Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும்!

Featured Replies

டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும்!

test_vc1.jpg

டெஸ்ட் போட்டி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கவாஸ்கர், டிராவிட், சச்சின், லாரா, பிராட்மேன், காலிஸ், வார்னே, அம்புரோஸ், இங்கிலாந்தின் ஸ்விங் பிட்ச்கள், ஆளுயர பவுன்சர் ஆகும் பெர்த் பிட்சுக்கள், சூழலில் கலங்கடிக்கும் நாக்பூர் வகையறா பிட்ச்கள் இதெல்லாம்தானே..! இதையும் தாண்டி பலருக்கும் டெஸ்ட் போட்டி என்றால் சட்டென தோன்றுவது 'டிரா' என்பதுதான்.

'டெஸ்ட் போட்டிகள்  என்றால், வீரர்கள் எல்லாரும் டொக்கு வைத்துக்கொண்டே இருப்பார்கள், ரிசல்ட் கிடைக்காது' என ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் அலுத்துக்கொள்வாரக்ள். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வெவ்வேறான பார்வை இருக்கும். ஆனால் இன்றளவிலும், கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவரும்  மிகப்பெரிய மதிப்பாக கருதுவது டெஸ்ட் போட்டிகளைத்தான். டெஸ்ட் போட்டி என்பது ஒரு கிரிக்கெட் வீரனின் முழுத் திறமையையும் பரிசோதிக்கும் ஃபார்மெட். பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் இருவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் தளம்.

இதுவரை சுமார் 2000 க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுவிட்டன. ஆனால் இன்றுவரை நான்காவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருப்பது வெறும் 28 முறைதான். இதுவரை 400 ரன்களை, நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்திருப்பது வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே. இந்த நான்கு அணிகளும் கூட தலா ஒருமுறை மட்டுமே 400க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்திருக்கிறார்கள். இப்போது ஓரளவு டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் குறித்து புரிந்து நம்மால் புரிந்து கொண்டிருக்கமுடியும். ஐந்து நாட்கள் முழுமையாக விளையாடி, போட்டியை வெற்றிகரமாக ஒரு அணி சேஸ் செய்வது ஒரு கலை என்றால், ஐந்து நாட்கள் முழுமையாக விளையாடி, எதிரணியின் அபார பந்துவீச்சை சமாளித்து, நான்காவது இன்னிங்சில் வெற்றிகரமாக களத்தில் நின்று, போட்டியை டிரா செய்வது இன்னொரு மிகச்சிறப்பான கலை. ஒரு நல்ல போட்டி என்பது, மோதும் இரண்டு அணிகளும் சமவல்லமை பெற்றிருந்தால்தான் சுவராஸ்யமாக இருக்கும். அப்படித்தான் முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் இருந்தது. இதற்கு ஒரு சிறிய  புள்ளிவிவரத்தை உதாரணமாகத்தரலாம்.

test_vc2.jpg

 

காலகட்டம்   -  மொத்த டெஸ்ட் போட்டிகள்  - டிரா - சதவிகிதம்
1949 -1979    -           560    -                                              232  -         41.4
1980 - 1999   -           613   -                                               247 -         40.3
2000 - 2016    -          721  -                                                174 -         24.10
 
டெஸ்ட் கிரிக்கெட் என்பது முன்பை விட இப்போது பல நாடுகளால் விளையாடப்படுகிறது. புள்ளிவிவரத்தை  உற்றுநோக்கினால் டெஸ்ட் போட்டிகளில் எண்ணிக்கை அபரிதமாக வளர்ச்சியடைந்திருப்பதை உணர முடியும். ஆனால் டெஸ்ட்டில் தரம் என்பது வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதே ஆபத்தான விஷயம். அதுவும் கடைசி  இரண்டரை வருடங்களில், இதுவரை 116 டெஸ்ட் போட்டிகள் நடந்திருக்கின்றன, இதில் 23 போட்டிகள் டிரா ஆனது. ஆனால் இந்த 23 போட்டிகளிலும் கூட, மழை பாதிப்பில்லாமல் ஐந்து நாட்களும் டெஸ்ட் போட்டிகள் நடந்து, டிரா ஆன போட்டிகள் என சுருக்கினால், வெறும் 10 போட்டிகள் மட்டுமே தேறுகின்றன.

