Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்எஸ்வி – இசையும் காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்வி – 1 இசையும் காலமும்

எஸ்.சுரேஷ்

பின்னணி

திரையிசை ரசிகர்களால் எம்எஸ்வி என்று அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழ்த் திரையிசையுலகில் எக்காலமும் நீங்கா இடம் பெற்ற இசையமைப்பாளருமான எம். எஸ். விஸ்வநாதன் அண்மையில் காலமானார். அதைத் தொடர்ந்து செய்தித்தாள்களிலும், சமூக ஊடங்களிலும் அஞ்சலியாக ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு தலைமுறையினர் மீது முழுமையான தாக்கம் ஏற்படுத்திய இசையமைப்பாளர் அவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அஞ்சலி கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருந்தது, ஒவ்வொன்றும் ஒரு பாடலை நினைவுகூர்ந்தது, மிக முக்கியமாக ஒவ்வொன்றிலும் இதயத்தில் அதுவரை மறைந்திருந்த ஒரு நினைவு உயிர்பெற்று வெளிப்பட்டது. அவரது இசைக் கோவைகள் நேயர்கள் மனதில் ஏற்படுத்திய உணர்வுத் தாக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள இதுவெல்லாம் உதவினாலும், அவரது சாதனைகளை விரிவாகச் சித்திரித்த கட்டுரைகள் மிகக்குறைவு.

இந்தக் கட்டுரை, எம்எஸ்வியின் பாடல்களைக் கொண்டு அவரது இசைப்பயணத்தின் பாதையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது- திரையிசையில் அவரது பங்களிப்பு என்ன, அவர் விட்டுச் செல்லும் தாக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் காண முயற்சிக்கிறது.

இப்படியொரு பெரிய ஆசை கொண்ட பயணத்தில் புறப்படும்முன் சில உரிமை துறப்புகள் செய்வது தேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அறுபதுகள் என் நேரடி அனுபவமல்ல, பிற்காலத்தில் நான் கேட்ட பாடல்களின் அடிப்படையில்தான் அறுபதுகளைப் புரிந்து கொள்கிறேன். எனவே, அக்காலத்தில் வாழ்ந்த பொதுமக்கள் மனதில் அவரது பாடல்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தின என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, என் மனச்சாய்வுகள் காரணமாக பொதுமைப்படுத்தப்பட்ட சில கூற்றுகளும் இருக்கலாம். அவற்றைப் பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டவும். மூன்றாவதாக, இதிலுள்ள பல தகவல்கள் இணையத்தில், அதிலும் குறிப்பாக விக்கிப்பீடியாவில் பெறப்பட்டவை. இவற்றில் தகவல் பிழைகள் இருப்பது தெரிந்தால் திருத்திக் கொள்கிறேன்.

தமிழ்த் திரையிசையில் எம்எஸ்வி தனித்தும் டி கே ராமமூர்த்தியுடன் இணைந்தும் செலுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள, ஐம்பதுகளில் தமிழ்த் திரையிசை முழுக்க முழுக்க கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்திருந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது அதை உடைத்த பாடல்கள் இருந்தன என்றாலும் ஐம்பதுகளின் திரையிசை கர்நாடக சங்கீதத்துக்கு உரியது. கர்நாடக இசையை ரசிப்பவர்கள் பலர் இன்றும் ஐம்பதுகள்தான் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் திரைப்படத்தின் தேவையும், செவ்விசையின் தேவையும் வெவ்வேறானவை என்பதுதான் இப்படிப்பட்ட அணுகலின் சிக்கல். வேறு சொற்களில் சொல்வதானால், இவ்விரண்டின் நோக்கமும், இயக்க முறைகளும் முற்றிலும் வேறுபட்டவை. நாத சாத்தியங்களை வெவ்வேறு ராகங்களைக் கொண்டு உணர முற்படுவது செவ்விசை என்றால் திரையில் தோன்றும் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து பரவலான பார்வையாளர்களைச் சென்று சேர்வதுதான் திரையிசையின் நோக்கம். ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இதை நாற்பதுகளின் பிற்காலத்திலும் ஐம்பதுகளின் துவக்கங்களிலும் புரிந்து கொண்டு தம்மொழி திரையிசையை நவீனப்படுத்திக்கொண்டு விட்டனர். அவர்கள், தம் இசையின் செவ்வியல் வேர்களை விட்டு விலகி, தமக்கென்று புதிய ஒரு இசையிலக்கணம் அமைத்துக் கொண்டனர். ஆனால் செவ்வியல் இசையின் கண்ணிகளை உடைக்க முடியாமல் தமிழ்த் திரையிசை மட்டுமே பின்தங்கி இருந்தது.

இது ஏன் என்றும், இது எப்படிப்பட்ட வேறுபாடு என்றும் பார்க்கலாம்.

முதலில் சொன்னதுபோல், ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்விசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும்.

விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.

உத்தம புத்திரன்” படத்தில் ஜி ராமநாதன் இசையமைத்த “முல்லை மலர் மேலே” என்ற பாடலை முழுதாகக் கேட்டுப் பார்க்கலாம்- கானடா ராகத்தில் அமைந்த பாடல் இது.

மிக அருமையான கானடா என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால் இசையமைப்பாளரைப் பொருத்தவரை, எல்லாவற்றுக்கும் மேலாக இது கானடா ராகத்தில் அமைந்த பாடல் என்பதுதான் முக்கியம். காதல் பாடல் என்பது இரண்டாம்பட்சம்தான். சரணத்தில், “மின்னல் உருமாறி மண் மேலே” என்பதன் ஆரோகணத்தை டிஎம்எஸ் எப்படி பாடுகிறார் என்பதை கவனித்துப் பாருங்கள். கானடா ராகத்தை ஜி ராமநாதன் நேசிப்பது நன்றாகத் தெரிகிறது. பாடகர் டிஎம்எஸ்ஸின் திறமை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்று  விரும்புகிறார் அவர், குறிப்பாக உச்ச ஸ்தாயியில் அவர் பாடுவதன் அழகை இந்தப் பாடலில் நன்றாகக் கொண்டு வருகிறார்  ஜி ராமநாதன். திரைப்படப் பாடல்களில் கானடா ராகத்தில் அமைந்த சிறந்த பாடல்கள் எவை என்று கேட்டால் உடனே இந்தப் பாடல் நினைவுக்கு வரக்கூடும். ஆனால், மிகச் சிறந்த காதல் பாடல் எது என்று கேட்டால், இது நினைவுக்கு வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

அல்லது ‘ஏரிக்கரையின் மேலே‘ – இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடலின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் ஆரபியின் அத்தனை அழகையும் பல்லவியிலேயே வாரியிறைக்க ஆசைப்படுகிறார். இந்தப் பாடலின் மெட்டின் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று எதை எழுதினாலும் அது பக்திப் பாடலாகவே ஒலிக்கும். காட்சியின் உணர்ச்சியோடு பொருந்தாத பாடல் இது.

இதற்கு மாறாக, “ஷவுக்காரு” என்ற தெலுங்குப் படத்தில் வரும் பாடலைப் பாருங்கள்.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்தான் அது, ஆனால் அது செவ்வியல் தன்மையைவிட்டு அப்போதே விலகிவிட்டது (“முகத்தில் முகம் பார்க்கலாம்” என்ற பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்). திரையில் தோன்றும் பாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் இந்தப் பாடலும் மென்மையாக ஒலிக்கிறது. மேலும், கண்டசாலா டிஎம்எஸ் மற்றும் சீர்காழியைவிடச் சிறந்த செவ்வியல் பாடகர் என்றில்லாவிட்டாலும், அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல, அவர்கள் அளவு செவ்வியல் இசையில் பயிற்சி உள்ளவர் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளரும் அவரே. இருந்தாலும் சரணங்களில் அவர் அடக்கி வாசிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கல்யாணியின் முழு உருவம் வெளிப்படுவதில்லை. அவரது வேலை திரையில் தோன்றும் காட்சிக்கு தகுந்த இசையமைப்பதுதான், அதற்குத் தேவையான அளவில் மட்டும் கல்யாணி ராகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது அறுபதுகளில் வந்த பாடல் என்று யாரிடமாவது சொன்னால் அதை உடனே நம்பிவிடுவார்கள்.

அடுத்தது, 1948ல் வந்த இந்திப் படம் – அநோகர் பியார். அனில் பிஸ்வாஸ் இசையமைத்த இந்தப் பாடல் இளம் லதா குரலில் ஒலிக்கிறது. இந்தி திரையிசையில் பல புதுமைகளைச் செய்வதவர் என்ற பெருமை அனில்-‘தா’வுக்கு உண்டு. குலாம் ஹைதருடன் இணைந்து அவர் இந்தித் திரை இசையை நவீனப்படுத்தியவர். இந்தப் பாடலில் லதாவின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு ஒரு செவ்வியல் அமைப்பு இருந்தாலும் திரைக்காட்சியின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் முக்கியம் என்றும், இது முழுக்க முழுக்க செவ்வியல் பாடலாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அனில்தா எவ்வளவு கவனமாக இருக்கிறார் எனபதையும் பாருங்கள்.

அக்காலத்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் இடையே இருந்த வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் (மிகக் குறைவான பாடல்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஐம்பதுகளில் தமிழில் வந்த பாடல்களை கேட்டுப் பாருங்கள், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். உரத்த குரலில் பாடுவது, பாத்திரத்தின் உணர்ச்சியைவிட ராகத்துக்கு முக்கியம் தருவது, இதெல்லாம்தான் முக்கியம்.

