Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி

Featured Replies

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I )

 

 
 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார்.

professor-suryanarayan.jpg

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆயுதங்களை ஈழ போராட்ட  அமைப்புக்களுக்கு வழங்கியுள்ள போதும் தனிஈழத்தினை ஆதரித்திருக்கவில்லை என்று கூறப்படுவதன் பின்னணி என்ன?

பதில்;- தென்னிந்தியாவுடன் இலங்கை தமிழ் தலைவர்களின் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு ஜுலைக்கு பின்னர்  முதன்முதலாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் டெல்லிக்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற அவர் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜி.பார்த்தசாரதி ஆகியோரைச் சந்தித்தார். 

அச்சமயத்தில் இந்திராகாந்தி, விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள அமைப்புக்களில் மொத்தமாக எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டார். அதற்கு அமிர்தலிங்கம் ஆயுதம் உள்ளவர்கள் மற்றும் ஆயுதம் இல்லதாவர்கள் என சுமார் 100 இற்கும் குறைவானவர்களே உள்ளனர் என்று பதிலளித்தார்.

அச்சமயத்தில் இந்திராகாந்தி, நாங்கள் இலங்கையில் தனிநாடு அதாவது தமிழ் ஈழம் உருவாகுவதற்கு ஒருபோதும் ஆதரவாக இருக்கமாட்டோம். தமிழீழத்துக்கு கீழாக எந்தவொரு தீர்வுக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம். சிலசமயம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தார் என்றால் அந்த இளைஞர்களுக்கு தங்களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது போய்விடும். ஆகவே போராட தயாராகியுள்ள இளைஞர்கள் அவர்களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயுதங்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்திராகாந்தி அரசின் இந்த தீர்மானது அவர் தலைமையிலான அரசு 1971 இற்கு முன்னரான காலத்தில் பங்களாதேஷின் முத்திபாகினி அமைப்புக்கும் ஆயுத பயிற்சியை அளித்து பங்களாதேஷ் நாடு உருவாக உதவியதோ அதுபோன்று இலங்கையில் தமிழீழம் உருவாகுவதற்கும் இந்திராகாந்தி துணையாக இருப்பார் என்ற தோரணை தமிழ் தலைவர்களால் உருவாக்கப்பட்டு விட்டது.

தமிழீழம் சார்ந்து இந்திராகாந்தி என்ன நிலைப்பாட்டில் இருந்தார் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நன்கு அறிந்திருந்த அமிர்தலிங்கம் கூட பின்னைய காலங்களல் தன்னுடைய புதல்வரை பயன்படுத்தி ஆயுதப்போராட்ட இயக்கமொன்றை ஆரம்பிக்க முனைந்திருந்தார்.

கேள்வி:- இலங்கையில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் கப்பல்களை அனுப்பும் அளவிற்கு அதீத ஈடுபாட்டினை கொண்டிருந்த இந்தியா நான்காம் ஈழப்போர் உக்கிரமாகி உயிர்பலிகள் அதிகரித்துச் சென்றுகொண்டிருந்தபோது மெத்தனமாக இருந்துவிட்டதே?

பதில்:- நான்காம ஈழப்போர் உக்கிரமமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் உயிர்களைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமான போர் நிறுத்தமொன்றை கடைப்பிடிக்குமாறு நான் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கனேன். இருப்பினும் அந்தக்கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. யுத்த நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்பிய அனைத்து அப்பாவி பொதுமக்களும் அந்த தருணத்தில் வெளியேறியிருக்க முடியும். அப்பாவி பொதுமக்களுக்கு இவ்வளவு இழப்புக்களும் ஏற்பட்டிருக்காது.

மேலும் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்க முடியும். ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பிரகாரம் நாற்பதாயிரம் பேர் உயிர்ப்பலியானதாக சொல்லப்படுகின்றது. அப்பாவி பொதுமக்களின் உயிர்களைவிடவும் விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தியா உறுதியாக இருந்தது.

