Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரம் கேட்டு செத்தவனின் தாயொருத்தியைப் பாருங்கள்!

Featured Replies

IMG_0118-300x200.jpg

 

கொழும்பு மிரருக்காக ஜெரா
 
நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,  பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும் பிடியற்ற, துணி கிழிந்த ஒரு குடையுடன் மெல்லிதான ஒரு தாய் எங்களைக் கடந்து முன்வரிசைக்கு சென்றார்.
 
 
அவர் கடந்ததும் எங்களுக்கிடையில் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. அவர் குறித்தும் நாங்கள் அந்த இடத்தில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். குடை, பை மற்றும் அவர் அடங்கலாக கதிரையின் அரைப் பங்கு நிரப்பப்பட்டது. நுனிக்கதிரையில் அமர்ந்தார். பையுக்குள் கையை நுழைத்து வைத்த பொருள் பத்திரமாக உண்டோ என்பதுபோல் எதையோ பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் நிமிர்ந்து பார்த்தார்.
 
வாயில் கையைவைத்துப் பொத்திக்கொண்டார். சேலைத் தலைப்பால் கண்ணை அடிக்கடி துடைத்துக்கொண்டார். அப்படியே அவர் இருக்கையில், ஊடகவியலாளர் ரஜிவர்மனின் உருவப்படத்துக்கு அவரது தாயார் கமலாதேவி விளக்கேற்றி வைப்பார் என மேடையிலிருந்து அறிவித்தார்கள். விளக்கேற்றிவிட்டு, இறங்கி பழையபடி வாயில் கையை வைத்துப் பொத்திக்கொண்டார். அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
 
IMG_0102-e1430694207134.jpg
 
இன்று உலக ஊடக சுதந்திர தினம். இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலையான பின், அவர்களின் இரத்த உறவுகள் எப்படி வாழ்கின்றனர் என்பதற்கு நேரடிச் சாட்சியாக ரஜிவர்மனின் தாயார் முன்வைக்கப்படுகின்றார்.
கிணறு, மலசலகூடம், சுற்று மதில் என எந்த வசதியையும் காணாத சாதாரண சீற் வீட்டில்தான் அவர் இப்போது வசிக்கின்றார். 14 வயதில் தொடங்கிய ரஜிவர்மனின் இளைய சகோதரனது உழைப்பில் தான் அந்தக் குடும்பத்தின் நாட்கள் உணவுப் பொழுதுகளையாவது கடத்துகின்றது.
 
“9 வருசமா தவமிருந்து பெத்த பிள்ள. ரஜிவர்மனின்ர அக்கா பிறந்து சரியா 9 வருசத்துக்குப் பிறகுதான் அவன் பிறந்தவன். வைக்காத நேத்தியில்ல. என்ர பிள்ள 7 வயசு வரைக்கும் நேசரிக்குக் கூடப் போனதில்ல. அவனுக்கு ஒரு வலிப்பு வரும். ஆதனால ஒரேதா வளர்ந்ததும் பள்ளிக்கூடத்துக்குதான் அனுப்பின்னான். அப்பவே கஸ்ரம். இவரும் இல்ல. இளையவன் வேலைக்குப் போய்தான் தன்ர தமையனப் படிப்பிச்சவன்”.
 
ரஜிவர்மன் பற்றிய கடந்தகாலக் கதையை கண்ணீரால் கழுவி எஞ்சியதைத் தான் சொல்லி முடித்தார்.
 
“ஒரே தரத்தில சாதாரண தரம் பாஸ் பண்ணிட்டான். உயர்தரத்திலயும் கொமர்ஸ் படிச்சவன். கெம்பஸ் கிடைக்கேல்ல. எனக்கு ரியுசனுகளுக்கு விட்டுப் படிப்பிக்க காசும் இருக்கேல்ல. அதுக்குப் பிறகு ஜீ.ஏ.கியூ (வெளிவாரி பட்டப்படிப்பு) படிக்கப் போறதா வெளிக்கிட்டான். நானும் விட்டிட்டன். அங்கயும் தங்கி நிண்டு படிக்க பிள்ளைக்கு செலவுக்கு காசில்ல தானே. முதல் எங்கயோ நிறுவனத்துக்கு வேலைக்குப் போறதா சொன்னான். பேப்பருக்கு வேலைக்குப் போறன் எண்டு சொல்லேல்ல.
 
