Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது?

Featured Replies

ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது?

b1_12061.jpg

மிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள்.

'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தும் முடிவுக்கு சசிகலா வந்திருக்கலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவின் நிலையே வேறு. இந்த நாளை சசிகலா ஒரு போதும் மறந்திருக்க முடியாது. ஆம்.. 5 ஆண்டுகளுக்கு முன்னர் போயஸ் கார்டனை விட்டும், கட்சியை விட்டும் சசிகலா வெளியேற்றப்பட்ட தினம் இன்று.

c2_12435.jpg

முதலில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, பின்னர் உற்ற தோழி, உடன்பிறவா சகோதரி என ஜெயலலிதாவை மிக நெருங்கிய சசிகலா, போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதாவுக்கு அடுத்து எல்லாமுமாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு அடுத்து என்ற நிலையில் இருந்த வரை சசிகலாவுக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த முயன்றபோதுதான் பெரும் சிக்கலை சந்தித்தார் சசிகலா.

''எனக்குத் தெரியாமல்... நான் இல்லாமல்... நீங்கள் எனக்கு இணையாக அரசை நடத்துகிறீர்களா?" என சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக சீறிய ஜெயலலிதா, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், (2011, டிசம்பர் 19ம் தேதி) துரோகி என்றும், தனக்கு எதிராக சதி செய்வதாகவும் சொல்லி சசிகலாவை கட்சியை விட்டு வெளியேற்றினார். அவரோடு அவரது கணவர் நடராஜன் உட்பட உறவினர்கள் 13 பேரும் கno_1_12447.jpgட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள்.

சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அதே மாதத்தின் இறுதியில் நடந்த பொதுக்குழுவிலும் சசிகலாவுக்கு எதிராக ஆவேசம் காட்டினார் ஜெயலலிதா. “தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம்.

ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது”  என சசிகலாவையும், அவரது ஆதரவாளர்களையும் எச்சரித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவை மீறி சசிகலா இயங்க துவங்கியதுதான் இந்த பிரச்னைகளுக்கும் காரணம் என சொல்லப்பட்டது. 'ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதலமைச்சராகக் கொண்டுவரலாம்?' என்று இந்தக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பேசத்துவங்கியதன் பின்னணியில் தான் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்டது. 'என்னை வைத்து ஆதாயம் பெறுபவர்கள் எனக்கு எதிராகவே சதி செய்வதா?’ என்று கொந்தளித்துதான் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார்.

no_5_12130.jpg

ஆனால் இந்த பிரிவு வெகு காலம் நீடிக்கவில்லை. 3 மாதங்களில் மீண்டும் ஜெயலலிதா - சசிகலா நட்பு துளிர்த்தது. "அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாதவர்கள். அக்காவுக்கு எதிரான உறவுகளை நான் துண்டித்து விட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை. என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து உதவியாக இருப்பேன்," என  ஏப்ரல் மாதத்தில் அறிக்கை வெளியிட்டார் சசிகலா.

இதன் பின்னர் போயஸ் தோட்டத்தின் மிகப்பெரிய கதவு சசிகலாவுக்கு மீண்டும் திறந்தது. சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவ டிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். சசிகலாவை மட்டுமே சேர்த்துக்கொண்டார். அவருடன் நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

b5_12453.jpg

'ஜெயலலிதாவை, அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலக்குவதற்கும் அந்த இடத்தில் அமர்வதற்கும் திவாகரனும், ராவணனும் சதி செய்தார்கள்' என சொல்லப்பட்டதை இல்லை என சொல்லி விடவில்லை. 'சசிகலா அப்பாவி. அவருக்கு தெரியாமல் நடந்து விட்டது' என்ற ரீதியில்தான் ஜெயலலிதா சொல்லி இருந்தார்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. "அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை" என ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியவர், இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், கட்சியின் முதல்வராகவும் பொறுப்பேற்க முடிவு செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதல்வராக கொண்டு வரலாம் என திட்டமிட்டு சதி செய்ய முற்பட்டதாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், இப்போது மீண்டும் நேரடியாக அதிகாரம் செலுத்த துவங்கி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. எனும் பேரியக்கம், சசிகலாவை தலைமையேற்று நடக்கத் துவங்கியிருக்கிறது. ஏனென்றால், அரசியலில் பழைய கதைகள் பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை.

