Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவும் ஒரு சுற்றுலா மையம்! எப்படியிருக்கிறது யாழ். நூலகம்

Featured Replies

burned_library

கொழும்பு மிரருக்காக ஜெரா

அறிவுசார் சமூகமொன்று தேடிக் கொண்ட கூட்டுத் தேட்டமாக நூலகங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாண சமூகத்தினதும், அறிவுசார் பண்பாட்டு விருத்தியினதும் கூட்டு அடையாளமாக விளங்கவதே யாழ். பொது நூலகமாகும்.


தமிழர்களின் தனித்துவ அடையாளமாக இது விளங்கியதால்  காலத்துக்கு காலம் அரசியல் நீரோட்டங்களுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன.

வாசிப்பதற்காகவா நூலகங்கள்?

1981 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு துயர சம்பவத்தை யாழ்.நூலகம் சந்தித்ததோடு அது முற்றாக அழிந்துபோனது. அறிவுசார் தேட்டத்தின் திட்டமிட்ட படுகொலையாக, இனப்படுகொலையின் முக்கிய அங்கமாக  சிங்கள அரசியல் சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதை வரலாறு இன்றும் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றது.  அந்த அறிவுப் பெட்டகப் படுகொலை நிகழ்ந்து 34 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது எப்படியிருக்கின்றது? புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள யாழ். நூலக வளாகத்துக்குள் வந்துசெல்பவர்களின் நோக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எப்படியானது?

அரசியல் கலப்பில் பிறந்த நூலகம்

jaffna-library new

2007 ஆம் ஆண்டு பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழ். பொது நூலகத்தின் மீள் பிரசவம் நடந்தது. ஆனாலும் சுதந்திரமான நூலக உள்நுழைவுக்கு தொடர்ந்தும் தடைகள் இருந்து வந்தன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட வலயத்துக்குள் புதிய நூலகம் நூல் மீட்பர்களுக்காக காத்துக்கிடந்தது. போரோய்வுடன் சிறிதுசிறிதாக அதற்குச் சுதந்திரம் கிடைக்க முக்கிய அரசியல் சந்திப்புக்களின் மையமாக அது மாறியது. இந்தியக் குழுவினரும், சீனக் குழுவினரும் யாழ். பிரதிநிதிகளைச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் இடமாக அந்தப் புத்தகத் தளம் மாற்றம் பெற்றது.

அண்மையில் வைக்கப்பட்ட யாழ்.பொதுநூலக திறப்பு விழா தொடர்பான கல்வெட்டில் அரசியல் விளையாடியிருக்கின்றது. இந்த நூலகத்தை இரண்டாம் முறை புனரமைத்துத் திறப்ப விழா செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதனால் குறித்த ஆண்டில்,  ஏற்கனவே திட்டமிட்ட திகதியில் திறக்க முடியாமல் போனமையும், அதன்போது நிகழ்ந்த சம்பவங்களும் யாழ்.மக்கள் அறிந்ததே. அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதம் கழித்தே யாழ்.நூலகத் திறப்பு விழா நடந்தேறியது. ஆனால் இப்போது பொறிக்கப்பட்டுள்ளது அந்தக் கல்வெட்டில் உண்மையில் நூலகம் திறக்கப்பட்ட திகதி மறைக்கப்பட்டு, ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதியே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னாள் இருக்கின்ற அரசியலை நினைவபடுத்திக் கொள்வது இலகுவானதே.

அதுவும் சுற்றுலாச் சந்தை

2009 ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு, இலங்கையின் வடபாகத்தை மையப்படுத்திய போர்ச் சுற்றுலா என்ற வணிகம் களைகட்டத் தொடங்கியது. தெற்கிலிருந்து படையெடுக்கும் சிங்கள மக்கள் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த போரின் தடயங்களைப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டினர். அந்த வரவிலேயே தாமே எரித்து, தாமே மீளவும் கட்டிக்கொடுத்த யாழ். நூலகத்தையும் பெருமையுடன் தொட்டுத் தடவிப் பார்க்க விரும்பினர். நாள் தோறும் பெருந்திரளான சிங்கள சுற்றுலாவிகள் யாழ்.நூலகத்தில் இந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே இன்றும் வந்து செல்கின்றனர். அவர்களின் இந்த திரளான நூலகம் நோக்கிய படையெடுப்புக்குப் பின்னாலும் அரசியல் இருக்கின்றது.

“ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அழித்த தமிழர்களின் அறிவுச் சொத்தை, சுதந்திர கட்சியினராகிய நாம் மீளமைத்து சுபீட்சத்தைக் கொடுத்திருக்கின்றோம்,” என்ற தொனிப்பொருளிலான அரசியல் சிந்தனையை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பயணங்களை ஆளும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. வந்து செல்பவர்களும் ஆளும் அரசை நோக்கிய ஆதரவு மனப்பான்மையுடள் யாழ். நூலகத்தை தடவிச் செல்கின்றனர். தம் இனிய நினைவுகளில் ஒன்றாக அதையும் எடுத்துப் போகின்றனர்.

இப்போதும் கலாசார சின்னமே அது

ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பிற இனத்தவர்கள் யாழ்.நூலகத்தை நோக்குவதோ வேறுவிதமானது. தமிழர்களின் பண்பாடு, அரசியல் குறித்த தேடல் தளமாகவே இந்த நூலகத்தை அவர்கள் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு கலாசார சின்னம். மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்ட தமிழர்களின் அறிவுசார் அடையாளத்தின் எச்சசொச்சம் என்ற மனப்பதிவை பெற்றுச் செல்கின்றனர். தென்னாசிய சமூகங்களின் ஆய்வு சார்ந்த விடயப்பொருட்களுக்கான ஆதார ஊக்கியாக இப்போதும் யாழ்.நூலககத்தை நம்பிவரும் வெளிநாட்டவர்களும் இருக்கின்றனர்.

நுனிப்புல் மேயும் மையமாகும் நூலகம்

இந்த நூலகத்தை நோக்கி படையெடுக்கும் உள்ளகவாசிகளின் நோக்கங்களோ விநோதமானதாக மாறிவருகின்றது. பத்திரிகை படிப்பவர்கள் மட்டுமே தமது நோக்கத்தில் கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் குறிப்பெடுப்பதற்காகவும், அவற்றை நிழல் பிரதி செய்து எடுத்துச் செல்வதற்காகவுமே அநேகர் வருகின்றனர். நமது கல்விப் பாரம்பரியத்தில் வீழ்ந்திருக்கும் பெரும் ஓட்டையும், கற்பித்தல் நடைமுறைகளில் ஏற்பட்டிருக்கின்ற இலகுத்தனங்களும் இதுபோன்ற தேடல் அற்ற, வாசிப்பை தேவையற்றதாக்கிய மாணவச் சூழல் உருவாக்கத்திற்கு காரணமாகியிருக்கின்றது. அந்த மாணவர்கள் புத்தகங்களை வாசிப்பதற்காக தேடுவதைவிட, நிழல் பிரதி எடுப்பதற்காக தேடுவதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர்.

அதிக வசதி வாய்ப்புகள்?

முன்னரைவிட இப்போதிருக்கின்ற நூலகமானது அதிக வசதிகளைப் பெற்றுள்ளது. கணினி துறைசார்ந்த பயிற்சிகளும், விளையாட்டுக்களும், சிறார்களை மையப்படுத்திய கதை சொல்லும் நேரம் போன்ற வாராந்த நிகழ்வுகளும், இணைய வசதிகளும் இப்போது புதிதாய் கிடைத்திருக்கின்ற வசதிகள்.

ஆனால் பண்டைக்கால நூல்களும், ஈழத்மிழரின் வரலாற்று எச்சங்களான ஓலைச்சுவடிகளும் இல்லாமலே போனமை மிகப்பெரும் இழப்பாகும். ஆயிரம் வசதி வாய்ப்புக்கள் இந்த நூலகத்தை அலங்கரித்தாலும் ஆசியாவின் அப்போதைய மிகப்பழமையான அந்த நூலகத்திற்குப் பிரதியீடாக அமையாது என்பதே மறுக்க முடியாத உண்மை.

http://www.colombomirror.com/tamil/?p=4770

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.