Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஈழத்தமிழர் அரசியலில் தாக்கத்தைச் செலுத்துமா? - முத்துக்குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஈழத்தமிழர் அரசியலில் தாக்கத்தைச் செலுத்துமா? - முத்துக்குமார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடச் சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அவர் கர்நாடக சிறையிலும் அடைக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிலும், தனியொரு நபரின் நிர்வாகமே இருந்த நிலையிலும், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் கட்சி திணறிக்கொண்டிருக்கின்றது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசி பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் புகைப்படத்தினை கையிலேந்தியபடி கண்ணீர்விட்டவாறு பதவியேற்றார். ஏனைய பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் கண்ணீருடனேயே பதவியேற்றனர். சிலர் கதறியழுதனர். நிறுவனப்பலம் இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்காலத்தில் எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனால் ஏற்படப்போகின்ற விளைவுகளும் அதிகமாக இருக்கும் போலவே தெரிகின்றது. இவற்றை மூன்று கோணங்களில் பார்க்கமுடியும். ஒன்று சட்டம், நீதி என்ற கோணத்தில் பார்ப்பது. இரண்டாவது இந்தியாவில் நிலவும் அரசியல் கோணத்திலிருந்து பார்ப்பது. மூன்றாவது ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து பார்ப்பது.

சட்டம், நீதி என்ற கோணத்திலிருந்து பார்க்கும்போது ஊழல் நடந்தது என்பது உண்மை. அதற்கான தண்டனையும் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் இந்தளவு வலுவான தண்டனை வழங்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி சட்டநிபுணர்கள் மத்தியிலும், அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மூத்த சட்டவல்லுனரான ராம் ஜெத்மலானி இது முற்றிலும் பொருத்தமற்ற தண்டனை எனக் கூறியிருக்கின்றார். ஜெயலலிதாவின் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் வேண்டுமானால் சந்தோசமடையலாம், ஆனால் நீதி தவறானது எனக் கூறியிருக்கின்றார்.

இந்திய நீதித்துறை, இலங்கை நீதித்துறையுடன் ஒப்பிடும் போது சற்றுச் சுதந்திரமானது என்பது உண்மைதான். அதற்காக முற்றிலும் அரசியல் கலப்பற்றது எனக் கூறிவிட முடியாது. நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தபோது விசாரணைகள் ஒழுங்காக நடந்ததெனக் கூறமுடியாது. இதற்காகவே அமெரிக்கா அவரது விசாவினையும் அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது இரத்துச் செய்திருந்தது. ராஜீவ் காந்தி தொடர்பான போபர்ஸ் ஊழல் இதுவரை விசாரணைக்கே வரவில்லை. பாரதீய ஜனதா கட்சித் தலைவராக இருந்த ஒருவர் இலஞ்சம் வாங்கியதை இணையத்தளமொன்று நேரடியாக ஒளிபரப்பியிருந்தது. அது தொடர்பாக பெரிய விசாரணைகள் எதுவும் நடக்கவில்லை. இறுக்கமான நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் நடக்கும்போது மட்டுமே இவ்வாறான குற்றவாளிகள் தண்டனையைப் பெற்றுக்கொள்வர். ஏனைய நீதிபதிகள் விசாரணைகளை நடாத்தும் போது பலர் தப்பிவிடுகின்றனர். உச்சநீதிமன்றமும் அரசியல் அழுத்தங்கள் வரும்போது உண்மையான நீதி வழங்குவதில் தயக்கம் காட்டியே வந்திருக்கின்றது.

ஜெயலலிதா முன்னரும் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு பதவி பறிபோய் பின்னர் பதவியைப் பெற்றிருக்கின்றார். மேன்முறையீடு செய்தபின் அவர் பிணையில் வெளிவரமுடியும். மேன்முறையீடு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும்போது அன்றைய அரசியல் தீர்ப்பினைத் தீர்மானிக்கலாம். இந்தியாவில் ஊழல் செய்யாத அரசியல் தலைவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஊழலினால் பெறப்படும் பணத்தையே கட்சியின் முதலீடாக பல கட்சிகள் நம்பியுள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல தென்னாசியாவின் பல நாடுகளில் நடைபெறுகின்ற ஒன்றுதான். இலங்கையில் இது தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெறுமாயின் அரசாங்க கட்சியில் உள்ள பலர் சிறையில் இருக்கவேண்டிய நிலையே ஏற்படும். இந்தியாவில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளில் பலர் தப்பிவிடுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் அகப்படுகின்றனர். அவ்வாறு அகப்பட்டவர்களில் ஒருவராக ஜெயலலிதாவைக் கூறலாம்.

