Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

Featured Replies

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்

 

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன p3.jpgஎன்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்கள்தான் இவை...

''ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது,  பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

p4a.jpg

இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டு¢ம் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.  

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும்  வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில்!

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கு இரு நாயகர்கள்

 

 
மைக்கேல் டி’ குன்ஹா (இடது) | பி.வி.ஆச்சார்யா (வலது)
மைக்கேல் டி’ குன்ஹா (இடது) | பி.வி.ஆச்சார்யா (வலது)
 
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பியதில் மிகப் பெரிய பங்கு இருவருக்கு உண்டு. ஒருவர், இந்த வழக்கை கர்நாடக அரசு சார்பில் நடத்திய வழக்குரைஞர் ஆச்சார்யா. மற்றவர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா. அந்த அளவுக்குப் பல நெருக்கடிகளைக் கடந்தே இந்தத் தீர்ப்புக்கு அவர்கள் இருவரும் வித்திட்டிருக்கிறார்கள்.

வழக்கு விவரம்

ஜெயலலிதா முதன்முறையாகத் தமிழகத்தில் முதல் அமைச்சராக இருந்த 1991-96 காலகட்டம் ஒரு இருண்ட காலம் என்றே சொல்ல வேண்டும். பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1996 தேர்தலில் அவர் ஆட்சியை இழந்ததற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியக் காரணமாக அமைந்தன. 1996-ல் சுப்ரமணிய சுவாமி ஒரு புகாரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு மேலாக சொத்து சேர்த்ததாக அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், பல்வேறு ஊழல் வழக்குகளை அவர் எதிர்கொண்டார். அந்த வழக்குகளில் ஒன்றே சொத்துக்குவிப்பு வழக்கு. ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்தற்கு முன் ரூ. 2.02 கோடியாக இருந்த சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளுக்குப் பின் ரூ.66.6 கோடியாக உயர்ந்தது என்பதே இந்த வழக்குக்கு முன்பிருந்த ஆரம்பக் குற்றச்சாட்டு. முதல்வர் பதவியை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் புலன் விசாரணையின் அடிப்படையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இவர்கள் ஜெயலலிதாவுடன் சதி செய்து, வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து ஊழல் செய்வதில் உடந்தையாக இருந்தனர் என்பதும் நால்வரும் 32 நிறுவனங்கள் மூலமாக நிர்வகித்து அதன் மூலமாகக் கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செயலில் ஈடுபட்டனர் என்பதும் முக்கியமான குற்றச்சாட்டு.

ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணைகள் தனி நீதிமன்றத்தில் விரைவுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தீர்ப்புகளை அவர் எதிர்கொண்டார். சில வழக்குகளில் தண்டனையையும் எதிர்கொண்டார். ஆனால், 2001 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்த பின்னர் வழக்குகளின் போக்கு மாறியது. இதற்கு முன்னால் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்கள் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். மேல்முறையீடுகள் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்தன. பெரும்பாலான வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட வண்ணம் இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்தச் சூழலில்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது. எந்த மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு வழக்கின் விசாரணையை நடத்தும் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றும் திமுகவினர் கோரினர்.

ஆச்சரியப்படுத்திய ஆச்சார்யா

2004-ல் விசாரணையைக் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞரான ஆச்சார்யா, கர்நாடக மாநில அரசின் சார்பாக வழக்கு நடத்தும் வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது தான் எதிர்கொண்ட அழுத்தங்களையும், மனஉளைச்சல்களையும் தனது சுயசரிதையிலேயே பதிவுசெய்திருக்கிறார்.

மங்களூரில் சாதாரண வழக்குரைஞராகத் தொழில் தொடங்கியவர் அவர். பின்னர் பெங்களூருக்கு வந்து வழக்குரைஞர் தொழிலைத் தொடர்ந்தார். அவருடைய கடும் உழைப்பு மற்றும் நேர்மையால் கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்குரைஞரானார். ஜெயலலிதா தரப்பு நிறைய அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அவருக்குத் தந்தது. மிரட்டல், உருட்டல்களுக்கு அவர் அஞ்சாத நிலையில், கர்நாடகத்தை அடுத்து ஆளவந்த பாஜக அரசு மூலம் நெருக்கடிகளைத் தந்தது. “மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் அல்லது விசாரணை நீதிமன்ற வழக்குரைஞர் என்ற இரு பதவிகளில் ஒன்றில்தான் அவர் இருக்க வேண்டும்; ஒரு பதவியைத் துறக்க வேண்டும்” என்று பாஜக அரசு வற்புறுத்தியது.

அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற மாநிலத் தலைமை வழக்குரைஞர் பதவியை வைத்துக்கொண்டு, விசாரணை நீதிமன்ற வழக்குரைஞர் பதவியிலிருந்து விலகிவிடுவார் என்றே பாஜகவும் ஜெயலலிதாவும் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத் தலைமை வழக்குரைஞர் பதவியைத் துறந்து, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நடத்தும் வழக்குரைஞராகத் தொடர ஆச்சார்யா முடிவெடுத்தது இந்த வழக்கில் அவர் காட்டிய நேர்மைக்கும் அர்ப்பணிப்புக்கும் உதாரணம்.

நீதியை நிலைநாட்டிய குன்ஹா

வழக்கு விசாரணை பல ஆண்டுகள் நீடிக்குமாறு குற்றவாளிகள் நால்வரும் பல்வேறு விதமான தந்திரங்களைக் கையாண்டனர். மொத்தம் 14 நீதிபதிகள் மாறிய வழக்கு இது. பல சமயங்களில் நீதிபதிகள் வழக்கு இழுத்தடிக்கப்படுவதைப்பற்றி வெளிப்படையாகப் புலம்பினர். இறுதியில் நீதிபதி குன்ஹா, 2014-ல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிகள் நால்வரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தார். அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார். அரசாணைகள் 120 மற்றும் 1183-ல் பிணையில் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஒரு வழக்கின் தீர்ப்பாக மட்டும் அல்லாமல், இந்தியாவில் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கான என்றென்றைக்குமான வலுவான எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என்ற அறவுறுதியையும் தாங்கியே வந்தது. இறுதியில் அதுவே வெல்லவும் செய்திருக்கிறது.

21 நாளில் பிணையில் சிறையிலிருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா. உச்ச நீதிமன்றம், எதிர்த் தரப்பான கர்நாடக அரசுக்கு அறிவிப்பு (notice) அளிக்காமலும் அவர்களின் வாதத்தைக் கேட்காமலும் பிணை வழங்கியதாக என் நினைவு. 18 ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்தவர்கள், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பிற்கு மேல் செய்த முறையீட்டைக் கர்நாடக உயர் நீதிமன்றம் விரைவில் விசாரிக்க வேண்டும் என்றனர். மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்தார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடக அரசு. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பே சரியானது என்றும், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரியது. கர்நாடக அரசிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டவரும் ஆச்சார்யாதான்.

இந்த மேல்முறையீட்டில் 14.02.2017 அன்று (வாதங்கள் முடிந்து 8 மாதத்திற்கு பின்னர்) தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் குன்ஹாவின் தீர்ப்பே சரியானது என்று கூறி, உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்துசெய்துள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு ஆச்சார்யாவின் வாதங்களைப் பெருமளவில் எடுத்துக்காட்டியுள்ளது. ஆச்சார்யா, குன்ஹா போன்ற நீதிமான்களின் உழைப்பில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது!

http://tamil.thehindu.com/opinion/columns/சொத்துக்-குவிப்பு-வழக்கு-இரு-நாயகர்கள்/article9546148.ece?ref=popNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.