Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆச்சரியத்தை ஏற்படுத்திய வடக்கு முதலமைச்சருக்கு மஹிந்த வழங்கிய நற்சான்று

Featured Replies

ஆச்சரியத்தை ஏற்படுத்திய வடக்கு முதலமைச்சருக்கு மஹிந்த வழங்கிய நற்சான்று

viki-1493797efe6ebc0d9efb8ddbbeb6255c59306766.jpg

 

இவ்வார அரசியல் களமானது சகல பக்கங்களிலும் ஆச்சரியத்தை தருவது மாத்திரமல்ல சூடு பிடித்திருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நகர்வுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது என்பது எமக்குத் திகைப்பையூட்டியுள்ளது.

கடந்த கால அரசியலில் காணப்படாத மாற்று நிலைப்போக்குக்கள், வித்தியாசம் வித்தியாசமான அரசியல் நகர்வுகள், சம்பவங்கள், பேராட்டங்கள் திகிலைத்தருவதுடன் பல திருப்பங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது இவ்வாரத்தில் கவனம் பெறும் விடயங்களாக மாறியுள்ளன.

இலங்கை அரசியலில் இப்படியொரு அதிசயமும் இடம்பெற முடியுமா? என்று எண்ணவும் சிந்திக்கவும் வைக்கிறது.

அரசியல் சுற்றுலா என்ற அடைமொழியைக் கொடுத்து இவ்வாரக் களப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் அனுபவங்களையும் சம்பவ மாற்றங்களையும் நோக்குவோம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதியல்ல. வடமாகாண மக்களின் பிரச்சினைகளே அவர்களை போராடத் தூண்டியது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வடமாகாண முதலமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பது. வடமாகாண முதல் அமைச்சர் "எழுக தமிழ்" நிகழ்வில் உரையாற்றும்போது நாட்டுக்கும் மக்களுக்கும் பௌத்த சாசனத்துக்கும் கெடுதியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் எழுப்பியிருக்கும் கேள்வி, ஒற்றையாட்சியை சிதைக்க ரணில் – சம்பந்தன் இரகசிய ஒப்பந்தமென வாசுதேவ நாணயக்காரவின் குற்றச்சாட்டு, புதிதாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள சட்டமானது முன்னரை விட மோசமானது என கூட்டணியினரின் விசனம்.

குறுகிய இடைவெளியில் இந்தியா விரையும் ஜனாதிபதி, பிரதமர் நல்லாட்சி அரசாங்கம் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என விமர்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணியினர், ராஜபக் ஷவின் குடும்பம் தப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்குமிடையிலான உடன்பாடே காரணம் என ஜே.வி.யினர் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தொடுக்கும் கோபக்கணைகள்,

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு நீதிமன்றம் அனுமதி, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் பரிந்துரைப்பு, அனைத்து இனங்களினதும் இறைமை அரசியலில் இடம்பெற வேண்டுமென சம்பந்தன் வலியுறுத்தல், அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அதிகாரப் பகிர்வின் அரசியல் தீர்வு உள்ளிட்ட வரைவு ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு என பல்வேறு நிகழ்வுகளின் வாரமாக இவ்வாரம் அமைந்து காணப்படுவது மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும்.

இவை நிகழ்வுகளாக இருந்த போதிலும் எதிர்கால அரசியல் நகர்வுகளின் குறிகாட்டிகளாகவோ, திசைகாட்டிகளாகவோ காணப்படுகின்றன என்பது ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தின் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமே.

"எழுக தமிழ்" வடக்கு முதல்வர் சம்பந்தப்பட்ட விடயங்களானவை வித்தியாசமான, விபரீதமான அதிர்வலைகளை ஒவ்வொரு தரப்பினரிடமும் ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு உதாரணம் பாராளுமன்றம், தென்பகுதி இனவாதிகள் என்ற ஒவ்வொரு தரப்பினரிடமும் எவ்வளவு தாக்கத்தையுண்டாக்கிக் கொண்டது என்பதை தெளிவாக உணரமுடிந்துள்ளது.

தெற்கைச்சார்ந்த பேரினவாதிகளும் பேரினத்தலைமைகளும் "எழுக தமிழ்" நிகழ்வு தொடர்பிலும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சார்பிலும் எத்தகைய இனவாத விஷங்களைக் கக்கியுள்ளார்கள் என்பது அறியப்படாத ஒரு விடயமல்ல.

விக்னேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும். அவர் மன்னிப்புக் கோர வேண்டும். மாகாண சபைகள் முதல் அமைச்சர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். விக்கினேஷ்வரனின் இனவாத நடவடிக்கைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும், "எழுக தமிழ்" நிகழ்வின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் காணப்படுகிறன, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார் விக்கி என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கணைகள் அவர்மீது வீசப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலை வடக்கு முதல்வருக்கு பய அச்சுறுத்தல்களையும் கொண்டுவந்திருக்கிறது. எனவே அவருக்கு தக்க பாதுகாப்பு நல்க வேண்டுமென்ற கோரிக்கையும் தமிழ் தலைமைகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை நிகழ்வுகள் இனவாதத்தை தூண்டி விட்டிருக்கிறதா? மீண்டுமொரு இனக்கலவரத்தை உண்டாக்கும் அகோர நிலைகளை உருவாக்கி வருகிறதா? என்பது விஸ்வரூபமாக மாறியுள்ளது. சிங்கள மக்களை இனியும் சீண்டிப்பார்க்க வேண்டாம். முனைந்தால் இந்நியாவுக்கு அனைவரையும் அனுப்புவோமென கடுமையான இனவாதம்பேசி, முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஞானசார தேரர்கள் போல் எத்தனை இனவாதிகள் கிளர்ந்தெழுந்துள்ளனர் என்பது கடந்த இருவாரங்களாக நாம் அவதானித்து வரும் விடயமாகும்.

