Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பண்புடை நெஞ்சம்

Featured Replies

பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-1

 

By என். சொக்கன்

First Published : 29 August 2015 10:00 AM IST

இனியது எது?

இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும்.

‘பசிகொண்ட நேரம்

தாளிக்கும் ஓசை

சந்தோஷ சங்கீதம்’

என்று வைரமுத்து ஒரு பாடலில் எழுதுவார். பசிக்கும்போது தாளிக்கும் ஓசை இனிமையாகத் தோன்றும். அவனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும்போது ‘இனியது எது?’ என்று கேட்டால், ‘அப்படியே படுத்துத் தூங்கணும்’ என்று பதில் வரலாம்.

இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இனியவை மாறுபட்டாலும், உலகப் பொதுவான இனியவைகள் நிறைய உண்டு. அவற்றை இலக்கியங்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றன.

புத்திமதி சொல்வது யாருக்கும் பிடிப்பதில்லை. சொல்பவர்மீது கோபம்தான் வரும். அதற்காகச் சொல்லாமல் இருந்துவிடலாகாது என்று புலவர்கள் நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழில் இத்தனை அறநூல்கள், அறிவுரைகள்.

இந்த இலக்கணங்கள் அவ்வப்போது மாறும் என்கிறார்கள். உதாரணமாக, ‘நீதி நெறி விளக்கம்’ என்ற நூலின் குமரகுருபரர் இப்படி எழுதுகிறார்:

‘தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால், தன்னை

வியவாமை அன்றோ வியப்புஆவது! இன்பம்

நயவாமை அன்றோ நலம்.’

ஒருவன் தன்னை வியந்துகொள்கிறான் என்றால், தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறான் என்றால், நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது போல என்கிறது இந்தப் பாடல்.

நெருப்பில் தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும்? அணைந்து போகும், அவனுக்கு ஏற்கெனவே இயல்பாக உள்ள புகழ்கூட மதிக்கப்படாது.

ஆனால் அவனோ, தொடர்ந்து தன்னைப் புகழ்ந்துகொண்டே இருக்கிறான், அதன்மூலம் தன் புகழ் வளரும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அதாவது, நெருப்பை வளர்ப்பதற்காக அதன்மீது நீர் ஊற்றுகிறான், எப்படிப்பட்ட முட்டாள்தனம்!

ஒருவன் தன்னைத்தானே பார்த்து வியந்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று குமரகுருபரர் சொல்கிறார். இது இன்றைக்குச் சரிப்படுமா?

அலுவலகத்தில் ஒரு பணியைச் செய்கிறோம், அதைப்பற்றி நாமே பாராட்டிச் சொல்லக்கூடாது என்று சும்மா இருந்துவிட்டால், அது யாருக்குமே தெரியாது, அந்தப் பணிக்கான பலன் நமக்கு வராது, சொல்லப்போனால், அதை வேறு யாராவது எடுத்துக் கொண்டுவிடுவார்கள், ‘அவன் எப்படியும் பேசப்போறதில்லை, இந்த வேலையை நான்தான் செஞ்சேன்னு மேனேஜர்கிட்ட சொல்லி ப்ரமோஷனை வாங்கிடுவோம்.’

இப்படி ஒருவர் நினைப்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு வழிவகுத்தது, தன்னைப்பற்றிப் பேசாமல் இருப்பவர்தானே? அவர் வாயைத் திறந்து ‘இதை நான்தான் செய்தேன்’ என்று சொல்லியிருந்தால் இன்னொருவன் அதைத் திருட நினைப்பானா?

அப்படியானால், குமரகுருபரர் சொன்னது இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாதா? ஒவ்வொருவரும் செல்ஃப்-ப்ரமோஷன் எனப்படும் தற்புகழ்ச்சியைப் பேசினால்தான் வளர இயலுமா? அல்லது, யாராவது நம் வேலையைக் கவனித்துப் புகழ்வார்கள் என்று சும்மா இருக்க வேண்டுமா? ஊரே தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கும்போது நாம் எப்படிச் சும்மா இருப்பது? ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்றும் ஒரு வாசகம் உண்டே.

சிக்கலான கேள்விதான். இதற்குப் பதில் நன்னூலில் இருக்கிறது.

நன்னூல் இலக்கண நூலாயிற்றே, அங்கே சந்திப்பிழை, எழுத்துப் பிழையெல்லாம் தானே பேசுவார்கள்?

அதுதான் இல்லை. வாழ்வியல் இலக்கணங்கள் பலவும் பவனந்தி முனிவர் எழுதிய நன்னூலில் உண்டு. உதாரணமாக:

‘மன்உடை மன்றத்து ஓலைத்தூக்கினும்

தன்னுடை ஆற்றல்உணரார் இடையினும்

மன்னிய அவையிடை வெல்லுறும்பொழுதினும்

தன்னை மறுதலைப் பழித்தகாலையும்

தன்னைப் புகழ்தலும்தகும் புலவோற்கே.’

நான்கு சந்தர்ப்பங்களில் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாம் என்கிறது நன்னூல். அந்தச் சந்தர்ப்பங்கள்:

முதலில், அரசனது சபைக்குச் சீட்டுக்கவி எழுதும்போது.

சீட்டுக்கவி என்பது கிட்டத்தட்ட இன்றைய Resumeக்கு இணையானது. ஒருவர் அரசனிடம் தன் திறமையைச் சொல்லி, இப்போதைய தேவையைச் சொல்லி உதவி கேட்கிறார்.

 

seetu%20kavi%202.jpg  

 

இந்நிலையில், அவர் தன்னைப் புகழ்ந்து கொள்வதில் தவறில்லை. வெறுமனே உதவி கேட்டால் யார் செய்வார்கள்? ‘நான் பெரிய கவிஞன், எனக்கு உதவுங்கள்’ என்று சொல்லத்தான் வேண்டும்.

அடுத்து, தன்னுடைய ஆற்றலை உணராதவர்கள் மத்தியில்.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை, அருகே உள்ளவர்கள் அவருக்கு உதவி செய்ய ஓடுகிறார்கள்.

அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒரு மருத்துவர் இருந்தால், ‘நான் ஒரு சீனியர் டாக்டர், இதுமாதிரி பிரச்னைகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும், வழிவிடுங்க’ என்று அவர் சொல்லவேண்டும். அப்போதுதான் கூட்டம் விலகும், அவரால் நோய்வாய்ப்பட்டவருக்கு உதவி செய்து காப்பாற்ற இயலும். அந்த நேரத்தில் அவர் தன்னை அனுபவம் மிகுந்த மருத்துவர் என்று சொல்லிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அதேபோல், ஒருவர் பேச எழும்போது, மற்றவர்கள் அவருடைய பெருமையை உணராமல் அவமானப்படுத்தினால், அப்போதும் அவர் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொள்ளலாம், அவர்களுக்குத் தன்னுடைய மேதைமையை விளக்கலாம்.

இது பற்றி ஒரு வேடிக்கையான குட்டிக்கதை சொல்வார்கள். ரேஷன் கடையில் பெரிய கூட்டம் நின்றுகொண்டிருக்கிறது. தாமதமாக வந்த ஒருவர் வரிசையைத் தாண்டி முன்னே செல்கிறார், க்யூவில் இருந்த எல்லாருக்கும் கடுப்பு, ‘நாங்கள் எல்லாம் நிக்கறோம், நீ மட்டும் என்ன விசேஷமா?’ என்று அவரைப் பிடித்து இழுத்துப் பின்னே போடுகிறார்கள், அவர் மறுபடி முன்னே செல்கிறார், இவர்கள் மறுபடி அவரை இழுத்துப் பின்னால் நிறுத்துகிறார்கள். கடுப்பான அவர் மௌனமாக அங்கேயே நின்றுகொள்கிறார்.

பிறகு நெடு நேரமாகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை. ஒருவர் புலம்புகிறார், ‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவாரோ!’

‘ஏற்கெனவே வந்தாச்சு’ என்கிறார் அந்த மனிதர்.

‘எங்கே?’

‘நான்தான் அது, கடையைத் திறக்க வந்தவனைப் பிடிச்சுக் க்யூவுல நிறுத்தினீங்கல்ல? அனுபவிங்க!’

இந்தச் சூழ்நிலையில் அவர் ‘நான்தான் இந்தக் கடையைத் திறக்கவேண்டிய ஆள்’ என்று தன் பெருமையைச் சொல்லிக் கொள்வது அவசியம். அதேபோல் நாமும் நம்முடைய திறமையை உணராதவர்கள் மத்தியில் நம்மைப்பற்றிப் புகழ்ந்து பேசலாம், ‘என்னை யாருன்னு நினைச்சீங்க?’ என்று பின்னணி இசையோடு டயலாக் விடலாம்!

மூன்றாவது சூழ்நிலை, சபையில் வாதம் செய்யும்போது.

மேற்கத்திய இசைபற்றி ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் பேச எழும் ஒருவர், ‘நான் முப்பது வருடங்களாக மேற்கத்திய இசையைப் படிக்கிறேன், அதில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்’ என்று சொல்லிவிட்டுத் தன் வாதத்தைத் தொடங்கினால், அதற்குக் கூடுதல் மதிப்பு இருக்கும். அந்தச் சூழ்நிலையில் தற்புகழ்ச்சி தவறில்லை.

அதேசமயம், ‘நான் பெரிய ஆள், அதனால் என் வாதம் சரி’ என்று சொல்வதும் சரியில்லை. இங்கே தற்புகழ்ச்சி என்பது உங்கள்மீது ஒரு மரியாதையைத் தரும், அதன்பிறகு நீங்கள் உளறிக்கொட்டினால் அந்த மரியாதையை நீங்களே இழந்துவிடுவீர்கள்.

நான்காவது சூழ்நிலை, எதிரி தன்னை அவமானப்படுத்தும்போது.

இரண்டு பேர் மோதிக்கொள்கிற சூழ்நிலையில், ஒருவன் இன்னொருவனை அவமானப்படுத்திப் பேசினால், அந்தப் போட்டி சமமற்றதாகிவிடுகிறது. ஆகவே, அவமானப்படுத்தப் பட்டவன் தன்னைப் புகழ்ந்து பேசுவதற்கு அனுமதி உண்டு.

இதைத் திருப்பிப் போடுகிற கதைகளும் உண்டு.

ஒரு புலவர். அவருடைய ஊரின் பெயர் கடைமடை.

அவர் ஒருமுறை மடம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அவரைப் பார்த்ததும் அந்த மடத்தின் தலைவர், ‘வாரும் கடைமடையரே’ என்றாராம்.

