Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகரத்துக்குள் ஒரு நாடு: வாடிகன்

Featured Replies

நகரத்துக்குள் ஒரு நாடு: வாடிகன் 1

 

 
வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம்
வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம்

ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன்.

இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு!

‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது.

இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆனால் அந்தக் காலத்தில் ரோம சாம்ராஜ்யம் என்பது பரந்து, விரிந்திருந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் இருந்ததுதான் பெத்லஹேம். - யேசுநாதர் அவதரித்த இடம்.

ரோம் நகரிலிருந்து வாடிகனுக் குச் செல்வதற்கு ஒரு மிக பிரம் மாண்டமான சுரங்கப் பாதை மற்றும் நுழைவாயில் வழியாகத்தான் நாங்கள் செல்ல நேர்ந்தது. ஆம், ஏதாவதொரு ‘கேட்’ வழியாகத் தான் வாடிகனுக்குள் நுழைய முடியும். இவ்வளவு முக்கியமான நுழைவாயில்களை கண்கவரும் உடைகளோடு காவல் காப்பவர் களுக்கு ஒரு பொதுவான அம்சம் உண்டு.

அவர்கள் அத்தனை பேரும் பூர்வாசிரமத்தில் சுவிட்சர் லாந்து வாசிகள். அதாவது அந்த நாட்டிலிருந்து வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட காவலா ளிகளின் பரம்பரைக்குதான் இங்கு காவல் காக்கும் தகுதி.

மற்றபடி வாடிகனுக்கு என்று ராணுவம் கிடையாது. கத்தோலிக் கர்களின் காணிக்கையால் கஜானா நிரம்பி வழிகிறது. தவிர எந்தவித மான வணிகத்தையும் வாடிகன் வைத்துக் கொள்வதில்லை.

தமிழ்நாட்டில் ஏதாவது பிரபல அரசியல் தலைவருக்கு கூடும் கூட்டத்தையே ‘பல்லாயிரக் கணக்கில்’ என்போம். ஆனால் வாடி கனின் மக்கள் தொகை சுமார் ஆயிரம்பேர்தான். (மற்றவர்கள் எல்லாம் வந்து தொழுதோ, வேடிக்கை பார்த்தோ செல்பவர்கள்).

மக்கள் தொகை சுமார் ஆயிரம் என்ற புள்ளிவிவரத்தோடு வேறொரு புள்ளிவிவரத்தையும் இணைத்துப் பார்த்தால் கொஞ்சம் முரணாக இருக்கும். போப்பின் அலுவலகம் என்பது ஒன்றோ டொன்றாக இணைக்கப்பட்ட பல கட்டிடங்களைக் கொண்டது. அங்குள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம். ஐ.நா.சபையில் வாடிகன் ஓர் உறுப்பினர் இல்லை. என்றாலும் அதற்கு அங்கு ’நிரந்தரப் பார்வையாளர்’ அந்தஸ்து உண்டு.

கொஞ்சம் வாடிகன் சரித்திரத் தில் புகுவோமா?

வாடிகனில் பல நூற்றாண்டு களாகவே (ஏசுநாதர் காலத்தி லேயே) கிறிஸ்தவம் காலூன்றி உள்ளது. தூய பீட்டர் - இவருக்கு கத்தோலிக்க மதத்தில் தனி அந்தஸ்து உண்டு. ரோம் நாட்டின் முதல் போப் ஆண்டவர் அவரே. ‘’எனக்குப் பிறகு சர்ச்சை வழி நடத்தும் பொறுப்பு உனக்குதான்’’ என்று யேசுநாதர் அவரிடம் குறிப்பிட்டிருந்தாராம்.

மன்னன் நீரோவைத் தெரியும் இல்லையா என்று கேட்டால் ‘’ஓ, ரோம் பற்றியெரிந்த போது ஃபிடில் வாசித்தவன்தானே?’’ என்பீர்கள். அவனேதான்.

கி.பி. 54 முதல் 68 வரை ரோம ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக விளங்கியவன். ஒருபுறம் பிற நாடுகளுடன் நல்லெண்ண நடவடிக்கைகள், வணிகம், பண்பாடு என்றெல்லாம் நல்ல பெயர் வாங்கினான்.

கி.பி. 64-ம் ஆண்டு ரோம் நகரம் ஒரு மாபெரும் தீவிபத்தை சந்தித்தது. இதை Great Fire of Rome என்றே சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்கள். தனக்கு ஒரு பிரம்மாண்ட அரண்மனையை எழுப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக நீரோவேதான் இப்படி நகருக்குத் தீ வைத்தான் என்றும் கூறப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் என்றால் அவனுக்கு ஆகாது. கிறிஸ்த வர்களை எண்ணெயில் பொரித்து அவர்களின் உடலை எரித்து அந்த வெளிச்சத்தில் படிப்பது அவனது வழக்கம் என்றுகூட ஒரு நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (அதெல்லாம் அதிகப்படி என்று கூறும் சரித்திர ஆராய்ச்சி யாளர்களும் இருக்கிறார்கள்)

தூய பீட்டர், மன்னன் நீரோவினால் கொல்லப்பட்டான். பீட்டரைக் குறிவைத்து அவன் கொல்லவில்லை. வாடிகன் குன்றிலிருந்த விளையாட்டு ஸ்டேடியம் ஒன்றில் கிறிஸ்தவர் களை கொத்துக் கொத்தாக மேலுலகுக்கு அனுப்பினான் அந்த மன்னன். அவர்களில் தூய பீட்டரும் ஒருவர். அவர் உடலை சிலுவையில் தலைகீழாகத் தொங்க விட்டானாம் அந்த மன்னன். தூய பீட்டர் இறந்த இடத்தில் அவருக்கு ஒரு கல்லறையை எழுப்பினார்கள் அவரது சீடர்கள்.

