Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி'

Featured Replies

வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி'

 

 
 

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?', "வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கலாமா?' இந்த இரண்டு பழமொழிகளுக்குமான அர்த்தத்தை தற்போதைய அரசியல் சூழலில் கேட்கக்கூடிய மிகச்சிறந்த தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும்.

அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுவருகின்றது. இன்றைய தினம் (08112017) இறுதிநாள் விவாதம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையாக இருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் வடக்கு, கிழக்குத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும், தமிழ் மக்கள் மீது அக்கறைகொண்ட தரப்பினரிடையேயும் ஒருவித அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 5ஆம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இனி இணைந்து செயற்படவோ, அதன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவோ போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு மாறாகவும் செயற்படும் நிலையிலேயே தாம் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயமானது பல்வேறு கருத்துருவாக்கங்களையும், விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.

""புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கையில் சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி வரவேற்றுள்ளது'' எனக் குற்றஞ்சாட்டியுள்ள சுரேஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது வடக்கு கிழக்கு இணைப்பு, வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்தக் கொள்கைகளுக்கு மாறாகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையாது தனித்து இயங்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவரிடமும் இது தொடர்பில் தான் கோரிக்கை விடுத்தபோதிலும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரு சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாட்டை சந்திக்குக் கொண்டுவந்துள்ளதோடு, கடந்த காலங்களில் கூட்டமைப்புக்குள் இருந்ததாகக் கூறப்படும் முரண்பாடுகளையும் அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிபந்தனையற்ற ஆதரவை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியபோதே முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. எனினும், அதன் பின்னர் 2015 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திருப்பியது.

"ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்று அவசியம் எனவும், ஒன்றுபட்ட வடக்கு, கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென்றும், பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மக்களின் அமோக ஆதரவு கிடைக்கவே இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவருமானார்.

அதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் எழ ஆரம்பித்தன. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராவும் சம்பந்தன் தனது கடமையைச் சரியாக செய்யவில்லை. ரணில் மைத்திரி அரசிதின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகவும் நாடாளுமன்றத்தில் எந்தவொரு திருத்தமோ, சட்டமூலமோ நிறைவேற்றப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவைத் தெரிவித்த ஒரே எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தனே விளங்கினார். ஓர் இணக்க அரசியலை அவர் முன்னெடுத்துச் செல்வதும்,அதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆதரவு தருவதும் வாடிக்கையாகிப்போகவே பிரச்சினைகள் வலுப்பெறத் தொடங்கின.

இனியும் சம்பந்தனை நம்பி பிரயோசனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் "எழுக தமிழ்' பேரணியை நடத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைத்தார். இதனால் வடமாகாண முதல்வருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் தலைமைக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றின. எனினும், பின்னர் சம்பந்தனும், சி.வியும் சந்தித்துப் பேசியிருந்தார்கள். அதன் பின்னரான காலப்பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள், சுமந்திரனின் காரசாரமான விமர்சனங்கள், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பினுடனான உறவில் ஏற்பட்ட வெறுப்பு, அரசியல் கைதிகள், காணாமற்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் தமிழ்க் கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயற்பாடுகள், இறுதியாக தமிழரசுக் கட்சியுடனான உறவில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஏற்பட்ட அதிருப்தி என இந்தப் பட்டியல் நீள்கின்றது.

தமிழர்கள் இந்த நாட்டில் அனுபவித்த அனுபவிக்கின்ற கொடுமைகள், அடக்கு முறைகள், துயரங்களை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. பேரினவாத சிங்கள அரசுகள் தமிழர்களை அடக்கி ஆள்வதையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்டு சட்ட ரீதியாகவும் சட்டவிரோதமாகவும் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையையும், இன அழிப்பையும் மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழலில் முதலில் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுதத்தாலும் வென்றெடுக்க முடியாத தமது கோரிக்கைகளை (ஓரளவேணும்) அரசியல் தீர்வின் ஊடாக அடைந்துகொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் தமிழர்களுக்குத் தற்போது தோன்றியுள்ளது.