இரண்டாவது, இந்தியாவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல். அங்கு மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத முக்கிய மாநில அரசின் தலைவராக ஜெயலலிதா விளங்குகின்றார். பல விடயங்களில் நரேந்திமோடி அரசாங்கத்திற்கு சகிக்கமுடியாத ஒருவராக அவர் இருக்கின்றார். ஆரம்பத்தில் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது அவருக்கும், ஜெயலலிதாவிற்கும் நல்லுறவு இருந்தது. பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவும் தயாரான போது பகைமை வளரத் தொடங்கியது.

G.S.T என அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை மோடி அரசாங்கம் கொண்டு வர முனைந்தபோது ஜெயலலிதா அதைக் கடுமையாக எதிர்த்தார். அதனைக் கொண்டுவருவதாயின் மாநில அரசிற்கு இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கூறினார். மாநிலங்களுக்கிடையிலான வர்த்தகம் மாநிலத்திடமே இருக்கவேண்டும் என்றார். தனது இந்த நிலைப்பாடுகளுக்கு ஏனைய மாநிலங்களின் முதலமைச்சர்களினதும் ஆதரவினைக் கோரி அவர்களையும் இணைக்க முற்பட்டார். இலங்கைத் தமிழர் விவகாரத்திலும், தமிழக மீனவர் பிரச்சினையிலும் உறுதியான நிலைப்பாட்டிலிருந்தார். இவையெல்லாம் மோடி அரசாங்கத்திற்கு பெரும் தொல்லைகளாக இருந்தன. ஜெயலலிதா வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என மோடி கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கின்றார். எனவே ஜெயலலிதாவை சற்று அடக்கிவைத்திருக்க மோடியும் முனைந்திருக்கின்றார் போலவே தெரிகின்றது.

மூன்றாவது, ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து பார்க்கும் போது ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பும், நடைமுறை அரசியலிலிருந்து அவர் விலக்கப்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு மிகுந்த பாதிப்பினைத் தரக்கூடும். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக அவர் விரும்பியோ, விரும்பாமலோ உறுதியான நிலைப்பாடுகளை முன்வைத்தார். சட்டசபையிலும் அவற்றைத் தீர்மானங்களாக எடுத்து, தமிழகமக்களின் பொதுக் கருத்தாக்கினார்.

தமிழர் விவகாரம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வேண்டும். சர்வதேச விசாரணையாளர்கள் இந்தியா வர அனுமதி வழங்கவேண்டும், ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என வலுவான தீர்மானங்களை எடுத்து, இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நெளியவைத்தார்.

சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன் போன்றோரை ஜெயலலிதாவின் தீர்மானங்களுக்கு எதிராக புதுடில்லி கருத்துக்கூற வைத்தபோதும் தீர்மானங்களை நீர்த்துப்போகச்செய்ய முடியவில்லை. 13வது திருத்தத்திற்குள் தமிழர் அரசியலை முடக்கநினைத்த புதுடில்லிக்கு ஜெயலலிதாவின் அதிரடித் தீர்மானங்கள் பெரிய சாட்டை அடிகள் தான்.

மோடி அரசாங்கம் ஜெயலலிதாவின் இந்த வலுவான தீர்மானங்களினால் இலங்கை விடயத்தில் தான் விரும்பியதைச் செய்யமுடியாமல் திணறுகிறது. ஜெயலலிதாவை சிறையில் அடைத்துவைத்திருப்பதன் மூலம் அல்லது மறைமுக நிபந்தனைகளுடன் வெளியே வரச் செய்வதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதாவின் அழுத்தங்களை நீர்த்துப்போகச் செய்ய புதுடில்லி முனையலாம்.

தமிழ்த்தேசிய அரசியல் அகநிலையிலும், புறநிலையிலும் தேக்கநிலைக்குத் தள்ளப்படுகின்ற இன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தத் தேக்கநிலையை மேலும் விரிவாக்கலாம். இந்தியாவும், மேற்குலகும் இவற்றிற்குப் பின்னால் இழுபட்டுச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது விரும்புவதும் இதைத்தான்.

தமிழ்த்தேசிய சக்திகள் இந்த இருண்ட சூழலிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது பற்றி சிந்திப்பது நல்லது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=f2cb1e75-8cf8-4e7f-920f-c195a2ed8385

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.