Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் நகர்வு

Featured Replies

சம்பந்தனின் நகர்வு

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் கோரியதாகவும் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முனைந்துள்ள நிலையில் பிளவுபடாத ஒரு நாட்டுக்குள் ஒருமித்த தீர்வு காணப்படும் நிலை உருவாகியுள்ளமையினால் அதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்களது ஆட்சிக்காலத்திலும் பல முன்மொழிவுகளை செய்துள்ளீர்கள்.பல கருத்துக்களையும் முன்வைத்துள்ளீர்கள். இதனால் அரசியலமைப்பு மாற்றத்திற்கு உங்களது கட்சியின் ஒத்துழைப்பு தேவை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் தான் வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேபோன்றே சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புதிய அரசியலமைப்பு தற்போதைக்கு தேவையில்லை. அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் முதலில் பேசவேண்டும். அதன்பின்னரேயே சம்பந்தனின் நிலைப்பாட்டிற்கு பதிலளிக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.

 சந்திப்பில் புதிய அரசியலமைப்புக்கு தனது ஆதரவு அவசியம் என்று சம்பந்தன் கோரினார். ஆனால் புதிய அரசியலமைப்பொன்றுக்கான அவசியம் இப்போது இருப்பதாக தெரியவில்லை. பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன் பேச்சு நடத்தி இந்த விடயம் குறித்து முடிவை அறிவிப்பதாக சம்பந்தனிடம் நான் தெரிவித்துள்ளேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருக்கின்றார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் கூறியுள்ளபோதிலும் இந்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு எண்ணப்பாடுகள் தோன்றியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கும் தயார் என்று கூறியிருந்தார். இந்தக்கூற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில்தான் தற்போது முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேசியுள்ளார். மீண்டும் சந்தித்து பேசுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் நடவடிக்கையானது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன்மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதற்கிணங்க பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ் இருபிரதான கட்சிகளும் இந்த விடயத்தில் இன்னமும் பூரணமான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. இதனால் புதிய அரசியல் யாப்புக்கான செயற்பாடுகள் வெற்றியளிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கின்றது. புதிய அரசியல்யாப்பு யோசனைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினரும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

 இதேபோன்றே தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்திலும் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம் போன்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றபோது அதற்கும் பொது எதிரணி கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரும் நோக்கத்திலேயே அவர் இச்சந்திப்பை மேற்கொண்டாரா அல்லது இந்த சந்திப்பில் வேறு உள்நோக்கங்கள் உள்ளனவா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியிருந்தார். உண்மையிலேயே இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அக்கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விருப்பம் கொண்டிருந்தார். எதிரணிகளின் ஆதரவுடன் தான்வேட்பாளராக களமிறங்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க எண்ணியிருந்தார்.

ஆனால் பொது எதிரணியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் பொது எதிரணியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டாலும் பலமான மஹிந்த ராஜபக் ஷவை வெற்றிகொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டினை சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான எதிரணியினர் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுப்பி இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நீங்கள் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் வேறொருவரை பொது வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகவே கூறியிருந்தார். இதனையடுத்துதான் பொதுவேட்பாளர் எண்ணத்தை ரணில் விக்கிரமசிங்க கைவிட்டிருந்தார்.

இதனையடுத்து பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெறச் செய்யப்பட்டிருந்தார். இதன்மூலமே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பெரும் வகிபாகம் வகித்திருந்தார். தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான உறுதிமொழியும் கூட்டமைப்பினரிடம் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவும் அளித்திருந்தது. இவ்வாறு நல்லாட்சியை உருவாக்க பெரும் பங்கு வகித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும் என்று அசையாத நம்பிக்கையை கொண்டிருந்தார். இதனால் தான் 2016 ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அவர் பெரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நம்பிக்கை வீண்போயுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் எம்.பி. தற்போது விமர்சித்து வருகின்றார். ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போதும் அதன் பின் இரண்டு வருடங்கள் கடக்கும் வரையிலும் அவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்திருக்கவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். புதிய அரசியல் யாப்பு விவகாரத்தில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்தோ , அல்லது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்தோ அவர் வலியுறுத்தியிருக்கவில்லை. மாறாக ஒருமித்த நாட்டுக்குள் விட்டுக்கொடுப்புடன் தீர்வொன்றை காண்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் இத்தகைய விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்புப் போக்கை காண்பித்தமையினால் அது குறித்து தற்போது விமர்சனங்களை அவர் மேற்கொண்டு வருகின்றார். அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களையும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் பிரதிநிதிகளையும் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பேசியிருந்தார்.

இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கியதேசியக்கட்சி, மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கிடையில் அரசியல் போட்டா போட்டிகள் நிலவுவதாலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமலிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அரசியல் தீர்வு விடயம் மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு விவகாரம் தொடர்பில் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஆட்சி செய்வதற்கு தயார் என்று சம்பந்தன் அவருடன் சந்திப்பையும் நடத்தியிருக்கின்றார்.

 இந்த விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் காய் நகர்த்தல்களை தற்போது மேற்கொண்டுவருவதாகவே தெரிகின்றது. அரசியல் தீர்வு விவகாரம், அன்றாடப் பிரச்சினைளுக்கான தீர்வு விடயம் தொடர்பில் அண்மையில் சம்பந்தன் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச நாடுகளின் தூதுவராலயங்களுக்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இழுத்தடிப்புப் போக்கு காட்டப்படுகின்றமை தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் சர்வதேச நாடுகளுக்கு கடிதங்களை எழுதும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

உண்மையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காணக்கூடிய நிலைமை ஏற்படவில்லை. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அரசியல் தீர்வுக்கான அவசியம் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து பேச்சுவார்த்தையிலிருந்து அரசாங்கம் விலகியிருந்தது. பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழு, சர்வகட்சிக்குழு என்று குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.

இந்த நிலையில் தான் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆட்சியிலும் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தீர்வுக்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் தற்போது அரசாங்கத்தின் மீது சற்று வெறுப்பு கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. இந்த நாடுகளின் பிரதிநிதிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், அழுத்தங்களை பிரயோகிக்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிகின்றது.

இத்தகைய வலியுறுத்தல்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடனான சம்பந்தனின் சந்திப்பு இடம்பெற்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

மொத்தத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடனான எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான நகர்வா அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அவரது ஒத்துழைப்புக்களை பெறுவதற்கான முயற்சியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

அன்பரசன்

சம்பந்தனின் நகர்வு

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.