Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல....

19 அக்டோபர் 2014

"ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை"

n.kuru1_CI.jpg

ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும் விடையத்தைத்தான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்

தமிழ் ஊடகத்துறையில் இருப்பவர்கள் எல்லோருமே இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்களா என்ற கேள்வியும் என்னுள் அடிக்கடி எழுவதுண்டு. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட இன்னமும் தனது அரசியல் சமூக பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வரும் இனம் ஒன்றினுள் ஊடக தர்மத்தைப் பேணிக்கொண்டு ஊடகம் செய்ய விரும்புவதனாற்றான் இவ்வளவு அழுத்தங்கள் வருகின்றனவோ எனவும் மனம் அங்கலாய்க்கிறது.

13.10.14 அன்று மாலை லண்டன் நேரம் 5.43ற்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தின் வாசகர் ஒருவர் ஸ்கைப்பில் (skype) தொடர்புகொண்டார். நீங்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவரா? எதிரானவரா? என எடுத்த எடுப்பிலேயே என் நெற்றியில் ஒரு அடி அடித்தார்.பின் தொடர்ந்து கீழ் வருமாறு கூறினார்:

“வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரிச் செய்திகளைக் கொடுக்கிறீர்களா? ஊடகம் என்பதற்காக அனைவரதும் செய்திகளையும் ஏன் போடுகிறீர்கள்? நானும் பார்க்கிறேன், ஈ.பி.டி.பி சந்திரகுமாரின் செய்திகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? நான் எனது நண்பரிடமும் இது பற்றிக் கேட்டேன் ஒரு அருமையான செய்தித்தளம். நிரம்பக் காத்திரமான செய்திகள், கட்டுரைகள் எனப் பல தரப்பட்ட விடயங்கள் வருகிறன. ஆனால் அதற்குள் சந்திர குமாரின் செய்தியும் வருகிறது. ஏன் குருபரன் இப்படிச் செய்கிறார்? பதிலாக எனது நண்பர் சொல்கிறார் நீங்கள் பழைய புளொட்காரர்(P.L.O.T) என. நீங்கள் புளொட் என்பதற்கும் எனது கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு சொல்லி உங்களது தளத்தை வெறுமனே நிராகரிக்க முடியாது என எனது நண்பரிடம் நான் சொன்னேன் ” என ஸ்கைப்பில் தொடர்புகொண்ட அவர் கூறினார்.

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கே தனது நண்பர் ஒருவருடன் பல விடையங்களைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருந்த போது என்னைப் பற்றியும் குளோபல் தமிழ்த் தளத்தைப்பற்றியும் உரையாடல் வந்தபோது “குருபரன் ஆமியோடு நின்றவர். சிக்கலான ஆள் என்று அவர் நண்பர் கூறி இருக்கிறார். அதற்கு எனது நண்பர், அவர் எங்கு நின்றவர் என்று எனக்கு தெரியும் அந்தப் பேச்சை விடு என்றிருக்கிறார்.

ஒருவர் என்னை புளொட்டுடன் நின்றவர் என்கிறார் இன்னோருவர் ஆமியுடன் நின்றவர் என்கிறார்.

முகநூலில் இடம்பெற்ற உரையாடலில் ஒரு நண்பர் கீழ் வருமாறு கேட்டார்: “நீங்கள் தனித் தமிழீழத்தை ஆதரிக்கின்றீர்களா ? தேசியத்தலைவராக திரு பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொள்கின்றீர்களா? உங்கள்கொள்கை என்ன என்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லையே அண்ணா “

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகள் உருவாக்கி முன்வைத்த தமிழ்த்தேசிய வகைமாதிரி மிகமோசமான தோல்வியைத் தழுவியமைக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று தமக்குள்ளும் தாம் போராடிய மக்கள் கூட்டத்துள்ளும் இருந்திருக்க வேண்டிய சனநாயகச் சூழ்நிலையை மறுத்தலித்ததன் மூலம் மக்களினது உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி இருந்தமை

இரண்டு தமிழீழ விடுதலைப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த சர்வதேச அரசியற் சூழ்நிலைகள் பற்றிய புரிதல் அற்றிருந்தமை அதாவது தம்மைச் சூழ நிகழ்ந்து கொண்டிருந்தவைகளை அறியக் கூடிய நிலையில் அத்தேசியம் தன்னை வைத்திருக்க வில்லை.