‘கடைமடையர்’ என்றால், கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ஒரு பொருள். கடைசியாக உள்ள (அதாவது ரொம்ப மந்தமான) மடையர் என்பதும் ஒரு பொருள்.

இப்படி அவர் தன்னை அவமானப்படுத்தியதும், கடைமடைப் புலவர் யோசித்தார், சட்டென்று, ‘வந்தேன் மடத்தலைவரே’ என்றாராம். மடத்தின் தலைவர் என்று ஒரு பொருள், மடத்தனமான தலைவர் என்று இன்னொரு பொருள்.

இதுபோல், தன்னை அவமானப்படுத்துவோருக்குப் பதிலடி தருவதற்காக, அவர்களை அவமானப் படுத்தவேண்டும் என்று அவசியமில்லை, தன்னைப்பற்றிப் புகழ்ந்து கொள்ளலாம், அதற்கு நன்னூல் அனுமதி தருகிறது.

இப்படி நான்கு சந்தர்ப்பங்களில் ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளலாம். தண்டியலங்காரம் என்ற நூலில் அதற்கு ஒரு பெயர்கூட தந்திருக்கிறார்கள், ‘தன் மேம்பாட்டு உரை’:

‘தான் தன் புகழ்வது தன்மேம்பாட்டு உரை’

ஆக, குமரகுருபரர் சொன்னதும் உண்மை, அதில் “Conditions Apply” சேர்த்து நன்னூல் சொல்வதும் உண்மை. இரண்டையும் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியானதைப் பயன் படுத்திக்கொள்வது நம் சமர்த்து.

இப்போது, மறுபடி முதல் கேள்விக்கு வருவோம். இனியது எது?

‘இனியவை நாற்பது’ என்ற பெயரில் ஒரு நூலே எழுதியிருக்கிறார் பூதஞ்சேந்தனார். அதிலிருந்து ஒரு பாடல்:

‘நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே,

மன்றக் கொடும்பாடு உரையாத மாண்புஇனிதே,

யான்றுஅறிவார் யார்என்று அடைக்கலம் வௌவாத

நன்றியின் நன்குஇனியது இல்.’

முதலில், நன்றியை மறக்காமல் வாழவேண்டும் என்கிறார் பூதஞ்சேந்தனார். திருவள்ளுவர் சொன்ன அதே விஷயம்தான்:

‘நன்றி மறப்பது நன்றுஅன்று, நன்றுஅல்லது

அன்றே மறப்பது நன்று.’

இங்கே ‘நன்றி’ என்பது, ஒருவர் செய்த உதவிதான். அதை மறக்கக்கூடாது, ஒருவேளை அவர்கள் உதவாவிட்டால், அவர் உதவவில்லையே என்பதை மனத்தில் வைத்துக்கொண்டே வாழக்கூடாது, அதை அன்றே மறந்துவிடவேண்டும்.

உதவி என்பது அப்பேர்ப்பட்ட விஷயம். அதே அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்:

‘செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.’

நாமாகக் கேட்காமல் ஒருவர் முன்வந்து நமக்கு உதவுகிறார் என்றால், அந்த உதவிக்கு இந்த உலகமும் வானமும் கூட ஈடாகாது. அதை என்றைக்கும் மறக்கக்கூடாது. நம் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அந்த உதவியைப்பற்றிய எண்ணமும் நன்றியுணர்வும் கலந்திருக்க வேண்டும் என்கின்றன இந்தப் பாடல்கள்.

இதன் அடையாளத்தை நாம் பல விஷயங்களில் பார்க்கலாம். சிலர் தங்களுடைய சொந்த ஊரைப் பெயரின் முன்னே வைத்திருப்பார்கள், தன்னை வளர்த்த ஊர் என்கிற நன்றிக்காக. சிலர் தங்கள் வீட்டுக்குக் குருநாதரின் பெயரை வைப்பார்கள், ‘சமைத்துப்பார்’ என்ற புத்தகம் எழுதி அதன்மூலம் பெரிய வெற்றியடைந்த மீனாட்சி அம்மாள் அந்தப் பணத்தில் வாங்கிய வீட்டுக்குச் ‘சமைத்துப் பார் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்டது, ‘வெண்ணிற ஆடை மூர்த்தி’ போன்றோர் தங்கள் பெயரோடு முதல் படத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கிடைத்த உதவியை எண்ணி நன்றியுணர்வுடன் இருப்பது இனியது.

அடுத்து, வழக்கில் ஒருதலைப்பட்சமாகப் பேசாமலிருப்பது இனியது என்கிறது இந்தப் பாடல். அதாவது, ஒருவர் நமக்குப் பிடித்தவர் என்பதற்காக அவருக்குச் சார்பாகப் பொய் பேசாமல், நடந்த உண்மையைச் சொல்லவேண்டும்.

இது ஒரு பெரிய விஷயமா என்று நாம் நினைக்கலாம், பொய்யான சாட்சி காரணமாகத் தண்டிக்கப்பட்ட ஒருவரை நாம் சந்திக்கும்வரையில்.

ஒருவிதத்தில் இந்த உலகமே உண்மையை நம்பிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லாரும் உண்மை பேசுகிறார்கள், நாமும் உண்மையைப் பேசினால் நமக்கு எந்தக் கேடும் வராது என்று நம்பி வாழ்கிறவர்கள்தான் இங்கே பெரும்பான்மை.

அவர்களை ஒருவன் பொய்யால் வீழ்த்துகிறான் என்றால் அது எப்பேர்ப்பட்ட பிழை! ஒருபக்கம் அதனால் அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், இன்னொருபக்கம், உண்மையை நம்பியவருக்கு அவன் செய்கிற நம்பிக்கைத் துரோகம் அல்லவா?

அதனால்தான், வழக்கில் பொய்சாட்சி சொல்வதை மிகப் பெரிய தவறாக நூல்கள் வலியுறுத்துகின்றன. அதைச் செய்யவேகூடாது என்கின்றன.

சிலப்பதிகாரத்தில் ஒரு பூதம் வருகிறது. அது பொய்சாட்சி சொல்பவர்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்குமாம்:

‘பொய்க்கரியாளர்…என்

கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் என

காத நான்கும் கடும்குரல் எழுப்பிப்

பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்…’

பொய்சாட்சி சொல்வது கிடக்கட்டும், நமக்கு வேண்டியவர் என்பதற்காக வழக்கில் ஒருபக்கமாகப் பேசுவதுகூட தவறுதான். ‘ஓரஞ்சொல்லேல்’ என்று ஆத்திச்சூடி சொல்லும்.

சாதாரண மக்களுக்கே இப்படியென்றால், நீதிபதிகள் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்!

வெற்றிவேற்கை என்ற நூலில் அதிவீரராமபாண்டியன் எழுதுகிறார்:

‘இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே

இருவரும் பொருந்த உரையார் ஆயின்

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்

முறையுற தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதுஓர் வாள்ஆகும்மே!’

இருதரப்பினர் சொல்வதையும் ஏழுமுறை கேட்கவேண்டும், அதைப்பற்றி நன்கு யோசித்து, அந்த இருவரும் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு தீர்ப்பைச் சொல்லவேண்டும்.

அப்படியில்லாமல், ஒருதலைப்பட்சமாக ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தங்கள் பக்கம் இருந்தும் வழக்கில் தோற்றவர்கள் மனம் உருகி அழுவார்கள், அந்தக் கண்ணீர், தவறான தீர்ப்பைச் சொன்ன அந்த நீதிபதியின் தலைமுறையையே அழிக்கும் வாளாக மாறும், மூன்று தேவர்களும் ஒன்றாக வந்தால்கூட, பொய்யான தீர்ப்புச் சொன்னவரைக் காக்க இயலாது!’

நிறைவாக, நான்காவது இனியது, தன்னிடம் வந்த அடைக்கலப்பொருளைக் கவர்ந்துகொள்ளாமல் இருத்தல். அதுவும் பொதுவான அடைக்கலப்பொருள் அல்ல, ரகசியமாக, யாருக்கும் தெரியாமல் கொடுக்கப்பட்ட பொருள்.

அதாவது, அந்தப் பொருளை எடுத்தால் யாருக்கும் தெரியாது. அது ஒரு குற்றம் என்று யாரும் அறியப்போவதில்லை. ஆனாலும், அதை எடுக்கக்கூடாது என்று ஒரு கொக்கி.

குற்றமே செய்யாதவனும் மற்றவர்களுக்குத் தெரியாமல் குற்றம் செய்கிறவனும் உலகத்தின் பார்வையில் ஒரேமாதிரிதான் தோன்றுவான். ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

அதுபோல, அடைக்கலப்பொருளைத் திருடிக்கொள்வதற்கான சூழ்நிலை அமைந்தால்கூட, அதனை எடுக்கக்கூடாது. அதைவிட இனிய ஒரு விஷயம் உலகில் கிடையாது.

திருவள்ளுவரும் இதையே சொல்கிறார், ‘அடுத்தவன் பொருள் உனக்கு எதற்கு? அப்படி நீ ஆசைப்பட்டு அங்கே கை வைத்தாய் என்றால், உன்னிடம் இயற்கையாக உள்ள பொருளும் கரைந்துபோகும்’ என்று விளக்குகிறார், ‘ஆகவே, உன் செல்வத்தைக் காத்துக்கொள்ளும் வழி, அடுத்தவன் செல்வத்துக்கு ஆசைப்படாமலிருப்பதுதான்!’

‘அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.’

பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமலிருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களிடம்தான் திருமகள் தங்கியிருப்பாள் என்றும் சொல்கிறார் வள்ளுவர்:

‘அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.’

(தொடரும்)

http://www.dinamani.com/junction/anbudai-nenjam/2015/08/29/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1/article2998196.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-2

By என். சொக்கன்

First Published : 05 September 2015 12:00 AM IST

 
Tweet
1
 

 

பாப்பாவை ஓடி விளையாடச் சொன்ன பாரதியார், 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார்.

அவர் சொன்னது பாடப் புத்தகப் படிப்பை அல்ல. பொதுவான கல்வியை.

இரண்டும் ஒன்றுதானே?

பாடப் புத்தகங்கள் படிக்கப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படிப்பு என்றால் அதுமட்டும்தானா?

கற்பதற்கு எத்தனையோ வகைப் புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களுக்கு வெளியிலும் நிறைய கல்வி இருக்கிறது. ஓர் எழுத்தும் வாசிக்க, எழுதத் தெரியாமல், உலகை அறிந்தவர்களைப் பார்க்கிறோமே.

