Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது..!' எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம்

Featured Replies

'தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது..!' எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம்

 

 

a04d17f5-f066-4372-ae4a-9f0aa97f5da7_122

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ’தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்பட்டுத்தாது’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/98644-ttvdinakaran-and-sasikala-sacks-from-admk.html

  • தொடங்கியவர்

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்

டிடிவி தினகரன் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பதால் அவர் செய்யும் நியமனங்களைக் கட்சியினர் ஏற்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்திருக்கும் நிலையில், கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார்.

டி.டி.வி.தினகரன்படத்தின் காப்புரிமைAIADMK Image captionடி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. அம்மா அணியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று காலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தாலும்கூட அவரால் செயல்பட இயலாத நிலையில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் தற்போது கட்சியை வழிநடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை, கடந்த 14.2.2017ல் மீண்டும் கட்சியில் சேர்த்து அடுத்த நாளே அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது சட்ட விரோதமானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 ஆண்டுகள் அவர் கட்சியில் இல்லாததால், அவரால் கட்சிப் பதவிகளை வகிக்க இயலாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், தினகரனை நியமனம் செய்த சசிகலாவின் நியமனமே தற்போது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவிப்பது அ.தி.மு.க. தொண்டர்களைக் கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 27 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், சசிகலா பொருளாளராக நியமனம் செய்த திண்டுக்கல் சீனிவாசன் தற்போதும் கட்சியின் பொருளாளராக நீடிக்கும் நிலையில், தன்னுடைய நியமனம் மட்டும் எப்படிச் செல்லாமல் ஆகும் எனக் கேள்வியெழுப்பினார்.

தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் பொதுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளுக்குத்தான் தொடர்ச்சியாக ஐந்தாண்டு கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றும் துணைப் பொதுச் செயலாளர் போன்ற நியமனப் பதவிகளுக்குப் பொருந்தாது என்றும் தினகரன் தெரிவித்தார்.

'தேவைப்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவேன்'

கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறிய தினகரன், தேவைப்பட்டால் கட்சியிலிருந்து சிலரை நீக்கவும் செய்வேன் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால்தான் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால்தான் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார் என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் துணைப் பொதுச் செயலாளர் என தன் பெயரையே குறிப்பிட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு, வெளியில் ஒன்றை சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல், யார் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டாலும் அவர்களை கட்சியைவிட்டு நீக்குவேன் என்றும் நடப்பது எங்களுடைய ஆட்சியென்றும் தினகரன் கூறினார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு கட்சியைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ கவலையில்லையென்றும் பதவியில் உள்ளவரை சுருட்டிக்கொண்டு போவதற்காகவே இப்படிச் செயல்படுவதாகவும் கூறிய தினகரன், தங்களுடைய மடியில் கனம் இருப்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு செயல்படுவதாகத் தெரிவித்தார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

தான் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதால், பயந்துபோய் இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டிருப்பதாக தினகரன் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி, சசிகலா தலைமையிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது. இதற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

மார்ச் மாதம் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சசிகலா அணியின் சார்பில் அந்தத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். ஆனால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு ஏப்ரல் மாத மத்தியில் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறையால் தினகரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்குள் கட்சிக்குள் எடப்பாடி பழனிச்சாமி தன் பிடியை வலுப்படுத்தியுள்ள நிலையில், கடந்த வாரம் சில கட்சிப் பதவிகளுக்கு ஆட்களை அறிவித்தார் தினகரன். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருவதாக அமைச்சர்கள் தெரிவித்துவருகின்றனர்.

http://www.bbc.com/tamil/india-40888885

  • தொடங்கியவர்

தினகரனை வெளியேற்றிய அ.தி.மு.க.வின் ஆகஸ்ட் புரட்சி..! எடப்பாடி பழனிசாமி மெளனம் கலைத்ததன் பின்னணி

 