யுத்தகாலத்தில் கடல்வழியாக மண்டபம் பகுதியில் வந்த ஒருவரை சந்தித்தபோது, இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் சிக்கியிருந்த அனைத்து மக்களும் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு விருப்பத்துடன் இருந்ததாக கூறினார். அத்துடன் முல்லைத்தீவில் இருந்து தன்னுடன் படகில் வந்தவர்களில் நான்கு பேர் குடிதண்ணீர் இல்லாது உயிர்நீத்ததாகவும் கூறினார். இந்தியா தலையீடு செய்திருந்தால் இப்படி பலியான பல உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். 

1987ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி தலைமையில் ‘ஒப்பரேஷன் வடமராட்சி’ என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் அப்போதைய பிரதமர் ரஜீவ் காந்தி, இராணுவ ரீதியான நடவடிக்கைகளை நான் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதிய குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ராஜீவ் வடக்கு மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை இராமேஸ்வரம் ஊடாக அனுப்பி வைத்தார். அதனை இலங்கை கடற்படை தடுத்துவிடவும் பெங்களுரில் இருந்து விமானம் ஊடாக உலர் உணவுப்பொருட்களை அந்தப்பகுதிகளுக்கு வழங்கினார்.

ரஜீவ் காந்தியின் இவ்வாறான நிலைப்பாட்டினால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோபமடைந்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி தமக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அந்த முயற்சிகள் கைகூடியிருக்கவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் இந்தியாவினைக் கடந்து சென்று செயற்பட முடிந்திருக்கவில்லை. இப்படி இருந்த போதும் 2006 இல் ஆரம்பித்து 2009 இல் முடிவுக்கு வந்த நான்காம் ஈழப்போரின் போது இந்தியா தலையீடு செய்திருக்கவில்லை.

இந்தியா தலையீடு செய்திருந்தால் நிச்சயமாக அமெரிக்காவும் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். ஆகவே போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கும். பொதுமக்களின் உயிரிழப்புக்களை தடுத்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தினை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால் அப்பாவி மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நான்காவது ஈழப்போர்க் காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது என்ற பெயரில் தமிழின படுகொலை நிகழ்ந்தது. இச்சமயத்தில் இந்தியா அமைதியாக இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளே.

விடுதலைப்புலிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டது மட்டுமன்றி இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியான முன்னெடுத்தனர். அத்துடன் பல்வேறு கொலைச்சம்பவங்களுக்கு சூத்திரதாரிகளாகவும் இருந்தனர். மேலும் உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாத அமைப்பாகவும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். இந்தியாவும் அவர்களை பயங்கரவாத அமைப்பாகவே கருதியிருந்து. அதில் மிகமிக முக்கியமான விடயமாக ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவம் காணப்படுகின்றது.

கேள்வி:- இன விடுதலைக்கான போராட்டங்களில் பலமான கட்டமைப்புக்களை கொண்டிருந்ததாக கணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நான் ஆயுதப்போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கில்லை. ஆயுத போராட்டம் வெற்றி பெறுவதற்கு உலகத்தில் உள்ள நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது. வியட்நாம் விடயத்தில் சீனாவும், ராஷ்யா கிழக்கு பாகிஸ்தான் விடயத்தில் முத்திபாகினிக்கு இந்தியாவும் ஆதரவளித்திருந்தன. அவ்வாறானதொரு ஆதரவு விடுதலைப்புலிகளுக்கு இருந்திருக்கவில்லை.

அதேநேரம் அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிரச்சினைக்குரிய காலங்களில் மக்களுடன் இருந்திருக்கவில்லை. உயிருக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தால் அதிகமாக தமிழகத்தில் தான் தங்கியிருப்பார். அச்சமயத்தில் அவரைச் நேரில் சந்தித்த நான், மீண்டும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லுங்கள். மக்களை அநாததைகளாக்கி விடாதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டிருந்தேன். இருப்பினும் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சத்துடன் கூறியவாறே இருந்தார்.

