Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா?

Featured Replies

ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா?

  •  
     

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா
 

இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

உயில் இருக்கிறதா?

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம், அவர் உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்ற கேள்விகளுக்கு எப்போது பதில் கிடைக்கும் என்று பொன்னையனிடம் கேட்டபோது, "உயில் இருக்கிறதா, இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. உயிலில் இருப்பதைத்தான் சட்டம் நடைமுறைப்படுத்தும்" என்றார் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான பொன்னையன்.

சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்படுவார்

சசிகலாவுடன் 

ஜெயலலிதாவை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பொன்னையன் தெரிவித்தார்.

"ஜெயலலிதாவை அடுத்து, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி, அவரது தோழியாக, கடந்த 33 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாக இருந்த சசிகலாவுக்குத்தான் உண்டு. அவர் தோழியாக மட்டுமல்ல, அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டவர்", என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

அவரைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார்.

    சசிகலா

"ஜெயலலிதாவுக்காக ஜெயலலிதா பேரவையை உருவாக்கியவர் சசிகலா. எம்.ஜி.ஆர். காலத்தில் 30 லட்சம் பேராக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றரைக் கோடியாக உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர். கட்சியைக் கட்டுக்கோப்போடு கொண்டு செல்வதற்கு ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியவர். அவருக்கு அளப்பரிய அரசியல் தகுதி உண்டு. மாநில அரசியல், இந்திய அரசியல், அகில உலக அரசியல் தெரிந்த, ஒரு ஞானம் படைத்த அரசியல்வாதி அவர்" என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

ஆலோசகர் தலைவராக முடியுமா?

ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருந்ததால் கட்சிக்குத் தலைமையேற்கும் அளவுக்கு நிர்வாக ரீதியாக அனுபவம் பெற்றுவிட்டதாகவும், கட்சியை வழிநடத்துவதற்கும் தகுதி பெற்றுவிட்டதாகக் கருத முடியுமா எனக் கேட்டபோது, கடந்த 12 ஆண்டுகளாக கட்சியை நிர்வாக ரீதியாக நடத்தியவர் சசிகலாதான் என்று பொன்னையன் தெரிவித்தார்.

    சசிகலாவுடன்

"கட்சியின் தேர்தல்களை முன்னின்று நடத்தியவர் சசிகலாதான். எம்.எல்.ஏ. தேர்வு, எம்.பி. தேர்வு நடத்தும்போது, நேர்முகம் காண்பது, அவர்களைப் பற்றி விசாரிப்பது என்று ஜெயலலிதாவுக்காக பல்வேறு பணிகளைச் செய்தவர் சசிகலா என்பது மக்களுக்குத் தெரியும்" என்றார் பொன்னையன்.

என்ன சொல்கிறது கட்சி விதி?

அதிமுகவின் சட்ட விதிமுறைகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர்தான் பொதுச் செயலாளர் ஆக முடியும் என்று கூறப்படும் நிலையில், சசிகலாவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், "அது பொதுக்குழுவும், செயற்குழுவும் கொண்டு வந்திருக்கும் விதி. அந்த விதியைத் தளர்த்தவும், மாற்றவும் பொதுக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் அதிகாரம் உண்டு. அதன்படி, விதியைத் தளர்த்தி சசிகலாவை சட்ட ரீதியாக பொதுச் செயலாளர் ஆக்கலாம்" என்றார் பொன்னையன்.

அப்படியானால், சசிகலாவுக்காக கட்சி விதிகள் திருத்தப்படுகிறதா என்று கேட்டபோது, "அதில் தவறொன்றும் இல்லை. திறமை மிக்க ஒருவர், ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தை காக்கக் கூடிய ஒருவருப் பொதுச் செயலராக்குவதற்கு விதியைத் தளர்த்துவதில் குறையொன்றும் இல்லை", என்றார் பொன்னையன்.

`சசிகலாவும் ஜெயலலிதா அறைக்குச் செல்லவில்லை'

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக ரகசியம் காக்கப்படுவதாகக் கூறப்படும் புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், இது திட்டமிட்டு, கட்சியை வழிநடத்தக்கூடிய தகுதி படைத்த சசிகலாவுக்கு தொய்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பும் பொய் குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

மறைந்தார் ஜெயலலிதா 

"ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது, அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு. லண்டன் மருத்துவர், டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் குழு, சிங்கப்பூர் மருத்துவ நிபுணர் குழுதான். யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சசிகலா அவர்கள் கூட உள்ளே சென்று எதையும் பார்க்கவில்லை. மருத்துவர்கள் குழு கண்காணித்தது. நுரையீரல் தொற்றை குணப்படுத்தினார்கள். ஆனால், இறுதியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. 35 ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா. என்டோதொலியம் என்று சொல்லக்கூடிய ரத்தக்குழாயின் உள்சுவர் தளர்ச்சியின் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. அதுதான் உண்மை" என்று விளக்கமளித்தார் பொன்னையன்.

அதே நேரத்தில், சிகிச்சையின் உள் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38352792

  • தொடங்கியவர்

‘ஜெயலலிதா இடத்தை சசிகலா நிரப்புவார்!’  - புலவர் புலமைப்பித்தனின் லாஜிக்

sasi_garden2_14266.jpg

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'மன்னார்குடி குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல், அவர் கட்சியை வழிநடத்த வேண்டும்' என வேண்டுகோள் வைக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். 

