Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - மீண்டுவந்த போராளியின் உண்மைக் கதை

Featured Replies

மகள் இனியாவுடன்
மகள் இனியாவுடன்

நான் கவிதா. வயது 37. சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியை. நான், என் கணவர் சதீஷ், மூன்று வயது செல்ல மகள் இனியா... இதுதான் என் உலகம். சின்னச் சின்ன சண்டை, நிறைய மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த நாவல்கள், மனநிறைவான பேராசிரியை வேலை, தோள்கொடுக்கும் தோழிகள் என்று வண்ணங்களால் நிறைந்தது என் வாழ்க்கை.

2014, மே மாதம் 19-ம் தேதி மிக இயல்பாகத்தான் விடிந்தது எனக்கும். பறவைகள் கிறீச்சிடுகிற அதிகாலையில் விழிப்புவந்துவிட்டது. ஜன்னலைத் திறந்தேன். சில்லென்ற காற்று முகத்தில் அறைய, அந்த நொடியின் பரவசத்தை லயித்தபடியே என் தினசரி வேலைகளைத் தொடங்கினேன். ஈஷா யோகா மையத்துக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து நான் காபி, டீ குடிப்பதில்லை. கணவரும் மகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். முகத்தில் மென் சிரிப்பு படர திரும்பிப் படுத்த மகளின் அழகை ரசித்தபடியே சமையல் வேலையைத் தொடங்கினேன். சமையலை முடித்துவிட்டுக் குளியலறைக்குச் சென்றேன்.

எனக்குக் கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் கழித்துதான் இனியா பிறந்தாள். செயற்கைக் கருவூட்டல் முறையில் அவள் பிறந்ததால் அந்த நேரத்தில் நிறைய ஊசிகளும் மருந்துகளும் என்னைப் பாடாய்ப்படுத்தின. அவற்றின் பக்க விளைவாக ஏதாவது வந்துவிடக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி.வி., நியூஸ் பேப்பர் என்று திரும்பின பக்கமெல்லாம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களைப் பார்த்தேன். அதன் தாக்கமோ என்னவோ நானும் மார்பகப் புற்றுநோய் குறித்தத் தகவல்களைத் தேடித் தேடிப் படித்தேன். வாரம் ஒரு முறையோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ மார்பக சுயபரிசோதனை செய்வேன். அன்று குளித்துக்கொண்டிருந்தபோது எதேச்சையாக சுயபரிசோதனை செய்தபோது வலது மார்பகத்தில் சின்ன கட்டி போன்று தட்டுப்பட்டது.

ஏற்கெனவே மார்பகக் கட்டிகளைப் பற்றி படித்திருந்தாலும் எனக்கு அப்போது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் கட்டியை அழுத்தியபோது வலிக்கவில்லை. தவிர மூன்று நாட்களுக்கு முன்பு வலது மார்பிலிருந்து லேசாக திரவம் கசிந்தது. இவை இரண்டும் எனக்கு சந்தேகத்தைக் கிளப்பின. இருந்தாலும் எனக்கு அப்படியெல்லாம் எதுவும் வராது என்று நம்பினேன். யோசிக்கக் கூட நேரமில்லாமல் அவசரமாக காலேஜ் பஸ்ஸைப் பிடித்தேன். முதல் வகுப்பே முக்கியமானது என்பதால் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப்போனேன். மதிய உணவு இடைவேளையின்போதுதான் காலையில் நடந்ததை என் கணவரிடம் சொல்லவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.

