Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்பிற்குரிய மஹிந்த ராஜபக்ஸ ஐயா! - My3 யின் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தசாப்த காலமாக நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற உங்களது தலைமையிலான அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்த கடிதத்தை அனுப்பி வைக்கின்றேன்.


உங்களைப் போன்றே நானும் தேசிய அரசியலுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே பிவேசித்தேன். நீங்கள் இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் மீது நம்பிக்கை கொண்ட கட்சி ஆதரவாளர்களுக்குமே நன்றி பாராட்ட வேண்டும். எனினும் நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பது வேறும் வழியிலாகும்.


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டே நான் ஜனாதிபதியாக தெரிவாகினேன். உங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் மக்கள் காட்டி வந்த எதிர்ப்பிற்கு தலைமை தாங்கி, உங்களிடமிருந்தும் கட்சியிடமிருந்தும் விலகிப் போயிருந்த ஜனாதிபதிப் பதவியை கட்சிக் உரித்தாக்கியிருக்கின்றேன்.


எதிர்க்கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுடன் பொது வேட்பாளராக தெரிவாவதற்கான, இரகசியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எனக்கும் இடையில் நிலவிய போலியற்ற இதயபூர்வமான பிணைப்பேயாகும்.


தேர்தல் தோல்வி ஓர் கசப்பான அனுபவமாகும். எனினும் ஜனவரி மாதம் 8ம் திகதி தேர்தல் தோல்வியின் பின்னர் 1978 மற்றும் 2001ம் ஆண்டு தேர்தல் தோல்விகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்நோக்கிய நெருக்கடிகள் இம்முறை எதிர்நோக்க நேரிடவில்லை.


ஏனெனில், நீங்கள் தோல்வியைத் தழுவியதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவானது 48 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் உறுப்பினராகவும், 13 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றிய ஒருவரேயாகும்.

அனைத்து விதமான தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும் நான் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தேன். ஏதேனும் காரணத்திற்காக மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த வேறும் ஓர் நபர் பெர்து வேட்பாளராக போட்டியிட்டு நீங்கள் தோல்வியைத் தழுவியிருந்தால், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதனை நீங்கள் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.


 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நான் பாதுகாத்தேன்.


ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக நான் பாராளுமன்றைக் கலைத்திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனுமதிக்க முடியாது.


2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவாகும் வரையிலான உங்களது பயணத்தில் நீங்கள் எதிர்நோக்கிய நெருக்கடியான தருணங்களில் நான் உங்களுக்காக குரல் கொடுத்தமை எந்த வகையிலும் நீங்கள் மறந்திருக்க முடியுமா?


2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் உங்களை பிரதமராக நான் செய்த அர்ப்பணிப்புக்கள் போராட்டங்களை நீங்கள் மறந்திருக்க முடியாது. நீங்கள் பிரதமராகக் கூடாது என்பதற்காக அப்போது ஜே.வி.பியில் அங்கம் வகித்த விமல் வீரவன்ச கட்சியின் முழுப் பலத்தைப் பிரயோகித்து செய்த நாசவேலைகளின் போது நான் உங்களுடன் இருந்திருக்கின்றேன்.

கட்சியின் செயலாளரான நான் உங்களை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென தைரியமாகவும் திடமாகவும் குரல் கொடுத்திருந்தேன். அப்போது இன்று உங்களுக்காக குரல் கொடுக்கும் பலர் ரணிலுடன் புதிய அரசாங்கத்தில் எவ்வாறான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது என பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.


நீண்ட காலமாக அரசியல் நண்பர்களாக இருந்த எமக்கு இடையில் விரிசல் ஏற்படுவதற்கு பசில் ராஜபக்சவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளே முக்கிய ஏதுவாகியது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றேயாகும். அவர் மைத்திரிபால எதிர் கொள்கைகளைப் பின்பற்றி என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்ட கடும் பிரயத்தனம் மேற்கொண்டார். இந்த முயற்சி உங்கள் அனைவரையும் மோசமாக எதிர்த்திசையில் தாக்கியுள்ளது.


