Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60

Featured Replies

குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60

 

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

‘Very good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை உணரும் நிலையில் தந்தை இல்லை. கோபாலபுரத்தில் குன்று போல் உட்கார்ந்து இருக்கிறார் கருணாநிதி.

p6a1.jpg

முதல் நாள்!

முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்? 17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக.  கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.

மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

p6b.jpg

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்

இருந்தும் என்ன பயன்?

நீங்கள்தான் ஏற்கெனவே

தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது.  பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து  ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கருணாநிதி. அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளை, ஒரு புதிய அரசியல் அணிக்கான அரசியல் சேர்க்கையாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஆக்கிக் காட்டத் திட்டமிட்டுள்ளார். எப்படிப் பார்த்தாலும் தி.மு.க-வுக்கு கருணாநிதி, ‘ஆயிரம் பொன்!’

கருணாநிதியின் சட்டமன்ற வாழ்க்கைக்கு வைரவிழா கொண்டாடுகிறது தி.மு.க. அதை விட அவர்களுக்குப் பெருமை தரத்தக்கப் பெரியது எதுவும் இல்லை. ஆனால், அந்த ஒரு பெருமை மட்டும் போதுமா? அண்மைக்கால தி.மு.க-வின் சட்டசபைச் செயல்பாடுகள் தி.மு.க-வுக்கும் கருணாநிதிக்கும் பெருமைதரத்தக்கதாக இல்லை. ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த நாளில், தனபாலின் கையைப் பிடித்து முறுக்கி வெளியில் தள்ளுகிறார் ரிஷிவந்தியம் ‘வசந்தம்’ கார்த்தி. மாட்சிமை தங்கிய பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்கிறார்கள் வில்லிவாக்கம் ரங்கநாதனும், ஆயிரம் விளக்கு கு.க. செல்வமும். இவர்களைக் கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், தி.மு.க. செயல் தலைவர். உரிமைக்குழு  அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய ஸ்டாலினோ, சட்டையைத் திறந்து போட்டு வருகிறார். சண்டையில் கிழியாத சட்டை கிடையாது. ஆனால், சண்டையே நடக்காத இடத்தில் சட்டை கிழிந்தது எப்படி?

“தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கருணாநிதி வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டுப் பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். ‘`இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கருணாநிதி. ‘`தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?

இன்றே கலவரம் ஏற்படுத்துவது... நாளையே கலைப்பது... நாளை மறுநாளே தேர்தல் நடத்துவது, வெற்றி பெறுவது என, அமைச்சர் ஆகி விடுவோம் என்ற கனவில் சட்டசபையை வாரச்சந்தையாக மாற்றிய மனிதர்கள் இங்கே! இத்தகைய தீராத விளையாட்டுப் பிள்ளைகளை நம்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தி.மு.க. கரை சேராது. காகித ஓடம் கடலலைமீது போவது போலே போய்விடும். இவர்களும் போய்விடுவார்கள். ஏனென்றால், இவர்கள் வந்தவர்கள்!

p6c.jpg

கருணாநிதி நிரந்தரம். ஸ்டாலினும் நிரந்தரம் ஆகப் போகிறாரா என்பதே முக்கியம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கருணாநிதி தலைவர் அல்ல; கருணாநிதி தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன; இருக்கின்றன. கருணாநிதி என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கருணாநிதியால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால், முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல்.

அவரால் இன்று எழுந்து வர முடியவில்லை; எழுத முடியவில்லை; பேச முடியவில்லை. ஆனாலும் அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். பெரியாரை அவர் விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பகுத்தறிவு அல்ல, வயிற்றறிவுதான் இன்று தி.மு.க-வின் வேதம். ஆனாலும், சிலருக்கு அவரைப் பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். முதலமைச்சர் ஆவதைவிட இப்படி ஒரு பிம்பமாக ஸ்டாலின் ஆனால்தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிமிர்ந்து நிற்க முடியும். காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் கருணாநிதியை உருவாக்கியது. காலதாமதமாக பி.ஜே.பி. எதிர்ப்பு அரசியலை ஸ்டாலின் இப்போது கையில் எடுத்துள்ளார்.

p6d.jpg

பிரதமர் மோடியை எதிர்ப்பது அல்ல, பி.ஜே.பி மோடியை எதிர்ப்பதில்தான் ஸ்டாலின் தனது பிம்பத்தை வளர்க்க முடியும். தேர்தல் காலத்து அணிச் சேர்க்கை அல்ல, தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கான வெகு மக்கள் திரள்தான்  வெற்றியைச் சேர்க்கும். இப்போதுதான் புத்தகங்களைத் திரட்டவும், படிப்பகங்களை உருவாக்கவும் முயல்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தை அடைவதற்கு முன்னால் மக்கள் மன்றத்தையும், மக்கள் மன்றத்தை அடைவதற்கு முன்னால் படிப்பு மன்றத்தையும் உருவாக்கியதாலேயே தி.மு.க. நிலைத்தது என்ற அரிச்சுவடி இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது.  ‘மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை’ என்றவர் கருணாநிதி. அவர் வாய் திறந்தால் இதைத்தான் சொல்வார். ஏனென்றால் அவர் 20-ல் விளைந்தவர்.

http://www.vikatan.com/anandavikatan

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை: கருணாநிதியின் எதிர்நிலை அரசியலில் வென்று நிற்கும் தமிழக தலைவர்கள்

 

 
 
இடமிருந்து வலமாக: கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ,விஜயகாந்த், ரஜினி | கோப்புப் படம்.
இடமிருந்து வலமாக: கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ,விஜயகாந்த், ரஜினி | கோப்புப் படம்.
 
 

கருணாநிதியின் சிறுமை- பெருமைகளையோ, நல்லது- கெட்டதுகளையோ சொல்லுவதென்றால் எம்ஜிஆரை சொல்லாமல், அவரை ஒப்பிடாமல் யாராலும் நகர முடியாது. எம்ஜிஆர் கதாநாயகன் என்றால் கருணாநிதி எதிரி. கருணாநிதி கதாநாயகன் என்றால் எம்ஜிஆர் எதிரி. அதிமுகவினர் கருணாநிதியை எதிரியாகவே காழ்ப்பு கொட்டினார்கள். இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரும் இதற்கு சளைத்தவர்களல்ல; எம்ஜிஆரை எதிரியாகவே கற்பிதம் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள்.

எம்ஜிஆர் சினிமாவில் கதாநாயக வலம் வந்தபோது எதிர்மறை கதாபாத்திரத்திற்கும், அதன் அடியாள் பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் அமைப்பார். அந்த வரிசையில் பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார், அசோகன், ஜஸ்டின் என பலரும் சுடர் விட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்பு இந்த எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு வேலையில்லாமல் போனது. அதற்காக முன்னணி கதாநாயகர்கள் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தும் பார்த்தார்கள். அது எடுபடவில்லை.

ஆனால் அரசியல் வாழ்வில் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் உருவாகியிருந்த- உருவாக இருந்த எல்லோருக்குமே வெறுப்பரசியல் சொட்டும் எதிர்நிலையாகவே விளங்கினார் கருணாநிதி. அந்த எதிர்நிலை அரசியலில் நீந்திக் கடந்தவர்தான் இன்றைக்கு தொடர்ந்து 60 ஆண்டுகாலம் சட்டப் பேரவையில் அங்கம் வகித்து அந்திமக் காலத்திலும் சுடர்விட்டு பிரகாசிக்கிறார்.

ஒரு மனிதரை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறோம். அதில் கல்வி, செல்வம், பிள்ளை, வீரம் என வரும் 16 பேறுகளை வரிசையும்படுத்துகிறோம். ஆனால் யாருக்காவது 16 பேறுகளும் உள்ள வாழ்வு கிடைத்திருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எல்லோரும் ஏதாவது ஒரு குறையுடனே இருக்கிறோம். இன்னமும் சுருக்கமாக சொன்னால் பெரும் செல்வம் பெற்றவன் பெரும் நோயுடன் இருக்கிறான், பெரிய, பெரிய பதவிகளில் இருப்பவன் குழந்தை செல்வம் இல்லாதிருக்கிறான்.

பெரிய செல்வந்தனாக உள்ளவன் கல்வியில் தற்குறியாக இருக்கிறான். இப்படி பெரும் குறை எதுவும் இல்லாத வாழ்வு என்பது யோசித்துப் பார்த்தால் தமிழக தலைவர்களில் கருணாநிதிக்கே வாய்த்திருக்கிறது. அவர் மீது வெறுப்பரசியல் கொண்டு காழ்ப்பை உமிழ்பவர்களும் தங்களுக்குள் இருக்கும் காரண காரியங்களை ஆராய்ந்தால் தவறு என்று ஒன்றில்லை என்ற புள்ளியில் மாயவிநோத வெறுப்புகளை அகற்றிப் பார்த்தால் அது கொஞ்சமேனும் புலப்படும். அந்த எல்லையிலேயே கருணாநிதிக்கு சட்டப்பேரவை வைர விழா பாக்கியம் கிடைத்திருப்பதாக கூடத் தோன்றுகிறது.

கருணாநிதி கோவையில் வாழ்ந்த காலம். சிங்காநல்லூரில் அண்ணாசாமி என்ற பஞ்சாலைத் தொழிலாளியின் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து கொண்டு சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்று கதை வசனம் எழுதி வருகிறார். அந்த நேரத்தில்தான் மூத்த நாடக சபா காரியதரிசி ஒருவரின் சிபாரிசில் எம்ஜிஆர் கருணாநிதியை சந்திக்க வருகிறார். மொசு, மொசுவென்ற நாடக நடிக பாகவதருக்கான நிறைந்த முடியுடன் பரட்டைத் தலையுடன் செக்கச் சிவந்த நிறத்துடன் வந்த எம்.ஜி.ராமச்சந்திரனை பார்க்க அன்று அறையில் கருணாநிதி இல்லை. அவர் இரவு வெகுநேரம் கழித்தே ஸ்டுடியோவில் இருந்து திரும்ப, அவரை சந்திக்கிறார் எம்ஜிஆர். அறையில் கருணாநிதிக்கு மட்டுமேயான உணவை வைத்துவிட்டு போயிருக்கிறார் ஓட்டல் கடைக்காரர். அந்தக் கடையும் பூட்டிவிட்டார்கள். வேறு வழியில்லை. அப்போது இருந்த உணவை இருவரும் பகிர்ந்தே உண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு 'மருதநாட்டு இளவரசி', 'மலைக்கள்ளன்' என படவாய்ப்புகள் பெற்று சுடர்விடுகிறார் எம்ஜிஆர். சிங்காநல்லூருக்கும், ராமநாதபுரத்துக்கும் 3 மைல் தொலைவு. சிங்காநல்லூரில் கருணாநிதி, ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் இருவரும் குடியிருந்து கொண்டு இந்த இடைவெளியில் இருக்கும் பட்ஷிராஜா, சென்ட்ரல் ஸ்டுடியோக்களில் இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர் நடிக்கிறார்; இவர் கதை வசனம் எழுதுகிறார். இப்படியான நட்பு பின்னாளில் அரசியலில் விரிந்து அண்ணா கண்ட பொக்கிஷங்களாக நகர்கின்றனர். அண்ணாவுக்குப் பின்பு நெடுஞ்செழியனே என்ற நிலையில் செஞ்சோற்றுக்கடன் கழித்த நிலையிலேயே எம்ஜிஆர் கருணாநிதியை கை காட்டுகிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கு செல்வாக்கா?

ஆம். நிச்சயமாக என்று அந்தக் காலத்தில் இவர்களை ஊன்றிக் கவனித்த அரசியல், சினிமா புள்ளிகள் சொல்லியிருக்கிறார்கள். சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது. ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா. இதுதான் அப்போது இருந்த எம்ஜிஆர் மாயை.