இதற்கிடையில் ஒரு அற்புதம் இவ்வாரம் நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் விக்னேஸ்வரன் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது இலங்கை அரசியலில் மிக முக்கியத்துவம் கொண்ட கருத்தாக மதிக்கப்படலாம்.

வடமாகாண முதல் அமைச்சர் இனவாதியல்ல, எழுக தமிழ் கூட்டத்துக்கு வந்தமக்களும் இனவாதிகள் அல்லர். அரசியல் சூழ்நிலை மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அந்த மக்களை இவ்வாறானதொரு போராட்டத்துக்கு தள்ளிவிட்டுள்ளது. நானும் இனவாதியல்ல. பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுத்தேனே தவிர தமிழ் மக்களுக்கு எதிராகவல்ல என்ற கருத்தைக் கூறியிருக்கிறார். தெற்கிலும் பாராளுமன்றத்திலும் வடக்கு முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அவரை பேயாகவும் பூதமாகவும் தகாத மனிதப் பிறவியாகவும் இனவாதிகளும் பேரினவாதிகளும் பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் சித்திரிக்க முயன்று கொண்டிருக்கும் இனவாத நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நச்சு சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விக்னேஸ்வரனுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழானது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வைத்துள்ளது.

என்னதான் விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும் விக்னேஸ்வரன் மீது எதிரிகள் எறியும் கண்டனக்கணைக்கும் சேறு பூசலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் விக்னேஸ்வரன் பற்றி தெரிவித்த கருத்து ஒரு உத்தம தலைவனுக்குரிய உயர்ந்த குணாம்சங்களைக் காட்டி நிற்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற "எழுக தமிழ்" பேரணியில் வடமாகாண முதல்வர் கூறியதாக சர்ச்சைக்கு காரணம் காட்டப்படும் விடயங்கள் அவரால் கூறப்பட்டிருக்கவில்லை. விக்னேஸ்வரன் உரை ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. அவர் கூறியதாக காரணம் கூறப்படும் அனைத்து விடயங்களையும் அங்கு அவர் பேசியிருந்தார் என்று நான் கருதவில்லையென சம்பந்தன் பாராளுமன்றில் கூறிய கருத்தானது குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தன் கட்சி சார்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியைத் துடைத்தெறியும் உத்தம தலைமையாகவுமே கணிக்கப்பட வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வரும் அரசியல் தீர்வை வழங்குவதற்கான இரகசிய ஒப்பந்தம் ஏலவே ரணிலுக்கும் சம்பந்தனுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டு விட்டது. இது இலங்கையின் ஒற்றையாட்சி முறையை இல்லாது ஒழிக்கும் தேசத்துரோகமான ஒப்பந்தமாகும்.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், நல்லாட்சி நிறுவப்பட்டிருக்கிறது என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார காட்டமாக அரசைச்சாடியுள்ளார்.

இதேவேளை, வாசுதேவ நாணயக்கார சம்பந்தமாக ஆட்சித்தரப்பினர் பல்வேறு தகவல்களையும் ஏலவே வெளியிட்டிருந்தார்கள். சிவியும் வாசுவும் இணைந்து தீட்டிய திட்டமே "எழுக தமிழ்" என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒருவர் மாறி ஒருவரும் ஒரு தரப்பினருக்கு எதிராக மற்றொரு தரப்பினரும் தாறுமாறான கருத்துக்களையும் கண்டனங்களையும் முன்வைத்துள்ளமை இலங்கை அரசியலில் அரசியல் கலாசாரத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவனவாகவுள்ளது.

வாசுதேவ நாணயக்கார இவ்வாறானதொரு கருத்தையும் முன்வைத்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படுவது தான் 13+, என்று அழைக்கப்படுகிறது. அந்த 13+ தான் தமிழரின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக வழங்கப்பட வேண்டும். இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென வாசுதேவ உறுதிபடக் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு கருத்துப்பட அமைச்சர் கிரியெல்ல பின்வருமாறு கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை மாகாணங்களுக்கு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷ வடக்கு மாகாண முதலமைச்சரிடம் வாக்குறுதியளித்திருந்தார். அன்று மஹிந்த தருவதாக கூறியதையே இன்று விக்னேஸ்வரன் கோரினால் ஏன் வன்முறை ஏற்பட வேண்டுமென அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சற்று ஊன்றிக் கவனம் செலுத்துவோமாயின் சமஷ்டி என்ற அரசியலமைப்பின் மீது பேரினவாதிகள் கொண்டிருக்கும் கருத்தும் விசனமும் எவ்வளவு ஆழமானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒற்றையாட்சி சிதைவுபடக் கூடாது. சமஷ்டியை வழங்க முடியாது. 13 ஆவது சரத்தை நிறைவாக அமுல்படுத்துங்கள், முதலமைச்சருக்கும் மாகாண சபைகளுக்குமுள்ள அதிகாரங்களைக் குறையுங்கள் என ஒன்றுக்கொன்று குழப்பமான கருத்துக்களை ஆட்சியாளர்களும் அவர்களுக்குப் புறம்பாக சிங்கள தலைமைகளும் கூறிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமஷ்டி, சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு தவிர்ந்த எந்த தீர்வையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சமஷ்டி என்ற பதம் பேரின மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பின் மாற்றீடான முறையில் பிளவுபடாத நாட்டுக்குள் உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தாம் பிரிவினை கோரவில்லை. ஆனால் சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சி வலு எமக்கு வேண்டுமென்ற நெகிழ்வு நிலையற்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றார்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.