Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரைப் பிரிந்து ஒன்பது வருடங்கள்: சம்பூர் மக்களின் அகதித்துயரம் எப்போது முடியும்?

Featured Replies

Samboor%20displace_CI.JPG

 

 
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர்.
 
கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக்  கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
 
கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 
 
மாற்று நிலங்களில் குடியேற மறுத்துள்ள மக்கள் தம்மை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
தங்கள் பூர்வீக நிலத்தை தவிர சொர்கத்திலும் குடியேற மாட்டொம் என்று தமது வாழ்வையே இந்த மக்கள் போராட்டமாக்கியுள்ளனர். 
 
இன்று திரும்புவோம் நாளை திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் சம்பூர் முகாம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
கடந்த அரசால் முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட காணிகளை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் ஜனாதிபதி ஓரிரு நாட்களில் ஒப்பம் இட்டவுடன் சம்பூர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
புதிய அரசாங்கத்தின் நிறைவேற்று சபையிலும் சம்பூர் மக்களை அவர்களின் பூர்வீக மண்ணில் மீள்குடியேற்றுவது தாடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் பிரதமரும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
 
இதேவேளை சம்பூர் மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும் என்றும் அந்த மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலர் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு புலிச்சாயம் பூசுவதாகவும் சாடியிருந்தார்.
 
ஓரிரு நாட்களில் ஊர் திரும்பிவிடலாம் என்ற கனவுடன் சம்பூர் மக்கள் காத்திருக்கின்றனர். ஒன்பது வருடங்கள் பொறுத்திருந்து போராடிய மக்கள் நம்பிக்கையோடு அகதித்துயர வாழ்வை போராட்டமாக்கி காத்திருக்கின்றனர்.
 
 
சம்பூர் : குருதி வழியக்கொலையுண்ட நிலம் 2006.04.26 - சம்பூர் ப. சுஜந்தன்:-
 
Samboor%20child_CI.JPG

 

 
தொண்டைக்குளியில் கொடு விசம் உருட்டிக்கடந்த
ஒன்பது வருடங்களின் முன்னே
நேற்றைய இரவிலும் இன்றைய பகலிலும்
என்ன நடந்தது சொல்லுங்கள்
 
சித்திரைக்களிப்பில் புதுச்சட்டை வாசனை
தீர்ந்து போகாக்குழந்தைகள் உறங்கினர்
நாளைத்திருவிழாவுக்காய் கோயிலின் தெருக்கள்
தோரணக் கனவில் இருந்தன
பள்ளிச்சிறார்கள் நாளைப் புத்தகத்தை அடுக்கத்தொடங்கினர்
நாளைய வேலை நாளை உணவு
நாளைய சந்திப்பு நாளைய பயணம்
இப்படி எல்லோரிடத்திலும் ஏதேதோ நடந்தன
அல்லது நடந்திருக்கும் இல்லையெனில் நடந்திருக்கலாம்
 
உண்மையில் என்னதான் நடந்தது
கோடை இரவில்
பீரங்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்தன
நீர்ச்சகதி வீதியெங்கிலும் சிவந்தே கிடந்தது
ஓலம் எங்கிலும் ஓலம்
அந்தோ
சரிந்து வீழ்ந்தது ஆயிரம் ஆயிரம் அற்புதக் கதைகளால்
அலங்கரிக்கப்பட்ட சூலத்துடையாளின்
அற்புதக் காளிகோயில்
 
குண்டு மழைதான் குளிருமா என்ன
கருகிச்சுருண்டனர் குழந்தைகள்
ஏந்த முடிந்ததைக் கைகளில் சுமந்து
வரிசை வரிசையாய் விழுந்தும் எழுந்தும்
பிணங்களைக் கடந்தும் தெருக்களில் சரிந்தது ஓர் கிராமம்
புதையல் நிலமொன்று மாண்டது
பாலருந்தக் குழந்தைகளின்றி
பருத்த முலையுடன் வரண்டு போனது
 
இப்போது ஒன்றுரைப்பேன்
அவர்கள் என் நிலத்தை
குருதி வழிய வழிய கொன்றனர்
பேரினப் பெரும் பூதங்கள் என் மண்ணை
அள்ளித் தின்றன
பச்சை வேலியும் உயர்ந்த அணைகளும்
அண்ணார்ந்து பார்க்கும் கம்பித்தூண்களும்
அவர்கள் பாட்டன் முப்பாட்டன் பூமியென்றெண்ணி
போட்டு முடித்தனர்
ஊரின் சனங்கள் ஒப்பாரி வைத்தனர்
ஓட்டைக் கொட்டிலில் ஒன்பது வருடங்கள்
அகதிச்சுமையில் அல்லல் கொண்டனர்
 
சொந்த மண்ணில் உடல் அழுகி
ஊனம் வடியும் கனவில் பலநூறு கண்கள் கரைந்தன
அனல் மின் நிலையமும் ஆயிரம் கதைகளும்
சம்பூர் மண்ணில் உலாவித்திரிந்தன
நிலமென்பது உயிர்ப்பிண்டம் ஒன்றின் உரிமை
நிலத்தைப் பறித்தல் கொடுஞ்செயல்
 
இதை நீவிர் அறிக
சித்தாத்தன் பெயரால் மண்பறிக்கும் கைகள்
மிருகத்துடையன அவ்வாறெனில்
நிலம் பறிப்பவனை இழுத்து வந்து
ஓர் அரச மரக்கிளையில் கைகளை நீட்ட வைத்து
தறித்தெறிக
சித்தாத்தன் என்றும் நிலத்தை விரும்புவதில்லை
 
நிலப் பேய்களே
வயிரெரிந்த இச்சொல்லை நீவீர் அறிக
என் பிள்ளைக்கு வன்முறையைக் கற்றுக்கொடுப்பேன்
ரெளத்திரம் பழக்குவேன்
மண்ணள்ளும் கைகளை தீயில் இடச்சொல்வேன்
இல்லையெனில் சுடச்சொல்வேன்
நீவீர் அறிக
இன்னும் என் பிள்ளை நிலமற்றலைதலை உணரவில்லை
 
சம்பூரில் இருந்து இலங்கை இரானுவத்தால் மக்கள் விரட்டப்பட்டு இன்றோடு 9 வருடங்கள் முடிகின்றன இன்னும் அதே அகதி வாழ்வும் ஊர்ச்சுமையும் தொடர்கிறது 
 
சம்பூர் ப. சுஜந்தன்
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.