அமிர்தலிங்கம் அப்படியிருக்க அக்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் விடுதலைப்புலிகளின் அதீத ஆதரவாளராக இருந்த யோகேஸ்வரனும் தமிழகத்தில் தான் இருந்தார். யோகேஸ்வரன் போன்றவர்கள் நாடுதிரும்பவுள்ளார்கள். அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடாது என்று இந்திய நண்பர் ஒருவர் அன்டன் பாலசிங்கத்தின் ஊடாக விடுதலைப்புலிகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அன்டன் பாலங்கிம் அவருடைய உயிருக்கு நாங்கள் ஆபத்தினை விளைவிக்கமாட்டோம் என்று உறுதிமொழி வழங்கவும் யோகேஸ்வரன் நாடு திரும்பினார். மக்கள் மத்தியில் யோகேஸ்வரன் பிரபல்மாக இருந்தார். எனினும் அவரை யாரும் சந்திக்க கூடாது என்று விடுதலைப் புலிகள் பணித்தனர். அதுமட்டுமன்றி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அமிர்தலிங்கம் போன்றவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு தலமையேற்று அதனை முன்னடத்துவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தபோதும் அவர்கள் உயிர் அச்சுறுத்தலை முன்வைத்து பின்வாங்கிவிட்டார்.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எந்தப்பிரச்சினை ஏற்பாட்டாலும் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். மக்களுக்காக போராடிய மாகாத்மா காந்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது மக்களை விட்டுச் சென்றிருக்கவில்லை. ஆனால் காந்தியவாதிகளான அமிர்தலிங்கம் போன்றவர்கள் மக்கள் மத்தியிலிருந்து வெளியேறினார்கள். அவர்களின் வெளியேற்றத்தால் ஏற்பட்ட இடைவெளியை விடுதலைப்புலிகள் நிரப்பினார்கள். அதுமட்டுமன்றி தாங்கள் ஏகப்பிரதிநிதிகள் என்பதை காட்டுவதற்காக பத்மநாபா, சிறிசபாரட்ணம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் மீது துப்பாக்கிகளை திருப்பினார்கள்.

அதுமட்டுமன்றி பிரபாரனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நல்ல உறவுகள் இருந்தன. எப்போதுவேண்டுமானாலும் எம்.ஜி.ஆரை சந்திக்கும் சக்தியை பிரபாகரன் கொண்டிருந்தார். ஒருதடவை நிதிதேவையொன்றுக்காக எம்.ஜி.ஆரை பிரபாகரனும் அன்டன் பாலசிங்கமும் சென்று பார்த்தபோது எம்.ஜி.ர் தனது கைவிரலில் இரண்டு என்று காட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இருபது இலட்சம் என்று கருதி அதற்கான ஆயத்தங்களை உடன் செய்தபோது எம்.ஜி.ஆர் இரண்டு கோடி என்று சுட்டிக்காட்டி அதனை வழங்கியதாக தகவல்கள் உள்ளன. அந்தளவுக்கு எம்.ஜி.ஆருக்கும் பிரபாகரனுக்கும் உறவுகள் இருந்தன.

இருப்பினும் 1986 இல் சார்க் மாநாடு பெங்களுரில் ஏற்பாடானது. ஆதில் ஜே.ஆர் பங்கேற்கிறார். ஆகவே அங்கு பிரபாகரனை எப்படியாவது அழைத்து வருமாறு எம்.ஜி.ஆருக்கு டெல்லியிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தவிடயம் பிரபாகரனுக்கு தெரியவும் பிரபாகரன் உடனடியாக சென்னையிலிருந்து இலங்கை திரும்பினார். இதனால் டெல்லி அழுத்தமளித்தால் சிலசமயம் எம்.ஜி.ஆரும் அதற்கு பணிந்து விடுவார் என்ற சிந்தனையும் இக்காலத்தில் விடுதலைப்புலிகளிடத்தில் எழுந்தது. அதுவரையில் இந்தியாவிடமிருந்து மட்டுமே ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்தனர்.

