Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? வாழ்வா …. சாவா….

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? வாழ்வா …. சாவா….

 

sampanthan.jpg?w=584

 

“அரசாங்கத்துக்கு பல பிரச்சினைகள் உண்டு. தனியே தமிழ் மக்களின் பிரச்சினையை மட்டும் அது பார்க்கவில்லை. நாடு முழுவதிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே அதற்குக் கால அவகாசம் கொடுக்க வேணும். நாங்கள் அதை அவசரப்படுத்த முடியாது. அவர்கள் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன் “நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்” என்றெல்லாம் அரசாங்கத்தின் மீதான தன்னுடைய அபரிதமான நம்பிக்கையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகிறார்.

அது மட்டுமல்ல எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தாலும் நடைமுறை அர்த்தத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரச ஆதரவுத்தரப்பாகவே செயற்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி என்ற அடையாளத்துக்குப் பதிலாக ஆளும் அரசாங்கத்துக்கு பிரியாணி போட்டுக்கொடுக்கின்ற தரப்பு என்றமாதிரியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதனுடைய தலைவர் சம்பந்தனையும் மக்கள் பார்க்கிறார்கள்.

இந்தப் பார்வை, தனியே தமிழ்மக்களிடம் மட்டும்தான் உண்டென்றில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களிடமும் உள்ளது.

குறிப்பாக, “அத்தியாவசிய நிலைகளில் கூட எல்லையற்ற விட்டுக்கொடுப்பை கூட்டமைப்புச் செய்கிறது. இது தேவைக்கதிகமான நெகிழ்ச்சியாகும். அரசாங்கத்தை வழிப்படுத்தி, அதனுடைய பொறுப்பை உணர்த்துவதற்குப் பதிலாக அதைப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கும் தவறான செயல். எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பையும் அடையாளத்தையும் இழக்கும் புதிய விரும்பத்தகாத பாரம்பரியம் இது” எனவே எதிர்க்கட்சியின் இந்த அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்பும் நெகிழ்ச்சியும் ஜனநாயகத்துக்கும் அரசியல் நடைமுறைகளுக்கும் பாதிப்பையே உண்டாக்கப்போகிறது என்று சொல்லுமளவுக்கு எதிர்க்கட்சி அளிப்பது அதிக இணக்கமாகும்.

கூட்டமைப்பின் இந்த நெகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை. இதனால்தான் மக்கள் பல்வேறு விதமாக ஊகங்களைக் கொண்டு அதன்மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆயினும் இத்தகைய எதிர்ப்புகள், விமர்சனங்களின் மத்தியில் எதற்காக சம்பந்தனின் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் உள்ளன என்பதை இந்தக்கட்டுரையில் இறுதிப்பகுதியில் நாம் பார்க்கலாம்.

அதற்கு முன்பாகச் சில விசயங்களைப் பார்ப்போம்.

எதிர்க்கட்சி என்ற ஸ்தானத்தில் இருந்தாலும் உண்மையில் எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை என்பது தொடக்கநிலை அவதானிப்பாகும். சம்பிரதாயப்படி எதிர்க்கட்சி – ஆளும் தரப்பு என எதிரெதிர் நிலைத் தோற்றத்திலிருந்தாலும் நடைமுறையில் எல்லாம் ஒருங்கிணைந்த கூட்டணியே. எனவேதான் இது ஒரு கூட்டரசாங்கம் எனப்படுகிறது. இதனால்தான் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் ஆளும்தரப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புச் செயற்படுகிறது.

இதற்கு உதாரணம், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இருப்பதும், முக்கியமான அரசியல் தீர்மானங்களின் போதெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரச ஆதரவு நிலைப்பாட்டை அனுசரிப்பதுமாகும்.