ரோம் நாட்டு அரசியலும் கிறிஸ்தவ மதமும் இத்தாலியின் சில பகுதிகளின் அதிகாரத்துக்கு மாறி மாறிப் போட்டியிட்டன. (அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் வெகுவாகவே கலந்திருந்தன என்பது வேறு விஷயம்). வெற்றியும், தோல்வியும் இருதரப்புக்கும் மாறி மாறிக் கிடைத்தன.

இப்போது இத்தாலி இருக்கும் பகுதியின் மத்தியிலுள்ள பெரும் பகுதி கி.பி. 755 முதலாகவே வழிவழியாக வந்த போப்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இவற்றை papal states என்று அழைத்தார்கள்.

1860-ல் போப் ஒன்பதாம் பியஸ் இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுதான் முக்கிய திருப்புமுனை உண்டானது. போப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலானவற்றை மன்னன் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் தனது ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது இத்தாலியின் பகுதி ஆனது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நகரத்துக்குள்-ஒரு-நாடு-வாடிகன்-1/article6874490.ece?ref=relatedNews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடிவத்தில் சிறிய வாடிகன்: வாடிகன் 2

 
 
வாடிகனில் உள்ள புனித பீட்டரின் கல்லறை.
வாடிகனில் உள்ள புனித பீட்டரின் கல்லறை.

‘’ஒழுங்காக ஓர் அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் உங்களது அத்தனை பகுதிகளையும் ஆக்கிரமிப்போம்’’ என்றார் மன்னர் விக்டர் இமானுவேல். ரோம் நகரை தனது நாட்டின் தலைநகராக்கிக் கொள்ளவேண்டுமென்பது அவர் தலையாய விருப்பம்.

இதில் விந்தை என்னவென்றால் கிறிஸ்தவ மதத்துக்கு என்று தனி நிலப்பகுதிகள் இருப்பதைவிட இத்தாலியுடன் இணைந்து இருப் பதைத்தான் போப் ஆளுகையில் உள்ள பகுதியில் வாழ்ந்த மக்களில் பலரும்கூட விரும்பினார்கள்.

ஆனால் போப் பிடிவாதமாக இருந்தார். உலகின் அந்தப் பகுதி ஏசுநாதரால் அவருக்கு அளிக் கப்பட்டது என்று முழங்கினார்.

1871-ல் இத்தாலி ஒன்றிணைக் கப்பட்டது. கிறிஸ்தவ நிலப் பகுதிகள் (Papal States) தங்கள் தனித்துவத்தை இழந்தன. போப், வாடிகன் பகுதிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டார். அங்கிருந்தே தன்னால் முடிந்த பலவிதங்களில் மன்னனை எதிர்த்துக் கொண்டிருந்தார்.

‘இத்தாலிய தேர்தலில் பங்கு கொள்ள வேண்டாம், இத்தாலிய அரசு கொடுக்கும் மானியங் களை ஏற்றுக் கொள்ள வேண் டாம்’ என்றெல்லாம் கத்தோலிக்கர் களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். காலம் கடந்தது.

தொடர்ந்து 58 வருடங்களுக்கு அடுத்தடுத்து வந்த போப்கள் இத்தாலி என்ற புதிய தேசத்தை அங்கீகரிக்க மறுத்து வந்தனர். வாடிகனைத் தாண்டி இத்தாலிய மண்ணில் கால் வைக்க மாட்டோம் என்றுகூட சபதமிட்டனர். கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடம் ஒரு சிறைக் கைதி போல நடத்தப்படுவதில் இத்தாலிய மன்னர்களுக்கும் சிறு சங்கடம் உண்டாகியிருந்தது.

இதற்குள் வாடிகனுக்கு வேறொரு சிறப்பு கிடைத்திருந்தது. ரோமாபுரியின் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட கான்ஸ்டான்ட்டைன் கொஞ்சம் மிதவாதி. தூய பீட்டரின் சாதாரணக் கல்லறையை, சலவைக்கல் மற்றும் விலை உயர்ந்த சிகப்பு வர்ண கற்களைக் கொண்டு மீண்டும் கட்டினான். வாடிகன் மேலும் பிரபலமானது.

ஒருவழியாக 1929-ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினுக்கும் அப்போதைய போப்புக்கும் ஓர் உடன்படிக்கை உண்டானது.

இது தொடர்பான பேச்சுவார்த் தைக்கு முதல் நிபந்தனையாக விதிக்கப்பட்டது ‘பாராளுமன்ற கத்தோலிக்க இத்தாலிய பாப்பு லர் கட்சி’ கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். அரசியல் கலந்த கத்தோலிகத்தை போப் பதினோ ராம் பியஸ் விரும்பவில்லை.

