Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா?

Featured Replies

விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா?
 
cv-1.jpg

யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது.

வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மன்னாரிலும், மாந்தையிலும் ஏனைய கட்சிகளும் அதே உத்தியைக் கையாண்டுதான் பிரதேச சபைகளைக் கைப்பற்றின.

தாம் அப்படி எந்தவோர் உத்தியையும் கையாளவில்லையென்று கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் அது தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தங்களோடு உரையாடியதாக ஈ.பி.டி.பி கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரை துரோகியாகப் பிரகடனம் செய்து அதன் மூலம் தன்னை ஒரு தியாகியாகக் கட்டியெழுப்ப முற்படும் சிறீதரன் தென்னிலங்கை மையக் கட்சிகளின் உதவியோடு அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

sridharan001.jpg

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் அவரும் அவருடைய கட்சிக்காரர்களும் வெற்றியைக் கொண்டாடிய விதம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. சந்திரகுமாரை துரோகி என்று கூறிவிட்டு பொது எதிரிகளான தென்னிலங்கை மையக் கட்சிகளின் ஆதரவோடு அவர் எப்படி ஆட்சியமைக்கலாம் என்றும் கேட்கப்படுகிறது.

இவ்வாறு பொது எதிரியோடு சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வவுனியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியது பிழை என்று கூறி சிவகரன் அணி அக்கூட்டிலிருந்து வெளியேறியிருக்கிறது. கூட்டமைப்பு செய்வதை பிழை என்று கூறி விட்டு அதிலிருந்து வெளியேறி ஒரு புதிய கூட்டை அமைத்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பின் அதே உத்தியைக் கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவகரன் அணி கூறுகிறது.

ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார் தாங்கள் யாரோடும் பேரத்தை வைத்துக்கொள்ளவில்லையென்று. அப்படியென்றால் தென்னிலங்கைமையக் கட்சிகள் தாமாகத் திட்டமிட்டு கூட்டமைப்பையும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும் ஆதரித்தனவா?

இதற்கு வேறொரு விளக்கமும் கூறப்படுகிறது. குறிப்பாக யு.என்.பியைப் பொறுத்தவரை கட்சியின் தலைமைப்பீடம் கூட்டமைப்பை ஆதரிக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் இது விடயத்தில் யு.என்.பி மட்டுமல்ல மகிந்த அணியும் தமிழ் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது. ஆயின் பேரம் இல்லாமலா வாக்களிப்பு நடந்தது?

இது விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பெருமளவிற்கு ஒதுங்கி நின்றது. அதிகாரப் போட்டியில் இறங்காமல் அக்கட்சி விலகியிருந்தமையை பலரும் விமர்சித்தார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய நெளிவு சுழிவுத்தனம் அக்கட்சியிடம் இல்லையென்று விமர்சிக்கப்பட்டது. வவுனியாவில் தென்னிலங்கை மையக் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக மக்கள் முன்னணி கூட்டமைப்பை ஆதரிக்கும் என்றும் அக்கட்சி அறிவித்தது.

gaja.jpg

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக யாரோடும் கூட்டுச் சேரும் அல்லது யாருடைய ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் ஓர் உத்தியை அக்கட்சி நிராகரித்தது. இதன் மூலம் தன்னை அதிகபட்சம் ஒரு தூய்மைவாதக் கட்சியாக மக்கள் முன்னணி நிரூபித்திருக்கிறது.

இப்படிப் பார்த்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது தமிழ் அரசியல் பரப்பை தெளிவாக வகிடு பிரித்துவிட்டது. இலட்சியவாத அணி அல்லது எதிர்ப்பு அரசியல் அணி ஒரு பக்கமும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இலட்சியத்தைக் கைவிடும் அணி அல்லது தமிழ்த்தேசிய நீக்கத்தை நோக்கிச் செல்லும் அணி இன்னொரு பக்கமுமாக கட்சிகள் வகிடு பிரிக்கப்பட்டுள்ளன.

அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஒரு புறம் தமிழ் வாக்குகளைச் சிதறச் செய்திருந்தாலும் இன்னொரு புறம் தமிழ்க் கட்சிகளைத் தெளிவாக வகிடு பிரித்திருக்கிறது. எனது முன்னைய கட்டுரையொன்றில் கூறியது போல ஓர் இருகட்சி ஜனநாயக முறைமைக்குரிய வளர்ச்சிகளை அது ஊக்குவித்தும் இருக்கிறது. இப்போக்கானது இனிவரும் தேர்தல்களில் மேலும் வளர்ச்சியுறலாம் என்றே தோன்றுகிறது.

rsam.jpg

அவ்வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கப் போவது விக்னேஸ்வரன் எடுக்கப்போகும் முடிவுதான். ஒரு விதத்தில் அவர் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் அது ஒரு கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலாகவே இன்று வரையிலும் காணப்படுகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள் ஏற்கெனவே பதியப்பட்ட ஒரு கட்சியை விலைகொடுத்து வாங்குவதற்கான சில முயற்சிகள் நடந்து வருவதாக.

