Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானொலிகளின் வசந்தகாலம்

Featured Replies

வானொலிகளின் வசந்தகாலம்
r0tq9v.jpg

 

தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

 

 

என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

 

 

அறியாமையின் அழகு!

‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.

வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.

டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்

 

 

நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.

 

 

இலங்கை எனும் பூங்காற்று

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.

 

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.

 

செய்திகள் வாசிப்பது…

அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.

 

இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6751965.ece?homepage=true

சொல்லத் தோணுது 2 - வானொலிக் காதலி

 

artthangar_2129857g.jpg

 

radio_2129858g.jpg

 

 

நான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா ‘பெற்றால்தான் பிள்ளையா’. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.
 
எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
 
‘ஆகாய வீதியில்… அழகான வெண் ணிலா…’ இது எந்தப் படத்தின் பாடல்? யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.
 
சற்றும் யோசிக்காமல், படம் ‘மஞ்சள் மகிமை’. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
 
‘பத்திரக்கோட்டை தங்கராசு’ என்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.
 
என் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.
 
இருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.
 
எல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான ’பொங்கும் பூம்புனல்’ பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள்! காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.
 
எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.
 
பண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
 
ஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது? இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா?
 
ஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
 
இவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா? பாடுகிறார் களா? அது எந்த மொழிப் பாடல்? எதைப் பற்றி பாடுகிறான்? யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.
 
நானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்?
 
 
-தங்கர் பச்சான்-
- இன்னும் சொல்வேன்…
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.