Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்!

Featured Replies

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்!

 

நேர்த்தியான கிரிக்கெட்டை ரசிப்பவர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் விரும்புவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் கிரிக்கெட் போட்டியின் தாய் வடிவம். அதில் இருந்துதான் ஒருதின போட்டிகளும், டி-20 போட்டிகளும் புதிதாய் உருவாயின. தற்போது அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இந்த அவசரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க பலருக்கும் நேரமில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க  ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் நிலைமை மோசம். கவாஸ்கரும், டிராவிட்டும், சச்சினும் விளையாடிய காலத்தில் ஸ்டேடியத்துக்கு வரும் கூட்டத்தில் கால் பங்கு கூட இப்போது  வருவதில்லை.

இந்தியாவில் இந்த நிலைமை ஏற்படும்  என ஐசிசி கனவிலும் நினைத்திருக்காது. ஏனெனில் 1982-ம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய டெஸ்ட் போட்டியை,  கிட்டத்தட்ட 4 லட்சத்து 85 ஆயிரம் பேர்  ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்த்து, கின்னஸ் சாதனை படைத்தார்கள். ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் கதையாக இருக்கிறது டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவை தடுத்து நிறுத்துவதற்காகதான் தற்போது பகல்- இரவு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Test%20match%203%2001.jpg

அதே சமயம்...முன்பு போல இப்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுகின்றனவா? என்றால் கண்டிப்பாக இல்லை. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் ரிசல்ட் கிடைப்பது என்பது குறைவாக இருக்கும். டிரா ஆகும் போட்டிகள்தான் அதிகம். ஆனால், இப்போது வீரர்களின் ஆட்டத்திறன் மாறிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பவுலர்களுக்கான போட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 80% போட்டிகளுக்கு ரிசல்ட் கிடைத்திருக்கிறது. 10% போட்டிகள் மழையால் டிரா ஆனது. மீதி 10% போட்டிகள்தான் ஐந்து நாட்கள் விளையாடியும் டிரா ஆனது.

வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி, டெஸ்ட் போட்டிகள் டிரா செய்யப்படுவது நல்லதல்ல. நான்காவது இன்னிங்க்ஸ் விளையாடும் அணி,  சிறப்பாக விளையாடி தோல்வியை தவிர்க்கப் போராடினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். டெஸ்டில்  ரிசல்ட் கிடைப்பது நல்லதே. ஆனால் ஒரு நல்ல டெஸ்ட் போட்டி அமைய வேண்டும். இரு அணிகளும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என  மூன்று பிரிவிலும் சிறப்பாக விளையாட வேண்டும். ஐந்து நாளிலும் விளையாடப்படும் 15 செஷனும்  சுவாரஸ்யத்தை உண்டாக்க வேண்டும். பேட்ஸ்மேனை வீழ்த்த பவுலர்களும், பவுலர்களை சமாளிக்க  பேட்ஸ்மேன்களும் கடும் போட்டி போட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ஒரு பேட்ஸ்மேன், பவுலர் இருவரின் முழு திறமையும் சோதனை செய்ய முடியும். தடுப்பாட்டம் விளையாடுவது என்பது லேசுபட்ட காரியம் கிடையாது.

மெக்ராத், பிரட் லீ, ஸ்டெயின் போன்ற பந்து வீச்சாளர்கள் பந்து வீசவே வெறுத்துப் போகுமளவுக்கு பேட்டிங் செய்வது சாதாரண விஷயமல்ல. அதே போல இந்திய மண்ணில் ஆசியக் கண்டத்தை தாண்டியவர்கள் ரன்களை குவிப்பதும் மிக கடினம். இதையெல்லாம் சமாளித்துதான் கடந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் இன்றைக்கு கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடிப்பவர்களை சிறந்த கிரிக்கெட் வீரர் என கொண்டாடும் மன நிலைக்கு வந்துவிட்டோம்.

