைகள், பழ வகைகள், நான்கு பாட்டில் ஒயிட் வொயின். இத்தனையும் ஒருவேளையில் சாப்பிட்டு முடித்துவிடுவார்.
 
பால்சாக் சாப்பிடும் அழகு, வயிறு எனும் பெரிய குகையில் கொண்டுபோய் உணவுகளை ஒளித்து வைப்பது போலி ருக்கும். ஒரு கையில் கத்தி, மறு கையில் முள் கரண்டியுடன் போர்முனையில் சண்டையிடுவதைப் போல ஆவேசமாக உணவைக் கொத்திப் பிடுங்கி, வேக வேகமாகச் சாப்பிடுவார். வாயில் இருந்து ஆவி வருமளவு சூடாகச் சாப்பிடுவார். பழத் துண்டுகளில் ஒன்றை கூட மிச்சம் வைக்க மாட்டார். சாப்பாட்டின் சுவையை அனுபவிப்பது போல இடையிடையே தலையை ஆட்டி சிரித்துக்கொள்வார். வயிற்றில் இடமில்லாமல் போய்விடுமோ என அவ்வப் போது குலுக்கிக் கொள்வது நடனமாடுவது போலிருக்கும்,
 
சிறுவயதில் வறுமை யில் போதுமான உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட தற்குப் பழி தீர்த்துக்கொள் வதைப் போல, உணவை அள்ளி திணித்துக்கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுவிட வேண்டும் என்பதே அவரது கொள்கை. சாப்பிட்ட பில்லுக்குப் பதிப்பாளர்தான் பணம் தர வேண்டும். ஆகவே, பில்லை பதிப்பாளருக்கு அனுப்பி வைக்கச் சொல்லிவிடுவார்.
 
காபி பிரியரான பால்சாக் , இனிப்பு சேர்க்காத கறுப்பு காப்பியை விரும்பிக் குடிப்பார். தனது எழுத்துக்கான தூண்டுதலைத் தருவது காபியே எனக் கூறும் பால்சாக், ஒரு நாளைக்கு 30 முதல் 50 கோப்பை காபி குடித்திருக்கிறார்.
 
இப்படி பால்சாக் மற்றும் அவரது சமகால இலக்கியவாதிகளின் உணவுப் பழக்கங்களை பிரெஞ்சு தேசத்தின் உணவுப் பண்பாட்டு வரலாற்றுடன் ஒன்றுகலந்து எழுதியிருப்பது இந்தப் புத்தகத்தின் தனித்துவம்.
 
இலக்கியத்திலும், உணவிலும் ருசி கொண்ட யாராவது ஒருவர் ‘தமிழகத் தின் உணவுப் பண்பாடு எப்படி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள் ளது’ என ஆராய்ந்து எழுதினால், நிச்சயம் இது போன்ற புத்தகம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • Replies 62
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 22: கற்றலின் இனிமை!

 

sra_2315379h.jpg

 

தெரிந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பணி ஒய்வு பெற்றார். அப்போது, 30 ஆண்டுகளாக தான் சேகரித்து வைத்திருந்த 4 ஆயிரம் புத்தகங்களையும் பள்ளி நூலகத்துக்குப் பரிசாக அளித்துவிட்டார்.

 
எனக்குத் தனது பணிக் காலத்தில் மூன்று கொள்கைகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்ததாக அவர் கூறினார். ஒன்று, பிரைவேட் டியூசன் எடுத்து காசு சம்பாதிக்கக் கூடாது. இரண்டாவது, தன்னால் முடிந்த அளவு வசதியில்லாத மாணவர்களுக்குத் தேவையான உதவி களை செய்வது.
 
மூன்றாவது, வகுப்பறை யில் மாணவர்களுக்கு தான் படித்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது. இந்த மூன்றையும் உறுதியாக தான் கடைப்பிடித்ததாகக் கூறினார்
 
‘உங்கள் ஆசிரியர் அனுபவத்தில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் பெருமிதமான குரலில் சொன்னார்:
 
“மாணவர்களை ஒருமுறை கூட நான் அடித்ததே இல்லை. அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் ஏ.எஸ்.மகரன்கோ. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ‘தி ரோடு டு லைஃப்’ (The Road to Life) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதுதான் எனது வாழ்க் கையை மாற்றியமைத்தது!’’ என்றார்.
 
‘புத்தகங்களால் என்ன செய்துவிட முடியும்’ என அறியாமையில் பலர் கேலி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக புத்தகங்களே இருந்திருக்கின்றன என்பதே உண்மை!
 
ஏ.எஸ்.மகரன்கோ எனப்படும் ஆன்டன் செமினோவிச் மகரன்கோ… ரஷ்யாவின் மிகச் சிறந்த கல்வியாளர். புதிய கல்விமுறையை உருவாக்கிய சிந்தனையாளர்.
 
அநாதை சிறார்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குக் கல்வி புகட்டியவர். ‘கார்க்கி காலனி’ என்ற இவரது ‘கல்வியகம்’ ரஷ்யாவின் முன் மாதிரி கல்வி நிறுவனமாக கருதப்பட்டது.
 
மகரன்கோவின் புத்தகங்கள் எதுவும் தமிழில் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கல்விகுறித்த கட்டுரைத் தொகுப்பில், மகரன்கோ ஆற்றிய சொற்பொழிவு ஒன்றினைப் படித்தேன்.
 
அது பெற்றோர்களின் பொறுப் புணர்வு பற்றியது.
 
“பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டதோடு பொறுப்பு முடிந்து விட்டதாக பெரும்பான்மையான பெற் றோர்கள் கருதுகிறார்கள். மாணவனுக்கு அறிவை மட்டுமே பள்ளிக்கூடம் புகட்டும். பண்பாட்டினை குடும்பம்தான் உருவாக்க வேண்டும்!
 
குறிப்பாக, பெற்றோரின் உணவுப் பழக்கம், உடை அணியும் விதம், நடத்தை, பேச்சு, சண்டை, கோபம் போன்றவை குழந்தைகளை மிகவும் பாதிக்கும். இவ்வளவு ஏன்? பெற்றோர் கள் எதை கேலி செய்து சிரிக்கிறார் களோ, அதை பிள்ளைகளும் காரணம் இல்லாமல் கேலி செய்து சிரிப்பார்கள்.
 
ஆகவே, பெற்றோர்கள் வீட்டில் நடந்துகொள்ளும் விதமே பிள்ளைகள் வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
பெரும்பான்மை பெற்றோர்கள் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மறுக்கிறார்கள், அடிபணிவதே இல்லை எனக் குறை கூறுகிறார்கள். இதில் தவறு பிள்ளைகளிடம் இல்லை. பெற்றோர்களிடமே இருக்கிறது.
 
காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலையாள் போல, அடிமைகள் போல, சர்க்கஸ் மிருகங்களைப் போல அதிகாரத்தால் அச்சுறுத்துவதாலும், ஆத்திரப்பட்டு கத்துவதாலும் அடிபணிய வைத்துவிட பார்க்கிறார்கள்.
 
ஒருபோதும் அது சாத்தியமாகாது. முடிவாக, ‘நீ என் பேச்சை கேட்பதாக இருந்தால் நீ கேட்பதை எல்லாம் வாங்கித் தருகிறேன்’ என ஆசை காட்டுகிறார்கள். அது ஒரு வகையான லஞ்சம். மோசமான வழிமுறை. பெற்றோர்களின் அலட்சியமே பிள்ளைகளை மோசமான நடத்தை உள்ளவர்களாக மாற்றுகிறது’’ என அந்தச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் மகரன்கோ.
 
இந்தக் கட்டுரையை வாசித்தப் பிறகு, மகரன்கோவின் நூல்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதில் ஒன்றுதான் ‘மகரன்கோ: ஹிஸ் லைஃப் அண்ட் வொர்க்’ (Makarenko: His Life and Work ) என்ற புத்தகம். ஐதராபாத்தில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் தற்செயலாக கிடைத்தது.
 
மகரன்கோவின் வாழ்க்கை மற்றும் அவர் உருவாக்கிய கல்வி முறை, அவரிடம் படித்த மாணவர்களின் நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 
புரட்சிக்குப் பிறகான ரஷ்யாவில் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் படிப்பை கைவிட்டு, பசிக்காக எந்தக் குற்றத்திலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அத்துடன் சீர்திருத்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், பள்ளியை விட்டுத் தப்பியோடி இளம் குற்றவாளிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பொறுப்பு மகரன்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
மகரன்கோ ‘கார்க்கி காலனி’ என்ற கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கினார். அதில் 14 முதல் 18 வயது வரையுள்ள கைவிடப்பட்ட, அநாதை சிறார்கள் 30 மாணவர்களாக சேர்க்கப்பட்டார்கள்.
 
கல்வியும் உழைப்பும் ஒருங்கிணைந்த முறை ஒன்றினை மகரன்கோ உருவாக்கினார். அதாவது, படிப்போடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், அடிப்படை வேலைகள் அத்தனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, உடல் உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒன்றிணைந்த கல்விமுறை உருவாக்கப்பட்டது.
 
உக்ரைனில் உள்ள ஏழை தொழிலாளியின் மகனாக பிறந்த மகரன்கோ, 1905-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து ரயில்வே பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
 
‘கார்க்கி காலனி’ என்கிற கல்வி நிலையத்தை உருவாக்குவது மகரன்கோவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காலனி அமைக்கபட்ட இடத்தில் இடிந்து போன கட்டிடம் ஒன்று மட்டுமே இருந்தது. அது, முன்பு சிறுவர் ஜெயிலாக இருந்த கட்டிடம். சுற்றிலும் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் செடிகளும் புதர்களுமாக இருந்தது. அதை சுத்தப்படுத்தி கதவு இல்லாத அந்தக் கட்டிடதை ஒரு உறைவிடப் பள்ளியாக மாற்றினார்.
 
இரண்டு ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடம் பெரும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கியது. 124 மாணவர்களுடன் 16 பசுக்கள், எட்டு குதிரைகள், 50 பன்றிகளைக் கொண்ட கூட்டுப்பண்ணையைப் போல மாறியது. ஒரு பக்கம் பழத்தோட்டம், மறுபக்கம் காய்கறித் தோட்டம்.
 
அவற்றை மாணவர்களே உழைத்து உருவாக்கினார்கள். தங்கள் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை சந்தையில் விற்றுப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
 
இளம் குற்றவாளிகளாகக் கருதப் பட்ட அந்த மாணவர்களை, கல்வியிலும் உழைப்பிலும் சிறந்தவர்களாக மேம்படுத்தினார் மகரன்கோ. அதை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை இந்நூல் விவரிக்கிறது.
 
மகரன்கோ தனது மாண வர்களின் துஷ்டத்தனங் களைக் கண்டு அவர்களை வெறுக்கவில்லை, தண் டிக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத் தார்.
 
ஒரு மாணவனை பள்ளியைவிட்டு துரத்திவிடுவதைப் போல மோசமான செயல் வேறு எதுவுமே இல்லை. கல்வியின் வழியே தனிமனிதன் மேம்படுவதுடன், தனது சமூகத்தையும் அவன் மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
 
குறிப்பாக, பாடம் நடத்தி மாணவனை மதிப்பெண் பெற வைப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக ஓர் ஆசிரியர் நினைக்கக் கூடாது.
 
ஆசிரியர்கள் எவ்வளவு கற்றுக் கொள்கிறார்களோ, அந்த அளவே அவர்கள் சிறப்பாக கற்றுத் தருவார்கள். ஆகவே, ஆசிரியர்கள் நிறையப் படிக்க வேண்டும். தங்களுக்குள் கூடி விவாதிக்க வேண்டும். முன்மாதிரி மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகரன்கோ.
 
கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றையச் சூழலில் நாம் விரும்புவதும் அதைத்தானே!
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை!

 

sra_2323018h.jpg

 

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே அதிகம். படிப்பையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்துவிடுவது இல்லை.

 
குடும்பப் பிரச்சினைகளின் காரண மாக இலக்கியம் படிப்பதை கைவிட்ட வர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட வர்கள் பலரை நான் அறிவேன். பல எழுத்தாளர்கள் குடும்பத்தின் கோபம், சண்டைகளை மீறியே தனது எழுத்து செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகி றார்கள். அரிதாக சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான இலக்கியச் சூழல்கொண்ட வீடும் அமைகிறது.
 
ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய போது அவருடைய வயது 82.
 
கவிஞர் டி.எஸ். எலியட் கருத்துவேறு பாட்டால் மனைவி விவியனை விவாக ரத்து செய்துவிட்டார். ஆனால், எலியட் எந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் விவியன் அங்கே தேடிவந்து முன்னிருக்கையில் அமர்ந்தபடியே, ‘‘நீ ஒரு பொய்யன்…” என்ற அட்டையைத் தூக்கிப் பிடித்து கலாட்டா செய்வார்.
 
‘இழந்த சொர்க்கம்’ (பேரடைஸ் லாஸ்ட்) என்கிற காவியம் படைத்த மகாகவி மில்டன், தனது 35-வது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியின் கடுமையான நடத்தையால் அவதிப்பட்ட மில்டன், தனது இறப்புவரை தான் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.
 
சார்லஸ் டிக்கன்ஸ் தன் மனைவி கேதரின் கண்ணிலேயே படக் கூடாது என்று படுக்கை அறை நடுவில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியிருந்தாராம்.
 
சிந்தனையாளர் சாக்ரடீஸின் மனைவி ஜாந்திபி, ஒருநாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரைத் தூக்கி ஊற்றினாள். அதற்கு ‘முன்பு இடி இடித்தது… இப் போது மழை பெய்கிறது’ என்று சாக்ரடீஸ் சொன்னதாக ஒரு கட்டுக் கதை நெடுங் காலமாகவே இருந்து வருகிறது.
 
இப்படி எழுத்தாளர்களின் மோசமான மனைவிகுறித்து நிறைய சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் உண்மை கலந்த பொய்கள்!
 
சாக்ரடீஸ் ஜாந்திபியைத் திருமணம் செய்து கொள்ளும்போது அவருடைய வயது 50. ஜாந்திபிக்கோ 20 வயது. ஜாந்திபி வறுமையின் காரணமாகவே சாக்ரடீஸைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். குடியும், கூத்தும், பெண் தொடர்பும் கொண்ட கிரீஸ் நாட்டு ஆண்களைப் போலவே சாக்ரடீஸ் நடந்துகொண்டார் என்பதால் தான் அவர்களுக்குள் சண்டை என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது.
 
ஜாந்திபி சாக்ரடீஸோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றிருக் கிறாள். மரண தண்டனை விதிக்கப்பட்ட சாக்ரடீஸைப் பார்க்க சிறைக்கு வரும்போது மூன்றாவது கைக் குழந்தையோடு ஜாந்திபி வந்திருந்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. சாக்ரடீஸ் சாகும்போது அவருக்கு 71 வயது.
 
சாக்ரடீஸீன் மரணத்துக்குப் பிறகு ஜாந்திபி என்ன ஆனாள்? எப்படி வாழ்ந்தாள்? பிள்ளைகளை எப்படி வளர்த்தாள்… என்கிற கேள்விகளுக்குப் பதில் இல்லை.
 
மோசமான மனைவிகள் ஒருபுறம் என்றால், மறுபக்கம் தன் வாழ்க்கை யைக் கணவரின் வெற்றிக்காக அர்ப் பணித்துக்கொண்ட பெண்கள் பலரும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள்.
 
ஜென்னியின் ஆதவுரவுதான் காரல் மார்க்ஸை மாபெரும் சிந்தனையாளராக உருவாக்கியது. பார்வையற்ற போர் ஹெஸுக்குத் துணையாக இருந்தவர் அவரது தாய். வர்ஜீனியா வுல்ப் என்ற பெண் எழுத்தாளரின் கணவர் லியோனார்டு, தன் மனைவி எழுத்தாள ராகச் செயல்பட சகல விதங்களிலும் உறுதுணையாக இருந்தார்.
 
இவ்வளவு ஏன்… டால்ஸ்டாயின் மனைவி சோபியா, ஒவ்வோர் இரவும் கணவர் எழுதிப் போட்ட நாவலின் பக்கங்களை முதுகு ஒடியப் பிரதி எடுத்து உதவி செய்திருக்கிறார். இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட துணை கிடைத்த எழுத் தாளர்கள் பாக்கியவான்கள்.
 
அப்படியான ஒரு மனிதர் கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி.ராஜநாராயணன்! அவரது துணைவி யார் கணவதி, அற்புதமான பெண்மணி. அன்பிலும் உபசரிப்பிலும் அவருக்கு இணையே கிடையாது. கி.ராவின் எழுத்துப் பணிக்கும் குடும்ப வாழ்வுக் கும் அவரே அச்சாணி!
 
கணவதி அம்மாள்குறித்து ‘கி.ரா இணைநலம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. எழுதிய வர் எஸ்.பி.சாந்தி. வெளியிட்டது ‘அகரம்’ பதிப்பகம். ஓர் எழுத்தாளரின் மனைவிகுறித்து, தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுதான் என நினைக்கிறேன். கணவதி அம்மாளின் நினைவுகளை வாசிக்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.
 
கி.ரா பிறந்த இடைசெவல் கிராமம்தான் கணவதி அம்மாளின் ஊரும். ஜில்லா போர்டு தொடக்கப் பள்ளியில் படித்த தனது பள்ளி நாட்கள் பற்றியும், உடன் படித்த தோழிகள் குறித்தும் நினைவுகூரும் கணவதி அம்மாள், பொதுவாக ‘திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தன்னோடு படித்த பெண் தோழிகளை, விருப்பமான மனிதர்களைப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பெற்றதோடு அவளது சகல தனித் தன்மைகளும் புதையுண்டுப் போய் விடுகின்றன’ என ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.
 
காசநோயாளியாக இருந்த கி.ராவை நம்பிக்கையுடன் தைரிய மாக தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதையும், தங்களுடைய கல்யாணத்துக்கு போட்டோ கிடையாது, மேளதாளம் கிடையாது, சடங்குகள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பாடு கூட கிடையாது. முகூர்த்தப் பட்டுப் புடவைகூட நூல் புடவைதான். கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 200 ரூபாய் மட்டுமே என நினைவுகூர்கிறார்.
 
விவசாயப் பணிகளுக்கு ஓடியோடி உதவிகள் செய்தது, நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டது, பிள்ளைகளை நோய் நொடியில் இருந்து காத்து வளர்க்கப் பாடுபட்டது, வீடு தேடிவரும் இலக்கியவாதிகளுக்கு விருந்து உபசாரம் செய்தது,
 
விவசாயச் சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு கி.ரா சிறைப்பட்டபோது ஒற்றை ஆளாக குடும்பத்தை கவனித்துக்கொண்டது… என நீளும் கணவதி அம்மா ளின் பல்வேறு நினைவுகளின் ஊடாக, ஒரு பெண்ணின் அர்ப்பணிப்புமிக்க மனதும் போராட்டமான வாழ்க்கையும் வெளிப்படுகிறது.
 
‘ஆனந்த விகடன்’ இதழில் முத்திரை கதை எழுதி கிடைத்த 100 ரூபாயில், கி.ரா தனக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை எடுத்து தந்தது, எங்கே சென்றாலும் தன்னை உடன் அழைத்துப் போனது, ஹிந்தி படங்களுக்குக் கூட தன்னை அழைத்துப் போனது,
 
கடிந்து பேசாமல், முகம் சுளித்துத் திட்டாமல், தன்னை கவுரவமாக, மரியாதையாக நடத்தியது. திருமணமானது முதல் இன்று வரை தனது விருப்பங்களை மதித்து நடந்துகொள்ளும் அன்பான கணவராக கி.ரா திகழ்வதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் கணவதி அம்மாள்.
 
தண்ணீர் மாதிரி தன் வழித் தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல்முளைக்கச் செய்யும் காதலே உயர்வானது. அத்தகைய ஓர் ஆதர்ச தம்பதி என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள சாந்தி.
 
எழுத்தையும் எழுத்தாளனையும் கொண்டாடும் நாம், அந்த எழுத்தாள னுக்குத் துணை நிற்கும் குடும்பத் தினரையும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டும். அதுவே சிறந்த பண்பாடு!
 
- வாசிப்போம்…
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 24: வாழ்க்கைப் பாடங்கள்!

 

book_2331141f.jpg

 

சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசு அளித்தேன். இரண்டு மாணவிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்கள். பாடி முடிந்த பிறகு, அவர்கள் கையில் இருந்த காகிதத்தைப் பார்த்தேன், ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடியிருக்கிறார்கள். ‘உங்களுக்குத் தமிழ் தெரியாதா..?’ எனக் கேட்டேன். பேசத் தெரியும், படிக்கத் தெரியாது என்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் வெளிநாட்டு மாணவிகள் இல்லை. தமிழ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான்!

 
‘எத்தனை மாணவர்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கிறது’ எனக் கேட்டதற்கு, விரல்விட்டு எண்ணும் அளவே கையைத் தூக்கினார்கள். ‘மற்றவர்கள் ஏன் புத்தகங்கள் படிப்பது இல்லை?’ எனக் கேட்டேன்.
 
‘பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது. புரிந்தோ, புரியாமலோ… மனப்பாடம் செய்தால் மட்டும் போதும் என ஆசிரியரும் பெற்றோரும் கூறுகிறார்கள்’ என மாணவர்கள் பதில் சொன்னார்கள்.
 
ஒரு மாணவன் குரலை உயர்த்தி, ‘எனக்குப் பரிசாக கிடைத்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தைக் கூட வீட்டில் படிக்க அனுமதிப்பது இல்லை. காலேஜ் போனதுக்கு அப்புறம் படித்துக் கொள்ளலாம்’ என அப்பா திட்டுகிறார் என்றான்.
 
‘ஏன் இந்தச் சூழல்...?’ என ஆசிரி யர்களிடம் கேட்டதற்கு, நிறைய மார்க் வாங்காவிட்டால் காலேஜ் சீட் கிடைக்காது. புத்தகம் படித்தால் மாணவர்கள் கவனம் சிதறிப் போய்விடும். கெட்டுப் போய்விடுவார்கள். பெற் றோர்கள் எங்களைத் திட்டுவார்கள் என ஒருமித்தக் குரலில் சொன்னார்கள்.
 
‘பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை இதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், ஆறு முதல் ஒன்பது வரை உள்ள மாணவர்கள் பல்வேறு துறையைச் சார்ந்த புத்தகங்கள், கதை கட்டுரைகள் படிக்கலாம்தானே? விளை யாட்டு, இசை, யோகா, ஓவியம், கராத்தே போன்ற எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கற்றுத் தருகிறீர்கள். ஆனால், புத்தகம் வாசிப்பதில் மட்டும் ஏன் கவனம் செலுத்துவது இல்லை’ எனக் கேட்டேன்,
 
‘அதற்கு எல்லாம் டைம் கிடையாது சார். நிறைய ஹோம்வொர்க் இருக் கிறது’ என்றார்கள்.
 
‘ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு படிக்கிற பழக்கம் இருக்கிறது. சமீபமாக என்ன புத்தகம் படித்தீர்கள்?’ எனக் கேட்டேன். 80 ஆசிரியர்களில் 7 பேர் மட்டுமே புத்தகம் படிக்கிறவர்களாக இருந்தார்கள். அவர்களும் ‘பணிச் சுமை காரணமாக படிக்க நேரம் கிடைக்கவில்லை’ என அலுத்துக் கொண்டார்கள். இது ஒரு பள்ளியின் பிரச்சினை மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் கல்விச் சூழல் இப்படிதான் இருக்கிறது.
 
பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்காதே எனப் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும் சராசரி பெற்றோர்களை போலின்றி, கல்விக் கூடத்தில் படித்தால் மட்டும் போதாது, வெளியே போய் சுற்றியலைந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொள் என வழிகாட்டும் பெற்றோராக திகழ்ந்தவர் சுற்றுச்சூழல் அறிஞர் கிளாட் அல்வாரீஸ்.
 
இவரது பையன் ராகுல் தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன், ஒரு வருஷம் அவன் விரும்பியபடி மீன் வளர்ப்பு, பாம்புப் பண்ணை, முதலை பண்ணை, இயற்கை விவசாயம்… என மாறுபட்ட அனுபவங்களை நேரடியாக பெற்று வரச் செய்திருக்கிறார். ஓர் ஆண்டு காலம் தனக்குக் கிடைத்த அனுபவங்களை, ராகுல் அல்வாரீஸ் தொகுத்து… ‘ப்ரீ ஃப்ரம் ஸ்கூல்’ (Free from School) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுதிய போது அவரது வயது 16.
 
கோவாவைச் சேர்ந்த கிளாட் அல்வாரீஸ் இந்தியாவின் முக்கியமான சுற்றுசூழல் அறிஞர். வளர்ச்சித் திட்டங்களின் பேரால் நடத்தப்படும் அழித்தொழிப்புகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி தொடர்ந்து எழுதி வரும் சிந்தனையாளர்.
 
ராகுலின் முதல் அனுபவம் அலங்கார மீன் வளர்ப்பில் தொடங்குகிறது. அப்பாவின் நண்பரும் அலங்கார மீன்கள் விற்பனை செய்பவருமான அசோக்கிடம் ராகுல் உதவியாளராக சேர்கிறார். அங்கே மீன் தொட்டிகள் அமைப்பது, அதை சுத்தப்படுத்துவது, அலங்கார மீன்களை வளர்க்கும் விதம், மீன் ரகங்கள் என யாவும் கற்றுக்கொள்கிறார்.
 
இதற்காக மீன்களைப் பற்றி நிறையப் படிக்கிறார். வாடிக்கையாளர்களை நேரடியாக சென்று சந்தித்து, மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்து கொள்கிறார். இதன் அடுத்த கட் டத்தில்… தானே வண்ண மீன்களை விற்பனை செய்கிறார். தனது ஆசிரியர் ஜூலியட் வீட்டுக்கு அலங்கார மீன் தொட்டி அமைத்துத் தருகிறார்.
 
அடுத்ததாக, இயற்கை விவசாயம் குறித்து கற்றுக்கொள்ள தனது கிராமத்துக்குப் போகிறான். விதை விதைத்தல், நடவு செய்வது போன்றவற்றை அறிந்துகொள்கிறார். காளான் வளர்ப்பது எப்படி என்பது குறித்த குறுகிய காலப் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு, காளான் வளர்ப்பதற்கு கற்றுக்கொள்கிறார்.
 
