Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அம்மாவின் நிழலைப் பார்த்து அஞ்சியவர் நடராஜன்!”

Featured Replies

“அம்மாவின் நிழலைப் பார்த்து அஞ்சியவர் நடராஜன்!”

 

சாட்டையை சொடுக்கும் சசிகலா புஷ்பா

 

அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் கண்மூடித்தனமான விசுவாசி களாகக் காட்டிக்கொண்டவர்கள் எல்லாம், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், இந்தியாவில் உச்ச அதிகாரம் படைத்த,  நாடாளுமன்றத்தின் நடுமையத்தில் நின்று, ஜெயலலிதா என்னை அறைந்தார் என்று புகார் வாசித்த சசிகலா புஷ்பா எதிர்க்கிறார். ஜெயலலிதா வகித்த  பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சசிகலா வரக்கூடாது என்று சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதில் முதல் விசாரணையும் முடிந்துள்ளது.

p20.jpg

சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்சித் தொண்டர்களின் கருத்தைக் கேட்காமல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் சேர்ந்து, சசிகலாவை கட்சிக்குப் பொதுச் செயலாளர் ஆக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு கட்சியின் சட்ட விதிகளுக்குப் புறம்பானது. எனவே, வி.கே.சசிகலாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 16-ம் தேதியன்று வெளிவந்த விசாரணைப் பட்டியலில் இல்லை. இதையடுத்து, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு ஆஜரான சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், தங்கள் மனுவை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர். நீதிபதியும் அனுமதி வழங்கினார். இதையடுத்து, 16-ம் தேதி, மதியத்துக்கு மேல் இந்த சசிகலா புஷ்பாவின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், “பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், கட்சி விதிப்படி, அனைத்து  மாநிலங்களிலும் இருக்கும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் அதில் பங்கேற்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், குறைந்தபட்சம் 5 வருடங்கள் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஆனால், சசிகலா கடந்த 2012 ஏப்ரல் மாதத்தில் இருந்துதான், கட்சியில் உறுப்பினாராக இருக்கிறார். அந்தக் கணக்குப் படி பார்த்தால், அவர் இன்னும் 5 வருடங்களை பூர்த்தி செய்யவில்லை. மேலும், அ.தி.மு.க என்ற கட்சி செயல்படுகின்ற மாநிலங்களில் உள்ள, அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்து, அவர்கள் கருத்தையும் கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். சசிகலா விவகாரத்தில் இதுவரை அப்படி ஒரு கூட்டம் நடத்தப்படவில்லை. பொதுச் செயலாளர் என்பவரை அனைவருமாக சேர்ந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே முறையாக, சட்ட ரீதியாக தேர்தல் நடக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

p20a.jpgசசிகலா தரப்பில், அ.தி.மு.க கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார். அவர் தனது வாதத்தில், ``இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள, சசிகலா புஷ்பா கட்சியின் அடிப்படை  உறுப்பினர் கிடையாது. கடந்த  ஆகஸ்டு 1, 2016 அன்றே, அவர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே, இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கே அவருக்குத் தகுதி இல்லை. ஆனால், தன்னுடைய அரசியல் லாபத்துக்காகவும், கட்சியின் மேல் உள்ள காழ்ப்பு உணர்ச்சி  மற்றும் உள்நோக்கத்துடன் அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தனிப்பட்ட காரணம் இல்லை என கூறும் சசிகலா புஷ்பாவுக்கு, சிவில் வழக்கு தொடர அடிப்படை முகாந்திரம் இல்லை. பொதுநல வழக்கு வேண்டுமானால் தொடரலாம். மேலும், சசிகலா புஷ்பா சொல்வது போல, போல அ.தி.மு.க என்ற கட்சியானது ‘சங்கங்கள் பதிவு சட்டம்’ என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. அதனால், அந்தச் சட்டபிரிவுகள் சொல்லும் சட்டவிதிகள் இந்தக் கட்சிக்குப் பொருந்தாது. மாறாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவர் தொடர்ந்த வழக்கு எப்படி விசாரணைக்கு உகந்ததாக இருக்க முடியும்? கட்சியின் அனைத்து அதிகாரமும் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. அவர் எடுக்கும் முடிவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். உட்கட்சி பிரச்னைகளுக்கு வழக்கு மன்றங்களுக்குப் போகக் கூடாது என்ற அடிப்படையிலே கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்படுகிறார்கள். பொதுக்குழுவே பெரியது, மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழுவுக்குக் கூட்டுபட்டவர்கள். பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வந்தாலே அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிடுகிறார். கட்சி உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. 1.57 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சியில், ஒருவர் மட்டுமே இப்படி ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம், ``இந்த வழக்கில் இப்போதைக்கு இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனுவில் சம்பந்தப்பட்டுள்ள வி.கே.சசிகலா, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்னை குறித்து உரிய பதிலளிக்க வேண்டும்’’ என்று சொல்லி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த விவகாரம் குறித்து, மனுதாரரும் ராஜ்யசபா உறுப்பினருமான சசிகலா புஷ்பாவிடம் பேசினோம்.

