Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்!

Featured Replies

2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்!

 

sasikalaaa_Liveday_qskxai_12422.jpg

.தி.மு.க-வையும், ஆட்சியையும் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சசிகலா, 'சின்ன அம்மா' என அழைக்கப்படுவது... 

திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி, பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி; எம்.ஜி.ஆருடன் அரசியல் தொடர்பில் இருந்து; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசி; மக்களோடு மக்களாகக் கலந்து; பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து; அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. ஒ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும், பிற அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இது ஒருபுறமிருக்க, போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவைச் சந்தித்துப் பலரும் ஆறுதல் சொல்லி வந்தனர். அத்துடன், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆகும்படியும், முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில், டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் அவசரமாகக் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், சசிகலா கழகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முதல்வர் ஒ.பி.எஸ் தலைமையில் போயஸ் கார்டன் சென்று சசிகலாவிடம் நேரில் வழங்கினர். அவர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஏற்றுக்கொண்டாலும் அடிமட்டத் தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

188783_12064.jpg

‘‘ஜெயலலிதாவுடன் 30 வருடங்கள் ஒன்றாக இருந்த காரணத்துக்காக, நாங்கள் எல்லாம் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியுமா’’ எனக் கொந்தளிக்கின்றனர் தொண்டர்கள்.. மேலும், ‘‘அவர் எந்தக் கட்சிக் கூட்டத்திலாவது பேசியிருக்கிறாரா? ஒரு சாதாரண வார்டு கவுன்சிலராகவாவது இருந்திருக்கிறாரா...? கட்சியில் வேறு ஏதாவது பதவி வகித்திருக்கிறாரா...? சட்டமன்றத்துக்குள் எம்.எல்.ஏ-வாக நுழைந்திருக்கிறாரா? இப்படி எதுவும் இல்லையே. எம்.ஜி.ஆர்-கூட, ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். ஆனால் ஜெயலலிதா, சசிகலாவை எங்கேயும் அடையாளம் காட்டவே இல்லையே. மாறாக, இரண்டு முறை கட்சியிலிருந்து விலக்கித்தான் வைத்திருந்தார். அ.தி.மு.க. கட்சிக் கொள்கைகளின்படி ஒருவர் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கழகத்தின் பொதுச் செயலாளராக முடியும். அப்படியிருக்கையில், இவர் மீண்டும் கட்சிக்குள் வந்து 5 ஆண்டுகள் முடியவில்லை. இது தெரியாமல் எப்படி அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆள் பலமும், அதிகார பலமும் இருப்பதால் கட்சியில் இருக்கும் பெரிய தலைகள் எல்லாம் அவரிடம் போய் விழுந்து விட்டனர். இல்லை, அந்த அளவுக்கு மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.

_92862762_91520850_jayawithmgr_12540.jpg

இன்னும் 4 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பதவியை வைத்து பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அனைவரும் சசிகலா குடும்பத்தினரிடம் சரணடைந்து விட்டனர். ஒரு நேரத்தில், ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டிருந்த மன்னார்குடி உறவுகள் எல்லாம் இன்று போயஸ் கார்டனுக்குள் புகுந்துவிட்டனர். ஜெயலலிதா இறந்து இன்னும் ஒரு மாதம்கூட முடிவுறாத நிலையில், அவருடைய பெயர் அழிந்துபோய்... எங்கும் ‘சின்ன அம்மா’ என்கிற பெயரே தெரிகிறது. அந்த அளவுக்கு மன்னார்குடி குரூப் சரியாகக் காய் நகர்த்தி வருகிறார்கள். இப்படியே போனால், கட்சி என்ன ஆகப் போகிறது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்றும் அவரது சமாதிக்குச் சென்று மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்துவது காலங்காலமாக நடந்து வரும் செயல். ஆனால், இந்த முறை அது மிகவும் சாதாரணமாக நடந்துள்ளது. எல்லோராலும் 'சின்ன அம்மா' என்று அழைக்கப்படும் சசிகலா, எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டியதுதானே? பதவியை மட்டும் வாங்கினால் போதாது. கழகத்தின் கொள்கைகளையும் கடமை தவறாது காப்பாற்ற வேண்டும். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விலை போய் விட்டார்கள். ஆனால், எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களை யாரும் வாங்க முடியாது. கட்சி எங்களால்தான் நிலைத்து இருக்கிறது என்பதை கழக நிர்வாகிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கொதிக்கின்றனர் அவர்கள். 

