Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்து எரிப்பும் பிரபாகரனும்

Featured Replies

பேருந்து எரிப்பும் பிரபாகரனும்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 05:17.41 AM GMT ]
praba_001.jpg
"நாங்கள் வன்முறையை விரும்புபவர்களோ மன நோயாளிகளோ அல்ல! எம் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிற நேர்மையான போராளிகள்" - என்று இலங்கை நீதிமன்றத்தில் உரத்த குரலில் பிரகடனம் செய்தவன், மாவீரன் தங்கதுரை.

பிரபாகரனுக்கு, 'தங்கண்ணா'. தங்கதுரையும், பிரபாகரனைப் போலவே, வல்வெட்டித்துறை கல்வெட்டு.

தமிழினம் காக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முயன்ற பௌத்த சிங்கள இனவெறியர்களுக்கு, அவர்கள் 'யார்' என்பதை உணர்த்திய தங்கண்ணா தான், பிரபாகரன் முதலான பலருக்கும் ஆதர்சம். 

ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் சரியாக இருக்கும் - என்று தோன்றியவுடன் 'தங்கண்ணா'விடம் தான் போய்ச் சேர்ந்தார் பிரபாகரன். வெலிக்கடை சிறைக்குள் ஜூலை 25ல் கொல்லப்பட்ட மாவீரன் ஜெகனின் விடுதலைப் போராட்ட ஈடுபாட்டுக்கும், தங்கண்ணா தான் காரணம்.

தங்கதுரையின் பிரகடனத்தைப் போலவே, கொழும்பு நீதிமன்றத்தில் ஜெகன் வெளியிட்ட பிரகடனமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1982ல் ஜெகனுக்கும் குட்டிமணிக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோது, அதைப்பற்றிக் கவலைப்படாமல், 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று நீதிமன்றத்தில் முழங்கியவன் ஜெகன்.

'என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட முடியும். சுதந்திரத் தமிழீழம் அமைவதை உங்களால் தடுத்துவிட முடியாது. எமது இளைய தலைமுறை அதை அடைந்தே தீரும்' என்று உரக்க முழங்கினார், ஜெகன்.

குட்டிமணியும் ஜெகனும், தங்கள் உடலை, யாழ் பல்கலை மருத்துவ பீடத்துக்கு வழங்கி விடும்படி கோரிக்கை விடுத்தனர். தங்களது கண்களை பார்வையற்றவர்களுக்கு வழங்கக் கோரினார்கள்.

'எங்களது கண்களை பார்வையற்ற தமிழர்கள் யாருக்கேனும் பொருத்துங்கள்..... அமையப் போகிற தமிழீழத்தை அவர்கள் வாயிலாக நாங்கள் தரிசிப்போம்' என்று அந்த நொடியிலும் தங்களது கனவை அவர்கள் விவரித்தது, இந்த இனத்தின் போர்க்குணத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது, இன்றுவரை!

'இன்று ஒரு குட்டிமணிக்கு நீங்கள் மரணதண்டனை வழங்கலாம். நாளைக்கு ஆயிரமாயிரம் குட்டிமணிகள் உருவாவார்கள்' என்று, நீதிமன்ற வளாகத்திலேயே, அச்சமின்றி முழங்கினார் குட்டிமணி.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை - என்கிற அந்த மாவீரர்கள் கொல்லப்பட்டது, கறுப்பு ஜூலையின் கடைசி வாரத்தில்! நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் தூக்கிலிடப்பட்டுவிடவில்லை.

வெலிக்கடை சிறையிலிருந்த சிங்களக் கைதிகளால், கொடூரமாகக் கொல்லப்பட்டனர். 1983 ஜூலை 23ம் தேதி, கொழும்பு நகரில், தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறியாட்டம், வெலிக்கடைச் சிறையையும் விட்டுவைக்கவில்லை.

சிறை அதிகாரிகளின் கண்ணெதிரில், தமிழ்க் கைதிகளைக் கத்திகளால் குத்தியும், இரும்புத் தடிகளால் அடித்தும் கொன்றனர், சிங்களக் கைதிகள். இது நடந்தது, ஜூலை 25 மற்றும் 27ம் திகதிகளில்!

வெலிக்கடை சிறை முழுக்க, தமிழரின் ரத்தக் கறை படிந்தது. 25ம் திகதி, குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகிய 35 பேரும், 27ம் தேதி 19 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது உடல்கள், புத்தருக்குப் படைக்கப்பட்டன.