மற்றொரு முக்கிய காரணம் அந்தக் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தவிர அந்தக் கட்சியை அனுமதித்தால் நாளடைவில் சர்ச்சுக்குள் ஜனநாயகம் புகுந்து விடும் என்கிற அச்சம் வேறு. இதன்படி பாப்புலர் கட்சி கலைக்கப்பட்டது.

நிபந்தனை பூர்த்தியானதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி வாடிகன் நகரம் என்பது இத்தாலியால் தனி நாடாக அங்கீகரிக்கப்படும். வாடிகன் போப்பின் வசம் செல்லும். அதே சமயம் இத்தாலியின் தலைநகரம் ரோம் என்பதை போப் ஒப்புக் கொள்ள வேண்டும். வாடிகன் என்ற நாடு பிறந்தது.

இந்த உடன்படிக்கை லாடேரன் உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்தப் பெயர் கொண்ட பிரம்மாண்டமான மாளிகையில்தான் இது கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் 1929 பிப்ரவரி அன்று கையெழுத்திடப் பட்டன.

இது மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, வாடிகனுக்கு தனி நாடு அந்தஸ்து, இரண்டு, போரால் வாடிகனில் நிகழ்ந்த பாதிப்புகளை சரி செய்ய நிதி உதவி. மூன்றாவது இத்தாலிக்குள் சில உரிமைகளை போப்புக்கு அளிப்பது - அதாவது இத்தாலியின் பொதுக் கல்வியில் சர்ச்சின் தாக்கம் இருக்கலாம்.

ஒருவிதத்தில் முசோலினிக்கு இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த நிலப்பரப்பை போப்புக்கு அளித்துவிட்டு தன் சர்வாதிகாரத்துக்கு கத்தோலிக்கத் தலைமைப் பீடத்திலிருந்து அங்கீகாரம் பெற்றுவிட்டார். (அதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிட்லரின் ஆட்சியையும் சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டது வாடிகன்).

அதற்குப் பிறகு முசோலினியும் போப்பும் ஒருவருக்கொருவர் ரொம்பவுமே ஆதரவாகச் செயல்பட்டனர். எத்தியோப்பியாவை முசோலினி ஆக்கிரமித்தபோதும் போப் மவுனமாக இருந்தார். சொல்லப் போனால் இத்தாலிய சர்ச் முசோலினியின் யுத்த நடவடிக்கைகளை (போப்பின் ஆசீர்வாதத்தோடு) ஆதரித்தது.

இன்றளவும் லாடேரன் உடன்படிக்கைகள் அமலில் உள்ளன. இத்தாலியில் உள்ள ஒரு நகைச்சுவை நடிகை சில வருடங்களுக்குமுன் போப்பின் தன்பாலின மனிதர்களுக்கு எதிரான நிலைப்பாடை நகைச்சுவையாக சித்தரித்தாள். பிறகுதான் அவள் மேற்படி (லாடேரன்) உடன்படிக்கையை மீறியதால் ஐந்து வருடச் சிறை தண்டனைக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்து அதிர்ந்தாள்.

இத்தாலிய சட்ட அமைச்சர் சாதுரியமாக இதை சமாளித்தார். ‘’போப்பின் அளவு கடந்த மன்னிக்கும் பெருந்தன்மையை மனதில் கொண்டு இவளுக்குத் தண்டனை அளிக்காமல் விடுகிறேன்’’ என்றார்.

மேற்படி ஒப்பந்தம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த உடன்படிக்கை தொடர்பாக இத்தாலியின் அதிபரை நோக்கி ஒரு பிரெஞ்சு இலக்கியவாதி கைநீட்டி கேலி செய்ய, அவரது உரிமையை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/வடிவத்தில்-சிறிய-வாடிகன்-வாடிகன்-2/article6877988.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

வடிவத்தில் சிறிய வாடிகன்: வாடிகன் 3

 
 
pope_2306936f.jpg
 

ஒரு நாட்டின் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்?

வாடிகனைப் பொறுத்தவரை அதன் தலைவரான போப் தேர்ந்தெடுக்கப்படும் முறை மிக வித்தியாசம், வெகு சுவாரசியம். அது பரம்பரை ஆட்சியா, ஜனநாயகமா என்று வரையறுக்க முடியாது. அது ஒரு தனி வழி.

கார்டினல்கள் என்று அழைக்கப்படுபவர்கள் (இவர்களும் பிஷப்கள்தான்) உலகெங்கும் உள்ள நாடுகளில் பரவி இருப்பார்கள். இவர்களைத் தேர்ந்தெடுப்பது போப்தான். போப் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ புதிய போப்பை தேர்ந்தெடுப்பது இந்த கார்டினல்கள்தான். ஆனால் எல்லா கார்டினல்களுக்கும் இந்த உரிமை கிடையாது. 80 வயதுக்கு அதிகமான கார்டினல்களுக்கு வாக்குரிமை கிடையாது.

புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்த கார்டினல்கள் சில நாட்களுக்கு வாடிகனில் தங்குவார்கள். பலவிதமாக ஆலோசனை நடத்துவார்கள். உலக அளவில் கத்தோலிக்க மதத்திற்கு என்ன சவால்கள் என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவற்றை எதிர் கொள்ள யாரால் முடியும் என்பது குறித்தும் விவாதிப்பார்கள். போப்புக்கான தேர்தலை ‘கான்க்ளேவ்’ என்பார்கள்.

ஒரு வேளை போப் இறந்ததனால் உண்டான புதிய தேர்தல் என்றால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும். பிறகு கார்டினல்கள் அனைவரும் தூய பீட்டரின் பசிலிக்கா என்ற பகுதியில் கூடுவார்கள். உள்ளே நடக்கும் எந்த விவரத்தையும் வெளியே கசியவிட மாட்டோம் என்று ரகசிய பிரமாணம் செய்வார்கள்.

பிறகு கதவு மூடப்படும். உள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு கார்டினலும் ஏசுவைத் துதித்துவிட்டு தன் தேர்வு அடங்கிய வாக்குச் சீட்டை இரண்டாக மடித்து அங்குள்ள பெரிய கோப்பைக்குள் போடுவார்கள்.

மூன்றில் இரு பங்கு வாக்குகளையாவது பெற்றிருந்தால்தான் ஒருவர் போப் ஆக முடியும். அப்படி யாரும் இல்லை என்றால், மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற கார்டினல்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க மீண்டும் ரகசிய வாக்குப் பதிவு நடத்தப்படும்.

இதற்குள் வெளியே மக்கள், தங்கள் புதிய போப் யார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருப்பார்கள்.

போப் தேர்ந்தெடுக்கப்படாத சுற்றுகளில், மூடிய அறைக்குள் இருக்கும் சில கார்டினல்கள் சில குறிப்பிட்ட ரசாயனபொருட்களை எரிப்பார்கள். கருப்பான புகை வெளியேறும். வெளியே காத்திருப்பவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு (அதாவது போப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்பதை அறிந்து கொண்டு) ஆதங்கமோ, சலிப்போ அடைவார்கள்.

போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளைப் புகை வெளியேறும். (அதாவது அதற்குரிய ரசாயனங்கள் எரிக்கப்படும்). வெளியே உற்சாகக் கூக்குரல்கள் கேட்கும். ஊடகப் பிரதிநிதிகள் சுறுசுறுப்படைவார்கள். யார் புதிய பிஷப் என்பதை அறியும் ஆவல் கரை கடக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவரை “போப் ஆவதற்கு உங்களுக்கு சம்மதமா?” என்று கார்டினர்களில் சீனியர் கேட்பார். ஒத்துக் கொள்பவர், தனக்கு ஒரு புதிய பெயரை சூட்டிக் கொள்வார். போப்புக்கு உரிய ஆடைகளை அணிந்து கொள்வார்.

அந்த அரங்கின் பால்கனிக்குச் சென்று ஆசி கூறுவார். அதற்குக் கட்டியம் கூறுவது போல அவருக்கு முன்பாக பால்கனியை அடையும் மிக மூத்த கார்டினல், “ஹபேமஸ் பபம்” என்பார். இதற்குப் பொருள் “நமக்கு ஒரு போப் கிடைத்து விட்டார்” என்பதாகும்.

பிரபல நாவலாசிரியர் டான் ப்ரவுன் எழுதிய ‘Angels and Demons’ என்ற புதினத்தில் போப் தேர்வு குறித்து விரிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, வாடிகன் குறித்த பல உள் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. (ஆனால் தீவிர கிறிஸ்தவர்கள், Angels and Demons மற்றும் The Da Vinci Code ஆகிய நூல்களை எழுதிய டான் ப்ரவுன் மீது கடும்கோபம் கொண்டனர். காரணம் ஏசுநாதர் மற்றும் கிறிஸ்தவ மதத்தை வழக்கமல்லாத கோணங்களில் விவரித்திருந்தன விற்பனையில் சாதனை படைத்த இந்த நூல்கள்).

போப்பைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாமா?

இவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல கட்டங்களைத் தாண்டிதான் கார்டினல் என்ற இடத்தை அவர்களால் அடைய முடியும். இவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முக்கியப் பாடமாக எதையும் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ தத்துவத்தை எடுத்துக் கொண்டிருந்தால் மேலும் நல்லது. அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.

‘’இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தையே கடைப்பிடிப்பேன்’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவியை இழந்தவரும் கார்டினல் ஆகலாம். ஆனால் அவரும் மேற்படி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மத நெறிகளில் தன்னை மேலும் மேலும் ஈடுபடுத்திக் கொண்டு நாளடைவில் ஒரு பிஷப் ஆக வேண்டும். இதற்குப் பிறகுதான் ஒருவர் கார்டினல் ஆக முடியும். ஏற்கனவே குறிப்பிட்டபடி இதற்குள் அவருக்கு எண்பது வயது நிறைவடையாமல் இருந்தால்தான் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/வடிவத்தில்-சிறிய-வாடிகன்-வாடிகன்-3/article6881722.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நகரத்துக்குள் நாடு - வாடிகன் 4

 
 
உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ பஸிலிகாவான வாடிகன் தூய பீட்டர் பஸிலிகா.
உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ பஸிலிகாவான வாடிகன் தூய பீட்டர் பஸிலிகா.