எடப்பாடி பழனிசாமி

75 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரப்போராட்டத்தின் போது முழக்கமிட்டு தொடங்கிய இயக்கம் ஆகஸ்ட் புரட்சி என வர்ணிக்கப்பட்டது.  இப்போது அ.தி.மு.க.வில் 'தினகரனே வெளியேறு' என்ற அ.தி.மு.க. தலைமையின் அறைகூவலை ஆகஸ்ட் புரட்சி என வர்ணிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். சசிகலா, தினகரனுக்கு எதிராக இதுவரை வாய் திறக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சசிகலா, தினகரனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனக்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக சொல்கிறார் தினகரன். என்ன செய்வது என்ற ஆலோசனையில் இருக்கிறார் பன்னீர்செல்வம். இவை எல்லாம் மீறி அ.தி.மு.க. எதிர்காலம் என்னாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தையொட்டிய அடுத்தடுத்த நிகழ்வுகளால் கலகலத்துப் போய் நிற்கிறது அ.தி.மு.க. கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த 249 நாள்களில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அக்கட்சியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பன்னீர்செல்வம் முதல்வராகவும், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும் நியமிக்கப்பட்டதில் தொடங்கி, சசிகலா, தினகரன் சிறையில் அடைப்பு, இரு அணியாக பிரிந்ததால் முடக்கப்பட்ட சின்னம், தினகரனுக்கு எதிர்ப்பு வலுக்க, மூன்றாக பிளவு பட்ட அ.தி.மு.க., என ஜெயலலிதா மரணித்த பின்னர் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகள் நடந்து வந்தன. இதன் உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தினகரன் மீது பகிரங்க தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தினகரன்

அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்ட இந்த முடிவு இது மிக முக்கியத்துவமிக்க முடிவாகப் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்திருந்த போது அணியை இணைக்க இரு முக்கிய கோரிக்கைகளை பன்னீர்செல்வம் தரப்பு முன்வைத்தது. அதில் முதன்மையானது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது. இதையடுத்தே கட்சியில் இருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அப்போது இருந்தே தினகரன் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கிடையே பனிப்போர் நிலவி வருகிறது.

தற்போது டி.டி.வி. தினகரன் மீது பகிரங்கத் தாக்குதலை எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்க, இந்தப் பனிப்போர் வெடித்து, விஸ்வரூபமெடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா சிறை செல்லும் போது, சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து கட்சிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் சசிகலா. அதன் பின்னர் தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்து பணியாற்றி வந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தினகரனுக்காக தேர்தல் களத்தில் ஓடியாடி வேலை பார்த்தனர். 

இந்தச் சூழலில் இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தினகரனுக்கு எதிரான குரல்கள் கட்சியில் எழத் தொடங்கின. தினகரன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த உடன் அவரை ஓரங்கட்டத் தொடங்கினர். அப்போது இருந்த சூழலில், தினகரனால் எதையும் செய்ய முடியவில்லை. தான் கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பதாக தினகரனே அறிவித்தார்.

ஆனால், அவர் முழுமையாக ஒதுங்கிவிடவில்லை.கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால் கட்சி விவகாரத்தில் தினகரன் தலையிடவில்லை. இருப்பினும் தினகரனுக்கு எதிராக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பேசி வந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. 

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே சசிகலாவை சந்தித்து சிறையில் ஆலோசனை நடத்திய தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கட்சிப்பணியைத் தொடங்க உள்ளதாக தினகரன் அறிவித்தார். மேலும் கட்சி நிர்வாகிகள் நியமனப் பட்டியலை வெளியிட்டு, சுற்றுப்பயணத்திட்டத்தையும் அறிவித்தார். இதையடுத்து கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இன்று கூடிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 'தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது. அவரின் உத்தரவுகள் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது' என அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள் 27 பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி சசிகலா, தினகரனால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். இதுவரை இவர் சசிகலா, தினகரனுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பொதுவெளியில் பேசியதில்லை. சசிகலா, தினகரன் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்தக் கோபமும் இல்லை என்பதையே இது வெளிக்காட்டியது. இந்தச் சூழலில் முதல்முறையாக தினகரனுக்கு எதிராக பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி பேசியது இப்போதுதான்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கட்சி ஒருவரிடமும், ஆட்சி ஒருவரிடம் என இரட்டை தலைமையை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இரண்டாவது, முதல்வர் பதவியை விட்டுத்தரவும் அவர் விரும்பவில்லை. தினகரன் கட்சி தலைமைப்பதவியை ஏற்றால், அவர் ஆட்சியையும் அவரே வழிநடத்தக்கூடிய சூழல் ஏற்படும் என்ற அவர் நம்பினார். தற்போதைய சூழலில் தினகரனின் அறிவிப்புகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாலே, அவருக்கு சவால் விடுக்கும் வகையில், தனது முதல்கட்ட கருத்தை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார் என்றே சொல்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