உடனே அவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். சாயந்திரம் குடும்ப டாக்டரிடம் போக லாம் என்று சொன்னார். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். நீ நிறைய மாத்திரைகள் சாப்பிட்டதன் பக்க விளைவாக இருக்கும், மற்றபடி பயப்படும்படி எதுவும் இருக்காது என்று அம்மா சொன்னார். இருந்தாலும் அடி மனதில் இனம் புரியாத தவிப்பு. என் காலைக் கட்டிக்கொண்டு சிரித்த இரண்டு வயது மகளைப் பார்த்தபோது வேதனை அதிகமானது. கணவருக்கு வேலை இருந்ததால் டாக்டரைப் பார்க்க நான் தனியாகத்தான் போனேன். எங்கள் குடும்ப டாக்டர் அம்மணி தருகிற மாத்திரைகளைவிட அவர் சொல்கிற தைரியத்திலேயே பாதி நோய் கரைந்துவிடும். என் முகத்தைப் பார்த்தபடி நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். மலர்ந்த முகத்துடன், ‘ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. முதல்ல ஸ்கேன் எடுப்போம். அப்புறம் பார்த்துக்கலாம்’ என்றார்.

எனக்கும் அவர் சொல்வதுதான் சரியென்று பட்டது. கதவுக்கு அந்தப் பக்கம் பூதமா சாமியா என்று தெரியாமல் ஏன் குழம்ப வேண்டும்? எந்தக் கலக்கமும் இல்லாமல் வீட்டுக்கு வந்தேன். பிடித்ததை விரும்பிச் சமைத்தேன். குழந்தையுடன் குதூகலமாக விளையாடினேன். நாளை ஸ்கேன் எடுக்கச் செல்ல வேண்டும். ஷாப்பிங் போவது போல மகிழ்ச்சியோடு ஸ்கேனிங் சென்டருக்குச் சென்றேன். மாமோகிராம் எடுத்தார்கள். பிளட் டெஸ்ட் செய்ய வேண்டும் என்றார்கள். எல்லாம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து ரிசல்ட் வரும் என்று சொன்னார்கள். எப்படியும் எதுவும் இருக்காது என்றாலும் அடி நெஞ்சில் லேசான நடுக்கம்.

இந்த நான்கு நாட்களை எப்படிக் கழிப்பது? கைகொடுத்தது என் ஒன்றுவிட்ட தம்பியின் திருமணம். உறவுகளைப் பார்த்துவிட்டு வந்தால் மனது கொஞ்சம் லேசாகுமே. ரிசல்ட் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கலாமே என்று பரமகுடிக்குக் கிளம்பினேன். என் கணவருக்கு வேலை இருந்ததால் இந்தப் பயணத்தில் அவர் எங்களுடன் கலந்துகொள்ளவில்லை.

எனக்கு எப்போதுமே ஜன்னலோரப் பயணம் பிடிக்கும். எதிர் திசையில் வேகமாக நகர்ந்து செல்லும் மரங்களையும் மனிதர்களையும் என் மகளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தபடி பயணித்தேன். செல்போன் ஒலித்தது. என் கணவர்தான் அழைத்தார். ஸ்கேனிங் ரிசல்ட் வந்துவிட்டது என்று சொன்னார். DCIS (Ductal carcinoma in situ) என்று ரிசல்ட் வந்திருப்பதாகச் சொன்னார். அதாவது பால் சுரப்பிக்குள்ளே வருகிற சிறிய கட்டியைத்தான் இப்படி சொல்வார்கள். நான் என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்ததால் எனக்கு இதுபோன்ற பால் கட்டி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் அப்படி எதுவும் இருக்காது என்று அவருக்கு சமாதானம் சொல்லி போனை வைத்தேன். ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் கொஞ்சம் மங்கலாகத் தெரிவதுபோல இருந்தது.

திருமண வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த முகங்களைப் பார்த்ததுமே என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ரிசல்ட் பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் மோதிப் பார்ப்பது என் வழி. ஆனால் ரிசல்ட் பற்றி சொன்னால் என் சொந்தக்காரர்கள் எல்லாம் வருத்தப்படுவார்களே என்று எதுவுமே சொல்லவில்லை. கல்யாணக் கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பிய அன்றே ரிசல்டை எடுத்துக்கொண்டு எங்கள் குடும்ப டாக்டரிடம் சென்றேன். அனைத்தையும் பார்த்துவிட்டு, ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அதில் focal invasion என்ற வார்த்தைதான் கவலையை அதிகப்படுத்துகிறது’ என்று சொன்னார்.