இந்தச் சூழலில்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி பணியாற்றினார்கள். ராஜா அல்லது ரகுமான் போல் அவர்கள் மிக வேகமாக புகழின் உச்சியைத் தொடவில்லை. 52ல் அறிமுகம் ஆனாலும், பத்தாண்டுகளுக்குப பிறகே முதலிடம் பிடிக்க முடிந்தது. துவக்க காலத்தில் இவர்கள் இசையமைத்த படங்கள் பிற படங்கள் போல்தான் இருந்தன. ‘புதையல்‘ என்ற படம் 1957ல் வந்தது. அருமையான பாடல்கள், ஆனால் எல்லாம் ராமநாதனை நினவுபடுத்துகின்றன. “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் – ஜி. ராமநாதன் பாடல் என்றுதான் வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன் (சி எஸ் ஜெயராமன் பாடியதால் இப்படி நினைத்திருக்கலாம்)

பாகப்பிரிவினை” படத்தில்தான் இவர்களின் தனித்துவம் வெளிப்பட துவங்கியது. இதில் உள்ள சில அருமையான பாடல்களைப் பின்னர் பார்க்கலாம். இது 1959ல் வந்த படம். 1960ல் வந்த “தங்கப்பதுமை”, “மன்னாதி மன்னன்” போன்ற படங்களிலும் முந்தைய படங்களின் சாயம்1961 இருந்தது. அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் கண்ணிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆண்டு 1961. என்ன ஒரு ஆண்டு அது! அந்த வருடம்தான் தமிழ்த் திரையிசை நவீன காலங்களுக்குள் பிரவேசித்தது, இந்திப் பாடல்களைவிட பத்து வருடம் பின்தங்கி.

1961 இல் என்ன ஆயிற்று என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Ilaiyaraja_MSV_Visvanadhan_Music_Directors_IR_Visvanathan

1961- திருப்புமுனை ஆண்டு

விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு 1961ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாய் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் திரையிசையின் முதலிடத்தில் அவர்கள் தங்களை நிறுவிக் கொண்ட ஆண்டு அது. இந்த ஆண்டில்தான் அவர்களுக்கேயுரிய ஓசை தீர்மானமாக உருவானது- இந்த ஓசை அடுத்த ஐந்தாண்டுகள் திரையிசை நேயர்களைக் கட்டிப் போடுவதாய் இருந்தது.

முந்தைய தலைமுறைகளைச் செர்ந்தவர்காளிடம் 1961ஆம் ஆண்டு வந்த இந்தப் படங்களின் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள், அவர்கள் முகம் சந்தோஷத்தில் மலர்வதைக் காணலாம். அந்த மாதிரி இப்பல்லாம் படம் எடுக்கறதில்லை, என்ற வருத்தத்தையும், ஒழுக்கம் கெட்டுப் போயிடுச்சு, என்ற அங்கலாய்ப்பையும் கூடவே கேட்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. “பாசமலர்“, “பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“. இந்த ஒவ்வொரு படமும் இப்போது ஒரு கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. பீம்சிங் இயக்கிய “பா” வரிசை படங்கள் இவை. எதிர்கால தமிழ்த் திரை வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று படங்களை ஒரு இயக்குனர் ஒரே ஆண்டில் வெளியிடுவது என்பது திகைக்க வைக்கும் விஷயம் (பாசமலர் திரைப்படம் அண்ணன்- தங்கை உறவை எவ்வளவு உறுதியாக வரையறை செய்தது, அதன்பின் எத்தனை எததனை இயக்குனர்கள் இந்த உறவை ஒரு தங்கச் சுரங்கமாய் கண்டனர்!). மூன்று படங்களிலும் சிவாஜி கணேசன்தான் நாயகன்.

மேலே சொன்னது போல், விசுவநாதன்- ராமமூர்த்தியின் முத்திரை ஓசை தாங்கி வந்த முதல் படம் “பாகப்பிரிவினை“. 1959ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியதும் பீம்சிங்தான். இதிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, முத்திரை ஓசை என்று நான் எதைச் சொல்கிறேன் என்று பார்க்கலாம்- “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” என்ற பாடல்.

ஐம்பதுகளில் வந்த பாடல்களோடு ஒப்பிடும்போது இது எவ்வளவு நவீனமாக இருக்கிறது என்பதைதான் நாம் முதலில் கவனிக்கிறோம். அதற்கு இதன் ட்யூன் ஒரு முக்கியமான காரணம். சுசிலாவின் குரலும் அடங்கி ஒலிக்கிறது, அக்காலத்துக்குரிய பிற பாடல்கள் போல் உரக்க ஒலிப்பதில்லை.

இது ஒன்று மட்டுமல்ல, விஸ்வநாதன்-ராமமூர்த்தி முத்திரை. அவர்களின் தனித்துவம் என்று தேடினால், முதலில் இந்தப் பாடல் ஒரு அமைதியான நதியின் அழகும் நளினமும் கொண்டிருப்பதை உணர்கிறோம். சரணத்தில் உச்சம் தொட்டாக வேண்டும் என்ற வேகம் இல்லை. மாறாய், சரணத்தின் முடிவில் மிக மென்மையாய் ஒலித்து பல்லவியுடன் இயல்பாய் இணைகிறது. இரண்டாவதாக, இந்தப் பாடலின் தடையற்ற ஓட்டத்தில் ரிதம் எப்படிப்பட்ட பங்களிப்பு கொடுக்கிறது பாருங்கள். இதுவும் நவீனமாக இருக்கிறது. முன்னெல்லாம் ஒரு பாடலில் மிருதங்கம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது கர்நாடக இசையை அடிப்படையாய் கொண்ட பாடலாய் இருக்கும், மிருதங்கமும் கர்நாடகமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாம் ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பாடலில் மிருதங்கம்தான் நவீனத்துவம் கூட்டுகிறது. இப்படியொரு தனிப்பட்ட வகையில் மிருதங்கத்தைப் பயன்படுத்துவதில் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் மேதைமை வெளிப்படுகிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பெண்குரலில் ஒலிக்கும் பாடல்கள் பலவற்றில் சுதந்திரமாய்ச் செல்லும் ட்யூனும் மிருதங்கம் அல்லது தபலாவின் நிலையான ரிதமும் இணைந்திருப்பதை ஒரு பொதுத் தன்மையைப் பார்க்க முடிகிறது.

பாக்யலக்ஷ்மி (1961) படத்தில் வரும் பாடல் இந்தப் பொதுத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது பாருங்கள் –

பாடல் எவ்வளவு இயல்பான ட்யூனில் அமைந்திருக்கிறது என்பதையும் அதன் அற்புதமான ரிதத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. மிருதங்கம் இந்தப் பாடலுக்கு ஒரு நவீன ஒலி கூட்டுவது மட்டுமல்ல, அது எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது பாருங்கள்.

இவர்கள் இசையில் உள்ள வேறொரு முக்கியமான தனித்தன்மையைக் காட்ட 1961ஆம் ஆண்டு வந்த இரு பாடல்களை எடுத்துக் கொள்கிறேன்.

பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடல் இது-

ப்ரிலூடில் வேகமாய் ஒலிக்கும் வயலின்களும் கிதாரின் மெல்லிய அதிர்வும் இந்தப் பாடலின் நவீனத்துவ உணர்வை விரைவில் நிறுவி விடுகின்றன. ஜி ராமநாதன் சகாப்தத்தைக் கடந்து எவ்வளவு தூரம் இந்த இரட்டையர் வந்திருக்கின்றனர் என்பதை உணர்த்த இதுவே போதும். இங்கு தபலா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனித்திருப்பீர்கள், அது நிலையான ரிதம் ஒன்றில் இப்பாடலை நிறுவுகிறது. சமவெளியில் பாயும் நதி போல் தங்கு தடையின்றி இப்பாடல் ஒலிக்கிறது, இது மலையிலிருந்து பிரவகிக்கும் வெள்ளமல்ல. இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன்- இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது? பலரையும் இந்தக் கேள்வி தோற்கடித்து விடுகிறது. அது ஒரு காரணத்துடன் கேட்கபப்ட்ட கேள்விதான், இதற்கு பதில் எதுவும் நான் எதிர்பார்ப்பதில்லை. இந்தப் பாடலின் பின்னணியில் செவ்விசையின் தளம் இருந்தாலும், அதன் ராகம் முழுமையாய் வெளிப்படுவதில்லை. மாறாய், நமக்குக் கிடைப்பது ஒரு ட்யூன். அது நம் இதயத்தில் நுழைந்து நம் உணர்வுகளைத் தொட்டு மறக்க முடியாத தாக்கத்தை விட்டுச் செல்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் முக்கிய இயல்பாக இது இருந்தது, பின்னர் எம்எஸ்வி இசையின் தனித்தன்மையாகவும் ஆனது. வேர்களை இழக்காமல், ஆனால் அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் ட்யூன் கம்போஸ் செய்யும் திறமை செவ்வியலுக்கு புது நிறம் சேர்க்கிறது. பல சமயம் இவர்கள் பாடல்களின் ராகத்தை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது, அது முக்கியமும் அல்ல.

பாசமலர் படத்தில் வரும் பாடல் இது- பல தலைமுறை திரையிசை ரசிகர்களின் மேல் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய பாடல் என்ற வகையில், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மிகச் சிறந்த பாடல் என்றால், அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடும். ஆம், “மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற” என்ற பாடல்தான் இது. ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த பாடல் என்று ஒப்புக்கு ஒரு அடையாளம் கொடுக்கலாம், ஆனால் யாருக்கு அதில் அக்கறை- இந்தப் பாடல் எவ்வளவு வலுவாக நம்மைத் தாக்குகிறது பாருங்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் பாடல் ரசிக நெஞ்சங்களை வெற்றி கொண்டது. மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் தனக்கு இந்தப் பாடல் அளித்த உந்துதலைப் பேசியிருக்கிறார்.

இவை 1961ல் வெளிவந்த வேறு இரு பாடல்கள். இதுவரை நான் சொன்ன இயல்புகள் இந்தப் பாடலிலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இவர்கள் இசையின் இன்னொரு தனித்தன்மையைப் பார்க்கலாம்.

இது, “பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும், “நான் பேச நினைப்பதெல்லாம்“, என்ற பாடல்.

இதிலும் நிலையான ரிதம், இயல்பான ட்யூன், ஒப்புக்கு சிவரஞ்சனி ராகத்தின் சாயல்.

பாவ மன்னிப்பு” படத்தில் வரும், “காலங்களில் அவள் வசந்தம்“-

இங்கும் முத்திரையாய் ஒலிக்கும் ரிதம், அதே முத்திரையோடு ட்யூன், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத செவ்வியல் இசை.