பசில் ராஜபக்ச எனது அரசியல் பயணத்திற்கு தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி வந்தார். இந்தப் பிரச்சினைகளில் தலையீடு செய்து என்னை காப்பாற்றுவீர்கள் என எதிர்பார்த்தேன் எனினும் நான் பொது வேட்பாளராக போட்டியிடும் வரையில் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.


கடந்த ஏழு மாத காலப்பகுதியில் நீங்களும் நானும் சந்தித்த மூன்று சந்தர்ப்பங்களிலும், நீங்கள் குருணாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கையொப்பமிடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொலைபேசியில் உரையாடிய போதும் நீங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றே கூறியிருந்தேன.; ஏனெனில் இந்த பொதுத் தேர்தலை வழிநடத்தி கட்சியை வெற்றியீட்டச் செய்யும் முனைப்புக்களை மேற்கொள்ள திட்ட்டமிட்ருந்தமையே அதற்கான காரணமாகும். எனினும் தேர்தலில் போட்டியிடுவதாக நீங்கள் வேட்பு மனுவில் கையொப்பமிட்டதனைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி என்ற ரீதியில் எனது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டன.


நீங்கள் போட்டியிடாமல் இருந்திருந்தால் எனக்கு தேர்தலில் ஆதரவளித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், மத்திய தர வர்க்க மக்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் ஆதரவினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மீளவும் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.


நீங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறியதன் அர்த்தம், நீங்கள் ஒட்டு மொத்தமாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்திலானதல்ல. உங்களுக்கு கௌரவமான அரசியல் பதவியொன்றை வழங்க வேண்டுமென நான் யோசனை முன்வைத்திருந்தேன், அதற்காக அரசியல் சாசன திருத்தங்கைளக் கூட நான் பரிந்துரை செய்திருந்தேன். உங்களது குடும்பத்தில் பலர் இதற்கு இணங்கியிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீங்கள் இந்த அனைத்தையும் நிராகரித்தீர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்து எந்தவிதமான கரிசனையும் அவசியமும் இல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிறிய கட்சிகளின் கைதியாக நீங்கள் மாற்றமடைந்துள்ளீர்கள்.


அந்த தரப்புக்கள் உங்களுக்கு காணப்படுவதாக கருதப்படும் வாக்குப் பலத்தினைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றியீட்ட முயற்சித்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரான 64 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இராட்சத சுதந்திரக் கட்சி சிறு கட்சிகளின் பிடியில் அகப்பட்டு சிக்கியதற்கான பொறுப்பினை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


 எமது கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதிகள் பலர் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் விருப்பு வாக்கு வேட்டையில் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலைமை வருத்தமளிக்கின்றது.


வாக்காளர் அடிப்படையற்ற சில சிறிய கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை தடை செய்ய எடுக்கும் முயற்சிகளை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு கட்சியின் முதலாவது அதிகாரிகளை தெரிவு செய்த போது எமது நாட்டின் அனைத்து இன மத சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வகையிலான பேர்னாட் அலுவிஹாரே, பதியூதின் மொஹமட் மற்றும் தங்கராஜா போன்ற சமூக நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு கட்சியின் முக்கிய பதவிகளை வழங்கியிருந்தார். தூரதரிசனத்துடன் இந்த தீர்மானங்களை எடுத்திருந்தார்.


எனினும், 1956ம் ஆண்டில் சுதந்திரக் கட்சி இனவாத சார்புடைக் கட்சியாக கருத்துக்கள் எழத் தொடங்கியிருந்தது. எனினும் அதன் பின்னர் கட்சியை நிர்வாகம் செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் இன மத பல்லினத்தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் ஆட்சி செய்தனர். எனினும் நீங்கள் ஆட்சி செய்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சியின் பல்லின சார் யதார்த்ததை புரிந்து கொள்ளா கட்சியாக மாற்றமடைந்திருந்தது. அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள பௌத்த சமூகத்தை பிரதிபலிக்கும் கட்சியாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறான ஓர் கடும்போக்குவாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றதொரு கட்சிக்கு ஏற்புடையதாக அமையாது.


ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தையும் உள்ளடக்கிய கட்சியாக மீளவும் சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்பும் சவாலுக்கு நான் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. எனினும் உங்களைச் சுற்றியிருப்போர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக விருப்பு வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த இனவாதிகள் அனைவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு தேவையான வகையில் கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது.


