Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதியை மறுக்கும் இலங்கை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

நீதியை மறுக்கும் இலங்கை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

நீதியை மறுக்கும் இலங்கை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-



ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர், நீதியை எதிர்பார்த்த தமிழினத்திற்கு வழமைபோன்றதொரு கூட்டத் தொடராகவே நடந்து
முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐநா வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்தி என்பது  தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்க தயங்கும் செயற்பாடுகளின் பெறுபேறே. இலங்கை அரசு, நீதி, ஜனநாயகம், சமத்துவம், வெளிப்படைதன்மை, பொறுப்புக்கூறுதல் முதலியவற்றில் தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயற்பாடே. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் பலவற்றிலும் இலங்கையின் புதிய அரசு, பழைய அரசின் மனநிலையிலிருந்து வில மறுத்துள்ளமையும் இங்கு புலப்படுகிறது.

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த மாபெரும் இனப்படுகொலையை ஐ.நா மனித உரிமைப் பேரவை இம்முறையும் நீதியாக அனுகவில்லை. வெறுமனே போர்க்குற்றம் என்றும் மனித உரிமை மீறல் என்றும் இப் பிரச்சினையை அணுகும்வரையில் இலங்கையின் செற்பாடுகள் இப்படியே அமையப்போகின்றன. ஏற்கனவே ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி, அதில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பிலும் அவர்கள் அழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் தகவல்களைப் பெற்ற ஐ.நா அதன் உண்மையான கோரத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவதில் விலகியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசு குறித்து மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர், அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரனை வழங்கியது. தம்மால் அனுசரனை வழங்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தியது என்றால், அதற்கு ஏமாற்றம் தரக்கூடிய பதிலையே நடைமுறையில் காண முடிந்தது. முக்கியமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், சித்திரவதைகளும் கைதுகளும் தொடர்வதாக 32ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் தன் வாய்மொழிமூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காணிகளை மீளளித்தல், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கை அரசு போதைய முன்னேற்றத்தை அடையவில்லை என்றும் ஆணையாளரின் ஒன்பது பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு அகற்றுவதாக கூறியபோதும் அதனை இதுவரையில்  நீக்கவில்லை என்பதையும் அது தொடர்பில் அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மாட்டோம் என்றும் அதனை வேறு பெயரில் திருத்தப் போகிறோம் என்றும் அரசு கூறினாலும் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் கைது செய்யப்படும் நிலை நிலவுகிறது.

போர்க்காலத்திற்கு பிந்தைய நீதி, அரசியல் சட்ட சீர் திருத்தம், பாதுகாப்பு சீர்திருத்தம் என்பவற்றையும் மனித உரிமை பேரவை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச தரமான அரசியல் சட்டம் உருவாக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியதாகவும் அதனை நிறைவேற்றவில்லை என்றும் மனித உரிமை பேரவை ஆணையாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் அரசின் செயற்பாடு  மந்தமடைந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அடிப்படையான, ஏற்கனவே இருந்த அரசியல் அமைப்பினை திருத்தி உருவாக்கும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஆர்வம் காட்டுகிறது. அத்துடன் கருத்தறியும் அமர்வுகள் மூலம் வடகிழக்கில் தமிழ் மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்புக்கள் அதில் பலவும் கருத்தில் கொள்ளப்படாத நிலையும் உள்ளது.

இதேவேளை பாலியல் வன்முறைகள் தொடர்வதாகவும், இராணுவத்தினரின் கண்காணிப்பு மற்றும் தொந்தரவுகள் தொடர்வதாகவும் அவரது அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கான அரச கட்டமைப்புக்களும் நிறுவனப்பட்ட கலாசாரங்களும் அகற்றப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான மனப்போக்கை கொண்ட அரசியல் அமைப்பு மற்றும் பெரும்பான்மை மனப்போக்கு என்பன தொடர்ந்தும் பேணப்படும் வித்திலேயே இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும், அரசியல் கட்டமைப்பும், புதிய அரசியல் சட்டமுனைப்புக்களும் காணப்படுகின்றன. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அடிப்படை புள்ளியை தொட மறுப்பதுவே இந்தச் செயலாகும்.