ஆம்... சிறைக்குள்ளிருந்த புத்த பகவானின் உருவச் சிலைக்கு முன்தான் அந்த உடல்கள் போடப்பட்டன.

'தூக்கிலிட்டதும், எங்களது கண்களை பார்வையற்றவர்களுக்குப் பொருத்துங்கள்..... தமிழீழத்தை அவர்கள் வாயிலாக எங்கள் கண்கள் தரிசிக்கட்டும்' என்று குட்டிமணியும் ஜெகனும் நீதிமன்றத்தில் அறிவித்ததை மறக்கவேயில்லை, சிங்களக் காட்டுமிராண்டிகள்.

குட்டிமணி, ஜெகன் உள்ளிட்டோரைக் கொல்வதற்கு முன், கூர்மையான இரும்புக் கம்பிகளால் அவர்களது கருவிழிகளைத் தோண்டியெடுத்து, அவற்றைக் காலில் போட்டு மிதித்து, ஆனந்தக் கூத்தாடிய பிறகே ஓய்ந்தார்கள், புத்தனின் புத்திரர்கள்.

1983 ஜூலை கலவரத்தின்போது, கொழும்பு முதலான இலங்கை நகர்களிலும், வெலிக்கடை முதலான சிறைகளிலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலைகள், அது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவெறியாட்டம் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தின.

வெலிக்கடையைப் போலவே, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கொலைவெறியோடு திரிந்த இளைஞர்களை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, காவல் துறையும் இராணுவமும்!

சிங்கள இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பௌத்த மதப் பள்ளிகளில் பயின்ற இளம் பிக்குகள், பல பகுதிகளில் அந்த இனவெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

தமிழர்களின் கடைகளை, வீடுகளைக் குறிவைத்து அவர்கள் தாக்கினர். வீடுகளையும் கடைகளையும் கொளுத்தினர். கொளுத்துவதற்கு முன் கொள்ளையடித்தனர். உடைமைகளையும் பெண் பிள்ளைகளையும் காப்பாற்ற முயன்ற தமிழர்களைக் கொன்று குவித்தனர்.

லண்டன் டெய்லி டெலிகிராப், சிங்கள இளைஞர்களின் கொலைவெறியை அச்சு அசலாக அப்படியே விவரித்திருந்தது.

'கொழும்பு கண் மருத்துவமனை அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தமிழ் இளைஞனைத் தடுத்து நிறுத்திய ஒரு கூட்டம், அவன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தது.

அலறியபடியே ஓடிய அந்த இளைஞனை விரட்டிச் சென்று இரும்புக் கம்பிகளால் தாக்கிய சிங்கள இளைஞர்கள், அவனைத் தீக்கிரையாக்கினர்' என்று எழுதியது அது. அதையும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது சிங்களக் காவல்துறை.

கூச்ச நாச்சமின்றி, சிங்கள மிருகங்கள் நொடிக்கு நொடி உச்சரிக்கும் 'இறையாண்மை' என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது - கறுப்பு ஜூலை. நான்கைந்து நாட்களில் 3000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். 18 ஆயிரம் கடைகள் வீடுகள் சூறையாடப் பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

அப்போது அதிபராக இருந்தவர், ரணில் விக்கிரமசிங்கவின் பெரிய பெரியப்பா, ஜெயவர்தனே. ரணிலின் அரசியல் மூதாதையான அந்த மனிதரை வேறெப்படி அழைப்பது?

திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி, ஜெயவர்தனேவிடம் கேட்டது டெய்லி டெலிகிராப். 'தமிழர்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நான் தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் உண்மையிலேயே சந்தோஷப்படுவார்கள்' என்று கூசாமல் பேசியது அந்தக் கிழட்டு மிருகம்.

அந்தக் குட்டித் தீவின் பூர்விகக் குடிகளான தமிழ்மக்களின் தலைவிதி மாறவேயில்லை. ஆளுகிற சிங்களக் கட்சிகள், தமிழர்களை எப்படியெல்லாம் பழிவாங்கினால் இனவெறி பிடித்த சிங்கள மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற கணக்கிலேயே இருக்கின்றன.

எதிர்க்கட்சி சிங்களவர்கள், தமிழரைப் பழிவாங்க இன்னும் என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து அறிவிப்பதன் மூலம் பௌத்த சிங்கள இனவெறியர்களின் வாக்குகளைக் கவர முயல்கின்றனர்.