நாமே பரிசோதிக்கலாம்!

18 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தின் அளவில் திடீர் மாற்றம், மார்பில் கட்டி, வீக்கம், தடிப்பு ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். கட்டி அழுத்தமாக இருக்கிறதா என்றும் பரிசோதிக்க வேண்டும். மார்பகக் காம்பில் வலியோ புண்ணோ இருந்தாலோ அதில் இருந்து நீர் வடிந்தாலோ உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஒரு செ.மீ. அளவுக்கும் குறைந்த சின்னக் கட்டிகள் இருந்தாலும் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிகள் இருந்தாலே அவை கேன்சர் கட்டிகள் என்று பீதியடையத் தேவையில்லை. எல்லாக் கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை.

30 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று கிளினிக்கல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன் செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் இருந்தால்கூட மாமோகிராம் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

 

- மீண்டு வருவேன்

http://tamil.thehindu.com/society/women/இருளுக்கு-இங்கே-இனி-என்ன-வேலை-மீண்டுவந்த-போராளியின்-உண்மைக்-கதை/article7752822.ece?widget-art=four-all

  • 9 months later...
  • தொடங்கியவர்

மீண்டுவந்த போராளியின் உண்மைக் கதை: இருளுக்கு இங்கே இனி என்ன வேலை?

கணவருடன்...
கணவருடன்...

(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)

என் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டுப் பேசுகிற எங்கள் குடும்ப டாக்டரைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். டாக்டர் சொன்ன வார்த்தைகளில் சில புரிகிற மாதிரி இருந்தது. இன்னும் சில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாமல் குழம்பிப்போய் உட்கார்ந்திருந்தேன். ‘Focal invasion' என்று வந்திருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்றார் டாக்டர்.

Focal invasion என்றால் என்ன என்று டாக்டரிமே கேட்டேன். என் முகத்தையே சிறிது நேரம் பார்த்தார். நான் எந்த உணர்ச்சியையுமே வெளிக்காட்டவில்லை. காரணம் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவதற்கு முன் வீட்டில் நானும் என் கணவரும் பேசினோம். ‘எதுவாக இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால் நாம் அதை தைரியத்துடன் சமாளிப்போம்’ என்று சொல்லியிருந்தார் என் கணவர். அதனால் நானும் ஓரளவுக்குப் பக்குவத்துடன்தான் இருந்தேன்.

‘பொதுவாகப் பால் சுரப்பிக்குள் கட்டி ஏற்பட்டால் அது புற்றுநோய் கட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் focal invasion என்றால் அங்கே புற்றுநோய் செல்கள் வளர்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று அர்த்தம்’ என்று சொன்னார் டாக்டர். குழந்தைக்குச் சொல்வது போல என் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். ‘இதுக்கு ரெண்டு விதமா சிகிச்சை தரலாம். ஒண்ணு, புற்றுநோய் கட்டியை மட்டும் ஆபரேஷன் மூலமா நீக்கிடலாம். இல்லைன்னா மார்பகத்தையே எடுத்துடணும். என்ன செய்யலாம்?’ என்று என்னிடமே கேட்டார். நான் என் கணவரின் முகத்தைப் பார்த்தேன்.

‘நீங்க புற்றுநோய்னு சொல்றதால அடையாறு புற்றுநோய் மையத்துக்குப் போய்ப் பார்த்துட்டு அப்புறமா என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம்’ என்றார் என் கணவர்.

மார்பகத்தில் புற்றுநோயா இல்லையா என்று இன்னும் தீர்மானமாக முடிவு தெரியவில்லை. இருந்தாலும் எங்கள் இருவர் மனதுக்குக்குள் இனம் புரியாத கவலை. வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் நானும் அவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த மவுனம், பெரும் சுமையாக அழுத்தியது.

