Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் தவறுகள் நிறுத்தப்பட்டால் தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் இறுக்கமடையும்

Featured Replies

சந்தேகங்கள் நிலவும் வரை நல்லிணக்கம் ஏற்பட வழியில்லை. அதனால் நல்லிணக்கம், நல்லுறவுக்கு நிலவும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்களான தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலே இணக்கத்திற்கு தடையாயிருப்பது ஒருசாரார் மீது மறுசாரார் கொண்டுள்ள சந்தேகமே. ஒருசாராரது உரிமைகளை மறுசாரார் பறித்து விடுவார்களோ, தடுத்து விடுவார்களோ, ஏமாற்றி விடுவார்களோ, நம்பிக்கைத்துரோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகமே இன்று உறவுக்குத் தடையாயிருக்கின்றது.  

 

கடந்த கால நிகழ்வுகள் இவ்வாறான சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. இவ்வாறான சந்தேகங்கள் நிலவிவருவது வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாக அறியாமையே என்பது கண்டறியப்படுகின்றது. இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட்டால் நாட்டில், சமூகத்தில் நல்லுறவு மட்டுமல்ல நிம்மதியும் நிலவும். பகைமைகள் ஒழிந்து வளங்கள் நிறையும்.

 

அதனால் நாட்டில் சமூக நல்லுறவு மிகவும் தேவைப்படுகின்றது. இருந்து வந்த நல்லுறவுகள் சிதைந்ததேன் என்பதைச் சரியாகவும், தெளிவாகவும் ஆராய்ந்தறிந்து கொண்டால் விட்ட தவறுகள், தப்புக்களிலிருந்து விடுபட்டு சமூக நல்லிணக்கத்தின் கதவைத் திறக்கலாம். முஸ்லிம்கள் தமிழர் மீது சந்தேகம் கொள்வதைப்போல் தமிழர் மத்தியிலும் முஸ்லிம்கள் மீது சந்தேகம் நிலவுவது களையப்பட வேண்டும். யதார்த்த நிலையைப் புறந்தள்ளிப் பிரச்சினைகளை அணுகித் தீர்க்க முடியாது. வாய்ப்புமில்லை. நோயின் மூலத்தைக் கண்டறிந்தே வைத்தியம் செய்ய வேண்டும்.

 

கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நோக்கும்போது அரசியல்வாதிகள் விட்ட சுய நலத்துடன் கூடிய தவறான செயற்பாடுகளே தமிழ் பேசும் மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்திற்குக் குழிபறித்தன என்பது மறக்கமுடியாத, மறைக்க முடியாத உண்மையாகும்.

 

அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு சமூக நல்லுறவுக்கு பாதிப்பேற்படுத்துகின்றது. அரசியல் அதிகாரத்திற்காக சமூக உறவைச் சீர்குலைக்கும் அரசியல் வாதிகளால் இன்று இலங்கை வழிதவறி அல்லலுறுகின்றது. இதுவே யதார்த்தம் உண்மை. தமிழ்  முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திய விடயங்களில் முக்கிய இடம்பெறுவது சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் அரங்கே. அதை இன்றைய சமூகம் தெளிவாகப் புரிந்து கொண்டால் அதுவே பல தடைகளைத் தாண்டும் படிமுறையாயமையும்.

 

இலங்கையின் சுதந்திரத்தின் போது தமிழ்பேசும் மக்களான தமிழரதும், முஸ்லிம்களதும் உறவுகள் சீராகவே இருந்தது. இரு இனமும் ஒரு இனமாக இணைந்தே செயற்பட்டனர். அதற்கு எடுத்துக் காட்டாக அன்று அதாவது முதலாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது நூற்றுக்கு எண்பது வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த, வாக்காளர்களாயிருந்த மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானதைக் குறிப்பிடலாம்.

 

அந்த உறவு பின்வந்த அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் படிப்படியாக இழக்கப்பட்டு இன்று புதிய உறவுக்கு வழிதேடப்படும் அவலம் நிலவுகின்றது. 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிசார்பில் கல்முனைத் தொகுதியிலிருந்து பின்னாளில் வடுகொடப்பிட்டிய ஆணைக்குழுவால் இலஞ்சக்குற்றவாளியாகக் காணப்பட்ட கேட் முதலியார், எம்.எஸ்.காரியப்பரும் நிந்தவூர் தொகுதியிலிருந்து எம்.எம்.முஸ்தபாவும்  தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகினர்.