ஒரு ஆயுத போராட்ட அமைப்பா அல்லது ஒரு நாட்டு அரசாங்கமா என்று பார்க்கின்ற போது இரண்டுக்கும் இடையில் யானைக்கும் ஆடுக்கும் இடையில் காணப்படுகின்ற அளவிற்கு வலிமையில் வேறுபாடுகள் உள்ளன. எந்தவொரு அரசாங்கத்துக்கு மூலங்களும் வளங்களும் அதிகமாகும். இந்த பின்னணியில் தான் தான் நான்காவது ஈழப்பேரின் போது கடற்புலிகள் தெற்கிழக்கு ஆசியாவில் எங்கிருந்தெல்லாம் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றார்கள் உள்ளிட்ட சகல தகவல்களையும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கொழும்புக்கு வழங்கின. இதனால் கடற்புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களை சென்றடைவதற்கு முன்னதாகவே தாக்கி அழிக்கப்பட்டன.

இவ்வாறாக புலிகளின் ஆயுதங்கள் முடக்கப்பட்டதும் கடலிலிருந்து தரைக்கு வந்த மீனின் நிலைமைபோன்றே அவர்களின் நிலைமையானது. எனினும் தமிழகத்தில் உள்ள புலிகளை ஆதரவளிக்கும் தரப்பினர் இந்தியா தலையீடு செய்து போரினை நிறுத்தும் என்று வாக்குறுதிகளை அளித்தார்கள். எனினும் அந்த நம்பிக்கை இறுதிவரையில் நடைபெறவில்லை. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போரை நிறுத்துவதற்கு இந்தியா முனைந்திருக்காததுடன் மறைமுகமாக சில உதவிகளை  அரசாங்கத்துக்கே வழங்கியிருந்தது. ஆகவே உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆயுத போராட்ட அமைப்பினால் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம்.

 

 

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)

http://www.virakesari.lk/article/32688

  • தொடங்கியவர்

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - II )

 

கேள்வி:- இலங்கை தேசியப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவின் கரிசனைப் போக்கினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை தொடர்பில் இந்தியாவின் கரிசனையை பார்க்கின்றபோது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. 1958 இல் கொழும்பில் இனக்கலவரம் நடக்கின்றபோது இந்தியா கப்பல்களை அனுப்பி அந்த மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. அத்துடன் இந்தக்கலவரத்திதால் பொருளாதார ரீதியாக பின்னோக்கிச் சென்ற தமிழ் இனத்திற்கு உதவிகளை வழங்க வேண்டும் என்ற மனநிலையும் இந்தியாவுக்கு இருந்தது.

professor-suryanarayan.jpg

1987ஆம் ஆண்டும் ரஜீவ்காந்தி ஜே.ஆர். க்கு வழங்கிய அழுத்தத்தின் காரணமாகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. ஒருவருடத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாகச் சொல்லப்பட்டாலும் அது நடத்தப்படாதபோதும் வடக்கும் கிழக்கும் இணைந்து இருப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்பட்டன. ஆனால் தற்போது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. இது இணைக்கப்படுமா இல்லையா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விடயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டினை வெளியிடாது இருக்கின்றது. ஆனால் அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிக்கைகளை மட்டுமே இந்திய மத்திய அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எதனையும் அழுத்தமாகச் சொல்வதாக இல்லை. குறிப்பாக பா.ஜ.க. மத்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கரிசனை மிகமிக சொற்ப அளவிலேயே உள்ளது. அவர்கள் தமது அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதையே விரும்புகின்றார்கள்.  மத்தியில் அவ்வாறான நிலைமை இருக்கையில் தமிழகத்தின் கரிசனையும் அவ்வாறு தான் உள்ளது.

போர் நடக்கும் போதே தி.மு.க.தலைவர் கருணாநிதி காலை உணவின் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து பகல் உணவுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். தேர்தல் காலங்களில் தமது வாக்குகளுக்காக இலங்கை விடயத்தினை பேசுகின்றார்கள். அத்துடன் அவை முடிந்து போகின்றன. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனிடத்தில் வடக்கு கிழக்கு மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்குமாறு எத்தனையோ தடவைகள் பரிந்துரைத்துள்ளேன். ஆனால் எவையும் நடைபெற்றதாக இல்லை.