நீங்கள் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் நாட்டில் பெரும்பான்மை இனம் என்று ஒன்றும் சிறுபான்மை இனங்கள் என ஒன்றும் கிடையாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தீர்கள். எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம் முதல் இந்த மாதம் 12ம் திகதி தேசிய பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வி வரையிலான அநேக சந்தர்ப்பங்களில் நீங்களும் உங்களுக்காக குரல் கொடுக்கும் தரப்பினரும் கடுமையான இனவாதத்தை பிரதிபலிக்கின்றீர்கள்.  என்னுடைய பௌத்த மதத்தின் அடிப்படையிலும் ஏனைய மதங்களின் அடிப்படையிலும் இதனை அனுமதிக்க முடியாது.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எம்மீது எல்லையற்ற நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வரும் இந்த தருணத்தில், நான் தேர்தலை வழிநடத்தியிருந்தால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவினையும் நம்பிக்கையயும் எமது கட்சிக்கு நிச்சயமாக பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்பதனை நான் வலியுறுத்துகின்றேன்.


21ம் நூற்றாண்டில் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணத்தில் இனவாத தீயை மூட்டி குறுகிய அரசியல் லாபத்தை ஈட்ட முயற்சிக்கும் நடவடிக்கையானது நாட்டுக்கும் கட்சிக்கும் செய்யும் பாரிய அழிவாகும்.


வேட்பு மனு வழங்குவது குறித்து எழுந்த பிரச்சினைகளின் போது கட்சி பிளவடையாமல் தடுப்பதனையே நான் மிகவும் முக்கியமானதாக கருதினேன். இரண்டு கட்சி முறைமை கொண்ட எமது நாட்டைப் போன்ற நாடுகளில் ஒரு கட்சி பிளவடைவதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை என்னைப் போன்றே உங்களுக்கு நன்றாகத் தெரியும் என நம்புகின்றேன்.


நீங்கள் தனியான குழுவாக போட்டியிடத் தீர்மானம் எடுத்தனைத் தொடர்ந்து நான் வேண்டுமேன்றே பின்வாங்கினேன். ரணதுங்க குடும்பத்தில் மூன்று பேருக்கு கம்பாஹவில் வேட்பு மனு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என நான் கருதினேன். பிரசன்ன ரணதுங்க வேட்பு மனு தேவையில்லை என கூறுவார் என எதிர்பார்த்தேன். பிரசன்னவிற்கு வேட்பு மனு வழங்காவிட்டால் தனித்து போட்டியிடுவதாக நீங்கள் தீர்மானித்திருந்தீர்கள். 64 அண்டு பழமையான கட்சியொன்று ஒரு நபருக்கு வேட்பு மனு வழங்காத காரணத்தினால் பிளவடைவதனை நான் விரும்பவில்லை.


தேசிய அரசாங்கம் பற்றிய யோசனை என்னுடைய தனியான யோசனை கிடையாது. இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் பூரண அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி இணக்கம் ஏற்படுத்திக் கொண்டு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை உங்களது தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


உங்களிடம் காணப்படும் வாக்கு பெறுமதி என்னும் இறுதிச் சொட்டு இரத்தத்தை உரிஞ்சிக் குடிக்கும் கொடூர நோக்குடைய தரப்பினர் உங்களைச் சுற்றியிருக்கின்றார்கள். அவர்கள் இரகசியமாக என்னைத் தொடர்பு கொண்டு பொதுத் தேர்தலின் பின்னர் என்னுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், ஏதேனும் அமைச்சுப் பதவியை வழங்குமாறும் கோரி வருகின்றனர். தொலைபேசி ஊடாகவும் தூதுவர்கள் ஊடாகவும் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எமது கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரோதிகளாக சித்தரித்த தரப்பினர் இறுதி நேரத்தில் எனது புகைப்படம் அடங்கிய விளம்பரங்களை பிரச்சாரம் செய்து வருவதனை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.  விருப்பு வாக்கு மாபியாவினால் சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய தோல்வியைத் தழுவக் கூடும்.