அப்பாவின் உதவியோடு புனேயில் உள்ள பாம்புப் பண்ணைக்குச் சென்று, இந்தியாவில் உள்ள 238 வகை பாம்புகள் குறித்தும், அதில் எவை விஷமானவை, எவை விஷமற்றவை என்பதையும் கற்றுக்கொள்கிறார். இதனை அடுத்து சென்னையில் உள்ள தனது அப்பா வின் நண்பரும், எழுத் தாளருமான எஸ்.வி. ராஜதுரை வீட்டில் தங் கிக்கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பது பற்றி யும் மண்புழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் கற்றுக்கொள்ள நியூ காலேஜுக்குச் சென்று வருகிறார்.
 
ஒரு மாத காலம் சென்னையில் உள்ள முதலைப் பண்ணையில் தங்கி முதலைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்வதுடன், இருளர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கவும் கற்றுக்கொள்கிறார். ஒருநாள் பேருந்தில் மகாபலிபுரம் போக ஏறியபோது, போலி கண்டக்டர் ஒருவரால் ஏமாற்றப்படுகிறார். இப்படியாக ஓர் ஆண்டு முழுவதும் தான் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து பெல்காமில் நடைபெற்ற, சுற்றுச்சூழல் விழாவில் ராகுல் உரையாற்றுவதுடன் புத்தகம் நிறைவுபெறுகிறது.
 
15 வயது பையன் தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்களை நேரடியாக, எளிமையாக, எழுதியிருப்பதே இந்த நூலின் தனித்துவம். வீட்டுக்குள்ளே பிள்ளைகளை பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல பொத்திப் பொத்தி வளர்ப்பதைவிடவும், இப்படி பல்வேறு அனுபவங்களைக் கற்று வரவும், தனியாக பயணம் செய்யவும், எதிர்பாராதப் பிரச்சினைகளை சமாளித்து நம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவும் செய்ய வேண்டியதே பெற்றோர்களின் உண்மையான கடமை.
 
ராகுல் தனது பள்ளிப் பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டதை விட அதிகமாக வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறான். அதற்கு அத்தாட்சியே இந்தப் புத்தகம்! இரண்டு விதங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது, ஒன்று, மாணவர்கள் வெறும் மனப்பாடக் கல்வியைத் தாண்டி வெளியே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான நேரடி ஆவணம் இது.
 
இரண்டாவது, தனியே பயணம் செய் யவும், நண்பர்கள், உறவினர்களுடன் தங்கிப் பழகி புதியன கற்றுக்கொள்ள பெற்றோர்கள் ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்குத் தூண்டுகோலாகவும் உள்ளது. ராகுல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களுக்கு பரீட்சைகள் கிடையாது. மதிப்பெண்களும் கிடையாது. ஆனால், இந்த ஒரு வருஷம் அவர் கற்றுக் கொண்டது அவரது ஆளுமையை மாற்றியமைத்திருக்கிறது. இயற்கை யைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் வைத்திருக்கிறது. கூடவே ராகுலை ஓர் எழுத்தாளனாகவும் உருவாக்கி இருக் கிறது. பொறுப்பான பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தக இது.
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 25: வேளாண்மை ஆவணம்!

 

sra_2338538f.jpg

 

‘‘விவசாயம் குறித்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான புத் தகம் எது?’’ என ஓர் அமெரிக்க ஆய்வாளர் என்னிடம் கேட்டார். அவர் சமூகவியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழகம் வந்தவர்.

 
உடனடியாக எந்தப் புத்தகத்தைச் சொல்வது எனத் தெரியவில்லை.
 
‘‘ஓர் ஆண்டில் விவசாயம் சார்ந்து எத்தனைப் புத்தகங்கள் வெளியாகின் றன? யாராவது ஒரு விவசாயி, தனது விவசாய அனுபவத்தை முழுமையாக எழுதியிருக்கிறாரா?’’ என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
 
‘‘இயற்கை வேளாண்மையைப் பற்றி தமிழில் சில புத்தகங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, நம்மாழ்வார் எழுதிய ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’, ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘இனி விதைகளே போராயுதம்’ போன் றவை;
 
பாமயன் எழுதியுள்ள ‘வேளாண் இறையாண்மை’, பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள ‘மண்ணுக்கு உயி ருண்டு’ ஆகியவை முக்கியமான புத்தகங்கள். நவீன வேளாண்மை முறைகளைப் பற்றியும் சில நூல்கள் வெளியாகியுள்ளன’’ என்றேன்
 
‘‘தமிழர்களின் பராம்பரிய விவசாய முறைகள், நீர் பங்கீடு, உணவுப் பண்பாடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்’’ எனக் கேட்டார்.
 
‘‘அப்படி ஒரு நூலை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதப் பட்டதாகத் தெரியவில்லை…’’ என்றேன்.
 
‘‘இந்திய விவசாயியின் மரபு அறிவு ஏன் தொகுக்கப்படவில்லை? இந்திய விவசாயம் நவீனப்படுத்தப்படாமல் போனதற்குக் காரணம், விவசாயிகள் படிப்பறிவு அற்றவர்களாக இருப்பது தானா..?’’ எனவும் அவர் கேட்டார்.
 
‘‘விவசாயி என்றவுடன் படிக்காதவர் என்ற பிம்பம் நமக்குள் ஆழமாக ஊடுருவி யிருக்கிறது. இது ஒரு தவறான எண்ணம்.
 
இன்று இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் பலரும் படித்தவர்கள். கிராமப்புறங்களிலும் இந்தத் தலைமுறை விவசாயிகளில் பெரும்பான்மையினர் அடிப்படை கல்வி கற்றவர்களே.
 
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை பெரும்பான்மை இந்திய விவசாயி கள் கல்வி பெறாமலே இருந்தார்கள். இன்று அப்படியில்லை. இன்றைய விவசாயிகள் மண் பரிசோதனை முதல் ரசாயனப் பொருட்கள், உரங் கள், பூச்சிக் கொல்லிகள் வரை அறிந்த வர்களாக இருக்கிறார்கள். மாற்று விவசாய முறைகளையும் அதன் முக் கியத்துவத்தையும் கற்றுக்கொள்வ துடன், இதற்கான சிறப்பு பயிலரங்குகள், களப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.
 
‘விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல; அது வாழ்க்கை முறை! உற்பத்தியை அதிகப்படுத்துவதைப் பற்றி சிந்தனை செய்யும் அதே நேரம், மக்களின் ஆரோக்கியம் குறித்தும் விவசாயி சிந்திக்கக் கடமைப்பட்டவன்’ என்கிறார் மசானபு ஃபுகோகா.
 
அதிக உற்பத்தி, அதிக தரம் என நவீன விவசாயம் புதிய பாதையைக் காட்டியபோது, இந்திய விவசாயத்தில் பெரிய மாற்றம் உருவானது. வணிகப் பயிர்கள் அதிகரிக்க தொடங்கின. புதிய வேளாண் கருவிகள் அறிமுகமாயின. இந்த மாற்றத்தின் சாதக, பாதகங்கள் குறித்து இன்றைய விவசாயி நிறைய யோசிக்கிறான். ‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’ என்று ஜே.சி.குமரப்பா சொன்னது அவன் நினைவில் வந்து போகிறது.
 
விவசாயம் கைவிடப்பட்ட துறை யாக புறமொதுக்கப்படுவதை வேதனை யோடு எதிர்கொள்கிறான். தனது விளைச் சலைக் கொண்டு இடைத்தரகர்கள், வணிகர்கள் அதிகம் சம்பாதிப்பதையும், தனக்கு அடிப்படை ஊதியம்கூட கிடைக் காத நிலை இருப்பதையும் கண்டு வருத்தப்படுகிறான். வேறு எந்தத் துறையிலும் இத்தனை பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்ளவில்லை. விவசாயத்தில் தான் நடந்திருக்கிறது. இதுதான் நம் காலத்தின் விவசாய சூழல்’’ என்றேன்.
 
அவர் சென்ற பிறகு உடனடியாக ஜப்பானியரான மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்தேன். 1978-ல் இந்தப் புத்தகம் வெளியான பிறகே, உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் தொடர்பான கவனம் குவிய ஆரம்பித்தது.
 
இது வேளாண்மையைப் பற்றி மட் டும் பேசும் புத்தகம் மட்டுமில்லை; இயற் கையைப் புரிந்துகொண்டு இணைந்து வாழும் வாழ்க்கை முறையைப் பற்றியும் பேசும் புத்தகம். வேளாண்மை ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் முழுமையாகச் செழுமைப்படுத்தும் வழி என்கிறார் ஃபுகோகா.
 
‘ஒற்றைவைக்கோல் புரட்சி’ புத்தகத் தைப் போலவே இயற்கை விவசாயத் தின் ஆதார புத்தகங்களில் ஒன்று எனக் கொண்டாடப்படுகிறது ’ஒரு வேளாண்மை ஆவணம்’ (An Agricultural Testament ) என்ற புத்தகம். எழுதியவர் ‘சர் ஆல்பிரட் ஹோவர்ட்’.
 
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்த சர் ஆல்பிரட் ஹோவர்ட் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடு களில் தனது விவசாய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். உலகெங்கும் உள்ள விவசாய வரலாற்றையும், பயிரிடும் முறைகளையும், மண் வளம் குறித்தும் ஆராய்ந்த இவர், தனது கள அனுபவத்தில் கண்ட உண்மைகளைத் தொகுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.
 
தொழில்புரட்சிக்குப் பிறகு புதிய வேளாண்கருவிகள் அறிமுகமாயின. ஆகவே உற்பத்தியை அதிகப்படுத்த நவீன அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக வணிகப் பயிர்களின் எழுச்சியும், உணவுப் பதப்படுத்துதல், ஒட்டு ரகங் களை உருவாக்குவது என விவசாய முறைகளில் நிறைய மாற்றங்கள் உருவா யின. இதனால், விளைச்சல் அதிகமானது டன் அதிக லாபம் கிடைக்கும் தொழிலாக வும் விவசாயம் முன்னிறுத்தப்பட்டது.
 
இன்னொரு பக்கம் ரசயான உரங் களைப் பயன்படுத்துவதன் காரணமாக மண் வளம் பாதிக்கப்படுகிறது, பூச்சிக் கொல்லி மருந்துகளால் பின்விளைவு கள் ஏற்படுகின்றன என புதுப் பிரச்சனை களும் எழுந்தன.
 
உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன் படுத்தாமல் இயற்கையான மரபு விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேட்கை உண்டானது. இதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் இயற்கை வேளாண்மை மீது தனிக் கவனம் உருவானது.
 
தனது விவசாய அனுபவத்தைக் கொண்டு ஆல்பிரட் ஹோவர்ட் மண்வளம் சார்ந்தும், இயற்கை உரங்கள் சார்ந்தும் எழுதிய குறிப்புகள் மிக மிக முக்கியமானவை.
 
அதிக அளவில் ரசாயன உரங் களைப் பயன்படுத்துவதன் காரணமாக மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை அதிகரிக்க, இயற்கை இடுபொருட்களை இடவேண்டும். உயி ரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக விளைச்சல் பெற முடியும். அதற்கு தொழு உரம், பசுந்தாள் உரம்… போன்றவற்றைப் பயன் படுத்த வேண்டும். இதனால் மண் ணில் உள்ள நுண்ணுயிர் களின் பெருக்கம் அதிகரித்து அந்த மண் உயிரோட்டம் உள்ள தாக மாறும் என செயல்முறை விளக்கம் அளிக்கிறார்.
 
நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக் குத் தேவை என்று பலரும் வாதிட்ட போது, பாரம்பரிய உழவுமுறை யான பயிர் சுழற்சி உழவே போது மானது என நிரூபித்துக் காட்டியவர் நம்மாழ்வார். இதைத்தான் ஆல்பிரட் ஹோவர்ட் அறிவியல்பூர்வமாக விளக்கு கிறார்.
 
இன்று சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் நடைபெறுவதற்கு அரசே முன்முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற அரசின் வெளிப்படையான ஆதரவே இயற்கை விவசாயம் பரவலாக நடைபெறுவதற்குப் பெருந் துணையாக அமையும்.
 
இயற்கை விவசாயிகள் தங்களுக்கு யார் துணை எனக் கேட்டதற்கு, ‘நீ தனியாக இல்லை; இயற்கை உனக்கு ஆதரவாக இருக்கிறது’ என்றார் நம்மாழ்வார். இதே குரலைத்தான் ஹோவர்ட்டும் எதிரொலிக்கிறார் இந்தப் புத்தகத்தில்.
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி ஆதவன்...! :)

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 26: நோய் அறிதல்!

 

sra_2346016f.jpg

 

நம் காலத்தின் முக்கிய வணிகப் பொருள் உடல்நலம் சார்ந்த பயம்தான். இதைப் பயன்படுத்திப் பெரும்வணிகச் சந்தை உருவாகி வளர்ந்துள்ளது. முந்தைய காலங்களில் மானுடச் சேவையாகவும் அறமாகவும் கருதப்பட்ட மருத்துவம், இன்று முழுமையானதொரு வணிகம். அதி லும் போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், மோசடியான சோதனைகள் என சாமானிய மனிதன் நோயை விடவும் மருத்துவமனைக்குப் போவதற்கே அதிகம் அஞ்சுகிறான்.

 
மருத்துவம் ஏன் இத்தனை மலின மாகிவிட்டிருக்கிறது? ஐந்து முக்கிய காரணங்களைக் கூறுகிறார்கள். முத லாவது, ஆரோக்கியம் மற்றும் மருத் துவம் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லாமல் போனது. இரண்டாவது, வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அதிரடியான மாற்றங்கள்.
 
மூன்றாவது, முறையான பொதுமருத் துவமனைகள், அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் போனது. நான் காவது, விலை கொடுத்து படிக்கும் மருத்துவப் படிப்பும் தனியார் மருத் துவமனைகளின் பெருக்கமும். ஐந் தாவது, புதிது புதிதாக பெருகிவரும் நோய்களும் அதற்குப் பெரிதும் காரணமாக உள்ள உணவுச் சீர்கேடு களும்.
 
ஒருமுறை பழைய புத்தகக் கடைக் காரரிடம், ‘எது போன்ற புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன’ எனக் கேட்டேன்.
 
‘அதிகம் மருத்துவம் சார்ந்த புத்த கங்களைத்தான் வாங்குகிறார்கள். குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் நாட்டுவைத்தியம் தொடர்பான புத்த கங்களை விரும்பி வாங்கிப் போகி றார்கள். அரிய மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் கொண்ட பழைய தமிழ் புத்தகங்கள் என்றால் மருத்துவர்களே தேடி வந்து வாங்கிப் போவதும் உண்டு’ என்றார்.
 
மருத்துவ நூல்களை வாசிப்பதற்கு என தனியே ஒரு வாசக வட்டம் இருக்கிறது. வயது வேறுபாடு இன்றி இந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறார்கள். ஹோமியோபதி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர், மலர் மருத்துவம், அலோபதி எனப் பல்வேறு மருத்துவமுறைகள் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன. இத்துடன் மாற்று மருத்துவம், உணவுப் பழக்கம், இயற்கை உணவு வகைகளைப் பற்றிய நூல்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன.
 
ஜெரோம் கே ஜேரோம் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது ’த்ரி மென் இன் போட்’ புத்தகத்தில் ஒரு நிகழ்வினை குறிப்பிடுகிறார். ஒருமுறை பிரிட்டிஷ் மியூசியத்துக்குச் சென்று மருத்துவம் தொடர்பான ஒரு புத்தகத்தைத் தற்செயலாக கையில் எடுத்துப் படித்தபோது அதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நோய்களும் தனக்கு இருப்பதைப் போல தான் உணர்ந்ததாகவும், இத்தனை நோய் களை வைத்துக்கொண்டு தான் எப்படி உயிரோடு இருக்கிறோம் என உடனே இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்ட தாகவும் வேடிக்கையாகக் கூறுகிறார்.
 
இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்ட ஒன்றே. குறிப்பாக, மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கும்போது அந்த நோய்கள் தனக்கும் இருப்பதாக பெரும்பான்மையினர் பயங்கொள்ளவே செய்கிறார்கள். உடனே அவசர அவசரமாக தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி வைத்து நாலைந்து நாட்கள் பயிற்சி செய்கிறார்கள். எங்கே நோய் வந்துவிடுமோ என மனக் கவலை கொள்கிறார்கள்.
 
சரிவிகித உணவும், முறையான உடற்பயிற்சியும், போதுமான உறக்க மும், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் படிப்பும், பேச்சும், இசை யும், கலைகளும் கொண்ட வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே இதற்கான ஒரே தீர்வு!
 
இந்திய மருத்துவ முறைகளும், ஆங்கில மருத்துவ முறையும் ஒன்றை ஒன்று எப்போதுமே எதிராகவே கருதுகின்றன. இந்த மருத்துவமுறை களுக்குள் ஏற்பட்ட மோதலையும் இரண்டு மருத்துவர்களின் அணுகுமுறை யினையும் விவரிக்கிறது ’ஆரோக்கிய நிகேதனம்’ என்ற வங்காள நாவல்.
 
மிகச் சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று ‘ஆரோக்கிய நிகேதனம்'. இதை எழுதியவர் தாராசங்கர் பந்யோ பாத்யாய‌. இந்த நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் த. நா. குமாரசாமி.
 
தலைமுறை தலைமுறையாக மருத் துவம் செய்துவரும் ஜீவன் மஷாயின் மருத்துவ நிலையமே ‘ஆரோக்கிய நிகேதனம்’. ஜீவன் மஷாய் ஓர் ஆயுர்வேத வைத்தியர். இவரது தனிச் சிறப்பு. நோயாளியின் நாடி பிடித்தவுடன் ஆயுளை சொல்லிவிடுவார். இதனால், நோயாளிகள் பலரும் அவரிடம் மருத்துவம் பார்க்க வருவதற்கே பயப் பட்டார்கள். ‘மருத்துவத்தால் மரணத் தைத் தடுத்து நிறுத்த முடியும், வெல்ல முடியாது’ என்பதே ஜீவன் மஷாயின் எண்ணம்.
 
நோயாளிகளிடம் அவர்கள் ஆயுளைச் சொல்லி பயமுறுத்தக் கூடாது. அது தவறான அணுகுமுறை என்கிறார் ஆங்கில மருத்துவரான டாக்டர் பிரத்யோத். புதிய மருத்துவமுறையாக ஆங்கில மருத்துவம் வங்கத்தில் அறிமுகமான நிலையில் அது குறித்து எழுந்த சந்தேகங்கள், பயம், அறியாமையைப் பற்றி இந்த நாவல் தெளிவாக விவரிக்கிறது.
 
ஒரு பக்கம் டாக்டர் பிரத்யோத். மறுபக்கம் ஜீவன் மஷாய். இந்த இரண்டு மருத்துவர்களுக்கு இடையில் உருவாகும் மோதல்களைப் போல தோன்றினாலும், கதை இரண்டு மருத்துவ முறைகளின் செயல்பாடுகளையும் அதனால் உருவாகும் விளைவுகளை யுமே விவரித்துக் கூறுகிறது. மர ணத்தை முன்வைத்து வாழ்க்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற் சிப்பதே இந்த நாவலின் தனித்துவம்!
 
டாக்டர் பிரத்யோத் ஆயுர்வேத வைத்தியத்தை ஏளனமாக நினைக்கிறார். காட்டுமிராண்டித்தனமான சிகிச்சை முறை என இதனைக் கடுமையாக விமர்சிக்கிறார். இது போலவே ஆங்கில மருத்துவம், ’நோயாளிகளிடம் பணம் வாங்குவதையே குறிக்கோளாக கொண் டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு அது உதவி செய்வது இல்லை’ எனக் குற்றம் சாட்டுகிறார் ஜீவன் மஷாய்.
 
இருவேறு மருத்துவ நோக்குகளுக்கு இடையேயான போராட்டத்தையும், அதன் வழியே ஊடாடும் வாழ்க்கை சம்பவங்களையும் ’ஆரோக்கிய நிகேதனம்’ முழுமையாக விவரிக்கிறது.
 
உண்மையில் ஜீவன் மஷாய் ஆங்கில மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, காதலில் விழுந்து தோல்வியடைந்து, படிப்பைத் தொடர முடியாமல் தந்தையைப் போலவே ஆயுர்வேத மருத்துவத்தைத் தொடர்ந்தவர். கடந்த காலம் தீர்க்கமுடியாத நோயைப் போல அவரைப் பற்றியிருக்கிறது.
 
ஒருமுறை தாந்து கோஷால் என்ற நோயாளி வயிற்றுப் புண் காரணமாக சிகிச்சை பெற ஜீவன் மஷாயிடம் வருகிறான். அவனது உணவுப் பழக்கம் மாறாத வரை நோய் தீரவே தீராது எனச் சொல்லி அவனுடைய சாவுக்குக் கெடு வைக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த தாந்து ஆங்கில மருத்துவரான பிரத்யோத்திடம் சென்று சிகிச்சைப் பெறுகிறான்.
 
தனது மருத்துவமனையிலேயே பிரத்யோத் அவனை தங்க வைத்து வைத்தியம் பார்க்கிறார். ஆனால், நாக்குக்கு அடிமையான தாந்து மருத்துவமனையில் தனக்குப் பிடித்த உணவைத் திருடி சாப்பிட்டு இறந்து போகிறான். இப்போது ஜீவன் மஷாய் சொல்லிய வார்த்தைகளின் உண்மை பிரத்யோத்துக்குப் புரிகிறது.
 
இது போலவே பிரத்யோத்தின் மனைவி நோயுற்றபோது, அவர் ஜீவன் மஷாயிடம் உதவி கேட்டுப் போகிறார். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக அவரால் நாடிபிடித்து நோய்குறிகளைத் துல்லியமாக சொல்லமுடிவதைக் கண்ட பிரத்யோத், ஆச்சரியப்பட்டுப்போகிறார். இப்படிப் பழமையும், புதுமையும் ஒன்றையொன்று அறிந்து கொள்ளும் அரிய வாசிப்பு அனுபவத்தைத் தருவதே இந்த நாவலின் சிறப்பு.
 
மருத்துவமுறைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் மருத்து வர்களின் அக்கறையும், அன்பும், பொறுப்புணர்வும், சமூக கடமையும் முக்கியமானது. அந்த வகையில் ஐம்பதுகளில் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றும் முக்கியமானதாக உள்ளது.
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 27: தங்கமே தங்கம்!

 

manjal_2360849f.jpg

 

 

‘மெக்கனாஸ் கோல்டு’ படத்தை இன்றைய தலைமுறையினர் எத்தனை பேர் பார்த்திருப் பார்கள் எனத் தெரியாது. தங்கம் தேடி கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கில் குதிரைகளில் செல்லும் அந்த சாகசக் கதை வெறும் திரைப்படம் மட்டுமில்லை; அது ஒரு வரலாற்று உண்மையின் புனைவடிவம்!
 
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத் தாளர் ‘ஜாக் லண்டன்’ தான் தங்கம் தேடி அலாஸ்காவில் அலைந்த துயரத்தை, தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
 
சார்லி சாப்ளின் தனது ’கோல்டு ரஷ்’ படத்தில் இதே தங்கம் தேடும் கூட்டம், பசியில் எப்படி ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்துச் சாப்பிடத் தூண்டும் அளவு வெறிகொண்டது என்பதை வேடிக்கையாக சித்தரித்துள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தங்கம் தேடி இப்படிக் கூட்டம் கூட்டமாக அலைந் தார்கள்.
 
காரல் மார்க்ஸ் தனது ’மூலதனம்’ நூலில் தங்கத்தைப் பணப் பண்டம் என்றே கூறுகிறார். 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தென்னாப்பிரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கபட்டது. அதன் மூலமே தங்கத்தின் நவீன காலகட்டம் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை ரூ. 1.63 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது சீனா அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
 
ஒரு நாட்டின் விதியை அதன் தங்க சேமிப்புதான் தீர்மானிக்கிறது. தேசத்தின் நாணயச் செலாவணியில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியா தனது ரிசர்வ் வங்கியில் தங்கத்தைக் கையிருப் பில் வைத்திருக்கிறது. இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்புக்கு ஏற்றவாறு பணம் வெளியிடப்படுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
 
தங்க விலையேற்றம் என்பது நகை விற்பனையை மட்டும் பாதிக்க கூடிய ஒன்றில்லை; அது நாட்டின் பொருளா தார நிலையை நிர்ணயம் செய்யக்கூடி யது. பணவீக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பண வீக்கம் என்ற சொல்லை டெல்மார் என்ற அமெரிக்கர் 1864-ல்தான் முதன்முதலாக உபயோகித் தார். அதன் பிறகே இந்தச் சொல் உலகெங்கும் பரவியது.
 
தங்கம் எப்படி வெட்டி எடுக்கப்படுகிறது என்பது குறித்தும், தங்க நகைகள் செய்கிற முறை குறித்தும், தங்கத்தின் தரக்கட்டுப்பாடுகள் குறித்தும் சில நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. ஆனால், தங்கத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஏதேனும் நூல் இருக்கிறதா எனத் தேடும்போது, கையில் கிடைத்த புத்தகமே ரஷ்ய மொழியில் அ.வி. அனிக்கின் எழுதிய ‘மஞ்சள் பிசாசு’ கிடைத்தது. இதனை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளவர் பேராசிரியர் தர்மராஜன். ‘முன்னேற்றப் பதிப்பகம்’ இதனை வெளியிட்டுள்ளது.
 
தங்கத்தின் வரலாற்றையும், அது பணப் பொருளாக எப்படி வளர்ச்சி அடைந் தது என்ற விரிவான விளக்கத்தையும், சோவியத் ரஷ்ய அரசு தங்கத்தை எப்ப டிக் கையாள்கிறது என்பது பற்றியும் அனிக்கின் எழுதியிருக்கிறார்.
 
ஐரோப்பிய மொழிகளில் தங்கத்தைக் குறிக்கும் சொல் ‘மஞ்சள்’ என்ற சொல் லில் இருந்தே தோன்றியிருக்கிறது. தங்கத் தைப் பற்றி மனிதனுக்கு சுமார் 6 ஆயிரம் வருஷங்களாகத் தெரியும். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. தங்க ஆதார அளவு முதலாவதாக கிரேட் பிரிட்ட னில் பின்பற்றபட்டது. அதுவே பின்பு மற்ற நாடுகளுக்கும் பரவியது.
 
வேளாண் சமூகம் உருவானபோது தங்கம் மதிப்பு பெறத் தொடங்கியது. எகிப்து, மெசபடோமியா, ஆசியா மைனர், கிரீஸ் ஆகிய நாகரீகங்களில் செல்வம் மற்றும் பலத்தின் சின்னமாக தங்கம் உருவானது.
 