ஆனால், அதையும் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் அரிதாக இருக்கிறார்கள்.  எந்த நாட்டு மைதானங்களிலும் சிறப்பாக விளையாடி வரும் பேட்ஸ்மேன்கள்  என சல்லடை போட்டு  தேடினால்,  எட்டு பேர் மட்டுமே சிக்குகிறார்கள். உலகின் தற்போதைய தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் இப்போதைக்கு இவர்கள்தான்...

alastair%20cook.jpg

1. அலிஸ்டர் குக் (இங்கிலாந்து)

31 வயாதாகும் அலிஸ்டர் குக் 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி,  28 சதங்களுடன் 9780 ரன்கள் குவித்திருக்கிறார். நாக்பூரில் விளையாடிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரை சதம் மற்றும்  சதம் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கிலி ஏற்படுத்தியவர் குக். உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் கடினமான விஷயம் எது தெரியுமா? இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பதுதான். ஏனெனில், இந்தியாவில் அயல்நாட்டு பேட்ஸ்மேன்கள் திக்கித் திணறுவார்கள். ஆனால், அலிஸ்டர் குக் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் வைத்துள்ள சராசரி 61.85. இந்திய மண்ணில் மட்டும் நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். அவரது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 294 ரன்களும் இந்தியாவுக்கு எதிராகத்தான் எடுக்கப்பட்டது.

இந்தியா மட்டுமல்ல ஆஸ்திரேலிய மண்ணிலும் 15 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1288 ரன்கள் குவித்திருக்கிறார் குக்.  குறுகிய காலத்தில் அடுத்தடுத்து சாதனைகளை படைத்த குக்கை உலகமே வியந்து பார்த்தது. அரிதிலும் அரிதாக கவாஸ்கரே,   "15 ஆயிரம் ரன்களை கடப்பதும் 50 டெஸ்ட் சதங்களை அடிப்பதும் குக்குக்கு சாத்தியமான ஒன்று"  என குக்கை பாராட்டி தள்ளினார். ஆனால் திடீரென நடுவில் இரண்டு ஆண்டுகள் சொதப்பலாக விளையாடினர். தற்போது கடந்த  இரண்டு ஆண்டுகளாக மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும் விளாசினார். 

ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடும் திறன் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவர் குக். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 3,4 நிலைகளில் இறங்கி விளையாடுபவர்களால்தான் அதிக ரன்கள் குவிக்க முடியும். தொடக்க வீரராக இறங்கினால் புது பந்தைச் சமாளிக்க வேண்டியிருக்கும். புது பந்து ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற மைதானங்களில் பிரமாதமாக ஸ்விங் ஆகும். இதனை திறம்பட எதிர்கொள்பவர் குக். கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த தொடக்க வீரர்கள் லிஸ்டில் அலிஸ்டர் குக்குக்கு இடமுண்டு. பின் கால்களை நகர்த்தி விளையாட வேண்டிய ஆஸி மண்ணிலும், முன் கால்களை அதிகவனமாக நகர்த்தி விளையாட வேண்டிய இந்திய மண்ணிலும் மிகச்சிறப்பாக விளையாடும் திறன் பெற்ற குக் பிரமாதமான டெஸ்ட் பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமே இல்லை!

hashim%20amla.jpg

2. ஹாஷிம் அம்லா - தென்னாப்பிரிக்கா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கும் பெயர் ஹாஷிம் அம்லா. சமீபத்தில் நடந்த இந்திய தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் அம்லாவின் சாதனைகள் மகத்தானவை. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறை சதம் அடித்த பெருமை ஹாஷிம் அம்லாவுக்கு உண்டு. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்க்ஸில் அம்லா 311 ரன்கள் குவித்ததுதான்  டெஸ்ட் போட்டிகளில், இன்று வரை ஒரு தென்னாபிரிக்க வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இந்தியாவின் நாக்பூர் மைதானத்தில் 253 ரன்கள் எடுத்தவர் ஹாஷிம் அம்லா.