 

ஆனால், அவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றி தமிழ் மொழியின், அடிப்படை உரிமையைப் பறித்த அன்றைய பண்டாரநாயக்க அரசாங்கத்துடன் இணைந்தனர். தமிழ் மொழியின் தமிழரின் உரிமைகளை பறித்தவர்களுடன் தமிழ் மக்களது வாக்குகளாலும் தெரிவானவர்களின் செயற்பாடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் தெளிவாகவே பதிவேறியுள்ளது.

 

அதேபோன்று 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கல்முனையிலிருந்து எம்.சீ.அகமதுவும், பொத்துவில் மற்றும் நிந்தவூர் தொகுதிகளிலிருந்து இரு மஜீத்துகளும் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

 

அவர்களும் தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக ஏன் தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களது விருப்பையும் தெரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையின ஆளும்தரப்பில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதுவும் வரலாறு. தெளிவாகவேயுள்ளது. திருகோணமலை மாவட்ட மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்காக உருவாக்கப்பட்டது. 1960 பொதுத் தேர்தலில் அத்தொகுதியிலிருந்து தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் என்ற தமிழரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் மஜீத்தும் முறையே முதலாம், இரண்டாம் உறுப்பினர்களாத் தெரிவாகினர்.

 

ஏகாம்பரத்தின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான இடைத் தேர்தலில் எம்.ஈ.எச்.முகமதலி என்பவரைத் தமிழரசுக் கட்சி நிறுத்தி தமிழ் மக்களது அமோக ஆதரவுடன் வெற்றிபெறச் செய்தது. 1965 பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி தமிழர் சார்பாக நிறுத்திய வேட்பாளர் குறித்த எம்.ஈ.எச்.முகமதலியே, தமிழருக்கான பிரதிநிதித்துவத்தை தமிழரசுக் கட்சி முஸ்லிமுக்கு வழங்கி அவரை மூதூரின் முதல் உறுப்பினராகத் தெரிவு செய்த அரசியல் நாகரிகம் மறைக்கவோ, மறுக்கவோ முடியாதது.

 

தமிழருக்குரிய பிரதிநிதித்துவம் இழக்கப்படுமென்றோ தமிழரின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுமென்றோ மூதூர்த் தமிழர்கள் கருதாமல் முகமதலியை மூதூரின் முதல்வராகத் தெரிவுசெய்தனர். ஆனால் அவரும் அன்றைய ஆளும் கட்சியாயிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியது மட்டுமல்ல தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவிருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டமையும் வரலாற்றில் பதிவேறியுள்ளது.

 

 அன்றைய செனட் சபையென்ற மூதவைக்குத் தமிழரசுக் கட்சி சார்பில் நியமனமான இன்றும் தமிழ் மக்களால் மதிப்பளிக்கப்பட்டுவரும் மசூர் மௌலானாவும் முன்னையவர்கள் வழியில் ஆட்சி செய்த அரசாங்கத்துடன் சங்கமித்தார். தமிழரசுக் கட்சியில் தொடர்ந்து மசூர் மௌலானா இருந்திருப்பாரெனில் அவரே இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மிக மூத்த தலைவராக மட்டுமல்ல கட்சியின் தலைவராகவும் இருக்கும் நிலை இருந்திருக்கும்.

 

தமிழ்த் தலைவராக இருக்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர் மசூர் மௌலானா.  முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் குறியாயிருந்தது தமிழரசுக் கட்சி என்பதற்கு 1970 இல் பொத்துவில் தொகுதியில் போட்டியிட வேட்புமனு கேட்ட நடராஜா தர்மலிங்கம் என்பவருக்கு அதைமறுத்ததுடன் பொத்துவில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்குரிய தொகுதி அங்கு முஸ்லிமொருவரே தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்று ஜனாப் காதரைத் தமிழரசுக் கட்சி நிறுத்தியது.