'ஆரிய மாயை' என்ற புத்தகத்தை எழுதி திராவிட நாடு கொள்கைகளை வளர்த்து அரசியலில் வென்றவர்தான் அண்ணா. அது அவரின் அரசியலை பறை சாற்றியது. ஆனால் அவருக்கான வெகுஜன ஓட்டு அரசியலை எம்ஜிஆரின் சினிமா மாயையே பெருமளவு அறுவடை செய்தது. அதை சரியாகப் புரிந்து கொண்டே தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. அப்படியானால் கருணாநிதிக்கு எந்த சக்தியும் இல்லையா? என்றால் இருந்தது.

அது முழுக்க அண்ணாவின் பேச்சு, எழுத்து, அடுக்கு மொழி பேசும் சக்தி. அதையும் மீறிய அரசியல் சாணக்கியம், சாதூர்யம் அவருக்குக் கை கொடுத்தது. அரசாட்சியில் அனைத்து அதிகாரத்தன்மைகளையும் சுவிகரித்த பின்னரே கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்குமான அரசியல் பிணக்கு தொடங்கியது. அந்த பிணக்கை வைத்து கட்சியை உடைக்க மத்திய சக்திகள் துணை புரிந்தன. கருணாநிதி என்பவர் அணு, அணுவாக பேசிப்பேசி கவர்ந்து மக்களை திரட்டிய தலைவர் என்றால் எம்ஜிஆர் என்பவர் லட்சிய இளைஞராக நல்லவராகவே சினிமாவில் நடித்து, நல்லவராகவே வாழ்கையும் வாழ்வதாக மக்களை நம்ப வைத்து, குறிப்பாக தாய்க்குலமே என்று பெண்களை விழித்ததன் மூலம் அந்த சக்திகள் அத்தனையும் தனக்கே குவியுமாறு பார்த்துக் கொண்டவர்.

அந்த மக்கள் சக்தி மாபெரும் பிரளய சக்தியாகவே உருவெடுத்தது. எனவேதான் கருணாநிதியை கலெக்டிங் லீடர் என்றும், எம்ஜிஆரை மாஸ் லீடர் என்றும் நடுநிலையாளர்களை பேச வைத்தது. இந்த சூழ்நிலையில்தான் எமர்ஜென்சி வர, திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட, பத்திரிகைகள் வசைபாட, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட, எமர்ஜென்சியில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக் கொடுமை அனுபவிக்க, அதை தன் பிரச்சாரத்தில் வாகாக பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.

அப்போது பதியப்பட்ட கருணாநிதியின் மீதான பிம்பங்கள் அரசியல் மாச்சர்யங்கள் கடந்தது. மேடைப்பேச்சு முந்தையதை விட தாழ்நிலை அடைந்தது. தனிமனித தாக்குதல்களுக்கென்றே தலைமைக் கழக பேச்சாளர்கள் தோன்றினர். இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதை மிக அழுத்தமாகவே தமிழகச் சூழலில் பதிவு செய்து விட்டார் எம்ஜிஆர். அதை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால் சினிமாவில் நம்பியார், அசோகன், ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை எதிர்மறைக் கதாபாத்திரமாகவே கற்பிதம் செய்து நிலை குழைய வைத்ததை விடவும் கூடுதல் மடங்கு விஸ்வரூபம் எடுத்தது.

எம்ஜிஆர் மட்டுமல்ல; யார் வந்து கருணாநிதியை திட்டினாலும் தமிழகத்தில் ஒரு கட்சிக்கு தலைவனாகி விடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் மரணத்திற்கு முன்பே அதை பிரமாதமாக கையாண்டார் ஜெயலலிதா. மேடையில் என்னதான் திமுகவினர் கேவலமாகப் பேசினாலும் திட்டினாலும் எம்ஜிஆர் கருணாநிதியை கலைஞர் என்றும், மு.கருணாநிதி அவர்கள் என்றும் குறிப்பிட்டு பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முதல்வராக இருந்த அவையில் எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி எதிர்ப்படும் போது அவருக்கு எழுந்து வணக்கம் செலுத்துபவராகவும், புன்னகைப்பவராகவுமே இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அடுத்த நிலைக்குச் சென்றார். கருணாநிதி என்று பெயர் சொல்லியே வசைபாடினார். பல சமயங்களில் வயது வித்தியாசம் கூட கருதாமல் ஒருமையிலேயே விளம்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசியலின் தீயசக்தி என்றே தாக்குதல் நடத்தினார். ஆரம்ப கட்டத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவை ஒரு அரசியல் தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை. 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததற்கு பிறகு கருணாநிதி ஜெயலலிதாவை பற்றி பேட்டிகளில் குறிப்பிடும் போதெல்லாம் அந்த அம்மையார் என்றே குறிப்பிட்டு வந்தார்.

1991ல் முதல்வராக வந்த பிறகுதான் ஜெயலலிதா என்ற பெயரையே உச்சரித்தார் கருணாநிதி. அப்படியிருந்தும் கூட மேடை நாகரிகம் கருதி அவர் மீது அவச்சொல் வீசியதில்லை. சில கட்டங்களில் ஜெயலலிதாவின் ஒருமை, ஏகவசனத்தில் திட்டும் பேச்சை கேட்டு, 'நான் இந்த அம்மையாருடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே!' என்று கூட மனம் புழுங்கி பேசியிருக்கிறார்.

இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியல்தான் தமிழகத்தில் எம்ஜிஆருக்கு மாற்றாக, அவரை விடவும் வீரியமாக தமிழக முதல்வர் பதவியில் ஜெயலலிதாவை அமர்த்தியது. எம்ஜிஆர் வாழ்ந்த காலம் வரை அவரின் எதிர்ப்பு அரசியல் வலுவை மீறி கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் 39ல் 38 ஐ வென்றார் கருணாநிதி.

அதை அப்படியே விட்டிருந்து அடுத்த தேர்தல் வரை காத்திருந்திருந்தால் கூட 1983ல் நடக்க இருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை உடைத்து எடுக்க முயற்சிக்கும் விதமாக ஆட்சியை கலைக்க இந்திரா காந்தியிடம் தூண்டுகோல் போட்டு அதை செயலாற்றியதன் மூலம் எம்ஜிஆர் வீதி, வீதியாக சென்று தாய்க்குலங்களிடம், 'யான் என்ன தவறு செய்தேன்; எதற்காக என் நல்லாட்சியை கலைத்தார்கள்?' என கண்ணீர் சிந்த, அனுதாப அலை அவர் பக்கமாக வீசி விட்டது.

முன்பிருந்த எதிர்ப்பை விட ஒரு வித எரிச்சல் அலை திமுகவிற்கு 1980ல் பெரும் தோல்வியைக் கொடுத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் அரசியல் சாணக்கியராகி விட்டார். 1989ல் அதிமுக உடைந்ததால் சுலபமாக திமுக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து வந்த இலங்கை தமிழர் பிரச்சினை, அதற்கான ஆதரவு, திமுகவில் இருந்த வைகோ கள்ளத்தோணியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கச் சென்ற சூழல், இலங்கையில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, ராஜீவ் காந்தி கொலை எல்லாமே கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் வேலைகளை செய்து விட்டது.

1991ல் வென்ற அதிமுகவின் 1996 வரையிலான தான் தோன்றித்தனமான அரசியல் செயல்பாடு கருணாநிதிக்கு மீண்டும் தெம்பைக் கொடுத்தது. தனது நிர்வாகத்திறமையால் நல்லாட்சியே நடத்தினார் கருணாநிதி. ஆனால் அரசியல் ரீதியாக அவர் தன் மகனுக்காக பெரும்பாடு பட வேண்டியதிருந்தது.

எம்ஜிஆர் இருந்தவரை அவரின் எதிர்ப்பரசியலை எதிர்கொண்ட கருணாநிதி தன் பிள்ளைக்காகவே தன் கட்சியில் பிரபலப்பட்ட வைகோவை கட்சியை விட்டே வெளியேற்ற நேர்ந்தது. அவரும் கருணாநிதியை எதிர்க்கும் போதெல்லாம் பெரும் அரசியல் தலைவர் போலவே வைகோ சுடர் விட்டார். ஆனால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை.

ஏனென்றால் ஏற்கெனவே எம்ஜிஆரை விட எதிர்ப்பு அரசியலில் பிரம்மாண்ட பிம்பமாக ஜெயலலிதா விளங்கியதால் அதன் முன்பு சுடர் விட முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த போது கொஞ்சமாய் ஜொலித்தவர், திரும்ப திமுகவுடன் கூட்டு வைத்த போது தன் அடையாளத்தை இழந்து நின்றார். தமிழக அரசியலை பொறுத்தவரை கருணாநிதியை எதிர்த்தால் மட்டுமே அரசியல் வாழ்கை நடத்த முடியும் என்ற முடிவுடனே அரசியல் கட்சி ஆரம்பித்து வந்த விஜயகாந்த் கருணாநிதியை திட்டும்போதெல்லாம் கறுப்பு எம்ஜிஆர் போலவே ஜொலித்தார்.

அவரே ஜெயலலிதாவை ஓங்கி திட்ட வேண்டிய நிலை வந்தபோது சிக்கலுக்குள்ளாகிப் போனார். கருணாநிதி எதிர்ப்பையும், ஜெயலலிதா எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் செய்வதென்றால் எம்ஜிஆரை போல் இன்னமும் பல மடங்கு பலம் வேண்டும். அது கிடைக்காத போது துவண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் மீடியாக்கள் அலறிய வேளை அவருக்கான தனி பிம்பம் உடைய ஆரம்பித்தது. அவருக்கான உடல்நலக்குறைவு இன்னமும் அரசியல் தேய்வை கொடுத்தது. இந்த கலாட்டாக்கள் எல்லாம் நடந்த வேளை இன்னொரு எதிர் துருவமாக விளங்கிய ரஜினி அரசியலுக்கு வந்தால்? என்ற கேள்வி பலரையும் குடைந்தது.

அது திமுகவை நிறையவே குழம்ப வைத்திருக்க வேண்டும். எனவேதான் 1996ல் ரஜினி வாய்ஸ் நல்ல வாய்ஸ், படையப்பா நீ உடையப்பா என்றெல்லாம் பாராட்டிய கருணாநிதி, ரஜினி எதிர்நிலை எடுத்த வேளையில் எல்லாம் அவரைப் பற்றிய கேள்விகள் வரும்போது நோ கமெண்ட் சொல்ல ஆரம்பித்தார். அந்த நோ கமெண்ட் ஆலாபனை அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தவரையே தொடர்ந்திருக்கிறது.

இப்போது ஜெயலலிதாவும் இல்லை. விஜயகாந்துக்கும் பெரியதாக வரவேற்பு இல்லை. அடுத்த தேர்தல் வந்தால் சுலபமாக வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டிய காலச் சூழல். இதை எதிர்பார்த்தது போலவே ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். நான் அரசியல் கட்சி தொடங்கினால் கெட்டவர்களுக்கு இடம் இல்லை என்கிறார். போர் வரட்டும் என்கிறார். அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்று கேட்டால் தேர்தல் வரட்டும் சொல்கிறேன் என்கிறார்.

அவருக்கு தோதாக கமலஹாசனும் வார்த்தைகளை விடுகிறார். ரஜினியை தமிழருவி மணியன் சந்திக்கிறார். நக்மா ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார். இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தன் தந்தை தலைவருக்கு சட்டப்பேரவை வைர விழா அறிவிக்கிறார். ராகுல்காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் அந்த விழாவுக்கு வருகிறார்கள்.