காரணம் என்ன?

‘‘நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. மிகச் சிறப்பான வெற்றி பெற்று... மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா. அத்துடன், தமிழகத்தில் 6 முறை முதலமைச்சரான பெண் என்ற பெருமையையும் பெற்றார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் அவர், திடீரென்று உடல்நலம் குன்றி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில், ‘நன்றாகக் குணமாகி விட்டார்; இயல்பான உணவுகளைச் சாப்பிடுகிறார்; விரைவில் வீடு திரும்புவார்’ என்றெல்லாம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தால் தினந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், 75 நாட்களுக்குப் பிறகு, ‘அவர் மரணம் அடைந்து விட்டார்’ என்று சொன்ன தகவலால் தமிழகமே அதிர்ந்து போனது. இந்த 75 நாட்களும் அவருடன் இருந்தவர் சசிகலா மட்டுமே. பல அரசியல் கட்சிப் பிரபலங்களும், திரைப்பட நடிகர்களும், கழகக் கண்மணிகளும், மீடியா குழுவினர்களும் அவரைப் பார்க்க அலைமோதிய போதும் எந்த அனுமதியும் தரப்படவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவையும் சசிகலா தரப்பினர்  அனுமதிக்கவில்லை. யாருக்குமே எந்தப் பதிலும் சொல்லாமல் திடீரென்று அவர் இறந்து விட்டார் என்கிற தகவலைச் சொன்னதன் விளைவுதான்... சசிகலாவை அடிமட்டத் தொண்டர்கள் வெறுக்கக் காரணம்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

சசிகலா

சசி சந்திக்க இருக்கும் சவால்கள்!

அடிமட்டத் தொண்டர்கள் வேண்டுமானால்... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சசிகலாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், முதல்வர் ஒ.பி.எஸ், மூத்த நிர்வாகிகள் பொன்னையன், மக்களவை சபாநாயகர் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க பெரும்புள்ளிகள் அனைவருமே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சரணடைந்து விட்டனர். ‘ஜெ-வைப் போல் சசிகலாவும் தனது உடை உடுத்துவது போன்ற விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும், போயஸ் கார்டனுக்குள் நுழையும் கழக நிர்வாகிகளுக்குக் கட்டுப்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல’ என்கின்றனர் அங்கு சென்றுவந்தவர்கள். 
சசிகலாவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவைவிட இரண்டு மடங்கு அதிக கெடுபிடி கொண்டதாக அவர்கள் சொல்கின்றனர். ‘எது எப்படி இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்லத்தான் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்’ என்கின்றனர். சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்றாலும், அவர் முதல்வராகும்பட்சத்தில், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அடிமட்டத் தொண்டர்களின் எதிர்ப்பு; ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா; மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யையும், தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க-வையும் சமாளிக்க வேண்டிய திறமை; ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நின்றால், வெற்றிபெற வேண்டிய கட்டாயம்; தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வருமானவரித்துறையினரின் ரெய்டு போன்ற எண்ணற்ற சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க என்ற கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்குலையாமல் சரியான திசையில் கொண்டுசெல்ல வேண்டியது என ஏகப்பட்ட சவால்கள் அவர் முன் காத்திருக்கின்றன. ஆனாலும், அ.தி.மு.க-வில் அனைத்துப் பணிகளும் சரியான காய் நகர்த்தல்களுடன் ஜரூராக நடப்பதைப் பார்க்கும்போது,  சசிகலாவுக்குப் பின்னால் மிகப் பெரிய சக்தி செயல்பட்டு வருகிறது என்பது மட்டும் உண்மை. அந்தச் சக்தி, இனிவரும் காலங்களில் சசிகலா எதிர்கொள்ள இருக்கும் சவால்களையும் தவிடுபொடியாக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

http://www.vikatan.com/news/tamilnadu/76441-challenges-awaiting-for-sasikala-natarajan.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.