நீங்கள் என்னுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தீர்கள் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.


அவ்வாறு உண்மையாகவே என்னுடன் இணைந்து செயற்பட விரும்பினால், விசேடமான விடயமொன்றை நான் உங்களுக்கு கூற வேண்டியுள்ளது.


18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினதும் மக்களினதும் ஒட்டுமொத்த ஜனநாயகமும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்காகவே நீங்கள் அவ்வாறு சட்டம் இயற்றியிருந்தீர்கள்.


ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று இரண்டு தடவையின் பின்னர் நீங்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தால் கட்சிக்காக அர்ப்பணிப்புச் செய்த சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றுமொருவர் பிரதமராகவும் பதவி வகிக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்கும்.
இதன் மூலம் தேர்தலின் பின்னரும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பங்களை முடக்குவதே உங்களது திட்டம் என்பது வெளிச்சமாகியுள்ளது.


அவர்களுக்கு இப்போதேனும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் அல்லவா? அரசங்கமொன்றை அமைக்க தேவையான குறைந்தபட்ச 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டாலும் பிரதமர் பதவியை சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்க வேண்டியது சரியானது என்பதே எனது நிலைப்பாடாகும்.


ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் 113 ஆசனங்களைக் கூட்டமைப்பினால் பெற்றுக்கொள்ள முடியாது போனால் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கு தலையீடு செய்ய முடியும். அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலும் நீங்கள் பிரதமராக பதவி விக்க கூடாது, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே பதவி வகிக்க வேண்டும். எமது கட்சியில் பிரதமர் பதவியை வகி;க்க கூடிய தகுதியும், திறமையும் அனுபவமும் உடைய பல சிரேஸ்ட தலைவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஓர் விசேட அம்சமாகும்.

நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, சமால் ராஜபக்ஸ, அதாவுட செனவிரட்ன, ஏ.எச்.எம்.பௌசீ, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்சன யாபா போன்றவர்களை குறிப்பிட முடியும்.


இவ்வாறு ஒருவரை நியமிக்க உங்களது நெகி;;ழ்வுத்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.


ஜனாதிபதி தேர்தல் நிறைவின் பின்னர் விஹாரைகள் தோறும் வழிபாடுகளில் ஈடுபட்டமையும் அதற்கு ஊடகங்களில் வழங்கப்பட்ட பிரச்சாரமும் நகைப்பிற்குரியது.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி முதல் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி வரையில் உங்களது எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளை நான் நன்கு அறிவேன். கடந்த ஆறு மாத காலத்தில் விஹாரைகளுக்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் உங்களிடம் ஆன்மீக உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பது சந்தேகமேயாகும். நீங்கள் தனிப்பட்ட ரீதியில் கட்சி உறுப்பினர்களுடன் பேசும் போதும் குரோத உணர்வுடன் பேசுகின்றீர்கள்.


இவ்வாறான ஓர் நிலையில், கட்சியினதும் நாட்டினதும் நலனைக் கருத்திற் கொண்டு உணர்வுகளுக்கு அடிமையாகாது சிந்தனை ஆற்றலுடன் செயற்படுமாறும், இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும், கட்சிக்குள் பிளவினை எற்படுத்த வேண்டாம் எனவும் உங்களிடம் கோருகின்றேன்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படும். அவ்வாறு நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
மைத்திரிபால சிறிசேன
தலைவர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122914/language/ta-IN/article.aspx

வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி கிடையாது – மகிந்தவுக்கு மைத்திரி கடிதம்

AUG 13, 2015 | 13:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-maithriவரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை வென்றாலும் கூட, பிரதமராகி விட முடியாது என்று, மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர மன்னணி அரசாங்கத்தில் இதற்கு முன்னர் பிரதமராகப் பதவி வகிக்காத சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரே பிரதமராக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, சமல் ராஜபக்ச, அதாவுட செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அடுத்த பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவிடம் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இனவாதப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்சவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/08/13/news/8663

மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரியின் கடிதம் – (முழுமையாக)

AUG 14, 2015 | 2:12by புதினப்பணிமனைin செய்திகள்

mahinda-maithriஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை வழங்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எழுதிய 5 பக்க கடிதத்தின் முழுமையான விபரம்-

இரண்டு பத்தாண்டுகளாக நான்கு அதிபர் தேர்தல்கள் மற்றும் நான்கு  நாடாளுமன்ற தேர்தல்களை வெற்றிகொண்டசிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி கடந்த அதிபர் தேர்தலில் உங்கள் தலைமையில் தோல்வியடைந்தது. தேர்தலின் பின்னர் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.