‘‘நாடாளுமன்றத்தில், ஜெயலலிதா மீது புகார் சொன்னவர் நீங்கள். இப்போது ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த கட்சி மீது உங்களுக்கு என்ன அக்கறை?’’

‘‘ஜெயலலிதா மீது நான் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது வேறு பிரச்னை. அவர் என்னை அறைந்தார். அதனால், அதுபற்றி, அதிகாரம் படைத்த நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். இப்போது நான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருப்பது வேறு பிரச்னை. இது என்னை அறைந்த ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், அவருடைய கட்சிக்கு ஏற்படும் கேட்டை தடுக்கும் நோக்கம். என்னுடைய இரண்டு நடவடிக்கைகளும் வேறு வேறு.’’

‘‘நீங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கில், உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால்?’’

‘‘நான் நீதிமன்றங்களை நம்புகிறேன்.’’

p20aa.jpg‘‘சசிகலாவின் தலைமையை எதிர்க்கிறீர்களே... உங்களை யாரும் மிரட்டவில்லையா?’’

‘‘மிரட்டல்கள், தாக்குதல்கள் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டவையே. இப்போதும் மிரட்டல்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால், சதிகாரக்கும்பல்களின் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். சீனியர் என்று நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் அடிமைகள். பொறுப்புக்கு வரவும், இருக்கும் பொறுப்பைக் காப்பாற்றிக்கொள்ளவும் அவர்கள் யார் காலில் வேண்டுமானாலும் விழுவார்கள். அதனால்தான், அம்மாவின் கால்களில் விழுந்த இவர்கள், இப்போது கூச்சமில்லாமல், இந்தச் சதிகாரக்கும்பலில் கால்களிலும் விழுகிறார்கள்.’’

‘‘ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியது தான்தான் என்று நடராஜன் பேசுகிறாரே?’’

‘‘நடராஜன் ஒரு ஆளே கிடையாது. அம்மா இருந்தபோது, அவர் நிழலைப் பார்த்து பயந்தவர்தான் இந்த நடராஜன்.’’

‘‘அ.தி.மு.க-வில் ஒரு பெரிய பொறுப்பை எதிர்பார்த்துதான் இந்தக் கலகக் குரலா?’’

‘‘இப்போதே நான் பெரிய பொறுப்பில்தான் இருக்கிறேன். நான் அ.தி.மு.க ராஜ்ய சபா உறுப்பினராகத்தானே இப்போதும் இருக்கிறேன். இதைத்தாண்டி எனக்கு எந்தப் பெரிய பொறுப்பும் தேவையில்லை.’’

‘‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா வரக்கூடாது என ஏன் நினைக்கிறீர்கள்?’’

‘‘சசிகலா யார்... அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? சசிகலாவையும், அவருடைய குடும்பத்தைப்பற்றியும் அம்மாவுக்குத் தெரிந்ததால்தான், கட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியைக்கூட அவர்களுக்குக் கொடுக்கவில்லை. சசிகலாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் பணம் ஒன்றுதான் குறிக்கோள்; அதற்காக சதிச்செயல்கள் செய்பவர்கள். அதனால்தான் அவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஒருவேளை, சேர்த்தால் கட்சியை அழித்துவிடுவார்கள் என்று அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான், கட்சியைவிட்டு அவர்களை அம்மா தள்ளியே வைத்திருந்தார். இப்போது அம்மா இல்லை என்றதும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அவர் கைப்பற்றப் பார்க்கிறார்; போயஸ் கார்டனை வளைத்துப்போடப் பார்க்கிறார்.’’

‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’’

‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக்கூடாது என மறைக்கப் பார்க்கிறார்கள். அப்படி எந்த மர்மமும் இல்லையென்றால், மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஒளிப்பதிவை மக்களுக்குக் காட்டலாமே. அவருடைய அருகில் இருந்தது சசிகலா ஒருவர் மட்டும்தான். வேறு யாரும் இரண்டாம் தளத்துக்கே அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று சசிகலா மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சிலர், பதவியைக் கைப்பற்ற அம்மாவுக்கு எதிராகச் சதிச் செயல் செய்திருக்கின்றனர். அதை வெளிக்கொண்டு வரவேண்டும். மக்களுக்கு உண்மையைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், நீதி விசாரணை நடத்தச் சொல்லி வழக்குத் தொடுத்து இருக்கிறேன்.’’
 

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.