மேலும் சொல்வதென்றால், கடந்த அரசாங்கத்துக்குக் காட்டிய முகச்சுளிப்பை விடவும் இந்த மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்குக் காட்டும் புன்னகை. இது கூட்டமைப்பின் எதிர்ப்பரசியற் பாரம்பரியத்தின்படி கொஞ்சம் அதிகம்தான்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் இந்தப் புன்னகையும் அளவுக்கதிகமான நெகழ்ச்சியுமே தமிழ் மக்களுக்குப் பிரச்சினையாக உள்ளது. அதுவே அவர்களை எரிச்சலூட்டுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் முந்திய அரசாங்கமும் இந்த அரசாங்கமும் ஒன்றுதான்.

முந்திய அரசாங்கத்தினால் தங்களுக்கு இடைஞ்சலாகக் கருதப்பட்ட படையினரின் பிரசன்னம், மீள்குடியேற முடியாமை அல்லது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமை, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள், அரசியற்கைதிகளின் விடுதலைப்பிரச்சினைகள், காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தீராத விவகாரம், போரினால் பாதிக்கப்பட்டோருக்கான ஒழுங்கமைக்கப்பட்ட நிவாரணம் அல்லது முறைப்படியான நட்டஈடு வழங்கப்படுவது என்ற பிரச்சினைகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதெல்லாம் இரண்டு ஆட்சியையும் வேறுபடுத்தி அவர்களால் உணர முடியவில்லை.

இதற்கப்பால் அரசியல் தீர்விற்கூட ஒரு தெளிவான சித்திரத்தையோ, தீர்மானத்தையோ இந்த அரசாங்கம் முன்வைக்கும் என்பதற்கான எந்த அடையாளங்களையும் அவர்கள் காணவில்லை. அரசியற்தீர்வுக்கு முன்னேற்பாடாகச் சொல்லப்படும் அரசியற் சாசன உருவாக்கம்கூட எந்த அளவுக்கு சாதகமான நடைமுறைச்சாத்தியங்களையும் சிறுபான்மைத் தேசியங்களுக்கு நன்மைகளையும் கொண்டிருக்கும் என்பதற்கான உத்தரவாதங்களும் அவர்களுக்குத் தென்படவில்லை.

இந்த விசயங்களையெல்லாம் முந்திய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் என்ன மனநிலையில் கடைப்பிடித்ததோ அதே மனோநிலைதான் தொடர்கின்றது. இதில் குணாம்ச மாற்றங்கள் எதுவும் கிட்டவில்லை என்பதே தமிழ் மக்களுடைய புரிதலாகும்.

இதனால்தான் அரசாங்கமும் உலக நாடுகளும் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அது ஒரு சூதான பொறி என்ற உணர்வோடு அதை அணுகத் தயங்குகின்றனர், அவர்கள்.

தோற்றத்தில் முந்திய அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் சற்று வேறான நிறத்தைக் காட்டினாலும் அடிப்படையில் வேறுபாடற்றது என்பது அநேகமான தமிழர்களின் தீர்மானம். அதாவது, மோதகமும் கொழுக்கட்டையும் என்பதாக.

இந்த நிலையில் அத்தியாவசியமாகவுள்ள பிரச்சினைகளில் நன்னம்பிக்கையை உண்டாக்கும் அடையாளமாக சிலவற்றுக்கு அரசாங்கம் தீர்வைக் கண்டிருக்கலாம். தீர்வு காணக்கூடிய எளிய விசயங்களான அரசியற் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்தல், காணிகளை விடுவித்தல் போன்றவற்றையாவது செய்திருக்கலாம். அதையே செய்ய முன்வராத போது கண்மூடித்தனமாக எப்படி நம்புவது? என்றே அவர்கள் கேட்கிறார்கள்.

இந்த நிலையில் இவற்றுக்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய, இவற்றை வலியுறுத்திப் போராட வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு அமைதியாக இணங்கிப்போவது எதற்காக என்பதே தமிழ் மக்களுடைய கேள்வியாகும்.