தமிழிசை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளும் தமது அரசியலை மட்டுமே பார்க்கின்றார்கள். அவ்வவ்போது கோசங்களை மட்டும் எழுப்புவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒன்றுபடுவதோ அல்லது செயற்பாட்டு ரீதியாக எதனையும் முன்னெடுப்பதோ கிடையாது.

உதாரணமாக ஒரு விடயத்தினை கூறுகின்றேன், 2016ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தம் சம்பந்தமான சட்டமூலமொன்று இந்தியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டிய ஆண்டுகளின் வரையறைகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் மட்டும் இந்திய வம்சாவழி அகதிகள் 29ஆயிரம் பேர் வரையிலானவர்கள் உள்ளார்கள். அவர்களில் அதிகமானவர்கள் இலங்கை திரும்புவதற்கு விரும்பவில்லை. அவர்களும் தமக்கான குடியுரிமையைக் வழங்க வேண்டும் என்று கோருகின்றார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேற்படி சட்டமூலத்தில் உள்வாங்குவது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிலலை. யாரும் அதுதொடர்பில் பேசுவதும் கிடையாது. இந்தியப் பிரஜைகளாக இருக்கின்றவர்கள் தொடர்பிலான கரிசனைகள் அவ்வாறு இருக்கும்போது இலங்கை தமிழர்கள் தொடர்பிலான கரிசனைகள் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களால் சிந்திக்க முடியும். அதிகாரத்தினை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளில் தான் அதிக கவனம் தற்போது அதிகரித்துள்ளது.

கேள்வி:- மாறிவருகின்றன பூகோள அரசியல் சூழலில் இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியமான நிலைமைகள் இருக்கின்றனவா?

பதில்:- தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்துள்ளது.

சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்ஷவுக்கே கிடைத்துள்ளன. ஆகவே மைத்திரி-ரணில் அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே முனைப்புக் காட்டும். ஆகவே சிங்கள மக்கள் எதிர்க்கின்ற விடயங்களை அவர்கள் செய்வார்களா? என்பதில் கேள்வியுள்ளது. அதற்கு அவர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்பது எனது நிலைப்பாடாகவுள்ளது.

தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான வடக்கு கிழக்கு இணைப்புரூபவ் சமஷ்டி தீர்வு போன்ற விடயங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாத அளவிற்கு சூழுல் ஏற்பட்டு விட்டது. அந்த விடயத்தில் தற்போதுள்ள நிலைமைகள் வெகுதூரத்தினை கடந்து சென்று விட்டன. சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் எவ்வாறு அமையும் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறமுடியாது.

தமிழர்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் சம்பந்தன் முதுமையடைந்துவிட்டார். பாராளுமன்றத்தில் செயற்படுகின்றார். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைவர் என்தில் குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக அவர் மலையக மக்கள் சம்பந்தமாக பேசுவது கிடையாது. மலையக மக்களுக்கு மாகாண சபை முறைமை தீர்வாக அமையாது. காரணம் அவர்களுக்கு என்று ஒரு மாகாணம் இல்லை. ஆகவே பிரதேச சபைகள் தான் அவர்களின் பலம். இதனை கவனித்து அவர்களையும் அரவணைத்துச் செல்வது தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். அத்தகைய சிந்தனைகள் தமிழ் தலைவர்கள் இடத்தில் காணப்படவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனியாக செயற்படுகின்றார்.