இரவு வேலைக்குப் போறன், சாப்பாடு கட்டித்தா எண்டு என்னட்ட கேட்ட பிறகுதான், நான் வெருட்டி விசாரிச்சன். அப்பத்தான் பேப்பர் வேலைக்குப் போறதா சொன்னான். எனக்குப் பைத்தியமே பிடிச்சிட்டு. நாடு அப்ப இருந்த நிலைமையில வேணாம் எண்டன். ஆனால் அந்த நேரம் வேற வேலையும் இருக்கேல்ல. பாதையெல்லாம் மூடினதானே. சரியான கஸ்ரமும்.
 
அண்டைக்கும் (ரஜிவர்மன் படுகொலைசெய்யப்பட்ட நாள்) இரவு சாப்பாடு கட்டிக் குடுத்து அனுப்பினன். காலம நேரத்துக்கு வந்திடுவான் ஆனா மத்தியானமாகியும் வரேல்ல. பக்கத்து வீட்டுக்கு ரீவி பாக்கப் போன ரஜிவர்மனின்ர.. பெருசா குழறி சத்தங் கேட்டுது. என்ன எண்டு ஓடிப் போய் பாத்தா, என்ர பிள்ளைய ரீவியில பொடியா ( இறந்தநிலை) காட்டுகினம்….”அழுகை, கண்ணீர் என அதிக நேரத்தை அதற்காகவே அதற்காகவே எடுத்துக் கொண்டார்.
 
“செத்தவீட்டுக்கு நிறைய பேர் உதவிச்சினம். அத்தியேட்டி செலவுக்கு காசு தந்திச்சினம். பிறகு நேற்றுமாதிரி ஏதும் நிகழ்ச்சியெண்டால் கூப்பிட்டு, மேடையில ஏதாச்சும் தருவினம். என்ன தந்து என்ன செய்ய, என்ர மகன்…!’சுவரில் மாட்டியிருக்கும் ரஜிவர்மனின் படத்தைப் பார்த்து எதையோ சொல்கிறார்.
 
“வீட்டில யாருமில்லாட்டி  இப்பிடித்தான். பிள்ளையின்ர படத்த பாத்து அழுவன்’’ என்பது அவர் அந்த நேரம் பேசிய வார்த்தைகளில் மிச்சமாகக் கிடைத்தவை.
 
மகன் செத்து முதல் வருசம் மட்டும் நான் பேப்பருக்குக் குடுத்தன். அதுக்குப் பிறகு நான் குடுக்கிறதுக்கு வசதியிருக்கேல்ல. மகன் செத்த நாளில அவையா பேப்பர்ல போடுவினம்.
 
ஊடக பயணத்தில் மரணித்த அனைவரின் குடும்பங்களும் இப்படித்தான். கிடைத்த உதவிகளில் வேறுபாடுகள், ஏற்ற – இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பங்களின் சமூக இருப்பு, பொருளாதார இருப்பு இன்னமும் இன்மைக்குள்ளேயே உழல்கின்றது.
 
கடந்த காலம் உண்மையை மட்டும் தின்னவில்லை. கூடவே உண்மையை உலகுக்குச் சொல்ல முனைந்தவர்களையும் தான் தின்றது. அதில் இன்னமும் மெள்ளப்பட்டுக்கொண்டிருப்பது தின்னப்பட்டவர்களின் குடும்பங்கள்தான். அதற்கு ஒரு சாட்சி படுகொலையான ஊடகவியலாளர் ரஜிவர்மனின் அம்மா.
 
இதுபோன்ற தாய்மாரின் கண்ணீர் கதையோ இப்படியே நீள்கிறது. ஆனால் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நீதி நிலைநாட்டப்படவுமில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.