வீட்டுக்குள் நுழைந்ததுமே என் முகத்தை ஆவலோடு பார்த்தார் அம்மா. டாக்டர் என்ன சொன்னார் என்ற அவரது கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்? புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்று சொன்னால் என் அம்மா அதைத் தாங்கிக்கொள்வாரா? அம்மாவின் முகத்தில் இருக்கும் அந்தச் சிரிப்பு அப்படியே நிலைத்திருக்குமா? ‘இன்னும் சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்மா. அதுக்கப்புறம்தான் என்னன்னு தெரியும்’ என்று அப்போதைக்குச் சமாளித்துவைத்தேன்.

அன்று இரவு நானும் என் கணவரும் சாப்பிடவே இல்லை. இரவெல்லாம் தூக்கம் வராமல் விழித்துக் கிடந்தேன். எப்போது விடியும் என்று காத்திருந்தேன். நான் அப்படிக் காத்திருப்பதாலோ என்னவோ கடிகார முள்கூட நத்தைபோல ஊர்வது போலத் தோன்றியது. என் நிலையைப் பார்த்து என் கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘எதுக்கு இப்படி இருக்கே? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். தைரியமா இரு’ என்று சமாதானப்படுத்தினார்.

மறுநாள் பொழுது விடிந்ததோ இல்லையோ அடையாறு புற்றுநோய் மையத்துக்குக் கிளம்பிவிட்டோம். ஏழு மணிக்கெல்லாம் அங்கே இருந்தோம். அப்போது டாக்டர்கள் வந்திருக்கவில்லை. பசிப்பதுபோல இருந்ததால் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிடலாம் என்று தோன்றியது. கேன்டீனுக்குள் நுழைந்தோம். அங்காங்கே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியிருந்தார்கள். நோய்க்கான அறிகுறிகள், புற்றுநோய் காரணிகளைத் தடுக்கும் உணவு வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைப் பற்றியும் எழுதியிருந்தனர். புற்றுநோய் என்பது தீர்க்கக்கூடிய வியாதிதான் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. அது என் நம்பிக்கையின் சதவீதத்தை அதிகரித்தது. ஆர்வத்துடன் பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.

டாக்டரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். பலரும் மொட்டைத் தலையுடன் இருந்தனர். மார்பகப் புற்றுநோயால் புற்றுநோயால் மார்பகம் நீக்கப்பட்ட பெண்கள், கையை ஏற்றி, இறக்கி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். தொண்டை, வாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் வந்திருந்தவர்களையும் பார்த்தேன். சிலர் நோய் முற்றிய நிலையில் இருந்தனர். அனைத்தையும் பார்த்தபோது நான் உள்ளுக்குள் உடைந்துபோனேன். புற்றுநோய் என்பது எவ்வளவு கொடுமையான வியாதி என்று அவர்களைப் பார்க்கும்போது தோன்றியது. எனக்கு ஏன் இந்த வியாதி வரணும் என்று மனதுக்குள் அரற்றினேன்.

டாக்டர் எங்களை அழைத்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துக்கொண்டே என்னிடம் கேள்விகளை அடுக்கினார். நான் அதுவரை நடந்ததையெல்லாம் சொன்னேன். ‘எல்லாத்தையும் நீங்களா முடிவு பண்ணுவீங்களா? DCISனு சொல்றீங்க. இதுல என்ன போட்டிருக்கு? Focal invasaion அப்படின்னா புற்றுநோய்னு அர்த்தம்’ என்று பட்டென்று போட்டு உடைத்தார். அந்த வார்த்தை என்ன என்னவோ செய்ய, ஒரு கணம் நான் அதிர்ந்தேன். என் கணவரின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவரும் அதிர்ந்துபோய் இருந்தார்.

‘கீமோதெரபி, ரேடியேஷன் எல்லாம் பண்ணணும். எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்’ என்று சொன்னார். வீட்டில் அம்மாவுடன் கலந்து பேசிவிட்டுச் சொல்லவதாகத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.

