Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Featured Replies

எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

SEP 15, 2015 | 5:29by நித்தியபாரதிin கட்டுரைகள்

Mahinda-Rajapaksaஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் பிரவேசம், மற்றும் அவரது எதிர்கால அரசியற் திட்டங்கள் போன்றன தற்போது இராஜதந்திர வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மகிந்தவின் அரசியல் மீள்பிரவேசத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றன.இதேவேளையில், மகிந்த மீது சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், இவர் மக்களின் ஆணையை ஏற்று மைத்திரிபால சிறிசேனவிடம் தனது கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கையளிப்பதாக அறிவித்தார். எனினும் மகிந்த தோல்வியடைந்து சில நாட்களுக்குள் மீண்டும் தனது வாக்கிற்கு மாறாகச் செயற்பட்டார்.

அதாவது தனது தேர்தல் தோல்வியானது திட்டமிடப்பட்ட ஒரு சதி என அறிவித்திருந்தார். இதனால் தனது கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரியிடம் ஒருபோதும் வழங்கவில்லை எனவும் இதனை மைத்திரி பலவந்தமாகப் பறித்துள்ளார் எனவும் மகிந்த தெரிவித்தார். தனது கட்சிக்குத் துரோகமிழைத்த ஒருவரிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை எவ்வாறு கையளிக்க முடியும் எனவும் மகிந்த வினவினார்.

இவர் தொடர்ந்தும் இவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டார். இதுவே மகிந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தியது. தான் நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என்பதே மகிந்தவின் நோக்கமாக இருந்தது. இதன்மூலம் அதிபரின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியும் எனவும் மகிந்த தீர்மானித்தார்.

இவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, 117 ஆசனங்களைத் தன்னால் வெற்றிகொள்ள முடியும் என அறிவித்தார். தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதற்கான புதிய கட்சி ஒன்றை உருவாக்க முடியும் என மகிந்த கனவு கண்டார்.

மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனங்களை வழங்க மைத்திரி,  தீர்மானித்த போது, தனக்கான நல்வாய்ப்பு மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளதாக மகிந்த கருதினார். இறுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மகிந்தவால் 95 ஆசனங்களை மட்டுமே தனதாக்க முடிந்தது. இந்த சதவீதமானது 42.38 ஆகக் காணப்பட்டது.

மகிந்த ஒரு போர்க் கதாநாயகனாக அறியப்பட்டார். இவரது ஆதரவாளர்கள் இவரை அரசனாகக் கருதினர்.

முன்னாள் அதிபர் பிறேமதாசா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரைத் தொடர்ந்து டி.பி.விஜேதுங்க அதிபரானார். இதன்பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தன்னால் தென்மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க முடியும் என விஜேயதுங்க கனவு கண்டார்.

ஆனால் இத்தேர்தலில் விஜேதுங்கவின் ஐ.தே.க 95 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிலங்கா மக்கள் முன்னணியைச் சேர்ந்த சந்திரிகா குமாரதுங்க 105 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டார். 17 ஆண்டுகளின் பின்னர் ஐ.தே.க வசம் இருந்த ஆட்சி சுதந்திரக் கட்சியிடம் கைமாறியது.

இத்தேர்தலில் ஐ.தே.க பெற்ற வாக்கு வீதம் 44.09 ஆகவும் சந்திரிகாவின் சிறிலங்கா மக்கள் முன்னணியானது 48.94 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. ஆகவே இத்தருணத்தில் விஜேதுங்கவின் தேர்தல் தோல்வியை  மகிந்தவின் தேர்தல் தோல்வியுடன் ஒப்பீடு செய்து கொள்ள முடியும்.

தேர்தலில் 94 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்த அதிபர் விஜேதுங்க கட்சியின் தலைமையில் தொடர்ந்தும் இருப்பதை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் கட்சியின் ஊடாக தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை. இதனால் இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலையேற்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது கட்சி தோல்வியுறுவதற்குக் காரணமாக இருக்கவில்லை. இதனால் இவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இவரைத் தேசியப் பட்டியலின் ஊடாக மூத்த அமைச்சராகத் தன்னை நியமிக்குமாறு அதிபர் பிறேமதாசவிடம் கோரிக்கை முன்வைப்பதற்கான தகுதியைப் பெற்றிருந்த போதிலும், ஜே.ஆர் தனது அரசியல் வாழ்விலிருந்து விருப்புடன் தானாகவே விலகிக் கொண்டார்.

ஜே.ஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பிறேமதாசவிடம் ஒப்படைத்திருந்தார். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தன மிகவும் உன்னதமான முன்னாள் அதிபர் மற்றும் கட்சியின் சிறந்த தலைவர் என்ற நற்பெயருடன் அரசியலிலிருந்து விலகிக் கொண்டார்.