இந்த இரண்டு வெறியர்களில் எந்த வெறியரோடு கூடிக் குலவி கும்மியடிக்கலாம் - என்று ஆலோசிப்பதற்கே நேரம் போதவில்லை தமிழர்களின் தலைவர்களுக்கு!

ஒரு இனப்படுகொலையைத் திட்டமிட்டு செய்து முடித்தபிறகு, தமிழ்த் தலைவர்களின் நாடி பிடித்துப் பார்த்தது ஜெயவர்தனே மிருகம். கறுப்பு ஜூலை இனப்படுகொலை முடிந்த கையோடு இலங்கை வானொலியில் பேசிய அந்த மிருகம்,

 'இன்னும் 2500 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கை ஒரே நாடுதான்! தமிழர்களுக்குத் தனிநாடு கொடுக்க பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை' என்றது.

வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை மறைத்தபடி பேசிய ஜெயவர்தனே மிருகத்தின் அந்த அறிவிப்பை, இன்றைக்கு 'ஒற்றை இலங்கைக்குள்' என்று பேசுகிற அத்தனை தலைவர்களுக்கும் நாம் அர்ப்பணிப்போமாக!

காலில் போட்டு மிதிக்கப்பட்ட குட்டிமணி, ஜெகனின் கருவிழிகளையும் சேர்த்தே இந்தத் தலக்கட்டுகளுக்குப் படைப்போமாக!

2009ல் ராஜபக்சக்கள் நடத்திய இனப்படுகொலையை மூடி மறைக்கத்தான், 'போர்க்குற்றம்' என்கிற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது என்கிற உண்மை சந்தி சிரிக்கிறது இன்று! 'போர்க் குற்றம் என்று சொன்னால்தான் சர்வதேசம் காதுகொடுத்துக் கேட்கும்' என்று போதிப்பதன் மூலம்,

நமது வாலை அறுத்து நமக்கே சூப் வைத்துக் கொடுக்க முயல்கிற சமந்தகர்கள், இன்று நேற்றா இருக்கிறார்கள்! 1983 ஜூலையில், தீவு முழுவதும் நடத்தப்பட்ட இனப்படுகொலையை மூடிமறைத்து.

'நடந்தது இனக் கலவரம்' என்று ஜெயவர்தனே அரசு பேத்துமாத்து செய்ய முயன்றபோது மட்டும், இவர்கள் என்ன பேசிக் கிழித்திருக்கப் போகிறார்கள்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி, வேலுப்பிள்ளை பிரபாகரன் - என்று நான் எழுதியவுடன், 'குழந்தைப் போராளி என்று சொல்லாதீர்கள்.... குழந்தைத் தீவிரவாதி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்' என்று எனக்கு போதித்த நண்பர்கள், கறுப்பு ஜூலையைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

கறுப்பு ஜூலையின் போது, கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த நோர்வே பிரஜை ஒருவர், அங்கே நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையைப் பார்த்து பயந்து பதறியடித்துக் கொண்டு நோர்வேக்குத் திரும்பினார்.

ஒஸ்லோ போய்ச் சேர்ந்த பிறகு அவர் கொடுத்த பேட்டி ஒன்று, என்ன நடந்தது என்பதை இன்றுவரை நிறுவுகிற வலுவான ஆவணம்.

"சாலையில் வந்த பேருந்து ஒன்றை சிங்கள இளைஞர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தமிழ்ப் பயணிகள் யாரென்று கண்டறிந்து, அவர்களைத் தாக்கினார்கள், கத்திகளால் குத்தினார்கள்.

உயிருக்குப் போராடிய அவர்களைப் பேருந்துக்கு உள்ளேயே போட்டு, பேருந்துக்குத் தீ வைத்தார்கள். கண்ணெதிரில் அந்தப் பேருந்துக்குள் சுமார் 27 பேர் கருகிச் சாவதைப் பார்த்தேன்......

தமிழ்ப் பெண்கள், குழந்தைகள், முதியோர் தான் சிங்கள இளைஞர்களின் கொலைவெறிக்கு அதிகம் இரையானவர்கள். அந்த இனப்படுகொலையைத் தடுக்க காவல்துறையோ ராணுவமோ முயலவில்லை. நாங்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டபோது கொழும்பு எரிந்து கொண்டிருந்தது"....

இது அந்த நோர்வே பிரஜையின் வாக்குமூலம்.