உங்களைப் போன்றே நானும் அரசியலில் சுதந்திரக்கட்சியின் ஊடாக கால்பதித்தேன். நீங்கள் இரண்டு முறை இந்த நாட்டில் நிறைவேற்று அதிபராக பதவி வகித்தீர்கள். சுதந்திரக்கட்சியின் ஊடாகவே இதனை உங்களால் அடையமுடிந்தது.

ஆனால் நான் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிமுகமாகியே அதிபராக பதவி பெற்றுள்ளேன். உங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் காணப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றிணைத்து அதிபர் பதவியை மீண்டும் கட்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டுள்ளோம்.

எனினும் எனக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையிலான பிணைப்பு மிகவும் பலமானது. தேர்தல் தோல்வி என்பது இனிமையான அனுபவமாக இருக்காது.

எனினும் கடந்த அதிபர் தேர்தல் தோல்வியின் பின்னர் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் 1977 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகளைப் போன்ற முட்கள் நிறைந்த அனுபவத்தை பெறவில்லை.

காரணம் சுதந்திரக் கட்சியில் 48 ஆண்டுகள் அங்கம் வகித்து 13 ஆண்டுகள் பொதுச்செயலராக இருந்த நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

ஒருவேளை மைத்திரிபால சிறிசேன அன்றி வேறுயாராவது பொதுவேட்பாளராக வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

எனது வெற்றியின் பின்னர் நான் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் பாதுகாத்தேன்.

நான் ஜனவரி 8 ஆம் நாள் வெற்றிபெற்றவுடன்  நாடாளுமன்றத்தை கலைத்திருந்தால், சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்ன நடந்திருக்குமென எண்ணிப்பார்க்க முடியாது.

2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபராகும் வரை கடந்துவந்த தீர்க்கமான பயணங்களில் நான் உங்களுக்காக முன்னின்றேன் என்பதை மறக்கமுடியுமா?

2004 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் உங்களை பிரதமராக நியமிப்பதற்கு நான் எடுத்த முயற்சிகள் எவ்வாறானதென்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அன்று உங்களை பிரதமராக்க விடாமல் ஜேவிபியின் விமல் வீரவன்ச முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக நான் உங்களுக்காக முன்னின்றேன்.

2005 ஆம் ஆண்டு உங்களை அதிபர் வேட்பாளராக நியமிக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் போது உங்களுக்காக முன்னின்றேன்.

எனினும் இன்று உங்களிடமிருக்கின்ற பலர் 2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபர் தேர்தலில் தோற்றிருந்தால் ஐ.தே.க.வுடன் இணைவதற்கு தயாராகவிருந்தனர்.

சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான எனக்கும் உங்களுக்குமிடையிலான நீண்டகால அரசியல் உறவு பாதிப்படைந்தமைக்கு பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தன என்பது உங்களுக்கு தெரிந்த விடயம்.

மைத்திரிபாலவுக்கு எதிரான கொள்கையொன்றை பசில் பின்பற்றி என்னை தோல்வியடைந்த அரசியல்வாதியாக காட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் இறுதியில் உங்கள் குடும்பமே தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்தன.

பசில் ராஜபக்ச எனது அரசியலுக்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் அந்த விடயத்தில் தலையிட்டு எனது சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு உங்களால் முடியும் என நான் எதிர்பார்த்தேன்.

எனினும் நான் எதிர்பார்த்த நேர்மைத்தன்மையை நீங்கள் 2014 நவம்பர் 21 ஆம் நாள் வரை வெளிக்காட்டவில்லை.

கடந்த ஏழு மாதங்களில் நான் உங்களை மூன்று தடவைகள் சந்தித்தேன்.

நீங்கள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கைச்சாத்திடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினீர்கள்.