வாடிகனின் மொத்தப் பரப் பளவில் கிட்டத்தட்ட சரிபாதி அதன் தோட்டங் கள்தான். நீருற்றுகளும், வரிசை யில் அமைந்த சிற்பங்களுமாக இந்த நந்தவனங்களின் அழகே தனி. வாடிகனின் மியூசியங்கள் கலைக்கண் கொண்ட வேற்று மதத்தினரைக்கூட சொக்க வைக்கும்.

இங்குள்ள தூய பீட்டரின் நினைவாலயம் ஒரு கலை பொக்கிஷம். இங்கு ஃபியடா எனப்படும் சிற்பம் காணப்படுகிறது. இது மைக்கேல் ஆஞ்சலோவின் முத்திரைப் படைப்பு. மேரி மாதா தனது மகனை மடியில் வைத்திருக்கும் தோற்றம் ஒரு கலை மேன்மை. அதாவது சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரை சோகம் பொங்க தன் மடியில் சுமந்திருக்கிறார் மேரி மாதா.

இந்தச் சிற்பம் பிரான்ஸ் நாட்டு கார்டினல் ழான் த பில்லெர்ஸ் என்பவரின் நினைவாக செதுக்கப்பட்டது. பின்னர் இது வாடிகனுக்குக் கொண்டு வரப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஒரே சிலையில் மட்டுமே அதை படைத்த மைக்கேல் ஆஞ்சலோவின் கையெழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

பிரான்ஸில் இது போன்ற சம்பவச் சிறப்பு கொண்ட (thematic) சிற்பங்கள் சகஜம் என்றாலும் இத்தாலிக்கு அப்போது இது ரொம்ப புதுசு. இந்தச் சிற்பத்தை அப்போதே இத்தாலியர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.

வாடிகனிலுள்ள ஸிஸ்டைன் பேராலயத்தின் கூரையில் ஆஞ்சலோ வரைந்த ஓவியங்கள் ஈடுஇணையற்றவை. இங்குள்ள ஆதாம் ஏவாள் ஓவியத்தில் ஒரு சுவாரஸ்யம். ஏவாள் உண்ட தடைசெய்யப்பட்ட பழம் ஆப்பிள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் மைக்கேல் ஆஞ்சலோ வரைந்த ஓவியம் ஒரு மரத்திலிருந்து ஏவாள் பழத்தைப் பறிப்பதை சித்தரிக்கிறது. ஆனால் அது ஆப்பிள் மரம் அல்ல. அதன் இலைகளின் வடிவத்தைப் பார்த்தால் அது அத்தி மரம் போலத்தான் தோன்றுகிறது. ஆக, ஏவாள் உண்ட தடைசெய்யப்பட்ட படம் அத்திப் பழமா?

மேற்கூரையில் வரையப்பட்ட (எப்படித்தான் கோள வடிவ உட்புறங்களிலெல்லாம் இப்படி யெல்லாம் வரைய முடிந்ததோ!) ‘ஆதாமின் உருவாக்கம்’ (Creation of Adam) என்ற ஓவியம், மோனோ லிசா ஓவியத்துக்கு சமமாகப் போற்றப்படுகிறது. இதில் நீண்ட தாடியும் வெள்ளை உடையும் கொண்ட கடவுளின் கைவிரல், ஆடையற்ற ஆதாமின் கைவிரலை கிட்டத்தட்ட தொட்டுவிடுவதுபோல வரையப்பட்டுள்ளது.

பிரபல கலைஞன் ரபேலின் கைவண்ணங்களும் வாடிகனில் அணிவகுத்து மனதை மயக்கு கின்றன. வாடிகன் அரண்மனை யில் இவரது ஓவியங்களுக் காகவே நான்கு அறைகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இவரது படைப்பு களும் மைக்கேல் ஆஞ்சலோவின் படைப்புகளும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்துக்கான முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.

வருடத்திற்கு 60 லட்சம் பேர் வாடிகனுக்கு வருகிறார்கள் என்றால் அவர்களில் போப்பை தரிசிக்க வருபவர்களின் எண் ணிக்கைக்கு சமமாக வாடிகனின் கலை பொக்கிஷங்களை தரிசிக்க வருபவர்களும் இருப்பார்கள்.

ரோமானிய சக்கரவர்த்தியாக விளங்கிய காலிகூலா என்பவர் வாடிகன் குன்றின் கீழே உள்ள தோட்டப் பகுதியை தன் தேரோட்டிகளின் பயிற்சிக் களமாக பயன்படுத்தினார். அதை ஒரு திறந்த வெளி ஸ்டேடியமாகவும் மாற்றினார்.

நீரோ மன்னன் இந்த பகுதியில் தான், தான் கொன்ற கிறிஸ் தவர்களை ஒட்டுமொத்தமாகப் புதைத்தான் என்று கூறுகிறார்கள். இங்கு அவன் 350 டன் எடை கொண்ட சிவப்பு கிரானைட் கல் ஒன்றை பதித்தான். 1586-ல் அது வாடிகனில் உள்ள தூய பீட்டர் சதுக்கத்துக்கு மாற்றப் பட்டது. இப்போது அது ஒரு பிரம்மாண்ட சூரிய கடிகாரமாகவும் பயன்படுகிறது.