மேய்ச்சல் சமூகத்தில் செல்வத்தை மதிப்பிட, எண்ணும் முறையே பிரதான மாக இருந்தது, எத்தனை கால்நடைகள் இருக்கின்றன, எத்தனை பண்டங்கள் விற் பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன, எத்தனை அடிமைகள் இருந்தார்கள் என எண்ணுதலே சந்தையின் முதன்மைச் செயல்பாடாக இருந்தது. அதை வைத்தே பண மதிப்பீடு உருவாக்கபட்டது.
 
ஆனால், தங்கத்தின் மதிப்பு உயரத் தொடங்கிய பிறகு எடையை அடிப்படை யாகக் கொண்டு பண மதிப்பீடு உருவா னது. தங்கத் தூசியை நிறுப்பதற்குக் கூட துல்லியமான எடைக் கற்களும், தராசுகளும் உருவாக ஆரம்பித்தன. ‘ஜாக் லண்டன்’ தனது சிறுகதையில் தங்க வேட்டைக்காரர்கள் எப்போதும் தங்கள் பையில் ஆளுக்கு ஒரு தராசு வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருக் கிறார். இது தங்கம் சந்தையில் பெற்றிருந்த மதிப்பின் அடையாளமே.
 
தங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதை நாணயமாக அச்சிட்டு வெளி யிட்டதே. பரிவர்த்தனைக் காக நாணயங்களை அச் சிடும் முறை முதன்முதலாக லிடியர்களால்தான் அறி முகப்படுத்தபட்டது என் கிறார் ஹெரடோடஸ். அதா வது கி.மு. 7-ம் நூற்றாண்டில் லிடியர்கள் நாணயங்களை அச்சிடத் தொடங்கியிருக்கிறார்கள். அது பின்னர் கிரேக்க நாகரிகம் முழுமைக்கும் பரவியது.
 
அங்கிருந்து பாரசீகத்துக்குச் சென்றிருக்கக் கூடும் என்கிறார் ஹெர டோடஸ். லிடியாவின் அரசர் கிரேசஸ் தன்னிடம் ஏராளமாக தங்கம் வைத்திருந்த காரணத்தால், அவர் செல்வம் படைத்த அரசராக கருதப்பட்டார் என்பதே இதற் கான சான்று. இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலே நாணயம் அச்சிடுவது தொடங்கியிருக்கிறது.
 
பண பரிவர்த்தனையில் தங்கத்தோடு வெள்ளி போட்டியிடுவதை வரலாறு முழுவதும் காண முடிகிறது. கிரேக்க நாகரீகத்தில் வெள்ளி முக்கிய இடம் பெற்றிருந்தது. ஆனாலும் அதனால் தங்கத்தை வெல்ல முடியவில்லை. 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வெள்ளியின் மதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தங்கம் வேகமாக வளர்ந்து உச்சத்தை தொட்டுவிட்டது. ஆகவே இன்றும் வெள்ளியால் தங்கத்தின் இடத்தைப் பிடிக்கவே முடியவில்லை.
 
காரட் என்பது தங்கத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மி.கி. ஒரு காரட் ஆகும். கரோப் என்ற மரத்தின் விதை மாறாத எடை உடையது. இதிலிருந்து வந்த அரபிச் சொல்லே காரட் என்பதற்கான மூலமாகும்.
 
சுரங்கத்தில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது மிக கடினமாக வேலை. சுரங்க தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டார்கள். தங்க சுரங்கத்துக்குள் போவது என்பது நரகத்துக்குள் போய் வருவது போன் றதே என்கிறார் தங்க ஆய்வாளர் டிமோத்தி கிரீன்.
 
இன்று சுரங்கங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும் ஒரு சுரங்கம் அமைக்க ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. முதலீடும் பல்லாயிரம் கோடி தேவைப்படுகிறது.
 
தங்க சந்தையின் இன்றைய முக்கியப் பிரச்சினை, பதுக்குதலும், தங்கக் கடத்தலுமாகும். உலகெங்கும் தங்கக் கடத்தல் மிகப் பெரிய குற்றவலைப் பின்னலாக வளர்ந்து பரவியிருக்கிறது. எந்த நோய்க் கிருமியை விடவும் தங்கமே அதிக எண்ணிக்கையில் மனிதர்களைக் கொன்றிருக்கிறது.
 
உலகிலே முதன்முறையாக பழங் கால எகிப்திலும், சுமேரியாவிலும் பிரபுக்களுக்காக தங்கப் பற்கள் தயாரிக்கப்பட்டன என்கிறார்கள். நாடு கண்டுபிடிக்கப் பயணித்த கொலம்பஸ், தங்கத்துக்காக பூர்வகுடி மக்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்த வரலாற்றை உலகம் ஒருபோதும் மறக்காது
 
1943-ல் எழுத்தாளர் பிராங்க்ளின் ஹாப்ஸ், ’உலகத்தின் உண்மையான அரசன் தங்கமே’ என தனது புத்தகத்துக்கு தலைப்பு வைத்தார். இந்தத் தலைப்பு வாசகம் இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது.
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 28: நரித்தனம்

 

sra_2375642f.jpg

 

உனக்கு என்ன கதை பிடிக்கும்? யானைக் கதையா? சிங்கக் கதையா எனக் குழந்தைகளிடம் கேட்டால், பெரும்பாலான குழந்தைகள் சிங்கக் கதை என்றே கூறுகிறார்கள்.
 
சிங்கத்தை நேரில் பார்த்திராத குழந்தைகளுக்குக் கூட சிங்கக் கதை கேட்கவே பிடித்திருக்கிறது, காரணம் கதையில் வரும் சிங்கம் பயமுறுத்தாது. வேடிக்கையாக நடந்து கொள்ளும்.
 
காட்டில் வாழும் சிங்கம் வேறு; கதையில் வாழும் சிங்கம் வேறு. இதை குழந்தைகள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். வனவிலங்குகள் குறித்து நமக்குள் படிந்துள்ள அச்சத்தை கதைகள்தான் விலக்குகின்றன.
 
கதையில் சிங்கத்துடன் ஒரு சுண்டெலி நண்பனாக முடிகிறது. வேட்டைக்கார னின் வலையில் மாட்டிக்கொண்ட சிங்கத்தை சுண்டெலி காப்பாற்றுகிறது. காட்டின் அரசனாகவே சிங்கம் இருந் தாலும் நட்பு முக்கியமானது என்பதை கதைகளில் இருந்து குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கின்றன.
 
இந்த பூமியில் முதல் கதையை சொன் னவர் யார்? கேட்டவர் யார்? பெயர் அறியாத ஆதிக் கதை சொல்லிகளே இந்த உலகின் முதல் படைப்பாளிகள். தன்னைப் போல மிருகங்களும் தாவரங்களும் பேசக் கூடியவை என்று கற்பனை செய்தது மனிதனின் மகத்தான புனைவாற்றல்.
 
மனிதர்கள் தேசம் விட்டுத் தேசம் பயணம் செய்தபோது கதைகளும் கூடவே சென்றிருக்கின்றன. ஈசாப் கதை யில் சொல்லப்பட்ட முயல், ஆமைப் போட் டிக் கதை கிரேக்கத்தில் இருந்து பய ணித்து நம் ஊரை வந்து அடைந்துள்ளது. இது போலவே குரங்கின் இதயத்தைத் தின்ன ஆசைப்பட்ட முதலையின் கதை இந்தியாவில் இருந்து கிரேக்கத்துக்குப் போயிருக்கிறது.
 
கதையில் இடம்பெற்றுவிட்ட ஜீவராசி கள் மனிதர்களின் நினைவில் நீண்ட காலம் உயிர்த்திருக்கின்றன. கதையில் லாத விலங்குகள் உலகின் நினைவில் இருந்து வேகமாக மறைந்துவிடுகின்றன. மறதியின் பிடியில் இருந்து நினைவு களைக் காப்பாற்றி சேகரம் செய்வதற்கு கதைகளே எளிய வழி.
 
உலகின் எல்லா கதை மரபிலும் நரி முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது. நரி எப்படி இன்னொரு விலங்கை தந்திர மாக ஏமாற்றுகிறது? திருடுகிறது என வித விதமாக கதைகள் புனையப்பட்டுள்ளன. மோசமான நரியைப் பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். ஆனால், நல்ல நரியைப் பற்றி ஒரு கதையைக் கூட கேட்டதே இல்லை.
 
நிஜஉலகில் நரிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, அழிந்துவரும் இனமாகவே உள்ளன. கதைகளில் மட்டும்தான் நரி இன்றும் இருக்கிறது. நேரில் நரியைப் பார்த்து 20 ஆண்டு களுக்கு மேலே இருக்கும். சென்னையில் ஒரு நரியாவது இருக்குமா என்ன?
 
ஷிஞ்ஜி தாஜிமா என்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘ஆச்சரியம் என் னும் கிரகம்’ என்கிற புத்தகத்தில் முதன் முறையாக நல்ல நரியைப் பற்றிய கதை ஒன்றை வாசித்தேன். இந்தப் புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐந்து கதைகளின் தொகுப்பு. சாகித்ய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்திருப்பவர் வெங்கட் சாமிநாதன்.
 
ஷிஞ்ஜி தாஜிமா ஹிரோஷிமாவில் பிறந்தவர். சிறந்த குழந்தை எழுத்தாள ரான இவர், அணுகுண்டுவீச்சின் பாதிப்பு பற்றி நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கோன்இச்சி என்ற நரியைப் பற்றிய கதை மறக்கவே முடியாதது!
 
கோன் இச்சி என்பது ஒரு நரியின் பெயர். ஜப்பானின் பனி மலை யில் வாழும் கோன் இச்சி, ஒருநாள் பனிப்பிரதேசத்தில் கோட்- சூட் அணிந்த மனிதர்கள் சந்தோஷமாக குழிப் பந்து விளையாடுவதை வேடிக்கை பார்க் கிறது. அவர்கள் எல்லோரும் விற்பனை அதிகாரிகள். விடுமுறைக்காக வந்த வர்கள்.
 
ஒரு நரியாக கஷ்டப்பட்டு இரைதேடி அவதிப்படுவதை விடவும், மனிதராக உருமாறி இதுபோல சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கலாமே என கோன் இச்சி ஆசை கொள்கிறது.
 
மந்திரம் ஒன்றை உச்சரித்து மனிதனாக மாற முயற்சிக்கிறது. கோன் இச்சியின் அம்மா அதைத் தடுத்து, ‘‘மகனே நீ மனிதனாக உருமாற வேண்டாம். மனிதர் கள் நம்மைவிட மோசமானவர்கள். தந்திர சாலிகள்’’ என எச்சரிக்கிறது. கோன் இச்சி அதைக் கேட்கவில்லை. மந்திரத் தைப் பிரயோகம் செய்து மனிதனாக உருமாறி, அருகில் உள்ள நகரத்துக்கு வேலை தேடிப் போகிறது. தோல் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறது. உருவத்தில் மனிதனாகவும் அதன் உள்ளே நரியின் எண்ணங்களும் இயல்புகளுமே இருக்கின்றன.
 
நகர வாழ்க்கைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கோன் இச்சி, தனது சம்பாத்தியத்தில் தாய்க்குப் பிடித்தமான கோழிகளை வாங்கிக்கொண்டு போய் கொடுக்கிறது.
 
‘‘நீ இன்னும் முழுமையான மனித னாக மாறவில்லை. ஒருவேளை நீ நரி என்பதை கண்டுபிடித்துவிட்டால் மோச மான விளைவுகள் ஏற்படும். ஆகவே, என்னைத் தேடி நீ வர வேண்டாம்…’’ என அம்மா எச்சரிக்கிறாள்.
 
கோன் இச்சியும் நகரவாசிகளைப் போல தனது கடந்தகாலத்தை முற்றி லும் மறந்து, புதிய வாழ்க்கையை மேற் கொள்கிறது. அலுவலகத்தில் அதன் உழைப்பைப் பாராட்டி கொண்டாடுகிறார் கள். எப்போதும் வேலையே கதி எனக் கிடக்கிறது.
 
ஒருநாள் தோல் சேமிப்பு கிடங்குக்குள் கோன் இச்சி செல்கிறது. அங்கே வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல்கள் வரிசை வரிசையாகத் தொங்கு வதைக் கண்டு மனம் பதறுகிறது. அதில் நிறைய நரித் தோல்களும் இருப்பதைக் கண்டு கண்ணீர்விடுகிறது. பிறகு, ‘நான் இப்போது மனிதன் இதுபோன்று விஷ யங்களுக்காக கவலைப்படக் கூடாது’ என மனதை தேற்றிக்கொள்கிறது.
 
பனிக் காலத் தொடக்கத்தில் தோல் சேகரிப்பதற்காக அதிகாரிகள் வேட்டைக் குக் கிளம்பினார்கள். கோன் இச்சியும் போனது. அங்கே மிருகங்கள் எல்லாம் கோன் இச்சி மனிதன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிடுகின்றன.
 
தான் மனிதன் என நிரூபித்துக் கொள்ள, கோன் இச்சி ஒரு வெள்ளை நரியைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்து கிறது. இவ்வளவு தைரியமாக ஒரு நரியை யாரும் சுட்டதேயில்லை என குழுவினர் பாராட்டுகிறார்கள். கோன் இச்சி செத்துக்கிடந்த நரியின் உடலை புரட்டிப் பார்க்கிறது. அது கோன் இச்சியின் தாய்!
 
தன் அம்மாவையே கொன்ற துக்கத்தில் அழுது புலம்பியபடி ஒடிய கோன் இச்சி, ‘எனக்கு என் அம்மா வேண்டும். இந்த வணிக அதிகாரி வேலை வேண்டாம்…’ எனக் கதறுகிறது.
 
இனிமேல் தான் நரியாக உருமாற முடியாது. மனிதனாக வாழ்வதும் அர்த்த மற்றது என முடிவு செய்த கோன் இச்சி, மலையை நோக்கி ‘கோன்… கோன்…’ என உரக்க சத்தமிடுகிறது. அந்த சத்தம் பலமாக எதிரொலித்து அடங்குகிறது. அதன் பிறகு கோன் இச்சியை யாரும் காணவேயில்லை. எங்கு போனது எனவும் தெரியவும் இல்லை.
 
ஆனால், அந்த மலைப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெகுதூரத்தில் ‘‘கோன், கோன், கோன்…’’ என்ற கதறல் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது என அந்தக் கதை முடிகிறது.
 
இந்நாள் வரை சொல்லப்பட்ட அத் தனை நரிகளின் தந்திரமும், கோன் இச்சி யின் கதை மூலம் சமன் செய்யப்படுகிறது. இந்தக் கதையை வாசித்தப் பிறகு நரி நேசத்துக்குரிய விலங்காக மாறிவிட்டது. இதுதான் கதையின் வலிமை!
 
இதுபோன்ற அனுபவத்துக்காகத் தான், குழந்தைகள் கதைகள் சொல்ல வும், கேட்கவும் வேண்டியது அவசியமாகிறது!
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 29: பூச்சி எனும் ஆயுதம்

 

sra_2382936f.jpg

 

பண்டைக் காலங்களில் யுத்த களத்தில் எதிரிகளை விரட்ட தேனீக்களைப் பயன்படுத்துவார்கள், நீர்நிலைகளை நஞ்சூட்டிவிடுவார்கள், குற்றவாளிகளைத் தண்டிக்க கொடிய விஷம் உள்ள வண்டுகளையும் தேள்களையும் கடிக்கவிடுவார்கள், காதில் எறும்புகளை விடுவார்கள் என்பார்கள்.
 
கல்லையும் இரும்பையும் மட்டுமில்லை; உயிரினங்களையும் ஆயுதமாக்கியவன் மனிதன். இன்று அதன் தொடர்ச்சியைப் போல உலக நாடுகளை அச்சுறுத்தும் மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது ‘உயிரியல் யுத்தம்’!
 
அதாவது நுண்கிருமிகள், பூச்சிகள், வண்டுகள் போன்றவற்றைக் கொண்டு மனிதர்களை, உயிரினங்களை, தாவரங்களை அழிக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் தாக்குதலை ‘உயிரியல் யுத்தம்’ என்கிறார்கள்.
 
உயிரியல் யுத்தம் மூன்று தளங்களில் செயல்படுகிறது. ஒன்று, மோசமான நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை உருவாக்குவதும், அவற்றைப் பரவ செய்வதும். இரண் டாவது, பூச்சி மற்றும் வண்டுகளைக் கொண்டு விவசாயத்தை அழிப்பது. மூன்றாவது, காற்றிலும் நீரிலும் நுண்ணுயிர்களைக் கலக்கச் செய்து நேரடியாக உயிர் ஆபத்தை உருவாக்குவது.
 
இந்த அபாயங்கள் குறித்தும், பூச்சி இனங்கள் மற்றும் கிருமிகள் எவ்வாறு ஆயுதமாக பயன்படுத்தபட்டன என்பதன் வரலாறு குறித்தும் விரிவாக எழுதப் பட்ட நூல் ‘சிக்ஸ் லெக்டு சோல் ஜர்ஸ்’. (Six Legged Soldiers). இதை ‘ஜெஃப்ரி ஏ லாக்வுட்’ எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
 
பூச்சிதானே என ஏளனமாக நாம் நினைக்கும் உயிரினம்தான் இன்று உலகின் முக்கிய அச்சுறுத்தலாக, ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு பூச்சி இனங்கள் மற்றும் நுண்கிருமிகளை முன்வைத்து விளக்குகிறார் லாக்வுட்.
 
உலகிலே அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினம் பூச்சிகளே! நன்மை செய்யும் பூச்சிகள், கெடுதல் செய்யும் பூச்சிகள் என இரண்டுவிதமான பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. கெடுதல் செய்யும் பூச்சி இனங்களை, கிருமிகளை தங்களின் சுயலாபங்களுக்காக எப்படி வணிக நிறுவனங்களும், ராணுவமும், தீவிரவாத இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைப் பற்றி வாசிக்கும்போது அதிர்ச்சியாகவே உள்ளது.
 
இன்று அணுகுண்டு வீசி அழிப்பதை விடவும் அதிகமான நாசத்தை நுண்கிருமிகளால் உருவாக்கிவிட முடியும். அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட அநேக நாடுகள் உயிரியல் யுத்தத்துக்கான பரிசோதனைகள், மற்றும் தயாரிப்புக்காக ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக் கின்றன.
 
1972-ல் நடைபெற்ற உயிரியல் மற்றும் விஷத்தன்மைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இத்தகைய ஆயுதங்களைத் தயாரிப்பதோ, பயன் படுத்துவதோ, தடை செய்யப்பட்டிருக் கிறது. ஆயினும் இந்தக் கிருமி யுத்தம் திரைமறைவில் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
 
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நாவலில் வெட்டுக் கிளிகள் கூட்டமாக படை யெடுத்து வந்து, விளைச்சலை அழிப் பதாக ஒரு காட்சி விவரிக்கப்படும். பூச்சிகளின் தாக்குதலில் மக்கள் பயந்துபோகிறார்கள். பேரழிவு ஏற்படு கிறது.
 
இதுபோன்ற ஒரு காட்சியை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ‘பியர்ள் எஸ் பக்’ தனது ‘நல்ல நிலம்’ நாவலிலும் விவரிக்கிறார். வேறுவேறு தேசங்களில் நடைபெற்ற கதைகள் என்றபோதும் இயற்கை சீற்றம் எவ்வாறு விவசாயத்தைப் பாதித்தது என்பதை இருவரும் சிறப்பாக விவரிக்கிறார்கள்.
 
இது போன்றவை இயற்கையான நிகழ்வுகள். ஆனால், இன்று நடப்பது இயற்கை சீற்றமில்லை. திட்டமிட்டு பரிசோதனைக் கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கிருமிகள், பூச்சிகள், நுண்ணுயிர்களை இன்னொரு தேசத் தில் பரவவிட்டு, பேரிழப்பை உருவாக் கும் பயங்கரவாதமாகும்.
 
இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளை அழிப்பதற்காக ஜப்பானிய ராணுவம் லட்சக்கணக்கான விஷப் பூச்சிகளைப் பயன்படுத்தியது. இது போலவே, கியூபாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக அங்குள்ள கரும்புத் தோட்டங்களை அழிக்க 1962-ம் ஆண்டு அமெரிக்கா புதிய வகை பூச்சிகளை கியூபாவில் பரவவிட்டது. இதன் காரணமாக கரும்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
வியட்நாம் யுத்தத்தின்போது அமெ ரிக்கா ‘கில்லர் இன்செக்ட்ஸ்’ (killer insects) எனப்படும் விஷத்தன்மை கொண்ட வண்டுகளை வியட்நாமில் பரவசெய்து, விவசாயத்தை அழித் தொழித்தது என்கிறார்கள்.
 
யுத்த காலத்தில் பிரிட்டனின் உருளைக்கிழங்கு உற்பத்தியை அழிக்க, ஜெர்மனி நோய் உருவாக்கும் வண்டுகளையும் பூச்சிகளையும் விமா னத்தில் கொண்டுபோய் கொட்டி பிரிட்டனை அழிக்க முயன்றது என ஒரு குற்றசாட்டும் உள்ளது. இப்படியாக பல்வேறு சான்றுகள் நமக்குள்ளன.
 
இன்று தற்காப்புக்காக உயிராயுதங் களைத் தயாரித்துக் கொள்வதாகக் கூறி, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பெரும் முதலீட்டில் உயிராயுதங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் அமெரிக்கா உருவாக்கிய ‘ஆந்த்ராக்ஸ்’.
 
1980-ல் இருந்து அமெரிக்க ராணுவம் தன்வசம் கையிருப்பில் வைத்திருக்கும் உயிராபத்தை விளைவிக் கும் கிருமிகளின் சேமிப்பு, அணுகுண்டை விடவும் பேராபத்து தரக்கூடியவை. ஒருவேளை இந்தக் கிருமி கள் எல்லாம் பிரயோகம் செய்யப்பட்டால் ஒட்டு மொத்த உலகை சில நாட்களில் அழித்துவிட முடியும் என்கிறார்கள்.
 
திரைப்படங்களிலும் துப்பறியும் நாவல்களிலும் மட் டுமே பயங்கரவாதிகள் கொடிய வைரஸைப் பரவவிட்டு ஒரு தேசத்தை அழிக்கப்போகிறார்கள் என்பதை கண்டிருக்கிறோம். ஆனால், இவை பயங்கரவாதிகள் செய்கிற வேலை மட்டுமில்லை; ஒரு நாடு இன்னொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கவும், இயற்கை வளங்களை நாசம் செய்யவும், புதிய மருந்துகளை விற்பனை செய்யவும் உயிரியல் யுத்தத்தினை மேற்கொள்கிறது.
 
இவை ராணுவ செயல்பாட்டின் பகுதியாகவே அறியப்படுகிறது என் கிறார் லாக்வுட்.
 
சமீபத்தில் வெளியான ‘இண்டர்வியூ’ எனப்படும் ஹாலிவுட் திரைப்படத்தில் வடகொரிய அதிபரைக் கொல்வதற்கு அவரோடு கைகுலுக்கினால்போதும், கையில் மறைத்து வைக்கப்பட்ட நுண் கிருமி உள்ள ஊசி அவரது உடலில் நுழைந்து உயிரைப் பறித்துவிடும் என அமெரிக்கா திட்டமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சி உயிராயுதப் போர் முறையின் சாட்சிய மாகும்.
 
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூச்சிகளைக் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகிற யுத்தமுறை எகிப்தில் நடைமுறையில் இருந்துள்ளது. இரும்புக் குழாய்களில் வண்டுகளையும் தேனீக்களையும் அடைத்து வைத்து, அவற்றை உஷ்ணமேற்றி பீரங்கியால் சுடுவது போல வீசி எறிந்து, அழிவை உண்டாக்கும் முறை நைஜீரியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மாயன்’ இனத்தவரும் விஷ எறும்புகளையும் தேனீக்களையும் யுத்தக் களத்தில் பயன்படுத்தி எதிரிகளை அழித்து உள்ளார்கள் என்கிறது வரலாறு.
 
சமீபத்தில் நடைபெற்ற ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க விமானப் படை, பாலைவனத்தில் காணப்படும் விஷத் தேள்களை சேகரித்து, பாக்தாத்தில் கொண்டு போய் கொட்டி உயிர் சேதத்தினை உருவாக்கியது. நீர்நிலைகளில் நுண்கிருமிகளைக் கலந்து உயிர் ஆபத்தை உருவாக்கியது.
 
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தின் ‘யூனிட் 731’ பிரிவு, பிடிபட்ட சீனக் கைதிகளின் உடலில் கிருமிகளைப் பிரயோகம் செய்து அவர்களைப் பரிசோதனை எலிகளைப் போல பயன்படுத்தியது. இதன் மூலம் கிருமிகளை ‘யூஜி பாம்’ எனப்படும் குண்டுகள் மூலம் சீனாவில் பரவ செய்து, இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்களை ஜப்பான் கொன்று குவித்ததை சாட்சியத்துடன் லாக்வுட் விவரிக்கிறார்.
 
நாளை உங்கள் வீட்டில் பறக்கும் ஒரு ஈ, சாதாரணமான ஓர் உயிரினமாக இருக்காது. அது ஓர் அழிவு ஆயுதமாக இருக்கக் கூடும்! ஆகவே, உயிராயுதங்கள் குறித்த விழிப்புணர்வு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ‘உயிரியல் யுத்தம் ஒருபோதும் கூடவே கூடாது’ என நாம் அனைவரும் உரத்த குரல் கொடுக்கவும் வேண்டும்.
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 30: உறவின் வெளிச்சம்!

 

book_2390334f.jpg

சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்குப் போயிருந்தேன். மலிவு விலையில் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகக் கடையில் ஒரு தாத்தாவும் பாட்டியும் முண்டியடித்துக் கொண்டு, பை நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
 
இவ்வளவு புத்தகங்களை இவர்கள் எப்போது படிக்கப் போகிறார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. அந்தத் தாத்தாவிடம் கேட்டபோது சிரித்தபடியே சொன்னார்:
 
‘‘ஊரில் இருந்து பேரன், பேத்திகள் வரப் போகிறார்கள். கோடை முழுவதும் வாசிக்க புத்தகம் வேண்டும் இல்லையா? அதற்காகதான் வாங்குகிறோம்’’ என்றார் தாத்தா.
 
‘‘எங்கிருந்து வருகிறார்கள்..?’’ எனக் கேட்டேன்.
 
‘‘மகன் ராஞ்சியில். மகள் டெல்லியில் இருக்கிறாள். ஒவ்வோர் ஆண்டும் கோடைவிடுமுறை முழுவதும் பேரன், பேத்திகள் எங்களோடு இருப்பார்கள். இந்த ஒரு மாத காலம் எங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது. நாள் போவதே தெரியாது. பேரன், பேத்திகளுக்காக நான் புத்தகம் படித்துக் காட்டுவேன். கதைகள் சொல்வேன். படிப்பதில் அவர்களுக்குள் போட்டி வரும். என் பேத்திதான் படிப்பில் கில்லாடி. அவள் ஒரு மாதத்துக்குள்: 45 புத்தகங்களைப் படித்துவிடுவாள்’’ என்றார் பாட்டி.
 