இத்தனை பாடல்களில் நான் சொன்னதற்கும் மேலே இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்- இந்தப் பாடல்களில் இழையோடும் சோகம். நான் பட்டியலிட்டுள்ள எல்லா பாடல்களிலும் சோகத்தின் சாயல் இருக்கிறது. மேற்சொன்ன பாடல்களில் உள்ளது போல், காதல் பாடல்களிலும் ஒரு மெல்லிய சோகம். இவை மலையாளப் படங்களின் பெருஞ்சோகம் அல்ல- நம்மைத் தொய்வடையச் செய்யும் பாடல்கள் அல்ல இவை. இங்கு உற்சாகம் கெடவில்லை, ஆனாலும் மிகத் தேர்ச்சியான முறையில் சோகத்தின் நிழல் படிந்திருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை என்றால் இந்த மென்சோகம்தான் மேலோங்கி நிற்கிறது.. மேலோங்கி என்றுதான் சொல்கிறேன், அது மட்டுமே இருக்கிறது என்று சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும் (பிற ஒலிகளைப் பின்னர் பார்க்கலாம்). இந்தச் சோகத்தின் நிழலே நம்மைப் பாடலோடு என்றென்றும் கட்டிப் போடுகிறது. அறுபதுகளின் குழந்தைகள் இந்த மென்சோகமும் நாஸ்டால்ஜியாவும் கூடிய நினைவுகூர்தலில், அந்தக் கால படங்கள் போல் நல்ல படங்கள் எப்போதும் வந்ததில்லை, என்று சொல்வது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

சோகத்தில் இவர்களின் ஆற்றல் முழுமையாய் வெளிப்பட்டதால் இவர்கள் மிகச் சுலபமாகவும் இயல்பாகவும் சோகப் பாடல்கள் அமைத்தனர், அவையே இன்றும் இவர்கள் பேர் சொல்லும் பாடல்களாக இருக்கின்றன.

திரைப்பாடல்களில் மிக உயர்ந்த தத்துவம் பேசும் பாடல் இது- பாலும் பழமும் படத்தில், போனால் போகட்டும் போடா

பாவ மன்னிப்பு படத்தில், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

நான் சொன்ன அத்தனை சுபாவமும் இந்தப் பாடலில் உண்டு (கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயம்- எண்பதுகளில் சிவாஜி நடிப்பில் இயக்குனர்கள் விரும்பி வரவேற்றதை ஒற்றை வரியில் விவரிக்கிறது இந்தப் பாடலின் துவக்கம்)

கண்ணதாசனைப் பேசாமல் அறுபதுகளின் துவக்கத்தைப் பேச முடியாது. எத்தனைச் சிறந்த பாடலாசிரியர்- எம்டியும் பாடலாசிரியரும் இணைந்து கோலோச்சிய காலத்தில் எழுதியவர். ஒற்றை பத்தியில் கண்ணதாசன் பற்றி பேச முடியாது. இன்னும் நிறைய எழுத வேண்டும்.

1961க்குப்பின் விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதையும் அவர்கள் பின்னர் அளித்த பாடல்களையும் இனி பார்ப்போம். இப்போதைக்கு, 1961ஆம் ஆண்டின் வேறு சில பாடல்கள்.

பாசமலர் படத்தில் வரும் யார் யார் யார் என்ற பாடல்

பாவமன்னிப்பு படத்தில் பாலிருக்கும்

படம், பாலும் பழமும். பாடல், என்னை யார் என்று.

ஆதிக்கம்

1961ஆம் ஆண்டு திருப்புமுனையாக இருந்தால், அதைத் தொடர்ந்த இரு ஆண்டுகளில் எம். எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி தங்களைத் திரையிசையின் முன்னணி கலைஞர்களாக நிறுவிக் கொண்டனர். அதன்பின் 1964ஆம் ஆண்டு அவர்களுக்கு மகத்தான ஒன்றாக அமைந்தது.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உள்ள ஒலி பற்றி பேசினோம். அதில் ஒரு மெல்லிய சோகம் கலந்திருந்தது என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு முக்கியமான காரணம், 1961ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு அப்படிப்பட்ட ஓசை தேவைப்பட்டது என்பதாகவும் இருக்கலாம். அவற்றில் பல மிகையுணர்ச்சியை வெளிப்படுத்திய படங்கள்- ‘பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“, “பாசமலர்”, “பாக்கியலட்சுமி“. இந்த நான்கு படங்களில் மூன்றை இயக்கிய பீம்சிங் உணர்ச்சிகரமான திரைப்படங்களை இயக்குபவர் என்று புகழ் பெற்றவர். எனவே இந்தப் படங்களில் தேவைகளுக்கு ஏற்பவே இசையும் அமைந்திருந்தது.

பீம்சிங் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேலும் சில மிகச்சிறந்த திரைப்பாடல்களைத் தருவார்கள். ஆனால் 1962ஆம் ஆண்டுதான் இயக்குனர் ஸ்ரீதர் இவர்களோடு இணைந்த ஆண்டு. முதலில் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடனும் பின்னர் எம்எஸ்வியுடனும் இணைந்து ஸ்ரீதர் மறக்கமுடியாத பல பாடல்களை அளித்தார். 1962களிலேயே இவர்களின் இசையில் ஸ்ரீதரின் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன- “சுமங்கலி“, “நெஞ்சில் ஒரு ஆலயம்”, “போலீஸ்காரன் மகள்“. 1961ஆம் ஆண்டு ஐந்து படங்களுக்கு இசையமைத்திருந்த இவ்விருவரும் அடுத்த ஆண்டு பதினான்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். அவர்களது வளரும் புகழுக்கும் முக்கியத்துவத்துக்கும் இதுவே போதுமான ஆதாரமாகிறது.

விஸ்வநாதன் ராமமூர்த்தி தேர்ந்த மெலடியில் இசையமைக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்ட பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பலர் களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்றாலும் எம்ஜிஆர் திரைப்படங்களே அவர்களுக்கு விதவிதமான பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அளித்தன. எம்ஜிஆர் படங்களிலும் சிறந்த மெல்லிசைப் பாடல்கள் இருந்தன என்றாலும், அவற்றில் துள்ளிப் பாயும் உற்சாகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மிகப்பெரிய ஆளுமையாக எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றியது ஒரு காரணம் என்றாலும் அவர் அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம். முன்னதாகவே எம்ஜிஆர் இவர்களுடன் பணியாற்றியிருந்தார் என்றாலும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கே வி மகாதேவனுக்கு சம வாய்ப்புகள் அளித்தார் (பின்னரே அவர் எம்எஸ்வி பக்கம் சாய்ந்தார்).

1960ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆருக்கு மறக்க முடியாத ஒரு பாடல் அமைத்திருந்தனர்- “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் வரும், “அச்சம் என்பது மடமையடா,” என்ற பாடல். இன்றும் இது கழக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதன் ட்யூன் நன்றாக இருக்கிறது என்றாலும் ஐம்பதுகளுக்கு உரிய பாடல்தான் இது- விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகளில் மிகக் குறைவாகவே இதில் இருக்கிறது. அக்காலத்துக்கே உரிய பாடல்-

பாசம் (1962) என்ற திரைப்படத்தில் ஏறத்தாழ இதே போன்ற தாளம் மற்றும் பாடல் அமைப்பு இப்போது நவீனமாக ஒலிக்கிறது. இதன் துவக்கத்தில் வரும் கிதாரின் அதிர்வுகள் மற்றும் வயலின், இன்டர்லூடில் வரும் அக்கார்டியன் ஓசை, டிஎம்எஸ் பாடும் முறை இந்த மாட்டு வண்டி முன்பிருந்த ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றன- “உலகம் பிறந்தது எனக்காக

அரசியல் பாடல்கள் மட்டுமல்ல, எம்ஜியாரின் காதல் பாடல்களும் உற்சாகமாக இருந்தன. இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீத ராகங்களின் கட்டுக்களைத் தளர்த்டில், மேலும் நவீன வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. இது, “பணத்தோட்டம்” படத்தில் வரும் “பேசுவது கிளியா,” என்ற பாடல்..

இந்த பாடலின் முன்னிசை எவ்வளவு நவீனமாக ஒலிக்கிறது பாருங்கள். பல்லவியின் துவக்கத்தில் பாங்கோக்கள் சேர்ந்து கொள்கின்றன. “சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா” என்று எவ்வளவு அழகாக பல்லவி நிறைவடைகிறது பாருங்கள்.

பணத்தோட்டம்” பாடல் நவீன பாடலாக இருந்தாலும் அது தமிழ் மெலடியாகதான் இருக்கிறது, சரணத்தில் தபலாதான் பாடலைக் கொண்டு செல்கிறது. இதன்பின் “பெரிய இடத்துப் பெண்” படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று முழுக்க முழுக்க மேலை நாட்டுப் பாணியில் ஒரு பாடல் செய்தார்கள். இதில் தபலா கிடையாது. முழுக்க முழுக்க சா சா நடனத்தைத் தழுவிய மேற்கத்திய இசைப்பாணி. இங்கு நாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி நம் எல்லைகளுக்கு அப்பால் சென்று உலக இசையை நமக்கு அளிக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறோம் (1990ஆம் ஆண்டுதான் உலக இசை தமிழ் திரைப்பாடல்களில் ஒலித்தது என்று நினைப்பவர்கள் தம் கருத்தைப் பரிசீலித்துக் கொள்ளலாம்)-

இதே படத்தில் “பாரப்பா பழனியப்பா” என்ற கிராமிய மெட்டில் ஒரு பாடலை ‘ஏழைப்பங்காளன்’ எம்ஜிஆருக்கு இசையமைத்திருந்தது இவர்களுடைய திறமைக்குச் சாட்சி. முன்சொன்ன பாடல் இளமையான, கம்பீரமான எம்ஜிஆர் பாடுவது.

பலவகைப் பாடல்களுக்கு இசையமைக்கக்கூடியவர்கள் என்று சொல்வதை நம்பாதவர்கள் இதைக் கேட்கலாம்- “கட்டோடு குழலாட

(1963ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “ஆனந்தஜோதி” படப்பாடல்கள் சிவாஜி/ ஜெமினி படப்பாடல்கள் போலிருக்கும்- “நினைக்கத் தெரிந்த மனமே“, “பனி இல்லாத மார்கழியா” முதலிய பாடல்கள்).