இதுவெல்லாம் எதை காட்டுகிறது. ரஜினியின் புதிய பிரவேசம் திமுக அரங்குக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சரிப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுக தலைவர்களுக்கு உள்ளது. இந்த கட்டாயமே வைர விழா தலைவரை பிரம்மாண்டப் படுத்தி கொண்டாட வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் கொள்ளலாம்

http://tamil.thehindu.com/tamilnadu/எம்ஜிஆர்-முதல்-ரஜினிகாந்த்-வரை-கருணாநிதியின்-எதிர்நிலை-அரசியலில்-வென்று-நிற்கும்-தமிழக-தலைவர்கள்/article9715268.ece?homepage=true

  • தொடங்கியவர்

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி

 
 

வைரவிழா கருணாநிதியுடன் ஸ்டாலின் , துரைமுருகன்

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" 

மேடையில் கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். ''கதையாசிரியர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல...  சிறந்த பேச்சாளர் என்பதும் 'கருணாநிதி' என்ற ஆளுமையின் அடையாளம்" என்பார்கள் அவர் கட்சி சாராத தலைவர்களும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு முறை பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். பேச்சின் மூலம் ஒரு பெரும் கூட்டத்தைத் தம் பக்கம் திருப்பி வைத்திருந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், சில மாதங்களுக்கு முன் திடீரென தொண்டை, நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான இந்த சிகிச்சைகளால், கருணாநிதி பேசமுடியாத சூழல் ஏற்பட்டதோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் தடைபட்டது. கருணாநிதியை நேரில் சந்திக்க முடியாத தி.மு.க தொண்டர்கள் முரசொலியில் அவ்வப்போது இடம்பெற்ற அவரின் படத்தைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டனர். ஆனால், 'கால மேகம் மாறிவருகிறது. தலைவரின் மௌனம் உடைந்துவிட்டது' எனச் சமூக வலைதளங்களில் குதூகலமாகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் தி.மு.க-வினர். ''ஆம்... எங்கள் தலைவர் வாய்திறந்து பேசிவிட்டார்'' என்கின்றனர் உற்சாகமாக. அதற்குச் சான்றாக நமக்கொரு பதிவை வாட்ஸ் அப்-பில் பகிர்ந்தனர். 

இதோ 'தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து கழக முன்னோடி துரைமுருகன்' எனத் தலைப்பிட்ட பதிவு :

தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால், பேச இயலவில்லை...

கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேசச் சொன்னார்கள்.

தலைவரிடம் ''உங்கள் பெயர் என்ன?'' எனக்கேட்க...

"என் பெயர் கருணாநிதி'' என்றார்.

அடுத்ததாக 

''உங்களுக்கு யாரைப்பிடிக்கும்?'' எனக்கேட்க...

''அறிஞர் அண்ணா'' என்றார்.

பின்னர், என்னை ''யார்?'' எனக்கேட்க...

"துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன.

மீண்டு வருவார் தலைவர்...

'வைரவிழா நாயகர்'

கலைஞர் '94'

- இப்படிக்கு துரைமுருகன்.

கருணாநிதி

இந்தப் பதிவைப்  படித்ததும் ''உண்மையா?'' என்றோம் ஆச்சர்யத்துடன். "என்ன ப்ரோ இப்படி கேட்குறீங்க? தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமானதும் நாங்கள்லாம் துடிச்சுட்டோம். சீக்கிரம் குணமாகணும்னு நினைச்சோம். வீட்டுலயும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்ல டி.வி பார்க்க ஆரம்பிச்சாரு. மத்தவங்க அவருக்கு அன்றாட செய்திகளைத் தெரியப்படுத்த சத்தமா பேப்பர் படிச்சுக் காட்டுவாங்க. தினமும் செயல் தலைவர் ஸ்டாலின் ரெண்டு முறையாவது வந்து பார்த்துட்டு போவாரு. தொண்டையில் டியூப் போடப்பட்டிருப்பதால தலைவரால பேசமுடியாது. அதனால எது வேணும்னாலும் செயல் தலைவரோட கையை மெதுவா அழுத்துவாரு தலைவர். அந்த தொடுதலைப் புரிஞ்சுக்கிட்டு செயல் தலைவரும் உதவுவாரு. கொஞ்சம் கொஞ்சமா தலைவரோட சிகிச்சையில் முன்னேற்றம் வந்தது. இந்த நேரத்திலதான் 'தலைவர் பேசினார்'னு அண்ணன் துரைமுருகன்கிட்டயிருந்து பதிவு வந்தது. ஜூன் 3 - ம் தேதி வைர விழாவுக்கு எப்படியும் தலைவர் கருணாநிதி வருவார்ங்கிற எங்க நம்பிக்கை கூடியிருக்கு" என்றனர் தூக்கலான உற்சாகத்துடன்.  நாம் இது குறித்து தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரைமுருகனிடம் பேசினோம்.

 

"தலைவர் உடல்நிலை சூப்பரா இருக்கு. நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்பாரு. அதுல பிரச்னை ஒன்றுமில்லை. தொண்டையில குழாய் வைத்திருந்ததால பேசமுடியாம இருந்தாரு. அப்புறம்தான் ரெண்டு நாள் முன்னாடி குழாயை எடுத்துட்டு மருத்துவர்கள் பேசச் சொன்னாங்க. தலைவரும் பேசினார். அந்த நொடி எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு... ஒருபுதுவிதமான உணர்வு" என்றார் மகிழ்ச்சி பீறிட. அவரிடம் ,''வைரவிழா மேடையில்  கருணாநிதியைப் பார்க்கலாமா?'' என்றோம். "அது மருத்துவர்களைப் பொறுத்தது, சிகிச்சையைப் பொறுத்தது. கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது." என்றார். அவரின் பதிலில் தெரிந்த அழுத்தம், எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/90709-en-uyirinum-melaana-anbu-udanpirapugale-dmk-chief-karunanidhi-starts-to-speak.html

  • தொடங்கியவர்

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?

 
 
 

 இந்திய அரசியலில் மூத்த தலைவராக விளங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி,  வருகிற 3-ம் தேதி தன்னுடைய 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை  கடந்து வந்திருப்பவர் அவர். அவருடைய பிறந்தநாளில் அவர்குறித்த  சுவையான பத்து விஷயங்கள் இங்கே !

indn_128309_01101.jpg

1. கருணாநிதி எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசியதுதான் அவருடைய முதல் மேடைப் பேச்சு.

2. கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறுவயதில் கருணாநிதிக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது கிரிக்கெட் அல்ல, ஹாக்கி. திருவாரூர் ஃபோர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமிற்காக மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார்.

3. திருச்சி வானொலி நிலையத்துக்கு 1944-ல் கருணாநிதி அனுப்பி வைத்த நாடகம், ' இதனை ஒளிபரப்ப இயலாது' என்ற பதிலுடன் திருப்பி அனுப்பப்பட்டது. ஆட்சியாளர்களை அந்த நாடகத்தின் வசனங்களும் கதாபாத்திரங்களும் வெளுத்து வாங்கியதே அதற்குக் காரணம்.  'குண்டலகேசி' என்ற அந்த நாடகம்தான் பிற்காலத்தில் மந்திரிகுமாரி என்ற படமானது...

4.  நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி (1953) ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை ராஜாஜி தலைமையிலான தமிழக அரசு மூடியது. "மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு பாதி நேரமும் 'குலத்தொழில்' கற்க  மீதி நேரமும் ஒதுக்கும்" படி ராஜாஜி அறிமுகப் படுத்திய 'குலக்கல்வி' திட்டத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. எப்போதும் போல் பெரியார் முதல் குரல் கொடுத்தார். அண்ணா போராட்டம் அறிவித்தார். ஆண்டை  நினைவூட்டும் விதமாக  53 பொதுக்கூட்டங்களில்  குலக்கல்வி முறையை எதிர்த்து   கருணாநிதி, தொடர் உரையாற்றினார்... விளைவு, ராஜாஜி பதவி விலகினார். முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்.

5. திருவாரூர் முத்துவேலர் என்பதை சுருக்கி டி.எம்.கருணாநிதி என்றுதான் தொடக்கத்தில் கையெழுத்திட்டு வந்தார் கருணாநிதி. பின்னர், மு.கருணாநிதி என்று அதை மாற்றிக் கொண்டார். 'உடன்பிறப்புக்கு' எழுதும் கடிதத்தில் மட்டும் அவர் மு.க. என்றே கையெழுத்திடுவார்.

6. நடுத்தெரு நாராயணன், பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, அரும்பு, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், வான்கோழி, சுருளிமலை,வெள்ளிக்கிழமை, புதையல் போன்ற தலைப்புகளில் சமூகம் தொடர்பான காவியங்களை படைத்தவர் கருணாநிதி. தென்பாண்டி சிங்கம், பலிபீடம் நோக்கி, ரோமாபுரி பாண்டியன், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்றுக் காவியங்களும் கருணாநிதியின் எழுத்தாற்றலுக்கு சான்றாகத் திகழ்கின்றன. கருணாநிதியின் வாழ்க்கையையும்,  எழுபதாண்டு அரசியல் களத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் நூலாக அமைந்திருப்பது, 'நெஞ்சுக்கு நீதி' !  இந்நூலின் ஆறாம் பாகம் 2013-ல் வெளியிடப்பட்டது.  

7. தமிழ்நாடு அரசின் மாநில செய்தி வெளியீடாக வரும் தமிழ்நாடு அரசு செய்திப்பிரிவு (படச்சுருள்) படத்தையும்,  தமிழ்நாடு அரசு இதழான 'தமிழரசு' (தமிழ்- ஆங்கிலம்) இதழையும் உருவாக்கியவர் கருணாநிதிதான்.

8. சரளமாக ஆங்கிலத்தில் பேசியதில்லை என்றாலும் கருணாநிதியின் ஆங்கில ஞானம் சற்றே அசத்தலானது... கருணாநிதியின் பேட்டி முடிந்ததும், சில நிமிட காத்திருப்பில் அந்தப் பேட்டியின் முழுமையை  அறிக்கையாக அவருடைய உதவியாளர்கள்  நிருபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்...

ஒரு நாள் அப்படி அறிக்கை கொடுப்பதில் சற்றே தாமதம். ஜெராக்ஸ் எடுக்கப் போன உதவியாளர் வரவில்லை. "சார், நாங்கள் எடுத்த பேட்டியை அப்படியே  சொல்கிறோம்,  நீங்கள் 'டிக்டேட்' செய்தால் போதும்" என்றனர் நிருபர்கள். "நீங்கள் (நிருபர்கள்) சொல்வது போல் நான் டிக்டேட் செய்தால் நான் 'டிக்டேட்டர் ' (சர்வாதிகாரி) ஆகிவிடுவேனே"  என்றார் கருணாநிதி.  அந்த 'டைமிங்' ஆற்றலை கருணாநிதியிடம் அடிக்கடி காணலாம்.

9. கருணாநிதிக்கு பிடித்த வசனம், "மனசாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது.

10. கருணாநிதியின் முதல்போராட்டமே கல்வி உரிமைக்கான போராட்டம்தான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கருணாநிதியை ஆறாம் வகுப்பில் (1936) சேர்க்க மறுத்து விட்டனர். ' என்னை படிக்க விடவில்லை என்றால் எதிரேயிருக்கும் தெப்பக் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று  பள்ளிக்கு எதிராகப் போராடியதோடு  தெப்பக் குளத்தில் குதிக்கவும் முற்பட்டார் கருணாநிதி. வேறுவழியின்றி அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டது பள்ளி நிர்வாகம்... கருணாநிதியின் முதல் போராட்டமே வெற்றிதான்.

http://www.vikatan.com/news/tamilnadu/90849-10-interesting-facts-about-karunanidhi.html

  • தொடங்கியவர்

கருணாநிதி(94) : இவர் நல்லவரா? கெட்டவரா?

சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக, மிகப்பெரும் ஆளுமையாக ஆட்சி செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்!. தன் வாழ்நாளில் மக்களை அதிகம் கவர்ந்த தலைவரும்,
மக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே! தனி ஒரு மனிதனாக கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு!

  • தொடங்கியவர்

திருக்குவளை முத்துவேலர் தமிழக முதல்வர் கருணாநிதி ஆன கதை! #3MinsRead

 

அண்ணாவுடன் கருணாநிதி

 

தி.மு.க என்றால் ‘திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி’ என்று அவருடைய தொண்டர்கள் சொல்லக்கூடும். 
தி.மு.க-வுக்கும் மு.க-வுக்குமான பந்தம் அப்படித்தான் ஆகிவிட்டது.

மு.க என சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படும் மு.கருணாநிதி, நாகப்பட்டினத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் பிறந்தார். தந்தை, முத்துவேலர்; தாய், அஞ்சுகம். கருணாநிதிக்குப் பெற்றோர் இட்ட பெயர், தட்சிணாமூர்த்தி.
தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பேச்சாற்றலும் திராவிடர் கழக ஈடுபாடும் மாணவப் பருவத்திலேயே அதிகம். அதனாலேயே அவருடைய பள்ளிப் படிப்பிலும் அவருடைய கவனம் செல்லவில்லை. நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-வது வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது இளம் பருவத்தில், மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான அனைத்து மாணவர்களின் கழகம் என்ற அமைப்பாக உருபெற்றது.
அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்ட கருணாநிதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க ‘மாணவர் அணி’ என்று அதைச் சொல்லலாம். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசைவாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும் விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர் துண்டுப் பிரசுரமாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித் தோழர்களான அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

1957-ல் நடைபெற்ற தி.மு.க இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாள் பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி இந்தி திணிப்பை எதிர்த்து, ``இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றார்.
அதேபோல், அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16-ம் தேதி அண்ணாவும், நவம்பர் 19-ம் தேதி கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கண்ணதாசன்.

கருணாநிதியின் சட்டமன்ற நகைச்சுவைகள் ஆல்பத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

1957-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டார். முதல் முறையாக தி.மு.க சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும் முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் அது வழிவகுத்தது.
1967-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் தி.மு.க முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும் கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர். தி.மு.க-வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க-வின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969–1971 அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை, 1971-1976 இரண்டாவது முறை, 1989–1991 மூன்றாம் முறை, 1996-2001 நான்காம் முறை, 2006-2011 ஐந்தாம் முறை என முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாகப் பங்கேற்றார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார். அரசியல் பணிகளுக்கு இடையே திரையுலகிலும் அவருடைய செல்வாக்கு உயர்ந்திருந்தது. 

அன்றைய நாட்களில் நாடகங்களுக்கு அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ என்று விளம்பரப்படுத்துவது வாடிக்கை. கலைஞர் கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகத்தில் எம்.ஆர்.ராதா நடித்துவந்தார். அறிஞர் அண்ணா என அழைப்பதுபோல கலைஞர் கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ என விளம்பரப்படுத்த ஆரம்பித்தார் எம்.ஆர்.ராதா. அதுவே கருணாநிதியின் பெயரோடு நீடித்து இருக்கும் பெயராக நிலைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் நடிப்பில் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘பராசக்தி’ திரைப்படம் கலைஞரின் வசனங்களுக்காகவே திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டது. வசனப் புத்தகங்கள் லட்சக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு, இளைஞர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் திரை உலகில் அப்படி ஒரு வசனப் புரட்சி நிகழ்ந்ததில்லை. பலர் சினிமாவில் கருணாநிதிபோல வசனம் எழுத வேண்டும்... கருணாநிதியின் வசனங்களை உச்சரித்துப் பழக வேண்டும் என விரும்பி சினிமாவுக்கு வந்தனர்.

இவர் வசனம் எழுதிய மனோகரா, பூம்புகார், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற சரித்திரப் பின்னணி படங்களுக்கு அப்போது மிகுந்த வரவேற்பு இருந்தது. சரித்திரப் படங்களின் வசனங்களிலும் திராவிட இயக்கக் கருத்துக்களை சாதுர்யமாக சேர்ப்பதில் கலைஞர் வல்லவர். அது அரசியல் மட்டத்தில் அவருக்கு செல்வாக்கை உயர்த்தியது.

கருணாநிதியுடன் சிவாஜி‘‘அரசனையே எதிர்க்கத் துணிந்துவிட்டார்களா? என மன்னன் கேட்பார். ‘’ஆண்டவனையே எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள்’’ என நாயகன் சொல்வான். இதுதான் கலைஞரின் எழுத்து யுக்தி.. 

அண்ணாவைப் போன்ற பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓயாத அரசியல் பணி, பத்திரிகை பணி எனப் பன்முகத் தன்மை கலைஞர் இடத்திலும் இருந்தது. அதுவே அவரை அண்ணாவுக்கு அடுத்த இடத்துக்கு அமரும் தகுதியை ஏற்படுத்தியது.

கருணாநிதி மூன்று முறை திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்குப் பிறந்தவர், மு.க.முத்து. கருணாநிதியின் முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி. மூத்த மகன் மு.க.முத்து திரையுலகில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’ போன்ற படங்கள் அவர் நடித்தவை. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகப் பணியாற்றியவர். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக, தி.மு.க-வின் செயல் தலைவராக இருக்கிறார். மு.க.அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

அரசியல் பணிகளுக்கு இடையே இளைப்பாறும் இடமாக இலக்கியம் தனக்கு இருப்பதாக கலைஞர் சொல்வார். முதல்வராக இருந்த நேரங்களிலும்கூட கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கும் ஆர்வம் இவருக்கு இருந்தது. 

ஒரு கவியரங்கத்தில் கவிக்கோ அப்துல்ரகுமானை மேடைக்கு அழைத்தபோது, ‘‘வெற்றி பல பெற்று நான் விருது பெற வரும்போது, வெகுமானம் எது வேண்டும் எனக் கேட்டால்... அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’ என்றார். கவிஞர்கள் மீது அவருக்கு இருந்த மரியாதைக்குச் சான்று அது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தி.மு.க மீதும் கலைஞர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைப்பவர். காட்டமாகத் தாக்குபவர். ஆனால், ஜெயகாந்தன் மீது கருணாநிதி வைத்திருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை. கண்ணதாசனைப் போல கருணாநிதியை விமர்சித்தவர் இருக்க முடியாது. ஆனால், கண்ணதாசனை அவர் எதிர்த்ததில்லை. ‘கண்ணதாசன் ஒரு குழந்தை. அவர் எடுப்பார் கைப்பிள்ளை’ என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் கருணாநிதியைத் தாக்கி எழுதி வந்த நேரத்தில்தான் அவருக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு ஒதுக்கிக் கொடுத்தார். எழுத்தாளர்களிடம் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடித்தமானது. ஏராளமான நூல்களை இவர் தமிழின் வளர்ச்சிக்காகத் தந்துள்ளார்.

இவரின் தன் வரலாற்று நூல், ‘நெஞ்சுக்கு நீதி’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்த நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

கருணாநிதி

திரைப்படங்களுக்கு எழுதிய கதைகள், வசனங்கள் 75-ஐ நெருங்கிவிட்டன. திரைப்பணியையே முழு நேரமாக  செய்தவர்களைவிட இவருடைய சாதனை அதிகம். இவருடைய வசனத்தில் வெளியான திரைப்படங்களில், ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘இருவர் உள்ளம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘நீதிக்கு தண்டனை’, ‘பாசப் பறவைகள்’, ‘பாடாத தேனீக்கள்’, ‘பாலைவனப்பூக்கள்’ ஆகியவை முக்கியமானவை.

மேடை நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். அவற்றில் சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், நச்சுக் கோப்பை ஆகியவை பிரசாரத்தன்மை மிக்கவை. இதில் மணிமகுடம், தூக்கு மேடை, ஒரே ரத்தம் ஆகியவை சினிமாவாக மாறியவை.

எழுதிய நூல்களில் பல திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு உற்சாக டானிக்காக அமைந்தன. ‘தேனலைகள்’, ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, தொல்காப்பியப் பூங்கா’, சங்கத் தமிழ், ஒரே ரத்தம், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், வெள்ளிக்கிழமை, இனியவை இருபது,சங்கத் தமிழ், திருக்குறள் உரை, மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று அவற்றுள் முக்கியமானவை.

எத்தனை திரைக்கதைகள், எத்தனை நாவல்கள், எத்தனை கடிதங்கள், எத்தனை மேடைப் பேச்சுகள், எத்தனைப் போராட்டங்கள், எத்தனைச் சிறைத்தண்டனைகள், எத்தனை வழக்குகள்...

‘உன் மீது அடித்த வெயில் கடல் மீது அடித்திருந்தால் பாதி கடல் பாலைவனமாகியிருக்கும்’’ எனக் கலைஞரைப் புகழ்ந்தார் வைரமுத்து.
2009 ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், அவரது படைப்பான `தென்பாண்டி சிங்கம்’ என்ற புத்தகத்துக்கு ‘ராஜராஜன் விருதை’ வழங்கியது. தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.

தமிழ்ப் பற்று, திராவிட உணர்வு, சாதி ஏற்றத் தாழ்வின்மை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக செயல்பாடுகளை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து முடிந்தவரைப் பின்பற்றியவர்.

அரசியல், சினிமா, எழுத்து, பேச்சு, பத்திரிகை என பல்துறையிலும் வித்தகராகத் திகழும் கலைஞர் கருணாநிதி ஒரு சகாப்தம்... ஒரு காலக்கட்டம். 

http://www.vikatan.com/news/tamilnadu/91174-a-short-history-of-karunanidhi-3minsread.html

  • தொடங்கியவர்

தட்சிணாமூர்த்தி எனும் மு.க 60

 

"என் உயி­ரினும் மேலான
அன்பு உடன்­ பி­றப்­பு­களே"...  

என மேடையில் கர­க­ரத்த குரலில் கரு­ணா­நிதி முழங்­கினால் அந்த கனம் ஒலி­வாங்­கி­க­ளே மெய்­சி­லிர்க்கும். மீண்டும் அந்த வார்த்­தைகள் எப்­போது கலைஞர் வாயி­லி­ருந்து ஒலிக்கும் என்ற எதிர்­பார்ப்பு ஏக்கம் தி.மு.க.வின­ருக்கு மட்டும் அல்ல கரு­ணா­நி­தியின் பேச்சில் மயங்­கிய அனை­வ­ருக்கும் இன்று உள்­ளது... 60 வரு­டங்­க­ளாக இந்த வார்த்­தை­களை கேட்டு கர­கோஷம்.. உற்­சாகம்.. ஆனந்தம் என பர­வ­ச­ம­டைந்­த­வர்­க­ளுக்கு கரு­ணா­நி­தியின் வைர­வி­ழாவில் அந்த வார்த்­தை­களை அவ­ரது வாய் மொழி மூலம் கேட்க முடி­யா­தமை இந்த வைர­வி­ழாவில் எத்­தனை தலை­வர்கள் கலந்து சிறப்­பித்­தாலும் இது நிச்சய­மாக வைரம் இல்­லாத வைர­வி­ழாவே..

அவரால் இன்று எழுந்து வர முடி­ய­வில்லை.. எழுத முடி­ய­வில்லை.. பேச முடி­ய­வில்லை... ஆனாலும் அவ­ரது எதி­ரிகள் இன்னும் பல­மாகத் திட்­டிக்­கொண்டே இருக்­கி­றார்கள் என்றால்...அதற்கு காரணம் கரு­ணா­நிதி என்ற பிம்பம்.