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் அவற்றை மீளளிப்பதில் போதிய செயற்பாடு காணாது என்று மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடுகிறது. ஐ.நா மனித உரிமை பேரவையை எதிர்கொள்வதற்காக, குறிப்பிட்டளவு காணிகளை இலங்கை அரசு விடுவித்தாலும் இன்னொரு புறத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்குச் செயற்பாடும் தொடர்கிறது. வலி வடக்கில் காணிகளை விடுவித்தபடி முல்லைத்தீவில் அரசு காணிகளை அபகரிக்கிறது என்று வடக்கு மனித உரிமை அமைப்பு ஜெனீவாவில் தெரிவித்திருக்கிறது. இவ்வாறான அணுகுமுறைகள் பழைய மனநிலையை தந்திரமாக பேணும் செயற்பாடே ஆகும்.

இதேவேளை, கலப்பு விசாரணை ஒன்றை பரிந்துரைத்த, ஐ.நா தீர்மானத்தை அனுசரனை வழங்கி நிறைவேற்றிய இலங்கை சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறி வருகிறது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளக விசாரணையை வலியுறுத்திய ஒரு நிலைப்பாட்டுக்கே புதிய அரசும் வந்திருக்கிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உள்ளக விசாரணையை நிராகரித்து வருகிறார்கள். காலம் காலமாக தமிழருக்கான நீதி மறுக்கப்பட்ட இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் உள்ளக விசாரணை என்பன் மூலம் குற்றவாளிகளை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவே இலங்கையின் புதிய அரசும் முனைகிறது. தமிழ் மக்கள் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் கலப்பு விசாரணை ஒன்றுக்குகூட இலங்கை அரசு தயாரில்லை என்று கூறியிருப்பதும் இலங்கை அரசின் பழைய மனநிலையின் வெளிப்பாடே. இது பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் குரலுக்கு செவிசாய்க்க இலங்கை அரசு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அத்துடன் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினரின் நலன்களை கருத்தில் கொள்ளும் செயற்பாடு என்பது மீண்டும் மீண்டும் இன மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதாகவும் அதனை ஊக்குவிப்பதாகவுமே அமைகிறது.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மீண்டும் தனது வாய்மொழி மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி, வரலாறு முழுவதும் நடந்தது இனப்படுகொலை என்றும், அதனை தடுத்து நிறுத்தும் விதமாக சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என்றும் வலியுறுத்தி வரும் தமிழ் மக்களின் குரலுக்கு ஐ.நா எப்படிச் செவிசாய்க்கவில்லையோ, அப்படியே ஐ.நாவின் கலப்பு விசாரணைக்கு இலங்கையும் செவிசாய்யக்காமல் இருக்கிறது.

இலங்கையில் நிலவும் தீவிர இனப் பிரச்சினை தொடர்பிலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பிலும் வெளிப்படையான, உண்மையான, அவசியமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் இலங்கையும் ஐ.நாவும் ஒரு அணுகுமுறையையே கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே காணிகளை விடுவித்தல், இராணுவ குறைப்பு, புதிய அரசியல் சட்டம், நீதி விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் விவகாரம் என்று இனப்பிரச்சினையின் அடிப்படை விடயங்கள்அனைத்தையும் பழைய மனநிலையை மாறாத வித்தில், திருத்தப்படாத விதத்தில் இலங்கை அரசு கையாள்கிறது. இது, இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அழிக்கப்படவும், உரிமை மறுக்கப்படவும் தொடர்ந்தும் இடமளிக்கும் என்பதே கவலைக்குரியது.

போர் நடந்து ஏழு வருடங்கள். ஆட்சி மாறி இரண்டு வருடங்கள். இந் நிலையில் தன்னை சர்வதேச நெருக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சிறு சிறு திருத்தங்களையும் சிறு சிறு பேச்சுக்களையும் இலங்கை அரசு நிகழ்த்தியிருந்தாலும் உக்கிரமாயிருக்கும் தமிழர் பிரச்சினைகள் இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியபடியே இருக்கின்றன. பிரச்சினைகளுக்கான மூல வேர்களை கண்டறிவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதிலும் தான் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கும் வழிகள் திறபடும். ஆனால் நீதியை மறுத்து பிரச்சினையின் வேர்களை பாதுகாக்கும் செயலே அனைத்து மட்டத்திலும் மறைந்திருக்கிறது. இது இலங்கை தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயல். தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கி அவர்களின் தேசத்தை அங்கீகரித்து தன்னை புதுப்பிக்காத வகையிலேயே இலங்கை போக்கு காணப்படுகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133716/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.