எம்ஜிஆர் படங்களில் மட்டும்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி வெவ்வேறு வகை பாடல்களில் இசையமைத்தனர் என்றில்லை- சிவாஜியின் “பலே பாண்டியா” ஒரு முக்கியமான படம். இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். நகைச்சுவைப் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது- “நீயே உனக்கு என்றும் நிகரானவன்”

இதன் ட்யூனில் நகைச்சுவை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இது. முடிவில் வரும் சுவரங்களும் ஜதிகளும், அதைப் பாடி நடிக்கும் நடிகர்களும் (குறிப்பாக எம் ஆர் ராதாவின் மிகைநடிப்பு)- நகைச்சுவை விருந்து அளிக்கிறது.

இதே படத்தில்தான் “நான் என்ன சொல்லிவிட்டேன்,” “அத்திக்காய் காய் காய்” என்ற பாடல்களும், நொந்துபோன கணங்களில் நம்பிக்கையூட்டும், “வாழ நினைத்தால் வாழலாம்” பாடலும் இருக்கின்றன.

இந்தப் பாடல்கள் அவர்களுடைய தனித்திறமைக்கு விளம்பரம் என்றால், அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் இசையமைத்த பாடல்கள் இவர்களைச் சிறந்த பாடல்கள் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றன. சோகப் பாடல்களுக்கும் இவர்கள் பெயர் பெற்றனர்.

இதைவிடச் சோகமான பாடல் கேட்க முடியுமா? “ஆலயமணி” படத்தில் வரும், “சட்டி சுட்டதடா” பாடல்.

அல்லது, நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில், “சொன்னது நீதானா“-

பார் மகளே பார்” படத்தில் “அவள் பறந்து போனாளே” மற்றொன்று-

இந்த இரு ஆண்டுகளில் அவர்கள் அளித்த அருமையான பாடல்கள்தான் எத்தனை எத்தனை!. “ஆலயமணி“, “பாத காணிக்கை“, “நிச்சய தாம்பூலம்“, “படித்தால் மட்டும் போதுமா“, “பார்த்தால் பசி தீரும்“, “சுமைதாங்கி“, “நெஞ்சம் மறப்பதில்லை“, “கற்பகம்” என்று மிகச் சிறந்த பல படங்கள் அந்த இரு ஆண்டுகளில் வெளிவந்தன.

இதோ “போலீஸ்காரன் மகள்” படத்தில் இரண்டு பாடல்கள்- இவை அவர்களின் இசையின் வேறொரு இயல்பை வெளிப்படுத்துகின்றன-

கானடா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல்-

பிபிஎஸ், ஜானகியின் குரல்கள் இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமானவை. என்ன ஒரு மெலடியில் அமைந்த பாடல் இது. “முல்லை மலர்” பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் கானடா ராகத்தை எப்படி மாறுபட்ட முறையில் அணுகியிருக்கிறார்கள், இப்போது.திரைப்பாடலில் ராகத்தின் அழகு கெடாமல் அதைப் பயன்படுத்துவது எப்படி என்று பாடம் நடத்துவது போலிருக்கிறது.

இது கல்யாணி ராகம். இதுவும் பிபிஎஸ், ஜானகிதான். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரும் வெற்றி பெற்ற பாடல்.

இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருப்பது முக்கியமில்லை- எவ்வளவு சிறந்த திரைப்பாடலாக வந்திருக்கிறது பாருங்கள்-

இது எழுபதுகளின் கடைசியில் “வியாமோகம்” என்ற பெயரில் மலையாள மொழி திரைப்படமாக வெளிவந்தது. அதற்கு இசையமைத்தவர் இளையராஜா. விஸ்வநாதனின் கல்யாணி ராஜாவுக்கு ஒரு உத்வேகம் அளித்திருக்கக்கூடும். ராஜாவின் முற்றிலும் மாறுபட்ட கல்யாணி இது-

போலீஸ்காரன் மகள்” படத்தின் இரு பாடல்களைக் கொண்டு நான் சொல்ல வந்த விஷயம் இதுதான்- பாடல் அமைப்பு எவ்வளவு எளிமையாக இருக்கிறது பாருங்கள். பல்லவி எப்போதுமே எளிமையாக இருக்கும், சரணங்களும் இங்கு எளிமையாக இருக்கின்றன. இவற்றில் எதிர்பாராத திருப்பம் எதுவும் கிடையாது. எனவே யாரும் இந்தப் பாடலுடன் இணைந்து பாட முடியும், நம்மாலும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். தவிர, கண்ணதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாமல் செய்கின்றன. எனவேதான் இன்றும் இந்தப் பாடல்களை இன்றும் தடுமாற்றமில்லாமல் பாட முடிகிறது.

ட்யூன்கள் மாறும் சிக்கலான பாடலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. “பராக்” படத்தில் வரும் சலீல் சௌதுரி பாடல், ஆண்டு 1960

சென்ற இதழில்: எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

(தொடரும்)

- See more at: http://solvanam.com/?p=41346#sthash.f0osrBwc.dpuf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2

எஸ்.சுரேஷ்
 
  •  

msv

1964- பன்முகத்தன்மையின் ஆண்டு

1964. இந்த அளவுக்கு வித்தியாசமாக, பலவகைகளில் தம் திறமையை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளும் திரைப்பட வாய்ப்புகள் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் கிடைப்பதில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு 1964 அப்படிப்பட்ட ஒரு ஆண்டு.

இவர்கள் 1964ஆம் ஆண்டு இசையமைத்த அத்தனை படங்களையும் நான் பட்டியலிடப் போவதில்லை. இவர்களின் பன்முகத்திறமை வெளிப்பட்ட திரைப்படங்களில் சில பாடல்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

இதில் முதலில், அவர்களது சொந்த தயாரிப்பான கலைக்கோவில் என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம். ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம் படுதோல்வியடைந்தது. இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட இது காரணமாக இருந்திருக்கலாம் என்று விக்கிப்பீடியா குறிப்பு ஒன்று கூறுகிறது. அதை விட்டுவிட்டு இப்படத்தின் இசை பற்றி பேசுவோம்- இந்த இசை அக்கால ரசிகர்களை ஈர்க்கவில்லை.

பாலமுரளி, சுசீலா குரலில் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல். தங்க ரதம் வந்தது, இன்று திரையிசையில் ஒரு செவ்வியல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அந்த நாட்களில் இவ்வளவு பிரபலமடையவில்லை என்று நினைக்கிறேன். முதலில் கவனிக்கப்படாதபோதும், தரம் எப்போதும் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இது இன்னுமொரு சான்று.

பாலமுரளி குரலில் உள்ள கம்பீரமும் சுசீலாவின் குரலின் இனிமையும் இதில் அழகாக இணைகின்றன. முதல் இடையிசையில் உள்ள புதுமையை கவனித்திருப்பீர்கள். இசை சீராக இல்லை, தாளம் மாறுபட்டு ஒலிக்கிறது. ஆனால் சரணம் அவர்களுக்குரிய வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறது. முன்னரே, மாலையிட்ட மங்கை படத்தில் நானன்றி யார் வருவார் என்ற பாடலை ஆபோகி ராகத்தில் அமைத்திருந்தனர் இவ்விருவர். ஆனால் அது ஏறத்தாழ ஒரு கர்நாடக சங்கீத கிருதி போலவே அமைந்திருந்தது. இது நவீன ஆபோகி.

அடுத்து, ஸ்ரீராகத்தில் அமைந்த அருமையான பாடல். முன்னிசையில் வீணை இனிமையாக ஒலிக்கிறது, தபலா ஏறத்தாழ ஒரு ஜலதரங்கம் போலவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் சொந்தப் படத்தில் புதுமை செய்ய நினைத்தார்கள் போலிருக்கிறது. பிறர் தயாரிப்பில் இது சாத்தியமில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம். இந்தப் பாடலுக்கு வீணை வாசித்தவர் வீணை மேதை சிட்டிபாபு என்று விக்கிப்பீடியா குறிப்பு சொல்கிறது.

கலைக்கோவிலுக்கு நேர் எதிர் துருவம் புதிய பறவை. ஆங்கில திரைப்படம் ஒன்றன் தாக்கம் கொண்ட துப்பறியும் கதை, புதிய பறவை. நவீன சினிமா என்று சொல்லலாம், தனிப்பாணியில் அமைந்திருந்தது, இன்றைய திரை விமரிசனத்தில் ஸ்டைலிஷ் மேக்கிங் என்று எழுதுவார்கள். சிவாஜி கணேசன் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். திரைப்படம் படமாக்கப்பட்ட விதத்துக்கு ஏற்ப இசையும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் இருந்தாக வேண்டும் என்ற சவாலை விஸ்வநாதன் ராமமூர்த்தி எதிர்கொண்டதில் நமக்குச் சில அசாதாரணமான, மறக்க முடியாத பாடல்கள் கிடைத்தன.

மேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைந்த உன்னை ஒன்று கேட்பேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், சுசீலா இணைந்து சிறிதுகூட சிரமம் தெரியாமல் அமைக்கப்பட்ட, மற்றுமொரு ஸ்டைலிஷ் பாடல். சுசீலாவின் மிகச் சிறந்த பாடல்களில் இந்த இரண்டு பாடல்களுக்கும் மிக முக்கியமான இடமுண்டு.

அற்புதமான பியானோ இசையும், இடையிசையில் சாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதும் மேற்கத்திய பாணி அணுகல்கள். இந்திய பாணி ட்யூனில் இந்த இசை மிக வித்தியாசமான ஓசையுடன் அமைந்திருக்கிறது. நிலவிலா வானம் என்ற இடத்தில் எவ்வளவு நன்றாக மெட்டு போட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இந்தப் படத்தில்தான் மெல்ல நட மெல்ல நட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற இரு பாடல்களும் இருந்தன. ஆனால் எங்கே நிம்மதிதான் கற்பனையின் உச்சம் தொட்ட பாடல் என்று சொல்ல வேண்டும். இந்தப் பாடலில் எல்லா இசைக்கலைஞர்களும் உற்சாகமாக போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றிருக்கிறார்கள். நம்மால் என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. வயலின்கள் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வயலின் கலைஞர்கள் அனைவரும் இந்தப் பாடல் பதிவில் இசைக்கச் சென்று விட்டதால் அன்று சென்னையில் வேறெந்த பாடலும் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்வார்கள். போனால் போகட்டும் போடா பாடலை ஆங்காங்கே நினைவூட்டும் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் அமைந்த இடையிசையுடன் இனிய ட்யூன். டிஎம்எஸ்ஸின் அப்பழுக்கற்ற குரல், சிவாஜியின் முத்திரை நடிப்பு. அனைத்தும் இந்தப் பாடலில் கைகூடி வந்திருக்கின்றன. ஆனால் இதில் மிகப்பெரிய வெற்றி கண்ணதாசனுக்கே உரியது- இந்தப் பாடல் வரிகள் வேறு யாராலும் தொட முடியாத இடத்தைத் தொடுகின்றன- எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது.