குழந்தைப் போராளி யார், குழந்தைத் தீவிரவாதி அல்லது பயங்கரவாதி யார் என்கிற தார்மீகப் பார்வையை, ஒருதலைபட்ச காட்ராக்ட் மூலம் அறவே இழந்துவிட்ட என் நண்பர்களுக்காகவே அந்த வாக்குமூலத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின்போது, தமிழர்களை வெட்டிக் கொன்ற, தமிழர்களின் உடைமைகளைச் சூறையாடிய, தமிழர்களை பேருந்தோடு சேர்த்து எரித்த சிங்கள இனவெறிக் கும்பல்களில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பிக்குகளே அதிக அளவில் இருந்தார்கள் என்பதை, செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்போது, பிரபாகரனுக்கு வருகிறேன்.... பிரபாகரனுக்கு ஒரு பேருந்து எரிப்பில் இருந்த தொடர்புக்கு வருகிறேன்....

தமிழ் மாணவர் பேரவையில் இருந்தாலும், தங்கண்ணாவுடன் தான் நெருங்கினார் பிரபாகரன். அரச பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர்.

ஒருமுறை அரசின் இனவெறிக் கொள்கைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசுப் பேருந்து ஒன்றைக் கொளுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பு நான்கு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பிரபாகரன்.

நான்கு பேரில் மூன்றுபேர், அச்சத்தின் காரணமாக பாதி வழியில் திரும்பிவிட, பிரபாகரன் மட்டும் தனியே போய், பேருந்தைக் கொளுத்திவிட்டுத் திரும்பிவந்தார். அப்போது, பிரபாகரனுக்கு, 16 வயது!

இரண்டு நிகழ்வுகளிலும் இருக்கிற ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள நண்பர்கள் முயலவேண்டும்.

காவல்துறை வேடிக்கை பார்க்க, ராணுவம் பராக்கு பார்க்க, சுற்றிலும் நின்று கொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான பௌத்த சிங்கள மக்கள் 'அடி, குத்து, வெட்டு, கொளுத்து' என்று உற்சாகப்படுத்த, பேருந்துக்குள் இருந்த தமிழர்களை 'ஆண்மையோடு' வெட்டிக் குவித்து, அந்தப் பேருந்துக்குத் தீ வைத்தார்களே சிங்கள இளைஞர்கள், அந்த நபும்சகத்தனத்துக்குப் பெயர்தான் பயங்கரவாதம்! அந்த இளைஞர்கள்தான், உண்மையில் பயங்கரவாதிகள்!

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடும் கண்காணிப்புக்கு அஞ்சாமல், தன் இனத்துக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளுக்கு எப்படியாவது எதிர்ப்பு தெரிவித்தாக வேண்டும் என்கிற ஓர்மத்தோடு தன்னந்தனியாகப் போய், ஒரு அரசுப் பேருந்தை எரித்துவிட்டுத் துணிவுடன் திரும்பி வந்தானே..... வேலுப்பிள்ளை பிரபாகரன்.... அவன் எப்படி பயங்கரவாதியாவான்?

சுற்றி நின்ற சிங்களவர்களின் பேராதரவுடன் 27 தமிழர்களை எரித்துக் கொன்ற பொறுக்கிகளுக்கும், எடுத்துக் கொண்ட பொறுப்பில் நெருப்பு மாதிரி நின்ற பிரபாகரனுக்கும் இருக்கிற வேறுபாடு புரிகிறதா இல்லையா?

அந்த சிங்களப் பொறுக்கி இளைஞர்கள் தான் பயங்கரவாதிகள் என்பதையும், பிரபாகரன் என்கிற 16 வயது இளைஞன் ஒரு போராளி என்பதையும் நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா?

இரண்டுமே பேருந்தை எரித்த குற்றம்தான்! ஆனால், நோர்வே பிரஜை விவரித்த பேருந்து எரிப்புக்கும், பிரபாகரனின் பேருந்து எரிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

அந்த வித்தியாசத்தை, ஆறறிவு இருக்கிற மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? ஆறறிவு மரங்களாகவே தான் இருப்போம் என்று அடம் பிடிப்பது என்ன நியாயம்? 
இப்போது சொல்கிறேன் என் நண்பர்களுக்கு!

வேலுப்பிள்ளை பிரபாகரன் - ஓர் உண்மையான குழந்தைப் போராளி மட்டுமல்ல நண்பர்களே...

அவன் ஓர் உன்னதமான குழந்தைப் போராளி!

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

http://www.tamilwin.com/show-RUmtyHRaSVnw7I.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.