'காலை எழுந்தவுடன் படிப்பு' என்ற வாசகத்தை, அதிகாலையில் புத்தகத்தைப் பிரித்துப் படித்தால் புத்தியில் பாடம் நன்றாக ஏறும், அதன் மூலம் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்கிற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம், தூங்கி எழுந்த கணம் தொடங்கி உன்னைச் சுற்றியிருக்கிறவர்களை வாசிக்கத் தொடங்கு என்கிற பொருளிலும் காணலாம்.

'இளமையில் கல்' என்பார்கள். இதை நல்லாதனார் எழுதிய திரிகடுகத்தில் ஒரு பாடலும் வலியுறுத்துகிறது:

'முந்தை எழுத்தின் வரவுஉணர்ந்து, பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தலில் மூன்றும்
விழுப்ப நெறிதூரா ஆறு'

முதலில், எழுத்தை உணர்ந்துகொள்ளவேண்டும். அதாவது, படிக்கவேண்டும்.

அதன்பிறகு, தந்தை, தாயை வழிபடவேண்டும். 'அன்னையும் பிதாவும் முன்அறி தெய்வம்' என்ற பழமொழியைக் கல்விக்குப்பிறகு வைக்கிறது இந்தப் பாடல். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையையும் மாற்றிக் கற்றலை முதலாவதாகப் போற்றுகிறது.

அன்னை, தந்தையை வணங்கும்போது என்ன கிடைக்கும்?

ஆசி கிடைக்கும், ஒழுக்கம் கிடைக்கும். அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

அடுத்து, தாய், தந்தைக்கு இணையான உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காட்டிய வழிகள் இருக்கின்றன, அவற்றைப் பின்பற்றவேண்டும்.

நம் முன்னே பல பாதைகள் இருக்கும்போது, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் உரிமைதான். சிலர் புதுப்பாதைகளை அமைத்து முன்னேறுவார்கள்.

அதே சமயம், ஒழுக்கம் என்று வரும்போது, ஏற்கெனவே பெரியோர் காட்டிய பாதைகளைப் பின்பற்ற வேண்டும். காலத்துக்கேற்ப ஒழுக்கம் மாறும் என்றாலும், சில அடிப்படை விஷயங்கள் மாறிவிடக்கூடாது.

ஆக, இளம்வயதில் கல்வி, தந்தை, தாய்மீது மரியாதை, பெரியோர் சொன்ன ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுதல். இந்த மூன்றும் சேர்ந்தால், உயர்வை நோக்கிச் செல்லும் பாதை தூர்ந்துபோகாது. அதாவது, அந்தப் பாதையில் தடைகள் இருக்காது, நிச்சயம் உயர்வோம்.

கவனியுங்கள், வெல்வோம் என்று சொல்லவில்லை. உயர்வோம் என்கிறார். என்ன வித்தியாசம்?

வெற்றி என்பதை வணிக வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப் பழகிவிட்டோம். ஒருவர் நன்றாகச் சம்பாதிக்கிறார், நிறைய சொத்து வைத்திருக்கிறார், புகழோடு இருக்கிறார் என்றால் அவர் வென்றவர் என்கிறோம். அதுவே உயர்வு என்றும் கருதுகிறோம்.

உண்மையில், உயர்வு என்பது பல காரணங்களால் ஏற்படலாம். வணிக வெற்றி, பண உயர்வு என்பது அவற்றில் ஒன்று, அவ்வளவே.

பணம் நிறைய வைத்திருக்கும் ஒருவர் பண்பற்றவராக இருந்துவிட்டால், அவரை உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது பொருந்தாது. அதனால்தான் 'விழுப்ப நெறி' என்கிறது இந்தப் பாடல், 'வெற்றி நெறி' என்று சொல்லவில்லை.

'ஒழுப்பம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.'

இது திருக்குறள். ஒழுக்கமே உயர்வு தரும். அதனால், ஒழுக்கமானது உயிரைக் காட்டிலும் முக்கியம்!

அதென்ன 'ஒழுக்கம்', மிகவும் பொதுவான சொல்லாக இருக்கிறதே.

பொய் பேசாமல் இருப்பதுதான் ஒழுக்கமா? பிறருக்கு உதவுவதுதான் ஒழுக்கமா? பேராசையில்லாமல் இருப்பதுதான் ஒழுக்கமா?

இவையெல்லாம் ஒழுக்கங்கள்தான். ஆனால், இவைமட்டும்தான் ஒழுக்கம் என்றில்லை. அதற்குப் பல அறநூல்கள் பலவிதமான வரையறைகளை வழங்கியிருக்கின்றன.

உதாரணமாக, பெருவாயின்முள்ளியார் எழுதிய 'ஆசாரக்கோவை' என்ற நூலின் முதல் பாடல், எட்டுவிதமான ஒழுக்கங்களைக் குறிப்பிடுகிறது.

 

burmese41.gif  

 

'ஆசாரம்' என்றாலே ஒழுக்கம்தான், 'கோவை' என்றால் தொகுப்பு, ஒழுக்கத்துக்குரிய கருத்துகளைத் தொகுத்துச் சொல்லும் இந்த நூலில், 'ஆசார வித்து', அதாவது, ஒழுக்கத்தின் விதைகள் என்று குறிப்பிடப்படும் அந்த எட்டு:

1. தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமல் இருத்தல்

2. பொறுமையோடு பணிசெய்தல்

3. இனிமையாகப் பேசுதல்

4. எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமலிருத்தல்

5. நன்கு படித்தல், தொடர்ந்து படித்தல்

6. ஒப்புரவை அறிதல்

7. அறிவுடைமை

8. நல்லவர்களோடு பழகுதல்
 

'நன்றிஅறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
ஒப்புரவுஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல்இனத்தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து.'


மற்றதெல்லாம் புரிகிறது, அதென்ன 'ஒப்புரவு'?

ஆத்திசூடி நினைவிருக்கிறதா? 'ஒப்புரவு ஒழுகு' என்று ஔவையார் எழுதிய அதே விஷயம்தான் இது.

ஒப்புரவு என்றால், உலக நடைமுறைகளைப் புரிந்துவைத்திருத்தல். அதன்படி நடத்தல். பிறர் நம்மைப் 'பழசு' என்று சொல்லி விடாதபடி பழகுதல்.

சில முதியவர்கள் இளைஞர்களுடன் சகஜமாகப் பழகுவதைப் பார்க்கிறோம், 'என்ன மச்சி சௌக்கியமா?' என்கிற ரேஞ்சுக்கு அவர்கள் தங்கள் பேரன் வயதுள்ளவர்களுடன் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப்பற்றிப் பேசுவார்கள், புதுப் படங்களைப் பற்றி கமென்ட் அடிப்பார்கள், லோவெய்ஸ்ட் ஜீன்ஸ் அணிந்து கோல்ட் காஃபி உறிஞ்சிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

ஒப்புரவு என்றால் சைட் அடிப்பதல்ல. 'நாங்கல்லாம் அந்தக் காலத்துல...' என்று ஒதுங்கியிருக்காமல் உலகத்தோடு கலந்துவிடுகிற பெரியவர்களின் குணத்தை ஓர் உதாரணமாகச் சொல்கிறோம். அதுபோல, உலக நடைமுறையை அறிந்து அதன்படி நடத்தலைதான் ஒப்புரவு என்கிறார்கள்.

சரி, ரோம்ல ரோமானியனா இருக்கணும், அமெரிக்கால அமெரிக்கனா இருக்கணும், அவ்ளோதானா ஒப்புரவு?

இன்னும் இருக்கிறது. திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்:

'இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சியவர்.'

தன்னுடைய கடமையை உணர்ந்தவர்கள், செல்வம் இல்லாதபோதும் ஒப்புரவிலிருந்து தளரமாட்டார்கள் என்கிறது இந்தக் குறள்.

ஒப்புரவு என்றால், உலகத்தோடு ஒட்டிவாழ்தல் என்றுதானே பார்த்தோம்? அதற்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவர் ஏன் இப்படிச் சொல்கிறார்?

அவரிடமே க்ளூ கேட்போம். அதே அதிகாரத்தின் முதல் குறள்:

'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங்கொல்லோ உலகு.'

யாருக்காவது உதவி செய்துவிட்டு, அவர்கள் நம்மிடம் நன்றியோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே, பதிலுக்கு அவர்கள் நமக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோமே, அதெல்லாம் நியாயமா?

இந்த வானம் நமக்கு மழையைத் தருகிறது. பதிலுக்கு நாம் வானத்துக்கு என்ன செய்கிறோம்? அது எதையாவது நம்மிடம் எதிர்பார்க்கிறதா?

அப்படிப் பலனை எதிர்பார்க்காமல் உதவுவதுதான் ஒப்புரவு என்று திருவள்ளுவர் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த அதிகாரத்தின் முதல் பாடலாக இதை வைத்து நமக்கு க்ளூ கொடுக்கிறார்.

தொடர்ந்து வாசித்தால், இன்னும் மூன்று குறள்கள்:

'ஊருணி நீர்நிறைந்தற்றே, உலகவாம்
பேரறிவாளன் திரு.'
'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம்
நயனுடையான்கண் படின்.'
'மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால், செல்வம்
பெருந்தகையாளன்கண் படின்.'

பெரிய அறிவை உடைய சிறந்தவனுடைய  செல்வம், ஊர்மக்கள் நீர் உண்கிற பொது நீர்நிலையைப்போன்றதாம், ஊருக்கு நடுவே பழுத்த மரத்தைப்போன்றதாம், மருந்து மரத்தைப்போன்றதாம்.

இதன் அர்த்தம், நீர்நிலையில் பலரும் நீர் உண்பார்கள், பழத்தைப் பலரும் பறித்துச் சாப்பிடுவார்கள், அதன் இலையை, பழத்தைச் சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் குணமாவார்கள், அதுபோல, இந்த ஒப்புரவாளர்களிடம் உள்ள செல்வம் பலருக்குப் பயன்படும், பலரும் பயன்பெறும்வகையில் அவர்கள் வாழ்வார்கள்.

இங்கேயும் ஒப்புரவு என்ற சொல் இல்லை, ஆனால் அதற்கான இலக்கணம் இருக்கிறது.

ஆக, ஒப்புரவு என்பது பிறருக்கு உதவுதல், அவர்களுக்காக வாழுதல்.

ஆனால், இதெல்லாம் இப்போ சரிப்படுமா? இப்படி இருந்தா நம்ம தலையில மிளகாய் அரைச்சுடமாட்டாங்களா?