தினகரனை எதிர்த்து பேசுவதை அவர் விரும்பவில்லை. ஆனால் அவர் கட்சித்தொண்டர்களை சந்திப்பதும், நிர்வாகிகளை நியமிப்பதும் தனது பதவியை பறிக்கும் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனாலே தனது முதல் எதிர்ப்பை மிக அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. "தினகரன் நியமனம் தன்னிச்சையானது. அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது. கட்சியில் ஏற்பட்டிருக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம், வீண் குழப்பங்களை ஏற்படுத்த வழங்கப்பட்டிருக்கிறது. இது அ.தி.மு.க. தொண்டர்களை கட்டுப்படுத்தாது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழிநடத்தி வரும் நிலையில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்" என அந்த அறிக்கையில் தினகரனுக்கு எதிராக கடுமை காட்டப்பட்டுள்ளது. 

நான் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நுழைவதை யாரும் தடுக்க முடியாது என தினகரன் விடுத்த சவாலுக்கு பதில் சவால் இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வம் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 36 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் தினகரனை வலுவாக ஆதரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆட்டம் தொடங்குகிறது. இனி என்னாகும் என சொல்வதற்கில்லை. கூவத்தூர் ரிசார்ட் கண் முன் வந்து போகிறது. ஒரே நாளில் மாற்றத்தை கண்ட பீகார் மாநிலத்தின் ஆட்சி மாற்றம் கூட நினைவுக்கு வந்து போகிறது. என்ன ஆகப்போகிறதோ?

http://www.vikatan.com/news/coverstory/98662-get-lost-dinakaran-august-revolution-in-admk.html

  • தொடங்கியவர்

விரட்டியடிப்பு!தினகரனை துணை பொதுச்செயலராக நியமித்தது செல்லாது

 

அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரனை விரட்டியடிக்கும் விதமாக, அவரை துணை பொதுச்செயலராக நியமித்தது செல்லாது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், திடீர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

 

அவருக்கு, கட்சி நிர்வாகிகளை நியமிக்க, எந்த அதிகாரமும் இல்லை என்றும், தடலாடியாக அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக, தினகரனை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியை இணைக்க, முதல் அச்சாரம் போட்டுள்ளனர்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றது முதல், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை, மெல்ல ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கினார். அதற்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டுவதில், தீவிர கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு கிடைத்த பலனாக, தினகரன் ஆதரவாளர்களாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் அணி மாறினர்.
 


 

 

gallerye_225931420_1831365.jpg

 

நிர்வாகிகள் நியமனம்

 


இதன்பின், கட்சி நடவடிக்கைகளில், தினகரன் தலையிடாமல் தடுத்தார். அவரால், கட்சியின் தலைமை அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வரின் இந்த நடவடிக்கைகளால், கடும் அதிருப்தி அடைந்த தினகரன், முதலில், தன் குடும்பத்தினரை ஒன்றுபடுத்தினார். பின், ஆதரவாளர்களை திரட்டுவதற்காகவும், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டார். அதோடு நில்லாமல், கட்சியில் சில பொறுப்புகளுக்கு, தன் ஆதரவாளர்களை, புதிய நிர்வாகிகளாக நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்டவர்களில் சிலர், அடுத்த நாளே எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு, கட்சியில் எதிர்ப்பு அலை உருவானது.
 