ஆஸ்திரேலியாவில், பெர்த் மைதானத்தில் 221 பந்துகளில் அதிரடியாக 196 ரன்கள் குவித்த ஹாஷிம் அம்லாதான், சமீபத்தில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்களை விரக்தியின் உச்சிக்கு அழைத்து சென்று 289 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். உலகின் எப்பேர்பட்ட ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாடும் திறன் பெற்றவர்.

டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய ஒவ்வொரு நாட்டுக்கும் எதிராக சராசரி 50 ரன்களுக்கும் மேல் வைத்திருக்கிறார். இந்திய மண்ணில் எப்போதுமே மிகச்சிறப்பாக விளையாடும் அம்லா,  இந்த தொடரில் சறுக்கினாலும் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஹாஷிம் அம்லா எப்போதுமே ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடமாட்டார். வெற்றி, தோல்விகளை முறையாக ஏற்றுக்கொள்வார். கடந்த தொடரில் தென்னாப்பிரிக்கா தோற்றதுக்கு கூட  மற்றவர்களை போல ஆடுகளம் சரியில்லை எனக் கூறவில்லை. மாறாக,  'கடினமான ஆடுகளம், இந்திய அணி எங்களை விட அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடியதுதான் தோல்விக்குக் காரணம்' என வெளிப்படையாக அறிவித்தார். அதுதான் ஹாஷிம் அம்லா!

kane%20williamson.jpg

3. கேன் வில்லியம்சன் - நியூஸிலாந்து 

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் பரம வைரியான ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி. பந்துவீச்சாளர்களை தனது அபாரமான பேட்டிங்கால் கடுமையாக சோதித்தார். தற்போது தரவரிசையில் ’டாப்-4’ இடத்துக்குள் நங்கூரமிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில்தான் தனது டெஸ்ட் வாழ்கையை தொடங்கினார். அகமாதாபாத் டெஸ்ட் போட்டியில், ஷேவாக்கின் சரவெடி சதத்தின்(173)  உதவியுடன் இந்தியா 487 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து,  137 ரன்களில் நான்கு விக்கெட்டை இழக்க, ஆல்ரவுண்டராக ஆறாவது வீரராகக் களமிறங்கிய  வில்லியம்சன்,  299 பந்துகளை எதிர்கொண்டு 131 ரன்களை சேர்க்க, 459 ரன்களைக் குவித்தது நியூசி. முதல் போட்டியிலேயே அதுவும் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடி சதமடித்த வில்லியம்சன், அறிமுக வீரராக நச் முத்திரை பதித்தார்.


பொதுவாக அயல்மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வெல்வது அரிதிலும் அரிதான நிகழ்வு. கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணியை,  அதன் மண்ணிலேயே வென்று நியூசிலாந்து சாதனை படைப்பதற்கு கடைசி டெஸ்டில் 161 ரன்கள் குவித்து முக்கியப் பங்காற்றினார்  வில்லி. இந்த ஆண்டு இலங்கைக்கு  எதிராக இரட்டை சதமடித்தவர், ஆஸ்திரேலிய மண்ணிலும் மிகச்சிறப்பாக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே தவிர மீதி 8 அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த சிறப்புக்கு சொந்தக்காரரான வில்லியம்சனுக்கு வயது 25 தான். இவரே நியூசிலாந்து அணியின் எதிர்கால நம்பிக்கை நாயகன்.