பொதுவாகவே எதிர்ப்பரசியல் பாரம்பரியத்திற்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ்மக்களுக்கு இப்படி இணக்கமாக நெகிழ்ந்து கொடுக்கும் அரசியலைத் தமிழ்த்தலைமை கடைப்பிடிப்பது எரிச்சலையும் சந்தேகத்தையுமே கொடுக்கிறது. தவிர, எரியும் பிரச்சினைகள் தொடர்ந்தும் எரிநிலையிலிலேயே இருப்பது அவர்களுடைய கோபத்தையும் ஐயத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றன. இதனால் தமிழ் மக்களின் எரிச்சல் கோபமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

பதிலாக இவற்றுக்கெல்லாம் நிபந்தனையற்ற வகையில், தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார் சம்பந்தன். இதற்காக அவர் ஒரு வகையில் சிலுவையைச் சுமக்கிறார் என்று சொல்ல வேணும். ஏனென்றால், ஒரு பக்கத்தில் தம்மை ஆதரித்த மக்களின் நம்பிக்கையைப் பேண வேண்டும். அவர்களுடைய உணர்வுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலை. மறுபக்கத்தில் அரசாங்கத்தை எதிர்த்து நடப்பதன் மூலமாக, அதனை எதிர்நிலைக்குத் தள்ளி, கடந்த அரசாங்கங்களின் காலத்தைப்போல, “நான் இப்படித்தான் இருப்பேன், நீ செய்வதைச் செய்து பார்“ என்று சொல்வதற்கு இடமளிக்காமல், இணைந்து நின்று வெற்றிக்கனிகளைப் பறிக்க முற்படும் முயற்சி. இதில் அவர் தன்னைப் பந்தயக் குதிரையாக்கியிருக்கிறார். ஒருவகையில் தன்னையே பகடைக்காய் வைத்தாடும் நிலை இது. இன்னொரு வகையில் சொன்னால் வாழ்வா சாவா என்ற நிலை.

தமிழ் மக்கள் விரும்புவதைப்போல, அல்லது தீவிர நிலைப்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி நடந்து கொள்ள முற்பட்டால், தற்போதைய ஆட்சியிலும் அரசியற் தீர்வை எட்டமுடியாமற் போய்விடும் என்று சம்பந்தன் கருதுகிறார். இது எதிரெதிர் தரப்புகளான ஐ.தே.கவும் லங்கா சுதந்திரக்கட்சியும் முஸ்லிம் தரப்பும் இணைந்த ஆட்சி.

இதற்குத் தமிழ்த்தரப்பும் ஆதரவை வழங்கி வருவதால் இந்தச் சந்தர்ப்பத்தில் வைத்து அரசியற் தீர்வைப் பெற்று விடலாம். ஆகவே இதை ஒரு வாய்ப்பாக – இணக்கமான தருணமாகப் பயன்படுத்திக் கொள்ள வேணும் என்பது சம்பந்தனுடைய நம்பிக்கை. எனவேதான் அவர் இதற்கு ஏற்றாற்போல கடினமான நிலையிலும் அமைதியைப்பேணி விட்டுக்கொடுப்புகளைச் செய்கிறார். தன்னுடைய விட்டுக்கொடுப்புகளும் அமைதியும் நல்லெண்ணத்தின் அடையாளமாகும். புரிந்துணர்விற்கான படிக்கற்களாகும். இதை அரசாங்கமும் சிங்களத்தரப்பினரும் குறிப்பாக சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேணும் என்பதே சம்பந்தனின் விருப்பம்.

அதாவது, “தமிழ் மக்களுடைய கோபங்களின் மத்தியிலும் அவர்களுடைய கண்டனங்களின் நடுவிலும் நான், அமைதிக்காக உங்களுடன் நிற்கிறேன். அமைதிக்காகக் கைகோர்க்கத் தயாராக இருக்கிறேன். காயங்களோடும் வலியோடும் நிற்கின்ற மக்களின் உணர்வுகளின் மத்தியிலிருந்து கொண்டு, இத்தகைய கடினமான நிலையில் இந்த நாட்டின் ஐக்கியத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறேன். சிங்கள மக்கள் எம்மைக்கண்டு அச்சமடையத் தேவையில்லை. நாங்கள் ஒரு போதும் உங்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம். பதிலாக நாம் ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாக – ஆனால் சமத்துவமாக வாழ முடியும். அதற்காக கைகோர்க்க முடியும். வாருங்கள்“ என்று சம்பந்தன் சொல்கிறார். இதைப் புரிந்து கொள்ள முற்படுவது சிங்களத்தரப்பின் கட்டாயமாகும்.