‘‘விடுமுறையிலும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களா?’’ எனக் கேட்டேன்.
 
‘‘அதற்காகத்தான் கதை, கவிதை, வரலாறு, சுயசரிதை, பயணக் கட்டுரை என விதவிதமாக வாங்கியிருக்கிறேன். விளையாட்டு, பேச்சு, சினிமா போல புத்தகங்களும் கோடையில் தவிர்க்க முடியாதவை. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் ஊருக்குப் போனதும், அவர்கள் படித்த புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வோம்.
 
பிறகு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் படித்துக் கொண்டிருப்போம். இப்போது வீட்டில் பெரிய நூலகமே சேர்ந்துவிட்டது. பேரன், பேத்திகள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடன் நூலகமும் வளர்ந்து நிற்கிறது. இந்த ஒரு மாத காலத்துக்காக ஒரு வருஷம் காத்துக்கிடப்பது சந்தோஷமாகத்தான் இருக்கிறது’’ என்றபோது தாத்தாவின் முகம் பளபளத்தது.
 
கோடை விடுமுறை என்பது உறவு களை இணைக்கும் பாலம் என்பதை பலரும் மறந்து போய்விட்ட இன்றைய சூழலில் பேரன், பேத்திக்காக புத்தகங்களைத் தேடி வாங்கும் இந்தத் தாத்தாவும் பாட்டியும் அபூர்வமான மனிதர்களாகவே தோன்றினார்கள்!
 
எனக்கு இந்தப் பாட்டியைப் பார்த்தபோது ‘அனிதா தேசாய்’ எழுதிய ‘மலைமீது நெருப்பு’ (Fire on the Mountain) நாவல்தான் நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு பாட்டியின் கதைதான். நந்தா கவுல்’ என்ற தனிமையில் வாழும் வயதான ஒரு பெண்தான் நாவலின் மையப் பாத்திரம். ‘தனது பேத்தியின் வருகையை பாட்டி எப்படி எதிர்கொள்கிறார்’ என்பதையே நாவல் விவரிக்கிறது.
 
‘அனிதா தேசாய்’ ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது ‘மலைமேல் நெருப்பு’ நாவல் 1998-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ளது. இந்த நாவலை அசோகமித்திரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்ய அகாடமி இந்த நூலை வெளியிட்டுள்ளது.
 
மூன்று முறை புக்கர் பரிசுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்ற அனிதா தேசாய், அந்த விருதைப் பெறவில்லை. ஆனால், அவரது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான ‘தி இன்ஹெரிடென்ஸ் ஆஃப் லாஸ்’ (The Inheritance of Loss) நூலுக்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார்.
 
டேராடூன் மலைப் பகுதியில் தனிமை யில் வாழ்ந்து வருகிறார் ‘நந்தா கவுல்’. இவரது கணவர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். தனது கணவரின் இறப்புக்குப் பிறகு தனிமையை நாடி மலைப்பிரதேசம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார். சமைப்பது மற்றும் வீட்டு வேலைக்கு ராம்லால் என்ற ஒரு வேலைக்காரர் உடனிருக்கிறார்.
 
சூரிய வெளிச்சத்தில் ஒளிரும் மலை யின் அழகை ரசித்தபடியும், பறவைகளின் சங்கீதத்தை கேட்டபடியும், இதமான காற்றில் மனதை பறிகொடுத்தபடி தன் கடந்த காலத்தின் சோகத்தை மறந்து, தனிமையில் வாழ்ந்து வருகிறார் நந்தா கவுல். தபால்காரர் ஒருவர்தான் வெளி உலகோடு அவருக்குள்ள ஒரே உறவு.
 
ஒருநாள் நந்தாவின் பேத்தி ராக்கா விடுமுறைக்காக அவரது வீட்டுக்கு வரப் போவதாக கடிதம் வருகிறது. முதியவர்கள் தனிமையில் எளிய வாழ்க்கை வாழ்பவர்கள். விருந்தினர்களின் வருகை அந்த வாழ்க்கைக்கு இடையூ றாகவே இருக்கும். அத்துடன் பேத்திக்காக விதவிதமாக சமைத்து விருந்தளிக்கவும், உபசரிக்கவும் வேண்டும் என சலித்துக் கொள்கிறார் நந்தா கவுல். ஆனால், வரப் போகிறவள் சொந்தப் பேத்தி. சில நாட்கள் மட்டுமே தங்கப் போகிறாள் என்பதால் அவளை ஏற்றுக்கொள்கிறார்.
 
ஐஏஎஸ் அதிகாரியின் மகளான ராக்கா, தனது பெற்றோர்கள் ஓயாமல் சண்டை யிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்ப தால், எங்காவது நிம்மதியான இடத்தில் போய் சில நாட்கள் இருக்கலாம் எனப் பாட்டியைத் தேடி வருகிறாள்.
 
எங்கே ராக்கா வந்தவுடன் தனது அன்றாட வாழ்க்கை நிலைகுலைந்து போய்விடுமோ என பாட்டி பயப்படுகிறார். ஆனால், ராக்கா அவள் நினைத்ததைவிட அமைதியான பெண்ணாகவே இருக் கிறாள். தன்னைப் போலவே அவளும் தனிமை விரும்பியாக இருப்பதைக் கண்டு பாட்டி ஆச்சர்யம் அடைகிறாள்.
 
பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல், ஒன்றாக சேர்ந்து நடப்பது, மலையை வேடிக்கை பார்ப்பது , வீட்டுப் பணிகளைச் சேர்ந்து செய்வது என அற்புதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
 
ராக்காவின் மூலம் தனது இளமைக் காலத்தை நினைவுகொள்கிறார் நந்தா. இந்தச் சிறிய வயதிலேயே ராக்கா எவ் வளவு பண்போடும், சுயகட்டுப்பாடோடும் வளர்ந்திருக்கிறாள் என வியக்கிறார்.
 
ஒருநாள் நந்தாவின் தோழி இலாதாஸ் அவரைப் பார்க்க வீடு தேடி வருகிறார். சமூக சேவகியான இலாவோடு பேசிக் கொண்டிருக்கும்போது, தனது கடந்த கால நினைவுகளில் சஞ்சரிக்கிறார் நந்தா. அப்போது, அவரது கணவர் தன் மேல் அக்கறையின்றி நடந்து கொண்டது, வேறொரு பெண்ணுடன் தொடர்புகொண் டிருந்தது போன்ற விவரங்கள் வெளிப் படுகின்றன. அர்ப்பணிப்பு மிக்க மனைவியாக வாழ்ந்த போதும், புறக்கணிப்பும் வேதனையும் மட்டுமே தனக்கு மிஞ்சியதை உணர்கிறார். மீதமிருக்கும் வாழ்க்கை தனது விருப்பப்படி அமைய அவள் தனிமையை நாடி கரிக்னானோவுக்கு வந்ததை நினைத்துக் கொள்கிறார்.
 
நாவலின் இறுதியில் பாட்டியும் பேத்தி யும் ஒருவரையொருவர் புரிந்துகொள் கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இயற்கை அவர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்துகிறது. நாவலின் முடிவில் நந்தாவை பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்லும் வழியில் இலாதாஸ் எதிர்பாராமல் தாக்கப்பட்டு இறந்து போகிறார். இலாதாஸை அடையாளம் காட்ட நந்தா அழைக்கப்படுவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.
 
நந்தா கவுல், ராக்கா, இலா மூவரும் மாறுபட்ட வாழ்க்கையின் பிரதிநிதிகள். வேறு வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இவர்கள் ஒன்று போலவே கசப்பான நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் ஏற் படுத்திய சுமையால் அவதிப்படுகிறார் கள். அடையாளங்களை இழக்கிறார்கள். அதிலிருந்து விலக தனிமையை நாடுகிறார்கள்.
 
அனிதா தேசாயின் கவித்துவமான விவரணைகளும், துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடும், நுட்பமான கதை சொல்லும் முறையும் நாவலை மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகிறது.
 

 

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 31: சினிமா எனும் கனவு!

 

mirunal_2397755f.jpg

 

புத்தகங்களைப் பரிசாக கொடுப்பது நல்ல பழக்கம். ஆனால் யாருக்கு, என்ன புத்தகம் பரிசாக கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி பலநேரம் விழா நடத்துபவர்கள் யோசனை செய்வதே இல்லை.
 
திருக்குறள், காந்தியின் சத்திய சோதனை, பாரதியார் கவிதைகள் அல் லது அர்த்தமுள்ள இந்துமதம் போன் றவைதான் பெருமளவு பரிசாக தரப்படும் புத்தகங்கள். இதுவரை 100 திருக்குறள் புத்தகங்களையும், 50 பாரதியார் கவிதை களையும் பரிசாகப் பெற்றிருப்பேன்.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தூக்க முடியாத அளவுக்குப் பெரிய பார்சலாக, புத்தகங்களைக் கட்டிப் பரிசாக கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால் ‘கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவது எப்படி?, அடுத்து என்ன படிக்கலாம்?, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஒரு மார்க் வினா- விடை என அத்தனையும் பள்ளி மாணவர்களுக்கான கையேடுகள்.
 
இதை எதற்கு எனக்குக் கொடுத்தார் கள் எனப் புரியாமல் தொலைபேசியில் அழைத்து ‘புத்தக பார்சலை மாற்றிக் கொடுத்துவிட்டீர்களா' எனக் கேட்டேன்.
 
‘‘இல்லை சார், இந்த புக்ஸ் எல்லாம் எங்கள் பதிப்பக வெளியீடுகள். எல்லா விருந்தினர்களுக்கும் இதைத்தான் எப்பவும் கொடுப்பது வழக்கம்’’ என்றார் கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?
 
இதற்கு மாறாக, சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ‘உங்களுக்கு என்ன புத்தகம் தேவை என்பதை தெரியப்படுத்தினால், அதைப் பரிசாக வாங்கித் தருகிறோம்’ என பள்ளி முதல்வர் மெயில் அனுப்பியிருந்தார். அது போலவே கேட்ட புத்தகத்தை வாங்கியும் தந்தார்கள். இப்படி ஒரு பண்பாட்டினை வேறு எங்கேயும் நான் கண்டதே இல்லை!
 
டெல்லியில், ஒரு இலக்கிய நிகழ்ச்சி யில் கலந்துகொண்டபோது, 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுக் கூப்பனைத் தந்து, பிரபலமான புத்தகக் கடை ஒன்றில் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள செய்தார்கள். இப்படி ஒரு முறையை தமிழகத்திலும் புத்தகக் காட்சி நடத்துபவர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பின்பற்றலாம்தானே!
 
பரிசாக கிடைக்கும் மோசமான 100 புத்தகங்களுக்கு நடுவே, சிலவேளை அபூர்வமாக ஒரு நல்ல புத்தகம் கிடைத்துவிடுவதும் உண்டு. அப்படிக் கிடைத்த புத்தகம் ‘மிருணாள் சென்’ எழுதிய ‘இன்று புதிதாய் பிறந்தேன்’. கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாற்று நூல் இது.
 
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற இயக்குநரான மிருணாள் சென்னின் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல், சினிமா என்ற வகைமையை முன்னெ டுத்து வெற்றிகரமான மாற்று சினிமாவை உரு வாக்கியவர் மிருணாள் சென்.
 
மிருணாள் சென்னிடம் ஒரு நேர் காணலின்போது ஒரு பத்திரிகையாளர் ‘‘உங்கள் ‘ஏக்தின் பிரதின்’ படத்தின் கதாநாயகி ஒருநாள் இரவு வீட்டுக்கு வரவில்லை. குடும்பமே அவளைத் தேடு கிறது. சந்தேகம் கொள்கிறது. முடிவில் மறுநாள் அவளாக வீடு வந்து சேர்வதுடன் படம் முடிவடைந்துவிடுகிறது. உண்மை யில் அவள் எங்கேதான் போயிருந்தாள்?’’ என்று ஒரு கேள்வி கேட்டார்.
 
அதற்கு மிருணாள் சென் சொன்ன பதில்: ‘‘யாருக்குத் தெரியும்? அது அவளது சுதந்திரம்!’’
 
இந்த பதில் சரியான சவுக்கடி. இதுவே கலைஞனின் அடையாளம். நாம் எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்கத் தைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிக் கிறோம். கற்பனையாக வம்பு பேசு கிறோம். அவதூறுகளைப் பரப்பு கிறோம். நான்கு பேர் ஒன்று கூடி பேசிச் சிரிக்கும் இடத்தில், யாரோ ஒரு பெண் ணின் அந்தரங்கம் கேலிக்குள்ளாக்கப் படுகிறது என்பதே நிஜம்.
 
வங்க இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான தாகூர், பிமல் மித்ரா. தாராசங்கர், சீர்சேந்து முங்கோபாத்யாய, சுனில் கங்கோ பாத்யாய, ஆஷா பூரணாதேவி எனப் பலரது சிறுகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன. தமிழில் நான் அறிந்தவரை மகேந்திரன் மட்டுமே புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படமாகவும், கந்தர்வனின் ‘சாசனம்’ கதையை அதே பெயரிலும் படமாக்கியிருக்கிறார். தமிழில் பலநூறு நல்ல சிறுகதைகள் உள்ளன. ஆனால், அதில் விருப்பமானதைத் தேர்வு செய்து படமாக்க யாரும் முன்வரவில்லை என்பதே ஆதங்கம்.
 
மிருணாள் சென்னின் வாழ்க்கை வரலாறு படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. சென்னின் அப்பா ஒரு வழக்கறிஞர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். மிருணாள் சென்னின் குடும்பப் பின்னணி, பள்ளிப் பருவ நாட்கள், நாடகங்கள் மீதான ஈடுபாடு, கல்லூரி நாட்களில் கொல்கத்தாவுக்குப் படிக்க வந்தபோது விடுதியில் கிடைத்த அனுபவங்கள், தாகூரின் இறுதி அஞ்சலியை நேரில் கண்டது, சில காலம் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்தது, அந்த நாட்களில் தான் சந்தித்த மருத்துவர்கள், பார்த்த நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள், இடதுசாரி சிந்தனையின் அறிமுகம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தனக்கு ஏற்பட்ட உறவு என தனது பசுமையான நினைவுகளைத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் மிருணாள் சென்.
 
சார்லி சாப்ளின்தான் மிருணாள் சென் னின் ஆதர்சம். சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறும், ருடால்ப் ஆர்ன்ஹெமின் ‘ஃபிலிம் அஸ் ஆர்ட்’ என்ற புத்தகமுமே தன்னை திரைப்படத்துறைக்குக் கொண்டுவந்தன எனக் கூறுகிறார் சென்.
 
கொல்கத்தாவில் எப்படி ஒரு ஃபிலிம் கிளப்பை அவரும் நண்பர்களும் ஒன் றிணைந்து போராடி உருவாக்கினார்கள்? அதில் புதோவ்கின், ஐசன்ஸ்டீன், பெலினி, பெர்க்மென் போன்றவர்களின் படங்களைத் திரையிட்டு எப்படி விவாதம் செய்தார்கள் என்பதையும், தான் ஒரு திரை விமர்சகராக செயல்பட்ட விதம் குறித்தும் சென் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.
 
மிருணாள் சென்னின் முதல் படம் ‘ராத் போர்’ (Raat Bhore). இதில், உத்தம் குமார் நாயகன். சலீல் சவுத்ரி இசை. படம் படுதோல்வியைச் சந்தித்தது. தோல் வியால் சோர்ந்து போய்விடாமல் போராடி தொடர்ந்து சினிமா இயக்கினார் சென்.
 
1961-ல் லண்டன் திரைப்பட விழா வுக்கு அவரது ‘பைசே சிராவன்’ திரைப் படம் தேர்வாகியது. அந்த விழாவின் மூலம் சர்வதேச திரைப்பட அரங்கில் தான் கவனம் பெற்றதை நெகிழ்வுடன் நினைவுகூருகிறார் மிருணாள் சென்.
 
இந்த நூலில் பல ஆச்சர்யமான தகவல்கள் உள்ளன. 1969-ல் மிருணாள் சென் ஹிந்தியில் எடுத்த ‘புவன்ஷோம்’ படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு ஓர் இளைஞர் பின்னணிக் குரல் கொடுத்தார். அப்போது அவருக்கு சம்பளமாக 300 ரூபாய் கொடுக்கப்பட்டது. அந்தக் குரல் மிருணாள் சென்னுக்குப் பிடித்திருந்தது. அந்த இளைஞர்தான் இன்று ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அமிதாப் பச்சன். அதுதான் அமிதாப் சினிமாவில் பெற்ற முதல் ஊதியம் என நினைக்கிறேன் என மிருணாள் சென் குறிப்பிடுகிறார். இதை விட ஆச்சர்யம் ‘புவன்ஷோம்’ படம் எடுக்க ஆன செலவு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே என்பது!
 
ஒரு இயக்குநரே தனது வாழ்க்கை மற்றும் கலையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்பது அவரையும், அவரது சினிமாவையும் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவி செய்யக்கூடியது. அந்த வகையில் இந்த நூல் நல்ல சினிமாவை நேசிக்கிற அத்தனை பேரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்!
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 32: அறிவின் வரைபடம்!

 

sra_2405612f.jpg

 

நூலகங்களுக்குச் செல்லும் போதெல்லாம் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா தொகுதி களை வியந்து பார்த்துக் கொண்டிருப் பேன். மேற்கோள் நூற்பகுதியில் லெதர் பைண்டிங் செய்யப்பட்டு, தங்கநிற எழுத்துக்கள் மின்ன வரிசை வரிசையாக அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டானிக்காவின் 32 தொகுதிகளும் வாசிக்கத் தூண்டுபவை.
 
நேர்த்தியான அச்சும், துல்லியமான புகைப்படங்களும், ஓவியங்களும், எளி மையும் செறிவும் மிக்கக் கட்டுரைகளும், வியப்பூட்டும் தகவல்களும் கொண்ட பிரிட்டானிக்கா பிரமிக்க வைக்கும் அறிவுக் களஞ்சியமாகும்!
 
ஒவ்வொரு முறை அதைக் காணும் போதும், ‘இந்த மொத்த தொகுதிகளையும் யாராவது ஒருவர் படித்திருப்பாரா? என்ற கேள்வி மனதில் எழும். யாரால் இதை மொத்தமாக படிக்க முடியும்? ஒருவேளை படிப்பது என்று முடிவு செய் தால் கூட எத்தனை ஆண்டுகள் செல வாகும் என மலைப்பாகத் தோன்றும்.
 
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.ஜே.ஜேக்கப் என்பவர் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்காவை முழுமையாக வாசித்து முடித்ததோடு, அது குறித்த தனது அனுபவத்தை ‘தி நோ இட் ஆல்’ (The Know It All) என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார் என ஆங்கில நாளிதழில் வெளியான குறிப்பை வாசித்த உடனே, அதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.
 
இணையம் வந்தபிறகு புத்தகம் வாங்கு வது எளிதாகிவிட்டது. தற்போது எந்த ஆங்கிலப் புத்தகம் வேண்டும் என்றாலும் பிலிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் எளிதாக ஆர்டர் செய்துவிடலாம். வீட்டில் கொண்டுவந்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் இரண்டே நாட்களில். கூடுதலாக சிறப்பு சலுகைகள் வேறு தருகிறார்கள்.
 
இணையத்தில் ஆர்டர் செய்து, ‘தி நோ இட் ஆல்’ புத்தகத்தை வாங்கி வாசித்தேன். வியந்து பாராட்டும் அளவில் ஒன்றுமில்லை. சராசரியான புத்தகமே. ஆனால், ‘எப்படி கலைக்களஞ்சியத்தின் 32 தொகுதிகளையும் வாசித்தேன்’ என்ற தனது அனுபவத்தையும், பிரிட்டானிக்காவில் உள்ள விசித்திரமான, சுவாரஸ்யமான தகவல்களையும் ஒன்று சேர்த்து ஏ.ஜே.ஜேக்கப் எழுதியிருக்கிறார். அதற்காக வாசிக்கலாம்.
 
என்சைக்ளோபீடியா என்பது கிரேக்க மொழிச் சொல். அதன் பொருள் ‘பொது அறிவு’ என்பதாகும். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பல துறை அறிவை உள்ளடக்கிய அறிவுக்களஞ்சியமாகும். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பு 1768-ம் ஆண்டு ஸ்காட் லாந்தில் வெளியானது. அதில் இருந்து தொடர்ச்சியாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் தொகுதிகள், ‘இனிமேல் அச்சில் வெளிவராது’ என பிரிட்டானிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
அச்சு புத்தகங்களின் விற்பனை குறைந்துபோனதே காரணம். 1989-ம் ஆண்டு பிரிட்டானிக்கா குறுந்தகடு (சி.டி) வடிவில் கலைக்களஞ்சியத்தை முதல் முறையாக வெளியிட்டது. அதன் வெற்றி யைத் தொடர்ந்து இனிமேல் இணையத் திலும், குறுந்தகடு வடிவிலும் மட்டுமே கலைக்களஞ்சியம் விற்கப்படும் என அறி வித்துள்ளார்கள். தமிழிலும் பிரிட்டா னிக்கா கலைக்களஞ்சியம் மூன்று பெரும் தொகுதிகளாக வெளியாகி உள்ளன.
 
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா 32 தொகுதிகளைக் கொண்டது. 33 ஆயிரம் பக்கங்கள். இதில், பல்வேறு துறைச் சார்ந்து 65 ஆயிரம் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 9,500 பேர் இதில் எழுதியுள்ளார்கள். இதில் 4 கோடியே 40 லட்சம் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
 
ஜேக்கப்புக்கு என்சைக் ளோபீடியாவை முழுமையாக வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எப்படி உருவானது? முதல் காரணம் அவரது அப்பா. அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சிறந்த படிப்பாளி. அவர் பிரிட்டானிக்கா முழு தொகுதிகளையும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது பணிச் சுமை காரணமாக அது சாத்தியமாகவில்லை. ஆகவே, தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற வேண்டும் என ஜேக்கப் கலைக்களஞ் சியத்தைப் படிக்க முடிவு செய்தாராம்.
 
ஜேக்கப் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றுபவர் என்பதால் இயல் பாகவே நிறைய நேரம் படிக்கக்கூடியவர். கலைக்களஞ்சியத்தைப் படிப்பது என முடிவு செய்தவுடன், அதை ஒரு திட்டமாக உருவாக்கி அதற்காகவே நேரம் ஒதுக்கி வாசிக்கவும், மனப்பாடம் செய்யவும் தொடங்கினார்.
 
கலைக்களஞ்சியத்தை வாசிக்கத் தொடங்கியபோது உருவான முதல் பிரச்சினை, அகர வரிசைப்படி உள்ள எழுத்துகளை அப்படியே வாசித்துக் கொண்டு போவதா, இல்லை தொடர் புடைய விஷயங்களை வேறு வேறு தொகுதிகளில் தேடி வாசித்துவிட்டுத் தொடர்வதா என்ற குழப்பம் உருவானது. தானே இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொண்டு அகரவரிசையைப் பின்தொடர தொடங்கியுள்ளார்.
 
கலைக்களஞ்சியத்தில் பல்வேறு துறையைச் சார்ந்த தகவல்கள், விளக்கங் கள், செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதை ஒரு நாவலைப் போலவோ, இலக்கியப் பிரதி போலவோ வாசிக்க முடியாது. மேலும், அறிவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஒரே ஆளுக்கு எப்படி எல்லாத் துறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்? ஆகவே, ஜேக்கப் தொடர்ந்து வாசிக்க சிரமப்பட்டார்.
 
தனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டா லும் கலைக்களஞ்சியத்தைத் தொடர்ச்சி யாக வாசித்து விட வேண்டும் என்ற உந்து தல் காரணமாக அவர் நாள்கணக்கில் வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்.
 
ஒவ்வொரு பக்கம் வாசித்து முடித்தவுடன், அதைப் பற்றிய தனது எண்ணங்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொண்டுள்ளார். அத்துடன் கலைக்களஞ்சியத்தில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைத் தனியே எழுதிக்கொள்ளவும் செய்தார்.
 
கலைக்களஞ்சியத்தை வாசிக்க வாசிக்க அவருக்கு தலைசுற்றத் தொடங் கியது. சில நாட்கள் மண்டைக்குள் சம்பந் தமே இல்லாத தகவல்கள் ஒன்றுகலந்து கொந்தளிக்கத் தொடங்கினவாம். தான் படித்த விஷயங்களை யாரிடம் கொட்டுவது எனப் புரியாமல், தான் கலந்துகொள்ளும் விருந்துகளிலும், தன்னைத் தேடி வரும் நண்பர்களிடமும் படித்த விஷயங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
 
இதனால், இவரைக் கண்டு பலரும் விலகி ஓடினார்கள். மனைவி எரிச்சல் அடைந்தார். ‘ஏன், இப்படி கலைக்களஞ்சியத்தை விழுந்து விழுந்து படிக்கிறீர்கள்?’ எனக் கேட்டவர்களுக்கு, ஜேக்கப் ஒரு ஆப்பிரிக்கப் பழங்கதை ஒன்றை சொன்னார்.
 
உலகிலேயே மிக அதிசயமான ஒரு பாகற்காய் இருந்தது. அது சாதாரண மானது இல்லை. உலகின் அத்தனை அறிவும் ஒன்று சேகரிக்கப்பட்டு அந்தப் பாகற்காய்க்குள் சேமிக்கப்பட்டு இருந் தது. அதை ஒரு ஆமை திருடிக் கொண்டு போனது. தன் வீட்டுக்குப் போகிற வழியில் ஒரு மரம் விழுந்து கிடப்பதைக் கண்ட ஆமை, முதுகில் இந்தப் பாகற்காயை வைத்துக் கொண்டு எப்படி மரத்தின் மீது ஏறிப் போவது என யோசனை செய்தது. முடிவில் பாகற்காயைத் துண்டு துண்டாக உடைத்தது. உடனே அதில் சேகரிக்கப்பட்டிருந்த அத்தனை அறிவும் வெளியேறிப் போய்விட்டதாம். அப்படித்தான் உலகெங்கும் அறிவு பரவியது.
 
‘சிதறடிக்கப்பட்ட அறிவை ஒன்று திரட்டவே நான் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை வாசிக்கிறேன்’ என்றார் ஜேக்கப்.
 