AB%20de%20Villiers.jpg

4. ஏ.பி.டி.வில்லியர்ஸ் - தென்னாப்பிரிக்கா

'பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல' என சூப்பர் ஸ்டார் கணக்காக இணையத்தில் கொண்டாடப்படும் வைரல் நாயகன். கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட், ஒருதினபோட்டி, டி-20 என மூன்று பார்மேட்களிலும் கலக்கும் நம்பர் ஒன் சாம்பியன். டிவில்லியர்ஸை பொறுத்தவரையில் எப்போதுமே சாதனைக்காக விளையாட மாட்டார்.  டெஸ்ட் போட்டிகளில் 51.39 சராசரி வைத்திருக்கிறார். டெஸ்ட் போட்டி என்றால் தடுப்பாட்டம் மட்டுமே விளையாட வேண்டும் என அவசியமில்லை. அணிக்குத் தேவைப்படும்  நேரங்களில் அதிரடியாகவும், நிதானமாகவும், தடுப்பாட்டம் விளையாடக்கூடிய திறனும் ஒருங்கே பெற்ற அற்புதமான வீரர். டிவில்லியர்ஸ் எந்த மண்ணிலும்  சிறப்பாக விளையாடுபவர். குறிப்பாக சுழற்பந்துவீச்சை அற்புதமாகக் கையாளுபவர். சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரஹானேவுக்கு அடுத்தபடியாக உள்ளார்.

டிவில்லியர்ஸைப் பற்றிச் சுருக்கமாக குறிப்பிடவேண்டுமெனில் மூன்று டெஸ்ட் போட்டிகளை உதாரணம் காட்ட முடியும்.  2012-ல் அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்  டுபிளசிஸ் உடன் இணைந்து  கடுமையாக போராடி தடுப்பாட்டம் விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா செய்தார். அந்த இன்னிங்க்ஸில் 220 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார். அதுவே அடுத்து நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் 184 பந்துகளை சந்தித்து 169 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்கா, அப்போட்டியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுதான் டிவில்லியர்ஸ்... அந்நியனாகவும், ரெமோவாகவும்  தேவைப்படும் நேரத்தில் மாறுவார்.

மற்றொரு உதாரணம் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் விளையாடிய போட்டிதான். தென்னாபிரிக்கா 143.1 ஓவர்களை சந்தித்து வெறும் 143 ரன்களை சேர்த்தது. வரலாற்றிலேயே இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்க்ஸில் 143 ஓவர்கள் வரை விளையாடிய ஒரே அணி தென்னாபிரிக்காதான். இதில் டிவில்லியர்ஸ் மட்டும் தனி ஒருவனாக கிட்டத்தட்ட 50 ஓவர்கள் (297 பந்துகள்) சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மிகச்சிறப்பான இன்னிங்க்ஸ் இது. ஒருவேளை அரை சதம் எடுத்திருந்தால், மிக அதிக பந்துகளை சந்தித்து அரை சதம் எடுத்த நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியிருப்பார். டிவில்லியர்ஸ் அவுட் ஆனதும் அடுத்த மூன்றே ஓவர்களில் அடுத்தடுத்த  வீரர்களும் அவுட் ஆக, இந்திய அணி வென்றது. இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றாலும் கூட கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்றது டிவில்லியர்சும், அம்லாவும்தான்.

தற்போது டிவில்லியர்சுக்கு 31 வயதாகிறது, இன்னும் ஐந்து ஆண்டுகள் இதே ஃபார்மில் அவர் விளையாடினால் ஏகப்பட்ட சாதனைகள் நொறுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

joe%20root.jpg

5. ஜோ ரூட்- இங்கிலாந்து 

தற்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் நாயகன் ஜோ ரூட். குக், அம்லா, வில்லியம்சன் போலவே இந்திய மண்ணில்தான் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை  தொடங்கினார் ரூட். இந்தியாவுக்கு எதிராக ரூட் வைத்துள்ள சராசரி எவ்வளவு தெரியுமா? 101.83. உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு  எதிராக அதிக சராசரி வைத்திருப்பவர் ரூட் தான். ஆறு டெஸ்ட் போட்டிகளில் 611 ரன்கள் குவித்துள்ளார். ரூட்டுக்கு வயது 25 தான்.  இருபத்தி ஐந்து வயதில் ரேங்கிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரூட்டுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கு இங்கிலாந்தின் கேப்டனாக மாறவுள்ளார் என செய்தி தட்டுகின்றன இங்கிலாந்து ஊடகங்கள். ரூட் இதுவரை தென்னாப்பிரிக்க அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி கூட விளையாடிதில்லை, இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க மண்ணிலேயே தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இரண்டு வாரத்தில் டெஸ்ட் போட்டி விளையாடபோகிறார் ரூட். அங்கே ஸ்டெயினையும், மோர்கலையும் சமாளித்து ரன்கள் குவித்து விட்டால் ரூட்டுக்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்!