தமி­ழக அர­சி­யலை இயக்கிக் கொண்­டி­ருந்த கரு­ணா­நிதி இப்­போது தன்னைச் சுற்றி என்ன நடக்­கி­றது என்று தெரி­யாமல் உடல் நலக்­கு­றைவால் ஓய்வில் இருக்­கிறார். இன்று தனது 94 வயதில் அடி எடுத்தும் வைக்­கிறார். இன்­னொ­ரு­புறம் அவர் சட்­ட­மன்­றத்தில் அடி எடுத்து வைத்து 60 ஆண்­டு­களை நிறைவு செய்­தி­ருக்­கிறார்.

தமி­ழ­கத்தை தனது பேச்சு மற்றும் எழுத்து திற­மையால் இன்றும் கட்­டிப்­போட்­டு­வைத்­தி­ருக்கும் கரு­ணா­நி­தியின் 14 வயதில் தொடங்­கிய பயணம் 94 வய­திலும் தொடர்­கி­றது...பேச­மு­டி­யாத போதிலும் இன்னும் அவர் தி.மு.க. தலை­வ­ரா­கத்தான் இருக்­கிறார்...

தமி­ழக அர­சியல் வர­லாற்றில் மட்டும் அல்ல உலக அர­சியல் வர­லாற்றிலும் மிக மூத்த அர­சி­யல்­வாதி. கலை, இலக்­கியம், எழுத்­தாற்றல், பேச்­சாற்றல் என பல துறை­க­ளிலும் முத்­திரை பதித்­தவர். அர­சி­யலில் பல தலை­முறை பிர­தமர், முதல்­வர்­களை கண்­டவர் என்ற பெரு­மைக்­கு­ரி­யவர் கரு­ணா­நிதி.

60 ஆண்­டு­களில் 55 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக எம்.எல்.ஏ. 2 ஆண்­டுகள் பொதுப்­ப­ணித்­துறை அமைச்சர், 18 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக முதல்வர் பதவி என்று தமி­ழக சட்­ட­மன்ற வர­லாற்றில் தனி இடத்தை பிடித்­துள்ளார்.

உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக கடந்த சில மாதங்­க­ளாகவே அவர் ஓய்வில் இருக்­கிறார். வைர­விழா காணும் இந்த நேரத்தில் அவர் தி.மு.க.தொண்­டர்­களை சந்­திப்­பாரா என்ற எதிர்­பார்ப்பு எழுந்த போதிலும் அது நிறை­வே­ற­வில்லை..

இன்­றைய தமி­ழக அர­சி­யலில் கரு­ணா­நிதி மட்டும் உயிர்­ப்புடன் இருந்­தி­ருந்தால் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்­தி­ருக்கும். அ.தி.மு.க. ஆட்சி கூவத்­தூ­ரோடு காணாமல் போயி­ருக்கும்... மீண்டும் ஒரு முறை கலைஞர் தமி­ழக முதல்­வ­ரா­கி­யி­ருப்பார்.. ஆனால் அவ­ரது உடல் நிலை இன்று அவரை இருந்தும் இல்­லா­தவர் போல ஆக்­கி­விட்­டது.

14 வயதில் தொடங்­கிய கரு­ணா­நி­தியின் பயணம் 78 ஆண்­டு­க­ளாக தொடர்­கி­றது. அவரை எது இத்­தனை ஆண்­டுகள், இவ்­வ­ளவு தூரம் பய­ணப்­பட வைத்­தது? இத்­தனை ஆண்­டு­களில் அவ­ருக்கு நேர்ந்­த­வைகள் வேறு

யாருக்கும் நடந்­தி­ருந்தால் எப்­போதோ அர­சியல் தளத்­தி­லி­ருந்து விலகி ஓடி­யி­ருப்­பார்கள். அவரை இன்­னமும் இங்கே நிறுத்தி வைத்­தி­ருப்­பது அவ­ரு­டைய ஓய்வை விரும்­பாத பயணம் தான். பல­மில்­லாத, ஜனத்­திரள் இல்­லாத சாதி­யி­லி­ருந்து ஒருவர் பொதுத்­தளம் நோக்கி வரும்­போது எதை­யெல்லாம் எதிர்­கொள்ள வேண்­டுமோ அதை­யெல்லாம் எதிர்­கொண்­டது அவ­ரது பயணம். எல்­லா­வற்­றையும் கடந்­துதான் இன்றும் பய­ணப்­ப­டு­கிறார். அவர் எதற்­கா­கவும் பய­ணத்தை நிறுத்­திக்­கொள்­ள­வில்லை. எம்.ஜி.ஆர் ஆட்­சி­க்கா­லத்தில் கரு­ணா­நிதி 'வன­வாசம்' சென்­ற­தாக கூறப்­ப­டு­வ­துண்டு. அவ­ருக்கு வன­வா­சமும் பய­ணம்தான் என்­பதை நிரு­பித்தும் காட்­டினார்.

மற்ற அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் கரு­ணா­நி­திக்கும் ஒரு விதி விலக்கு உள்­ளது. அதா­வது யாராக இருந்­தாலும் எப்­போதும் கரு­ணா­நி­தியை நேரில் சந்­திக்க முடியும் அந்த அளவு எளி­மை­யாக பழ­கக்­கூ­டி­யவர்..

 இந்து முன்­னணி நிறு­வுனர் இராம.கோபாலன் ஒரு நாள் திடீ­ரென கரு­ணா­நி­தியின் கோபா­ல­புரம் வீட்டு வாசலில் வந்­தி­றங்­கினார். அதற்கு முதல் நாள்தான் பகவத்கீதையை விமர்­சித்­தி­ருந்தார் கரு­ணா­நிதி. முன் தகவல் சொல்­லாமல் வந்­தாலும் இராம.கோபா­லனை வாசல் வரை வந்து வர­வேற்று கரு­ணா­நி­தியின் அறைக்கு அழைத்துச் சென்றார் உத­வி­யாளர் சண்­மு­க­நாதன். இரு­வரும் பரஸ்­பரம் உடல்­நலம் விசா­ரித்­துக்­கொண்­டனர்.

‘‘பகவத் கீதை பற்­றிய உங்கள் விமர்­ச­னத்­துக்கு எனது கண்­ட­னத்தைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்’’ என நேருக்கு நேர் கூறிய இராம.கோபாலன், இராம­கி­ருஷ்ண மடம் வெளி­யிட்ட ‘பகவத் கீதை’ நூலை அவ­ருக்குப் பரி­ச­ளித்தார். புன்­ன­கை­யுடன் பெற்­றுக்­கொண்டார் கரு­ணா­நிதி. பதி­லுக்கு, திரா­விடர் கழக தலைவர் கி.வீர­மணி எழு­திய ‘கீதையின் மறு­பக்கம் நூலை எடுத்து இராம.கோபா­ல­னுக்கு வழங்­கினார். இரு­வரும் சிரித்­துக்­கொண்­டார்கள். இதுதான் கரு­ணா­நிதி. கொள்கை ரீதி­யாக எதி­ரெதிர் முனையில் இருப்­ப­வர்­கள்­கூட அவரை எப்­போதும் எளிதில் சந்­திக்க முடியும். நேருக்கு நேர் விமர்­சிக்க முடியும்.

தட்­சி­ணா­மூர்த்தி என்ற இயற்­பெயர் கொண்ட கரு­ணா­நிதி 1924-ஆம் ஆண்டு திரு­வாரூர் மாவட்டம், திருக்­கு­வளை கிரா­மத்தில் பிறந்தார். தந்தை முத்­து­வேலர். தாய் அஞ்­சுகம். கரு­ணா­நி­தியின் முதல் மனைவி பெயர் பத்­மா­வதி. இவ­ருக்கு முத்து என்ற மகன் உள்ளார். திரு­ம­ண­மான சில ஆண்­டு­க­ளி­லேயே பத்­மா­வதி உடல் நலம் பாதிக்­கப்­பட்டு இறந்து விட்டார். இரண்­டா­வது மனைவி பெயர் தயாளு அம்மாள். இவ­ருக்கு அழ­கிரி, செல்வி, ஸ்டாலின், தமி­ழ­ரசு என நான்கு பிள்­ளைகள். மூன்­றா­வது மனைவி பெயர் ராஜாத்தி அம்மாள். இவ­ருக்கு ஒரு மகள் கனி­மொழி.     

தனது 14-ஆவது வயதில் நீதிக்கட்சி தலை­வர்­களில் ஒரு­வ­ரான அழ­கி­ரி­சா­மியின் பேச்சால் ஈர்க்­கப்­பட்ட கரு­ணா­நிதி, அர­சி­யலில் அடி­யெ­டுத்து வைத்தார். அன்று முதல் 78 ஆண்­டு­க­ளாக தமி­ழ­கத்தில் தவிர்க்க முடி­யாத அர­சியல் ஆளு­மை­யாக இருக்­கிறார்.

கரு­ணா­நி­தியின் முதல் அவ­தாரம் பத்­தி­ரி­கை­யாளர். 14 வய­தி­லேயே திரு­வா­ரூரில் ‘நேசன் என்ற கையெ­ழுத்துப் பத்­தி­ரிகை மூலம் மாண­வர்­களை ஒருங்­கி­ணைக்கத் தொடங்­கினார். அப்­போது அவர் உரு­வாக்­கிய இயக்கம் ‘தமிழ்­நாடு மாணவர் மன்றம். தனது 18- ஆவது வயதில், 1942-ஆம் ஆண்டு ‘முர­சொ­லியைத் தொடங்­கினார்.

1925-இல் காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யே­றிய பெரியார், சுய­ம­ரி­யாதை இயக்­கத்தைத் தொடங்­கினார். பின் ‘நீதிக் கட்­சி’யின் தலை­வ­ரானார். 1944-இல் நீதிக் கட்சி ‘திரா­விடர் கழ­க­மா­னது. இதில் தன்னை இணைத்­துக்­கொண்ட கரு­ணா­நிதி… பெரியார், அண்­ணா­வுக்கு மிக நெருக்­க­மானார். பெரி­யா­ரு­ட­னான கருத்து வேறு­பாட்டால் தி.க.வி.லிருந்து வில­கிய அண்ணா, 1949 செப்­டம்பர் 17-ஆம் திகதி ‘திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தைத் தொடங்­கினார். 1952 இல் முதல் பொதுத்­தேர்­தலைப் புறக்­க­ணித்த தி.மு.க., 1957 தேர்­தலில் முதல் முறை­யாகக் களம் புகுந்து 15 இடங்­களில் வெற்­றி­பெற்­றது. குளித்­த­லையில் நின்ற கரு­ணா­நி­தியும் அதில் ஒருவர். அன்று தொடங்கி கரு­ணா­நிதி இது­வரை சட்­டப்­பே­ரவைத் தேர்தல் எதிலும் தோற்­ற­தில்லை.

மேடைப் பேச்சு, எழுத்து, பத்­தி­ரிகைப் பணி, போராட்­டங்கள் என திரா­விடர் கழ­கத்­திலும், தி.மு.க.விலும் தீவி­ர­மாக இயங்­கிய கரு­ணா­நி­தியை மக்­க­ளிடம் கொண்டு சேர்த்­தது அவ­ரது திரைப்­பட வச­னங்­கள்தான். ‘பரா­சக்தி’, ‘மந்­தி­ரி­கு­மாரி’, ‘மனோ­கரா’, ‘பூம்­புகார்’ உள்­ளிட்ட திரைப்­ப­டங்­களில் அவர் எழு­திய வச­னங்கள் சொல் அம்­பு­க­ளாகி தமி­ழர்­களின் இத­யத்தைத் தாக்­கின.