இன்று உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ பஸிலிகா (உயரமான தூண்கள் அமைந்த நீண்ட மண்டபத்தை பஸிலிகா என்பார்கள்) வாடிகனிலுள்ள தூய பீட்டர் பஸிலிகாதான். இதில் சந்தேகத்திற்கே இடம் இல்லை என்பதுபோல் உலகின் பிற பஸிலிகாக்களின் நீள அகலங் களையும் இங்கு பொறித்து வைத்திருக்கிறார்கள்.

வாடிகன் அருங்காட்சியகங்கள் தினமும் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் விடு முறை. தூய பீட்டர் பஸிலிகாவில் மக்கள் காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

போப்பின் பிரசங்கத்தைக் கேட்கவேண்டுமென்றால் புதன் கிழமையில் செல்ல வேண்டும். பல மொழிகளில் தன் பிரசங் கத்தைச் செய்யும் போப் இறுதி யில் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

தூய பீட்டர் பஸிலிகாவின் மையத்தில் வாடிகனின் முதலா வது போப் (அதாவது தூய பீட்டர்) புதைக்கப்பட்ட இடம் உள்ளது. அந்தப் பகுதி 96 அடி உயரம் கொண்டது. வெண்கலத் தகடுகளால் அலங்கரிக்கப்பட் டுள்ளது. அங்கு அமர்ந்து ஜபம் செய்யக்கூடிய அதிகாரம் ஒருவருக்குதான் உண்டு. அவர் நிகழ்கால போப் மட்டுமே.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நகரத்துக்குள்-நாடு-வாடிகன்-4/article6885749.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நகரத்துக்குள் நாடு - வாடிகன் 5

 
vatican_2310672h.jpg
 

கிறிஸ்தவ மதம் தோன்று வதற்கு முன்பாகவே வாடிகன் இருக்கிறது. இங்குள்ள ஒரு குன்றை லத்தீன் மொழியில் மோன்ஸ் வாடிகானஸ் என்பார்கள். இதிலிருந்து வந்ததுதான் வாடிகன்.

தூய பீட்டர் சதுக்கத்தையும், இத்தாலியையும் பிரிப்பது ஒரு வெள்ளைக் கோடு மட்டுமே. வாடிகன் வணிகம்கூட செய்யவில்லை என்றால் எங்கிருந்து அதற்கான நிதி கிடைக்கும் என்று கேட்டால் அதற்கான மேலோட்டமான விடை இது. தபால் தலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான நிறையப் பொருட்கள், மியூசியங் களுக்கான நுழைவுக் கட்டணம் இவற்றிலிருந்துதான் வருமானம்.

ஆனால் உண்மையான பொருளாதாரம் என்பது கத்தோலிக்க பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதிதான். இத்தாலியிலிருந்து வாடிகனுக்குள் நுழைய எந்த பாஸ்போர்ட்டும் தேவையில்லை. தூய பீட்டர்ஸ் சதுக்கம் மற்றும் தேவாலயம் போன்றவைகளுக்கு இலவச அனுமதி. ஆனால் பெரும்பாலான வாடிகன் மியூசியங்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. இங்குள்ள நந்தவனங்களுக்குள் பொது வாக பொதுமக்களை அனுமதிப்பதில்லை. மற்றபடி பிற இடங் களுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு போப்பின் அனுமதி தேவை.

வாடிகனின் நுழைவு வாயில்களைப் பாதுகாக்கும் உரிமை சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிலருக்குத்தான் உண்டு. அவர்கள் அணியும் உடை மிகப் பளிச்சென்று இருக்கும். நெடுக்குவாட்டில் மஞ்சள் மற்றும் நீலப் பட்டைகள் அமைந்த உடை. ஷூக்கள் கறுப்பு நிறம். ஆனால் மிக நீளமான சாக்ஸ்கள் உடையைப் போன்றே மஞ்சள் மற்றும் நீலப்பட்டைகள் கொண்டவை.

1506-லிருந்தே போப்பை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் பரம்பரையினருக்கு வந்து சேர்ந்தது. இப்போதும்கூட, வாடிகனின் பாதுகாவலர்கள் போல இவர்கள் நடந்து கொண்டாலும், சட்டப்படி போப்பை பாதுகாப்பதுதான் இவர்கள் கடமை. 1277-ல் அரை மைல் தூரம் உள்ள சுரங்கப்பாதை ஒன்று வாடிகனையும் இத்தாலியில் உள்ள டைபர் நதிக்கரையில் உள்ள ஒரு பகுதியையும் இணைத்துக் கட்டப்பட்டது. இதன் மூலம் யுத்தங்களின்போது பல போப்கள் உயிர்தப்பி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே வாடிகனின் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதிலும் பாதிப் பேர் தூதரகப் பிரதிநிதிகளாக உலகின் பல நாடுகளில் பிரிந்திருக்கிறார்கள். வாடிகன் வானியல் ஆராய்ச்சிகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. தென்மேற்கு அரிசோனாவில் உள்ள கிரஹாம் குன்றின் மேல் வாடிகனின் மிகவும் நவீனமான தொலை நோக்கி இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க உயர்பீடம் என்கிற கோணத்தில் வாடிகன் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளமானவை.