test%20match%20kohli.jpg

6. விராட் கோலி - இந்தியா

விராட்  கோலி இந்தியாவின் நம்பிக்கை நாயகன். ஆனால், தான் விளையாடிய முதல் டெஸ்ட் தொடரில் சொதப்பி தள்ளினார். அவ்வளவுதான்... விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு சரிவர மாட்டார்  என ஊடகங்களில் பல முன்னாள் வீரர்கள் கதறினர்.  அடுத்தடுத்த சில தொடர்களிலும் சுமாராகவே விளையாடினார். 2012-ல் அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி சதமடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் சொதப்ப ஆரம்பித்தார். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி அடித்த அதிகபட்ச ரன் 39 மட்டுமே. மீண்டும் கோலியை அணியில் இருந்து விரட்ட வேண்டும் என பலர் கூக்குரலிட்டனர்.

ஆனால், இந்த சமயத்தில்தான் டிராவிட்டும், டெண்டுல்கரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். ஒருதின போட்டிகளில்  கில்லியாக இருந்ததால் கோலிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஜோஹன்னஸ்பார்க் மைதானத்தில் சதம் அடித்தவர், அடுத்த இன்னிங்க்ஸிலும் 96 ரன்கள் குவித்தார், அதற்கடுத்த நியூசிலாந்து தொடரிலும் வெலிங்டன் மைதானத்தில் சதம் விளாசினார். இதையடுத்து காயமடைந்த தோனிக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றார் கோலி. அடிலெய்டு மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான பவுன்சர் வீசி கோலியை தாக்கி வரவேற்பு கொடுத்தார் மிட்செல் ஜான்சன். அதன் பின்னர் நடந்தது வரலாறு. அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணியை கலங்கச்செய்தார். ஆனாலும், வெறும் 17 பந்துகளை மீதியிருக்கும் நிலையில் அப்போட்டியில் இந்தியா தோற்றது.

அடிலெய்டு  இந்தியாவில் இருக்கும் மைதானங்களை போன்று பிளாட் டிராக் மைதானம். அதில் விளையாடிய கோலி பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை என சிலர் சீண்டினார்கள். அதே தொடரில் சிட்னி, மெல்ஃபர்ன் ஆகிய மைதானங்களில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினார் விராட்கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அம்மண்ணில்  நான்கு போட்டிகள் கொண்ட ஒரே தொடரில் நான்கு சதம் விளாசிய சிறப்பு விராட் கோலிக்கு மட்டுமே உண்டு. தற்போது இந்திய டெஸ்ட் கேப்டனாக ரன்களை குவிப்பதை விடவும் வெற்றியை குவிப்பதுதான் முக்கியம் எனச் சொல்லும் கோலி, உலக டெஸ்ட் அரங்கில் இந்தியாவை தலை நிமிரச்செய்யும் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார்!