அதனை விட ஏனைய அரசியல் தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு தமிழர்களின் பிரதிநிதித்துவங்களுக்கிடையில் ஐக்கியமற்ற தன்மை காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களும் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இலங்கையில் உள்ள தமிழ் மலையக மக்கள் மத்தியில் அதிருப்தியான சூழலே காணப்படுகின்றது. இந்த அதிருப்தியான சூழல் எவ்வாறு செல்லப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஏற்படுமா? இல்லை ஏற்கனவே அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட சபைகள் போன்ற கட்டமைப்புக்குள் தமிழர்களை அரசாங்கம் சமரசப்படுத்திவிடுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

தற்போது ஆயுத ரீதியான வன்முறை இல்லாத நிலையில் பெரும்பான்மை மக்களிடத்தில் ஆதரவினை பெற நினைக்கும் அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் வழங்குவதில் கவனம் கொள்ளாது. அதனை எதிர்பார்க்கவும் முடியாது. கடந்த காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்ற மனநிலையொன்று இருந்தது. போர் நிறைவுக்கு வந்த பின்னரான தற்போதைய சூழலில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவ்வாறான மனநிலை இல்லாது போய்விட்டது. இதனால் இந்தியா குறித்தும் அவர்கள் பெரிதாக சிந்திக்க மாட்டார்கள்.

கேள்வி:- தமிழ், மலையக, புலம்பெயர் அரசியல் தலைகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள தலைமைகள் மீது அதிருப்பதியான மனநிலையில் தான் மக்கள் உள்ளார்கள். அதேநேரம் அந்த மக்களுக்கான அரசியல் தலைமைத்துவங்கள் மோசமான நிலைமையிலேயே உள்ளன. புலம்பெயர் நாடுகளில் உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் அதிகாரபரவலாக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படுகின்றது.

ஆனால் அது சாத்தியமாகுமா என்று தெரியாது. இதனை விட புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புக்கள் உள்ளன. அனைவரும் தனி தமிழீழம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு பேசுபவர்களுக்கு உள்நாட்டில் ஆதரவு இருக்கின்றதா? என்பதிலும் சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு பார்க்கின்றபோது தமிழ் மக்களுக்கு இருள்சூழ்ந்த எதிர்காலமே உருவாகி வருகின்றனது.

கேள்வி:-; போர்க் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்கள் சம்பந்தமான நீதியைப் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுநிலைகள் காணப்படுகின்றனவா?

பதில்:- சர்வதேச தரப்புக்கள் அனைத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு சாதகமானதாக இருக்கின்றன. ஆகவே சர்வதேச தரப்புக்கள் தற்போதைய இலங்கை கால அவகாசத்தினை வழங்கியவாறு தான் இருப்பார்கள். காணமல்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட்டது போன்று அவ்வவ்போது சில காட்சிப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழ்த் தரப்புக்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். இருப்பினும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தினால் அழுத்தங்கள் வழங்கப்படுவதில்லை. ஆகவே அந்த விடயங்கள் சாதகமாக முன்னெடுக்கப்படும் என்று கருத முடியாது. இலங்கையினை விடவும் மோசமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விடயங்கள் உலகத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற ஆரம்பித்து விட்டது. உதாரணமாக சிரியா போன்ற நாடுகளில் இந்த நிலைமைகள் மோசமாக உள்ளன. அதனால் அவர்களின் ஐக்கிய நாடுகளின் கவனமும் இலங்கை விடயத்தினைக் கடந்து அந்தநாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் மீதே திசை திரும்பியுள்ளன.

கேள்வி:- தேசின இனப்பிரச்சினைக்கான தீர்வுரூபவ் பாதிப்புக்களுக்கான நீதிப் பெறுதல் போன்றவற்றுக்காக அடுத்தகட்டமாக எத்தகைய முறைமைகளை கையாளமுடியும்?

பதில்:- மீண்டும் வன்முறையை தூண்டும் ஆயுதப்போராட்டத்தினை யாரும் விரும்பமாட்டார்கள். அதேநேரம் அரசியலில் ரீதியாக தற்போதுள்ள தலைமைத்துவங்களும் பொருத்தமானவையாக இல்லை.

