Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளிரும் நட்சத்திரம்: சிவகார்த்திகேயன்

Featured Replies

ஒளிரும் நட்சத்திரம்: சிவகார்த்திகேயன்

 

 
 
 
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்
 
 

1. தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து முன்னணிக் கதாநாயகனாக வென்ற பலர் வட இந்தியாவில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அப்படியொரு இடத்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 1985, பிப்ரவரி 17-ம் தேதி தாஸ்- ராஜி தம்பதிக்கு மகனாகச் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். இவரது தந்தை சிறைத் துறையில் தலைமை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து தமிழக அரசின் தங்கப் பதக்கம் வென்றவர். தந்தையின் வேலை காரணமாகக் குடும்பம் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றது. அதில் ஒன்று திருச்சி. அங்கே பள்ளிப் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் 18 வயதில் தனது தந்தையை இழந்தவர். எனினும் தளராமல் தனது தாயாரின் வழிகாட்டுதலில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றார்.

2. சிவகார்த்திகேயனின் தாத்தா பத்மஸ்ரீ விருதுபெற்ற நாகசுர வித்வான். சிவகார்த்திகேயனுக்கு 8 வயதானபோது எம்.பி.எம்.பொன்னுசாமி என்பவரிடம் சில மாதங்கள் நாகசுரம் கற்றுக்கொண்டார். தந்தையாருக்குப் பணிமாற்றல் வந்ததால் நாகசுரம் கற்றுக்கொள்வது தடைபட்டது. சிறு வயது முதலே நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருந்த சிவகார்த்திகேயன், திருச்சி, ஜே.ஜே. பொறியியல் கல்லூரியில் படித்தபோது கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பலகுரல், மைம் நாடகம் ஆகிய பிரிவுகளில் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டு மூன்று பரிசுகளில் ஒன்றை வென்று வருபவராக இருந்தார்.

3. கல்லூரிக் கலை விழாக்களில் ரஜினி குரலில் பேசியே தீர வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் இவரிடம் வேண்டுகோள் வைப்பது வழக்கம். கல்லூரியில் படிக்கும்போது ரஜினி பட வெளியீட்டு தினத்தை பதாகை வைத்துக் கொண்டாடும் அளவுக்கு தீவிர ரஜினி ரசிகர். மதுரைவரை சென்று மகன் அதிக அளவில் சினிமா பார்ப்பதைக் கண்ட அவரது தாயார், அவர் சினிமா பக்கம் போய்விடக் கூடாது என்று கருதினார். இதற்காகச் சென்னை சென்று முதுகலை படிக்க விரும்பிய சிவகார்த்திகேயனைத் தடுத்தார்.

4. ஆனால் அம்மாவைச் சம்மதிக்கவைத்துச் சென்னையில் எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். கல்லூரி நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் படித்துக்கொண்டே விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் அம்மாவுக்குத் தெரியாமல் பங்கேற்று, பல குரல், மேடைச் சிரிப்புரை ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற பிறகே அவரது அம்மாவுக்குத் தெரியவந்தது. பின்னர் விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகி மேலும் பிரபலமான சிவகார்த்தியேயனுக்கு, நான்கு ஆண்டுகள் தொலைக்காட்சி உலகில் கிடைத்த அனுபவம் பெரும் தன்னம்பிக்கையைத் தந்தது.

5. தொலைக்காட்சி உலகம் சிவகார்த்திகேயனை ‘பெஸ்ட் எண்டெர்டெயினர்’ என்று கொண்டாடியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் திரையுலகினர் பலரும் சிவகார்த்திகேயனைப் பார்த்து “நீங்கள் சிறந்த காமெடி நடிகராக வரலாம்; அதற்கு முயற்சி செய்யுங்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டுப் பணிவுடன் தலையசைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் ‘நான் காமெடியன் என்ற அளவிலேயே தேங்கிவிடுபவன் அல்ல’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அன்று உதவி இயக்குநராக இருந்த அட்லீ ‘முகப் புத்தகம்’ என்ற குறும்படத்தில் நடிக்க அழைத்தார். அதில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன், அதன் பிறகு பல குறும்படங்களில் நடித்தார். அது பல இயக்குநர்களின் பார்வையில் பட்டது.

6. பெரிய திரையில் கதாநாயகனின் நண்பராக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தில் நடித்தார். அடுத்துப் பாண்டிராஜின் ‘மெரினா’ வழியாகக் கதாநாயகன் என்ற உயரத்தை எட்டி, தனது கணக்கைத் தொடங்கிய சிவகார்த்திகேயனை ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றும் ‘லோக்கல் ஷாரூக் கான்’ என்றும் ரசிகர்கள் இன்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘இவருக்குப் பலகுரல் வரும், நடிப்பு வராது, நகைச்சுவை வரும், நடனம் வராது’ என்ற விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்ட சிவகார்த்திகேயன், கடும் உழைப்பால் நான்கு நடனமாடக் கற்றுக்கொண்டு ரசிகர்களை வியக்கவைத்தார். தனது படங்களில் பாடும் நடிகராகவும் உயர்ந்திருக்கிறார்.

