Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரின் நிழல்!

Featured Replies

உயிரின் நிழல்!  

 

 
k12

"யாரு'' என்றபடி வீட்டுக்குள் இருந்து கதவைத் திறந்தபடி வயதொத்த பெண்.
"வா தர்மு என்ன? பத்திரிகையெல்லாம்'' அவளுக்கு ஆச்சரியம்.
"நாளைக்கு அம்மாவுக்கு பெயர் சூட்டு விழா... வந்துருங்க'' என்றவனின் வார்த்தையை ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டவளாய்.
"என்னப்பா புரியலையே''
"நாளைக்கு புரிஞ்சு போயிரும்'' சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தெருவின் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.
யாருக்கும் புரியாத புதிராக இருப்பது உண்மைதான். அவன் அம்மா இறந்து பதினாறாம் நாள். காரியத்துக்காகத்தான் கூப்பிடுவான் என்றிருந்தாள். காரணம் தர்முவின் அம்மா மேகலை, எழுபத்தி ஐந்து வயதில் தடுமாற்ற நிலை ஏற்பட்டபோது தான் இறந்திருந்தார். இறப்பிற்கு வந்த மேகலையின் உறவினர்கள் மூன்றாம் நாள் எண்ணெய் தொட்டு வைத்து முடித்து சென்றுவிட்டார்கள். நல்ல குணம் கொண்டவள் மேகலை அம்மாள். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, மகளை நன்றாகப் படிக்க வைத்து அவளை இன்ஜினியர் படித்த பையனுக்கு கரம் பிடித்து கொடுத்ததோடல்லாமல் மகன் தர்மனையும் லேப் டெக்னிஷியன் படிக்க வைத்ததோடு, சொந்தமாக ஒரு லேப் சென்டரையும் வைத்து கொடுத்திருந்தாள். மேலும் தர்முவுக்கு நன்கு படித்த நர்ஸ் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருந்தாள். மகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், தர்மனுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என்று பேரன் பேத்தி ஐந்து பத்தாகிவிட்டது. மேகலையம்மாள் ஐம்பது வயதைக் கடந்த போதே பிபி, சுகர் என்று எல்லாமே ஒத்துழையாமை நடத்த தர்மு கெஞ்சி கூத்தாடி, வேலைக்குப் போவதைத் தவிர்க்க வைத்து நன்றாக கவனித்துக் கொண்டான். புரிதல் உள்ள குடும்பமாயிருந்தது. மேகலையின் கணவர் இரு குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு செல்ல துவங்கிய ஓரிரு வருடங்களில் தவறிவிட்டார். தனி மனுஷியாய் விசாலமான ஆலமரமான இந்த குடும்பத்தை உருவாக்கிவிட்டுதான் இறந்திருக்கிறார்.


மேகலையின் அசைவின்றி எதுவும் நடக்காது. நல்ல காரியம் கெட்ட காரியம் எதுவென்றாலும் வீட்டுக்கு வரும் பத்திரிகைகள் அவள் பெயரையே முகப்பில் தாங்கி வரும். வீடு தேடி வரும் யாரும் அடையாளத்துக்குக்கூட "மேகலையம்மாள் வீடெது?'' என்றே வருவர்.
மேகலை இறந்த நாளிலிருந்து எந்த சலனமும் இல்லை. வீட்டில் தர்முவாலும் எதார்த்தமாய் இயங்க முடியவில்லை. அன்றாடம் அவன் எழுந்தரித்து, ""வேணுமாம்மா'' என்று கேட்டு, மனைவியை டீ போட வைத்து தன் கையால் கொடுப்பதுதென்று பழக்கப்பட்டிருந்ததையும் வெளியில் கிளம்பும்போது மறந்தவனைப்போல் ""வாரேம்மா...'' என்பதெல்லாம் அவனுக்குள் ஏமாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. லேப் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வண்டிக்குள் வாங்கி போடும் நொறுக்கு தீனிகளுக்கு மத்தியில், தவறாமல் போய் பழம் வாங்கும் பழக்கடையில் வண்டியை நிறுத்தியதுமே அவனுக்கென்று எடுத்து வைத்திருக்கும் பழக்கூடை அவன் கைக்கு வரும். பழக்கடை ஆயா கூட நினைத்துக் கொள்ளும். "அடுத்த பிறவி ஒன்று இருந்தா இந்த மாதிரி ஒரு மகனை பெத்து வளர்த்து சத்த அசந்தெந்திருக்கணும்'' என்று. பாவம் ஒரு வகையில் மேகலையின் இறப்பு இந்த பழக்கடை ஆயாவுக்கு கூட இழப்புதான். அங்கிருந்து வண்டியை கிளப்பினால் அடுத்து அம்மாவுக்கு வழக்கமாய் வாங்கும் மருந்துகடை, மார்க்கெட்டை கடக்கையில் தென்படும். அம்மாவுக்கு பிடித்த கீரை தேடலென்று முடித்து, வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியை அழைத்தபடி, "அம்மா சாப்புட்டாங்களா? தண்ணி வச்சி குடுத்தியா? மாத்திரை போட்டாச்சா? சாப்பாட்டுக்கு முன்னாடி மாத்திரை போட்டாச்சா?'' என்று கேள்வி நீண்டு கொண்டே போகும்.