‘எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வைப்பது ஜேக்கப்பின் வழக்கம். அதில் ஒன்றுதான் இந்தக் கலைக்களஞ்சிய வாசிப்பு. மற்றபடி, அவர் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை. பிரிட்டானிக்காவை மேம்போக்காக வாசித்திருக்கிறார் என்பதன் அடையாளமே இந்த நூல்’ என ‘நியூயார்க்கர்’ பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
 
18 மாதங்களை ஒதுக்கி, ஜேக்கப் பிரிட்டானிக்காவை வாசித்திருக்கிறார் என்பதால் அவரது நூலை வாசிக்க நாமும் இரண்டு மணி நேரங்களை ஒதுக்கலாம்தானே!
 
 
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 33: காற்றுக்கு கண் இல்லை!

 

sra_2412662f.jpg

 

உலகம் எப்படி உருவானது? மனிதர் கள் எவ்வாறு தோன்றினார்கள்? சந்திர, சூரியர்கள் எவ்வாறு உருவானார்கள்? இரவும் பகலும் ஏன் வருகின்றன என்பது போன்ற கேள்விகள் ஆதிமனிதன் காலத்தில் இருந்தே கேட்கப்பட்டு வருகின்றன. இதற்கு, அறிவியலும் வரலாறும் பதில் தருகின்றன. இதே கேள்விகளுக்கு உலகெங்கும் உள்ள பழங்குடி மக்கள் பல கதைகளைப் பதிலாக தருகிறார்கள்.
 
கற்பனையால் நெய்யப்பட்டவை இக்கதைகள். வியப்பும் பயமும் ஒன்று கலந்தவை. இயற்கையை மனிதர்கள் எப்படி புரிந்துவைத்திருந்தார்கள் என்ப தன் அடையாளமே இக்கதைகள்!
 
உலகெங்கும் பழங்குடி மக்களால் சொல்லப்படும் இயற்கைக் குறித்த கதை களைத் தொகுத்து, ‘கால்முளைத்த கதைகள்’ என்ற பெயரில் சிறுவர் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.
 
இந்த நூலை உருவாக்குவதற்கு எனக்கு உத்வேகமாக இருந்த புத்தகம் ‘வெரியர் எல்வின்’ தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது’ கதை தொகுப்பாகும். பழங்குடி மக்களின் தொன்மங்களையும் கதைகளையும் கொண்ட தொகுப்பு அது. சிறார்கள் விரும்பி படிக்கும்படியாக 6 தலைப்பு களில் 38 கதைகள் இதில் உள்ளன. ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
‘வெரியர் எல்வின்’ ஒரு மானுடவியல் ஆய்வாளர். ‘கோண்டு’ பழங்குடி மக்க ளின் மேம்பாட்டுக்காக 20 வருடங் களுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
 
இங்கிலாந்தின் டோவரில் பிறந்த இவரது முழுப் பெயர் ஹேரி வெரியர் ஹோல்மன் எல்வின். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக் கியத்தில் பட்டம் பெற்ற இவர் சமயத் துறை படிப்பில் தேர்ச்சி பெற்று, கத்தோ லிக்க சமயப் பரப்பாளராக பணியாற்று வதற்கு இந்தியா வந்து சேர்ந்தார்.
 
புனேயில் உள்ள கத்தோலிக்க சமய நிறுவனம் ஒன்றில் சில மாதங்கள் சேவை செய்த இவர், காந்தியக் கோட்பாடுகளால் கவரப்பட்டு மகாத்மா காந்தியைச் சந்தித்து உரையாடி, சபர்மதி ஆசிரமத்தில் சேவை செய்தார். காந்தியக் கோட்பாடுகளின்படி வாழவேண்டும் என்று காலில் செருப்பு அணியாமல், வெறும்தரையில் படுத்து உறங்கினார். எளிமையான தினசரி வாழ்க்கையை மேற்கொண்டார்.
 
1932-ல் காந்தி கைது செய்யப்பட்ட நேரத்தில் எல்வினும் உடனிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியை எல்வின் எதிர்க்கிறார் என்பதால், அவரும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார். பழங்குடி மக்களோடு வாழ்ந்து சேவை செய்வது என முடிவு செய்து, ‘கோண்டு’ இன மக்கள் வாழும் கரஞ்ஜியா என்ற மலைக் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து, சேவை செய்ய ஆரம்பித்தார். பின்பு ‘பஸ்தர்’ பழங்குடி இன மக்கள் வாழும் சித்ரகோட்டில் சில காலம் சேவை செய்தார்.
 
1940-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் ‘கோண்டு’ பழங்குடி இனப் பெண்ணான கோசியை திருமணம் செய்துகொண்டார். பழங்குடி மக்களின் வாழ்க்கைக் குறித்து நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். மத்தியப் பிரதேசம், ஒடிசா, பிஹார் என்று சுற்றி அலைந்து பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார்.
 
ஆதிவாசிகளின் பண்பாட்டினைப் புரிந்துகொள்ளாமல், காட்டு இலாக்காவினர் அவர்களைக் கட்டாய இடமாற்றம் செய்தபோதும், இலை ஆடைகளுக்குப் பதி லாக துணி ஆடைகளை உடுத்தும்படி கட்டாயப்படுத் தியபோதும், அதைக் கண்டித்துப் போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறார் எல்வின். இந்திய மானுடவியல் நிறுவனத்தின் துணை இயக்குநராக சில ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். இவர் தொடங்கிய ‘கோண்டு’ சேவா மண்ட லம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
 
பழங்குடிகள் தாங்கள் பூமி பிளந்து உருவானவர்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே, பூமியின் மீது உள்ள அவர்களின் உரிமை பிறப்பிலே உருவானது; அதை எவராலும் பறிக்க முடியாது என சுட்டிக்காட்டுகிறார் எல்வின்.
 
பிரபஞ்சம் உருவானது எப்படி? மனித னுக்கு உடல் உறுப்புகள் உருவானது எப்படி? முதன்முறையாக ஆடை நெய்வது அறிமுகமானது எப்படி? நெல் விளைந்தது எப்படி? பறவைகள் ஏன் சத்தமிடுகின்றன என்று பல்வேறு தளங்களைச் சார்ந்த நம்பிக்கைகளை, கதைகளைத் தொகுத் திருக்கிறார் எல்வின். இந்தக் கதைகளின் ஊடாக பழங்குடி மக்களின் இயற்கை குறித்த விசேஷமான புரிதல்களை அறிந்துகொள்ள முடிகிறது.
 
முன்பொரு காலத்தில் பெண்களுக் கும் தாடியிருந்தது. அந்தத் தாடியைக் கடன்பெற்ற ஆடு திருப்பித் தரவே இல்லை. இந்த ஏமாற்றம் காரணமாகவே பெண் தாடியை இழந்தாள். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பெண் களுக்கு தாடி வளர்வதில்லை என்கிறது ஒரு கதை.
 
இதுபோலவே ‘காற்றுக்கு கண் இல்லை’ என்பதால்தான் அது எல்லாவற்றின் மீதும் மோதுகிறது. குயிலுக்கு நிறையப் பாடல்களை பாட வேண்டும் என்ற பேராசை. அதனால் தான் சின்னஞ்சிறு பாடல்களாக எப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறது என்கிறது இன்னொரு கதை.
 
‘வானம் ஒரு காலத்தில் கைதொடும் தூரத்தில் இருந்தது. தன் தலையின் மீது இடிக்கிறதே என்று ஒரு கிழவி தன் துடைப்பக் கட்டையை ஒங்கி அடிக்க முயற்சித்தாள், பயந்து போன வானம் தொலைதூரத்துக்குச் சென்றுவிட்டது’ என்பது ஒரு கதை.
 
‘ஒரு காலத்தில் யானைகளுக்கு நான்கு றெக்கைகள் இருந்தன. இதனால் மக்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளானார்கள். ஆகவே, கடவுள் அந்த றெக்கைகளில் இரண்டை வெட்டி மயிலுக்கு தந்தார். மீதமான இரண்டை வாழை மரத்துக்கு தந்தார். ஆகவேதான் வாழை நீளமான இலைகளைக் கொண்டிருக்கிறது’ என்பது வேறொரு கதை.
 
இயற்கையின் இயல்பினை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் இப்படியான கதைகளை ஆதிமனிதர்கள் உருவாக்கி யிருக்கிறார்கள்.
 
பழங்குடி மக்கள் என்றாலே நாகரீக மற்றவர்கள் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கியவர்கள் ஐரோப்பியர்களே. எல்வின் அச்சித்திரத்தை உருமாற்றி, பழங்குடி மக்களின் தனித்துவத்தை, கற்பனைவளத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
 
குறிப்பாகப் பழங்குடி மக்கள் காசு கிடைக்கும் என்பதற்காக மட்டும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவனைக் காசு கொடுத்து மீன் பிடித்து வரச் சொல்வது மிகவும் கடினம். காரணம், பணம் கிடைக்கிறதே என ஒருவனும் மீன் பிடிக்க போக மாட்டான்.
 
பழங்குடி மக்களை இந்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை அவர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். பழங் குடி மக்களை நகரவாசிகள் அதிகம் ஏமாற் றுகிறார்கள் என்று கூறும் எல்வின், நீதி மன்ற வழக்குகளுக்காக வரும் ஆதிவாசி மக்களிடம் நீதிமன்ற எழுத்தர்கள் நான்கு விதமான பேனாக்களைக் காட்டி, எந்த பேனாவில் எழுத வேண்டும் என்று கேட் பார்கள். காரணம், ஒவ்வொரு பேனாவில் எழுதுவதற்கும் ஒரு ரேட். இப்படி பழங்குடியினரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகம் பணம் பிடுங்கியது நகரவாசிகளே என்கிறார்.
 
இறந்து போன மூதாதையர்களும், தெய்வமும், இயற்கையும் தங்களுக்கு எல்லா நிலைகளிலும் துணையாக இருக்க வேண்டும் என பழங்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே இது போன்ற கதைகளை, பாடல்களை, நம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள்
 
எழுத்திலக்கியங்கள் உருவாவதற்கு முன்பாகவே வாய்மொழி வழக்காறு கள் உருவாகிவிட்டன. தனித்த பாரம் பரியத்தையும், சடங்கியல் முறையையும் கொண்ட பழங்குமக்களின் வாழ்க்கை, இன்று கடும்நெருக்கடியைச் சந்திக்கிறது. கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வனத்தை விட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைத் துரத்துகின்றன. காட்டை இழந்த அவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
 
இதன் காரணமாக பழங்குடி மக்களின் வாய்மொழி வழக்காறுகள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றை சேகரிப் பதும் பேணிக் காப்பதும், ஆய்வு செய் வதும் அவசியமான பணியாகும். இது போன்றதொரு முன்னோடி முயற்சி யாகவே எல்வின் இந்நூலை தொகுத் திருக்கிறார். கதை சொல்லிகளுக்கு இது ஒரு சிறந்த கையேடாகும்.
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 34: முராத் எனும் போராளி!

 

leo_2419686f.jpg

 

சில புத்தகங்களை வாசித்து முடித்தப் பிறகு வேறு எதையும் சில நாட்களுக்குப் படிக்க விருப்பமே இருக்காது. அத்தனை ஆழமான பாதிப்பை நமக்குள் ஏற்படுத்திவிடும். அது போன்ற ஒன்றுதான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ’ஹாஜி முராத்’.
 
ஓர் எழுத்தாளனின் முதல் நாவலைப் போலவே அவனது கடைசி நாவலும் முக்கியமானதே. ஆனால், பெரும்பான்மை எழுத்தாளர்களின் கடைசி நாவல் தோற்றுப்போயிருக்கின்றன. இதற்கு ஓர் உதாரணம்தான் ஹெமிங்வே எழுதிய ’தி கார்டன் ஆஃப் ஈடன்’. அவர் இறந்த பிறகே இந்த நாவல் வெளியானது. அதை வாசகர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
 
டால்ஸ்டாய் இறந்த பிறகு வெளியான நாவல் ’ஹாஜி முராத்’. இந்த நாவலே அவரது மிகச் சிறந்த படைப்பு என ஹெரால்டு ப்ளும் போன்ற இலக்கிய விமர்சகர்கள் கூறுகிறார்கள். தமிழில் இந்த நாவலை மெஹர் ப.யூ.அய்யூப் மொழியாக்கம் செய்திருக்கிறார். என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
இந்த நாவலை எழுத டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட வருஷங்கள் எவ்வளவு தெரியுமா? எட்டு வருஷங்கள். 200 பக்க அளவுள்ள இந்த நாவலை துணியில் பூ வேலைப்பாடு செய்வது போல அத்தனை நுட்பமாக, வசீகரமாக எழுதியிருக்கிறார்.
 
டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதியைப் படியெடுத்து எழுதியவர் அவரது மனைவி சோபியா. டால்ஸ்டாய் ’தனது எழுத்து மக்களுக்கானது. அதில் குடும்பத்தினருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என ஓர் உயில் எழுதி வைத்திருந்தார். அதற்குக் காரணமாக இருந்தவர் செர்த்கோ.
 
இதனை ஏற்க மறுத்த சோபியா, டால்ஸ்டாயின் எழுத்துகளின் வருவாய் தனது குடும்பத்துக்கே வேண்டும் என சண்டையிட்டார். ஆகவே ’ஹாஜி முராத்’ நாவலை வெளியிடும் உரிமை தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என சோபியா ஆசைப்பட்டார்.
 
ஒருவேளை இந்த நாவல் ஜார் அரசின் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக கூடுமோ என பயந்த டால்ஸ்டாய், இதை தன் வாழ்நாளில் வெளியிடவே இல்லை. அவர் இறந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகே ’ஹாஜி முராத்’ வெளியிடப்பட்டது.
 
இளமையில் ராணுவப் பணி ஆற்றியபோது டால்ஸ்டாய் காக்கசஸ் பகுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது தான் கண்ட மனிதர்கள், கிடைத்த அனுபவங்களைக் கொண்டே இந்த நாவலின் களத்தை உருவாக்கியிருக்கிறார்.
 
’அவார்’ இனத் தலைவன் முராத். ரஷ்யர்களிடம் இருந்து விடுதலைப் பெறப் போராடும் ஒரு போராளி. மிகவும் துணிச்சலும் தைரியமும் கொண்டவன். மக்கள் அவனை வழிகாட்டியாக கொண்டாடுகிறார்கள்.
 
ரஷ்யா கிறிஸ்துவர்கள் நிரம்பிய பகுதி. செச்செனியாவோ இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பிரதேசம். ஆகவே, தங்களின் உரிமையை காத்துக்கொள்ள செச்செனியர்கள் போராடி வந்தார்கள். இதற்கு தலைமை ஏற்றவன் ஷமீல். இவனுடன் இணைந்து ரஷ்யப் படையை எதிர்க்கிறான் ஹாஜிமுராத். ஷமீலின் படை முராதின் சகோதரனை கொன்றதுடன், அவரோடு நட்புறவு கொண்டிருந்த கான்களையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இதனால் ஆத்திரம் அடைகிறான் முராத். ஒரு கட்டத்தில் ஷமீலின் செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனை நேரடியாகவே எதிர்க்கிறான்.
 
முராத்தை விட்டுவைக்கக் கூடாது என முடிவு செய்த ஷமீல், அவனைக் கொல்ல திட்டமிடுகிறான். இதனை செச்செனியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது இரண்டு இனக் குழுக்களின் பகையாக உருமாறுகிறது.
 
தன்னைக் கொல்ல துடிக்கும் ஷமீலிடம் இருந்து தப்பித்து, மக்மெத் என்ற மலைக் கிராமத்துக்கு ஹாஜி முராத் வந்து சேர்வதில்தான் இந்த நாவல் தொடங்குகிறது.
 
ஷமீலின் விசுவாசிகள் நிரம்பிய அந்தக் கிராமத்தில் சாதோ என்ற தனது விசுவாசியின் வீட்டில் அடைக்கலம் ஆகிறான். வீட்டில் பெண்கள் ஹாஜிமுராத்தை உபசரிக்கும் காட்சியும், அவர்கள் தங்களுக்குள் ஹாஜி முராத் குறித்து பேசிக்கொள்வதும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.
 
இதற்குள் ஹாஜி முராத் தங்கியுள்ள விஷயம் வெளியே கசிந்துவிடுகிறது. தான் அங்கே வந்த நோக்கம், ரஷ்யர்களை சந்திக்க ஒரு ஆள் உதவி செய்ய வேண்டும் என கேட்கிறான் ஹாஜி முராத்.
 
இதற்காக சாதோவின் சகோதரன் பாதா ரகசியமாக கிளம்பிப் போகிறான். இதற்குள் ஹாஜிமுராத்தை தாக்க ஆட்கள் வீட்டினை முற்றுகையிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஹாஜிமுராத் வெளியேறிப் போகிறான். ஷமீலின் ஆட்கள் துப்பாக்கிகளுடன் துரத்துகிறார்கள். வேறு வழியில்லாமல் முராத் ரஷ்யர்களிடம் தஞ்சமடைகிறான்.
 
ரஷ்ய இளவரசன் வோரந்த்சோவ் முராத்தை நட்போடு நடத்துகிறான். முராத்தை போன்ற ஒரு வீரமிக்க போராளி தங்களோடு இருந்தால் ஷமீலை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைக்கிறான். ஆனால், இதை ஏற்க மறுத்த அஹமத்கான் என்னும் படைத் தலைவன் ஹாஜி முராத் ஒரு ஒற்றன், அவன் ஒரு துரோகி எனக் கூறுகிறான். இதற்குக் காரணம் அவன் முராத்திடம் சண்டையிட்டு தோற்றவன். இதைக் கேட்ட ஹாஜிமுராத் ஷமீலை மட்டுமில்லை; அஹமத்கானையும் கொல்வேன் என கோபம் கொள்கிறான்.
 
வீட்டுக் கைதி போல நடத்தப்படும் முராத் ஷமீலைப் பழிவாங்க துடிக்கிறான், ஆனால் ரஷ்ய இளவரசன் அவனை போர்முனைக்கு அனுப்பவில்லை. ஷமீலுடன் மோதுவதற்காக தப்பி போகிறான் ஹாஜிமுராத். ரஷ்யப் படை அவனை துரத்துகிறது. ஒரு பக்கம் ஷமீல்; மறுபக்கம் ரஷ்யப் படை. இரண்டும் அவனை துரோகி என்கிறார்கள்.
 
முராதின் மனைவியையும் பிள்ளைகளையும் ஷமீலின் ஆட்கள் கொன்றுவிடுகிறார்கள், இரண்டு எதிரிகளுக்கு நடுவே சிக்கி போராடும் ஹாஜி முராத், முடிவில் ரஷ்யப் படையினரால் கொல்லப்படுகிறான். அவனுடைய தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. ரஷ்ய தளபதிகள் இந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
 
நாவல் இங்கே முடியவில்லை. யுத்தமுனையில் கேட்கும் வெடிச் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் எங்கோ வானம்பாடிகள் பாடத் தொடங்கியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார் டால்ஸ்டாய். அது நம்பிக்கையின் அடையாளம்.
 
நாவலின் தொடக்கத்தில் உழுது போட்ட நிலத்தைக் கடந்து சென்ற வண்டி ஒன்றின் சக்கரத்தில் சிக்கி பிய்ந்து எறியப்பட்ட தார்த்தாரிய செடி ஒன்றினை குறிப்பிடும் டால்ஸ்டாய், ’அந்தச் செடி ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கையைப் போல் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், நிமிர்ந்து நின்றிருந்தது. தன்னை அழிக்க முயற்சித்தாலும் தான் அடிபணிய மாட்டேன் என்பது போல நின்றிருந்தது.
 
மனிதன் இதுவரை எத்தனையோ கோடானுகோடி தாவரங்களை நாசம் செய்திருக்கிறான். ஆனால், இந்த ஒன்று மட்டும் சரணடையவில்லை’ என்று வியக்கும் டால்ஸ்டாய் என்றோ காகசஸ் பகுதியில் நடந்த சண்டையையும் ஹாஜிமுராத்தையும் நினைவு கொள்கிறார். அந்தச் செடியின் நினைவுடனே நாவல் முடிவடைகிறது.
 
அதிகாரத்தின் கொடுங்கரங்களால் வீழ்த்தப்பட்டபோதும், போராளிகள் அடிபணிந்து போவது இல்லை. மரணம் அவர்களை வெற்றிக் கொள்ளமுடியாது. வீழ்த்தி சிரிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
 
டால்ஸ்டாயின் மேதமை அவரது கடைசி நாவலிலும் பூரணமாகவே வெளிப்பட்டுள்ளது. இந்த நாவலை வாசிக்கும்போது ’உமர் முக்தார்’ திரைப்படம் ஏனோ நினைவில் வந்தபடியே இருந்தது. பிரம்மாண்டமான யுத்த திரைப்படங்கள் உருவாக்க முடியாத நெருக்கத்தை வாசகனுக்கு முழுமையாக உருவாக்கி தருகிறது என்பதே இந்த நாவலின் வெற்றி.
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 35: இமயக் காட்சிகள்!

 

arjunan_2427152f.jpg

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மாமல்லபுரம் கடற்கரையில் ஒரு ஜெர்மன் இளைஞனைச் சந்தித்தேன். மூன்று மாதங்களாக மாமல்லபுரத்தில் தங்கியிருப்பதாக அவன் சொன்னான்.
 
‘‘ஏதாவது ஆய்வு செய்கிறாயா..?’’ என்று கேட்டேன். ‘‘இல்லை. இந்தியா வைச் சுற்றிப் பார்க்க வந்த என்னை, இங்குள்ள சிற்பங்களின் அழகு இங்கேயே தங்கவைத்துவிட்டது. மூன்று மாதங்களாகச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இன்னமும் ஏக்கமாகவே உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருஷங்களாவது இங்கேயே வாழ்ந்தால்தான் இந்தக் கலை அழகை முழுமையாக உள் வாங்கிக்கொள்ள முடியும்’’ என்று சொன்னான்.
 
‘‘அப்படி என்னதான் பார்க்கிறாய்..?’’ எனக் கேட்டேன்.
 
‘‘சிற்பங்களை ரசிப்பதற்குக் கண்கள் மட்டும் போதாது. அதை உள் வாங்கிக்கொள்ள மனது வேண்டும். அதன் ரகசியக் கதவுகள் திறந்துகொள்ள வேண்டும். பார்த்தும், படித்தும், உணர்ந்தும் அதற்குள்ளாக நம்மைக் கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவள் அழகி எனத் தெரிந்துவிடுகிறது. அவளோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால்போதும் என்றா நினைக்கிறோம்? பேசிப் பழகி, அவளை நம்மோடு அணைத்துக் கொள்ளத் தானே ஆசைப்படுகிறோம்? அப்படிப் பட்டதுதான் சிற்பங்களும். சிற்பங்களில் உறைந்துள்ள புன்னகையை வார்த்தை களால் விவரிக்க இயலாது..’’ என்றான்.
 
‘‘ஐரோப்பிய சிற்பங்களை விடவும், இவை மேன்மையானது என்கிறாயா..?’’ என்றேன்.
 
‘‘இத்தாலிய சிற்பங்கள் உடலை முதன்மையாகக் கொண்டவை. ஆகவே நிர்வாணச் சிற்பங்களும், டேவிட் போன்ற உறுதியான ஆண் சிற்பங்களும் கலை அழகுகளாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்திய சிற்பங்களில் உணர்ச்சிகள் பிரதானமாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முகபாவங்களும், உடலின் நளினமும், அரூபத்தை வெளிப்படுத்தும் முறையும் அபாரமான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய சிற்பங்களின் மேன்மையை இந்தியர்கள் உணரவே இல்லை’’ என்றான் அவன்.
 
அவன் சொன்னது முற்றிலும் உண்மை! நமக்கு நுண்கலைகளை ரசிக்கத் தெரியவில்லை. ஓவியங்கள், சிற்பங்கள், கலை வேலைப்பாடுகள் குறித்து நமக்குக் கவனமும், ஈடுபாடும் துளியும் இல்லை.
 
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கலைநயமிக்கச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை மிச்சமான திருநீற்றை, குங்குமத்தைக் கொட்டி வைக்கும் கிண்ணங்களைப் போலவே நாம் பயன்படுத்துகிறோம். அரிய மூலிகை ஓவியங்கள் மீது வெற்றிலை எச்சிலை துப்புவதும், சுண்ணாம்பு அடித்துக் காலி செய்வதும் எளிதாக நடந்தேறுகிறது. பலநேரம் இந்தச் சிற்பங்களின் மேன்மையை அறியாமல் கை கால்களை உடைத்து, தலையைச் சிதைந்து அலங்கோலமாக்கிவிடுகிறார்கள் சிலர்.
 
பல்லாயிரத்துக்கும் மேலான அரிய சிற்பங்கள் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. அதுகுறித்த எந்த விழிப் புணர்வும் நமக்கு இல்லை.
 
ஆண்டுக்குப் பல லட்சம் பேர் வந்துபோகும் மாமல்லபுரம், இன்றைக்கும் புகைப்படம் எடுத்துக்கொள் வதற்கான ஒரு திறந்தவெளி ஸ்டுடியோ போலத்தான் இருக்கிறது. ஏதேதோ ஊர்களில் இருந்து மாமல்லபுரம் வரும் பயணிகளில் ஒரு சதவீதம் பேர் கூட அரிய சிற்பங்களைப் பற்றியோ, அதன் வரலாற்றுச் சிறப்பியல்புகள் குறித்தோ அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதே இல்லை.
 
தமிழில் நுண்கலைகளைப் பற்றிய புத்தகங்கள் வெகு குறைவு. அரிதாகச் சில நல்ல புத்தகங்கள் வெளியாகும்போதும் அதை வாசகர்கள் கண்டுகொள்வதே இல்லை. மாமல்லபுரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
 
பேராசிரியர் சா.பாலுசாமி எழுதியுள்ள ‘அர்ச்சுனன் தபசு: மாமல்ல புரத்தின் இமயச் சிற்பம்’ என்கிற புத்தகம், மாமல்லபுரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள புத்தகங்களை விடச் சிறப்பாகவும், சிறந்த ஆய்வு நூலாகவும் உள்ளது. இந்தப் புத்தகத்தை ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 
மகாபலிபுரச் சிற்பங்கள் எப்போது, யாரால், எப்படிச் செதுக்கப்பட்டன? இங்குள்ள சிற்பத் தொகுதியில் தவம் இயற்றுவது அர்ச்சுனனா, இல்லை பகீரதனா? இங்குச் சித்தரிக்கப்படுவது இமயமா? அர்ச்சுனன் தவம் செய்தது எந்தக் காலத்தில்? இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள், தாவரங்கள் எவை என விரிவாக ஆராய்ந்து விளக்குகிறார் பாலுசாமி.
 