இப்போதெல்லாம் எந்தவொரு அணியாலும், ஐந்து நாட்கள் முழுமையாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட முடிவது இல்லை என்பதே நிதர்சனம். மூன்று, நான்கு நாட்களிலேயே பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிடுகின்றன. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களால் நிலைத்து ஆட முடிவதே இல்லை. ரஹானே, ரூட், குக், கோலி, முரளிவிஜய், அம்லா, டிவில்லியர்ஸ், ஸ்மித்,வில்லியம்சன்  என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் சிறப்பாக டெஸ்ட் விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெகுவாக அதிகரித்திருப்பதால்,  நிறைய போட்டிகளில் முடிவு கிடைத்துவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தற்போது மெல்ல மெல்ல டெஸ்ட் போட்டிகளை மீண்டும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்புவதை மட்டும் வைத்து, இப்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு நல்ல விஷயம்தானே என  பலருக்கும் தோணலாம். ஆனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் விதமான போட்டிகள் சமீப காலங்களில் குறைந்ததுதான் வேதனை.  கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா,  ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த ஒரு தொடரில் மட்டும்தான் இரண்டு அணிகளும் சரிக்கு சமமாக மல்லுக்கட்டின. இந்தியா,  இரண்டு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றது என்றபோதும் முரளிவிஜய், ரஹானே ஃபார்ம், விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க நான்கு சதங்கள் என இந்திய அணிக்கு பல பாசிட்டிவ் விஷயங்கள் கிடைத்தன. அப்படியொரு வலுவான தொடரில் விளையாடி, தோல்வியை சந்தித்தப் பிறகு தான் இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் எழுச்சியுற்றது. உலகம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இந்தியாவின் எழுச்சி மிக முக்கியமானது.
 

test_vc3.jpg

டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் இப்போது ரிசல்ட் கிடைத்தாலும் அந்த ரிசல்ட்,  அநேகமாக, போட்டி எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த அந்த அணிக்கே  சாதகமாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு வீரர்களுக்கு ஏற்றவாறு பிட்ச்களை தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. பொதுவாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் பிட்ச்களை சில வகையாக பிரிக்க முடியும். ஆஸ்திரேலிய, தென்னாபிரிக்க மைதானங்கள் பொதுவாக வேகப்பந்துக்கும், பவுன்சருக்கும் சாதகமான பிட்ச்கள். இங்கிலாந்தில்  ஸ்விங்கிற்கும், ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் பிட்ச்கள் அதிகம். இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் முழுக்க முழுக்க சூழலுக்கு சாதகமானவை. வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் மிகவும் ஸ்லோ பிட்ச்சாக இருக்கும். இப்படி பல்வேறு வித பிட்ச்கள் இருக்கும் சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளைத் தவிர,  சமீப காலங்களில் எந்தவொரு அணியும் தங்களது நாட்டைத் தவிர, வேறு மண்ணில் போட்டிகளை ஜெயிப்பதும், கடுமையான சவாலைத் தருவதும் அரிதாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணி, கடந்த பத்து வருடங்களில், ஆசிய மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, வெறும் ஒரே ஒரு போட்டியை மட்டுமே ஜெயித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவால், கடந்த பத்து ஆண்டுகளில்  இந்தியாவை, இந்திய மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்ற முடியவில்லை. அதே போல இந்தியாவால் தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணியையும் அவற்றின் மண்ணில்  டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே வென்றிருக்கிறது இந்திய அணி. இவ்வாறாக ஒவ்வொரு அணியும் உள்ளூரில் புலியாகவும், வெளியூரில் எலியாகவுமே இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்  டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவு கிடைப்பதை வைத்து மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் மேம்பட்டிருக்கிறது என நாம் கருதுவது நமது முட்டாள்தனம். டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கியே இருக்கிறது, எனினும் உலகம் முழுவதும் ஏழெட்டு பேட்ஸ்மேன்களின் புண்ணியத்தால் இன்னமும் முழு வீழ்ச்சியை சந்தித்துவிடாமல் டெஸ்ட் கிரிக்கெட்  உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே உண்மை. ஒன்பதாண்டாக அயல் மண்ணில் தொடரை இழக்காத அணி என வளைய வந்த தென்னாபிரிக்கா,  கடந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில்  திக்கித் திணறி, விட்டால் போதும் என ஓடியது. இப்போது அதே நிலைமைக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடந்த சில வருடங்களாக அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் என மார்தட்டிய ஆஸ்திரேலியா, இலங்கையின் அனுபவமற்ற படையைக் கூட சந்திக்க முடியாமல் தடுமாறுகிறது.

ஒரு நாள் முழுவதும் கூட ஆஸ்திரேலியாவால் தொடர்ந்து ஒரு இன்னிங்க்ஸை விளையாட முடியவில்லை. 'இலங்கை மண் எங்களுக்கு ஏலியன் போல இருக்கிறது' என முத்து உதிர்த்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இப்படி பெரிய அணிகள் திடீரென சம்மட்டி அடி வாங்குவதற்கு காரணம், தொலை நோக்கு பார்வை இல்லாததே. 1980 களுக்கு முன் ஆசிய பிட்சில் பல தொடர்களை வென்ற ஆஸ்திரேலிய அணி,  தற்போது ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கே பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. இந்திய அணி தற்போது எழுச்சி பெற்று வந்தாலும், தொடர்ந்து சூழல் பிட்ச்களை மட்டும் தயாரித்து, அடுத்த ஒரு ஆண்டுக்குள்  உள்ளூரில் நடக்கவுள்ள 13 டெஸ்ட் போட்டிகளை வென்று, நம்பர் ஒன் என மார்தட்டினால் அதன் பின்னர் அயல்மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆஸி, தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த அதே கதி இந்தியாவுக்கும் நடக்கலாம். அதற்குள் விழித்துக்கொள்ளவேண்டும்.  

