Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு கிட்டுவதற்கு இதுவே தக்க தருணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை பிரதி தலைவர் ஜெயவீரசிங்கம் செவ்வி

Featured Replies

தீர்வு கிட்டுவதற்கு இதுவே தக்க தருணம்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை பிரதி தலைவர் ஜெயவீரசிங்கம்  செவ்வி

 

நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத்தீர்வு கிட்டுவதற்கான தக்க தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(பிரித்தானியாக் கிளை) பிரதி தலைவர் க.ஜெயவீரசிங்கம்(ராசா) கேசரி நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- இலங்கையில் காணப்படும் தற்போதைய அரசியல் சூழமைவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டம் திகதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நீதி, சட்டம், ஒழுங்கு நிருவாக கட்டமைப்புகள் உட்பட அனைத்து அம்சங்களும் சுயாதீனத் தன்மையுடன் இயங்குவதற்கான கதவு திறக்கப்படும் என கூறப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்ற போதும் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரிய மக்கள் பண மோசடிகள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் வேகம் போதமலிருக்கின்றது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் ஏழு தசாப்தமாக உரிமைக்காகப்போராடி வருகின்ற தமிழ் இனம் ஒரு பாரிய இன வழிப்பிற்கு முகங்கொடுத்து நிற்கின்றது. இச்சமயத்தில் தமிழ் இனத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இனப்பிரச்சினைக்கான நீடித்திருக்கக்கூடிய தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் தமிழ் மக்களும், சர்வதேசத்திற்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

விசேடமாக தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றுவதற்கான முனைப்புகளை காட்டி வருகின்ற சூழலிலும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதியாக இருக்கின்றார்கள். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றார்.

இவற்றைப் பார்க்கின்ற போது இந்த கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு நிச்சயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எம்முன் தோற்று விக்கப்படுகின்றது. இருப்பினும் சில சக்திகளின் கடும்போக்கான கருத்துக்கள் அவ்வவ்பொழுது அந்த நம்பிக்கையை பலவீனமாக்குவதாகவும் காணப்படுகின்றது. ஆகவே தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கால தாமதங்களைக் செய்யாது விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி:- எதிர்க் கட்சியாக விளங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சமூக செயற்பாடுகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்:- முதலில் அரசியல் ரீதியான விடயத்தைப் பார்ப்போமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக விளங்குகின்றமை உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியதொன்றாகும். அரசியல் ரீதியாக மிகவும் இராஜதந்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையை நாங்கள் அவதானிக்கின்றோம்.

இலங்கை வரலாற்றில் தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளன. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்குச் சார்பாக பயன்படுத்தி எமது விடயங்களை நகர்த்தவேண்டும்.

அஹிம்சை ரீதியான, ஆயுத ரீதியான போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது புதியதொரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான பாதையில் எதிர்க் கட்சியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் பெற்று விட முடியாது. படிப்படியாகத்தான் அனைத்து விடயங்களையும் அடைந்து கொள்ள முடியும். சர்வதேச சூழல் தமிழர் தரப்பிற்கு சாதகமாக உள்ளது. அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் சாணக்கியத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.

சமூக ரீதியாக பார்க்கையில் யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்து போயுள்ள வடக்கு கிழக்கில் பல்வேறு அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. அவற்றை மேம்படுத்துவதில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றமை கவலையாகவுள்ளது.

எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு சமூக அபிவிருத்தி விடயங்களில் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, அடிப்படைத்தேவைகளை உடையவர்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றவர்களுக்கான திட்டங்கள் எனப் பல விடயங்கள் செய்யவேண்டியிருக்கின்றது. இவ்வாறானவற்றில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் முழுமையானதாக இருக்கவில்லை என்பதைப்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே அந்த விடயங்களில் அவர்கள் கூடுதலான கவனத்தை எதிர்வரும் காலங்களில் செய்ய வேண்டியுள்ளது.

கேள்வி:- ஒற்றையாட்சிக் கட்டமைப்பு காணப்படுகின்றமையானது இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?

பதில்:- ஆம். அது உண்மை தான். ஆனால் இருக்கின்ற அதிகாரங்களைப்பயன்படுத்தி பல்வேறு விடயங்களை முன்னகர்த்த முடியும் என்றே நான் கூறுகின்றேன். எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மத்திய அரசாங்கத்துடன், தேசிய அரசியலுடன் நேரடியாகத்தொடர்பு படுகின்றனர். அவர்கள் அரசியல் ரீதியான விடயங்களை கையாளுகின்றார்கள். அதேநேரத்தில் தொகுதிகளில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் அபிவிருத்திகளையும் செய்கின்றார்கள்.

இவ்வாறிருக்கையில், மாகாண சபைகள் இருக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவை சமூக அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமான வடமாகாண சபை இந்த விடயங்களில் முழுமையான வினைத்திறனுடன் செயற்படவில்லை என்றே கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் நாம் இருக்கின்றோம்.

மாகாண சபைகளுக்கு 37 அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்து ஏனைய 35 அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு ஏராளமான விடயங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறிருக்கையில் வடக்கு முதல்வர் அந்த விடயங்களில் அதீத கவனத்தைச் செலுத்துவதிலிருந்து விலகி தேசிய அரசியலுடனான அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அரசியல் ரீதியான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுப்பதற்கு நாம் எதிர்க்கவில்லை. ஆனால் சமூக ரீதியான விடயங்களில் அக்கறை செலுத்தாது உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படப்போவது கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுத்த எமது சமூகமே என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பாக இருந்தாலும் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத்தேர்தலுக்கு பின்னர் கூட்டமைப்பாக இயங்குவதில் பின்னடைவுகள் காணப்படுகின்றதே?