புதிய பறவை படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் நவீன இசை வெளிப்பட்டால், தமிழ் திரைப்பட வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான காதலிக்க நேரமில்லையில் அவர்கள் இசையில் விளையாடிப் பார்த்தார்கள். கொண்டாட்டமாய் சில பாடல்களும் இனிய காதல் டூயட்களும் இந்தப் படத்தில் அமைந்திருந்தன.

மேற்கத்திய இசையின் தாக்கத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும்-

உந்தன் பொன்னான கைகளில் இந்த விளையாட்டு தொடர்கிறது. இதில் சிறிது இந்தி திரையிசை கலந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மைன் சலி மைன் சலி என்ற ப்ரொபசர் பாடலின் இடையிசை இதில் ஒலிப்பது போல் தெரிகிறது. ஆனால் ட்யூன் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒன்று. இது போன்ற பாடல்களுக்கு பிபிஎஸ் குரல் பொருத்தமானதுதானா என்பது குறித்து எனக்கு கேள்வி உண்டு.

தலைப்புப் பாடலுக்கு சீர்க்காழி கோவிந்தராஜனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதியவர் ஒருவர் பாடுவதாக படத்தில் வரும் பாடல் என்பதால், சீர்காழியின் குரல் நன்றாகப் பொருந்துகிறது.

ஆனால் ஏனோ எனக்கு இந்த இரு பாடல்களும் நிறைவு கொடுக்கவில்லை. இது போன்ற ஜாலியான பாடல்கள் எவ்வளவு லைட்டாக இருக்க வேண்டுமோ அது போன்ற இலகுத்தன்மை இந்த ட்யூன்களில் இல்லை. ஆனால், மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும், என்ற பாடல் பற்றி யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. ராக் அண்ட் ரோல் பாணி பாடல், இதில் வரும் யோடலிங் கிஷோர் குமாரை நினைவுபடுத்துகிறது.

அனுபவம் புதுமை மற்றுமொரு ராக் அண்ட் ரோல் பாடல். இனிய ட்யூன், பின்னணியில் மேற்கத்திய இசை.

இவை போதாதென்று என்ன பார்வை உந்தன் பார்வை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, மற்றும் இதயத்தைப் பிசையும், நாளாம் நாளாம் திருநாளாம்-

எவ்வளவு சந்தோஷமான பாடல்கள், ஒன்றில்கூட சோகத்தின் சாயல் இல்லை. இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிவாகை சூடின. காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியில் பாடல்களின் வெற்றிக்கு கணிசமான பங்கு உண்டு என்று நினைக்கிறேன்.

இதே ஆண்டுதான் எம்ஜிஆரின் படகோட்டியும் வந்தது. ஆனால் வழக்கமான எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் இதில் இல்லை.

ஒரு சோதனை முயற்சியாக, தொட்டால் பூ மலரும்- எம்ஜிஆர் பாடல் என்பதைவிட, இதில் இழையும் மென்சோகத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை பதிந்திருக்கிறது. இந்தப் பாடலில் வரும் கரவொலி இன்றும் கொண்டாடப்படுகிறது.

இதில்தான் பாட்டுக்குப் பாட்டெடுத்து, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல்களும். அனைத்தும் திரைக்கு வந்ததும் வெற்றி பெற்ற பாடல்கள்.

பொதுவாகவே படகோட்டி படப்பாடல்கள் எல்லாம் சோகமானவை என்றால், அதே ஆண்டு வந்த மற்றுமொரு எம்ஜிஆர் படமான தெய்வத்தாய் பாடல்கள் அனைத்தும் உற்சாகமானவை – ஒரு பெண்ணைப் பார்த்து என்ற இந்தப் பாடலை யார் மறக்க முடியும்?

இவற்றில் சிறந்ததை கடைசியில்தான் சொல்கிறேன். 1964தான் கர்ணன் வந்த ஆண்டு. இந்துஸ்தானி ராகங்களைச் சோதனை முயற்சியாக இதில் கையாண்டுள்ளனர். அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய படம். தமிழ் திரைவரலாற்றில் கிளாசிக் அந்தஸ்தைத் தொட்ட படம்.

கர்ணன் படத்தில் சுசிலா சில அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். கண்ணுக்கே குலம் ஏது, இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நினைக்கிறேன். நாம் வழக்கமாகக் காணும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இதிலும் உண்டு. சோகத்தின் சாயல், இனிமையான மெட்டு, எளிய இசைக்கோர்வை- அனைத்தும் இந்த இரட்டையருக்கே உரியவை. தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்தப் படத்தில் சுசிலா பாடிய வேறு இரு பாடல்கள் இருக்கின்றன. அவை விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மாறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகின்றன- இது கண்கள் எங்கே என்ற பாடல்

இதன் பல்லவி மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது- மெல்ல ஒலிக்கும் மெட்டு முடிவில் வேகம் பிடிக்கிறது, கோரஸ் மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வேகம் நிதானித்தும் விரைந்தும் மாறி மாறி பயணிக்கிறது. பெண்குரல் தனித்து பாடும் பாடல்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மிகவும் நேசித்த சர்வலகு தாளம் இதில் இல்லை. பாடல் முழுதும் நடை வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது. இது அத்தனையையும் மறைப்பதாக பாடலின் ட்யூனும் சுசிலாவின் குரலும் இருக்கின்றன.

இதில் உள்ள மற்றொரு பாடல், என் உயிர்த் தோழி. ஹிந்துஸ்தானி ராகமான ஹமீர் கல்யாணியில் அமைந்த பாடல். இதன் ட்யூன், ரிதம் என்று எதிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது. ஆனால்கூட இடையிசையில் வரும் ஷெனாய் மற்றும் இந்துஸ்தானி சாயல், இந்தப் பாடலைத் தனித்தன்மை கொண்டதாகச் செய்கிறது-

இந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம்? விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம். இதன் காணொளியை என் நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் இசை ஞானம் மிக்கவர். அவரோ, ஷ்யாம் கல்யாண் போலிருந்தாலும் இது உண்மையில் அதற்கு மிகவும் நெருக்கமான சுத்த சாரங்க் ராகத்தில் அமைந்த பாடல் என்றார். எனக்கு இந்த ராகங்கள் எதுவும் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தப் பாடலில் அழகாய் ஒலிக்கும் ஷெனாய், பிஸ்மில்லா கான் வாசித்தது. இதற்காகவே அவர் சென்னை வந்தார்.

மகராஜன் உலகை ஆளலாம் என்ற பாடல் கரகரப்பிரியா ராகம். திஸ்ர நடையில் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலில் அதன் சாயல் முழுமையாக மாறிவிட்டதை ஜி எஸ் மணி ஒருமுறை ஒலிப்பதிவு உரையாடலில் கூறியிருக்கிறார்.

ஒரு படத்துக்கும் அதன் இசைக்கும் சாகாவரமளிக்க இந்தப் பாடல்களே போதும் என்று நீங்கள் நினைத்தால், இன்னும் இருக்கிறது. இதுவரை சொன்னதெல்லாம் கர்ணன் படத்தின் அடையாளங்கள், அவை இடம்பெறும் கட்டங்களுக்கு உரியவை.

இந்தப் பாடல் பாருங்கள்- வழக்கமான கர்ப்பகால பாடல்- இதிலும் ஷெனாய் எவ்வளவு அழகாக ஒலிக்கிறது. இரண்டாம் சரணத்தின் மெட்டு நம் இதயத்தைத் தொடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், வார்த்தைகள். என்னவொரு அர்த்தம் பொதிந்த அழகிய, இனிய பாடல்.

பேறு காலத்தில் பிறந்த வீடு செல்லும் பெண்ணுக்குரிய பாடல் இது. ஆனந்த பைரவியில் அமைந்த பாடல். கண்னதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாததாகச் செய்கின்றன.

இந்தப் பாடலின் விசேஷம் பத்யம் போன்ற பகுதியில் பல்வேறு பாடகர்கள் பல்வேறு ராகங்களில் பாடுகின்றனர். எவ்வளவு சிறந்த இசைக்கலைஞர்களை இங்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்று சேர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். படத்தில் ஒவ்வொரு புலவராக அடுத்தடுத்து கர்ணனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலிலும் மெட்டும் சொற்களும் மிக அழகாகக் கூடிவருகின்றன. திருச்சி லோகநாதன் பாடுவது கானடா ராகத்தில் ஒரு முத்தாரம் என்று சொல்லலாம்- நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம் என்று எழுதிய கண்ணதாசன் கற்பனையை என்னவென்று சொல்ல!

இப்போது இந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் பாடல் சோகப் பாடல் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல். சக்ரவாகம் (அஹிர் பைரவ்) அடிப்படையில் அமைந்த பாடல், இது சீர்காழியின் குரலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் பாடல். பெருஞ்சோகத்தை இந்தப் பாடல் போல் கைப்பற்றிய வேறு பாடல்கள் அரிது, மிகச் சில பாடல்களே இதுபோல் உணர்வை இசையாய் வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. இங்கும் நாம் கண்ணதாசனுக்கு சிரம் தாழ்த்த வேண்டியதாகிறது, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற துவக்கம் முதல் முடிவு வரை கண்ணதாசன் பாணியில் மிக ஆழமான தத்துவ தேடல்.