அதற்கும் திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:

'ஒப்புரவினால் வரும் கேடுஎனின், அஃதுஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.'

பிறருக்கு உதவி செய்வதால் உனக்கு ஒரு கேடு வரும் என்றால், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள். இன்னும் சொல்லப்போனால், உன்னையே விற்றுக்கூட அந்தக் கேட்டை வாங்கிக்கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம், ஒப்புரவு என்ற குணம் கேட்டைக் கொண்டுவராது. மேல்பார்வைக்கு அது கேட்டைப்போலத் தோன்றலாம். ஆனால், அது உயர்வைமட்டுமே தரும். பிறருக்கு உதவுதல் எப்போதும் ஒருவரைக் கைவிடாது. இதுவும் திருவள்ளுவர் சொல்வதுதான்:

'புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.'

ஒப்புரவைவிட ஒரு நல்ல விஷயம், இந்த உலகத்தில்மட்டுமல்ல, அந்தத் தேவர்கள் உலகத்திலும் கிடைக்காது என்கிறார் வள்ளுவர்.

அதனால்தான், ஒருவர் சான்றோராக இருக்கவேண்டுமென்றால், அவர் அவசியம் பெற்றிருக்க வேண்டிய ஐந்து தூண்களைச் சொல்லும்போது, அதில் ஒப்புரவையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறார் அவர்:

'அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு
ஐந்து சால்ஊன்றிய தூண்.'

சான்றாண்மை என்பது ஒரு கட்டடம் என்றால், அதைத் தாங்கும் ஐந்து தூண்கள்: பிறர் மீது அன்பு செலுத்துதல், குற்றம் செய்ய வெட்கப்படுதல், ஒப்புரவு/ உதவும் மனப்பான்மை, கண்ணோட்டம்/ இரக்ககுணம், உண்மையைமட்டுமே பேசுதல்.

யோசித்துப்பார்த்தால், இந்த ஐந்து தூண்களும் தனித்தனியே நில்லாமல், ஒன்றையொன்று ஆதரவாகக் காத்து நிற்பது புரியும். அன்பு இல்லாமல் உதவும் மனப்பான்மை வராது, இரக்கம் இல்லாமல் உதவமாட்டோம், கருணையுள்ளவர்கள் தங்கள் நலன் கருதிப் பொய் பேசமாட்டார்கள், குற்றம் செய்யமாட்டார்கள். எல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவை.

'ஒப்புரவுஅறிதலின் தகுவரவு இல்லை'

முதுமொழிக்காஞ்சி என்ற நூலில் மதுரைக்கூடலூர்கிழார் சொல்லும் வாசகம் இது. ஒப்புரவை அறிந்து பின்பற்றுவதைவிடத் தக்க செயல் வேறு எதுவும் இல்லையாம்.

ஒப்புரவின் முக்கியத்துவம் ஓரளவு புரிந்திருக்கும். இப்போது, அந்த ஆசாரக்கோவைப் பாடலுக்குத் திரும்பச் சென்று அந்த எட்டு 'ஆசார வித்து'களைப் பார்த்தால், இன்னொரு சந்தேகம் வருகிறது: கல்வி என்று தனியே சொல்கிறார், அறிவுடைமை என்று இன்னோர் இடத்தில் சொல்கிறார். கல்வியால்தானே அறிவு வரும்? இவற்றை இரண்டு வெவ்வேறு விஷயங்களாக ஏன் சொல்லவேண்டும்?

மறுபடியும் திருவள்ளுவரைதான் கேட்கவேண்டும். அவர் 'கல்வி' என்று ஓர் அதிகாரம் எழுதியிருக்கிறார், 'அறிவுடைமை' என்று இன்னோர் அதிகாரம் எழுதியிருக்கிறார். போதாக்குறைக்கு இப்படியும் எழுதுகிறார்:

'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.'

மணலில் தோண்டினால், மணற்கேணி நீராகப் பொங்கிவரும், அதுபோல, படித்தால் அறிவு ஊறும்.

ஆக, கல்வியால் அறிவு வரும், அதில் சந்தேகமில்லை. ஆனால் கல்வி வேறு, அறிவுடையவனாக இருத்தல் வேறு. அது கல்வியால்மட்டும்தான் வரும் என்று சொல்வதற்கில்லை, அனுபவத்தால் வரலாம், பெரியவர்கள் வழியைப் பின்பற்றுவதால் வரலாம்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.'

யார் எதைச் சொன்னாலும் சரி, உண்மை எது என்று ஆராய்ந்து காண்பது அறிவு. இது புத்தகத்தால் வருமா?

புத்தகத்தின் பலனும் பலனின்மையும், அதைப் படிக்கிறவர் கையில்தான் இருக்கிறது. இதையும் திருக்குறளே சொல்கிறது:

'கற்க கசடுஅறக் கற்பவை, கற்றபின்
நிற்க அதற்குத் தக.'

குறையில்லாமல் படிக்கவேண்டும், அதன்பிறகு, அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும். படித்தவுடன் மறந்துபோனால் கல்வி வரும், அறிவு வராது, ஒழுக்கம் வராது.

அதற்காக, 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது' என்று நூல்களை ஓரங்கட்டிவிடவேண்டியதில்லை. கல்வியின்மூலம்தான் நாம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள இயலும். அதன் முக்கியத்துவத்தைப் பல பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

பாரதிதாசன் குழந்தைக்கு எழுதிய பாடலொன்று:

'நூலைப் படி, சங்கத்தமிழ்
நூலைப் படி, முறைப்படி
நூலைப் படி!'
எப்போது படிக்கவேண்டும்?
'காலையில் படி,
கடும்பகல் படி,
மாலை, இரவு, பொருள்படும்படி
நூலைப் படி!'
எப்படிப் படிக்கவேண்டும்?
'கற்பவை கற்கும்படி,
வள்ளுவர் சொன்னபடி,
கற்கத்தான் வேண்டும் அப்படி,
கல்லாதவர் வாழ்வதுஎப்படி?'
எதைப் படிக்கலாம்?
'அறம் படி, பொருளைப் படி,
அப்படியே இன்பம் படி!
அகப்பொருள் படி, அதன்படி
புறப்பொருள் படி, நல்லபடி!'


புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாமே உண்மையா?

இல்லை. ஆனால், அவை பொய் என்பதை அறிவதற்காகவேனும் அதைப் படிக்கதான் வேண்டும்!

'பொய்யிலே முக்கால்படி,
புரட்டிலே கால்படி,
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதுஎப்படி?
நூலைப் படி!'

புத்தகம் படிச்சா தூக்கம் வருதே!

பரவாயில்லை, சமாளித்துப் படிக்கத்தான் வேண்டும், அதுதான் இன்பம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே:

'தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப் படி,
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி,
நூலைப் படி!'

படிக்கத்தொடங்கும்போது சிரமம் இருக்கும், ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படிக்கவேண்டும் என்று 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலில் குமரகுருபரர் சொல்லியிருக்கிறார்:

'தொடங்குங்கால் துன்பமாய், இன்பம் பயக்கும்,
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி.'


என்னது? கல்வி அறிவை அகற்றுமா? குழப்புதே!

இங்கே 'அகற்றுதல்' என்றால், 'நீக்குதல்' என்ற பொருள் இல்லை. 'அகலமாக்குதல்' என்று பொருள். நம்மிடம் இருக்கும் அறிவைக் கல்வி அகலமாக்கும், மடமையைக் கொல்லும், இன்பம் தரும்.

அதனால்தான், கல்வியைச் செல்வம் என்றே குறிப்பிடுவது நம் மரபாக இருக்கிறது. அதிலும், மற்ற செல்வங்களையெல்லாம்விடச் சிறந்த செல்வம்:

'கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு,
மாடுஅல்ல மற்றையவை!'

கல்விதான் ஒருவருக்குத் தாழ்வைத் தராத உயர்ந்த செல்வம், அதோடு ஒப்பிடும்போது மற்ற செல்வங்களெல்லாம் செல்வங்களே அல்ல என்கிறார் வள்ளுவர்.

ஔவையாரும் இதையே குறிப்பிட்டிருக்கிறார்:

'கைப்பொருள்தன்னின் மெய்ப்பொருள் கல்வி.'

கைவசம் உள்ளவைதான் செல்வம் என்று நினைக்காதீர்கள், உண்மையான செல்வம் நீங்கள் கற்ற கல்விதான்.

அதாவது, கசடுஅறக் கற்றுக்கொண்டு, அதற்குத் தக நிற்கும் கல்வி, அதனால் வரும் அறிவு, அதனால் வரும் ஒழுக்கம், அதுவே உண்மையான செல்வம்!

(தொடரும்)

 

http://www.dinamani.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-3

Author: என். சொக்கன்

  • First Published: Sep 12, 2015 10:00 AM
  • Last Updated: Sep 11, 2015 6:08 PM
‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்று நம் ஊரில் பழமொழி உண்டு. ‘இனியவை நாற்பது’ எழுதிய பூதஞ்சேந்தனாரும் இதையேதான் சொல்கிறார்: ‘சலவரைச் சாரா விடுதல்இனிதே.'

தீயவர்களை என்ன செய்யலாம்?

‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்று நம் ஊரில் பழமொழி உண்டு. ‘இனியவை நாற்பது’ எழுதிய பூதஞ்சேந்தனாரும் இதையேதான் சொல்கிறார்: ‘சலவரைச் சாரா விடுதல்இனிதே.'

அப்படியானால் யாரைச் சேர்தல்இனிது?

புலவர்களைச் சேரவேண்டுமாம்!

உடனே, ஊரில் யார் கவிதை எழுதுகிறவர் என்று தேடவேண்டாம். புலவர் வேறு, கவிஞர் வேறு, புலமை கொண்ட சிலர் கவிதை எழுதலாம், அதற்காக எல்லாக் கவிஞர்களும் புலவர்கள் என்று பொருள் இல்லை.

புலவர்கள், அதாவது ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்குகிறவர்களின் சொல்லைப் போற்றவேண்டும். இதைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியில், ‘தகுதியால் வாழ்தல்இனிது’ என்கிறது இந்தப் பாடல்.

அதாவது, எல்லா உயிர்களும் அவரவர் தகுதியால், அவரவர் உரிமையைக் கொண்டு இங்கே வாழவேண்டும். இந்த உலகம் எல்லாருக்குமானது.

‘சலவரைச் சாரா விடுதல்இனிதே,

புலவர்தம் வாய்மொழி போற்றல்இனிதே,

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்குஎல்லாம்

தகுதியால் வாழ்தல்இனிது!'