பதில்:- சில குறைபாடுகள் இருக்கின்றதாக நாம் அறிகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் ஆணை பெற்ற மக்கள் கட்டமைப்பு. கூட்டமைப்பாக செயற்படுவதனால் தான் மக்கள் அதனை அங்கீகரிக்கின்றார்கள்.

நம்பிக்கை கொள்கின்றார்கள். எத்தனையோ தரப்புகள் புதிய புதிய கதைகளைக் கூறிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே மக்கள் ஏகோபித்து அங்கீகரிக்கின்றார்கள். இந்த விடயங்களை கூட்டமைப்பில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே சில தரப்பினர் தமது சுய நலன்களைக் கைவிட்டு தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பாக ஒன்றிணைந்து அனுபவம் மிக்க தலைவர் இரா.சம்பந்தனின் வழிகாட்டலின் கீழ் அனைத்து விடயங்களிலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

கேள்வி:- வடக்கு, கிழக்கு மீள் கட்டுமானத்தில் புலம்பெயர்ந்தவர்களின் பங்கு பணிகள் எவ்வாறு உள்ளன?

பதில்:- புலம்பெயர்ந்தவர்கள் உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற போதும் அதன் பின்னர் தமிழ் மக்கள் கோரமாக பாதிக்கப்பட்ட போதும் தொடர்ச்சியாக தமது பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளைச்செய்து வருகின்றார்கள். எதிர்வரும் காலத்திலும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதற்கு தயாராகவே உள்ளார்கள்.

அவ்வாறிருக்கையில் மாகாண சபையினரும், உள்ளூராட்சி கட்டமைப்புகளும் அவ்வாறான உதவிகளை சரியான முறையில் நெறிப்படுத்தி பயன்படுத்தவேண்டும். அந்த உதவிகள் முழுமையாக மக்களிடத்தில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். எமது தாயக உறவுகளுக்கான எமது உதவிக்கரங்கள் என்றும் நீட்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

கேள்வி: ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் ஆளும் வர்க்கத்தினரின் கொள்ளைகளில் மாற்றம் ஏற்படாதிருக்கின்ற நிலையில் அவர்கள் மீது எவ்வாறு அதீத நம்பிக்கையை கொள்ள முடியும்?

பதில்:- உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களுக்கு இன்னமும் சந்தேகங்கள் காணப்படலாம். அவ்வாறிருக்கின்ற நிலையில் அரசியல் ரீதியான முயற்சிகள் எடுக்கப்படுகின்றபோது அதனை திரிவுபடுத்தி அவர்களிடத்தில் பிரசாரம் செய்யும் பணிகள் முழு மூச்சுடன் நடக்கின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைவு, சமஷ்டி போன்ற விடயங்களை அந்த மக்கள் மத்தியில் வேறொரு கண்ணோட்டத்திலேயே பிரஸ்தாபிக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகள் தென்னிலங்கையில் நீடித்துக்கொண்டிருக்கையில் வடக்கு கிழக்கிலும் தென்னிலங்கையின் இனவாதப் பசிக்கு தீனி போடும் வகையில் வடக்கு முதல்வரும், கஜேந்திரகுமார் அணியினர் உள்ளிட்ட தரப்பினரும் கடும் போக்கை கையாள்கின்றார்கள். எடுத்த எடுப்பிலேயே மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் எரிந்து கொண்டிருக்கும் இனவாத தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவதற்கே நிகராகின்றது. அவ்வாறானதொரு சூழலில் இன நல்லிணக்கம், சமாதானம், என்பன வற்றை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும். ஆகவே தமிழ் தரப்பில் தென்னிலங்கை இனவாதத்தினை மேலும் முடுக்கி விடும் வகையிலான செயற்பாடுகளை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அது மட்டுமன்றி அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்துள்ள கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது. இவ்வாறு தமிழ் கூட்டமைப்பு மேலும் வலுப்படும் பட்சத்தில் தற்போது ஒன்றுபட்டிருக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் எமக்கான நியாயத்தை வழங்குவதிலிருந்து பின்னிற்கவே முடியாது.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தங்களைத் தாங்களே ஆளக் கூடிய சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வே தமிழர்களை தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இந்த நாட்டில் அடையாளப்படுத்தும். அதனை வழங்குவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பின்னிற்கக்கூடாது.

கேள்வி:- ஜெனிவா கூட்டத்தொடரில் பிரித்தானியா இலங்கைக்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய முயற்சிகளை எடுகின்றதா?

பதில்:- எந்தவொரு நாடும் தனது நலன் சார்ந்தே செயற்படும். அதுவொருபுறமிருக்கையில் பிரித்தானியா கடந்த காலங்களில் தமிழர்களுக்காக பல்வேறு விடயங்களை செய்துள்ளது. பல்வேறு இடங்களில் குரல் கொடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் நன்கறிந்து கொண்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் பிரித்தானியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா, போன்ற முக்கிய நாடுகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்காது என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதேநேரம் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலிலிருந்து ஒருபோதும் விலகி நிற்கமுடியாது. கடந்த ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே அத்தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எமது கிளை கேட்டுக் கொள்கின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-18#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.