மேற்குறித்த இரண்டு தவறுகளும் தீடீர் எனக் குறுகிய காலத்தில் உருவானவை அல்ல. இவை மூன்று தசாப்தங்களில் படிப்படியாக உருவாகியவை. இச்சூழ்நிலை உருவாக்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு அஞ்சியோ அவர்களுடன் உடன்பட்டோ அல்லது அரசியல் விழிப்புணர்வற்ற இனவுணர்வு காரணாமாகவோ அனேகமான பிரதான நீரோட்டத்தில் இருந்த தமிழ் ஊடகங்களும் பங்களித்துள்ளன. ஒரு ஊடகவியலாளனாக நானும் விடுதலைப்புலிகளின் தவறுகளை வெளிப்படுத்துவதில் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறேன் எனபதை இங்கு ஒத்துக் கொள்ளவேண்டும்.

எனவே இன்றைக்குத் தமிழ்த்தேசியம் என நாங்கள் உணர்வது சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை அறியவும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் விளையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதனை வளர்ப்பதற்கான ஊடகம்தான் இன்றைக்குத் தேவைப்படுகிறது.

22-09-2014 அன்று 02:55 ரகு கதிரவேலு என்பவர் எனது முகநூல் உட்பெட்டியில் இப்படி எழுதி இருந்தார்.

என்ன குருபரன் அண்ணா அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை மட்டும் பொறுக்கி எடுத்துப் போடுறியள். யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி போன செய்தி உங்களுக்குத் தெரியாதோ? இல்லாட்டிக்கு உங்கடை செய்தியாளர் யாழ்ப்பாணத்திலை இல்லையோ? நீங்கள் எப்ப இங்காலைப் பக்கமா வாறியள். உங்களுக்கு நல்ல செய்திகள் நாங்கள் தருவம். (இவர்தான் அண்மையில் தனது முகநூலில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தவர்...)

யாழ்பாணத்திற்கு யாழ்தேவி சென்றமை, வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றமை, அரச நிர்வாகக்கட்டிடங்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்றமை போன்ற விடையங்கள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வரலாற்றிலேயே முதன் முதலாக வழங்குகிற விடையங்கள் அல்ல. இவை போராட்டம் தொடங்க முன்பும் இருந்தன. தமிழர்கள் போராடியதன் நோக்கமே தமது பிரதேசங்களின் சமூக பொருளாதார அரசியற் கட்டமைப்புக்களைத் தாங்களே தங்களது அடையாளங்களுடன் உருவாக்க அதிகாரம் வேண்டும் என்பதுதான். தண்டவாளங்களைப் பிடுங்கி,யாழ்தேவியை வரவேண்டாமென்று ஆக்கியது போராளிகளே. யாழ்தேவி அன்றைக்கு ஆக்கிரமிப்பின் குறியீடாகப் பார்க்கப்பட்டது இன்றைக்கும் அது ஆக்கிரமிப்பின் வலிமையான குறியீடாகவே இருக்கிறது. அதேவேளை மக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அதன் தேவை இருக்கிறது. எனவே இத்தகைய சம்பவங்களில் மிக நுணுக்கமாக சென்று பார்த்துச் செய்தியை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய சம்பவங்களும் எனது ஊடகத்தில் செய்தியாக வந்துள்ளமையைப் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். நிகழாதவைகளைச் செய்தியாக வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நிகழ்பவற்றுக்குள் இருக்கும் நுண்ணிய செய்திகளை நாங்கள் வழங்கும் போது கவனிக்கத்தவறி விடுகிறார்கள்.

கடந்த காலங்களில் மேற்குறித்தவாறான பல உரையாடல்கள் முக நூலிலும் தொலைபேசியிலும் இணையமூலமா ன தொடர்பாடல்களிலும் நிகழ்ந்துள்ளன.

இவற்றிலெல்லாம் மேலெழுத்து வரும் விடையங்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவை:

  • தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் அல்லது மறுப்பவர்களின் செய்திகளை வெளியிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு
  • விடுதலைப்புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டு இலங்கை அரசின் இன ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
  • தமிழர்களின் விடுதலைக்கு எதிரான ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாமே தவறானவை என்ற கணிப்பு.
  • விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஊடகங்களில் அல்லது அவ்வாறு நடிக்கும் ஊடகங்களில் வருகிறவைகள் எல்லாமே உண்மை என்ற நம்பிக்கை
  • செய்திகளை வெளியிடும் போது ஏதோவொரு குழுவின் அல்லது மக்களின் மனங்களைத் திருப்திப்படுத்தும் அல்லது கவரும் வகையிற் செய்திகளையும் தலையங்கங்களையும் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
மேற்கூறிய எதிர்பார்ப்புகள் ஊடகத்தனத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமையால் வருகின்றனவா அல்லது கண்மூடித்தனமான உணர்வுகளின் காலங்களில் இருந்து மீளாமையினால் வருகின்றனவா என்று அங்கலாய்க்க வேண்டியுள்ளது .