கர்ணன் படப்பாடல்களை எத்தனை எத்தனை விதங்களில் மாறுபட்டு ஆனால் பொருத்தமான வகையில் இவர்கள் இசையமைதிருக்கின்றனர் என்பது தீராத ஆச்சரியமாகவே இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமையைக் காட்ட ஒரே ஒரு படம் போதும் என்றால் தயக்கமில்லாமல் நாம் கர்ணன் படப்பாடல்களைப் பரிந்துரைக்க முடியும். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழ் திரையிசை வரலாற்றின் மிகச் சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது என்று சொல்லலாம்.

(தொடரும்)

- See more at: http://solvanam.com/?p=41623#sthash.XYu6Ncz6.dpuf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்வி இசையும் காலமும் – 3

 

பிரிவு

Music_MSV_TKR_t-k-ramamurthy-and-m-s-viswanathan

விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று இரட்டையராக இருந்தவர்கள் 1965ஆம் ஆண்டு எம்எஸ்வி என்றும் டி. கே. ராமமூர்த்தி என்றும் இருவராய்ப் பிரிந்தார்கள். அதைத் தொடர்ந்த பதினைந்து ஆண்டுகள் எம்எஸ்வி தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராய் கோலோச்சினார், ராமமூர்த்தி மெல்ல மெல்லக் காணாமல் போனார். ஆனால் அதெல்லாம் எதிர்காலத்தில்தான்.  1965ஆம் ஆண்டில், திரையிசை ரசிகர்களுக்கு எம்எஸ்வி படைத்த பாடல்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

1964ஆம் ஆண்டின் உச்சங்களை 1965ல் இவர்கள் தொடவில்லை என்றாலும், அந்த ஆண்டும் நமக்குச் சில மகத்தான பாடல்களையும் என்றும் மறக்க முடியாத பாடல்களையும் கொடுத்தனர். இன்றும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, இனி வரும் பல காலமும் அவை நம்மோடிருக்கும்.

இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.

(இந்தப் படத்தின் கதைக்கரு முதலில் தெலுங்கு மொழியில் “ராமுடு பீமுடு” என்ற படத்தில் வந்தது, அதன்பின் பல முறை இந்திய மொழிகளில் மீளப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மிக வெற்றிகரமாகவே என்றும் சொல்லலாம்- ராம் ஔர் ஷ்யாம்சீதா ஔர் கீதா, சால்பாஜ், கிஷன் கண்ணையா என்று எத்தனை எத்தனை ஹிட் படங்கள்! ஏறத்தாழ இந்தியத் திரைப்படங்களின் டெம்ப்ளேட்டாகவே ஆகிவிட்ட, “மாறுபட்ட மனநிலை கொண்ட இரட்டையர்கள்” என்ற கதைக்கருவின் மூலப்பொருள் பிரெஞ்சு மொழியில் அலெக்சாண்டர் டூமாஸின் கற்பனையில் உதித்தது என்கிறது விக்கி).

இந்த ஆண்டின் மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்

வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு  அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது. இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய மற்றுமொரு பாடல்.

தமிழுள்ளவரை இந்தப் பாடலும் இருக்கும் என்று நான் சொல்வது சிறிது மிகையாகத் தெரியலாம், ஆனால் பாடல் என்னவென்று பாருங்கள் – “பஞ்ச வர்ணக் கிளி” என்ற படத்தில் “தமிழுக்கும் அமுதென்று பேர்

விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றால் மென்சோகம்- இந்தப் பாடலின் முன்னிசையில் வயலின்கள் எவ்வளவு இனிமையாகச் சோக உணர்வை  உருவாக்குகின்றன பாருங்கள். தேன்சொட்டும் சுசீலாவின் குரலில் பாரதிதாசன் பாடல் (தன் நடிப்புத் திறமையை எவ்வளவு குறைவாகக் காட்டியிருந்தாலும் கே ஆர் விஜயாவுக்கு முழுப் புகழும் கிடைத்திருக்கும் என்ற விஷயத்தை யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் இது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பாடலாக இருந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக, நாம் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு மட்டுமே இன்புற்று மகிழ வேண்டியதாகிறது)

ஆயிரத்தில் ஒருவன்” படத்தில்தான் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கே உரிய பெண்குரல் பாடல் – “உன்னை நான் சந்தித்தேன்“.

இதுவரை நாம் பேசிய விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகள் அத்தனையும் இதில் இருக்கின்றன.

இந்த ஆண்டுதான் இன்றும் பிரபலமாய் உள்ள கண்ணன் பாடல்கள் இரண்டு பி சுசிலாவின் குரலில் வந்தன- இரண்டுமே விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தனித்துவம் கொண்ட மெலடி பாடல்கள்.

முதலில் “பஞ்சவர்ணக் கிளி“- “கண்ணன் வருவான்“.

மற்றொன்று, “வெண்ணிற ஆடை” படத்தில், “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

1965ல் இந்த இரட்டையர் வெற்றிகரமான இசையமைப்பாளர்களாக இருந்தார்கள் என்பது தெளிவு. இதுவரை இருந்த அவர்களுக்குரிய தனிப்பாணி தொய்வடையவில்லை, மேலும் மெருகேறி இன்றும் மறக்க முடியாத  பல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த ஆண்டுதான் இருவரும் பிரிந்தனர். ஏன் பிரிந்தனர் என்பது குறித்து தெளிவான சித்திரம் இல்லை. இருவரும் இதுதான் காரணம் என்று எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. நாம் பேசுவது இசைதான் என்பதால் பிரிவின் காரணம் என்ன என்று  தேடப் போவதில்லை. பிரிவு எம்எஸ்வியின் இசையை எப்படி பாதித்தது என்றும் அவரது இசையில் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்க்கலாம்.

எம்எஸ்வி பாணி இசை என்று ஒன்று உருவான ஆண்டாக எதைக் கொள்ளலாம்? விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து செய்திருந்த சில பாடல்கள் எம்எஸ்வி பெயரில் வந்தன என்று படித்திருக்கிறேன். இதில் எத்தனை உண்மை என்று தெரியவில்லை, ஊகம் மட்டுமே செய்ய முடியும். இருவரும் பிரிவது என்ற முடிவு உடனடியாக அப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டது என்றால் இருவரும் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த பாடல்கள் இருந்திருக்கும் என்று சொல்ல முடியும். இதுவும் ஊகம்தான். என்றாலும் 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் வந்த எம்எஸ்வி பாடல்களைப் பார்க்கலாம். இதில் எந்தப் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் இருக்கின்றன என்று பார்ப்பது சுவையான ரசனை அனுபவமாக அமையக்கூடும்.

குழந்தையும் தெய்வமும்” என்ற படத்தில் வரும் பாடல், “அன்புள்ள மான்விழியே“. காதல் பாடல், மென்சோகம், இடையிசையில் வயலின்கள், சரளமாக இசைக்கும் சரணம். எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரைக் கூவுகின்றன. எம்எஸ்வி பெயரில் வந்த 1965ஆம் ஆண்டு படம் இது.

இதே படத்தில் வரும் “பழமுதிர்ச் சோலையிலே” என்ற பாடலைப் பாருங்கள். ஆபேரி ராகத்தை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த பாடல்- மற்றுமொரு விஸ்வநாதன் ராமமூர்த்தி மெலடி போல்தான் இருக்கிறது..

கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் இந்தப் பாடலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை தாங்கிய ஒன்று- தொடர்ந்து ஒலிக்கும் தாளம், எளிய ஆனால் சரளமான சரணம், பொதுவாக இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் விதம். இதுவும் 1965ஆண்டு வந்த படம், எம்எஸ்வி இசையமைத்தது.

அடுத்தது “அன்பே வா” படப்பாடல். இந்தப் படத்தில் வரும் சில பாடல்களில் “காதலிக்க நேரமில்லை” படத்தின் சாயல்களைப் பார்க்கலாம்.

அதே போல், “நான் பார்த்ததிலே” என்ற பாடலிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தியை நான் பார்க்கிறேன்- இதன் இடையிசையிலும் “காதலிக்க நேரமில்லை” படப்பாடல்களின் நினைவுகள் வந்து போகின்றன.

அடுத்து, “சந்திரோதயம்” படத்தில் இந்தப் பாடல்-

இதை இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று, விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் சில எம்எஸ்வி பெயரில் வந்தன. இரண்டு, இவை எம்எஸ்வி பாடல்கள்தான், ஆனால் ராமமூர்த்தியின் தாக்கத்திலிருந்து எம்எஸ்வி இன்னும் விடுபடவில்லை. எப்படி பார்த்தாலும் எம்எஸ்வி தனக்கே உரிய தனித்துவம் கொண்ட பாணியை 1966ன் பிற்பகுதி, அல்லது 1967ஆம் ஆண்டில்தான் உருவாக்கிக் கொண்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

TMS_TM_Soundararajan_Viswanathan-mgr-kannadasan-msv

பாணி குறிப்புகள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை குறித்து பலருக்கும் உள்ள கேள்வி, ராமமூர்த்தியின் பங்களிப்பைப் பற்றியது. இருவரும் பிரிந்தபின் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டுமே ராமமூர்த்தி இசையமைத்தார் என்பதும் விஸ்வநாதன் எம்எஸ்வியாக மாறி திரையிசையில் பதினைந்து ஆண்டுகள் முதன்மை வகித்ததும் நமக்குத் தெரியும்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கும்போது யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. நமக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகள் சிலவும் முரண்பட்ட தகவல்கள் அளிக்கின்றன. இது குறித்து யாரும் பொதுவில் இதுவரை பேசியுள்ளதாகத் தெரியவில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றில்லை, பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் மௌனம் காக்கின்றனர். பிரிவுக்கு முன்னும் பின்னும் உள்ள இசையைக் கொண்டு ராமமூர்த்தியின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க மட்டுமே இயலும். நம்மால் எம்எஸ்வியின் பாணியில் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்க்க முடியும். ஆனால் இந்த முயற்சியை மிகவும் தன்னடக்கத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும். இருவருக்கும் இணைந்து அமைத்த இசை இருவருக்கும் உரியது என்பதை மறக்காமல் இந்தப் புரிதலை நோக்கிச் செல்ல வேண்டும்.

எனவே இந்தப் பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு பிரிவுக்குப்பின் எம்எஸ்வி தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டபோது அடைந்த வளர்ச்சியையும் எதிர்கொண்ட இழப்புகளையும் பார்க்கலாம்.