7. எல்லா வயதினருக்கும் ஏற்ற நகைச்சுவையைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் சீரியஸான காட்சிகளிலும் நகைச்சுவை உணர்வை அளவோடு வெளிப்படுத்த முடியும் என்பதிலும் அதிக ஈடுபாடு காட்டும் சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்குப் பிடித்தமான நடிகராகவும் மாறியிருக்கிறார். இவர் நடித்த ‘மான் கராத்தே’ படத்துக்கு ஹன்ஸிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது “இவருக்கு ஹன்ஸிகா ஜோடியா?” என்று கிண்டலடித்தார்கள். இதே கிண்டலும் விமர்சனமும் ரஜினிக்கும் ஆரம்பத்தில் இருந்தது.

8. ரஜினியின் ரசிகரான சிவகார்த்திகேயன் அவரை ‘தலைவரே’ என்று அழைத்தாலும், அஜித்தின் மீதும் அதிக அபிமானம் கொண்டவர். “நான் அஜித்தைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் தரும் ஒரே விஷயம் நம்பிக்கை” என்று கூறியிருக்கிறார்.

9. நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் சிவகார்த்திகேயன், தனது கல்லூரி நண்பர்களுடன் இன்றும் நெருக்கமாக இருக்கிறார். அவர்களில் பலருக்குத் திரையுலகில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.

10. எளிமையை விரும்பி உழைப்பை அதிகம் நம்பும் சிவகார்த்திகேயனுக்கு நம்பர் ஒன் ரேஸில் நம்பிக்கை இல்லை. “யாரையாவது போட்டியாக எடுத்துக்கொண்டால் நாம் அவர்களையே கவனித்துக்கொண்டிருக்க வேண்டும். இது அவர்களது படங்களைக் கூட ரசிக்க முடியாதவர்களாக நம்மை ஆக்கிவிடலாம். நான் முதலில் ஒரு ரசிகன். அதன்பிறகுதான் நடிகன்” என்று கூறுபவர் சிவகார்த்திகேயன். தற்போது ஜெயம் ராஜா இயக்கத்தில் நயன்தாரா, ஃபகத் பாசில் ஆகியோருடன் ‘வேலைக்காரன்’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

நண்பரின் பார்வையில்...

siva_frnd_3170492a.jpg

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, அதைப் பாடியவர் அருண்ராஜா காமராஜ். பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் எனத் தனது திறமைகளை வெளிப்படுத்திவரும் இவர், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர். அவரது பகிர்வு இது…

“திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் முதலாண்டின் முடிவில் சிவாவைச் சந்தித்தேன். நாங்கள் படித்தது ஒரே கோர்ஸ் என்றாலும் வேறுவேறு பிரிவுகளில் இருந்தோம். இண்டஸ்டிரியல் விசிட்டுக்காக சென்னைக்குப் புறப்பட்டோம். அது நான்கு நாள் பயணம். அப்போது கிரிக்கெட்டும், பல குரலும்தான் எங்கள் இருவரையும் இணைத்தன. நான் அவனுக்கு நண்பன் ஆன பிறகு எனது வகுப்பைப் புறக்கணித்துவிட்டு அவனது வகுப்பில் போய் அமர்ந்துவிடுவேன். கல்லூரியில் நானும் சிவாவும் பிரபலமான பவுலர்கள். எதை எடுத்தாலும் அதில் பிரகாசிக்க வேண்டும் என்று நினைப்பவன்.

ஜெயிக்கணும் என்று நினைப்பவன் அல்ல; ஆனால் தோற்றுவிடக் கூடாது என்று துடிப்பவன். அதுதான் அவனது வெற்றியின் ரகசியம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராக இருப்பவன். கல்லூரியில் படிக்கிறபோது யாருமே முயற்சிக்காத புதிய புதிய குரல்களையெல்லாம் முயற்சித்து துல்லியமாகப் பேசி ஆச்சரியப்படுத்துவான். குரல்தான் அவனது ஆயுதம். இன்று இத்தனை பெரிய உயரத்துக்குச் சென்றாலும் அவன் நண்பர்களை விட்டு விலகவில்லை. அவன் கைதூக்கிவிட்டதால் இன்று சினிமாவில் எனது பயணம் சிறப்பாக இருக்கிறது.”

http://tamil.thehindu.com/cinema/cinema-others/ஒளிரும்-நட்சத்திரம்-சிவகார்த்திகேயன்/article9717698.ece?widget-art=four-all

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.