ஏனெனில் இன்னும் நல்லிணக்கத்தைக் கோருவோராக பாதிக்கப்பட்டவர்களே இருக்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய அரசு அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளைச் செய்ய முன்வரவில்லை. ஆனால் உனடியாக அது முன்வர வேணும். அப்படியானால், அது சம்பந்தனைப் பலப்படுத்த வேணும். சம்பந்தனைப் பலப்படுத்துவது என்பது, தமிழ்ச்சமூகத்தின் முன்னுள்ள அத்தியாவசியத் தேவைகளையும் அவசியப்பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதுதான். அப்படித் தீர்த்து வைக்கும்போது அதனால் ஏற்படும் நன்மதிப்பு சம்பந்தனையும் கூட்டமைப்பையும் பலப்படுத்தும். அந்தப் பலம் நாட்டின் ஐக்கியத்தை வலுப்படுத்தும்.

ஆனால், அதைச் செய்யும் நிலையில் அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அது பழைய அரசாங்கங்களின் தந்திரோபாயங்களையே கடைப்பிடிக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. தான் எதையும் விட்டுக்கொடுக்காமல், எதிர்த்தரப்பு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேணும் என்று செயற்படுகிறது. இதுவே நாம் முன்னர் குறிப்பிட்டவாறு மக்களுக்கு ஏமாற்றத்தையும் சினத்தையும் உண்டாக்குகிறது. இந்த நிலையில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, முடிவற்ற மௌனத்துடன் அரசாங்கத்தைப் பாதுகாக்கிறது கூட்டமைப்பு என்று மக்கள் கருதுகிறார்கள். சம்பந்தன் தனிப்பட்ட நலன்களுக்காக அரசாங்கத்தை நியாயப்படுத்திப் பேணுகிறார் என்பது அவர்களுடைய எண்ணம்.

இதுவே கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையிலான முரண்நிலைக்குக் காரணமாகும்.. இதனால்தான் அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் மீதும் அதனுடைய தலைமையின் மீதும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடுமையான குற்றச்சாட்டுகள் சாட்டப்படுகின்றன. சம்பந்தனை அவருடைய வயதையும் கடந்து, அவருடைய தலைமை அடையாளத்தையும் பொருட்படுத்தாமல், பலரும் கிழித்துப்போடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களும் அடிநிலைச்சமூகங்களும் தொடர்ந்தும் அதே சுமைகளையும் அதே வலிகளையுமே தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை மத்தியதர வர்க்க, மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு முந்திய ஆட்சியை விட இந்த ஆட்சியில் சற்று இடைவெளி கிட்டியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் மத்தியதர வர்க்கத்தினதும் மேல்மத்தியதர வரக்கத்தினதும் குரல்களுக்கு இடமிருக்கவில்லை. ஏறக்குறைய அந்தக் குரல்கள் அடக்கப்பட்டிருந்தன. அல்லது உதாசீனப்படுத்தப்பட்டன. இந்த ஆட்சியில் அந்தக் குரல்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது கவனிக்கப்படுகிறதா இல்லையா என்பது வேறு விசயம்.

ஆக, இத்தகைய நிலையில், “நல்லாட்சி அரசாங்கம்“ என்று சொல்லப்படும் நடப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகள் எப்படி அமையப்போகின்றன என்பதை இனி வரும் நாட்கள் காட்டும்.

இதற்கு இனி வரும் நாட்களில் செயல்களே பதிலளிக்கும்.

அப்படியென்றால் சம்பந்தனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இணக்க அரசியலையா பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். குருக்கள் செய்தால் குற்றமில்லை என்பது இதைத்தானோ!

 

https://citypresssite.com/2016/07/26/தமிழ்த்-தேசியக்-கூட்டமைப/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.