Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் தரப்புக்கு தாவும் ஐ.தே.க.வினரை உள்ளடக்கி இந்த வாரம் புதிய அமைச்சரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் தரப்புக்கு தாவும் ஐ.தே.க.வினரை உள்ளடக்கி இந்த வாரம் புதிய அமைச்சரவை

[14 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்}

* வெளிவிவகார அமைச்சு பதவிக்கு கடும் போட்டி

* ஜனாதிபதியிடம் ரணில் கேள்வி எழுப்புவார்

* முஸ்லிம் காங்கிரஸும் அரசில் இணைய சாதகமான சமிக்ஞை

புதிய அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக அறியவருகிறது.

ஜனாதிபதியுடன் அவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.தே.க.வின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் தலா 8 பேருக்கு அமைச்சுப் பதவிகளும் 8 பேருக்கு பிரதியமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன.

பொதுத் தேர்தலொன்றுக்காக பல மில்லியன் ரூபாக்களை செலவழிப்பதை விட ஏனைய கட்சிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளீர்த்து, அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது சிறந்ததென அரச மேல்மட்டம் கருதுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சினைப் பெறுவதற்கு மும்முனைப் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. தனது அமைச்சுப் பதவியை தக்க வைக்க மங்கள சமரவீர பெரும் பிரயத்தனம் மேற்கொள்வதுடன் அமைச்சர் மகிந்த சமரசிங்க, மிலிந்த மொறகொட ஆகியோரும் வெளிவிவகார அமைச்சைப் பொறுப்பேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

எனினும், இது குறித்து இறுதி முடிவு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டிய போதும் அதற்கு அவர் இணங்கவில்லையென்றும் தான் வெளிவிவகார அமைச்சைப் பொறுப்பேற்பதன் மூலம் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டு விடக் கூடாதென அவர் கூறியுள்ளதாகவும் அறிய வருகிறது.

மேலும், அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா சுற்றுலா அமைச்சிலிருந்து நீக்கப்பட்டு சுற்றுலா அபிவிருத்தி அமைச்சை பைசர் முஸ்தபா பொறுப்பேற்கும் சாத்தியமும் உள்ளது. டளஸ் அழகப்பெரும எம்.பி.க்கும் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைப்பதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இது குறித்து முக்கிய பேச்சு நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயராஜ்

ஐ.தே.க.வின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

ஐ.தே.க. மற்றும் சு.க. உடன்படிக்கையில் கட்சி மாறுவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐ.தே.க. யுடனான உடன்படிக்கையை நாம் தொடர்ந்தும் மதித்தே செயற்படுகின்றோம். எனினும், அக்கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைய விரும்புபபவர்களை எம்மால் தடுக்க முடியாது.

தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களை ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைகிறார்கள் என்பதற்காக முற்றாக கைவிட்டுவிட முடியாது.

அரசாங்கத்தில் பல அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் சில அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி புதிதாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. சகலரையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதி தலைமையில் சிறந்த அமைச்சரவையொன்றே எமக்கு அவசியம்.

எமது அரசாங்கத்திற்கு ஐ.தே.க. வின் ஆதரவுடன் ஜாதிக ஹெல உறுமய மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கும் போது பாராளுமன்றத்தில் எமது பலம் 121 ஆக அதிகரிக்கும். அப்போது ஆட்சியை எம்மல் தங்கு தடையின்றி கொண்டு செல்ல முடியும்.

ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்படுவதற்கு ஜே.வி.பி. பங்களிப்பு செய்திருந்தது. எனவே, அவர்களை முற்றாக கைவிட்டுவிட முடியாது. அவர்கள் விரும்பினால் அரசாங்கத்தில் இணையலாம்.

ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டால் இருகட்சிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமென கூறியிருப்பது பற்றி எதுவும் தெரியாது.

எனினும், கட்சி மாற்றம் குறித்து அவ்வுடன்படிக்கையில் எதுவுமே கிடையாது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களே தமது விருப்பப்படி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வருகிறார்கள். இவ்வாறு இணைபவர்களை உரிய கௌரவம் வழங்கி நாம் கௌரவிப்போம்.

அமைச்சரவை மாற்றத்திற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சரவை உருவாகும். ஐ.தே.க.யின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அரசாங்கத்துடன் இணைவது உறுதியாகியுள்ளது.

* ஜனாதிபதியிடம் ரணில் கேள்வி எழுப்புவார்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவத்தயாராக இருக்கும் நிலைமையில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை அடுத்த இரு தினங்களுக்கிடையில் சந்திக்க விருக்கின்றார். எதிரணி எம்.பி.க்களை அரசு பக்கம் ஈர்த்தெடுத்து அமைச்சரவையை மாற்றும் திட்டத்தில் ஜனாதிபதி தீவிர ஈடுபாடு காட்டி வரும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை தொடர்ந்து முன் கொண்டு செல்வது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

நாளை திங்கட்கிழமை அல்லது நாளை மறு தினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம் பெறலாமெனவும் அப்போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களை அரசு பக்கம் எடுக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டால் அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்பைக் கைவிட நேரிடலாமெனவும், புரிந்துணர்வு உடன்படிக்கையை முறித்துக் கொள்ளும் நிலை ஏற்படலாமெனவும் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியிடம் உறுதிபடத் தெரிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது உட்பட ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்ட நிலையிலும் தம்முடன் கலந்துரையாடப்படாமல் எம்.பி.க்களை எடுக்க முயற்சிப்பதால் உடன்படிக்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தலாமென்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாத்து வடக்கு, கிழக்கு நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி உட்பட அரசுக்கு தேவை இருக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை வலுவிழக்கச் செய்யும் மறைமுக செயற்பாடுகளைக் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் இவ்வருடத்தின் முதலாவது செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை கூட விருக்கின்றது. இச் செயற் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவிருப்பதாகவும் கட்சியின் அரசியல் குழு, நிறைவேற்றுக் குழு, செயற்குழு என்பவற்றுக்கான உறுப்பினர் வெற்றிடங்கள் நிரப்பப்படவிருப்பதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.

கட்சி மறு சீரமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றை உடனடியாக நடைமுறைச் சாத்தியமாக்குவது குறித்தும் முடிவு எட்டப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசு பக்கம் தாவவிருக்கும் எம்.பி.க்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேயுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அரசுடன் இணைவது குறித்து பேச்சுகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேறப் போவதில்லை எனவும் கட்சியிலிருந்தபடியே தான் அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா எனக் கேட்ட போது "கட்டாயம் கலந்து கொள்வோமெனவும் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவிருப்பதால் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாதெனவும் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து செயற்படும் உடன்பாடு உறுதியாகுமானால் ஜே.வி.பி. அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை போன்றதொரு உடன்படிக்கையை தங்களது அணியும் அரசுடன் செய்து கொள்ளவிருப்பதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது;

கட்சித் தலைமை ஜனநாயக செயற்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரோடு இணைந்து செயற்படுவது அர்த்தமற்றதாகவே கருதவேண்டியுள்ளது. எனவேதான் நாம் அரசுடன் இணைவதெனத் தீர்மானித்துள்ளோம்.

குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் அரசுடன் இணைய வாய்ப்புள்ளது. ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாம் விலகிச் செல்லப்போவதில்லை. எம்மை கட்சியிலிருந்து தலைமைத்துவத்தால் வெளியேற்றவும் முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.