அவள் தரும் பதிலில் தர்மு சந்தோசப்படுவதை கூட பார்க்க ஒரு சந்தோசமிருக்கிறதேவென்று இன்னும் அவன் கேட்காத கேள்விகளை கூட பதிலால் தவிர்த்து வைப்பாள். அத்தை துணியெல்லாம் துவைத்து போட்டத்திலிருந்து, எழுத முடியாத விஷயங்களை செயல்களால் சொல்லும் போது என ஏற்பட்டவையெல்லாம் மேகலையின் இறப்பு என்ற வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது.
ஒரு வாரம் இது தொடர்ந்தது. தர்முவுக்கு லேப்பிற்கு செல்லாமல் மனம் முடக்கி போட்டிருந்தது. அவனை படர்ந்திருந்த நிலைமை எல்லோரையுமே படர்ந்திருந்தது. திருமணமானதோடு வேலையை விட்டிருந்த அவன் மனைவியும் அவனின்று என்ன செய்வதென்பதை வருந்தி, எப்போது வீடு இயல்பு நிலைக்கு திரும்புமென்ற ஏக்கம் தொடர்ந்தது.
அன்று தர்முவின் லேப்பிற்கு சப்ளை செய்யும் கெமிக்கல் மேனேஜர் வந்திருந்தார். தான் வெளியூர் சென்றுவிட்டதாகவும் அன்று துக்கத்தில் கலந்துகொள்ள இயலாததையும், ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக வந்ததாக செல்லிக் கொண்டிருக்கும் போதே தர்முவின் கண்கள் கலங்கிய வண்ணமிருந்தது.
"தர்மு வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இழப்பு வந்து கொண்டே தானிருக்கும். அதை நிரப்புவதெங்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் தர்மு. எனக்கொரு யோசனை'' என்ற நண்பரை நிமிர்ந்து பார்த்தான் தர்மு.


"அனாதை பிள்ளைகளுக்கு இரண்டு நாளைக்கு அன்னதானமோ இல்லை அதற்கிணையானதாகவோ செஞ்சிட்டு பழகிட்டு வா. அவுங்க சூழ்நிலை உன் நிலை உணர்த்துவதோட ஏதோ ஒண்ணு உனக்கு பிடிபடும்'' என சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார்.
அவர் போனதிலிருந்து, அந்த வார்த்தைகள் அவனில் உருண்டு கொண்டேயிருந்தது. தடாலென முடிவெடுத்தவன் மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ராகவேந்திரா ஆசிரமத்திற்கு போனான். அங்கிருந்தவர்களை விசாரித்து, பிள்ளைகளுக்கு தினம் ஆகும் உணவு செலவுக்கான லிஸ்ட் தயார் செய்து, அம்மாவின் பதினாறாம் நாளுக்கு ஒருநாள் முன்னர் வரை உணவு செலவுகளை தாம் ஏற்பதாக சொல்லிவிட்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போனார்கள். நிர்வாகத்தினர் தேதியை குறித்து கொண்டனர். தர்மு மனைவிக்கும் அது மகிழ்ச்சியாகப் பட்டது. முகத்தில் தெரிந்ததை தர்மு அறிந்து கொண்டான்.
தினமும் காலை அவன் மறக்காமல் சென்று, தொகை கொடுத்து முதல் பிரேயரில் மேகலையம்மாள் பெயரைச் சொல்லி, சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக பிள்ளைகள் சொல்வதை கேட்டு வருவது வழக்கமாகி, பதினைந்தாம் நாள் முடித்துக்கொண்டு வந்த கையோடுதான் இந்த பத்திரிகைகளை கொடுத்து வருகிறான்.