r2.jpg

 

டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

1. ஐ.பி.எல் போன்ற டி-20 லீக் போட்டிகளின் மீது இளைஞர்களுக்கு மோகம் அதிகரித்திருக்கிறது. ஒரே நாள், ஒரே போட்டி, ஒரே ஓவரில் ஒருவர் வைரலாகி கோடீஸ்வரர் ஆகிவிட முடியும் என்பதால், விளையாட்டின் மீது ஆர்வம் குறைந்து, பணத்தின் மீது மோகம் அதிகரிப்பதை தடுத்து, கிரிக்கெட்டை காப்பாற்ற  ஐசிசி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு சாதகமான மைதானங்களை மட்டும் தயாரித்து, தாங்களே வென்று 'நாங்க தான் கெத்து' என மார்தட்டிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து நாடுகளுமே கிணற்றுத் தவளையாக இருப்பதில் இருந்து வெளியே வர வேண்டும்.  தொலைநோக்கு பார்வையில்  மைதானங்களை அமைக்க வேண்டும். ஒரு டெஸ்ட் தொடரில், வேகப்பந்துக்கு சாதகமான மைதானம், சுழற்பந்துக்கு சாதமான பிட்ச் , ஸ்விங் பிட்ச் , ஸ்லோ பிட்ச், பவுன்சர் பிட்ச் என எல்லா மைதானங்களும் இருக்க வேண்டும்.ஒவ்வொரு நாட்டிலும் இது போன்று பல தரப்பட்ட மைதானங்கள்   அமைக்கும்போதுதான் கிரிக்கெட் தரம் மேம்படும்.

இந்தியாவின் எழுச்சி :

கடந்த பத்து ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியா மட்டுமே அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து சீராக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளை அந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்திருக்கிறது, ஆஸ்திரேலியாவில் மட்டுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்திருக்கிறது. அதிலும் கூட 2008 ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில், நடுவரின் ஒருபக்க சார்பு தீர்ப்புகளால், இந்திய வெல்ல வேண்டிய டெஸ்ட் தொடர் 1-2 என பறிபோனது எந்தவொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறுக்க முடியாது. இந்த  காலகட்டத்தில் இந்தியா, எந்தவொரு அந்நிய மண்ணிலும் கடுமையாக போராடியிருக்கிறது." பத்து ஆண்டுகளில் கடுமையான போராட்டம் முடிந்துவிட்டது. இனி டெஸ்ட் கிரிக்கெட் உலகை  நாம் ஆளும் தருணம் வந்துவிட்டது. நாம் இனி எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் சூழலுக்கேற்ப விளையாடி வெற்றிபெற வேண்டும். அந்நிய மண் என்ற பயமே வேண்டாம்" என சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட்கோலி. 

இன்று இந்திய அணி இவ்வளவு வலுவாக இருப்பதற்கு காரணம் கங்குலி மற்றும் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி எழுச்சியுற்றதுதான். இந்திய அணி எழுச்சியுற்றிருப்பது நிதர்சனம் என்றாலும், இன்னும் தென்னாபிரிக்க, இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா.

r1.jpg

 

இந்தியாவுடன்  ஒப்பிடும்போது தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அந்த நாட்டைச் சேர்ந்த சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பிறகு  சரிவில் இருக்கின்றன. இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மட்டுமே கடுமையாக போராடி, மீண்டும் எழுச்சிப் பாதையில் திரும்பும் நிலையில் இருக்கின்றன. எல்லா அணிகளும் முழு பார்மில் இருக்கும்போதுதான் டெஸ்ட் போட்டியின் தரம் மேம்படும். பத்து தரமான அணிகளில் ஒரு அணி நம்பர்-1 ஆக இருந்தால்தான் சிறப்பு. எனவே ஐசிசி தரவரிசையை மட்டும் வைத்து ஆஸ்திரேலியாவோ, இந்தியாவோ  தலைசிறந்த அணிகள் என்று கூறிவிட முடியாது. இந்தியா இப்போது தான் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது. நீண்ட நெடும் பாதையில், தன்னை விட இப்போதைக்கு எல்லோரும் பின்தங்கி இருக்கிறார்கள் என மகிழ்ந்து கொண்டிருக்கக்கூடாது. மலை உச்சிக்கு வெற்றிகரமாக செல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு பயணப்படவேண்டிய தருணம் இது.

குறிப்பு : -

இரண்டு அணிகளும் சரி சமமாக போராடிய வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டிகள் குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்....

http://www.vikatan.com/news/sports/66951-fame-on-test-cricket-falls-but-indian-team-make-test-alive.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.