மனம் முழுக்க வெறுமை. ‘உங்களுக்குப் புற்றுநோய்’ என்று டாக்டர் சொன்னபோதுகூட எனக்கு அழுகை வரவில்லை. ஆனால் அந்த நொடியில் செய்வதறியாமல் விக்கித்து நின்ற என் கணவரின் முகம் என்னை அழவைத்துவிட்டது. நான் முதலும் கடைசியுமாக அழுத நொடி அதுதான். நான் அழுவதைப் பார்த்து அவரும் கலங்கிவிட்டார். ‘நீ எதுக்கும் கலங்காதே. வீட்டை விற்றாவது உன்னைக் காப்பற்ற வேண்டியது என் கடமை. உனக்கு எதுவும் நடக்கவிட மாட்டேன்’ என்று என் கைகளைப் பற்றியபடி பேசினார். அந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நான் உடனிருக்கிறேன் என்ற உறுதியையும்விட வேறென்ன வேண்டும் புற்றுநோயை வெல்ல?

- மீண்டு வருவேன்.

 

http://tamil.thehindu.com/society/women/மீண்டுவந்த-போராளியின்-உண்மைக்-கதை-இருளுக்கு-இங்கே-இனி-என்ன-வேலை/article7777345.ece

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - துணை நிற்கும் அன்பு

சகோதரியுடன்...

புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த போராளியின் உண்மைக் கதை

(தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கவிதாவின் கதை இது. தான் கடந்துவந்த பாதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்)

என்ன நடந்ததோ அதையே நினைச்சு அழுதுட்டு இருக்கறதைவிட அடுத்து என்னன்னு தெம்போட நிமிரணும். அதுதான் எனக்கும் என் கணவருக்கும் பிடிக்கும். என் கணவரோட வருத்தத்தைப் பார்த்து நான் அழுத அந்த நொடிதான் முதலும் கடைசியுமா நான் அழுதது. அதுக்குப் பிறகு எனக்கு எங்கிருந்துதான் அவ்ளோ தெம்பும் துணிச்சலும் வந்ததுச்சோ.

கண்ணைத் துடைக்கும்போதே என் துக்கத்தையும் துடைச்சு தூக்கியெறிஞ்சேன். கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்துட்டு இருந்தேன். மனசு கொஞ்சம் தெளிவாச்சு. என் கணவருக்கு அடுத்தபடியா என்னோட விஷயங்களை நான் மனம்விட்டு பகிர்ந்துக்கற இன்னொரு ஜீவன் என் அக்கா. அவ ஒரு ஆர்டிஸ்ட். ரொம்ப அழகா படங்கள் வரைவா. வண்ணங்களைக் குழைச்சு அவ வரையற ஓவியங்கள் எத்தனை அர்த்தபூர்வமா இருக்குமோ அதே மாதிரிதான் என் அக்காவும். என்னை எதுக்காகவும் விட்டுத்தராதவள். எனக்காக எதையும் விட்டுத்தருகிறவள்.

அந்த நிமிஷம் என் அக்காவோட முகம்தான் என் கண்ணுக்குள்ள நின்னுச்சு. ஓவியங்களைப் பத்தி படிக்கறதுக்காக அவ அப்போ சென்னைக்கு வந்திருந்தா. உடனே அவளுக்கு போன் பண்ணினேன். ‘என்ன ஆச்சு? டாக்டரைப் பார்த்தாச்சா? என்ன சொன்னாங்க? பயப்படற மாதிரி ஒண்ணு மில்லையே?’ன்னு கேள்விகளை அடுக்கினா. நான் பதில் சொல்லாம சிரிச்சேன். நாங்க வழக்கமா சாப்பிடற ஓட்டலுக்கு அவளை வரச் சொன்னேன். நான், என் கணவர், அக்கா மூணு பேரும் எனக்குப் பிடிச்ச அந்த ஓட்டலுக்குப் போனோம்.