 

அன்றைய தேர்தலிலே சுயேட்சையாகப் போட்டியிட்ட தர்மலிங்கம் சிலநூறு வாக்குகளால் தோல்வியடைந்தமையும் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தால் 1970 இல் பொத்துவில் தொகுதியில்  தமிழர் வெற்றிபெற்றுப் பாராளுமன்றம் சென்றிருப்பார். தமிழர் பிரதிநிதித்துவம் கிட்டியிருக்கும் என்பது தெளிவானது. தமிழர் பிரதிநிதித்துவத்தை விட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டனர் தமிழர் தரப்பினர். அடுத்துவந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஈரோஸ் என்ற தமிழ் இளைஞர் குழுவின் சார்பில் இரு தமிழர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

 

அக்குழு வெற்றி பெற்ற ஒரு தமிழரைப் பதவிவிலகச் செய்து அவ்விடத்திற்கு முஸ்லிம் ஒருவரை நியமித்தமையும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல தமிழர் சார்பான ஏனைய அமைப்புக்களும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் அக்கறை கொண்டிருந்தன என்பதற்கு இது ஆதாரமாகும். குறித்த ஈரோஸ் குழுவின் சார்பில் வன்னியிலிருந்தும், மட்டக்களப்பிலிருந்தும் பாராளுமன்றத்தில் பிரவேசித்த அயூம் மற்றும் பசீர் சேகுதாவூத் ஆளும் தரப்பில் ஐக்கியமானதும் வரலாறு. இவ்வாறு அரசியல் அரங்கில் தமிழ் மக்களது ஆதரவுடன் பிரதிநிதித்துவம் பெற்ற அனைவரும் இடம்மாறினாலும் நம்பிக்கையைத் தளரவிடாது விக்கிரமாதித்தன் போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இமாம் என்ற முஸ்லிம் பிரமுகரை பாராளுமன்றத்திற்கு நியமனம் செய்தமையும் பதிவாகும்.

 

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை ஏற்ற முடியாத குற்றச்செயல் என்பதை மறைக்க முடியாது. அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் உடந்தையல்ல என்பது பகிரங்கமானது. தமிழ்  முஸ்லிம் உறவைப் பிரிக்க வடபகுதித் தமிழர்கள் முஸ்லிம்களை வெளியேற்றினார்களென்றும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையைத் தமிழர்கள் செய்தார்களென்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.   பிச்சைக்காரன் புண்மாறாது காப்பதுபோன்றது இது. தமிழர் தரப்பும் பல தமிழ்க் கிராமப் படுகொலைகளுக்கு முஸ்லிம் தரப்பை நோக்கி கைகாட்டுகின்றது.

 

எப்படியாவது தமிழ் பேசும் மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கும் தரப்பினருக்கு சுயநல அரசியல், சமூகத் தலைமைகள் எண்ணையூற்றிக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தமிழ்ப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற தமிழ் மொழித் தின விழா ஆரம்ப நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தமை, சம்மாந்துறை அரச அலுவலகமொன்றில் சரஸ்வதி பூசை நடத்த இடமளிக்காமை, கல்முனை நகரில் தமிழ் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவதற்குள்ள தடைகள்.

 

இவ்வாறு தமிழ்  முஸ்லிம் உறவுகளுக்குப் பாதகமாக பல நடந்துவருகின்றன. அரசியல் தலைமைகளை நம்பி, அதிகார ஆசை கொண்டோரின் செயற்பாட்டில் நம்பிக்கை வைத்து ஒதுங்கியிராது தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அடிமட்டத்திலிருந்து புரிந்துணர்வு கட்டியெழுப்பப்படவேண்டும். அதுவே பயனுள்ளதாயமையும். இன்றேல் பாதிக்கப்படும் தரப்பு மாற்றாரின் தயவை நாடுவது தவிர்க்க முடியாததாகும்.  தொடரும் தவறுகள் நிறுத்தப்பட்டால் தமிழ்பேசும் மக்களின் நல்லிணக்கம் உறுதியாகும். சிந்திப்பார்களா?

 

http://thinakkural.lk/article.php?article/cqoombirdl331562dad6e27371156notzd32235ae02b7d321578ee8gljhe#sthash.CyujcuMC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.