திருமணம் செய்து கொள்ளவே கூடாது என்பது கத்தோலிக்க பாதிரிமார்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று. ஆனால் மற்ற பிரிவினரைப் போல நாங்களும் திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு?’ என்று கேட்கிறார்கள் சில வெளிநாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள். ஏசுநாதரின் முக்கிய சீடர் களிலேயே மணமானவர்கள் உண்டே என்பது இவர்கள் வாதமாக இருக்கிறது.

பாதிரியாக இருந்து கொண்டே ஒழுக்கமீறல்களை செய்து வருபவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வருவதும் சில வருடங்களாகவே வாடிகனின் தலைமைப் பீடத்தை கவலைப்பட வைத்துள்ளது. இதனால் வாடிகனின் இமேஜ் சரிகிறதே என்ற கவலை.

இங்கிலாந்தில் உள்ள ஆங்லிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவப் பிரிவு, பெண்களும் பாதிரிமார்கள் ஆகலாம் என்று புரட்சிகரமான தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதைச் செயல்படுத்தும் விதமாக முதல் கட்டத்திலேயே நாற்பது பெண்களுக்கு குருத்துவ பட்டம் அளித்தது. இதைத் தொடர்ந்து கத்தோலிக்கப் பிரிவிலும் பெண் பாதிரிமார்களை அனுமதிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை இயக்கங்கள் சில நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றன. மிகவும் முந்தைய காலகட்டத்தில் கத்தோலிக்கப் பிரிவில் சில பெண்களும் பிஷப்பாக இருந் திருக்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

கருச்சிதைவை கத்தோலிக்கப் பிரிவு அனுமதிப்பதில்லை. ஆனால் கருச்சிதைவுக்கு ஆதர வான போக்கு பெருகி வருகிறது. ‘‘கருச்சிதைவு கூடாது என்று கூறும் கத்தோலிக்க பிஷப்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வாடிகனுக்கேற்ற மாதிரி போலந்து தலையாட்ட வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. மதத்தைவிட நாட்டுக்குத் தான் இங்கு முதல் இடம்’’ என்று கர்ஜித்தனர் போலந்து நாட்டின் இடதுசாரி கட்சிகள்.

அண்டை நாடுகளுக்குச் சென்று பெண்கள் கருச்சிதைவு செய்து கொண்டு வருவதை (இதை ‘அபார்ஷன் டூரிஸம்’ என்கிறார்கள்) சுட்டிக்காட்டி பெண்களுக்கு கருச்சிதைவு உரிமை தேவை என்றும், இதை வாடிகன் அனுமதிக்க வேண்டுமென்றும், பல பெண்கள் அமைப்புகளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பிறந்தவர். இவரது சில பேச்சு களும் நடவடிக்கைகளும் மிகவும் அதிரடியாக அமைந் துள்ளன. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நகரத்துக்குள்-நாடு-வாடிகன்-5/article6892835.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன் 6

 
 
2014 செப்டம்பர் 14-ல் வாடிகனில் திருமண ஆராதனை நடத்திய போப் பிரான்சிஸ்.
2014 செப்டம்பர் 14-ல் வாடிகனில் திருமண ஆராதனை நடத்திய போப் பிரான்சிஸ்.

தற்போதைய போப் 2013-ல் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரோம் நகரில் பணியாற்றியதில்லை (பெரும்பாலான முந்தைய போப்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்களாகவும் போப் ஆவதற்கு முன் க்யூரியா என்ற அமைப்பில் பணியாற்றியவர்களாகவுமே இருந்தனர்). வாடிகனில் நிலவும் மெத்தனப் போக்கும், அதிகாரத தந்திரங்களும் போப் பிரான்ஸிஸை கொந்தளிக்கச் செய்துள்ளன.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்பாக கார்டினல்களுடன் உரையாடும்போது வாடிகனிலுள்ள க்யூரியாவின் மெத்தனப் போக்கு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார் போப். ‘’அவர்களுக்கு ஆன்மிக அல்சைமர் நோய் உருவாகியுள்ளது’’ என்றும் ‘’அங்கே வதந்தி என்கிற தீவிரவாதம் பரவியுள்ளது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். க்யூரியா என்பது வாடிகனில் இயங்கும் உலக ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் உச்சமான நிர்வாக அமைப்பு.

‘’கடந்த 15 வருடங்களாக இந்த அமைப்பு நோய்வாய்ப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தாண்டிலாவது நாம் அதற்கு உரிய சிகிக்சை அளிக்க வேண்டுமென்று’’ தடாலடியாக அறிவித்திருக்கிறார்.

க்யூரியா தனது 15 நோய்களிலிருந்து விடுபட வேண்டும் என்று போப் வெளிப்படையாகவே அறிவித்தது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆன்மிக அல்ஸைமர் நோய், வதந்திகளில் ஈடுபடும் தீவிரவாதம், தாம் அனைத்திற்கும் மேம்பட்ட அமைப்பு எனும் தலைக்கனம், இரட்டை வேடம், இறுக்கமான நிலை ஆகியவை இந்த நோய்களில் அடக்கமாம்.