அதற்கு முன் சில ராமமூர்த்தி பாடல்கள். 1968ஆம் ஆண்டு வெளிவந்த “நீலகிரி எக்ஸ்பிரஸ்” என்ற திரைப்படத்தில் வரும், “நான் கலைஞன் அல்ல“, என்ற பாடல்.

தங்கச்சுரங்கம்” என்ற படத்தில் “சந்தனக் குடத்துக்குள்ளே

இவை இரண்டுமே இனிய மெலடிக்கள் என்பதில் சந்தேகமில்லை. ராமமூர்த்தி இசையமைத்தவற்றில் சிறந்தவை. ஆனால் இந்த இரட்டையரின் இசைக்குரிய இயல்பான வேகமும் சங்கீதமும் இதில் இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. பாடலைச் சற்றே நுட்பமாக இசையமைக்கவும் அதன் தாள கதியில் செறிவைச் சேர்க்கவும் ராமமூர்த்தி முயற்சி செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ராமமூர்த்தியின் வேறு பல பாடல்களையும் கேட்டதில், இவர்கள் இசையில் இயல்பாய் ஒலிக்கும் ட்யூனும் ஆச்சரியப்படுத்தும் மெலடியும் எம்எஸ்வியின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. “இந்த மன்றத்தில் ஓடி வரும்” என்ற பாடலையோ “நாளாம் நாளாம் திருநாளாம்” என்ற பாடலையோ நினைவுபடுத்தும் எதுவும் ராமமூர்த்தி இசையில் இல்லை. ஆனால், அவர்கள் இசையில் எதற்கும் இணையான “முத்துக்களோ கண்கள்“, “பூ மாலையில்” போன்ற பாடல்களை ராமமூர்த்தி இசையில் காண முடிகிறது.

மெலடியில் எம்எஸ்வி சிறந்து விளங்கினார் என்றால் ராமமூர்த்தியின் பங்களிப்பு என்ன? இசைக்கலைஞர்களை இயக்கி பாடலுக்கு முழு உருவம் தருவதை ராமமூர்த்தி கவனித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களுக்கு ஒரு முழுமையான வடிவம் இருந்தது, இடையிசைப் பகுதிகள் கச்சிதமாகவும் உயிரோட்டம் கொண்டதாகவும் இருந்தன. பாடலின் ஒட்டுமொத்த அமைப்போடு முழுமையாய் பொருந்தின. இசைக்கலைஞர்களை ராமமூர்த்தி தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அவர்கள் உற்சாகமாக வாசிப்பது பாடலை ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்வதை நாம் கவனிக்க முடிகிறது. ராமமூர்த்தி முறையாக இசை கற்றவர் என்பதும் இசைக்கலைஞர்களை இயக்க உதவியிருக்கலாம் பின்னர் வந்த எம்எஸ்வி பாடல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களின் கட்டுக்கோப்பில் தென்படும் மேன்மையை நாம் பாராட்ட வேண்டியதாகிறது.  இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம். ஆனால் முதலில் சொன்னதுபோல் இது வெறும் ஊகம்தான். இப்படிதான் நடந்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் – “நாளாம் நாளாம் திருநாளாம்”. உற்சாகம் நிறைந்த காதல் பாடல் இது, ஆனால் இசைக்கருவிகளை இயக்கிய விதம் என்று பார்த்தால் இதில் உள்ள ஒழுங்கை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. தபலாவின் ஓசை பாடலின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கி ஒலிக்கிறது.

இது “சந்திரோதயம் ஒரு பெண்ணானது“. எம்எஸ்விக்கே உரிய ட்யூன், இதன் இசைக்கருவிகளின் தொகுப்பு பாடலின் தொனிக்கு ஏற்ப மாறுகிறது, பல்லவி முதலே தபலா உரத்து ஒலிக்கிறது, அது சரணத்திலும் தொடர்கிறது. “நாளாம் நாளாம்” பாடலில் கவனித்திருக்க முடியாத தபலாவை இங்கே கவனிக்காமல் இருக்க முடியாது.

1968ஆம் ஆண்டு “காவல்காரன்” படத்தில் வந்த இன்னொரு எம்எஸ்வி பாடல், “நினைத்தேன் வந்தாய்

இசைக்கருவிகள் மட்டுமல்ல, பாடகர்களுக்கும் நிறைய சுதந்திரம் இருக்கிறது. இடையிசையில் முன்னளவு கட்டுக்கோப்பு இல்லை. ஒரே இடத்தில் வந்து சேர்வது போலல்லாமல், இரண்டு மூன்று இடங்களில் இணைகிறார்கள். எம்எஸ்வியின் இசையில் இந்த சுதந்திரம்தான் மிகப்பெரிய தனித்துவமாக இருக்கும்.

முருகன் பாடல்கள் இரண்டு, இரண்டுமே ஏறத்தாழ ஒன்று போன்றவை- ஒன்றில் சுசிலாவின் தனிக்குரல், மற்றொன்றில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடுகிறார் (இந்த இரண்டில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் எது எம்எஸ்வி பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். இவ்விருவரின் இசை குறித்து நான் சொன்ன விஷயங்கள் இந்த இரண்டு பாடல்களில் ஒத்து வருகிறதா என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கலாம்.

இதுதான் முதல் பாடல்-

இது இரண்டாம் பாடல்-

பிரிவுக்குப்பின் எம்எஸ்வி இசையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொன்னதுபோல், 1965லும் 1966ன் துவக்கங்களிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி தாக்கம் இருந்திருக்கும், ஆனால் பிற்கால எம்எஸ்வி மிகவும் உற்சாகமானவர். எம்எஸ்வி மீதிருந்த தடைகள் விலகியது போல அவர் பாடல்கள் பிரகாசமாயின, வேகம் கூடின. தன பாடல்களில் மேற்கத்திய பாணி இசையை இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டார், மெல்ல மெல்ல அவரது உற்சாகமான பாடல்களே எம்எஸ்வி பாணி பாடல்கள் என்றாகின. இந்த மாற்றத்தைச் சுட்டும் இரு பாடல்கள் பார்க்கலாம்.

இசைக்கருவிகள் கட்டுக்கோப்புடன் ஒலிக்கின்றன, இது சந்தோஷமான பாடல் என்றாலும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடுவதில்லை (இந்தப் பாடலும் “குங்குமப் பொட்டின் சங்கமம்” பாடலும் ஷங்கர் ஜெய்கிஷனின் “யே ஹோ மேரா பிரேம் பத்ர பட்கார்” பாடலின் தாக்கம் கொண்டவை என்ற எண்ணம் எனக்கு உண்டு).

இந்தப் பாடலை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்தத் தடையும் இல்லாத பாடல், சந்தோஷமும் உற்சாகமும் கரைபுரண்டோடும் பாடல். “ஊட்டி வரை உறவு” படத்தில் வரும், “பூ மாலையில்

இறுதியாய் இரு பாடல்கள்.

முதலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி. சந்தோஷமான டூயட்டிலும் மென்சோகம்.

இது எம்எஸ்வி. சோகப்பாடலிலும் மகிழ்ச்சியின் சாயல்.

கட்டுக்கோப்பான இசையையும் கச்சிதமான பாடல் அமைப்பையும் எம்எஸ்வி இழந்திருந்தால், மெலடியில் உற்சாகமும் மகிழ்ச்சியும் கூட்டி அதைச் சரிக்கட்டிக் கொள்கிறார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி தமக்குப் பின் வந்த திரையிசையில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். தமிழ் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பேச வேண்டும். அக்காலத்தைய இந்தி மற்றும் தெலுங்கு திரையிசை குறித்த ஒரு பார்வையும் தேவைப்படுகிறது.

(தொடரும்)

- See more at: http://solvanam.com/?p=41662#sthash.1qK6MEyJ.dpuf

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்வி: விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு

 

எம்எஸ்வி இசை பற்றி பேசுமுன், தமிழ் திரையிசையின் வளர்ச்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தி விட்டுச் சென்ற தாக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழ் திரையிசையை கர்நாடக சங்கீதத்தின் பிடியிலிருந்து விடுவித்து நவீனப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதை ஏற்கனவே பேசிவிட்டோம். அதையடுத்து இரண்டாவது முக்கியமான விஷயம், 1961-65 வரையான ஐந்து ஆண்டுகளின் இசை என்பதே இவர்களின் இசை என்று சொல்லுமளவு ஆதிக்கம் செலுத்தியவர்கள் இவர்கள் என்பதுதான். இந்தப் பாடல்களில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.

முதலில் இது.

அடுத்து இது.

அல்லது இந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

முதலில் இது.

அடுத்து இது.

இந்தப் பாடல்களுக்கிடையே குறிப்பிட்ட ஒரு ஒற்றுமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் திரையிசையைக் கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே இந்தப் பாடல்களில் கே. வி. மகாதேவன் பாடல்களையும் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களையும் அடையாளம் கண்டு கொள்வார்கள். கே வி மகாதேவனுக்கும் அவருக்கே உரித்தான இசை ஒன்று இருந்தாலும், சாதாரணமாய் பாட்டு கேட்கும் ஒருவர் சமூக படங்களில் வரும் சிறந்த பாடல்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணி இசையோடு அடையாளப்படுத்திக் கொள்வதுதான் இயல்பு. எனவேதான் கே வி மகாதேவன் பாடல்களில் பல பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் இப்படி இருந்தது என்று சொல்லலாம்- அக்காலத்தின் சிறந்த பாடல்கள் ஈதைக் கேட்டாலும் அது அவர்களது பாடல்களாகதான் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படிப்பட்ட ஆதிக்கம் செலுத்தும்  இசைக்கு உரியவர்கள் இவர்கள்.