 

பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழாவிற்காக வீடு பரபரப்பாகி கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்த வண்ணமிருந்தனர். தர்முவின் தங்கையும், மச்சானும் குழந்தைகளும் வந்தாகிவிட்டது. தர்மு மனைவியின் வீட்டாரும் வந்துவிட்டிருந்தனர். சாப்பாட்டுக்கு ஆனந்த விலாஸ் ஓட்டலில் புக் செய்திருந்தான். அவர்களும் பகல் பன்னிரெண்டு மணிக்கு வந்துவிடுமென்றும், நிகழ்ச்சி முடிந்ததும் தாங்களே பாத்திரங்களை எடுத்து சென்றுவிடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.
வீட்டின் முகப்பில் சாமியானா பந்தலினுள் போடப்பட்டிருந்த சேர்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. காரிய சமாச்சாரமென்றதால் கூட்டம் குறைவாய் தானிருந்தாலும், தர்முவின் அம்மா பெயர்; பெயர் சூட்டு விழா என்ற புதுமை புரியாமலே நிறைய பேர் வந்திருந்தனர். ஆரம்பிப்பதற்கு ஒருவர் அடிகோலிட்டார்.
"தர்மு, வந்தவங்க பல வேலைகளை விட்டுட்டு வந்திருப்பாங்க. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே?''.
தர்மு மனைவியை அழைத்து "அம்மாவை கூட்டி வா'' என்றான்.
மேகலையம்மாவின் வயதுடைய ஓர் அம்மாவினை அவள் அழைத்து வந்தாள். எல்லோரின் முகத்திலும் புரியாத "என்னப்பா தர்மு?'' என்ற கேள்விக்குறி கோடு விழுந்திருந்தது.


பந்தலில் இருந்த சேர்களின் முன்னால் போடப்பட்டிருந்த தனி சேரில் அமர வைக்கப்பட்டார் அந்த அம்மா. தர்மு பேசலானான்.
"என் அழைப்பை ஏற்று வந்தவங்களுக்கு ரொம்ப நன்றி. எங்கம்மா இல்லாத இடத்தை நினைச்சு கூட பார்க்க முடியல. இதுவரைக்கும் அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்தும் மீள முடியல. அதனால நானே ஒரு முடிவெடுத்து என் உறவுக்காரங்ககிட்டயும் சொல்லி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். இன்றையிலிருந்து இந்தம்மா பேரு மேகலை. எங்கம்மாவை எந்த மாதிரி நெனைச்சீங்களோ, அதே மாதிரி இவங்களை நினைக்கணும் நன்றி'' என்றான்.
"இந்தம்மா யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?''.
கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு குரல்.
தர்மு தொடர்ந்தான்.
"அனாதை குழந்தைகளோட வலியை புரிஞ்சிக்கிட்ட நாம ஏன் முதியோர் இல்லத்துல விடப்பட்டவுங்களோட வலியை மறக்கணும். அதான் முதியோர் இல்லம் போய் முறைப்படி இவுங்களை அழைச்சுக்கிட்டு வந்துட்டேன்'' என்று முடித்தான் தர்மு.
வந்திருந்த எல்லோரிடமிருந்தும் ஒரு வெற்றிடமிருப்பதாக உணரப்பட்டது.
அந்த வீட்டில் மேகலை என்ற பெயர் உயிரோடிருக்கும்.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.