தீயவர்களை நெருங்காமலிருக்கவேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன? நெருங்கினால் என்ன ஆகும்?

மின்சாரக் கம்பியின்மீது ‘தொடாதே’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொட்டுத் தெரிந்துகொள்வேன் என்று சொல்வது ஒருவிதம். இதற்குமுன் யாரோ தொட்டுத் தெரிந்துகொண்டதை மதிப்பேன் என்று சொல்வது இன்னொருவிதம். தீயவர்களை நெருங்காதே என்கிற அறிவுரை அப்படிப்பட்டதுதான்.

தீயவர்கள் எப்படி இருப்பார்கள்? சினிமாவில் வருவதுபோல் வில்லன் வேஷத்தோடு இருப்பார்களா?

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது அவர்கள் விஷயத்தில் உண்மையில்லை என்கிறார் திருவள்ளுவர். ‘முகத்தில் சிரிப்பு இருக்கும், ஆனால் உள்ளே கெட்ட எண்ணம்தான். அத்தகைய வஞ்சர்களைக் கண்டு அஞ்சி விலகிவிடுங்கள்.'

‘முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப்படும்.'

திருவருட்பாவில் வள்ளலாரின் கோரிக்கை இது:

‘மனம்மெலியாமல், பிணிஅடையாமல், வஞ்சகர்தமை மருவாமல்,

சினம்நிலையாமல், உடல்சலியாமல் சிறியனேன்உற மகிழ்ந்துஅருள்வாய்.'

முதலில், மனம் தளரக்கூடாது. அது தளர்ந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட உடல் இருந்தாலும் தொடர்ந்து பணிசெய்ய இயலாது, வெற்றியும் வராது. ஆகவே, மனம்மெலியாமல் இருக்கவேண்டும் என்று கேட்கிறார்.

அதற்காக, உடலை விட்டுவிட இயலுமா? அதுவும் பிணியில்லாமல் இருந்தால்தான் நம் வேலைகளைக் கவனிக்கலாம். ஆகவே, நோய்கள் தாக்காமல் இருக்கவேண்டும், உடல் சலிக்காமலிருக்கவேண்டும் என்கிறார்.

இந்த இரண்டும் இருந்தாலும், தவறான நண்பர் கூட்டம் அமைந்துவிட்டால், நாம் எதையும் உருப்படியாகச் செய்வோமா என்பது சந்தேகம்தான். ஆகவே, ‘வஞ்சகர்களைச் சேராமல்’ இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார், இதன் பொருள், நம் கனவுகளை ஊக்குவிக்கிற, நாம் மேலும் சிறப்பாகச் செயல்படச்செய்கிற நல்லவர்களைச் சேரவேண்டும்.

அடுத்து, ‘சினம்நிலையாமல்’ என்கிறார், எத்தனை அழகான பயன்பாடு!

‘சினம்வராமல்’ என்றால், கோபமே வரக்கூடாது என்று பொருள். அது சிலருக்குச் சாத்தியம், பலருக்குச் சாத்தியமில்லை. ஆகவே, சினம் வந்தாலும், அது நிலைக்காமல் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளலார்.

நாலடியாரில் ஒரு பாடல், யார் யாருக்கு வருகிற கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று விவரிக்கிறது.

தண்ணீரைச் சுடவைக்கிறோம், அது கொதிக்கிறது. அடுப்பை அணைத்துவிடுகிறோம். அந்தத் தண்ணீர் ஆறிப்போய்ப் பழையபடி மாறிவிடுகிறது.

அதுபோல, சான்றோருக்குக் கோபம் வந்தாலும், அது தானே தணிந்துவிடுமாம். வள்ளலார் ‘சினம்நிலையாமல்’ என்று சொன்னதுபோல.

மற்றவர்களுக்குக் கோபம் வந்தால், தீராது, அப்படியே மனத்தில் இருக்கும்:

‘நெடும்காலம் ஓடினும் நீசர் வெகுளி,

கெடும்காலம் இன்றிப் பரக்கும், அடும்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்.'

இதையே ‘மூதுரை’யில் ஔவையாரும் சொல்கிறார். ஆச்சர்யமான விஷயம், அவரும் தண்ணீரைதான் உவமையாகப் பயன்படுத்துகிறார்.

சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேரமாட்டார்கள், கல் உடைந்ததைப்போல.

சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேர்ந்துவிடுவார்கள், தங்கம் உடைந்ததைப்போல, உருக்கி ஒட்டவைத்துவிடலாம்.

ஆனால், சான்றோரின் கோபம், வில்லை எடுத்துத் தண்ணீரில் அம்பு எய்தாற்போன்றது என்கிறார் ஔவையார்.

தண்ணீரில் அம்பை எய்தால், ஒரு நொடி தண்ணீர் விலகும், மறுநொடி சேர்ந்துவிடும், பழையபடி தண்ணீர் ஓடும். அதுபோல, சான்றோர் கோபத்தைச் சட்டென்று மறந்து பழையபடி பழகுவார்கள்.

‘கற்பிளவோடு ஒப்பர் கயவர், கடும்சினத்துப்

பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே, வில்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே,

சீர்ஒழுகும் சான்றோர் சினம்.'

இவ்வளவு ஏன், ஔவையார் ‘ஆத்திசூடி’யில் ‘ஆறுவது சினம்’ என்று சொன்னது எல்லாருக்கும் தெரியுமே. கோபப்படலாம், ஆனால் அந்தக் கோபம் ஆறிவிடவேண்டும், எப்போதும் இருக்கக்கூடாது.

கோபம் வந்தவுடன் ஆறிவிட்டால் அதனால் என்ன பிரயோஜனம்?

வந்தவுடன் ஆறவேண்டும் என்று அவசியமில்லை, கோபத்துக்குக் காரணமான விஷயம் சரியானவுடன் ஆறினால் போதும்.

ஒருவர் ஏதோ தவறு செய்கிறார். இன்னொருவருக்கு அவர்மேல் கோபம்.

உடனே, தவறு செய்தவர் அதைத் திருத்திக்கொண்டுவிடுகிறார். இப்போது, கோபம் கொண்டவர் அந்தக் கோபத்தை விடுவதுதான் முறை. ‘நீ அப்போ தப்புச் செஞ்சியே’ என்று முறைத்துக்கொண்டிருப்பதால் பலன் இல்லை. வந்த சினம், அதன் தேவை தீர்ந்ததும் ஆறவேண்டும்.

ஆக, கோபம் என்பது தவறில்லை, அது தணியாமல் இருப்பதுதான் தவறு.

சரியான நேரத்தில் கோபம் வரவேண்டும், ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்பதுபோல்தான் அதுவும், ’ரௌத்திரம் பழகு’ என்றார் பாரதியார். குணம் என்கிற குன்றின்மீது ஏறி நிற்பவர்களுக்கும் கோபம் வரும் என்றார் வள்ளுவர்.

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்கள். அதுபோல, இந்தக் குணக்குன்றானவர்கள் அவசியமான காரணங்களுக்காகக் கோபப்பட்டால், எதிரே நிற்பவர்களால் ஒரு கணம்கூட அதைத் தாங்க இயலாது!

valluvar.jpg 

‘குணம்என்னும் குன்றுஏறி நின்றார், வெகுளி

கணமேயும் காத்தல் அரிது!’

கோபப்படவேண்டியவற்றுக்குக் கோபப்படலாம். அதற்காக எப்போதும் கோபப்பட்டுக்கொண்டிருந்தால், உறவுகள் கெட்டுப்போகும். ஒருவேளை நம்பக்கம் நியாயமே இருந்தாலும்கூட, அதைச் சொல்லும்விதத்தில் சொல்கிற பக்குவம் கோபத்தோடு பொருந்தாது, கண்மண் தெரியாமல் எதையாவது பேசிவிட்டுப் பிறகு வருத்தப்படுவோம்.

ஆங்கிலத்தில் ‘Winning a battle, but losing the war’ என்பார்கள். சிறு சண்டையில் வெல்வது, பெரிய போரைக் கோட்டை விடுவது. கோபமும் அப்படிதான், உடனடி வெற்றியைத் தரும், ஆனால் தொலைநோக்கோடு பார்த்தால், நாம் கோபப்பட்டுப் பேசிய நபரோடு அதேபோல் நம்மால் உரையாடவே இயலாது. இது எப்பேர்ப்பட்ட வருத்தம்!

ஒரு பையன் எல்லாரிடமும் கோபப்படுவான். பிறகு சட்டென்று புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்பான்.

அவனுடைய தந்தைக்கு அவனை எண்ணி மிகவும் கவலை, ‘இப்படி எதுக்கெடுத்தாலும் கோவப்படாதே’ என்று அறிவுரை சொன்னார்.

‘அதான் அப்புறமா மன்னிப்புக் கேட்டுடறேனே’ என்றான் மகன்.

தந்தை கேட்டார், ‘மன்னிப்புக் கேட்டா ஆச்சா?'

‘வேற என்ன செய்யணும்?'

‘கோவப்படாம இருக்கணும்.'

‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று மகன் முறைத்தான். அவனுக்கு விஷயத்தை ப்ராக்டிகலாக விளக்கத் தீர்மானித்தார் தந்தை. மரக்கட்டை ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார், நூறு ஆணிகள், ஒரு சுத்தியலையும் கொடுத்து, ‘இஷ்டம்போல எங்க வேணும்ன்னாலும் அடிச்சுக்கோ’ என்றார்.

பையனும் ஆணிகளை அடித்துவிட்டான். ‘அடுத்து என்ன செய்யணும்?'

இப்போது, அதே சுத்தியலின் பின்பகுதியை வைத்து, அந்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார் தந்தை. பையனும் பிடுங்கினான்.

அந்தக் கட்டையைக் காட்டித் தந்தை சொன்னார், ‘ஆணி அடிச்சே, உடனே பிடுங்கிட்டே, சரியாப்போச்சா?’ என்றார்.

‘அதெப்படி? கட்டையில இத்தனை ஓட்டை விழுந்திருக்கே!'

‘அந்தமாதிரிதான் நீ கேட்கிற மன்னிப்பும்’ என்றார் தந்தை, ‘அது ஆணியைப் பிடுங்கும், ஓட்டையை அடைக்குமா? நீ ஒவ்வொருமுறை கோவப்படும்போதும் யார் மனசுலயோ ஓட்டை போடறே, அதை அடைக்கறது ரொம்பக் கஷ்டம்!'

இந்தக் கதையில் வரும் தந்தை சொல்லாத ஒரு விஷயம், அத்தனை ஆணிகளை அடிப்பதற்காக வீணாக்கிய ஆற்றல், அது திரும்பக் கிடைக்குமா?