 

அவசர ஆலோசனை

 


இதை பயன்படுத்தி, தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியினருடன் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் தொடர, பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில், நேற்று அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், 'அ.தி.மு.க., விதிகளின் படி, துணை பொதுச்செயலராக, தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது. அவர் எந்த பொறுப்பையும் வகிக்க இயலாது. கட்சியில் குழப்பம் ஏற்படுத்த, அவரால் வெளியிடப்படும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வினரை கட்டுப்படுத்தாது' என, அதிரடி தீர்மானம் நிறைவேற்றினர்.
 


 

தீர்மான விபரம்:

 


கட்சியின் நிரந்தர பொதுச்செயலராக, ஜெ., இருந்த இடத்தில், வேறு எவரையும் அமர்த்தி அழகு பார்க்க, தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஜெ., மறைவுக்கு பின், கட்சி சட்ட திட்டங்களின்படி, புதிய பொதுச்செயலர் தேர்வு செய்யும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்தாலும், அசாதாரண சூழ்நிலை காரணமாக, அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி, பல்வேறு நபர்கள், தேர்தல் கமிஷனில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நம் கட்சி சட்ட விதி, '20 வி'ன் படி, ஜெ.,வால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, ஜெ., வழிகாட்டுதலின்படி, கட்சியையும், ஆட்சியையும்
வழிநடத்தி வருகிறோம்.

ஜெ.,வால், 2011 டிச., 19ல், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, தினகரன் நீக்கப்பட்டார். அவரை, 2017 பிப்., 14ல் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு, மறுநாள் துணைப் பொதுச்செயலராக நியமித்தது, கட்சியின் சட்ட திட்ட விதி, '30 வி'க்கு விரோதமானது.
அவர் தொடர்ந்து, ஐந்து ஆண்டு காலம், அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தால், கட்சி விதிகளின் படி, அவர் எந்த பொறுப்பையும் வகிக்க இயலாது. தினகரன், துணைப் பொதுச்செயலர் என்ற அடிப்படையில், தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது.

அவரை துணைப் பொதுச்செயலராக நியமனம் செய்த, பொதுச்செயலரின் நியமனமும், தேர்தல் கமிஷன் முன் விசாரணையில் உள்ளது. இதற்கு மாறாக, தினகரன் தன்னிச்சையாக, ஆக., 8ல், கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கட்சியை, அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஜெ.,வால் நியமனம் செய்யப்பட்ட, தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, வழி நடத்தி வரும் நிலையில், கட்சியில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த, தினகரனால் வெளியிடப்படும் அறிவிப்புகள், அ.தி.மு.க., தொண்டர்கள் யாரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம், நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லக்கூடியவை அல்ல. கட்சி தொண்டர்கள், அதை நிராகரிக்க வேண்டும்.

ஜெ.,வின் உயரிய லட்சியமான, 'ஒவ்வொரு தொண்டனுக்கும் வாய்ப்பு; உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்' என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம் என, உறுதியேற்போம்.இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ., நியமித்தோர் மட்டும் கையெழுத்து

 



'தினகரன் நியமனம் செல்லாது; அவர் அறிவித்த நியமனங்களும் செல்லாது' என பழனிசாமி அணியினர் நிறைவேற்றிய தீர்மானத்தில் ஜெ.,வால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் கையெழுத்திட்டிருந்தனர். சசிகலாவால் அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செங்கோட்டையன்; பொருளாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சீனிவாசன்; மீனவர் அணி செயலராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தீர்மானத்தில் கையெழுத்திட வில்லை. முதல்வர் பழனிசாமி, எம்.பி., வைத்திலிங்கம் உட்பட 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர். கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை, மகளிர் அணி செயலர் விஜிலா சத்தியானந்த் போன்றோர்
கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல், ஜெ.,வால் நியமிக்கப்பட்டு,
தற்போது பன்னீர் அணியில் இருப்போரும் பங்கேற்கவில்லை.
 


 

பேட்டியை தவிர்த்தமுதல்வர், அமைச்சர்கள்

 


முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதும். கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீர்மான நகல் வழங்கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 'தீர்மான நகல் வழங்கி உள்ளோம். அதை பெற்றுக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். பேட்டி கொடுக்க மறுத்து விட்டனர். தீர்மானம் தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க யாரும் முன்வரவில்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1831365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.