மகாபலிபுரம் செல்கிற ஒவ்வொரு வரும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய அற்புதமான புத்தகம் இது. இந்தப் புத்தகம் மூன்று விதங்களில் மிக முக்கியமானது. ஒன்று, மாமல்லையின் கலை வரலாற்றை எளிமையாக நமக்கு எடுத்துக் கூறுகிறது. இரண்டாவது, ‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதியினை அங்குல அங்குலமாக எடுத்துக் காட்டி, விளக்கி அதன் அருமை பெருமைகளை அறிமுகம் செய்கிறது. மூன்றாவது, இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள இமயம் சார்ந்த விலங்குகள், தாவரங்கள், வேடர்கள், கங்கையின் இயல்பு பற்றி விரிவான சான்றுகளுடன் ஆய்வுபூர்வமாக விளக்கிக் கூறுகிறது.
 
மாமல்லபுரத்தில் உள்ள ‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
 
இந்தச் சிற்பத் தொகுதி யில் உடல் ஒடுங்கிப்போய் எலும்பும் நரம்பும் தெரிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று, இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்கிறான் அர்ச்சுனன். கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து சிவன் நிற்கிறான். சுற்றிலும் பூத கணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே ஓடிவரும் கங்கை ஆறு. இதன் பாதை ஓரத்தில் காணப்படும் நாகர்கள்.
 
காத்திருக்கும் சூரியன், சந்திரன், தேவர்கள், கின்னரர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள். அதன் ஒரு பக்கம் ஒரு திருமால் கோயில். அதன் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள், யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது என நுட்பமாகக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
 
இந்தச் சிற்பத் தொகுதி குறித்து விவரிக்கும் பாலுசாமி இதில் சித்தரிக் கபட்டுள்ள குரங்கு இமயத்தில் காணப் படும் ‘லங்கூர்’ எனப்படும் குரங்குதான் எனச் சான்றுகளுடன் விளக்குகிறார். இதுபோலவே இமயத்தில் உள்ள பன்றி மான், நீல ஆடு, இமாலய எலிமுயல், தேன்பருந்து போன்றவை எப்படி இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதையும் ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுகிறார்.
 
இதுபோலவே பொய் தவம் செய்யும் பூனை உருவத்துக்கும் மகாபாரதக் கதையில் வரும் பொய்தவப் பூனைக்குமான தொடர்பை எடுத்துக் காட்டுகிறார். கிராதர்கள் எனப்படும் இமய வேடர்கள் குறித்தும், நாகர்கள், மற்றும் கங்கையின் தோற்றம் பற்றியும், இமயம் குறித்த சங்கப் பாடல்கள், மகா பாரத வனபர்வம், காளிதாசனின் வருணனை களுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்.
 
‘அர்சுனன் தபசு’ சிற்பத் தொகுதியின் இசைவுப் பொருத்தம், சமநிலை, செய்முறை, பன்முகக் கோணங்கள், காலவெளி, இயல் பும் நுட்பமும் குறித்து விரிவான விளக்கங்களைத் தருவது இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.
 
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழ்ப் புலவர்கள் இமயம் வரை சென்றிருப்பதற்குச் சங்கப் பாடல்களில் நிறையச் சான்றுகள் உள்ளன, சங்கக் கவிதையில் பதிவாக்கியுள்ள இமயம் குறித்த செய்திகள் எப்படி இந்தச் சிற்பத் தொகுதியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன எனச் சான்றுகளுடன் விளக்கியது அரிய கலைச் சாதனை என்றே சொல்வேன்.
 
கற்கனவாக விளங்கும் மகாபலிபுர சிற்பங்களைப் புரிந்துகொள்வதற்கும், கொண்டாடுவதற்கும் இந்நூல் பெரிதும் உதவி செய்கிறது. அந்த வகையில் மாமல்லபுர சிற்பங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதிய பேராசியர் பாலுசாமி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்!
 
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 36: குறவர்களின் உலகம்

 

sra_2435039f.jpg

 

நரிக்குறவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்ன? அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவம் உண்டா ? நரிக்குறவர்களைப் பற்றி ஏதாவது புத்தகம் வெளியாகி உள்ளதா எனக் கேட்டு, ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
 
வீதியில் நரிக் கொம்பு விற்றுக்கொண் டும், பாசி மணி ஊசி மணி மாலைகள் விற்றுக்கொண்டும் அலையும் குறவர் களை சிறுவயது முதலே பார்த்திருக் கிறேன். ஆனால், அவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்னவென்று தெரியவில்லை.
 
புத்தகங்களின் தேவை என்பதே இது போல அறியப்படாத விஷயங்கள் குறித்து, நமக்கு அறிமுகம் செய்வதும் புரிந்துகொள்ள வைப்பதும்தானே! நரிக் குறவர்களைப் பற்றி என்ன புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன எனத் தேடத் தொடங்கினேன்.
 
பொதுவாக பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாடு குறித்து தமிழில் அதிக நூல்கள் இல்லை. அவர் கள் பொருளாதார ரீதியாகவும் பண் பாட்டு ரீதியாகவு மிகவும் ஒடுக்கப்பட்டு வருவது குறித்து பொதுவெளியில் கவனம் உருவாகவே இல்லை.
 
பிரிட்டிஷ்காரர்களும் மிஷனரி களுமே பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு களில் ஈடுபட்டிருக்கிறார்கள், சுதந்திரத் துக்குப் பிறகே மானுடவியல் ஆய்வாளர் கள் இந்தியாவின் பல்வேறு பழங்குடி மக்கள் குறித்து ஆராயவும், ஆவணப் படுத்தவும் தொடங்கினார்கள்.
 
‘எட்கர் தர்ஸ்டன்’ தொகுத்த ‘தென்னிந் திய குலங்களும் குடிகளும்’ என்கிற நூலில் தென்னிந்திய சாதிகள், மற்றும் பழங்குடி மக்கள் குறித்து நிறைய தகவல் கள் புகைப்படத்துடன் இடம் பெற்றுள் ளன. தர்ஸ்டன் சென்னை அருங்காட்சி யகத்தின் பொறுப்பாளராக இருந்த பிரித் தானியர். ஏழு தொகுதிகளாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் தென்னிந்திய மானுடவியலின் அடிப்படை நூலாகும்.
 
இது போலவே இருளர் இன மக்கள் குறித்து ‘சப்பெ கொகாலு’, ‘ஒடியன்’ என இரண்டு புத்தகங்களை எழுதியிருக் கிறார் லட்சுமணன். இருளர் மொழிக்கு ஒலி வடிவம் மட்டுமே உண்டு. வரிவடி வம் கிடையாது. தமிழ், தெலுங்கு, கன்னடம் கலந்தது அவர்களின் மொழி. இந்த மக்களுடன் பழகி, அவர்கள் நம்பிக்கைகளை, தொன்மங்களை. இசைப் பாடல்களைத் தொகுத்து லட்சு மணன் நூலாக வெளியிட்டிருக்கிறார்.
 
பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்ய மான சில தகவல்களை எழுதியிருக் கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கைமுறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.
 
ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித் துவ மானது. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப் பத்தின் காரணமாக இந்தியா முழுவ தும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
 
பிலோ இருதயநாத், தனது கட்டுரை யில் தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர் கள் வேறு, தமிழகத்தில் வசிக்கும் குறவர்கள் வேறு. இவர்கள் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
 
குறவர்கள் பேசும் மொழியான ‘வாக்ரி போலி’ மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
குறவர்கள் தங்கள் இனத்துக்குள்ளா கவே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியாட்கள் குறப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவளை தங்கள் இனத்துக்குள் சேர்க்க மாட்டார் கள். இனத் தூய்மை பேணுவது அவர்களின் இயல்பு.
 
குறவர் இனப் பெண்கள் மணவிலக் குப் பெற இயலும். பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒன்றுசேர்க்க முயற்சிப்பார்கள். அது சாத்தியமாகாத நிலையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக் கோலை எடுத்து, மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான், அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்!
 
திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தனியே வாழலாம். நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண் டாடுவார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, மாப்பிள்ளைதான் பெண் ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும். கல்யாணச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
மாப்பிள்ளைக்கு சாமிச் சொத்து இருக்க வேண்டும்.. சாமிச் சொத்து என்பது மூதாதையர்கள் கொடுத்துப் போன சாமிப் பொருட்களாகும். அதா வது, வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள். இதை புனிதமாக வைத்து பாதுகாத்து வருவார்கள்.
 
குடிப்பதும், சினிமா பார்ப்பதும் அவர் களின் விருப்பமான பொழுதுபோக்கு கள். தங்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளைக் கொண்டவர்கள் அவர்கள். வயதான குறவர்களைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இறந்தவர்களை ரகசிய மாக புதைத்துவிட்டு போய்விடுவார்கள் என பிலோ இருதயநாத் குறிப்பிடுகிறார்.
 
குறவர்களின் இன வரலாறு குறித்து அதில் ஆய்வுபூர்வமான தகவல்கள் இல்லை. இதற்காக மானுடவியல்துறை யில் ஆய்வு செய்யும் ஒரு நண்பரைத் தொடர்புகொண்டபோது, ’கரசூர் பத்மபாரதி’ எழுதிய ’நரிக்குறவர் இனவரைவியல்’ என்கிற நூலை வாசிக்கக் கொடுத்தார்.
 
முனைவர் பத்மபாரதி நெடுங்கால மாக நரிக்குறவர்களுடன் பழகி, அவர் களின் வாழ்க்கைமுறையைத் துல்லிய மாக எழுதியுள்ளார். ‘தமிழினி பதிப்பகம்’ இதை 2004-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
 
குறவர்களின் இன வரலாறு, அவர் களின் சமூக அமைப்பு, பயன்படுத்தும் பொருட்கள், பொருளாதார நிலை, திருமணம் மற்றும் சடங்குகள், சமய நம்பிக்கைகள், பஞ்சாயத்து, மருத்துவமுறை, நம்பிக்கைகள் என 11 தலைப்புகளில் விரிவான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த நூல்.
 
நரிக்குறவர்கள் கல்வியாலும், பொருளாதாரத்தாலும் மிகவும் பின் தங்கியவர்களாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என ‘நலவாரியம்’ அமைக்கபட்டுள்ள போதும், உயர்கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பிலும் இன்னமும் அதிக வளர்ச்சி அடையவில்லை.
 
மராட்டிய மாமன்னர் சிவாஜியின் படையில் வீரர்களாக நரிக்குறவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சிவாஜிக் கும் முகலாயர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் சிவாஜி தோற்றுப் போனதால், அவரது படைவீரர்கள் முகலாயர்களால் பிடிக்கபட்டு அடிமைக ளாக மாற்றப்பட்டார்கள். முகலாயப் படையின் கையில் அகப்படாமல் தப்பி காட்டுக்குள் புகுந்தவர்கள், தென்னிந் தியாவுக்கு குடிவந்தனர் என்றொரு கருதுகோளும் இருக்கிறது.
 
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து கி.பி. 6 அல்லது 7-ம் நூற்றாண்டுகளில்தான் இவர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது
 
நரிக்குறவர்கள் சிவனை முதற்கடவு ளாகக் கொண்டாலும் காளியம்மன், மாரியம்மன், துர்க்கை போன்ற பெண் கடவுளர்களையும் வணங்குகிறார்கள். எருமையைப் பலியிடுவது அவர்களின் வழக்கம்.
 
குறவர் சமூகத்தினுள் எருமை பலியிடுவோர், ஆடு பலியிடுவோர் என்று இரண்டு பெரும்பிரிவுகள் இருப்பினும் அதிலும் உட்பிரிவுகள் உண்டு. குறவர்களின் சமையல் தனி ருசி கொண்டது. கறியை வேகவைத்து அதை சோற்றுடன் பிசைந்து சாப்பிடுவார்கள். அவர்களில் யாராவது இறந்துபோனால் அதே இடத்தில் ரகசியமாக புதைத்து விட்டு போய்விடுவது போன்ற நரிக் குறவர்களின் பண்பாட்டுக்கூறுகளை சுவாரஸ்யமாக, துல்லியமாக விளக்கு கிறார் பத்மபாரதி.
 
நரிக்குறவர்கள் தற்போது மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் உள்ளார்கள். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
 
‘நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
 
ஆனா - நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்
 
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
 
ஆனா - காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்’
 
- என சினிமா பாடல் ஒன்றில் குற வனும் குறத்தியும் ஆடிப் பாடுவார்கள். அது வெறும் பாடல் மட்டுமில்லை; அவர்களின் வாழ்க்கை நெறி!
 
- இன்னும் வாசிப்போம்…
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 37: அன்பு வழி!

sra_2442840f.jpg

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். கண்ணகி சிலையை ஒட்டிய மெரினா கடற்கரையில் காலை 6 மணியளவில் அவர்கள் இருவரையும் பார்த்தேன். பையனுக்கு 8 வயது இருக்கக்கூடும். போலியோ தாக்கி மெலிந்த கால்கள். இடுப்பு ஒடுங்கியிருந்தது.

சற்றே பெரிய தலை. சுருங்கி, ஒடுங்கிப் போன முகம். அவனை தூக்கிக் கொண்டு மணலில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் ணுக்கு 30 வயது இருக்கலாம். ஏழ்மையான தோற்றம். அடர்நீலவண்ணச் சேலை கட்டியிருந்தார். கைகளில் ஒரு பிளாஸ் டிக் கூடை. அதில் தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு.

அந்தப் பெண் தனது மகனை மணலில் உட்கார வைத்துவிட்டு பத்தடி தள்ளிச் சென்று இரண்டு கைகளாலும் மணலைத் தோண்டி குழி பறித்துக் கொண்டிருந்தார். பையன், தூரத்தில் தெரியும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பையனைத் தூக்கிக் கொண்டுபோய் இடுப்பளவு உள்ள மணற்குழியினுள் இறக்கி நிற்கவைத்து, சுற்றிலும் மணலைப் போட்டு மூடினார். அந்தப் பையன் எதிர்ப்பு காட்டவே இல்லை.

மண்ணில் புதைந்து நின்ற பையன் அம்மாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா அவன் அருகில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடியே, தனது கையில் இருந்த ஒரு பையைத் திறந்து பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். மணலுக் குள் புதைந்திருந்த பையன் அமைதி யாக அம்மா படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

என்ன செய்கிறார்கள் என்றே எனக் குப் புரியவில்லை. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் மெல்லிய குரல் சீராக எதையோ சொல்லிக் கொண்டிருந்தது. அதைக் கேட்க வேண்டும் என்பதற் காகவே அருகில் நடந்து போனேன். அவர் படித்துக் கொண்டிருப்பது ஒரு கதை. அதுவும் பழைய அம்புலிமாமா இதழில் வெளியான கதை.

அந்தப் பெண் என் வருகையைக் கண்டதும் படிப்பதை நிறுத்திவிட்டு, என்னை ஏறிட்டு பார்த்தார்.

‘‘பையனுக்கு என்ன செய்கிறது?’’ எனக் கேட்டேன்.

‘‘காலு சரியில்லை. போலியோ வந்து முடங்கிப்போச்சி. அதான் ஈரமணலில் நிற்க வச்சா கால் சரியாகிரும்னு சொன் னாங்க. தினமும் கூட்டிட்டு வந்து நிக்க வைக்கிறேன். ஒரு மணி நேரம் நிக்கணும்ல, அதான் கதை படிச்சிக் காட்டுறேன். அதைக் கேட்டுக்கிட்டே வலியை மறந்து நிற்பான். நானும் செய்யாத வைத்தியமில்லை. காட்டாத டாக்டரில்லை. புள்ள சரியாகலை. பெத்த மனசு கேட்க மாட்டேங்குது.

அதான் கோடம்பாக்கத்துலேர்ந்து தினமும் பஸ் பிடிச்சி பையனைக் கூட்டிட்டு கடற் கரைக்கு வர்றேன். நாலு மாசமா மணல்ல நிக்கிறான். பாவம் பிள்ளை. வலியைப் பொறுத்துகிட்டு நிக்கிறான். வீட்டுக்காரர் பழைய பேப்பர் வியா பாரம் செய்றாரு. நான் அச்சாபீஸ்ல வேலை பாத்தேன். ஆனா, இப்போ முடியலை. வீட்ல வேற ஆள் துணை யில்ல.

ஒத்த ஆளா இவனை தூக் கிட்டு அலையுறேன். ஆனா, சாமி புண் ணியத்துல என் பிள்ளைக்கு சரியா கிரும்னு நம்பிக்கையிருக்கு…’’ என தன்னை மீறி பீறிடும் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார்.

அதைக் கேட்கும்போது மனது கனத் துப் போனது. ஒரு தாயின் வலியை, வேதனையை எவரால் புரிந்து கொள்ள முடியும்? உலகில் இதற்கு இணையான அன்பு வேறு என்ன இருக்கிறது?

‘‘உங்கள் மகனுக்கு நிச்சயம் சரியாகிடும்மா…’’ என்று சொன்னேன்.

அந்தத் தாயின் முகத்தில் நிமிஷ நேரம் மலர்ச்சி தோன்றி மறைந்தது. அந்தப் பையன் தன்னைப் பற்றிப் பேசுவதை விரும்பாதவன் போல, ‘‘படிம்மா…’’ என்றான். அந்தத் தாய் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள்.

நம்பிக்கைதான் இந்த உலகின் மகத்தான சக்தி! அதை கொஞ்சம் கொஞ்சமாக மகனின் மனதில் அந்தத் தாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். வேறு எவர் தரும் நம்பிக்கையை விடவும் தாய் தரும் நம்பிக்கை மேலானது. அதுதான் ஒரு மனிதனை வலுவேற்றி வளரச் செய்கிறது!

இந்தத் தாயைப் போல எத்தனை பேர் தனது உடற்குறைபாடு கொண்ட, மன வளர்ச்சியில்லாதப் பிள்ளைகளைத் தூக்கிச் சுமக்கிறார்கள்? அவர்கள் நலம் அடைவதற்காக அல்லாடு கிறார்கள்? கண்ணீரால் பிரார்த்தனை செய்கிறார்கள்? அவர்களின் அன்பை விட அரிய பொருள் இந்த உலகில் எதுவுமே இல்லை!

கடலை விட்டு மேலேறி சூரியன் அவர்களை பார்த்தபடியிருந்தது. மகன் வலி தாளமுடியாமல் முனங்கினான். அந்தத் தாய் ‘‘பொறுத்துக்கோ, இன்னும் பத்து நிமிஷம்தான்…’’ என ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவேயில்லை. இந்த நிகழ்வின் வழியே தாயின் அன்பை மட்டுமில்லை; மனிதர்களை ஆற்றுப்படுத்த புத்தகங் கள் துணை நிற்கின்றன என்பதை யும் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

ஆம் நண்பர்களே! வலியை மறக்க செய்யும் நிவாரணியாக கதைகள் இருப்பதை அன்று நேரில் கண் டேன். கதை, கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் வெறும் பொழுது போக்கு விஷயங்கள் இல்லை. அவை மானுடத் துயரை ஆற்றுப்படுத்துகின்றன. மனிதனை நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. மனித மனதை சந்தோஷம் கொள்ளவைத்து, வாழ்வின் மீதான பிடிப்பை உருவாக்குகின்றன.

நீண்ட காலத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணையும் அவள் மகனையும் நினைவுபடுத்தியது அருண்ஷோரி எழுதிய Does He Know A Mother's Heart என்கிற புத்தகம் .

40 வருஷங்களாக மனத் துயரை அடக்கி வைத்திருந்த ஒரு தந்தையின் வலியைச் சொல்கிறது இந்தப் புத்தகம்! முன்னாள் மத்திய அமைச்சர், பொருளாதார நிபுணர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட அருண்ஷோரி, தனது மூளை வளர்ச்சி குறைவான மகனை வளர்ப்பதற்காக எப்படி எல்லாம் போராடினார் என்பதை நெகிழ்வாக விவரிக்கிறார்.

அருண்ஷோரியின் மகன் ஆதித்யா ‘செரிபரல் பேல்சி (Cerebral Palsy)’ எனப்படும் உடற்குறைபாடு கொண்டவன். இதன் காரணமாக கைகால்கள் சீராக இயங்கவில்லை. ஆகவே நடக்க இயலாது. பார்வை திறனும், மன வளர்ச்சியும் குறைவு. ஆதித்யாவை அவனது அம்மா அனிதா மிகுந்த அக்கறை எடுத்து கவனித்துக் கொள்கிறார்.

மருத்துவரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் அருண்ஷோரி கவனிக் கிறார். மன வளர்ச்சியற்ற பிள்ளையை தங்களின் காலத்துக்குப் பிறகு யார் கவனிப்பார்கள்? யார் தூக்கிக் குளிக்க வைப்பார்கள்? இந்த உலகம் அவனை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்ற துயரமே இப்புத்தகம் எழுதக் காரணமாக இருந்திருக்கிறது.

ஆதித்யாவின் பிறப்பு, அவனது பிரச்சினைகள், அதை தீர்க்க அவர்கள் மேற்கொண்ட முறைகள் இவற்றை விவரிப்பதுடன்; கடவுள் ஏன் இப்படி குழந்தைகளை சோதிக்கிறார்? உடல்குறைபாடு கொண்ட, மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளைவுடைய பெற்றோர்களின் வலியை ஏன் இந்த உலகம் புரிந்துகொள்ள மறுக்கிறது? அவர்கள் எப்படி நம்பிக்கை கொள் கிறார்கள்? அதற்கு மதமும், தத்துவ மும் எப்படி உதவி செய்கின்றன என்பதை அருண்ஷோரி இதில் விவரிக்கிறார்.

‘உங்கள் பாவம்தான் பிள்ளைக்கு இப்படி குறையாக வந்துள்ளது…’ என யாரோ ஏளனமாக சொல்லும் போது, அது பெற்றோர் மனதை எப்படி பாதிக்கிறது என்பதை கண்ணீர் துளிர்க்க அருண்ஷோரி எழுதியிருக்கிறார்.

அருண்ஷோரியின் அரசியல் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாதவர் களும் கூட இந்தப் புத்தகத்தை படிக்கும்போது, ஒரு தந்தையின் வலியை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-37-அன்பு-வழி/article7328911.ece

 

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 37: இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை!

sra_2450487f.jpg

சாலையோரம் இருந்த ஒரு பிச்சைக்காரன் தன்னை நோக்கி ஒரு ரதம் வருவதைக் கண்டான். தனக்குப் பிச்சை போட யாரோ ஒரு புண்ணியவான் வருகிறான் என ஆசையோடு கையேந்தி நின்றான். ரதத்தில் வந்தவன் அருகில் வந்து தனது கைகளை விரித்து ‘‘ஏதாவது கொடு…’’ எனக் கேட்டான்.

‘நானே ஒரு பிச்சைக்காரன்; என் னிடம் கொடுக்க என்ன இருக்கிறது?’ என நினைத்தபடி, தனது பையில் இருந்த தானியத்தில் இருந்து ஒரே ஒரு தானியத்தை எடுத்து, ரதத்தில் வந்தவனின் கையில் போட்டான் பிச்சைக்காரன்.

‘நன்றி’ சொல்லி ரதத்தில் வந்தவன் விடைபெற்று போய்விட்டான். அன்று இரவு பிச்சைக்காரன் தன்னிடம் இருந்த தானியப் பையை எடுத்தபோது, அதில் ஒரே ஒரு தங்க தானியம் இருப்பதைக் கண்டான். ‘ஆஹா! எல்லா தானியங்களையும் அந்த மனிதனுக்கு கொடுத்திருந்தால் அத்தனையும் தங்கமாக மாறியிருக்குமே…’ எனப் புலம்பினான் என்று மகாகவி ரவீந்திர நாத் தாகூர் தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

இப்படித்தான் இருக்கிறது மனித வாழ்க்கை!

கடவுளே வந்து யாசகம் கேட்டாலும், ஒற்றைத் தானியத்துக்கு மேல் மனிதன் தர மாட்டான். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. சொல்லாலும் செயலாலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய மனிதர்கள் காலத்தால் மறைந்து போனாலும், அவர்களின் நினைவுகள் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நிறைவான வாழ்க்கை என்பது 100 ஆண்டுகள் வாழ்வது இல்லை; ஆயிரம் பேரின் மனதில் வாழ்வதுதான்!

அப்படி தானறிந்த அபூர்வமான மனிதர்கள் சிலரைப் பற்றிய உண்மை நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டிருக் கிறார் குகன்.

‘பெரும்புள்ளிகள்’ என்ற இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. 1994-ல் குகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சுவாரஸ்யமான தகவல் களையும் உண்மை சம்பவங்களையும் கொண்ட அரிய புத்தகம் இது. ஏன், இதை மறுபதிப்பு செய்யாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

குகன் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர். பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மாணவர். இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றத்துக்குத் துணை செய்ததாக கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலம் பிள்ளையை, ஆங்கிலேய அதிகாரிகள் மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.

‘இந்தக் கை தானே சுதந்திரப் போராட்டத்துக்காக ரத்தக் கையெழுத்து போட்டது’ என ரூல் தடியால் அடித்து, இனி எழுதவே முடியாது என்கிற அளவுக்கு கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன. 23 வயதில் வழக்கில் இருந்து விடுதலை ஆன அருணாசலம், சிறை தந்த நோயுடன் சொத்து பறிபோன நிலையில் அநாதை போல அலைந்து திரிந்திருக்கிறார்.

மீதமுள்ள வாழ்க்கையை சமூகச் சேவையில் கழிக்க முடிவு செய்து, தீண்டாமையை ஒழிக்க அவர் ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார். அங்கே சமைப்பது முதல் பரிமாறுவது வரை அத்தனையும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். ‘அப்படியாவது சாதி ஒழியாதா?’ என்பதே அவரது எண்ணம். இதை சகித்துக்கொள்ள முடியாத உயர்சாதியினர் உணவகத்தைத் தீவைத்து எரித்துவிட்டார்கள் என வரலாற்றில் பதிவாகாமல் போன நிகழ்ச்சியைத் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார் குகன்.

1908-ம் ஆண்டு மதுரையில் உள்ள இங்கிலீஷ் கிளப்பின் நடு ஹாலில் மேஜர் ஹார்ன் உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள். திடீ ரென ஹாரிசன் அங்கு இருந்த வெள்ளைச் சுவரில் தனது உயரத்தை அளந்து குறித்ததோடு மற்ற அதிகாரிகளின் உயரத்தையும் அதில் பதிவு செய்ய சொன்னார். பலரும் தனது உயரத்தை அதில் பதிவு செய்தனர். கூடவே, தங்கள் பெயரையும் எழுதி கையெழுத்துப் போட்டார்கள். பின்பு, அது ஒரு பழக்கமாகவே உருமாறியது. 1922 முதல் 1946 வரை 350-க்கும் அதிகமான பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்தச் சுவரில் தங்கள் உயரத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் அந்தச் சுவரைச் சுற்றி கண்ணாடி பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். மதுரை சமூகப் பணிக் கல்லூரி வளாகத்தில் அந்தச் சுவர் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் குகன். இன்றும் அந்தச் சுவர் உள்ளதா எனத் தெரியவில்லை.