அனைத்து சந்திப்புக்களின் போதும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தயாராகவிருப்பதாகவும் கூறினேன்.

எனினும் நீங்கள் வேட்புமனுவில் கைச்சாத்திட்டதும், சுதந்திரக்கட்சியின் தலைவரான எனது வகிபாகம் எதிர்பார்ப்பற்ற நிலைக்கு போனது.

நீங்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் விட்டிருந்தால் கடந்த தேர்தலில் என்னுடன் செயற்பட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு சுதந்திரக்கட்சியை பாரிய நம்பிக்கை பாதையில் கொண்டு சென்றிருப்பேன்.

தேர்தலில் நீங்கள் போட்டியிடக் கூடாது என நான் கூறியிருந்தாலும் அரசியலில் இருந்து உங்களை முழுமையாக அகற்றும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. உங்களுக்காக பொருத்தமான தகுதியான அரசியல் அமைப்பு ரீதியான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நான் முன்வந்திருந்தேன்.

உங்கள் குடும்பத்தில் பலர் அதனை விரும்பியதாகவும் அறிந்தேன். எனினும் நீங்கள் அதனை நிராகரித்ததுடன் சுதந்திரக்கட்சி பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக மட்டும். செயற்பட்டு வந்தீர்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சிறிய குழுவினர் உங்களிடமுள்ள வாக்கு பலத்தை பயன்படுத்தி அவர்கள்  நாடாளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர்.

64 ஆண்டு வரலாற்றைக் கொண்ட- 35 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்த சுதந்திரக் கட்சி ஒரு சிறிய குழுவினரின் குகைக்குள் சிக்கியது. அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும்.

விருப்புவாக்கு பலமற்ற, அரசியல் எதிர்காலம் இல்லாத ஒரு சிறிய குழுவினரின் கைகளுக்கு கட்சியை ஒப்படைப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.

1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சி இனரீதியான, மத ரீதியான ஆழம் நிறைந்த கட்சியென்ற ஒரு கருத்து நிலவிய போதும் அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கியபோது எமது கட்சியானது பல்லின, பலமத பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சியென அடையாளப்படுத்தப்பட்டது.

எனினும் நீங்கள் சுதந்திரக்கட்சிக்கு தலைமை வழங்கிய கடந்த 9 ஆண்டுகளில் இலங்கையின் சமூக யதார்த்தமான பன்முகத்தன்மையை நிராகரித்த கட்சியாக சுதந்திரக்கட்சி உருவாகியுள்ளது.

ஜனவரி 8 ஆம் நாள் நீங்கள் அடைந்த தோல்விக்கு உங்களாலேயே உருவாக்கப்பட்ட இனவாதம் உங்களுக்கு எதிராக செயற்பட்டமை உங்களுக்கு தெரியாதா?

காரணம் சுதந்திரக்கட்சி சிங்கள பௌத்த மக்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக மாறியது. இவ்வாறான ஒரு அடிப்படைவாத நிலைமை சுதந்திரக்கட்சி போன்ற ஒரு மூத்த கட்சிக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது.

அதிலிருந்து மீள்வதற்கும் சுதந்திரக் கட்சியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தான கட்சியாக மாற்றியமைப்பதற்குமான சவால் என்னிடம் உள்ளது.

எனினும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இனவாதத்தை உருவாக்கி விருப்பு வாக்கினைப் பெற முயற்சிக்கும் ஒருகுழுவினர் அல்லவா?

இவர்கள் உண்மையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அல்ல. அவர்களுக்குத் தேவையானவாறு கட்சியை இயக்குவதற்கு இடமளிக்க முடியாது.

நீங்கள் அதிபராக இருக்கும்போது இந்த நாட்டில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என இனங்கள் இல்லை என அடிக்கடி கூறியிருந்தீர்கள்.

எனினும் கடந்த அதிபர் தேர்தல் முதல் ஓகஸ்ட் 12 ஆம் நாள் வரை நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் இனவாதத்தையே பரப்பினீர்கள்.

