Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மொழி அமுலாக்கலுக்கு வழிகாட்டும் சுற்று நிருபம் நடைமுறைப்படுத்தப்படுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி அமுலாக்கலுக்கு வழிகாட்டும் சுற்று நிருபம் நடைமுறைப்படுத்தப்படுமா?

[26 - February - 2007]

_ த. மனோகரன்_

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கி சொந்த மொழியில் கருமமாற்றும் நிலையை உருவாக்க வேண்டுமென்று தேசிய நல்லிணக்க, அரசியலமைப்பு அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று பல உயர்மட்ட தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவை வெறும் மேடைப் பேச்சுக்களாக இருப்பதால் பயனொன்றும் ஏற்படப் போவதில்லை. இனப்பிரச்சினைக்கு மூல வேராக இருப்பது மொழிப் பிரச்சினையே. தனிச்சிங்கள அரச கருமமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னரே இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டு பல அவலங்களும் நடந்தேறின. அவை தொடர்ந்தும் அரங்கேறி வருகின்றன.

தமிழ்மொழிப் புறக்கணிப்புக்கான தனிச்சிங்கள அரச கருமமொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளை அன்று பாராளுமன்றத்திலிருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா கூறியது தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை. அன்று அவர் கூறியதைக் கவனத்திலெடுத்திருந்தால் இன்று நாடு இன்றைய சிக்கலில் தள்ளப்பட்டிராது.

தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த அவர் `ஒரு மொழியென்றால் இரு நாடுகள் இரு மொழியென்றால் ஒரு நாடு' என்று எடுத்துக் கூறினார். மொழிப் பிரச்சினையின் தாக்கம் எங்கு கொண்டு செல்லும் என்பதை அவர் அன்று உணர்ந்து, தெளிந்து கூறிய கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் தட்டிக் கழித்ததன் பின்விளைவுகள் நாட்டை முன்னேற்றத்திலிருந்து தடுத்துவிட்டது. இதுவே யதார்த்தம்.

காலாவதியாகிவிட்ட 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டம் நடைமுறையில் இன்றும் செயற்படுகின்றதோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், சிங்களத்துடன் தமிழ்மொழிக்கும் சமவுரிமை, நிர்வாக உரிமை வழங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆனால், தமிழ்மொழியை நிர்வாக மொழியாக அமுல்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக இல்லை.

இந்நிலையில் பொதுநிர்வாக அமைச்சு காலத்திற்குக் காலம் தமிழ்மொழியையும் பயன்பாட்டில் கொள்ள அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளைச் சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் நினைவூட்டி சுற்றறிக்கைகளை வெளியிட்டு வந்த போதிலும் ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறுவதாயில்லை.

தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்தும்போது தமிழ் மக்கள் தமது அன்றாடக் கடமைகளையும், அரசாங்கத் தொடர்புகளையும் தமிழ்மொழியில் ஆற்றிக்கொள்ள வசதிகளிருக்க வேண்டும். அரசாங்கப் பதிவுகள், ஆவணங்கள், வெளியீடுகள் தமிழில் இருக்க வேண்டும். அவற்றைத் தமிழ்மொழியில் பெற்றுக்கொள்ளும் உரிமையும் தமிழ் மக்களுக்கு இருத்தல் வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழான மொழி தொடர்பான விதிகளின் கீழ் தமிழ்மொழியை அமுல்படுத்தும் வழிமுறைகளைப் பொது நிர்வாக அமைச்சு 1989 ஆம் ஆண்டில் இரு சுற்றறிக்கைகள் மூலம் வலியுறுத்தியிருந்தது. இலக்கம் 25/89 கொண்ட 1989.04.18 ஆம் திகதிய சுற்றறிக்கையும், இலக்கம் 25/89 (1) கொண்ட 1989.12.06 ஆம் திகதி கொண்ட சுற்றறிக்கையுமே அவை.

அச் சுற்றறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி பொது மக்களிடமிருந்து சிங்களத்தில் பெறப்படும் கடிதங்களுக்குச் சிங்களத்திலும், தமிழில் கிடைக்கும் கடிதங்களுக்குத் தமிழிலும், ஆங்கிலத்தில் கிடைக்கும் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலும் பதில் வழங்க வேண்டும்.

ஆவணமொன்றினதோ, வெளியீடொன்றினதோ அல்லது அவற்றின் ஒரு பகுதியையோ பெற்றுக்கொள்ளும் உரித்துள்ள ஒருவருக்கு அந்த ஆவணத்தினதோ, வெளியீட்டினதோ, பகுதியையோ அவர் கேட்கும் சிங்களம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வழங்க வேண்டும்.

அத்துடன், பொது மக்களால் பயன்படுத்தப்படும் சகல படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும்.

குறிப்பிட்ட 1989 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் கூறப்பட்ட வழிமுறைகளை வலியுறுத்தி பதினேழு ஆண்டுகளுக்குப்பின் 2006.12.13 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சு 01/2006 இலக்க சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரச அலுவலகங்களில் சுற்றறிக்கைகளில் கூறப்பட்டுள்ள, அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொழியமுலாக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்த ஏற்றவை செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி எவரும் ஆராய்வதாயில்லை.

மொழிப் பிரச்சினை நாட்டிற்கேற்பட்டுள்ள செயற்கை அனர்த்தமாகும். இயற்கை அனர்த்தங்களிலிருந்து விடுபட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உள்ளது. சமூக அநீதி ஒழிப்புக்கென்று தனியமைச்சு வேறு உள்ளது. அரச கருமமொழி ஆணைக்குழுவும் மொழியமுலாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது.

ஆனால், நாட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்காது ஏற்படுத்தப்பட்ட செயற்கை அனர்த்தத்தைப் போக்கவோ, தடுக்கவோ, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மொழி ரீதியான சமூக அநீதியை ஒழிக்கவோ எந்தவொரு செயற்பாடும் எடுக்கப்படவில்லை.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழியுரிமையைச் செயற்படுத்த எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டு மத்தியஸ்தம் தேவையில்லை.

தமிழ் அரசியல் அமைப்புகளதோ, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களதோ வேண்டுகோளோ, பேச்சுவார்த்தையோ அவசியமில்லை.

அரசாங்கம் நேரடியாக, உடனடியாக அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழியுரிமையை உரிய முறையில் வழங்கினால் நாட்டில் நிலவும் இன முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.

ஒரே நாடு என்ற தத்துவத்தை வலியுறுத்துபவர்கள் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவின் அன்றைய கருத்துக்கு இன்றாவது மதிப்பளித்து நடைமுறைப்படுத்த வேண்டும். முன்வருவார்களா?

www.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.