steven%20smith.jpg

7. ஸ்டீவன் ஸ்மித்- இங்கிலாந்து

இன்றைய தேதிக்கு  டெஸ்ட் போட்டிகள் விளையாடுபவர்களில் அதிக சராசரி(55.34) வைத்திருப்பது ஸ்டீவன் ஸ்மித்தான். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் ஸ்மித். அப்போது அவர் பேட்ஸ்மேனும் கிடையாது, ஆல்ரவுண்டரும் கிடையாது. பவுலர் கோட்டாவில் லெக் ஸ்பின்னராக எட்டாவது இடத்தில் களமிறங்கினார்.  அவர் அடித்த ரன் 1. ஆனால், 2013 ஆகஸ்ட்டில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் அடித்தார். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஸ்மித் அடித்த சதங்களின் எண்ணிக்கை 12. இரட்டை சதம் ஒன்று.  ஸ்மித் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பது இப்போது புரிந்திருக்கும். கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது என தடுமாறியது. நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து சதமடித்து 769 ரன்களை அந்த தொடரில் குவித்தார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் 769 ரன்கள் குவிப்பது உலக சாதனை!

தொடர்ந்து ஸ்மித்தை அவுட் ஆக்குவதற்கு என்றே தனி பிளான்கள் தயாரிக்க,  ஒவ்வொரு அணியும் தீயாய் வேலை செய்து வருகிறது. மிகக்குறுகிய காலத்தில் விஸ்வரூப பேட்ஸ்மேனாக உயர்ந்த ஸ்மித் அனைவருக்கும் ஆச்சர்யம் தருகிறார். தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து ஆடுகளத்தில் இன்னும் ஸ்மித் விளையாடவில்லை. இந்தியாவில் ஏற்கனவே ஒரு தொடரில் விளையாடியிருக்கிறார். மேலும் ஐ.பி,எல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். எனினும் தென்னாபிரிக்க, நியூசிலாந்து, இந்திய, இலங்கை மண்ணில் ஸ்டீவன் ஸ்மித் எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ajinkya%20Rahane.jpg

8. அஜின்க்யா ரஹானே - இந்தியா

சத்தமில்லாமல் சாதிப்பது ரஹானே ஸ்டைல். ராகுல் டிராவிட் பள்ளியில் இருந்து வந்த ரஹானே,  டெஸ்ட் விளையாட ஆரம்பித்ததே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான். இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். முதல் இன்னிங்ஸில் ஏழு ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னும் எடுத்து மோசமாகதான் டெஸ்ட் வாழ்கையை ஆரம்பித்தார். பின்னர் தென்னாபிரிக்கா, நியூசி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை என வரிசையாக அயல் மண்ணில்தான் போட்டிகள். தென்னாபிரிக்காவில் டர்பன் மைதானத்தில் சீறி வரும் வேகப்பந்தை சமாளித்து 96 ரன்கள் எடுத்தார். பின்னர் நியூசிலாந்தில் வெலிங்டன் மைதானத்தில் சதம் அடித்தார்.

இங்கிலாந்தில் அனைத்து வீரர்களும் தடுமாறிய நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதன் முறையாக விளையாடும்போதே சதமடித்து அசத்தினர். உலகின் பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்பர்ன் மைதானத்தில் 147 ரன்கள் அடித்தார்.  பின்னர் வங்கதேச மண்ணில் 98 ரன்களை விளாசினார். இலங்கை அணிக்கு எதிராக கொழும்பில் சதமடித்தார். ஏறக்குறைய டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும், அவர்களது மண்ணிலேயே தனது முதல் தொடரிலேயே சிறப்பாக விளையாடிய ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் கெத்து மாஸ்டர்!

தொடர்ந்து அயல் மண்ணில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்துக்கு பிறகு,  இந்தியாவில் நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 15 ரன்களைத் தாண்டவில்லை ரஹானே. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டில் அபாரமாக விளையாடி இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து ’மேன் ஆஃப் த மேட்ச்’ ஆக ஜொலித்தார். டெஸ்ட்டில் இனி ரஹானே ராஜ்ஜியம்தான்!

பின்குறிப்பு: டெஸ்ட் பவுலர்களில் சாம்பியன்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்!

http://www.vikatan.com/news/coverstory/56216-champions-who-preserve-test-cricket.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.