நான் வணங்கும் பௌத்த தர்மம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் இனவாதத்தை எதிர்க்கின்றன. அதனை அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் குடிமக்கள் என்னில் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். ஓகஸ்ட் 17 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியை நான் வழிநடத்தியிருந்தால் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு நம்பிக்கையை எமது கட்சி பெற்றிருக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை வெல்வதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பத்தில் இனவாதத்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பது கட்சிக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகமாகும்.

வேட்புமனு வழங்கும் செயற்பாட்டில் கட்சியின் தலைவராகவும் எனக்கு ஒரு சவால் காணப்பட்டது. அதாவது இந்த மிகப்பெரிய சுதந்திரக்கட்சியை உடைத்து விடக்கூடாது என நான் சிந்தித்தேன்.

இரண்டு கட்சி கலாசாரமுடைய எமது நாட்டில் ஒரு கட்சி பலவீனமடைந்து வீட்டால் அதனால் ஏற்படும் நிலைமை என்னவென்று எனக்கு தெரியும். எனவே எந்தவொரு காரணத்திற்காகவும் சுதந்திரக்கட்சியை இரண்டாக உடைவதற்கு இடமளிக்கமுடியாது.

எனினும் நீங்கள் சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு தனித்து வேட்புமனு தாக்கல் செய்ய தயாராகியமையால் கட்சியின் எதிர்காலத்தை நினைத்து நான் எனது பக்கத்தில் பின்னடைவுக்குச் சென்றேன்.

கம்பகா மாவட்டத்தில் ரணதுங்க குடும்பத்தில் மூவருக்கு சுதந்திரக் கட்சியில் வேட்புமனு கொடுப்பது யதார்த்தமல்ல என்ற நிலையில் மேல்மாகாண முதலமைச்சர் தனது வேட்புமனுவை நீக்கிக்கொள்வார் என எதிர்பார்த்தேன்.

எனினும் முதலமைச்சருக்கு வேட்புமனு கிடைக்காவிடின் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறியிருந்தீர்கள்.

அதனால் ரணதுங்க குடும்பத்தில் ஒருவர் கட்சியை விட்டு விலகி ஐ.தே.க.வுடன் இணைந்தபோது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு நான் மௌனமாக இருந்தேன்.

ஒருவருக்கு வழங்கப்படும் வேட்புமனு விவகாரத்தினால் கட்சி பிளவுபடாமல் தடுப்பதற்காக உபாய ரீதியாக நான் பின்னடைவுக்குச் சென்றமை ஒற்றுமைக்கு வலுவாக அமைந்தது.

தேசிய அரசாங்க யோசனை என்பது எனது தனிப்பட்ட யோசனை அல்ல. அதற்கு சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவும்  நாடாளுமன்ற குழுவும் முழு அனுமதியை வழங்கியது. அதன் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் அமைந்தது.

சுதந்திரக்கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளும் கிடைத்தன. எனினும் அவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெற்றவர்களை உங்கள் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது விருப்புவாக்கு சண்டையாகும்.

இது தொடர்பில் நான் அறிந்த உண்மைக் கதையை கூறவேண்டும்.

உங்களுக்குள் எஞ்சியிருக்கும் இறுதி அரசியல் இரத்தத்துளியையும் உறிஞ்சி அருந்துவதற்கு உங்களை சுற்றியுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர். உங்களின் பண்புகளைப் பாடிக்கொண்டிருக்கும் இந்த குழுவினர் எனக்கு இரகசிய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியும் தூது அனுப்பியும் பொதுத் தேர்தலின் பின்னர் என்னுடன் அரசியல் செய்வதற்கு தயாராகவுள்ளதாக கூறிவருகின்றனர்.

அவர்களுக்கு எதாவது ஒரு அமைச்சுப் பதவியை தரும்படி கோருகின்றனர். இவ்வாறு சந்தர்ப்பவாதியாக செயற்படும் இவர்கள் உங்களுக்கு ஆதரவு போன்று உங்களுடன் நிற்கின்றனர்.

கட்சிக்குள் பிரிவு இருப்பதாக காட்டும் அவர்கள் பொதுத்தேர்தலுக்காக என்னுடைய புகைப்படத்தை பரப்புரைக்காக பயன்படுத்தும் விதத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

உங்களையும் உங்களது பெயரையும் உங்களது புகழையும் கொள்ளையடிக்கும் இந்த விருப்பு வாக்கு கொள்ளையர்கள் தொடர்ந்தும் இருந்தால் ஐ.ம.சு.மு.வின் தோல்வி நிச்சயமாகி விடும்.