வள்ளுவர் சினத்தைப்பற்றிப் பேசும்போது, ‘நிலத்தறைந்தான் கை’ என்கிறார். கோபத்தில் நிலத்தை அறைந்தால், நிலத்துக்கா வலிக்கும்? அறைந்தவனுக்குதானே வலிக்கும்? அதுபோலதான், பிறர்மீது கோபப்படுகிறவன் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கிறான்:

‘சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு,

நிலத்துஅறைந்தான் கை பிழையாதுஅற்று.'

கோபப்படுவதால் வீணாகும் ஆற்றல் ஒருபக்கமிருக்க, மன்னிப்புக் கேட்பதால் இன்னும் ஆற்றல் வீணாகும். எப்படிக் கேட்பது என்று தயங்கி, வெட்கப்பட்டு, அவர்களிடம் பேசி, அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தவித்து… ஒரு நொடியில் பேசிவிட்ட சொல்லுக்கு மன்னிப்புக் கேட்கப் பல நிமிடங்களும் மன உளைச்சலும் வீணாகும்.

அப்போதும், கோபத்துக்கு ஆளானவர்கள் அந்த மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்றால், சந்தேகம்தான். என்னதான் வாயால் சிரித்தாலும், சுடுசொல் மனத்தில் நிற்குமே! வள்ளுவர் சொன்னதுபோல்,

‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே

நாவினால் சுட்ட வடு!'

சிலர் மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள், மன்னிப்பே கேட்காவிட்டாலும் ஏற்றுக்கொள்வார்கள், அவர்களுக்கு நல்லதையே செய்வார்கள். இதையும் திருவள்ளுவர் சொல்கிறார்:

‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்,

என்ன பயத்ததோ சால்பு!'

நமக்கு ஒருவன் தவறு செய்துவிட்டான் என்றால், அவனுக்குக்கூட நல்லதையே செய்யவேண்டும், அதுதான் நல்ல பண்பு.

ஆகவே, நம் கோபத்துக்கு, அதனால் அவர்கள் மனத்தில் ஏற்படுத்திய காயத்துக்கு மன்னிப்புக் கேட்கத் தயங்கவேண்டியதில்லை, ஏற்றுக்கொள்வது அவர்கள் பெருந்தன்மை, கேட்கவேண்டியது நம் கடமை.

இப்படித் தயங்கித் தயங்கி மன்னிப்புக் கேட்கிறவர்கள்கூடப் பரவாயில்லை, சிலர் ‘மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை’ என்பார்கள், ‘இந்த விஷயத்துல என்மேல தப்பு இல்லையே, நான் ஏன் மன்னிப்புக் கேட்கணும்?’

தான் தவறே செய்யாவிட்டாலும், தவறுசெய்தவர்மீது கோபப்பட்டது ஒரு தப்புதான், அதற்காக மன்னிப்புக் கேட்கலாமே, முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், எதிரில் உள்ளவன் உங்கள் எதிரி அல்ல, அந்தக் கோபம்தான் உங்கள் எதிரி!

இதுவும் திருக்குறள்தான்:

‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற?'

சிரிப்பையும் மகிழ்ச்சியையும் சினம் கொன்றுவிடும், அந்தப் பகை நமக்கு வேண்டாமே.

அவ்வளவு ஏன், கோபப்படுகிறவர்களுடைய வீட்டு வாசல்படியையே மிதிக்காதீர்கள் என்கிறார் உலகநாதர். அவருடைய ‘உலகநீதி’யிலிருந்து ஒரு பாடல்:

‘சினம்தேடி, அல்லலையும் தேடவேண்டாம்,

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல்வேண்டாம்.’

கவனியுங்கள், ‘நம்மீது கோபப்படுகிறவர்கள் வீட்டு வாசலை மிதிக்காதீர்கள்’ என்று பாடலில் இல்லை. அவர்கள் யார்மீது கோபப்பட்டாலும் சரி, அவர்களைவிட்டுச் சற்று விலகியே இருங்கள்!

நியாயமான காரணங்களுக்காக ஒருவேளை கோபப்பட்டாலும், யார்மீது கோபப்படுகிறோம் என்பதைக் கவனிக்கவேண்டும்.

’எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?’ என்ற பழமொழி உண்டு. அம்பு தைத்துவிட்டது என்றால், அம்பின்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? எய்தவன் அல்லவா அதற்குக் காரணம்?

அம்பின்மீது நாம் கோபப்படுவது ஏன் என்றால், மேலோட்டமான பார்வைக்கு அதுதான் தெரிகிறது. ஆகவே, ‘இந்த அம்பை ஒடிச்சுப் போட்டுட்டா பிரச்னை சரியாகிடும்’ என்றே தோன்றுகிறது. எய்தவனிடம் இன்னும் பல அம்புகள் இருப்பது தெரிவதில்லை.

அலுவலகமொழியில் இதனை ‘Root Cause Analysis' என்பார்கள், மூலகாரணம் எது என்று தேடிக் கண்டுபிடித்தல், அதன்பிறகு, அதைத் தாக்குதல், கண்ணுக்குத் தென்படுகிற முதல் விஷயத்தை அல்ல.

‘நீதிநூல்’ என்ற தொகுப்பில் வேதநாயகம்பிள்ளை எழுதிய ஒரு பாடல்:

‘பைதலே எய்தல் ஆதிப்பரன்செயலாம், அப்பைதல்

செய்தவர் தமைச் சினத்தல் சினவரா, தன்மேல் கல்லைப்

பெய்தவன்தனை விட்டு அக்கல் பிளந்திடப் பொரலும், கையால்

எய்தவன்தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ!’

நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால், அந்தக் கஷ்டத்தைத் தந்தவன்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? அவனால் அதற்குக் காரணம்?

உங்கள்மீது ஒரு கல் வந்து விழுந்தால், அந்தக் கல்லைப் பிளந்து பழிதீர்த்துக்கொள்வீர்களா? எவனோ உங்கள்மீது அம்பு எய்தால், அந்த அம்பின்மேல் கோபப்படுவீர்களா?

அதுபோல நமக்கு வரும் கஷ்டத்துக்கும் இன்பத்துக்கும் இறைவன் பொறுப்பு. மற்றவர்கள் என்ன செய்தாலும் அவர்கள்மீது கோபம் வேண்டாம்.

சுருக்கமாகச் சொன்னால், யார்மீதும் கோபப்படாதீர்கள் என்கிறார் வேதநாயகம்பிள்ளை.

இந்தத் தத்துவமெல்லாம் நமக்குச் சரிப்படுமா? யாராவது ஒரு தவறு செய்தால் அவர்கள்மேல் கோபம் வருகிறது, என்ன செய்யலாம்?

குறைந்தபட்சம், அதை உடனே காட்டாமல் உள்ளே வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் திருவள்ளுவர். அறிவுள்ளவர்கள் அப்படிதான் செய்வார்களாம்.

கோபம் என்பதே வெளிப்படையாகக் காட்டுவதற்குதானே? அதை உள்ளே வைத்துக்கொண்டிருந்து என்ன பிரயோஜனம்?

ஒருவர் நமக்குக் கெடுதல் செய்த அந்தக் கணத்திலேயே அவர்கள்மீது கோபப்படுவது புத்திசாலித்தனம் இல்லை. அப்போது சூழல் நமக்குச் சாதகமாக இல்லாமலிருக்கலாம். அல்லது, உண்மையிலேயே நம்மீது தவறு இருக்கலாம்.

ஆகவே, அந்தக் கோபத்தை உள்ளே வைத்துக்கொள்ளவேண்டும், அதைத் தீர்க்க என்ன செய்வது என்று யோசிக்கவேண்டும், சரியான தருணத்தில் அதைத் தீர்த்துக்கொள்ளவேண்டும்.

இதன் அர்த்தம் என்ன?

வாத்தியார் ஒரு பையனைத் திட்டுகிறார், ‘பரீட்சைல ஃபெயிலாகியிருக்கியே, உனக்கு வெக்கமில்லையா? நீயெல்லாம் எதுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர்றே?’

பையனுக்குக் கோபம். ஆனால், அதைக் காட்ட இயலுமா? வாத்தியார் பின்னிவிடுவாரே.

ஆகவே, கோபத்தை உள்ளே வைத்துக்கொள்கிறான், யாருக்கும் தெரியாமல் வாத்தியாரின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கிவிட்டுவிடுகிறான். கேட்டால், ‘கோபத்தை உள்ளே வெச்சுக்கோ, சரியான நேரத்துல பயன்படுத்து-ன்னு திருவள்ளுவர்தான் சொன்னார்’ என்கிறான்.

‘கோபத்தை உள்ளே வெச்சுக்கோ’ என்று திருவள்ளுவர் சொல்வதன் நோக்கம் இதுவாக இருக்காது என்று தோன்றுகிறது.

இந்தக் குறள் ‘காலம் அறிதல்’ என்ற அதிகாரத்தில் வருகிறது. அதாவது, நேரம் பார்த்துச் செயல்படுதல்.

வாத்தியார் ‘ஏண்டா ஃபெயிலானே?’ என்று திட்டும்போது, மாணவன் வெளிப்படையாகக் கோபப்பட இயலுமா? அது கோபத்துக்கு ஏற்ற நேரமா?

அவன் நிஜமாகவே தேர்வில் தோல்வியடைந்திருக்கிறான். அதைதான் அவர் சொல்கிறார். ஆகவே, கோபத்தைக் காட்டும் நேரம் அதுவல்ல.

அந்தக் கோபத்தை உள்ளே வைத்துக்கொண்டு நன்றாகப் படிக்கவேண்டும், அடுத்த தேர்வில் வெற்றியடையவேண்டும், அப்போது அவர் முன்னே சென்று, ‘அன்னிக்கு என்னவோ திட்டினீங்களே, இந்த மார்க் போதுமா? இன்னும் வேணுமா?’ என்று கேட்கவேண்டும். அன்றைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம்.

இங்கே அந்த மாணவனுக்கு ஆசிரியர்மீது உள்ள கோபம், சரியானது. ஆனால் அந்தக் கோபம் அவரை அடிக்கவேண்டும், அவருடைய பொருள்களுக்குச் சேதம் விளைவிக்கவேண்டும் என்று செல்லாமல், அவர்முன்னே வெல்லவேண்டும் என்கிற திசையில் சென்று நன்மை தந்திருக்கிறது.

‘பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.’