1946-இல் `ராஜ­கு­மாரி' திரைப்­ப­டத்தில் இருந்து கரு­ணா­நி­தியின் திரைப்­ப­யணம் தொடங்­கு­கி­றது. அப்­ப­டத்­திற்கு வசனம் எழு­தி­யி­ருந்தார். 1952-இல் வெளி­வந்த `பரா­சக்தி' திரைப்­படம் தமிழ்த்­தி­ரை­யு­லகை வியந்து பார்க்க வைத்­தது. பரா­சக்தி படத்தில் அவ­ரது வசனம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடி­கரை தமி­ழ­கத்­துக்கு அடை­யாளம் காட்­டி­யது. அந்­நாட்­களில் பெரிய சம்­பளம் வாங்­கிய வச­ன­கர்த்தா என்­ப­தோடு, வச­ன­கர்த்­தா­வுக்கு நட்­சத்­திர அந்­தஸ்து உரு­வா­கவும் கார­ண­மாக இருந்­தவர் கரு­ணா­நிதி.40க்கும் மேற்­பட்ட படங்­களில் கதை, வசனம் எழு­தி­யி­ருக்­கிறார். பொன்னர் சங்கர் என்ற கரு­ணா­நி­தியின் நாவலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதே பெயரில் திரைப்­படம் உரு­வாக்­கப்­பட்­டது. திரைப்­படம் என்னும் வலிமை மிக்க ஊட­கத்தை மிகத்­தி­ற­மை­யாகப் பயன்­ப­டுத்தி வெற்றி கண்ட கரு­ணா­நிதி, கதை, திரைக்­கதை, உரை­யாடல், பாட­லா­சி­ரியர், தயா­ரிப்­பாளர் என பல தளங்­க­ளிலும் தன் பங்­க­ளிப்பை அளித்­தி­ருக்­கிறார்.

நாடகம், கவிதை, கட்­டுரை, சிறு­கதை, நாவல், வர­லாறு என எல்லா இலக்­கியத் தளங்­க­ளிலும் இயங்­கி­யி­ருக்­கிறார் கரு­ணா­நிதி. `பழ­னி­யப்பன்' என்ற நாட­கமே கலைஞர் முதன்­மு­தலில் எழு­திய நாட­க­மாகும். அவ­ரது `தூக்­கு­மேடை' நாட­கத்தைப் பார்த்து மகிழ்ந்த நடி­கவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்' என்ற அடை­மொ­ழியை கரு­ணா­நி­திக்கு வழங்­கினார். அதன்­பி­றகே இவர், `கலைஞர் கரு­ணா­நிதி' என்று அழைக்­கப்­பட்டார்.

`சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 178 நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார். உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ஒரு­புறம் திரைத்துறையில் இருந்­த­போதும், மறு­புறம் அர­சி­ய­லிலும் தொடர்ந்து பங்­கெ­டுத்தார். இடை­வி­டாத பய­ணங்கள் மூலம் தமி­ழ­கத்தின் எங்­கா­வது ஒரு மூலையில் அவர் பேசிக்­கொண்டே இருந்தார். ‘கல்­லக்­குடி ரயில் மறி­யல்’­அ­வ­ரது அர­சியல் வாழ்வில் முக்­கி­ய­மான திருப்­பு­மு­னை­யா­னது. 1963, 1965-ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற "ஹிந்தி எதிர்ப்புப் போராட்­டங்கள் மூலம் கரு­ணா­நிதி தி.மு.க.வின் முக்­கிய தலை­வ­ராக உரு­வானார். 1967-இல் தி.மு.க. வென்­ற­போது, அண்ணா அமைச்­ச­ர­வையில் பொதுப்­பணித் துறை அமைச்­ச­ரானார். நெடுஞ்­செ­ழியன், அன்­ப­ழகன் எனப் பலர் வரிசை கட்டி நின்­றாலும், கரு­ணா­நிதி, எம்.ஜி.ஆர். இரு­வ­ரையும் மேடையில் வைத்­துக்­கொண்டு இவர்கள் என் தம்­பிகள் என்று அண்ணா அடிக்­கடி சொல்வார். எம்.ஜி.ஆரின் மக்கள் செல்­வாக்­கையும், கரு­ணா­நி­தியின் எழுத்தின் வீச்­சையும் வைத்து அவர் அப்­படிச் சொன்­னார்­. அண்ணா மறைந்­த­ பின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்­த­ தி.மு.க-வுக்குள் கரு­ணா­நி­திக்கு ஆத­ரவை உரு­வாக்­கி­யவர் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க-.வில் இருந்த பலர் நெடுஞ்­செ­ழி­யனைத் தேர்வு செய்­யலாம் என்று கூறினர். அண்ணா அமைச்­ச­ர­வையில் இரண்­டா­வது இடத்தில் இருந்த அவர்தான் முதல்வர் பத­விக்குப் பொருத்­த­மா­னவர் என்றும் கூறினார்.ஆனால், எம்.ஜி.ஆர். நினைத்­ததைச் செய்து முடித்தார். எஸ்.எஸ்.ஆர். ஆத­ர­வுடன் எம்.எல்.ஏ-க்­க­ளுக்கு எம்.ஜி.ஆர். விருந்து வைத்தார். கரு­ணா­நி­திக்கு ஆத­ர­வாக தி.மு.க. எம்.எல்.ஏ-.க்­க­ளிடம் பேசினார். தி.மு.க. சட்­ட­மன்ற கட்சித் தலைவர் தேர்தல் நடை­பெற்­றது. நெடுஞ்­செ­ழியன், கரு­ணா­நிதி இரு­வரும் போட்­டி­யிட்­டனர். எம்.ஜி.ஆரின் ராஜ­தந்­தி­ரத்தின் படி கரு­ணா­நி­தியே வெற்றி பெற்றார். தி.மு.க-.எம்.எல்.ஏ-க்­களின் தலை­வ­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். 1969-இல் எம்.ஜி.ஆர். ஆத­ர­வுடன் முதல்­

வ­ரானார் கரு­ணா­நிதி. அண்ணா இல்­லாமல் தி.மு.க. சந்­தித்த சட்­ட­மன்­றத்­தேர்தல் 1971-ஆம் ஆண்டு நடை­பெற்­றது. தமி­ழ­கத்தின் தென்­ப­கு­தியில் இருந்து எம்.ஜி.ஆரும், வட­ப­கு­தி­யான செங்­கல்­பட்டில் இருந்து கரு­ணா­நி­தியும் பிர­சாரம் தொடங்­கினர். எம்.ஜி.ஆருக்கு இருந்த ரசி­கர்கள் கூட்­டமும், கரு­ணா­நி­தியின் பேச்­சுக்குக் கிடைத்த ஆத­ரவு கூட்­டமும் வாக்­கு­க­ளாக மாறின.184 இடங்­களில் வென்று தமி­ழ­கத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்­தது. கரு­ணா­நிதி மீண்டும் முதல்­வ­ரானார்.

அர­சியல் வாழ்வில் ஏணிப்­ப­டி­களில் ஏறிக்­கொண்­டி­ருந்த கரு­ணா­நி­திக்கு மிகப் பெரிய சறுக்­கலை ஏற்­ப­டுத்­தி­யவர் எம்.ஜி.ஆர். தான் தி.மு.க.வில் இருந்து நீக்­கப்­பட்ட அவர், 1972-இல் அ.தி.மு.க.வைத் தொடங்கி 1977-இல் ஆட்­சியைப் பிடித்தார். அதன் பிறகு, எம்.ஜி.ஆர். மறை­வுக்குப் பிற­குதான் மீண்டும் கரு­ணா­நி­தியால் ஆட்­சியைப் பிடிக்க முடிந்­தது என்­றாலும், போர்க் குண­மிக்க எதிர்க்­கட்­சி­யாக அந்­நாட்­களில் தி.மு.க.வை அவர் நடத்­திக்­கொண்­டி­ருந்தார்.

1989-இல் வீ.பி.சிங், 1997-இல் தேவ­க­வுடா, ஐ.கே.குஜ்ரால், 1999-இல் வாஜ்பாய், 2004 முதல் 2014 வரை மன்­மோகன் சிங் தலை­மை­யி­லான மத்­திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்­தது. 1996 முதல் 2013 வரை­யி­லான 17 ஆண்­டு­களில் 13 மாதங்கள் தவிர மத்­திய அரசில் செல்­வாக்­கோடு தி.மு.க. திகழ்ந்­தது. இதற்கு கரு­ணா­நி­தியின் அர­சியல் ஆளு­மையும், இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­க­ளுமே காரணம்.

கடந்த 70 ஆண்­டு­களின் தமி­ழகவர­லாற் றைக் கரு­ணா­நி­தியின் வர­லாற்றைப் பிரித்து­ விட்டு எவ­ராலும் எழுத முடி­யாது. இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி, வீ.பி.சிங், வாஜ்பாய், மன்­மோகன் சிங், நரேந்­திர மோடி என அனைத்துப் பிர­த­மர்­க­ளு­டனும், பெரியார், ராஜாஜி, காம­ராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா என எல்லா அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் அர­சியல் செய்­தவர் கரு­ணா­நிதி. ஒரு­புறம், ராஜாஜி, காம­ராஜர், பக்­த­வத்­சலம், எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா என அவ­ரது அர­சியல் எதி­ரிகள் மாறிக்­கொண்டே இருக்­கி­றார்கள். ஆனால், மறு­பக்­கத்தில் கரு­ணா­நிதி கடந்த 78 ஆண்­டு­க­ளாக அப்­ப­டியே நிற்­கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்­தலில் தனது சொந்த தொகு­தியில் இரண்­டா­வது முறை­யாக போட்­டி­யிட்ட கரு­ணா­நிதி அதிக வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்றார். 93 வயதில் பிர­சார பயணம் மேற்­கொண்ட தலைவர் இந்­திய அளவில் ஏன் சர்­வ­தே­சத்­திலும் கூட கரு­ணா­நி­தி­யா­கத்தான் இருப்பார்.

இத்­தனை ஆளுமை மிக்க கரு­ணா­நிதி மீது வைக்­கப்­படும் முக்­கிய விமர்­சனம், குடும்ப அர­சியல் என்­ப­தாகும். தமி­ழ­கத்தின் வலு­வான அர­சியல் கட்­சி­யான திரா­விட முன்­னேற்றக் கழகம், பல தரு­ணங்­களில் மத்­திய அரசைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக விளங்­கி­யி­ருக்­கி­றது. அத்­த­ரு­ணங்­களில் மாநில நலனைக் காட்­டிலும் தம் குடும்ப நல­னையே கருத்தில் கொண்டு செயற்­பட்டார் என்ற விமர்­ச­னமும் இவர் மீது உண்டு.

மேலும் அவர் தமிழர் அல்ல தெலுங்கர் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.. மேளம் இசைக்கும், தெலுங்கு சின்ன மேளம் சமூ­கத்தை சேர்ந்­தவர்.தான் முதல்­வ­ரா­ன­வுடன் சட்ட திருத்­தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்­பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூ­கத்தை மாற்றி கொண்டார். எம். ஜி.ஆர். தமி­ழக முதல்­வ­ராக வந்­ததை பொறுக்க முடி­யாமல், மலை­யாளி தமி­ழரை ஆள்­வதா என தொடர்ந்து பரப்­புரை செய்து வந்­ததால், எம். ஜி.ஆர்.இவரின் பூர்­வீ­கத்தை தோண்டி எடுத்து அன்று சட்­ட­மன்­றத்தில் 1984 இல் அ.தி.மு.க. அமைச்­ச­ரான குழந்தை வேலு, ‘கரு­ணா­நிதி தெலுங்கர்’ என்­பதைச் ஆதார பூர்­வ­மாக பேசி­யது இன்றும் சட்­ட­மன்றக் குறிப்­பே­டு­களில் பதி­வாகி இருப்­பதை காணலாம்.அதை அன்று கரு­ணா­நிதி மறுக்­கவோ விவாதம் செய்­யவோ இல்லை. அன்­றி­லி­ருந்து எம்.ஜி.ஆரை மலை­யாளி என்று விமர்­சிப்­பதை நிறுத்­தினார்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக இலங்­கையில் இறுதி யுத்தம் நடந்­த­போது, உயி­ருக்குப் போரா­டிய தமி­ழர்­களைக் காப்­பாற்ற போதிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் இவர் மீது உண்டு. யுத்தம் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருந்­த­போது மெரி­னாவில் இவர் இருந்த சில­மணி நேர உண்­ணா­வி­ர­தமும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யது.