இதுபோன்றே சந்திரிகா அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற வேளையில் இவர் தன்னிடமிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பை மகிந்தவிடம் ஒப்படைத்தார்.

வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த தேசியப் பட்டியல் வெற்றிடத்தை ஈடுசெய்வதற்கு சந்திரிகா, மகிந்தவிடம் ஒரு உடன்பாட்டை எட்டியிருந்திருக்கலாம். ஆனால் சந்திரிகா வெற்றியுடன் நாட்டை ஆண்ட முன்னால் அதிபர் மற்றும் கட்சியின் தலைவர் என்ற புகழுடன் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.

சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்த மகிந்த இறுதியில் அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மீண்டும் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டார். அதாவது தோல்வியுற்ற அதிபர் ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது இதுவே முதற்தடவையாகும். ஏன்? மகிந்த ஆட்சியிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெற விரும்பாததே இதற்குக் காரணமாகும்.

அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்வதாக மகிந்த அறிவித்திருந்தார். இதனையே மீண்டும் ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மகிந்த தெரிவித்தார். எனினும், தான் தொடர்ந்தும் சிறிலங்காவின் செயற்படு அரசியலில் பங்கெடுப்பேன் எனவும் மகிந்த அறிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய 95 உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கத்தை அமைக்க முடியும் என மகிந்த கனவு கண்டிருக்கலாம். மைத்திரி மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையிலான முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும் எனவும் மகிந்த கருதியிருக்கலாம்.

ஆனாலும் தற்போது சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கியதுடன் மகிந்தவின் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கலாம். பொதுத் தேர்தலில் ‘மகிந்தவுடன் இணையுங்கள் என அறைகூவிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மகிந்தவை மீண்டும் வெற்றி பெறச் செய்ய முடியும் எனக் கருதினர்.

இவர்கள் மகிந்தவை வெற்றி கொள்ள வைத்து அமைச்சுப் பதவிகளை தமதாக்க முடியும் எனக் கனவுகண்டனர். ஆனாலும் இவர்கள் இருபது ஆண்டுகளாக அமைச்சர்களாகப் பதவி வகித்து விட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர விரும்பவில்லை. இதனாலேயே மகிந்தவுக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

1994ல் ஐ.தே.க தோல்வியைச் சந்தித்த போது, முன்னாள் ஐ.தே.க அமைச்சர்கள் கூட அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டனர். அந்தவேளையில் 94 ஆசனங்களைப் பெற்ற ஐ.தேக தனக்குச் சார்பாக மேலும் உறுப்பினர்களை இணைத்து சந்திரிகாவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்டனர்.

ரணில் உட்பட ஐ.தே.க தலைவர்கள் ஆறு மாதங்களில் தாங்கள் சந்திரிகா அரசாங்கத்தைக் கவிழ்த்து விடுவோம் என கங்கணங் கட்டினர். இந்த வாய்ப்பை சந்திரிகா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார். இவர் ஐ.தே.க உறுப்பினர்கள் சிலரிடம் அமைச்சுப் பதவிகளை வழங்குவதாக ஆசை காட்டித் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இது நிலைமையைத் தலைகீழாக மாற்றியது.

ரணில் எறிந்த பந்து மீண்டும் அவரையே பதம் பார்த்தது. பத்து ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக கடந்த ஓகஸ்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 95 உறுப்பினர்களும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பார்கள் என எவராலும் உறுதிப்படுத்த முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.

அரசியல் யாப்பின் பிரகாரம், மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த உண்மைகள் எல்லாம் தெரியாத ஒரு குழந்தை போல் மகிந்த நடிக்க முடியாது. இவற்றை ஆராயாத சிலர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் பணியில் மகிந்த ஈடுபடுவதாக கூறமுடியும். இதன்மூலம் மகிந்த ஆட்சிக்குத் திரும்ப முடியாது என்பதை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நன்கறியும்.

மகிந்த தனது மகனின் எதிர்கால அரசியலைக் கருத்திற் கொண்டும் தனது குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களை மறுதலிப்பதற்கும் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.

தான் தேசிய அரசாங்கத்திற்கு எதிரானவன் இல்லை என மகிந்த தற்போது கூறுகின்ற போதிலும், தனது குடும்ப உறுப்பினர்களை இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கான பணிகளை மகிந்த மேற்கொள்கிறார் என்பதே உண்மையாகும். இதனை மகிந்தவிற்கு எதிரான தரப்பினர் எதிர்வுகூறுகின்றனர்.

எவ்வாறெனினும், மகிந்த தொடர்ந்தும் சிறிலங்காவின் செயற்படு அரசியலில் ஈடுபடுவதானது சீனாவிற்கு நம்பிக்கையை வழங்கியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/15/news/9692

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.