பலரைப் போலவே நானும் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் போட்டி போட முடியாமல்தான் கே வி மகாதேவன் தெலுங்கு திரையுலகுக்குச் சென்றார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திரைப்பட விபரங்களைச் சரி பார்க்கும்போது நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. 1960ஆம் ஆண்டில் கே.வி. மகாதேவன் ஒன்பது தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் விஸ்வநாதன் ராமமூர்த்தியோ ஐந்து படங்களில் மட்டுமே இசையமைத்திருகின்றனர். 1962ஆம் ஆண்டில், இவர்களுக்கு இணையாக கே.வி. மகாதேவன் பன்னிரெண்டு திரைப்படங்களில் இசையமைத்திருக்கிறார். அடுத்த ஆண்டு, அவர் இருபத்து இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்! 1964 மற்றும் 1965 ஆகிய இரு ஆண்டுகளில் தலா ஒன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதைக் கொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ஐந்து ஆண்டுகளில் கே.வி. மகாதேவனைக் காட்டிலும் சீரான எண்ணிக்கையில் இசையமைத்திருக்கின்றனர் என்று கொள்ளலாம். ஏறத்தாழ சம எண்ணிக்கையில் இருந்தாலும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை மற்றும் பாடல்களின் தாக்கம் வேறு எந்த இசையமைப்பாளரை விடவும் அதிக தாக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது.

நவீன இசையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், விஸ்வநாதன் ராமமூர்த்தி மூன்று தலைசிறந்த பாடகர்கள் தமிழில் நிலைத்து நிற்கக் காரணமானார்கள். இவர்கள் எவரும் விஸ்வநாதன் ராமமூர்த்தி அறிமுகம் அல்ல, ஆனால் அவர்களின் புகழுக்கு இவர்கள் இசையமைத்த பாடல்களே காரணம். ஆம், டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா ஆகிய மூவரையே சொல்கிறேன். இவர்களின் சாதனை என்னவென்று சொன்னால், டிஎம்எஸ் பாணியை மாற்றிக்கொண்டு அவர் தன் திறமையின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்தக் காரணமாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதே போல் பி.பி. ஸ்ரீனிவாசின் தலைசிறந்த பாடல்கள் பலவும் இவர்கள் இசையமைத்தவை. அவர் கன்னடத்தில் புகழ்பெற்ற பாடகர்தான் ஆனால் அவரது தமிழ்ப் பாடல்களில் சிறந்தவை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தவை. இதோ, மகத்தான இந்த இரு பாடகர்களும் பாடிய ஒரு பாடல்-

தெலுங்கு திரைப்படங்களில் பி சுசீலாவின் பாடல்கள் மிகவும் விரும்பப்பட்டன. ஆனாலும்கூட அவரது சிறந்த பாடல்களில் பல விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அவர் தமிழில் பாடியவை. மென்சோகம் சுசிலாவின் குரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. அதே சமயம், அவர்தான் புதிய பறவை பாடல்களையும் பாடியவர். பி. சுசிலாவின் முழுத்திறமையும் வெளிப்பட வாய்ப்பு அளித்தனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

சுசிலாவின் குரல் இந்தப் பாடலுக்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறது பாருங்கள்-

இதற்கு மறுமுனையில், இதோ சுசிலாவும் பிபிஎஸ்சும்-

இவர்கள் மூவரும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு கடன்பட்டவர்கள் என்று நாம் சொன்னால் அதிலுள்ள உண்மையை இவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அழியாப் புகழை உறுதி செய்யும் மற்றொரு விஷயம் இது- உணர்ச்சி நிலைகள் சிலவற்றுக்கு முழுமையாய் பொருந்தும் பாடல்களை இவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். “போனால் போகட்டும் போடா” அல்லது, “சட்டி சுட்டதடா” போன்ற பாடல்களின் தத்துவத் தொனியைச் சொல்லலாம். கையறு நிலையின் உச்ச துயருக்கு வெளிப்பாடு அளிக்கும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்,” அல்லது, தங்கைக்காகப் பாடிய “மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

அல்லது, “நான் ஆணையிட்டால்” பாடலின் புரட்சி வேட்கை. “மலர்ந்தும் மலராத” பாடலின் சோகத் தாலாட்டு. “சிந்து நதியின் மிசை நிலவினிலே“, “தமிழுக்கு அமுதென்று பேர்” போன்ற பாடல்களின் மொழியுணர்வு. “வாராயோ தோழி” பாடல், திருமணப் பாடல்களின் இலக்கணத் தொகையில் ஓர் அங்கம்.

இவர்களின் பாடல்கள்தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன, இன்றும் தம் உணர்வுகளை எதிரொலிக்கும் பாடல்களைத் தேடுபவர்கள் இந்தப் பாடல்களுக்குச் செல்கின்றனர். இதுதான் இவர்கள் விட்டுச் சென்ற மிகப்பெரிய கொடை என்று சொல்வேன்.

இது தவிர இன்னொரு மகத்தான சாதனையையும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு உரித்தாக்கலாம். இந்தித் திரையிசைக்கு நிகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இவர்கள். இந்தியாவெங்கும் உள்ள திரையிசைக் கலைஞர்களுக்கு ஹிந்தி திரையுலகம் ஆதர்சமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்தியும்கூட நௌஷத்தை எந்த அளவுக்கு உயர்வாய் மதித்தனர் என்பதை அனைவரும் அறிவோம். இவர்களிடமும்கூட இந்தித் திரைப்பாடல்களின் தாக்கம் இருந்தது, ஆனால் அது மிக அதிகமல்ல. மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களும் இந்திப் பாடல்களை நகலெடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட காலம் அது.

தென்னகத்தின் ஷங்கர் ஜெய்கிஷன் என்றே விஸ்வநாதன் ராமமூர்த்தி அழைக்கப்பட்டனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஷங்கர் ஜெய்கிஷனைவிடச் சிறந்த இசையமைப்பாளர்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, இந்தி மொழி பாடல்கள் தமிழின் உயரத்தைத் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. “ஆலயமணி“, நௌஷத் இசையமைப்பில் “ஆத்மி” என்றும், “நெஞ்சில் ஒரு ஆலயம்” ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பில் “தில் ஏக் மந்திர்” என்றும், “பாலும் பழமும்” நௌஷத் இசையமைப்பில் “சாத்தி” என்றும் வெளிவந்தன. இந்தப் படங்களின் பாடல்களை நாம் ஒப்பிட முடியும்.

தெலுங்கு மொழியிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி புகழ்பெற்றவர்களாகவே இருந்தனர், ஆனால் இந்தப் பாடல்கள் பலவும் டப்பிங் செய்யப்பட்டவை. இருந்தாலும்கூட இவை பெரிய அளவில் வெற்றி பெற்று, கண்டசாலாவுக்கும் சுசிலாவுக்கும் தெலுங்கில் உள்ள சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டன. ஐம்பதுகளிலேயே விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரமிக்க வைக்கும் இந்த அஷ்டபதிக்கு இசையமைத்திருக்கின்றனர்-

பூலரங்குடு” என்ற படத்தில் வரும் பாடல், “இந்த மன்றத்தில் ஓடி வரும்” என்ற பாடலைப் போலில்லை? விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் அப்படி.

தெலுங்கு திரையிசை இந்துஸ்தானி இசை மரபில் நிறைய எடுத்துக் கொண்டிருக்கிறது என்றாலும்கூட விஸ்வநாதன் ராமமூர்த்தியும்கூட அதன் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது மிகப்பெரிய ஒரு சாதனைதான்.

சரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்துக் கொடுத்த வழித்தடத்தில் பயணித்து, அவர்களின் இசைக்கு மேலும் பல பரிமாணங்கள் சேர்த்து பல புதிய சாதனைகளை நிகழ்த்தியவர்கள் யார்? யாரும் அதைச் செய்யவில்லை என்பதுதான் சோகம். எம்எஸ்வியாகவே இருக்கட்டும், டிகேஆராகவே இருக்கட்டும், ஓரிரண்டு ஆண்டுகள் இந்தப் பாணியில் சென்றனர். டிகேஆர் காணாமல் போனார், எம்எஸ்வி தன் பாணியை முழுமையாக மாற்றிக் கொண்டார். பின்னர் வந்த ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களிடம் எம்எஸ்வியின் தாக்கத்தைப் பார்க்க முடிகிறது, இப்போது இமான் போன்றவர்கள் இளையராஜா பாணியைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் விஸ்வநாதன் ராமமூர்த்திக்குப்பின், அவர்களைப் போல் எளிய, ஆனால் இறுக்கமான கட்டுக்கோப்பு கொண்ட, இதயத்தைத் தொடும் மெலடி இசைக்கு உரியவர்கள் என்று யாரும் வரவில்லை.

கட்டுரையின் இப்பகுதி முடிவுக்கு வருகிறது.

ஆனால் விடைபெறுமுன் இந்தித் திரையிசையின் பல்முனைப்பட்ட வீச்சை உணர்த்தும் வகையில் சில பாடல்களைப் பின்னிணைப்பாகக் கொடுக்க விரும்புகிறேன்.

ஓ.பி. நய்யாரின் இறவாப்புகழ் கொண்ட பாடல் இது. துவக்கமும் ட்யூனும் கேட்கும்போது “நாலாம் நாலாம் திருநாளாம்” பாடல் நினைவுக்கு வருகிறதா?

இது ரோஷனின் மிக மென்மையான மெலடி-

இந்தியாவெங்கும் எதிரொலித்த மதன் மோகனின் மெலடி-

நாட்டுப்புற இசையின் தாக்கம் கொண்ட சலீல் சௌதுரி இசை. இந்திய அளவில் இதன் தாக்கமும் மிகப்பெரிது-

ஜெய்தேவின் விளையாட்டுத்தனமான, ஆனால் மறக்க முடியாத ட்யூன்-

பர்மன் சிறிது விளையாடிப் பார்க்கிறார்-

இறுதியாக, வாதைக்குட்பட்ட மேதை, சஜ்ஜத் ஹுசேனின் மெலடி-

இதின் நௌஷத், ஷங்கர் ஜெய்கிஷன், ரவி மற்றும் பலரின் பாடல்கள் இல்லை இந்தித் திரையிசையில் எத்தனை எத்தனை வகைப் பாடல்கள் வந்திருக்கின்றன என்பது பிரமிக்க வைக்கும் விஷயம். அதற்கென்றே நீண்ட ஒரு தொடர் எழுத வேண்டியிருக்கலாம், அப்போதும் எத்தனை எழுதியும் தீராது என்றுதான் நினைக்கிறேன்.

(தொடரும்)

- See more at: http://solvanam.com/?p=41931#sthash.m6zLcsIM.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.