இவ்வாறான பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதை விடுத்து தமிழ்த் தரப்பு தமக்குள் இருக்கும் உள்ளக முரண்பாடுகளை வைத்து சண்டையிட்டுக்கொள்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.? ஏற்கனவே புதிய யாப்பு உருவாக்கத்திற்கு பௌத்தத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ள நிலையில் தமிழ்த் தரப்பு தமக்குள் ஒற்றுமையின்மையை வெளிக்காட்டிக்கொள்வது பேரினவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் வாய்ப்பாகவே அமைந்துவிடும். "ஊர்கூடி தேர் இழுத்தால்தான் வந்துசேரும்' என்பதைப்போல் ஒற்றுமையாகச் செயற்பட்டு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டு அதன் பின்னர் உள்வீட்டு விவகாரங்களைக் கவனிக்கமுடியும். ஏனெனில், கடந்தகால காட்டிக் கொடுப்புகள், துரோகங்களே பல இளைஞர்களின் உயிர்களைத் தியாகம் செய்து கட்டியெழுப்பப்பட்ட போராட்டத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன. மீண்டும் அந்த வரலாற்றுத் தவறை இழைப்பது சரியானதாக அமையாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரின் கோபத்திலும் நியாயமில்லாமில்லை. என்றாலும் சாத்தியமில்லாத வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை மற்றும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாது செய்வது போன்ற விடயங்களிலும் சுரேஷ் போன்றோர் யதார்த்தத்துடன் இணங்கி விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் இந்த மூன்று விடயங்களும் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதே யதார்த்தபூர்வமான உண்மை. எனினும், சாத்தியமாகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை, ஏனைய மதங்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட இலங்கை அரசு இணக்கத்திற்கு வந்து நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை முன்வைப்பதே பொருத்தமானதாக அமையும். அந்தப் பணியை அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சம்பந்தனும், சுமந்திரனும் செய்திருந்தார்கள். இந்நிலையில், மீண்டும் "வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய' கதையாக பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுப்பது பொருத்தமான செயற்பாடாக அமையாது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. எனினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தரப்புகளும் அந்தக் கோரிக்கையை கைவிட்டு பிரிக்கப்படாத நாடு என்ற கோஷத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் தனிநாடு அல்லது அதற்கு நிகரான அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்துவது எந்தவகையில் நியாயமாக அமையுமென்பது கேள்விக்குறியே.

காரணம், அதிகாரத்தைப் பகிர்வதற்கே தென்னிலங்கையில் பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகிவருகின்றன. எனினும், விட்டுக்கொடுப்புகளும் ஓர் எல்லையைத் தாண்டக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் கடந்த வாரம் ஐரோப்பிய இராஜதந்திரிகளை சந்தித்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தார். எவ்வாறெனினும் இவ்வாறான ஓர் இக்கட்டான தீர்க்கமான காலகட்டத்தில் இணைந்து செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே காலத்தின் தேவை.

போருக்குப் பின்னர் "ஒற்றுமை' என்ற ஆயுதமே தமிழர்களைப் பாதுகாத்துவருகின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இரண்டாக உடைப்பதற்கு மஹிந்த படாதபாடுபட்டார். ஆனால், வீட்டின் சாவிக்கொத்து சம்பந்தனிடம் இருந்ததால் மஹிந்தவின் திட்டம் எடுபடவில்லை. அதன்பின்னர் பல்வேறு சக்திகளும் கூட்டமைப்பை உடைப்பதற்குத் திட்டம்போட்டன. இருந்தும் பிரித்தாளும் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரித்தாளும் சூழ்ச்சிப் பொறிக்குள் தமிழ்க் கட்சியொன்று சிக்கியுள்ளது. எது எப்படியோ, பிளவு ஏற்படுவதற்குரிய சூழ்நிலை இதுவல்ல. அப்படியொரு நிலை ஏற்பட்டு, தமிழ்த் தேசியம் சிதையுமானால் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிப்பு வழங்கமாட்டார்கள்.

http://www.sudaroli.com/special-articles/item/1312-2017-11-08-07-19-02

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஈழத்தமிழர் அரசியலில் உருவாக்கப்பட்ருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன
(1). பல கட்சிகள் ஏதோ ஒரு கட்சியில் இருந்து முரண்பட்டு வெளியேற்றப்பட்டதாக இருக்கும்.
(2). கட்சியின் தலைவர் தன்சொல்லுக்கு கீழ்படிவான கட்சி தொண்டர்களுடன் தனக்கு சொந்தமாக ஒரு கட்சி தேவை என்று ஒன்றை உருவாக்கியிருப்பார்.
(3). கட்சியை உள்ளுர் அல்லது வெளிநாட்டு சக்திகள்  விலைகொடுத்து வாங்கியிருக்கும்.
(4). பேச்சுவார்த்தையின் ஊடாக அல்லது ஒன்றை விட்டுக்கொடுத்து பிறிதொன்றை பெறுவதின் ஊடாக  பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறையில்லை.
(5). உலகமாற்றத்தையும் பூகோள அரசியலையும் மதியாது பழமைவாதம் பேசுவது  
(6). அரசியலில் மக்கள் சேவகனாக நின்று பணியாற்றுவதை தனது வாழ்வாதரத்துக்கான தொழிலாக எண்ணிக்கொண்டு அதன்மூலம் சொத்து சுகம் அதிகாரம் என்பவற்றை பெற்று சமுதாய அந்தஸ்த்துடன் வாழ்வது.
(7). இனத்துக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டாலும் கட்சிகள் இனத்துக்காக கடந்த காலங்களில் தமிழினத்துக்கு  என்ன நன்மை செய்தன என்பதை எந்தக்கட்சியும் கூறிக்கொள்வதில்லை.
(8). கணிசமான அளவில்  மக்கள் ஆதரவு இல்லாமலும்   எந்த முன்னேற்றத்தையும் காட்டாத கட்சிகளை 5 ஆண்டுக்குப்பின்னர் கலைத்துவிடுவதே முறை. 

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.