ஒருவர் ஏன் அரசு சார்புச் செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்கிறார் இன்னொருவரோ ஏன் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்கிறார். இருவருமே தமிழர்கள். மேற்குறித்தவர்கள் எங்கள் மத்தியில் நிலவும் இருவகையான போக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதுதான் உண்மை. மேற்குறித்த இரு போக்குகளையும் திருப்தி செய்ய நான் விரும்பினால் எனக்கு அதிகம் சாத்தியக்கூறுகள் இல்லை. அது மலினமான ஊடகத்தனத்துள் என்னைக் கொண்டு சென்று விட்டுவிடும் ஆனால் இதனைத்தான் இன்றைக்கு அனேகமான ஊடகங்கள் செய்து வருகின்றன.

சிங்கள அரசுடன் நிற்பவர்கள், தமிழ் தேசிய உணர்வை ஏற்காதவர்கள், சிங்கள அரசு, சிங்கள இனவாதிகள் எனப்பலரது செயற்பாடுகளை குளோபல் தமிழ் ,செய்திகளாக பிரசுரித்து வருகிறது. நிகழ்கிற சம்பவம் ஒன்றை எந்தப் பூச்சுகளும் அற்று செய்தியைச் செய்தியாகவே வழங்குவது ஊடகவியலின் அடிப்படை.

ஒரு மக்கட் கூட்டத்தை திருப்திப்படுத்தும் நோக்குடன் செய்திகளை வெளியிடும் போக்கு மக்களை மாயையில் ஆழ்த்தி வைத்திருக்கவே உதவும். சிங்களப்பேரினவாதத்தின் பிடியில் இருக்கும் பெரும்பான்மையான சிங்கள மற்றும் ஆங்கிலப்பத்திரிகைகள் இன்றளவும் அவ்வாறுதான் நடந்தும் வருகின்றன. ஆனால் குளோபல் தமிழ் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை. சமூக ஊடகங்களினூடான தனிநபர் வலையமைப்பு விரிவடைந்து வரும் இந்த தசாப்தத்தில் ஒருவரின் கருத்தையோ சமூகத்தில் நிகழும் ஒரு சம்பவத்தின் செய்தியையோ இருட்டடிக்க ஒரு செய்தி நிறுவனம் முயன்றால் அது நகைப்புக்கிடமாகும். இன்றைக்கு இலங்கை அரசும் அதனைச் சார்ந்தவர்களும் இலங்கையின் வடக்கு கிழக்கில் “செயற்பட்டுக்” கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சொல்வது அவர்கள் எதற்காக அதனைச் செய்கிறார்கள் என மக்கள் உணர்ந்து கொள்வதற்கு உதவிசெய்யும்.

இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அவற்றின் அடையாளத்தையும் சுயாதீனத்தையும் பேணக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாதவரை இன ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டைச் சிங்கள இனம் கேள்விக்குட்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பை நீக்கி அதிகாரங்களைப்பகிராத வரை இலங்கையில் இன ஐக்கியம் சாத்தியமில்லை. இந்தச் சாத்தியமின்மையில் இருந்துதான் தமிழர்களின் இன விடுதலைக்கான நியாயாதிக்கமும் பிறக்கிறது.

ஆனால் துரதிருஸ்ட வசமாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை கண்டு கொண்டும் தமது நலன்களுக்காக அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரித்து நகருகின்றன. அரசியல் ரீதியில் மிக்க மிகப் பலவீனமான நிலையில் நிற்கும் ஒரு இனம் எல்லா வகையான செய்திகளையும் பார்வைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமானது. இந்த நிலையில் தமிழ் மக்களை மூன்று தசாப்தங்களுக்கு முந்திய சூழ்நிலைகளுக்குள் கொண்டு செல்லும் ஊடகவியலை நாங்கள் தெரிவு செய்ய முடியாது.

ஊடகம் நடத்தும் எவரும் அதன் உள்ளடக்கம் அது வெளிப்படுத்தும் அரசியல் மற்றும் சமூகப்பார்வைகள் குறித்து புரிந்து கொள்ள முடியாத ஒருசிலர் குறித்து கவலை கொள்வதில் அர்த்தமில்லை என எனது நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்

உண்மை. குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.

நடராஜா குருபரன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112724/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.