ஆனால், எல்லா மாணவர்களுமா இப்படி இருந்துவிடுகிறார்கள்? யாராவது ஒரு பையன் வாத்தியார் திட்டினார் என்று அவர்மீது கோபப்பட்டு அவரை அடிக்கக் கிளம்பிவிட்டால்?

‘பிரச்னையில்லை, நீங்கள் நல்லவராக இருந்தால், மற்றவர்கள் கோபம் உங்களைப் பாதிக்காது’ என்கிறது நாலடியார்.

‘என்னங்க சொல்றீங்க? அவன் பார்க்கறதுக்குப் பெரிய முரடனா இருக்கான், வாத்தியார் நோஞ்சானா இருக்காரே, அவன் அடிச்சா இவர் என்ன ஆவார்?’

‘கவலை வேண்டாம், கலப்பை வயலை உழும், ஆனால் அங்கே இருக்கிற புல்லை அதனால் எதுவும் செய்ய இயலாது, அதுபோலதான் நல்லவர்கள்மீது கெட்டவர்கள் காட்டும் கோபமும்!’

‘கொல்லை இரும்புனத்துக் குற்றியடைந்த புல்

ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு,

மெல்லியரே ஆயினும், நற்சார்வு சார்ந்தார்மேல்

செல்லாவாம் செறார் சினம்!’

(தொடரும்)

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-4

By என். சொக்கன்

First Published : 19 September 2015 10:00 AM IST

 

 

பெருநகரங்களின் எல்லா மூலைகளையும் கடன் தருவோர் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

வீடு வாங்கக் கடன், வாகனம் வாங்கக் கடன், படிக்கக் கடன், கல்யாணம் செய்துகொள்ளக் கடன், ஊர் சுற்றிப்பார்க்கக் கடன், வீட்டு உபயோகப்பொருள்களை வாங்கக் கடன்... அனைத்துக்கும் கடன் கிடைக்கும், வங்கிக்குள் கால் வைத்தால் போதும்.

மேல்நாட்டிலிருந்து இங்கே வந்திருக்கும் இந்தக் கடன் கலாசாரத்தை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள்?

'தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,

வேளாளன் என்பான் விருந்துஇருக்க உண்ணாதான்,

கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது!'

திரிகடுகம் நூலில் வரும் பாடல் இது. நல்லாதனார் இயற்றியது.

'தாளாளன்' என்றால், ஊக்கமுள்ளவன் என்று பொருள். அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கடன் வாங்காமல் வாழ்வார்கள்.

அடுத்து, வேளாளன், அதாவது, உழவன், இல்லையா?

ம்ஹூம். வேளாளன் என்றால், வேள்+ஆளன், 'வேள்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு, இங்கே அருள் செய்பவன், உதவி செய்பவன் என்ற பொருள். அப்படிப்பட்டவன் வீட்டில் விருந்தினர் இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டுத் தான் உண்ணமாட்டான்.

மூன்றாவது, கோளாளன், அதாவது, பல விஷயங்களை மனத்தில் கொண்டு சிந்திக்கிறவன் தான் கேட்டவற்றை மறக்கமாட்டான். இந்த மூவருக்கும் உறவாக இருப்பது இனியது!

‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற வாசகம் மிகவும் பிரபலம். ஆனால், அது கம்பர் எழுதியதல்ல, வேறொருவர் எழுதிய தனிப்பாடல் வரி.

ஆக, கடன் வாங்குவது சிரமம் தரும், கடனின்றி வாழ்வதே சிறப்பு.

ஆனால், ஒரே ஒரு சூழலில் கடன் வாங்கலாம் என்கிறது பழமொழி நானூறு. எப்போது?

ஒருவர் பெரிய வள்ளல். வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறவர், அவர்களுடைய முகம் மலர்வதைக் கண்டு மகிழ்கிறவர்.

அவருடைய வீட்டுக்குத் தினமும் வறியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள், பலவிதமான உதவிகளைப் பெற்றுச் செல்வார்கள்.

ஒருகட்டத்தில், அவருடைய செல்வமெல்லாம் தீர்ந்துவிட்டது. இனிமேல் வருகிறவர்களுக்குத் தருவதற்கு எதுவும் இல்லை.

இப்போது, அவர் என்ன நினைக்கவேண்டும்? ‘பின்னால் வசதி வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று உதவி செய்வதை நிறுத்திவிடவேண்டுமா?

இல்லை, கடன் வாங்கியேனும் செய்த உதவியைத் தொடரவேண்டும் என்கிறார் முன்றுரையரையனார்:

‘அடர்ந்து வறியராய் ஆற்றாதபோழ்தும்

இடம்கண்டு அறிவாம் என்றுஎண்ணி இராஅர்

மடம்கொண்ட சாயல் மயில்அன்னாய், சான்றோர்

கடம்கொண்டும் செய்வார் கடன்.'

 

3303.jpg  

 

இந்தப் பாடலில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, ‘கடன் வாங்கியாவது கடனைச் செய்யவேண்டும்’. அதென்ன இரண்டு கடன்?

தமிழில் கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்ற பொருள் உண்டு. சொல்லப்போனால், வங்கிக் கடன் என்பதுகூட, திருப்பிச் செலுத்தவேண்டிய கடமைதானே?

தன்னை நம்பி வருகிற வறியவர்களுக்கு உதவுவது ஒருவருடைய கடமை (கடன்), அதைச் செய்வதற்காக அவர் பிறரிடம் கடன் பெறுகிறார்.

ஆனால், இப்படிச் செய்தால் ஏமாந்துபோவோமே என்று யோசித்தால், அதற்கும் ஒரு முன்னோர் வாசகம் இருக்கிறது, ‘தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்.'

குழப்புகிறதே, கடன் வாங்கலாமா, கூடாதா?

ஒரு நல்ல விஷயம் நடப்பதற்குப் பணம் தடையாக உள்ளபோது, பின்னர் நம்மால் அதைத் திருப்பித்தர இயலும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், கடன் வாங்கலாம். மற்றபடி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சக்திக்கு மீறிக் கடன் வாங்கும் பழக்கம் ஆபத்தையே தரும். இதை நாம் கண்ணெதிரே பார்க்கிறோம்.

சரி, யாராவது கடன் கேட்டால் கொடுக்கலாமா?

அதற்கு, இதே விதிமுறையைத் திருப்பிப்போடவேண்டும்: அவர்கள் கடனைத் திருப்பித் தருவார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் தரலாம், அதைக் கொண்டு அவர்கள் ஒரு நல்ல விஷயத்தைச் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தால் தரலாம்.

ஆனால், அப்படித் தந்துவிட்டுச் சும்மா இருந்துவிடக்கூடாது. ‘அவர்களே திரும்பத் தருவார்கள்’ என்று நினைக்கக்கூடாது, ‘எப்படிக் கேட்பது?’ என்று தயங்கக்கூடாது, அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கடன் நேரத்துக்குத் திரும்பி வரும்.

இதைக் குறிப்பிடும் அழகான பழமொழி வாசகம் ஒன்று, ‘கேளாது கெட்டது கடன்’. அதாவது, ‘எப்போது திரும்பத் தருவாய்?’ என்று கேட்கக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தால், கடன் திரும்பி வராது.

பணக்கடன் இருக்கட்டும், மற்ற கடன்களைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

புறநானூறில் பொன்முடியார் எழுதிய அழகான இந்தப் பாடல் பலவிதமான கடன்களைப் பட்டியலிடுகிறது:

‘ஈன்று புறம்தருதல் என்தலைக் கடனே,

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,

நல்நடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறுவாள் அரும்சமம் உருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’

ஒரு வீரனுடைய தாய் சொல்கிறாள்:

குழந்தையைப் பெற்றுப் பாதுகாத்து வளர்ப்பது என்னுடைய கடமை.

அவனுக்கு உரிய பண்புகளைச் சொல்லித்தந்து சான்றோனாக ஆக்குவது அவன் தந்தையின் கடமை.

இங்கே சான்றோன் என்ற சொல்லுக்குச் சிறந்தவன்/அறிஞன் என்பதுபோன்ற பொருள்களை எடுத்துக்கொள்ளாமல், வீரன் என்ற பொருளைக் கொண்டு வாசிப்பது சிறப்பு. காரணம், அடுத்த வரி: போருக்கு ஏற்ற நல்ல வேலை வடித்துக்கொடுப்பது கொல்லருடைய கடமை. ஆக, அந்த வேலை வைத்து அவன் போர் செய்வதற்கான கலையைச் சொல்லித்தரவேண்டியது தந்தையின் கடமையாகிறது.

ஒருவன் என்னதான் வீரனாக இருந்தாலும், அவன் வேலை பார்க்கிற மன்னன் சரியாக இல்லையென்றால், கெட்ட நோக்கத்துக்குத் துணைபோகிறவனாகிவிடுவான். ஆகவே, அவன் நல்லவழியில் நடப்பதை உறுதிசெய்யவேண்டியது, அந்நாட்டை ஆளும் அரசனின் கடமை.

அதே புறநானூறில் மோசிகீரனாரின் பாடல் அரசனின் கடமையை விளக்கமாகச் சொல்கிறது:

‘நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர்அன்றே,

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,

அதனால், யான்உயிர் என்பது அறிகை

வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே.’

ஒரு நாட்டைக் காப்பாற்றுவது என்ன? அவர்கள் சாப்பிடும் உணவா? அல்லது, அவர்கள் குடிக்கும் நீரா?

இதெல்லாம் இல்லை, மன்னன்தான் நாட்டுக்கு உயிர். இதனை உணர்ந்துகொள்ளவேண்டியது அந்த மன்னனின் கடமை. அப்படி உணர்ந்துகொண்டால், அவன் தவறான வழியில் நடக்கமாட்டான், தனக்குக் கீழே உள்ளவர்களையும் தவறாக நடத்தமாட்டான்.

ஒருவேளை, மன்னனோ பிறரோ நம்மைத் தவறான வழியில் நடத்தினால்?

பிரச்னையில்லை, நம்மிடம் ஞானம் இருந்தால் போதும், எந்தத் தடுமாற்றங்களும் இல்லாமல் நல்வழியில்மட்டுமே செல்வோம்.

அதனால், மயக்கங்களில் சிக்காமல் தன்னைக் காக்கவேண்டியது தெய்வத்தின் கடமை என்கிறார் வள்ளலார்:

‘நாயகா, எனது மயக்குஎலாம் தவிர்த்தே

நன்றுஅருள் புரிவது உன் கடனே!’