அதாவது தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திப்பது என்றால் இவற்றை தவிர்த்தாக வேண்டியுள்ளது. எனவே சரியான ஆளுமை மிக்க தலைமைத்துவங்களின் கீழ் மீண்டும் மக்கள் மயப்படுத்தப்பட்ட சத்தியாகிரக போராட்டங்கள், மக்கள் பேரணிகள் போன்றவற்றை முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றின் ஊடாகவே மேற்படி விடயங்கள் குறித்து அழுத்தமளிக்கும் விடயங்கள் சாத்தியமாகும். கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தன. ஆனால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதேநேரம் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் சிக்கலான நிலைமை ஏற்பட்டு விடும். ஆகவே அவற்றையும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. இவை தொடர்பில் ஆழமானக சிந்தித்து செயற்பட வேண்டும். சிவில் அமைப்புக்களும் தமது பங்களிப்பினை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- சீன அரசாங்கமானது ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ கோட்பாடுகளின் பிரகாரம் புரட்சிகளுக்குத் தான் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. ஆனால் அண்மைக்காலமாக அந்த போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய நாடுகளின் அரசுகளுக்கே அதாவது தனக்கு இசைவான ஆட்சியாளர்களுக்கே தனது ஆதரவை வழங்கி வருகின்றது.

இதற்கு நல்ல உதாரணம் உள்ளது. ஜே.வி.பி இரண்டாவது கிளச்சியினை ஆரம்பிக்க முனைந்த சமயத்தில் அந்த அமைப்புக்கு பரப்புரை செயலாளராக இருந்த லயனல் போப்பகேயை நான் சந்திதபோது, குறித்த கிளர்ச்சியை ஆரம்பிக்கவிருந்த தருணத்தில் தாங்கள் இந்திய இராணுவத்துக்கு எதிராக எதற்காக கிளர்ச்சியை ஆரம்பிக்கின்றோம் என்பதை கொழும்பில் உள்ள சீன தூதுவருக்கு விளக்கமளிக்க சென்றிருந்ததாகவும் அதன்போது ஐந்து நிமிடங்களில் தன்னை வெளியேறுமாறு சீன தூதுவர் கடும் தொனியில் உத்தரவிட்டதாகவும் கூறினார்.

அந்தளவுக்கு ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்களுக்கே சீனா தனது ஆதரவை வழங்குகின்றது. தற்போதைய சூழலில் கூட பார்த்தால், பார்மாவிலும் பாகிஸ்தானிலும் இராணுவ தரப்பினருக்கும், மலைதீவில் ஆட்சியில் உள்ளவர்களுக்கும், இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் தான் சீனா தனது ஆதரவை வழங்குகின்றது. இவ்வாறு ஆதரவுகளை வழங்குவதன் ஊடாக தனக்கு தேவையானதை அந்தந்த நாடுகளில் நிறைவேற்றி வருகின்றது.

குறிப்பாக இலங்கையில் அம்பாந்தோட்டையில் துறைமுகமே அவசியமற்றதாக இருக்கின்ற போதும் அங்கு துறைமுகத்தினை அமைக்க முழு உதவிகளை வழங்கிய சீனா தற்போது அதனை தனாக்கியுள்ளது. சீனா அந்த துறைமுகத்தில் எந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் யாராலும் கேள்வி எழுப்ப முடியத நிலைமையே தற்போதுள்ளது. அந்நாடு கொழும்பிலும் முதலீடுகளை செய்துள்ளது.

இப்படி சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலைமைகளை இந்தியாவின் தற்போதைய மத்திய அரசாங்கம் விளங்கினாலும் சீனாவை சமநிலையுடன் இயல்பாக கையாள வேண்டும் என்றே விரும்புகின்றது. அதன் பிரகாரம் தான் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கின்றது. ஆகவே தெற்காசிய பிராந்தியமானது வெளிபுறச் சூழலை விடவும் உள்ளகச் சூழலில் பெரும் நெருக்கடியான நிலைமைகளை கடந்து செல்ல வேண்டிய நிலைமைகள் ஏற்படவே அதிக வாய்ப்புள்ளன.

கேள்வி:- மேற்படி சூழல் நீடிப்பதானது பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரதிபலிப்புக்களை ஏற்படும்?