ஆயினும் எத்­தனை விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் கரு­ணா­நிதி என்ற ஆல­ம­ரத்தை யாராலும் அசைக்க கூட முடி­ய­வில்லை... எம்.ஜி.ஆர். ஜெய­ல­லிதா என்ற அர­சியல் புயல்­களில் சில காலம் சிக்­கிய போதிலும் இந்த ஆல­மரம் விழ­வில்லை.. தன் வேர்­களை இறுக்க பற்றி விழு­து­களை வேர்­வி­டச்­செய்­தது..

எவ்­வ­ளவு பெரிய தலை­வ­னான போதும் அர­சியல் நாக­ரிகம் கொண்­டவர் கலைஞர். யார் வந்து கரு­ணா­நி­தியை திட்­டி­னாலும் தமி­ழ­கத்தில் ஒரு கட்­சிக்கு தலை­வ­னாகி விடலாம் என்ற நிலை உள்ளது. எம்­.ஜி.ஆர். மர­ணத்­திற்கு முன்பே அதை பிர­மா­த­மாக கையாண்டார் ஜெய­ல­லிதா. கரு­ணா­நிதி என்று பெயர் சொல்­லியே வசை­பா­டினார். பல சம­யங்­களில் வயது வித்­தி­யாசம் கூட கரு­தாமல் ஒரு­மை­யி­லேயே விளம்­பினார். எல்­லா­வற்­றுக்கும் மேலாக தமி­ழக அர­சி­யலின் தீய­சக்தி என்றே தாக்­குதல் நடத்­தினார். ஆரம்ப கட்­டத்தில் கரு­ணா­நி­தியும் ஜெய­ல­லி­தாவை ஒரு அர­சியல் தலை­வ­ரா­கவே ஏற்றுக் கொள்­ள­வில்லை. 1989 சட்டப் பேரவைத் தேர்­தலில் வென்று ஆட்­சி­ய­மைத்­த­தற்கு பிறகு கரு­ணா­நிதி ஜெய­ல­லி­தாவை பற்றி பேட்­டி­களில் குறிப்­பிடும் போதெல்லாம் அந்த அம்­மையார் என்றே குறிப்­பிட்டு வந்தார். 1991இல் முதல்­வ­ராக வந்த பிற­குதான் ஜெய­ல­லிதா என்ற பெய­ரையே உச்­ச­ரித்தார் கரு­ணா­நிதி. அப்­ப­டி­யி­ருந்தும் கூட மேடை நாக­ரிகம் கருதி அவர் மீது அவச்சொல் வீசியதில்லை. என்றும் அரசியல் நாகரிகத்தை அவர் மீறியதில்லை...

கருணாநிதி நிரந்தரம். அவரால் தி.மு.க. இன்னும் உயிர்ப்புடன் உள்ளது... அது தொடர்ந்து நீடிக்குமா என்பது அடுத்த தலைமையை பொரு த்ததே.. கருணாநிதியின் சாணக்கியம் ஸ்டாலி னிடம் இல்லை என்பதை இன்றைய தமிழக கள நிலவரம் அழகாக விளக்குகிறது. அவர் இராஜதந்திரம் இல்லாத ராஜா மகனாகவே உள்ளார். ஆனால் தி.மு.க.வை காப்பாற்ற வேண் டிய கடப்பாடு ஸ்டாலினுக்கு உள்ளது. தி.மு.க.வில் இன்று இத்தனை வட்டக்கழக ங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கருணாநிதி தலைவர் அல்ல.. கருணாநிதி தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழ கங்களும், நகர கழகங்களும் இருந்தன... இருக் கின்றன. கருணாநிதி என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184உ-ம் கருணா நிதியால் வாங்க முடியும் 234-க்கு 1-உம் வாங்கிய வர்தான் அவர். 1971-இலும் தலைவர் 1991-இலும் தலைவர் தான்.. 2017 இலும் தலைவர் தான் என்றால், முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல். அதையும் தாண்டிய தலைவர் நிரந்தர தலைவர் என்பதே கருணாநிதி...

குமார் சுகுணா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-7

  • கருத்துக்கள உறவுகள்

18838871_1927311537548084_28506960158833

:love:

  • தொடங்கியவர்

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி தொடங்கியது: ராகுல், நிதிஷ், யெச்சூரி பங்கேற்பு

 

முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், ராகுல் காந்தி, நிதிஷ்குமார், யெச்சூரி மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 
 
 
 
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி தொடங்கியது: ராகுல், நிதிஷ், யெச்சூரி பங்கேற்பு
 
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையட்டி கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்கள் அதிக அளவில் வந்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி வீட்டு முன்பு திரண்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

நேற்று இரவு 11.30 மணி வரை கருணாநிதி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். இன்று காலையில் அவர் எழுந்து உட்கார்ந்தார். அவரை டாக்டர் கோபால் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அதன் பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் கருணாநிதியுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., செல்வி, மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதியின் உடல் நலம் கருதி அவரை வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கருணாநிதியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி தனது பிறந்த நாளுக்கு அண்ணா சமாதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உடல் நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
201706031803431392_dmk._L_styvpf.gif
தொண்டர்களையும் சந்திக்கவில்லை. ஆனாலும் உற்சாக மிகுதியில் தொண்டர்கள் இன்று காலையிலேயே கோபாலபுரம் வீட்டு வாசலில் திரண்டு நின்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கோபாலபுரத்தில் இருந்த மு.க.ஸ்டலினை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றனர். இதே போல கனிமொழி எம்.பி.யிடமும் மகளிர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைர விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு மு.க.ஸ்டாலின நினைவுப்பரிசு வழங்கினார்.

விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், கனிமொழி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்- மந்திரி உமர் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/03180342/1088869/Karunanidhi-s-Karunanidhi-s-Diamond-festival-began.vpf

  • தொடங்கியவர்

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

 
 

கருணாநிதி

''சாணக்கியன் இன்று இருந்திருந்தால், கருணாநிதியிடம் ஆலோசனை கேட்க கோபாலபுரம் வாசலில் காத்துக்கொண்டிருந்திருப்பான்'' என்று  கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்டித்  தினப் பத்திரிகை ஒன்று எழுதியிருந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில்,  இந்தப் புகழாரம் நிச்சயம் கருணாநிதிக்கு மட்டுமே பொருந்தும்.

'' 'கருணாநிதி வாழ்க' என்றாலும், 'கருணாநிதி ஒழிக' என்றாலும் அதில், 'கருணாநிதி' என்ற என் பெயர் வருகிறதே'' என்று கருணாநிதியே அடிக்கடி சொல்வார். இப்படித் தமிழக அரசியலின் ஒவ்வோர் அசைவிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து செயல்படுபவர் அவர். தனது நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில், இதை அவர் நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.

இந்திய அளவில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ராஜாஜியை, 'அபிமன்யு' திரைப்படத்தில்... 'அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் சூழ்ச்சி' என்று வசனத்தின் மூலம் தொட்டுப்பார்த்த கருணாநிதிதான், பின்னர் நேரடி அரசியலில் ஈடுபட்டு விமர்சிக்கவும் செய்தார். சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்து 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட கருணாநிதி, இப்போது விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்துகொண்டிருப்பதையும் பார்க்கிறார்; சீமான் தன்மீது சீறிப்பாய்வதையும் சிரித்த முகத்துடன் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார். 

அகில இந்திய அளவில் இந்திரா காந்தியுடன் மோதியவர், பின்னர் 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக' என்று ஆதரிக்கவும் செய்தார். வாஜ்பாய், ஜோதிபாசு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், ஐ.கே.குஜ்ரால் என வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருடனும் அரசியல் செய்து, 'இந்திராவின் மருகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க' என்று இந்திரா காந்தியின் மருகமள் சோனியா காந்தியுடனும் அரசியல் கூட்டணி வைத்தார். 

அரசியலில், கருணாநிதியின் இத்தனை நெடுந்தூர பயணத்தில், அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம். அரசியல் பழிவாங்கல்கள் அதிகம். அவரை வானளாவப் புகழ்ந்தவர்களே பின்னர் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவரை விமர்சித்ததும் உண்டு. அத்தனையையும் தாங்கிக்கொண்டு தமிழக அரசியலில், இத்தனை ஆண்டுக்காலம் அவரால் கோலோச்ச முடிந்திருக்கிறது. பொதுவாழ்வில், விமர்சனமும் எதிர்ப்பும் சர்வ சாதாரணம் என்பதை அறியாதவரா கருணாநிதி? அதனால்தான், கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்த விஜயகாந்த், ''நான் ஏதாவது பேசியிருந்தால் மனசுல வெச்சுக்காதீங்க'' என்று சொல்ல, ''பரவாயில்லை, அதெல்லாம் விடுய்யா'' என்று கருணாநிதியால் சொல்ல முடிந்தது.

கருணாநிதி

அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில், நால்வரான நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் ஆகியோரை எல்லாம் மீறி கருணாநிதியால் கட்சியின் தலைமை இடத்துக்கு எப்படி வர முடிந்தது? அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பேச்சு, எழுத்துத் திறனோடு, களத்தில் இறங்கிச் செயலாற்றும் திறனும் கருணாநிதிக்கு அதிகம் இருந்தது; அதுதான் காரணம்.

கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் பெற்றவர் கருணாநிதி. கல்லக்குடி போராட்டம் பற்றித் தன் 'வனவாசம்' நூலில் எழுதிய கண்ணதாசன், ''மூன்று குழுக்களாகச் சென்று ரயிலை மறிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஒரு குழு என் தலைமையிலும், இன்னொரு குழு கருணாநிதி தலைமையிலும் சென்றது. ரயிலை மட்டுமே மறிக்க வேண்டும் என்ற திட்டத்தை மாற்றி, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துவிட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அப்படிச் செய்ததன்மூலம் அப்போதே தன்னைப் பற்றிப் பரபரப்பாகப் பேசவைத்துவிட்டார்.

டைமிங் ஜோக் என்பார்களே, அது கருணாநிதிக்குக் கைவந்த கலை. அவர் முதல்வராக இருந்தபோது அவருடன் கவிஞர் வைரமுத்து, அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் உட்காரும்போது, வைரமுத்துவின் ஜிப்பா நுனியின் மீது டி.ஆர். பாலு உட்கார்ந்துவிட்டார். கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி வீடு வந்ததும், காரில் இருந்து வைரமுத்து முதலில் இறங்கினார். எனவே, அவரின் ஜிப்பா சற்று கிழிந்துவிட்டது. டி.ஆர்.பாலுவால்தான் ஜிப்பா கிழிந்தது என்பதை அறிந்த கருணாநிதி, ''இனிமே மத்திய அமைச்சர் பாலு, என்ன கிழிச்சார்னு யாரும் கேட்க முடியாது'' என்று சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

சட்டமன்றத்தில் ஒருமுறை, அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி., தனது துறைமீது பதிலளித்துப் பேச எழுந்தபோது, முதலமைச்சர் கருணாநிதி அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்தனுப்பினார். அதில் 'அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று எழுதியிருந்தார். இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வும் எழுத்தின் மீதான அவரின் தணியாத ஆர்வமும் அவரை அரசியல் அனலில் இருந்து காக்கும் அரணாக  இருக்கின்றன.