ஆக, தாய், தந்தை, கொல்லன், அரசன் (அல்லது, தெய்வம்) என இத்தனை பேரும் தங்கள் கடமையை  ஒழுங்காகச் செய்தால், என் மகன் வீரனாவான், அவனுடைய கடமை, போர்க்களத்தில் எதிரியின் யானையைக் கொன்று வெற்றியோடு மீண்டுவருதல்!

இந்தப் பாடல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமா?

பிள்ளையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய்க்கு, அவனுக்குக் கலை கற்றுத்தரும் பொறுப்பு தந்தைக்கு என்கிற பிரிவின இப்போது இல்லை, அப்பொறுப்புகளை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆகவே, முதல் இரு வரிகளைப் ‘பெற்றோர் கடமை’ என்று வரையறுக்கலாம்.

அடுத்து, கொல்லன், அதாவது, பெற்றோரால் நன்கு வளர்க்கப்பட்ட பையனோ பெண்ணோ தன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கான கருவியை, சூழ்நிலையை உருவாக்கித்தரும் சமூகம். அதன் கடமை, இளைஞர்கள் நன்கு செயலாற்றுவதற்கு வேண்டியவற்றைத் தருவது.

இப்படி நல்ல வளர்ப்பு, கருவிகளைக் கொண்டு திறமையாளனாக வளரும் ஒருவன், யாருக்காகப் பணிபுரிகிறானோ, அவர்கள் அவனைச் சரியாக வழிநடத்தவேண்டும். அல்லது, அவன் தன்னைத்தானே நல்ல பாதையில் வழிநடத்திக்கொள்ளவேண்டும்.

நிறைவாக, இந்த அனைவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தபின், தான் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி, அதுவும் பெரிய வெற்றி அடையவேண்டும், எலியைக் கொல்வது அல்ல, யானையை வெல்வதுதான் பெரிய வெற்றி. அந்தக் கடமை ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கவேண்டும். போர் வீரருக்குமட்டுமல்ல, அனைவருக்கும் இது பொருந்தும்.

இங்கே வெற்றி என்பதுகூட கொஞ்சம் வலியச் சொல்வதுதான், ’கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்கிறது கீதை, பாரதியார் அதை அழகாக எழுதுகிறார்:

‘அறம்

செய்தல்உன் கடனே, அதில்

எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே!’

இதனைக் கொஞ்சம் மாற்றி ஒரு பாடலில் எழுதுகிறார் புலமைப்பித்தன், ‘கடமையைச் செய், ஆனால், அதன்பிறகு சும்மா அமர்ந்திருக்காதே, உனக்கு உரிமையானதைக் கேட்டுப் பெற்றுக்கொள்!’

‘கடமைசெய்வோம் கலங்காமலே,

உரிமைகேட்போம் தயங்காமலே!’

உரிமை கேட்பது புரட்சிச்சிந்தனை, எல்லாம் உடையவன் பார்த்துக்கொள்வான் என்பது ஆன்மிகச்சிந்தனை. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘கடமை’ என்பதற்கான வரையறைகள் சற்றே மாறுகின்றன.

உதாரணமாக, முனைப்பாடியர் எழுதிய ‘அறநெறிச்சாரம்’ என்ற நூலில் ஒரு வரி: ‘பெரும்பயன் கொள்வதே கற்றுஅறிந்த மாந்தர் கடன்.'

எல்லாவற்றையும் வாசித்து அறிந்தவர்களுடைய கடமை, பெரும்பயனுக்குரிய வேலைகளைச் செய்வது. அதாவது, உடலைமட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல், இந்த உடல் மீண்டும் பிறக்காதபடி இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும்!

‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பார் திருநாவுக்கரசர்.

பணிசெய்வது சரி, ஆனால், யாருக்கு?

‘இறைவனுடைய கடமை, அடியவர்களைத் தாங்குவது, அடியவனாகிய என்னுடைய கடமை, அவனுக்கும், அவனது அடியவர்களுக்கும் பணிசெய்வது’ என்கிறார் திருநாவுக்கரசர்.

இதைச் சற்றே நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லாருமே பிறருக்கு உதவுவதற்காகதான் இங்கே பிறந்திருக்கிறோம் என்பார்கள். சுயநலமின்றி தெய்வத்துக்கு, குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு, நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாருக்கும் பணிவிடை செய்வதே நம் கடமை என்று ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எத்துணை அழகாகிவிடும்!

சேக்கிழார் பெரியபுராணத்தில், ‘தருமம்தன் வழிச்செல்கை கடன்’ என்கிறார். அறநெறியில் செல்லுதலே ஒருவருடைய கடமை.

இவையெல்லாம் பொதுக்கடமைகள், ஆணுக்கென்று ஒரு கடமை இருக்கிறது, தன் குடும்பத்துக்காகப் பொருள் சேர்த்தல். இதனைத் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஒரு பாடலில் கணிமேதாவியார் குறிப்பிடுகிறார்:

‘ஆண்கடனாம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப்

பூண்கடனாப் போற்றி புரிந்தமையால், பூண்கடனாச்

செய்பொருட்குச் செல்வரால், சின்மொழி, நீசிறிது

நைபொருட்கண் செல்லாமை நன்று.’

ஆண்களுடைய கடமை என்ன என்று ஆராய்ந்தால், பொருள் தேடுவதுதான். அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கச் செல்வார்கள்.

அப்படியானால் பெண்ணின் கடமை என்ன?

அது அடுத்த வரியில் வருகிறது: கணவன் பிரிந்து செல்கிறானே என்று வருந்தாமல், அவன் தன் கடமையை ஆற்றுகிறான் என்று எண்ணிப் பொறுத்திருப்பது.

பொருள்சேர்த்தல் என்ற கடமை இப்போது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்துவதால், இந்த இரண்டாவது கடமையையும், அதாவது, பிரிவைப் பொறுத்துக்கொண்டு மற்றவர் தம் கடமையை ஆற்ற அனுமதிப்பதையும் பொதுவாக்கலாம்!

ஒரு திரைப்பாடலில் வாலி எழுதுவார்:

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: கடமை!’

என்ன கடமை? அதையும் அவரே பட்டியல் போடுகிறார்:

‘பதவி வரும்போது

பணிவு வரவேண்டும்,

துணிவும் வரவேண்டும்,

பாதை தவறாமல்,

பண்பு குறையாமல்,

பழகிவரவேண்டும்,

வாழை மலர்போல

பூமி முகம்பார்க்கும்

கோழை குணம் மாற்று,

கொள்கை நிறைவேற்று!’

ஆனால், இந்த வரிகளெல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸ் இல்லையா என்று இளைஞர்கள் கேட்பார்கள். கடமை ஏதும் இல்லாமல் ஆனந்தமாகத் திரியவேண்டிய வயது எங்களுடையது என்பார்கள்.

அந்த உணர்வுகளைக் கண்ணதாசன் அழகாகப் பாடினார்:

‘பணங்களைச் சேர்த்துப் பதுக்கிவைத்தால்,

அது மடமை,

பகவான் படைத்த பணமெல்லாம்,

பொது உடைமை,

கையில் கிடைப்பதை வீசி ரசிப்பதுதான்

என் கடமை,

அந்தப் பெருமை,

எந்தன் உரிமை!’

இந்த மனப்போக்குக்குப் பதில்சொல்வதுபோல் அமைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடலொன்று இருக்கிறது. ‘வாரி இறைப்பதா செல்வம்? திறமைதானே உண்மையான செல்வம்?’ என்று கேட்கிறார் அவர்:

‘செய்யும் தொழிலே தெய்வம், அந்தத்

திறமைதான் நமது செல்வம்,

கையும் காலுந்தான் உதவி, கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி!’

மேலாண்மை வகுப்புகளில் பதவியோடு கடமை, பொறுப்புகள் வரும், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்று விளக்குவார்கள். அதைப் பட்டுக்கோட்டையார் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்!

நாமக்கல் கவிஞரின் பாடலொன்றும் இதையே சொல்கிறது:

‘கடமை உணர்ந்தவனே,

உடமைக்குரியவனாம்!

கருணை சிறப்பதுவும்

கடமை தெரிவதனால்,

மடமை பெருகுவதும்

கடமை மறப்பதனால்!’

கடமையையும் கருணையையும் இணைக்கிறாரே, அதற்கு என்ன பொருள்? இதே பாடல் அதையும் விளக்குகிறது:

‘கடமைகள் புரிவதில் கருணையை மறவான்,

கருணைஎன்று அறநெறிக் கடமையைத் துறவான்.’

ஒருவன் தன்னுடைய கடமைகளைச் செய்துகொண்டிருக்கும்போது, அதனால் இன்னோர் உயிருக்குப் பாதிப்பு உண்டாகிறது என்றால், கருணையோடு நடந்துகொள்ளவேண்டும், அதேசமயம் தன்னுடைய கடமையையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டும்.

பேருந்து நடத்துநர் ஒருவர். தன்னுடைய பேருந்தில் வருகிற எல்லாருக்கும் பயணச்சீட்டு தந்து பணம் வசூலிக்கவேண்டியது அவருடைய கடமை.

ஒருநாள், அவருடைய பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறுகிறார். அவரிடம் பணம் இல்லை. பர்ஸைத் தொலைத்துவிட்டதாகச் சொல்கிறார்.

இப்போது, அந்த நடத்துநர் கடமைதான் முக்கியம் என்று அவரைக் கீழே இறக்கிவிடலாம். அல்லது, கருணையினால், பணம் வாங்காமல் அவரை அழைத்துச்செல்லலாம்.

ஒருவேளை, அப்படிச் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு இல்லாவிட்டால்?

அப்போது, கருணையினால் கடமையை மீறக்கூடாது. அந்த முதியவருக்கு அவரே தன் செலவில் பயணச்சீட்டு வாங்கலாம். அப்போது, கடமையும் பூர்த்தியாகிவிட்டது, கருணைக்கும் குறைவில்லை!

இதுபோன்ற சங்கடங்களைத் தனி நபர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் உணர்ந்திருக்க வேண்டும், அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

உதாரணமாக, ஒரு பள்ளியில் நூறு மாணவர்களுக்கு இடம் இருந்தால், அதில் இரண்டு இடங்கள் ஏழை மாணவர்களுக்குத் தரப்படலாம். இதனை அந்தப் பள்ளியே பகிரங்கமாக அறிவித்துவிட்டால், அங்கே பணிபுரிகிறவர்களுடைய கடமையில் கருணைக்கும் இடமிருக்கும்.

அவை இரண்டு இடங்களா இருபது இடங்களா என்பது அவரவர் மனத்தின் உயரத்தைப்பொறுத்தது!

(தொடரும்)

Edited by வந்தியதேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.