அது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக க்யூரியாவின் அதிகாரம் ரோம் பகுதியில் உள்ள பிஷப்களை சுற்றி இருந்து வந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறார் தற்போதைய போப்.

க்யூரியாவில் பதவிக்காக சிலர் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் இதற்காக தங்கள் சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் கவுரவத்தை குழிதோண்டிப் புதைக்கவும் இவர்கள் தயங்குவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இவர்களுக்குள் குழு மனப்பான்மை இல்லை என்றும் ஓர் இசைக்குழுவில் ஆளாளுக்கு தனக்குத் தோன்றிய இசையை வாசித்தால் மொத்தத்தில் உண்டாகும் அபஸ்வரம் போன்ற நிலையைத்தான் தன்னால் காண முடிகிறதென்றும் பளிச்சென்று குறிப்பிட்டிருக்கிறார்.

க்யூரியாவுக்கான மிகப்பெரிய அதிர்ச்சி, போப் அறிவித்துள்ள மற்றொரு மாற்றம். உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க பிஷப்களுக்கு வாடிகன் கொள்கைகள் குறித்து முடிவு செய்ய ஓரளவு அதிகாரம் வழங்கப்படுமாம். அதாவது க்யூரியாவில் அதிகாரம் இனி குறைக்கப்படும் என்பது மறைமுக அர்த்தம்.

ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் சில கார்டினல்களை ஆலோசனை கூறுபவர்களாக அழைத்து வந்து அவர்கள் உதவியுடன் வாடிகன் இயக்கத்தில் புது மலர்ச்சியை கொண்டுவரப் போகிறாராம்.

பொதுவாக திருமண விழாக்களை முக்கியமாக பொது இடங்களில் ஜோடி ஜோடியாக நடத்தப்படும் விழாக்களை - போப் புறக்கணித்துவிடுவார்.

ஆனால் 2014 செப்டம்பர் 14 அன்று வாடிகனிலுள்ள தூய பீட்டர் சதுக்கத்தில் இருபது ஜோடிகளுக்கான திருமணம் போப் தலைமையில் நடந்துள்ளது.

எது போன்றவர்கள் இந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 25 வயதிலிருந்து 56 வயது வரை உள்ளவர்கள். இவர்களில் சிலர் ஏற்கனவே ஒன்றிணைந்து குடும்பம் நடத்தியவர்கள். வேறு சிலர் ஏற்கனவே வேறிடத்தில் திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள்.

அப்படியானால் இதுபோன்ற போக்குகளை போப் அனுமதிக்கிறாரா? வாடிகனின் பார்வை வெளிப்படையாகவே மாறுபடத் தொடங்கியிருக்கிறதா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

என்றாலும் தன்பாலின திருமணங்களுக்கு தலைமையேற்க போப் மறுத்திருக்கிறார்.

சென்ற வருடம் போப் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். ரோம் நகரிலுள்ள ஏழை மக்களுக்கு வாடிகனில் இலவசமாக முகச் சவரமும், முடிவெட்டுதலும் செய்யப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இது நடக்கும். இதற்காக நன்கொடை கேட்கப்பட, நிதியோடு பிளேடுகள், கத்திரிக் கோல்கள், கண்ணாடிகள் என்றும் குவிகின்றனவாம்.

‘’இந்தப் பகுதியில் யாரும் பட்டினியால் இறப்பதில்லை. தினமும் ஒரு சான்விச்சை அவர்களால் கண்டெடுக்க முடியும். ஆனால் மேற்படி சேவைகள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது’’ என்றார். இதன் இணைப்பாக இலவசக் குளியல் அறைகள் மற்றும் இலவசக் கழிவறை வசதிகளும் அளிக்கப்பட்டன.

ஏழ்மையை அகற்றுவதும் தன் லட்சியம் என்று போப் பிரான்சிஸ் கூறுகிறார். (இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு செய்த ஒரு தில்லுமுல்லும் நினைவு கூரப்படுகிறது. போப் அந்த நாட்டுத் தலைநகரான மணிலாவுக்குச் சென்றிருந்தபோது அந்த நகரிலிருந்த பல நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றி வசதியான இடங்களில் தங்க வைத்தார்களாம் - அதாவது போப் வந்து செல்லும் வரையில்!).

அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வாடிகன் வங்கியின் அதிகாரபூர்வ பெயர் ‘மதப் பணிகளுக்கான நிறுவனம்’ (Institute for the Works of Religion) என்பதாகும். வாடிகன் வங்கியைத் தூய்மையாக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை போப் வெளிப்படுத்தியதோடு அதற்கான செயல்திட்டம் ஒன்றையும் உருவாக்கினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பலவித ஊழல் குற்றச் சாட்டுகள் அதன் மீது கடந்த காலத்தில் சுமத்தப்பட்டன.

பல பரபரப்புச் செய்திகளில் இடம் பெற்ற இந்த அமைப்பை சுத்தம் செய்ய வேண்டும் என்பதிலும் போப் முனைந்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/world/நகரத்துக்குள்-ஒரு-நாடு-வாடிகன்-6/article6898403.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.