பதில்:- இந்தியாவினது பொருளாதார அனுகுமுறையை பார்த்தீர்களானால் இந்தியாவானது இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு விரும்புகின்றது. அந்த முதலீடுகள் இலங்கைக்கு மட்டும் சந்தைவாய்ப்பினை வழங்காது இந்தியாவுக்கும் சந்தை வாய்ப்பினை வழங்குவதாக அமைய வேண்டும் என்று தான் கருதுகின்றது. குறிப்பாக இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் முதலீடுகள் தென் இந்தியாவுக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிப்பதாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றது.

ஆனாலும் அதுதொடர்பான செயற்பாடுகள் பெரியளவில் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் சீனாவானது இலங்கையில் தனது உற்பத்திகளை விஸ்தரிப்பதுடன் வட இந்தியாவிலும் உற்பத்திகளை சந்தைப்படுத்துகின்றது. குறிப்பாக சீன உற்பத்திகள் பர்மா வழியாக வட இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகின்றன. இவ்வாறான நிலைமைகள் தான் இருக்கின்றன.

இருப்பினும் தெற்காசிய நாடொன்று சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விலகுமாயின் அங்கு ஏற்படும் இடைவெளியினை நிரப்புவதற்குரிய பெறுமானத்தினை இந்தியா கொண்டிருக்கவில்லை. இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை தான் காணப்படுகின்றது. மேலும் சீனாவின் பொருளாதார இராஜதந்திரமானது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சீனா தனது முதலீடுகளில் தனது தொழிலாளர்களையே உள்வாங்குகின்றது. அதற்கான கடனை மீளளிப்புச் செய்தால் மட்டுமே அந்த நாட்டினால் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். எனினும் தெற்காசிய நாடொன்றினால் அது முடியாத காரியமாக உள்ளது. இவ்வாறு தான் அந்நாட்டின் பொருளாதார அழுத்தம் உள்ளது. இதிலிருந்து வெளிவரமுடியாத நிலையில் தான் நாடுகள் உள்ளன.

கேள்வி:- சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பதை திட்டம் சம்பந்தமாக இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- இந்த திட்டம் சம்பந்தமாக டெல்லியின் உள்ள தரப்புக்கள் ஆரம்பத்தில் உணர்வு ரீதியாக சிந்தித்திருந்தன. இருப்பனும் இலங்கை போன்ற நாடுகள் 1950ஆம் ஆண்டிலிருந்தே சீனாவுடன் இறப்பர்-அரசி ஒப்பந்தம் போன்றவற்றில் கைச்சாத்திடும் அளவிற்கு உறவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எந்தநாடும் பிறிதொரு நாட்டுடன் வர்த்தக, இராஜந்திர உறவுகளைக் கொண்டிருக்க முடியும். ஆனால் அது இந்தியாவுடனான உறவுகளை ஓரங்கட்டும் வகையில் அமையக்கூடாது என்பதில் மத்திய அரசாங்கம் கரிசனை கொண்டிருக்கின்றது.

மேலும் சீனாவானது அமெரிக்காவை விடவும் இராணுவ ரீதியில் பலவீனமாகவே உள்ளது. ஆகவே சீனாவது இராணுவ பலத்தினை பயன்படுத்த உலகை தன்வசப்படுத்துவதை விடவும் பொருளாதார இராஜதந்திரத்தினை பயன்படுத்தி உலகத்தினை தன்வசப்படுத்த வேண்டும் என்றே கருதுகின்றது. அதனை மையப்படுத்தியே சீனா தனது நகர்வுகள் மேற்கொண்டு வருகின்றது.

 

அமெரிக்காவின் சந்தையில் கூட சீனாவின் உற்பத்திகள் அதிகமாக உள்ளன. அவ்வாறான நிலைமையில் அமெரிக்கா சீனாவுடன் உள்ள உறவினை சிதைப்பதற்கு விரும்பாது. பொருளாதார சந்தையும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் சீனாவின் வியூகமும் இந்தியாவில் பிரதிபலித்தால் இந்தியாவும் சீனாவை எதிர்ப்பதற்கு முனையாது.

 

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)

http://www.virakesari.lk/article/32687

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.