அக்காலத்தில் திருநெல்வேலி வட் டாரத்தில் புகழ்பெற்ற கடையாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது, ராம ஆனந்தம்பிள்ளை பலசரக்கு அண்ட் ஜவுளிக் கடை. அதை நடத்திய ராம ஆனந்தம்பிள்ளையை ஊர் மக்கள் ‘கைராசிப் பிள்ளை’ என அழைத்தார்கள்.

இவர், சிறுவயதில் அம்மன்புரத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு கால் ரூபாய் கூலிக்காக மூன்று மைல் நடந்து உப்பு மூட்டை சுமந்து கஷ்டப்பட்டுள்ளார். பின்பு, தனது 12-வது வயதில் பிழைப்புக்காக கொழும்புக்குச் சென்று வேலை பார்த்து, தனது 25-வது வயதில் 500 ரூபாய் பணத்துடன் திருநெல் வேலிக்குத் திரும்பி சிறிய பலசரக்கு கடை ஒன்றை ஆரம்பித்து, மெல்ல வளர்ந்து புகழ்பெற்ற வணிகராக உயர்ந்து நின்றார்.

உப்பு மூட்டை தூக்கிய காலத் தில் அவர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பும் போது, ‘என்னடா கவர்னரோட போட்டோ எடுக்கப் போற மாதிரி குளிச்சிச் சிங்காரிச்சிட்டு வாரிய…’ எனக் கேலி செய்வார்களாம்.

பின்னாளில் சென்னை மாகாண கவர்னர் ஆர்ச் பால்டுனை, திருநெல் வேலிக்கு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதைக் கொண் டாடும்விதமாக ‘விக்டரி ஆர்ச்’சைத் திறந்துவைக்க வந்தபோது, ராம ஆனந் தம்பிள்ளையைப் பற்றி கேள்விபட்டு வரவேற்பு நிகழ்வில் அவரை கலந்து கொள்ளச் செய்தாராம். அப்போது பிள்ளை கவர்னருடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார்.

கவர்னரோடு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராம ஆனந்தம்பிள்ளை எப்போதும் தனது தலைமாட்டில் தொங்க விட்டிருப்பாராம். காரணம், ‘‘அதை பார்க் கும்போதெல்லாம் ‘என்ன கவர்னரோட போட்டோ பிடிக்கப் போறியா?’ எனக் கேலி செய்தவர்கள் கண்முன்னாலேயே தான் உழைத்து முன்னேறியது நினை வுக்கு வருவதோடு, தனது கடந்த கால வறுமை நிலையை நினைவுபடுத்தி நல்வழிகாட்டுகிறது’’ என்பாராம்.

ஒரு புகைப்படத்தின் வழியே வாழ்வில் அடைந்த வெற்றியையும் அதன் பின் னுள்ள வலியையும் சுட்டிக்காட்டுகிறார் குகன்.

இன்னொரு சம்பவம்… மாணிக்கம் என்ற சாலை ஒப்பந்ததாரர் சாலையை சரியாக போடவில்லை என்ற குற்றத்துக் காக, ஜில்லா போர்டு தலைவர் தளவாய் குமாரசாமி விசித்திரமான ஒரு தண்ட னையை விதித்திருக்கிறார். அது என்ன தெரியுமா?

சாலையைச் சொந்த செலவில் சரிசெய்து தர வேண்டும் என்பதுடன் தென்காசி, கடையம் சாலையில் இரண்டு பக்கமும் மரம் வைத்து வளர்க்க வேண்டும் என்பதே அந்தத் தண்டனை. அதை ஏற்றுக்கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் மாணிக்கம் வளர்த்த மரங்களை இன்றும் திரவியம் நகர் பகுதியில் பார்க்கலாம் என்கிறார் குகன்.

தமிழர்களாகிய நாம் அரைத்த மாவை அரைப்பது போல சில அறிஞர் களைப் பற்றி மட்டுமே பேசியும் எழுதி யும் வருகிறோம். ஆனால், தமிழ்மண் அவ்வளவு ஏழ்மையானது இல்லை. ஆயிரக்கணக்கான சான்றோர்களும் அறிஞர்களும் இங்கே வாழ்ந்து, இந்த மண்ணுக்குப் பெருமை சேர்ந்திருக்கிறார் கள். அவர்களில் சிலரின் பெருமைக்குரிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார் குகன் என்று தனது முன்னுரையில் ஓவியர் மதன் பாராட்டுகிறார். அது மிகச் சரியானதே!

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-37-இப்படித்தான்-இருக்கிறது-வாழ்க்கை/article7353500.ece?widget-art=four-rel

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 38: தேசம்தோறும் சினிமா!

sra_2458991f.jpg

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசத் திரைப்படங் களைப் பார்ப்பதற்கு, திரைப்பட சங்கங்கள் மட்டுமே வழியாக இருந்தன. சென்னையின் ஃபிலிம் சேம்பரிலும், ரஷ்ய கலாச்சார மையத்திலும், அமெரிக் கன் சென்டரிலும், மேக்ஸ்முல்லர் பவனி லும் காட்டப்படும் அயல் சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன்.

உலகத் திரைப்பட விழாக்களைக் காண்பதற்காக டெல்லி, மும்பை, கொல் கத்தா, கோவா என அலைந்திருக்கிறேன். திரைப்படம் தொடர்பான புத்தகங்களை வாசிக்க வேண்டி அமெரிக்கன் சென்டர் நூலகத்திலும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும் மணிக்கணக்கில் செல வழித்திருக்கிறேன்.

அப்போது உலக சினிமா குறித்து அறிந்துகொள்ள தமிழில் புத்தகங்களே கிடைக்காது. பிரான்ஸ்வா த்ரூஃபோ, ரோபெர் ப்ரேஸோன், லூயி மால் பற்றிய வெ.ராமின் புத்தகங்கள், ஐசன்ஸ்டீன் பற்றிய சிறிய நூல், தார்க்கோவெஸ்கி பற்றிய அறிமுக நூல், பேல பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு என பத்துக்கும் குறைவான புத்தகங்களே வாசிக்கக் கிடைத்தன.

இன்று உலக சினிமா குறித்து தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தீவிர சினிமா இதழ்களும் வெளியாகின்றன. சிறுபத்திரிகைகள் தொடங்கி பெரும் பத்திரிகைகள் வரை அனைத்தும் உலக சினிமா குறித்து எழுதுகின்றன. சர்வதேச சினிமா குறித்து இணையத்திலும் நிறைய எழுதுகிறார்கள்.

2004-ம் ஆண்டு உலக சினிமா என்ற ஆயிரம் பக்க நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து உலக சினிமாவை அறி முகம் செய்யும் விதமாக ஆறு நூல் களை எழுதியிருக்கிறேன். அவற்றில் சில கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளன. உலக சினிமா குறித்து நான் எழுதக் காரணமாக இருந்தவை, நான் படித்தப் புத்தகங்களும் பார்த்த படங்களுமே.

உலக சினிமாவின் பல முக்கிய நூல் கள் இன்னமும் தமிழாக்கம் செய்யப் படவில்லை. குறிப்பாக, ஆல்பிரட் ஹிட்ச் காக்கை த்ரூஃபோ செய்த விரிவான நேர்காணல் புத்தகம்; டொனால்டு ரிச்சி எழுதிய அகிரா குரோசாவா பற்றிய நூல்; ஸ்டீவன் கார்ட் எழுதிய ‘ஷாட் பை ஷாட்’; ஜோசப் மசிலி எழுதிய ‘பைவ் சீஸ்’; சத்யஜித் ரே எழுதிய ‘அவர் ஃபிலிம்ஸ் தேர் ஃபிலிம்ஸ்’ போன்றவை தமிழில் அவ சியம் மொழியாக்கம் செய் யப்பட வேண்டியவை.

கொச்சியில் உள்ள நடைபாதை கடை ஒன்றில், பிரெஞ்சு சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநரான பிரான்ஸ்வா த்ரூஃபோ எழுதிய சினிமா கட்டுரைகளின் தொகுப்பான ‘தி ஃபிலிம்ஸ் இன் மை லைஃப்’ புத்தகத்தை வாங்கினேன்.

த்ரூஃபோ பத்திரிகையாளராக பணி யாற்றிய காலத்தில் திரைப்பட விமர்சகராக நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1954 முதல் 58 வரை த்ரூஃபோ எழுதிய இந்தக் கட்டுரைகளில் பாதி அவர் இயக்குநர் ஆன பிறகு எழுதியவை.

சிறுவயதில் அத்தையோடு சினிமா பார்க்க போன நினைவில் தொடங்கி அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி, திருட்டுத் தனமாக தியேட்டரின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்து, நிறைய திரைப்படங்களை ஆறேழு முறை பார்த்த அனுபவத்தை முன்னுரையில் விவரிக்கிறார் த்ரூஃபோ.

தன் வயதையொத்த மற்ற சிறுவர் களைப் போல கதாநாயகனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவில்லை. மாறாக எந்த கதாபாத்திரம் கெட்டவ ராக சித்தரிக்கப்படுகிறதோ, அதனோடு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொண்ட தாக கூறுகிறார்.

மவுனப் படங்கள் தொடங்கி பேசும் படம் வரையான பல்வேறு திரைப்படங் கள் குறித்த கட்டுரைகளை எழுதியிருக் கிறார் இவர். இதில் சாப்ளின், ரெனார், ஜான் போர்டு, பிரிட்ஜ் லாங், ஆல்பிரட் ஹிட்ச் காக், எலியா கசன், ஸ்டான்லி குப்ரிக், சிட்னி லுமெட் பெர்க்மென், ழாக் தாதி போன்ற முக்கிய இயக்குநர் களைப் பற்றிய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கவை.

‘பத்திரிகையாளராக இருந்த நாட் களில் ஜான் போர்டின் படங்களை கடுமை யாக விமர்சனம் செய்து எழுதியிருக் கிறேன். ஆனால், இயக்குநர் ஆன பிறகு அவரது படங் களை காணும்போது போர்டின் மேதமையை என்னால் உணர முடிகிறது. அமெரிக்க சினிமா வின் மிகச் சிறந்த இயக்குநர் ஜான் போர்டு.

குறிப்பாக ஜான் போர்டு கேமராவை உபயோகிக்கும் விதம் அற்புதமானது. காட்சி கோணங்கள் பெரிதும் கதாபாத்திரங்களின் நோக்கி லேயே எடுக்கப்படுகின்றன. இவான் துர்கனேவ் அல்லது மாப்பசான் கதை யைப் படிப்பது போல கதாபாத்திரங் களின் வழியே நாம் படத்துக்குள் பிரவேசிக்கிறோம். அவர்கள் காட்டுகிற உலகை நம்புகிறோம், பின்தொடர் கிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். எந்த இடத்தில் பார்வையாளன் சிரிப்பான்? எப்போது அழுவான் என ஜான் போர்டு நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அதுதான் போர்டின் வெற்றி’ என த்ரூஃபோ குறிப்பிடுகிறார்,

பிரிட்ஜ் லாங்கின் படத்தைப் பற்றி குறிப்பிடும் த்ரூஃபோ, ‘நாஜி ராணு வத்தால் துரத்தப்பட்டு ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் லாங். ஆகவே, அவரது திரைப்படங்களில் திடீரென வன்முறை நிகழும். அதற்கு பழிவாங்குவதை நோக்கியதாக கதை நகரத் தொடங்கிவிடும்’ எனக் கூறுகிறார்.

‘லாங்கின் காட்சிகளை இன்னொரு வர் நகல் எடுக்கவே முடியாது. ஒவ் வொரு ஷாட்டும் ஓவியம் போல கச்சித மாக, பேரழகுடன் உருவாக்கப் பட்டிருக்கும். ஒரு நடிகர் வசனத்தை உச்சரிக்கும்போதுகூட எந்த சொல் அழுத்தமாக வெளிப்பட வேண்டும் என்பதை லாங் தீர்மானம் செய்திருப் பார். தன் காலத்தை விஞ்சிய மேதமை யும் அசலான கலை உள்ளமும் கொண்ட பிரிட்ஜ் லாங், குறைவாக கொண்டாடப் பட்ட ஒரு மகத்தான கலைஞன்’ என வியந்து பாராட்டுகிறார் த்ருஃபோ.

சார்லி சாப்ளின் திரைப்படங்கள் குறித்து மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன. அதில் ஒன்று, ‘தி கிரேட் டிக் டேட்டர்’ படத்தை சாப்ளின் உருவாக் கியது குறித்தது. ‘படத்தின் கடைசிக் காட்சியில் ஹிட்லராக நடிக்கும் சாப்ளின் நிகழ்த்தும் உரை சினிமா வரலாற்றில் மிக முக்கியமானது. பைபிளின் சாராம்சம் போல அந்த உரை அமைந்துள்ளது. இக்காட்சியின் மூலம் உலகின் மனசாட்சியை சாப்ளின் தொட்டுவிட்டார்’ என புகழாரம் சூட்டுகிறார்,

இதுபோலவே சாப்ளினும் மார்லன் பிராண்டாவும் நடித்த ‘ஏ கிங் இன் நியூயார்க்’ படம் குறித்து விவ ரிக்கும்போது, ‘இந்த முறை சாப்ளின் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கவில்லை; மாறாக அவர் களுடன் அறிவுபூர்வமான உரை யாடல் ஒன்றை நிகழ்த்த முயற்சித்துள் ளார்.

ஒரு கலைஞனாக அவர் எடுத்த இந்த முடிவு பாராட்டுக்குரியது. ஆனால், படம் ஒடவில்லை. மிகப்பெரிய தோல்வி. ஒருவேளை சாப்ளின் நினைத்திருந்தால் இதே கதையை வேறு விதமாக திரைக் கதை எழுதி எளிதாக பார்வையாளரை அழவும், சிரிக்கவும் வைத்திருக்கக் கூடும்.

ஆனால், பார்வையாளனின் ரசனைக்கு தீனி போடுவது மட்டும் தனது வேலையில்லை’ என சாப்ளின் உணர்ந்திருந்தார். ஆகவே, ஒரு தீவிரமான அரசியல் கட்டுரையைப் போல படத்தை உருவாக்கியிருந்தார். படம் தோல்வியடைந்தாலும் சமூக பொறுப்பு மிக்க கலைஞன் என்ற அடையாளத்தை சாப்ளின் பெற்றார். அதுதான் அவர் விரும்பியதும், என்கிறார் த்ரூஃபோ.

இவை சினிமா குறித்த பாராட்டு கட்டுரைகள் இல்லை. சர்வதேச சினிமாவைப் புரிந்துகொள்ளவும், ஒரு திரைப்படத்தின் பல்வேறு தளங்களை, கருத்தியலை அடையாளம் காணவும் உதவும் முக்கிய வழிகாட்டுதலாகும்.

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-38-தேசம்தோறும்-சினிமா/article7378065.ece

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 38: வாசிப்பு மனநிலை!

sra_2466858f.jpg
 

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-38-வாசிப்பு-மனநிலை/article7402672.ece?widget-art=four-rel

 

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 41: குற்றம் களைதல்!

sra_2474897f.jpg

துப்பறியும் கதைகளுக்கு என தனி யானதொரு வாசகர் வட்டம் இருக் கிறது. எந்த மொழியில் எழுதப்பட்டாலும் கிரைம் திரில்லர்கள் விற்பனை யில் சாதனை நிகழ்த்துகின்றன. எனக்குப் பிடித்த துப்பறியும் கதை உம்பர்தோ ஈகோ (Umberto Eco) எழுதிய ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’ (The Name of the Rose). இது சம்பிரதாயமான துப்பறியும் கதை இல்லை. மிக முக்கிய இலக்கியப் படைப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்றுவரை துப்பறியும் கதைகளுக்கு ஆதர்சம் ஆர்தர் கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளே. 56 சிறுகதைகளையும் 6 நாவல்களையும் கானன் டாயல் எழுதியிருக்கிறார். கானன் டாயல் ஒரு மருத்துவர்.

‘எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்' நாவலில் தான் ஷெர்லாக் ஹோம்ஸ் முதன்முதலில் அறிமுகமானார். அதில் டாக்டர் வாட் ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும் ‘221. பி. பேக்கர் தெரு’ என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் ஒன்றாக குடி யிருக்கிறார்கள். பின்னாளில் இவ்வீட் டில் ஷெர்லாக் ஹோம்ஸ் நிஜமாக வசிப்பதாக நினைத்துக் கொண்டு வாசகர்கள் தேடி வரத் தொடங்கினார்கள். அந்த அளவு அந்த வீடு பிரபலமானது.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நிபுணர் என்றாலும் ஜேம்ஸ்பாண்ட் போல அதிரடி வேலைகள் செய்ய மாட்டார். அழகிகளுடன் கூத்தடிக்க மாட்டார். அவருக்கு இலக்கியத்திலோ, அரசியலிலோ ஈடுபாடு கிடையாது. குற்றவியலில் அளவுக்கு அதிகமான அறிவு கொண்டவர். இங்கிலாந்தில் நடைபெற்ற அத்தனை குற்றங்களையும் ஆராய்ந்து வைத்திருப்பவர். பிரிட்டிஷ் சட்டங்கள் குறித்து நன்கு அறிந்தவர். காவல்துறை யோசிக்காத புதிய கோணத்தில் குற்றத்தை அணுகி, தீர்த்து வைக்கக்கூடியவர் ஹோம்ஸ். அவரது புத்திசாலித்தனம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தது.

துப்பறியும் கதைகளுக்கு முன்னோடி எழுத்தாளர் எட்கர் ஆலன் போ. இவர் உருவாக்கிய ‘அகஸ்டே டியூபின்’ என்ற கதாபாத்திரம்தான், புனைவில் இடம்பெற்ற முதல் துப்பறியும் நிபுணர் என்கிறார்கள்.

இவரைத் தொடர்ந்து எமீல் கபோரியூ, அகதா கிறிஸ்டி, இயான் பிளமிங், ரேமாண்ட் சாண்ட்லர், அயன் ரான்கின் ஹென்னிங் மேன்கெல், மைக்கேல் கன்னல்லி டாஷியல் ஹாமெட், எட் மக்பெய்ன், டான் பிரவுன், ஜேம்ஸ் பாட்டர்ஸன், டென்னிஸ் லெஹேன், ஜேம்ஸ் எல்ராய் என சிறந்த குற்றப் புனைவு எழுத்தாளர்கள் உலகெங்கும் உருவாகியிருக்கிறார்கள். சம காலத்தில் மிக சுவாரஸ்யமான கிரைம் நாவல்கள் ஸ்காண்டி நேவிய நாடுகளில் இருந்து எழுதப்படுகின்றன என் கிறார்கள்

தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல், பண்டித நடேச சாஸ்திரியின் ‘அற்புத குற்றங்கள்’. இதில் தானவன் என்ற கதாபாத்திரம்தான் துப்பறியும் நிபுணர். இதனை தொடர்ந்து ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் வடுவூர் துரைசாமி ஐயங்கார், முதலியோர் துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அயல்நாட்டு நாவல்களின் தழுவல்களாக இருந்தன.

அடுத்த காலகட்டத்தில் வெற்றிகர மான துப்பறியும் கதைகளை தமிழ் வாணன், மேதாவி, சிரஞ்சீவி, சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன் றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தேவ னின் ‘துப்பறியும் சாம்பு’ எனக்குப் பிடித்தமான கதாபாத்திரம்.

உலகப் புகழ் பெற்ற இயக்குநரான சத்யஜித்ரே ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ கதைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆகவே, அவர் ‘பெலுடா’ என்ற துப்பறி யும் நிபுணரை முதன்மைபடுத்தி 35 சிறு நாவல்கள் எழுதியிருக்கிறார். ‘பெலுடா கதைகள்’ தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

1833-ல் முதன்முதலாக பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியைத் தொடங்கி யவர் பிரான்சிஸ் விடோக். (Francois Vidocq). இவர் ஒரு கிரிமினல். பல முறை சிறை சென்றுவந்த குற்றவாளி. காவல்துறைக்கு உதவி செய்வதற்காக திருந்தி வாழும் குற்றவாளிகளைக் கொண்டு விடோக் துப்பறியும் நிறு வனம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிறு வனத்தின் வழியே பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகவே விடோக்கை பிரான்ஸ் காவல்துறை அதிகம் பயன்படுத்திக் கொண்டது. தொழில்முறையாக முதல் துப்பறியும் நிபுணர் விடோக் தான். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் காவல்துறை யில் இருந்து ஒய்வு பெற்ற சார் லஸ் பிரடெரிக் பீல்டு தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸின் நண் பர். இப்படித்தான் துப்பறியும் கலை தனித் தொழிலாக வளரத் தொடங்கியது,

அமெரிக்க துப்பறியும் நாவல்கள் அடைந்த வீச்சை ரஷ்ய துப்பறியும் கதைகள் அடையவில்லை. ஆனால், ரஷ்ய துப்பறியும் கதைகளுக்கு என தனித்துவமிக்க எழுத்துமுறை உண்டு.

லெவ் ஷெய்னின் எழுதிய புலனாய்வாளரின் குறிப்புகள் போன்ற புத்தகத்தை வழக்கமான துப்பறியும் கதையாக மட்டும் கருதமுடியாது. ‘ராதுகா’ பதிப்பகம் 1988-ம் ஆண்டு இதனை வெளியிட்டுள்ளது. ரஷ்ய மொழியில் இருந்து இதனை தமிழாக்கம் செய்திருப்பவர் நா.முகமது செரீபு. தற்போது இந்தப் புத்தகம் அச்சில் இல்லை. முன்பு மலிவு விலையில் 7 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் விற்கப் பட்டுள்ளது.

27 வருஷங்கள் புலனாய்வு அதிகாரி யாக பணியாற்றிய ஷெய்னின் தனது அனுபவங்களின் வழியே குற்றவாளி களின் மனநிலையை ஆராய்ச்சி செய் கிறார். தனது முன்னுரையில் ஒரு எழுத் தாளனுக்கும் புலனாய்வு அதிகாரிக்கும் இடையில் நிறைய பொதுவான அம்சங் கள் இருக்கின்றன. இருவருமே மனித வாழ்வின் சிக்கல்கள், துன்ப நிகழ்வுகளை ஆராய்பவர்கள்.

சம்பந்தபட்ட மனிதர் களின் மனோநிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள். தனது பாத்திரங்களின் ஆன்மாவுகுள் நுழைந்து அவர்களின் பலவீனங்களை, இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை, அதன் பின் னுள்ள அறியாத காரணங்களை அறிந்து கொள்பவர்கள். ஆகவே, எந்த வாய்ப்பு தன்னை புலனாய்வு அதிகாரி யாக ஆக்கியதோ, அதுவே தன்னை எழுத்தாளனாகவும் ஆக்கியது எனக் கூறுகிறார் ஷெய்னின்.

அமெரிக்க துப்பறியும் கதைகளைப் போலின்றி இதில் வரும் துப்பறியும் நிபு ணர், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி. அவர் காவல்துறையோடு இணைந்து பணியாற்றுகிறார். சட்டத்தின் துணை கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்கிறார்.

லெவ் ஷெய்னின் கதைகளின் முக் கியச் சரடு தொழிலைவிட்டு விலகிய முன் னாள் குற்றவாளிகளைக் கொண்டு துப் பறிவது. குறிப்பாக துளையிட்ட தினார் நாணயங்கள் கதையில் நடைபெற்ற நாணயக் கொள்ளையைக் கண்டுபிடிக்க அட்மிரல் நெல்சன் என்ற திருடனின் உதவியை நாடுகிறார் ஷெய்னின்.

அவன் மாஸ்கோவில் இருக்கும் அத்தனை திருடர்களையும் ஒன்று திரட்டி, வங்கி கொள்ளையைப் பற்றி தீர விசாரிக்கிறான். அவன் மூலமாகவே முக்கியமான தகவல் கிடைக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படம் போல சாகசமும் திருப்பமும் நிரம்பிய இக்கதையின் ஊடாக பூட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் எப்படி தொழில்போட்டியில் ஈடுபடுகின் றன? இந்த நிறுவனங்களைத் தோற் கடிக்க ஒரு திருடன் எந்த பூட்டாக இருந்தாலும் எப்படி திறந்து காட்டுகிறான் என்ற விவரங்கள் ஊடாடுகின்றன.

முடிவில் அந்த திருடனுக்கு தங்கள் பூட்டு கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை தர நிறுவனம் முடிவுக்கு வருகிறது.

ரஷ்ய சமூகத்தில் அன்று நிலவிய சூதாட்டம், வைரக் கடத்தல், பணமோசடி போன்றவை எதனால் உருவாகின? எப்படி சட்டத்தின் துணை கொண்டு அதை ஒடுக்கினார்கள் என்பது குறித்த விளக்கங்களை தருவது ஷெய்னின் தனிச் சிறப்பு!

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-41-குற்றம்-களைதல்/article7428906.ece

 

  • தொடங்கியவர்

வீடில்லா புத்தகங்கள் 42: பொம்மைகள் வளர்வதில்லை!

sra_2483300f.jpg
 

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. சாதாரண எளிய நிகழ்வைக் கூட சுவாரஸ்யமான கதையாக்கலாம். நான் பள்ளியில் படிக்கும்போது சௌந்தரபாண்டியன் என்ற ஆசிரியர், ‘பெயர் மறந்து போன ஈ’ என்ற கதையைப் பாடலுடன் சொல்வார். இன்றும் அந்தக் கதை பசுமையாக மனதில் நிற்கிறது

சிறுவர்களுக்குக் கதை சொல்லும் முகாம் ஒன்றில், ‘பினாச்சியோ’ கதையை அவர்களுக்கு சொன்னேன். ‘பொய் சொன்னால் பினாச்சியோவின் மூக்கு வளர்ந்துவிடும்’ என்பதை சிறார்கள் ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டார்கள். முடிவில் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவன் எழுந்து கேட்டான்: ‘‘பொய் சொன்னா மூக்கு வளர்ந்துரும்னா… பொய் சொல்றதைக் கேட்டா காதும் வளர்ந்துருமா சார்?’’

இதுதான் சிறார்களின் கற்பனைத் திறன். அவர்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றைக் கற்பனை செய்து கொள்ளக்கூடியவர்கள். உடனே, அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். மறுகதை புனைவார்கள். கதை வழி யாக சிறுவர்கள் நிறையக் கற்றுக்கொள் கிறார்கள்.