நீங்கள் என்னுடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் செய்தியொன்றை அண்மையில் ஊடகத்தில் பார்த்தேன். உங்களுக்கு அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் நான் உங்களுக்கு ஒருவிடயத்தை கட்டாயம் கூறியே ஆகவேண்டும்.

உங்களினால் தான்தோன்றித்தனமாக நிறைவேற்றப்பட்ட 18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் காரணமாக நாட்டினதும் மக்களினதும் ஜனாநாயக சுதந்திரம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

அது மட்டுமன்றி சுதந்திரக்கட்சியின் உயிரும் உயிரான சமூக ஜனநாயக முகமும் கட்டுடைந்து போனது. நிரந்தரமாக அதிபர் பதவியில் நீடிப்பதற்காக நீங்கள் மக்களின் சுதந்திரத்தையும் அபிமானத்தையும் கட்சியினதும் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் எதிர்காலத்தை பறித்திருந்தீர்கள்.

உங்களுக்கு முன் இருந்த அதிபர்கள் செய்ததை போன்று நீங்களும் இரண்டு தடவை பதவிக்குப் பின்னர் ஓய்வு பெற்றிருந்தால் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அதிபராகவும் மற்றொருவர் பிரதமராகவும் பதவி பெற சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

எனினும் தற்போதும் பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தட்டிப்பறிப்பதற்கு நீங்கள் முயற்சிப்பது தெளிவாகிறது. அவர்களுக்கு தற்போதாவது உரிய இடம் கிடைக்க வேண்டாமா?

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கான குறைந்தபட்ச தேவையான 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றால் இதுவரை பிரதமர் பதவியை பெறமுடியாத சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக வேண்டும் என நான் நம்புகிறேன்.

ஒருவேளை 113 ஆசனங்களைப் பெறமுடியாமல் அதற்கு அண்மித்த ஒரு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  பெற்றால் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான எஞ்சிய ஆசனங்களைப் பெறுவதற்கான தலையீட்டை நிறைவேற்று அதிபர் என்ற வகையில் நான் மேற்கொள்வேன்.

அப்போதும் கூட பிரதமராக உங்களை பிரதமராக நியமிக்கமாட்டேன். கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக பதவிபெறவேண்டும்.

பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அனுபவமுள்ள அரசியல் தூரநோக்கு கொண்ட பல தலைவர்களைக் கொண்ட ஒரே கட்சி சுதந்திரக்கட்சியாகும்.

குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, சமல் ராஜபக்ச அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜயந்த அனுர பிரியதர்சன யாப்பா போன்ற மூத்த உறுப்பினர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு உங்கள் ஆதரவையும் நெகிழ்வுத்தன்மையையும் தியாகத்தன்மையைும் ஆசிர்வாதத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என நாட்டினதும் மக்களினதும் சார்பாக கோரி நிற்கின்றேன்.

கடந்த ஜனவரி 8 ஆம் நாள் தோல்வியுற்றத்தில் இருந்து இன்று வரை நீங்கள் விகாரைகளுக்கு சென்றதும் அதற்கு ஊடக விளம்பரத்தைப் பெற்றதும் ஆச்சரியமானதாகும். காரணம் 2010 ஜனவரி 26 ஆம் நாளில் இருந்ர் 2014 நவம்பர் 21 ஆம் நாள் வரை நீங்கள் எவ்வாறு செயற்பட்டிர்கள் என எனக்குத் தெரியும்.

நீங்கள் கட்சி மட்டத்தில் நடத்தும் கலந்துரையாடல்களில் வைராக்கியம், குரோதம் போன்றவற்றையே நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் என கூறப்படுவது உண்டு.

எனவே எதிர்வரும் தேர்தல் நாள் வரை இதயத்தினாலன்று புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமாறும் இனவாதத்தை பரப்பும் கூற்றை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

http://www.puthinappalakai.net/2015/08/14/news/8670

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.