http://www.vikatan.com/news/coverstory/75335-5-years-before-jayalalithaa-expels-sasikala-from-party.art

  • தொடங்கியவர்

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

 

b1_15586.jpg

'கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

b2_15590.jpg

ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை.  அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.

b3_15386.jpg

டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார்.  சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர்,  ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

b2_15195.jpgஇராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்

http://www.vikatan.com/news/politics/75355-the-rise-of-mannargudi-family-in-tn-politics.art

  • தொடங்கியவர்

2011 டிச. 19-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்: 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படும் சசிகலா

 

 
சசிகலா | கோப்புப் படம்
சசிகலா | கோப்புப் படம்
 
 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 19-ம் தேதிதான் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இப்போது அவரைத் தான் அதிமுக பொதுச் செயலாள ராகவும், முதல்வராகவும் பொறுப் பேற்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவின் பெயர் முன்மொழியப்பட்டு வருகிறது. அவரை பொறுப்பேற்க வலி யுறுத்தி தொடர்ந்து, கட்சியின் 50 மாவட்டங்கள் மற்றும் பல்வேறு அணிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சசிகலாவிடம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் தலைவர் வி.எஸ்.சேதுராமன் மற்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் சசிகலாவை நேற்று சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத் தினர். கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத், தருமபுரி மாவட்டம் சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அமைச்சர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சசிகலாவை நேற்று சந்தித்து தீர்மான நகலை வழங்கினர். போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை முன்னிறுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே டிசம்பர் 19-ம் தேதிதான் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அப்போது அதிமுக வின் தலைமை செயற் குழு உறுப்பினராக சசிகலா இருந்தார்.

அன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெய லலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘சசிகலா, எம்.நடராஜன் (சசிகலா வின் கணவர்), திவாகரன் (சசிகலா வின் சகோதரர், மன்னார்குடி), டி.டி.வி.தினகரன் (முன்னாள் எம்.பி.), வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்), ராவணன், மோகன் (அடையார்), குலோத்துங்கன், ராஜராஜன் ஆகிய 12 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். இவர் களுடன் அதிமுக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என கூறப்பட்டிருந்தது.

விளக்க அறிக்கை

அதன்பின் 3 மாதங்கள் அமைதியாக இருந்த சசிகலா, 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

கடந்த 1988-ம் ஆண்டில் இருந்து அக்காவின் (ஜெயலலிதா) போயஸ் தோட்ட இல்லத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவருடன் இல்லத்தில் இருக்கும் வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குதான் எனக்கு தெரிந்தது. டிசம்பர் மாதம் அவரை விட்டுப் பிரிந்து, வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழல் உருவான பிறகுதான், நடந்த உண்மைகள் முழுமையாக தெரியவந்தன.

உறவினர்கள், நண்பர்கள் சிலர் என் பெயரை தவறாகப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். அக்கா வுக்கு எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என் பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தன என்பது உண்மை. கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.

என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டப்பேரவை, நாடாளு மன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ துளியும் ஆசையில்லை.பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மை தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்.

இவ்வாறு சசிகலா தெரிவித் திருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, சசி கலாவை மட்டும் அடுத்த 3 தினங்களில் அதாவது மார்ச் 31-ம் தேதி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். ஆனால், நடராசன் உள்ளிட்ட யாரையும் அவர் கட்சியில் சேர்க்காமல் ஒதுக்கியே வைத்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, இன்றைக்கு அதே கட்சிக்கு பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/2011-டிச-19ல்-கட்சியில்-இருந்து-நீக்கப்பட்டார்-5-ஆண்டுகளுக்கு-பிறகு-அதிமுகவின்-பொதுச்செயலாளராக-முன்னிறுத்தப்படும்-சசிகலா/article9435081.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.