 

1957-ல் முதன்முதலில், சட்டமன்ற உறுப்பினராகி அதன்பிறகு இந்த 60 ஆண்டுகளில் தோல்வியே காணாமல், வைர விழா காணும் கருணாநிதியால், இப்போது தீவிர அரசியலில் இயங்க முடியவில்லை. கருணாநிதி மீது எத்தனையோ குற்றம் குறை சொல்லலாம். ஆனால், கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல், 50 ஆண்டுக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள் இல்லை. அந்த அளவுக்கு அவரின் ஆளுமை ஆழ வேரூன்றி இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/91231-satire-speech-of-karunanidhi-about-poet-vairamuthu.html

  • தொடங்கியவர்

கோலாகலமாகத் தொடங்கிய கருணாநிதியின் வைர விழா: ஒரே மேடையில் ராகுல் காந்தி, நிதிஷ், ஸ்டாலின்!!

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

f91a18c9-310f-4d58-9479-21f9fb650990_185


தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வைரவிழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். அதை முன்னிட்டு இந்திய அளவில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

8a558aee-f7d1-426d-9ad4-4bf54245624d_192

இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, எம்.பி டெரக் ஓ பிரயன், மஜீத் மேமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வைரவிழா தொடங்கியதையடுத்து ஒவ்வொர் அரசியல் தலைவர்களும் கருணாநிதி குறித்துப் பேசி வருகின்றனர்.
 

f14cd4d5-c734-41d8-802e-8fd6c14bd42a_194

http://www.vikatan.com/news/tamilnadu/91274-kalaignars-diamond-jubilee-ceremony-begins.html

  • தொடங்கியவர்

"அம்மையாரின் ஆட்சி இப்படித்தான் இருக்கும்" - கருணாநிதியின் சுவாரஸ்ய நேர்காணல்கள்!

 
 

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 94-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரின் கேள்வி ஞானம் அளப்பரியது. பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பின்போது சூட்சமத்துடன் கூடிய பதில்களானாலும், பதில் அளிப்பதற்கு மாறாக, செய்தியாளர்களிடமே எதிர்கேள்வி கேட்டு திணறடிப்பதாகட்டும் கருணாநிதிக்கு நிகர் அவரே தான்.

கருணாநிதி எத்தனையோ பேட்டிகளில் எண்ணற்ற சுவாரஸ்யமான பதில்களை நகைச்சுவையுடனும், அனைவரும் ரசிக்கும் விதமாகவும் பதில் அளித்து செய்தியாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தருணங்கள் ஏராளம். அதுபோன்ற சுவாரஸ்யமான ஒருசில நேர்காணல்கள்...

2012-ம் ஆண்டு நவம்பர் 13... அது, தீபாவளிப் பண்டிகை நாள். தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேரம் முதல் நான்கைந்து மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் இருந்த நிலையில், அறிவிப்பின்றி பல மணி நேரம் மின்வெட்டு நீடித்து வந்த காலம். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.

கே: "ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்வெட்டு நீடிக்கிறதே? தீபாவளி நாளன்றுகூட மின்வெட்டில் இருந்து விலக்கு இல்லையே?"

கருணாநிதி : "அம்மையாரின் ஆட்சியில் இப்படித்தான் இருக்கும்... மக்கள் அனுபவிக்கத்தான் வேண்டும் இந்த ஆட்சியை".

2ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கைது செய்யப்பட்டிருந்த சமயம்...

கே: "2ஜி வழக்கில் உங்கள் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளாரே? உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?"

: "மகள் கைது செய்யப்பட்டால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ, அப்படித்தான் என் மனநிலையும் உள்ளது."

கே: "2ஜி வழக்கில் தொடர்புடைய ஆ.ராசாவுக்கு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே?"

ப: "அந்த வழக்கில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதே தவிர, அது நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர் குற்றவாளி அல்ல."

கருணாநிதிடாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை, முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு மணிநேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் செய்யச் சொன்னது அறுவை சிகிச்சை;
ஆனால், கருணாநிதி செய்திருப்பது முதலுதவி" என்றார்.

தற்குப் பதிலளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விஷயம், மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்று கூறினார்.

முதல்வராக இருந்த கருணாநிதியை, நலிவடைந்த திரைக்கலைஞர்களுக்கு வீடு வழங்கக் கோரி நடிகை மனோரமா, நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் சந்தித்து மனு வழங்கினர்.

 

ப்போது செய்தியாளர்களிடம், "நானும் நலிவடைந்த திரைக்கலைஞர்தான். வீடுகோரி அளித்துள்ள மனுவில் என் பெயரை விட்டுவிட்டார்கள்" என்று கருணாநிதி கூறியதும், அனைவரும் சிரித்து விட்டனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/91223-interesting-interviews-of-karunanidhi.html

  • தொடங்கியவர்

'கலைஞர் வைரவிழா'- கருணாநிதி பற்றி அரசியல் தலைவர்கள் பேச்சு இதுதான்!

 

கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் வைரவிழாக் கொண்டாட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தலைவர்கள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். 

fe902cc4-f719-42c5-9097-01e9792a6bb2_194

 

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:

கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதியின் அரசியல் அத்தியாயத்தை யாராலும் முறியடிக்க முடியாது. சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலைவர் கருணாநிதி. எழுத்து மற்றும் பேச்சின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர் கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை மு.க.ஸ்டாலின் கொண்டு வருவார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கருணாநிதி. அவர் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

8a558aee-f7d1-426d-9ad4-4bf54245624d_190


இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா: 

கூட்டாட்சி தத்துவத்தை நசுக்கும் சூழல் இன்று தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு தேவைப்படுகிறது. கருணாநிதி அடிப்படையில் ஒரு சமூக புரட்சியாளர். மதவெறி அரசியலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார். 

f14cd4d5-c734-41d8-802e-8fd6c14bd42a_192


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

கருணாநிதிக்குப் பாரத ரத்னா விருது  வழங்கி கௌரவிக்க வேண்டும். கின்னஸ் புத்தகத்தில் எழுதி பயிலப்பட வேண்டியவர் கருணாநிதி. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

42e9db47-76b7-4c47-b6e0-97cf84075dab_193

 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி:

இளைஞர்களை அதிகம் ஊக்குவிக்கும் தன்மை கொண்டவர் கருணாநிதி. தேச பக்தர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதற்காக இந்த மேடையில் அனைவரும் கூடியுள்ளோம். மதச்சார்பின்மையைக் காப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் ஆதாயம் அடைவதற்காக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. மேலும் கருணாநிதியுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது, கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்குப் பெயர் வைத்ததை பகிர்ந்து கொண்டதையும் தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/91284-karunanithis-diamond-jublee-festival-leaders-speech.html

  • தொடங்கியவர்

'கருணாநிதியின் அரசியல் இடத்தை ஸ்டாலின் நிரப்ப வேண்டும்...!' - ராகுல் காந்தி விருப்பம்..!

கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

fe902cc4-f719-42c5-9097-01e9792a6bb2_200

கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'மு.க.ஸ்டாலின் மற்றும் தேசியத் தலைவர்களுடன் இணைந்து கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். கருணாநிதி இன்னும் நீண்ட காலம் பணியாற்ற வேண்டும். கருணாநிதி தமிழக மக்கள் மீது அளப்பரிய அன்பு வைத்துள்ளார். கருணாநிதி, கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்றவர்.

42e9db47-76b7-4c47-b6e0-97cf84075dab_201

அது அவருடைய மிகப்பெரிய பலம். தமிழக கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு இந்தியாவைப் பலப்படுத்துகிறது.  சட்டப்பேரவையில் தோல்வியே கண்டிறாத கருணாநிதியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. கருணாநிதி பேசியதைப்போல ஸ்டாலின் பேசுவதும் மக்களின் குரலாக இருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று உலக முழுவதும் சொல்கிறது. ஆனால் இதனை நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி மறுக்கிறார். ஒரே கலாசாரம் மட்டும் இந்தியாவில் இருப்பதாக மோடி அரசு நினைக்கிறது.

ராகுல் காந்தி

நாங்கள் அதனை மறுக்கிறோம். மேடையில் இருக்கும் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டின் நலன் காக்கப்படும். ஒரே கலாசாரத்தை திணிக்க ஆர்.எஸ்.எஸையோ, மோடியையோ நாம் அனுமதிக்ககப் போவதில்லை. இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்கும் எங்களை அழைத்ததற்கும் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய ஒருவரின் இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. நான் நம்பிக்கையோடு சொல்கிறேன், கருணாநிதியைப் பற்றி எப்படி பெருமையாக பேசுகிறோமோ அதைப்போல ஸ்டாலினைப் பற்றியும் பெருமையாக பேசுவோம். அவர் சரியான பாதையில் செல்கிறார். மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து நிற்போம்' என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91287-mkstalin-should-fulfill-karunanithis-political-space-says-rahul-gandhi.html

 

 

 

'இன்னொரு சுதந்திரப் போருக்கு மக்கள் தயார்..!': எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் மு.க.ஸ்டாலின்

 

இந்திய மக்கள் இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டார்கள் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

86b9670a-313a-4c44-8b8f-3be9261ffe0a_214


தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. அந்த விழாவில் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'அண்ணாவின் கட்டளையின்படி 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று கருணாநிதி வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் 13 முறை தொடர்ச்சியாக கருணாநிதி வெற்றி பெற்றார். அவருடைய சாதனையை இந்தியாவிலேயே யாரும் முறியடிக்கவில்லை. தி.மு.க தலைவராக 48 ஆண்டு காலம் நீடித்து வருகிறார். வழி நடத்தி வருகிறார்.

5c7497c8-1646-4ac7-8ce6-8ddfc2f031e3_214

அவருடைய வைர விழாவுக்கு வந்திருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் நன்றிகள். சில அரசியல் தலைவர்கள், தங்களையும் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் இந்த விழாவை அரசியல் விழா என்று விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மேடையில் பதில் கூற நான் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றிருக்கிற காரணத்தால் மத்திய அரசு மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பல கறுப்புப் பணத்தை மீட்போம் என்று மத்திய அரசு வாக்குறுதி கொடுத்ததே. தற்போது அது என்ன ஆயிற்று.

 

மாநில உரிமைகளுக்கு தி.மு.க தொடர்ந்து போராடும். பிரதமர்களை உருவாக்கித் தந்தவர் கருணாநிதி. தேசிய அரசியலின் திசையை உருவாக்கித் தருபவராக திகழ்பவர் கருணாநிதி. அவர் நலமாக இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். இந்தியாவை காக்க இந்த மேடையில் இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். கொள்கை, லட்சியம் என்பதிலிருந்து தி.மு.க பின்வாங்கியதில்லை. மாட்டிறைச்சிக்குத் தடை போட்டு மத்திய அரசு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். எதிர்க்கட்சிகளாகிய நாம் தயாராகிவிட்டோமா என்றுதான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக்காட்டவே இந்த விழா' என்று தெரிவித்தார். 
 

http://www.vikatan.com/news/tamilnadu/91291-people-are-ready-for-one-more-freedom-fight-says-mkstalin.html

  • தொடங்கியவர்

#HBDKalaignar94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

 
 
கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு கலைஞர் 94 : மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

பிற செய்திகள் :

http://www.bbc.com/tamil/india-40139373

 

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் சில முக்கிய தருணங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.