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில், அவருடன் இருந்து பணியாற்றியவர்களில் முக்கியமானவர் புலவர் புலமைப்பித்தன். ஏறத்தாது 44 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 'அ.தி.மு.கவின் அவைத் தலைவராக புலவரை நாம் பெற்றிருப்பது, நாம் செய்த பாக்கியம்' என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர். தற்போது அ.தி.மு.கவில் இருந்தாலும், கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். தேர்தல் நேரங்களில் மட்டும் ஜெயலலிதாவுக்குப் பாட்டெழுத வெளியில் வருவார். தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளராக அ.தி.மு.கவினரால் முன்னிறுத்தப்படுகிறார் சசிகலா. ' ஜெயலலிதாவைப் போல், கட்சியை கட்டுக்கோப்பாக சசிகலாவால் வழிநடத்த முடியுமா?' என்ற கேள்வியை, புலவர் புலமைப்பித்தனிடம் கேட்டோம். 

pulamaipithan_14428.jpg"முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு, கட்சியின் வளர்ச்சிக்கு சசிகலாவின் தேவை அவசியம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஜெயலலிதாவுடன் அவருக்குள்ள நட்புக்கு 34 ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையில், நட்பு தொடங்கியபோது, அவருடைய வயது 31. தற்போது அவருக்கு வயது 65. அந்த இள வயது என்பது வாழ்க்கையின் வசந்தகாலம் தொடங்கும் பருவம். தன்னுடைய குடும்பத்தைவிட்டுத் துறவு மனநிலையோடுதான் கார்டனுக்குள் வந்தார். ஜெயலலிதா பட்ட துன்பத்தில் பாதிக்கும் மேல் இவரும் அனுபவித்தார். ஓராண்டு சிறைத் துன்பத்தையும் அனுபவித்தார்.

ஜெயலலிதாவுடன் இருந்ததில் லாபம் என்று பார்ப்பதைக் காட்டிலும், இதை ஒரு தியாகம் என்றே பார்க்க வேண்டும். வேறு ஒரு பெண்ணுக்காக தனக்கு சம்பந்தமில்லாத துன்பங்களை அவர் அனுபவித்தவர். அவர் மீது மற்றவர்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். தலைவர் இறந்தபோதுகூட, மோரில் விஷம் வைத்துக் கொடுத்தார்கள் என்றெல்லாம் தகவல் பரப்பினார்கள். சந்தேகம் மிக மோசமான நோய். அப்படி சந்தேகப்படுகிறவர்கள் தீய நோக்கோடு செயல்படுகிறார்கள் என்று அர்த்தம். இன்றைக்குக் கட்சி கட்டுக்கோப்போடு செயல்படுகிறது. சசிகலா மீது சந்தேகப்பட துளியும் இடமில்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சந்தேகப்படும் அளவுக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. மருத்துவமனையின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும் என அந்த நிர்வாகத்திற்கு அக்கறை இருக்காதா? 

ஆட்சித் தலைமைக்கு ஓ.பி.எஸ் இருக்கிறார். கட்சித் தலைமை சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது நீடித்து வந்த அதே கட்டுக்கோப்பு நீடிக்கும். அவரைத் தவிர, வேறு யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது. இரண்டாம் கட்டத் தலைமையை ஜெயலலிதா உருவாக்கவில்லை. 'ஆட்சிக்கு ஓ.பி.எஸ் சரியானவர்' என்பதுதான் என்னுடைய கருத்து. முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவிக்கு வந்திருக்கிறார். அவர் அமைதியானவர், ஆர்ப்பாட்டமில்லாதவர். ஆட்சியை ஒழுங்காக நடத்துவார். ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டும் வேறு வேறு நபர்களிடம் இருப்பதுதான் நல்லது. மீண்டும் மன்னார்குடி ஆட்களால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வராது. அம்மாவின் புகழைக் காப்பாற்றுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். ஜெயலலிதாவுடன் அருகில் அமர்ந்து, 34 ஆண்டுகள் அரசியல் பயிற்சி பெற்றவர் சசிகலா. எந்தச் செயலை எப்படி அணுக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஜெயலலிதாவின் அரசியல் மாணவி சசிகலா. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஜெயலலிதாவும் சசிகலாவும் இருந்தார்கள். தற்போது என்னுடைய உடல்நிலை சரியில்லாததால், நேரில் சென்று சசிகலாவை சந்திக்க முடியவில்லை. 

ஜெயலலிதா அளவுக்கு அவரால் செயல்பட முடியுமா என்பது நாம் எதிர்பார்க்கும் நம்பிக்கை. தலைவர் மறைந்தபோது பெரிய வெற்றிடம் உருவானது. இரண்டு அணிகளாகப் பிரிந்தார்கள். நான் அப்போது ஜெயலலிதாவின் பக்கம் நின்றேன். அவரால் கட்சியை வளர்க்க முடியும் என நம்பினேன். நான் ஆதரித்ததை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஆனால், மிகப் பிரமாண்டமாக அ.தி.மு.கவை வளர்த்தார் ஜெயலலிதா. தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் அ.தி.மு.கவை எஃகு கோட்டையாக உருவாக்கினார். அதேபோல்தான், சசிகலாவையும் நான் நம்புகிறேன். மன்னார்குடி உறவுகள் என்பது வெளியில் சொல்லப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுகள். எனக்கு சில உறவுகள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் என்னை வந்து சந்திப்பது இயல்பானது. அவர்களுடைய தலையீடு அரசியலில் இருந்தால்தான் தவறு. அதை ஒரு பெரிய குறையாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலா யாருக்கும் கட்டுப்பட மாட்டார். அவருக்குள்ள லட்சியம், ஜெயலலிதா விட்டுப் போன இடத்தை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பதுதான்" என்றார் விரிவாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/75349-sasikala-fulfil-jayalalithaas-place---says-pulavar-pulamaipithan.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.