எனக்கு மார்பகப் புற்றுநோயா இல்லையான்னு தெரியாம முதல் நாள் இரவு எதையுமே சாப்பிடாம தூங்கினேன். ஆனா புற்றுநோய்னு உறுதியான பிறகு நல்லா சாப்பிடணும்னு தோணுச்சு. எனக்குப் பிடிச்ச உணவு வகைகளை ஆர்டர் செய்தேன். டாக்டர் சொன்ன விஷயங்களை அக்காகிட்டே சொன்னேன். எந்த உணர்ச்சியும் காட்டாம அக்கா என்னையே பார்த்துக்கிட்டு இருந்தா.

நான் சொல்லி முடிச்சதும், ‘சரி, நல்லா சாப்பிடு’ன்னு சொன்னா. ‘நீ எதை நினைச்சும் கவலைப்படாதே. உனக்கு எதுவும் ஆகவிடாம நாங்க பார்த்துக்குவோம். நீ தைரியமா இரு’ன்னு அவ சொன்னா. நான் வெளியே தெளிவா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள லேசா ஒரு பயம் இருந்துச்சு. என் அக்கா இப்படி சொன்னதும் மழை பெஞ்சு தெளிவான மேகம் போல ஆயிடுச்சு மனசு.

சாப்பிட்டுக்கிட்டே சுத்தி நடக்கற விஷயங்களை கவனிச்சேன். என்னைச் சுத்தி எத்தனை மனிதர்கள், அவர்களுக்குள் எத்தனை விதமான உணர்வுகள்? இவர்கள் எல்லாருமே கவலையற்றவர்களா என்ன? எல்லாருக்கும் கவலையும் கஷ்டமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையெல்லாம் நினைத்து முடங்கிப் போகாமல் அரட்டையடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிடுகிற முகங்களைப் பார்க்கவே நிறைவாக இருந்தது. அதே நிறைவோடு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா என் கையைப் பற்றிக்கொண்டார். என் முகத்தையே உற்றுப் பார்க்கிற இவரிடம் எனக்குப் புற்றுநோய் என்று நான் எப்படிச் சொல்வேன்? சொல்லித்தானே ஆக வேண்டும். எத்தனை நாளைக்கு மறைத்துவைக்க முடியும்? ‘எனக்கு புற்றுநோய்னு உறுதிபண்ணிட்டாங்கம்மா’ன்னு அம்மாகிட்டே சொன்னேன். நான் சொல்லி வாய் மூடுவதற்குள் உடைந்துபோய் அழுதார் அம்மா. அவரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்தேன். அவர் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தேன். ‘இது ஒண்ணும் தீர்க்க முடியாத வியாதி இல்லைம்மா. குணப்படுத்திட முடியும்’னு சொன்னேன்.

ஆனாலும் அம்மா சமாதானமாகவில்லை. நானும் ஒரு தாயாக இருப்பதால் என் அம்மாவின் மனதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என்னவோ தெரியவில்லை, அன்று இரவு நல்ல தூக்கம்.

மறுநாள் எங்கள் குடும்ப டாக்டரை பார்க்கக் கிளம்பினோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யலாம் என்பதுதான் எங்கள் முடிவு. தனியாகக் கிளறிக்கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, பக்கத்துப் புதரிலிருந்து தாய்க்கோழி எழுப்புகிற சத்தம் ஒரு தைரியத்தைத் தருமே அப்படியொரு தைரியம்தான் டாக்டரைப் பார்க்கும்போதும் வரும். ‘உன்னை நீ என்கிட்டே ஒப்படைச்சிட்டே. இனி நீ கவலைப்படத் தேவையே இல்லை. நான் பார்த்துக்கறேன்’ என்று அவர் சொன்ன வார்த்தையிலேயே எனக்குக் குணமாகிவிட்டதுபோலத் தோன்றியது.

- மீண்டு வருவேன்.

http://tamil.thehindu.com/society/women/இருளுக்கு-இங்கே-இனி-என்ன-வேலை-துணை-நிற்கும்-அன்பு/article7802670.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.