அந்தச் சிறுவர்களிடத்தில் ‘‘யாருக்கா வது ‘மூக்கு’ பற்றி வேறு ஏதாவது கதைத் தெரியுமா?’’ எனக் கேட்டேன். சங்கர் என்ற 10 வயது சிறுவன் எழுந்து, கதைச் சொல்லத் தொடங்கினான்.

‘‘ஒரு காலத்துல மனுசங்க எல்லாருக் கும் ரெண்டு மூக்கு இருந்தது. ஒரு மூக்கு நல்ல வாசனைக்கு; இன்னொரு மூக்கு கெட்ட வாசனைக்கு. நல்ல வாசனை யைச் சுவாசித்த மூக்கு அழகா இருந்தது. அது நல்ல வாசனையை நுகர்றதாலே பளபளன்னு மினுங்கிக்கிட்டே இருந்துச்சி. கெட்ட வாசத்தைச் சுவா சித்த மூக்கு அசிங்கமா இருந்ததோட, அது நாளுக்கு நாள் சுருங்கிட்டே வந்திச்சு.

ஒருநாள் இந்த ரெண்டு மூக்குக்கும் இடையிலே ‘யார் பெரிய ஆள்’னு சண்டை வந்துட்டு. உடனே ரெண்டும் ‘நாங்க இனிமே வேலை செய்ய மாட்டோம்’னு வேலையை நிறுத்திகிடுச்சி. இதனால மனுசங்களுக்கு எந்த வாசனையும் தெரியாமப்போயிட்டு. அவங்கள்லாம் கடவுள்கிட்டப் போய் முறையிட்டாங்க. உடனே கடவுள் வந்து, ‘உங்க சண்டையால மனுசங்க ரொம்பக் கஷ்டப்படுறாங்க, விட்டு கொடுத்துப் போங்க’ன்னு சொன்னார்.

கடவுள் சொன்னதை ரெண்டு மூக்கும் கேட்கவே இல்லை. உடனே கடவுள் ‘இனிமே மனுசனுக்கு ஒரே மூக்குதான். அதுலதான் நல்லதும் கெட் டதும் நுகரணும்னு’ சொல்லி ஒரு மூக்கை கட் பண்ணிட்டாராம். அப்படித்தான் மனு சனுக்கு ஒரு மூக்கு வந்துச்சி’’ என்று கதையை முடித்தான் அந்தச் சிறுவன்.

‘‘உனக்கு இந்தக் கதை எப்படித் தெரியும்?’’ எனக் கேட்டேன்.

‘‘நானாதான் சொல்றேன் சார்…’’ என்றான் சங்கர்.

இரண்டு மூக்குள்ள மனிதர்களைப் பற்றி 10 வயது சங்கர் கற்பனை செய்து கதையாகச் சொன்னது சந்தோஷமாக இருந்தது.

மூக்கைப் பற்றி எத்தனையோ கதை கள் இருக்கின்றன. ‘உலகப் புகழ் பெற்ற மூக்கு’ என ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார் வைக்கம் முகமது பஷீர். தனது மூக்கைத் தொலைத்த ஒருவனைப் பற்றி ரஷ்ய எழுத்தாளர் கோகல் ஒரு கதை எழுதியிருக்கிறார். மூக்கில்லாத மனிதர்களைப் பற்றி விஞ்ஞானப் புனைகதை எழுதியிருக் கிறார் ஆண்ட்ரூ கெவின். இத்தனை யிலும் சிறப்பானது பினாச்சியோதான்!

இத்தாலிய எழுத்தாளர் கார்லோ கொலாடியால் எழுதப்பட்ட நாவல் ‘பினாச்சியோவின் சாகசங்கள்’ ( The Adventures of Pinocchio). 1882-ல் இந்தக் கதையின் ஒரு பகுதி தொடர்கதையாக வெளிவந்தது. பின்புதான் முழு நாவ லாக உருப்பெற்றது.

கொலாடியின் எழுத்துப் பணி பிரெஞ்சு மொழியில் இருந்து தேவதைக் கதைகளை மொழிபெயர்ப்புச் செய் வதில் தொடங்கியது. பின்பு அந்த அனுபவத்தில் இருந்து, தானே எழுதத் தொடங்கினார், அப்படி உருவானதே ‘பினாச்சியோ’.

இத்தாலியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1892-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ‘பாவை பதிப்பகம்’ இதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. இதனை சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் யூமா.வாசுகி.

தச்சரான கெபட்டோ ஒருமரக் கட் டையை வாங்கி வந்து, பொம்மலாட்ட பொம்மை ஒன்றை செதுக்க முயற்சிக் கிறார். அப்போது அந்தப் பொம்மைக்கு உயிர் வந்து, மனிதர்களைப் போலவே பேசத் தொடங்குகிறது. ஆச்சரியமடைந்த கெபட்டோ, அதற்கு `பினாச்சியோ’ எனப் பெயரிடுகிறார்.

பினாச்சியோ ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் அதன் மூக்கு நீண்டுவிட ஆரம்பிக்கிறது. சில நேரம் மிக நீளமாகிப் போன தனது மூக்கை சரிசெய்வதற்காக மரங்கொத்திப் பறவைகளை உதவிக்கு அழைக்க வேண்டியதாகிறது.

‘பினாச்சியோ’ நாவல் வெறும் பொழுதுபோக்குக் கதை கிடையாது. பெற்றோரின் சொற்படி நடக்காத பிள்ளை கள் என்ன ஆகிறார்கள் என்பதைப் பினாச்சியோவின் வழியே காட்டுகிறார் கொலோடி.

முதன்முறையாக ஒரு பாச்சைதான் பினாச்சியோவுக்கு அறிவுரை சொல் கிறது. அது, ‘பெற்றோருக்குக் கீழ்படியாத வர்கள் ஒருபோதும் உருப்பட மாட் டார்கள். அவர்களால் முன்னேறவே முடியாது’ என உறுதியாகக் கூறுகிறது.

படிக்க விருப்பமில்லாமல், விளை யாட்டுதனமாக ஊர் சுற்றவே பினாச்சியோ முயற்சிக்கிறான். ‘ஊர் சுற்றும்போது சந்தோஷமாக இருக் கலாம். ஆனால், எதிர்காலத்தில் துன்பப் பட வேண்டியிருக்கும். படிக்காமல் ஊர் சுற்றுகிறவன் எதிர்காலத்தில் குற்றவாளி யாகி சிறைக்குப் போவான். அல்லது நோயாளியாகி மருத்துவமனையில் கிடப்பான்’ என்கிறது பாச்சை.

வீட்டைவிட்டு வெளியேறிப் போகும் பினாச்சியோவை, ஒரு நரியும் பூனை யும் இணைந்து ஏமாற்றுகின்றன. தங்க நாணயங்கள் தருவதாக ஏமாற்றும் நரியும் பூனையும், ‘‘நாங்கள் மக்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறோம். அதற் காகவே எங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறோம்’’ என்று குறிப் பிடுகின்றன. மோசடி பேர்வழிகள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலதான் இருக்கிறார்கள்.

‘ஒரே நாளில் யாராவது உன்னைப் பணக்காரன் ஆக்கிவிடுவேன்’ என்று சொன்னால் நம்பாதே. அது மோசடி!’ என்று பினாச்சியோவுக்குக் கூறப் படும் எச்சரிக்கை, நம் அனைவருக்கு மானதுதான்.

நாவலில் ஓர் இடத்தில், தனது குளி ராடைகளை விற்றுப் பாடப் புத்தகங் களை வாங்கித் தந்த கெபட்டோவைப் பற்றி நினைக்கும் பினாச்சியோ, ‘தந்தை களால்தான் மகத்தான தியாகங்களைச் செய்ய முடிகிறது’ என நெகிழ்ந்து கூறுகிறான்.

விநோதமான ஒரு தீவுக்குப் போகி றான் பினாச்சியோ. அங்கே சாபம் காரணமாக மனிதர்கள் கழுதைகளாக உருமாறியிருக்கிறார்கள். சந்தோஷத் தீவில் சுற்றியலைந்து அவன் பெறும் அனுபவம் வியப்பானது.

கழுதையும், நாயும், நீலக் கூந்தல் தேவதையும் கூறும் அறிவுரைகள் மறக்கமுடியாதவை.

‘பொய்க்குச் சிறிய கால்களே உள் ளன; அதிகத் தூரம் ஓட முடியாது’, ‘சோம் பேறித்தனம் என்பது மிகவும் மோசமான நோய்; அதைச் சிறுவயதிலேயே குணப் படுத்திவிட வேண்டும். இல்லையென் றால் வாழ்வை நாசமாக்கிவிடும்’, ‘நாம் இந்த உலகத்துக்கு என்ன செய் கிறோமோ, அது மட்டுமே நமக்குத் திரும்பக் கிடைக்கும்’. இப்படி அடிக் கோடிட்டு வாசிக்க வேண்டிய அற்புத மான வரிகள் நிறைய இதில் இருக்கின்றன.

நாவலில் வரும் நீலக் கூந்தல் தேவதை சொல்கிறாள்: ‘‘பொம்மைகள் வளர்வதில்லை; அவை பொம்மை களாகப் பிறந்து, பொம்மைகளாக வாழ்வை முடித்துக் கொள்கின்றன!’’

பினாச்சியோ அதைச் சரியாக உணர்ந்துகொள்கிறான். ஆகவே, முடிவில் மனிதனாக உருமாறுகிறான்.

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லா-புத்தகங்கள்-42-பொம்மைகள்-வளர்வதில்லை/article7455644.ece?widget-art=four-rel

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லாப் புத்தகங்கள் 43: கருப்பு - வெள்ளை நினைவுகள்!

book_2491525h.jpg

கடந்த காலத்துக்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை. ஒரு கருப்பு - வெள்ளை புகைப்படம் போதும். இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த மெட்ராஸ், மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களின் மிகப் பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் புகைப்படங்களை எடுத் தவர் லினியெஸ் டிரைப். (Linnaeus Tripe) இவர் ஒரு பிரிட் டிஷ் புகைப்படக் கலைஞர். 1838-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றியவர். லண்டனில் புகைப்படக் கலையைக் கற்ற இவர், தென்னிந்தியாவில் சுற்றியலைந்து நிறையப் புகைப் படங்களை எடுத்திருக்கிறார்.

1857-ம் ஆண்டு, மதராஸ் அரசாங்கம் இவரை அதிகாரபூர்வ புகைப்பட நிபுணராக நியமித்தது. பொறியியல், விவசாயம், நுண் கலைகள், நிர்வாகம் சார்ந்த அரசுத் திட்டங்களுக்கு உதவி செய்வதற்காக இவர் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

1857-ல் மதராஸ் போட்டோ கிராபிக் சொசைட்டி தொடங்கப்பட் டது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர் அலெக்சாண் டர் ஹண்டர். இந்த சொசைட்டியின் தலைவராக இருந்தவர் வால்டர் எலியட்.

பெசண்ட் நகர் கடற்கரைக்கு ‘எலியட்ஸ் பீச்’ என்று இவரது பெயரைத்தான் வைத்துள்ளனர். வால்டர் எலியட்டுக்கு தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட ஒன்பது மொழிகள் தெரியும். சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், சென்னை அரசாங்கத்தின் கவுன்சில் மெம்பராகவும் பதவி வகித்தவர்.

மதராஸ் போட்டோகிராபிக் சொசைட்டி ஆண்டுதோறும் புகைப் படக் கண்காட்சிகளை நடத்துவது வழக்கம். அதில் லினியெஸ் டிரைப் எடுத்த தமிழகத்தின் கலைக் கோயில்கள், அன்றாடக் காட்சி கள், தொழில்சார்ந்தப் பதிவுகளைக் கொண்ட 50 புகைப்படங்கள் சிறப்பு கண்காட்சியாக வைக்கப் பட்டுள்ளன.

லினியெஸ் டிரைப்பின் உதவி யாளராக இருந்த சி.அய்யாச்சாமி யும் சிறந்த புகைப்படக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் அவர் எடுத்த புகைப் படங்கள் எதுவுமே பாதுகாக்கப்பட வில்லை என்பதுதான் துயரம்.

100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது? ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி பயணம் போனார்கள்? ஏழை, எளிய மக்கள் என்ன சாப்பிட்டார்கள்? கோயில் விழாக்கள் எப்படி நடந் தேறின? விவசாயிகள், கலைஞர் கள், சாமானிய மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்… என்பதைப் பற்றி எல்லாம் அறிந்துகொள்ள விரும் புகிற வர்கள் அவசியம் படிக்க வேண் டிய புத்தகம், ‘பியர் லோட்டி’ எழுதிய ‘ஆங்கிலேயர்கள் இல் லாத இந்தியா’. சந்தியா பதிப் பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தி ருப்பவர் சி.எஸ்.வெங்கடேஸ் வரன்.

பிரெஞ்சு நாவலாசிரியரான பியர் லோட்டியின் இயற்பெயர் ஜீலியன் வியாத். பிரெஞ்சு கடற்படையில் பணிபுரிந்த இவர், 1899-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். 2 ஆண்டுகள் இந்தியாவில் சுற்றித் திரிந்த தனது அனுபவங்களை துல்லியமாக ஒரு நாட்குறிப்பைப் போல பிரெஞ்சில் எழுதி வெளியிட்டார்.

1903-ம் ஆண்டு India என்ற இந்த புத்தகம் வெளியானது. கடல் வழியாகவும், தரை வழியாகவும் ரயில் மூலமும் இந்தியாவுக்குள் சுற்றியலைந்த பியர் லோட்டியின் பயணம், பாளையங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் செல்வதில் தொடங்கி ராஜஸ்தான், பனாரஸ் வரை நீண்டது.

ஒரு நாவலாசிரியர் என்பதால், தான் சந்தித்த மனிதர்களையும் இடங்களையும் நிகழ்வுகளையும் மிக துல்லியமாகத் எழுதியிருக் கிறார் பியர் லோட்டி. கவித் துவமான வரிகளும், உணர்ச்சி பூர்வமான பதிவும் இதை வெறும் வரலாற்றுக் குறிப் பாக மட்டுமின்றி, அழுத்தமான இலக்கியப் பதிவாகவும் மாற்றிவிடுகிறது.

திருவாங்கூர் மகாராஜாவின் விருந்தினராக அழைக்கபட்ட பியர் லோட்டி, பாளையங்கோட்டையில் இருந்து மாட்டு வண்டி மூலம் திருவனந்தபுரம் பயணம் செய்த காட்சியை வாசிக்கும்போது கண் முன்னே திரைப்படம் பார்ப்பது போலிருக்கிறது.

‘பாளையங்கோட்டையில் இருந்த விடுதி ஒன்றில் தங்கி யிருந்தேன். திருவாங்கூர் அழைத் துச் செல்ல இரண்டு வண்டிகள் வந்து நின்றன. ஒரு வண்டியில் இருந்த வெண்ணிறக் காளை களின் கொம்புகளில் நீலவண் ணம் அடிக்கபட்டிருந்தது. மாடு களுக்கு மூக்கணாங்கயிறு இடப்பட்டிருந்தது. வண்டி ஓட்டு பவன் இடுப்பில் சிறு துண்டு ஒன்றை மட்டுமே கட்டியிருந்தான். சர்க்கஸ் கலைஞனைப் போல அவன் வண்டியின் நுகத்தடி யில் உட்கார்ந்தபடியே வண்டி ஓட்டினான். பாளையங்கோட் டையில் இருந்து வண்டி கிளம்பி யது. வழி முழுவதும் மரங்கள். நிழல் நீண்ட பாதைகள்.

தொலைவில் நான் கண்ட விவசாயிகள் பெரும்பாலும் வெற்றுடம்புடன் இருந்தார்கள். அவர்கள் இடுப்பில் கோவணம் கட்டியிருந்தார்கள். சிலர் தலையில் தலைப்பாகை கட்டியிருந்தார்கள்.

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-43-கருப்பு-வெள்ளை-நினைவுகள்/article7478235.ece?widget-art=four-rel

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீடில்லாப் புத்தகங்கள் 44: லோட்டியின் பயணம்!

பியர் லோட்டி

பியர் லோட்டி
 

கடந்த வாரம் பிரெஞ்சு நாவலாசிரி யர் பியர் லோட்டி எழுதிய ‘ஆங்கிலேயர் இல்லாத இந்தியா’ புத்தகத்தைப் பற்றியும், அதில் தமிழகத்தில் பல இடங்களுக்கு அவர் பயணித்து எழுதிய குறிப்புகளையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி…

‘‘நாங்கள் நாகர்கோவில் எனும் கிராமத்தை வந்தடைந்தபோது சிலர் எனக்கு சல்யூட் அடித்து வரவேற்றனர். அங்கே நான் தங்கி இரவில் மீண்டும் பயணிப்பதாக ஏற்பாடு. அங்கே சந்தித்த ஆண்கள் வெண்கல நிறத்துடன் பொருத்தமான மீசையுடன் இருந்தார் கள். ஆனால், பெண்கள் அழகுடையவர் களாக தெரியவில்லை. வயதுக்கு அதிக மான முதிர்ச்சித் தோற்றம் கொண்டிருப் பதைப் போல தெரிந்தார்கள். பெரிய உதடுகள் கொண்டிருந்தார்கள். காது களில் தங்க நகை அணிந்திருந்தார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தையொட்டியே எங்கள் பயணம் நீண்டது’’ என்று எழுதிச் செல்கிறார்.

பியர் லோட்டியின் ‘ஆங்கிலேயர் இல்லாத இந்தியா’ புத்தகத்தின் தனிச் சிறப்பே நுட்பமான விவரணைகள்தான். திருச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது மலைக்கோயிலை வியந்து எழுதியிருக் கிறார். ரங்கத்துக்கு அவர் போனபோது அங்கே தேர்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.

திருவிழாவுக்காக இரவில் வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்கள், தேரின் அலங்கார வேலைப்பாடுகள், பந்தம் பிடிப்பவர்கள், வடம் பிடிக்கக் காத் திருக்கும் பக்தர்கள், ஆடல்பாடல் இசை நிகழ்வுகள், யானைகளின் அணிவகுப்பு, தேர் கிளம்பும் ஆரவாரம், ஆடி அசைந்து செல்லும் தேரின் அழகு, வானில் வட்ட மிடும் காகம், கிளிகள் என ஓர் ஆவணப் படத்தைப் போல துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் பியர் லோட்டி

இதுபோலவே மதுரையின் வணிகவீதி கள், தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோயில், அதன் மதிப்புமிக்க வைர, வைடூரிய, தங்க நகைகளைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.

புகழ்பெற்ற நாடக நடிகையும், நடனக் காரருமான பாலாமணியின் நாடகத்தை தான் கண்டு ரசித்ததை லோட்டி குறிப் பிடுகிறார். நாடக உலகின் ராணியாக கொண்டாடப்படும் பாலாமணி அம்மாள் தனது சகோதரியுடன் இணைந்து நடத் திய ‘பாலாமணி அம்மாள் நாடக கம் பெனி’ முழுவதும் பெண்களால் நடத்தப் பட்டது. பாலாமணி அம்மாளின் நாடகத் தைப் பார்ப்பதற்காகவே அந்த நாட் களில் சிறப்பு ரயில் விடப்பட்டதையும், பாலாமணியின் நாடகம் சிலிர்ப் பூட்டு வதாக அமைந்திருந்ததையும் ரசித்து எழுதியிருக்கிறார் லோட்டி.

ஐரோப்பிய பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஓர் அநாதை இல்லம் தொடங்கு வதற்காக நன்கொடை கேட்டு வந்த போது, பாலாமணி அம்மாள் ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்த பெருந்தன்மை குறித்து எழுதியதோடு, பாலாமணியின் வீட்டுக் கதவுகள் கஷ்டப்படுகிறவர்களுக்காக எப்போதும் திறந்தே இருந்தன என்றும் பெருமையாக குறிப்பிடுகிறார்.

லோட்டிக்குள் ஒரு கவிஞர் ஒளிந் திருக்கிறார் என்பதை அவரது விவரிப்பு களில் அடையாளம் காண முடிகிறது. ‘‘பயண வழியில் தென்படும் ஆலமரங் களின் விழுதுகள் யானையின் துதிக்கைப் போலவே தென்படுகிறது. உண்மையில் இயற்கைக்கு யானையின் வடிவம் மிகவும் விருப்பமானது போலும்; இயற்கை படைத்தவற்றில் எல்லாம் ஏதாவது ஒரு கோணத்தில் யானை தென்படுவது போலவே உள்ளது’’ என்கிறார் லோட்டி.

பாண்டிச்சேரிக்கு வருகை தந்த பியர் லோட்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்தது போன்ற உணர்வை அடைவதாக கூறுகிறார். பிரெஞ்சு கலாச் சாரத்தின் அடையாளமாக உள்ள பாண்டிச்சேரி வீதிகளின் பெயர்கள், பெரிய பெரிய வீடுகள், பிரெஞ்சு உணவு வகைகள், இசை, மற்றும் நடனவிருந்து கள் அவருக்கு சொந்த ஊரின் உணர்வை ஏற்படுத்தியதாம்.

ஹைதராபாத் நகருக்குச் சென்ற பியர் லோட்டி ‘‘அது ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் வரும் பாக்தாத் நகரம் போலவே இருந்தது. அங்கே நிஜாம் வருகை தரப் போவதையொட்டி கைகளில பலவிதமான பறவைகளுடன் ஆட்கள் உலா வந்தனர். முக்காடு அணிந்த பெண்களும், ஆபரணங்கள் விற்கும் கடைகளும், ரோஜாப் பூ விற்பவர்களும், விசித்திரமான தலைப்பாகை அணிந்த ஆண்களும், அரேபிய வணிகர்களும் காணப்பட்டனர்’’ என்று பதிவு செய்துள்ளார்.

வட மாநிலங்களை நோக்கி செல்லும் போது பஞ்சத்தால் பாதிக்கபட்ட மக் களைக் கண்ட லோட்டியின் அனுபவம் நெஞ்சை உலுக்கக்கூடியது. ‘‘வழியெல் லாம் எலும்புக்கூடுகளாக நிற்கும் ஏழைக் குழந்தைகள் வறுமைத் துயரத்துடன் ஏதாவது ஒரு பாடலை பாடவோ, முன கவோ செய்கிறார்கள். அவர்கள் உடலில் சதை என்பதே இல்லை. தோலினால் மூடப்பட்ட எலும்புக்கூடாகவே காட்சி யளித்தார்கள். அவர்களது ஒட்டிய வயிறு உள் உறுப்புகளே இல்லையோ எனும் படியாக இருந்தது. அவர்கள் உதடுகளி லும் கண்களிலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கொடும்பசியால் வாடிக் கொண்டிருந்தனர்.

ரயில் வண்டி கடந்து போகும்போது ஏழைகள் கையேந்தியபடியே ‘மகா ராஜாவே… மகாராஜாவே…’ எனக் கதறிய படி பின்னால் ஒடினார்கள். சிலர் ரயிலில் இருந்து சில்லறைகளைக் குழந்தைகளை நோக்கி வீசினார்கள். பஞ்சத்தால் வாடும் மக்களின் கூக்குர லைக் கேட்கும்போது மனம் நடுங்கியது. ஒரு கடைக்காரன் இட்லி தின்று கொண் டிருக்கும்போது, இறந்து கொண்டிருக் கும் குழந்தையை கையில் ஏந்தியபடியே ஓர் ஏழைப் பெண் அவனிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஆள் அவளைப் பற்றி கவலையின்றி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந் தான். அவள் பசி தாங்கமுடியாமல் பெருங்குரலில் கத்தினாள். எவரும் தனக்கு உணவளிக்க மாட்டார்கள் என்ற இயலாமையை வெளிப்படுத்துவது போல் இருந்தது அவளின் குரல்’’ என்கிறார் லோட்டி.

குவாலியர் நகருக்குச் சென்ற லோட்டி அதை ‘கற்சிற்பங்களின் நகரம்’ எனக் கூறுகிறார். வீடுகள், மதில் சுவர்கள் எங்கும் சிற்பங்கள் காணப்படுவதாக கூறுகிறார். ‘‘ஓவியங்களும் சிற்பங்களும் ஒளிரும் கலைநகரமாக குவாலியர் விளங்குகிறது. வண்ணங்கள் மீது குவாலியர் மக்களுக்கு இருக்கும் மோகம் வலுவானது. துணிகளில் வண்ணம் தீட்டும் தொழில் பல தெருக்களில் நடை பெறுகிறது. பேரழகுமிக்க அரண்மனை யும் அலங்காரமான வளைவுகளும் குவா லியர் நகருக்கு அழகு சேர்க்கின்றன…’’ என லோட்டி எழுதியுள்ளார்.

உதய்பூர், பனாரஸ் எனச் சுற்றி யலைந்த பியர் லோட்டி இந்தியர்களின் ஆன்மிகத் தேடுதலை வியந்து பாராட்டு கிறார். குறிப்பாக, காசியின் படித்துறை யில் தான் சந்தித்த சாதுக்களைப் பற்றியும் அவர்கள் போதித்த ஞானம் குறித்தும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்.

லோட்டி வெறும் பயணி மட்டுமில்லை; அவர் ஒரு காதல் மன்னன். சாரா பென்ஹார்ட் என்ற நடிகையை அவர் காதலிக்க விரும்பினார். அதற்காக அவர் தன்னை ஒரு பெர்சிய கம்பளத்தினுள் சுருட்டிக் கொண்டு அந்தக் கம்பளத்தைப் பரிசாகக் கொண்டுபோய் சாராவிடம் அளிக்கும்படியாக கூறினார். சாரா கம்பளத்தைப் பிரித்து உருட்டியபோது அதில் இருந்து லோட்டி வெளிப்பட்டார். அந்த வேடிக்கைக்காகவே அவரை சாரா காதலிக்கத் தொடங்கினார்.

ரோஸ்போர்டில் இருந்த தனது வீட்டை யொட்டி புது வீடு ஒன்றை விலைக்கு வாங் கிய லோட்டி, தான் பயணம் செல்லும் நாடுகளில் இருந்து கிடைத்த கலைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட விலங்கு கள், நகைகள் போன்ற அரிய சேமிப்பு களைப் பாதுகாத்து வந்தார். அந்த வீடு தற்போது மியூஸியமாக மாற்றப் பட்டுள்ளது.

116 ஆண்டுகளுக்கு முன்பாக பியர் லோட்டி கண்ட தமிழகத்தை இந்தப் புத்தகத்தில் வாசிக்கும்போது ‘இன்று நாம் எதை இழந்திருக்கிறோம்? எதில் வளர்ந்திருக்கிறோம்…’ என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காகவே லோட்டியை நாம் பாராட்ட வேண்டும்!

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-44-லோட்டியின்-பயணம்/article7506916.ece?widget-art=four-rel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.