இலங்கைத்தீவின் தேர்தல் சட்டத்தின்படி ஒரு கட்சியைப் பதிவதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்குப் பல கட்டங்களைக் கடக்க வேண்டியுமிருக்கும். அது உடனடிக்கு நடக்கக் கூடிய ஒன்று அல்ல. ஆனால் ஒரு தேர்தல் கூட்டை உருவாக்கலாம். அக்கூட்டில் இருக்கக்கூடிய ஒரு கட்சியின் பதிவை அதற்குப் பயன்படுத்தலாம்.

தேர்தல் அறிவிக்கப்பட முன்பு அவ்வாறு ஒரு கூட்டை உருவாக்குமிடத்து ஒரு பொதுச்சின்னத்தைப் பற்றியும் யோசிக்கலாம். தன்னை ஓர் அணியாக பலப்படுத்திக் கொண்ட பின்னர் அதாவது தனது பேரத்தை உயர்வாக வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கலாம் என்று விக்னேஸ்வரன் யோசிக்கக் கூடும்.

அப்படி தனது பேரத்தை உயர்வாக வைத்திருக்கும் பொழுது தனது அணிக்கு அல்லது தனது கட்சிக்கு ஒப்பீட்டளவில் கூடுதலான ஆசனங்களை ஒதுக்குமாறு கேட்கலாம் என்றும் அவர் சிந்திக்கக்கூடும். ஜனவசியமிக்க ஒரு தலைவராக ஏற்கெனவே உள்ள கட்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு முன் தனக்கென்று ஒரு அடித்தளம் இருக்க வேண்டுமென்று அவர் நம்புகிறாரோ தெரியவில்லை.

அவர் ஒரு நீதிபதியாக இருந்தவர். மெய்க்காவலர்கள் சூழ பாதுகாப்பான ஒரு வாழ்வு வாழ்ந்தவர். அது ஏறக்குறைய ஓர் ஒதுங்கிய வாழ்வுதான். இப்பொழுது முதலமைச்சராகவும் வெளித்தரப்புக்களோடு அவருடைய ஊடாட்டம் வெகு குறைவு. யாழ்ப்பாணத்தில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய ஆட்கள் எத்தனை பேர் உண்டு? ரகசியங்களைப் பரிமாறவல்ல ஆட்கள் எத்தனை பேர் உண்டு? அவருடைய சுமார் நான்காண்டு கால அரசியல் வாழ்வில் அவர் சம்பாதித்திருக்கக் கூடிய விசுவாசமான உறவுகளை வைத்து ஓர் அணியை அவர் உருவாக்க விழைகிறார்.

cvv.jpg

ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கட்சிகளை முற்று முழுதாக நம்பிக் களமிறங்க அவர் தயாரில்லை. எனவே தனது பிடியைப் பலமாக வைத்துக் கொண்டு ஒரு கூட்டை உருவாக்குவது பற்றி அவர் சிந்திக்கக்கூடும்.

அக்கூட்டில் இணைவது தொடர்பாக கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் சாதகமாக பதில் கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்படியொரு கூட்டை உருவாக்கும் பொழுது சம அந்தஸ்துள்ள கட்சிகளாக சமமான தொகுதிப் பங்கீட்டிற்கு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் முடிவுகளின் பின் தமிழ் காங்கிரஸ் அடைந்திருக்கும் வெற்றிகளின் பின்னணியில் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு பங்கை கேட்பார்கள் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போதும் பேரவையின் பின்பலத்தோடு ஒரு சுயேட்சைக் குழுவை இறக்குவது தொடர்பாக சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நகரசபையில் அச்சுயேட்சைக்குழு போட்டியிடலாம் என்றும் யோசிக்கப்பட்டது. ஆனால் அக்குழுவில் பேரவையின் பக்கபலத்தோடு களமிறக்கப்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஐம்பது விகிதம் வழங்கப்பட வேண்டும் என்றும் யோசிக்கப்பட்டதாம்.

அதை அந்த நேரத்தில் பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகள் வரவேற்கவில்லை. சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு ஐம்பது விகிதத்தை வழங்கினால் கட்சிகளுக்கு காற்பங்கு காற்பங்கே கிடைக்கும். இதை ஏற்றுக்கொள்ள அப்பொழுது கட்சிகள் தயாராக இருக்கவில்லை.
அது மட்டுமல்ல ஒரு மாற்று எதிரிணியை கட்டியெழுப்புவதற்காக சிவகரனும், சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமாரும் மேற்கொண்ட பல சந்திப்புக்களின் போதும் இத்தொகுதிப் பங்கீடு பற்றிய பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்பட்டது.

சமதையான பங்காளிகளாக சமவிகிதத்தில் கட்சிகளை ஒன்றிணைப்பது என்று வரும் பொழுது சிவில் சமூகங்களுக்கு எத்தனை விகிதத்தை ஒதுக்குவது என்பது அவ்வுரையாடல்களில் விடை காணப்படாத ஒரு கேள்வியாகவே தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருந்தது. பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதோடு மேற்படி இணைப்பு முயற்சிகள் சிதறடிக்கப்பட்டு விட்டன.

இப்பொழுது விக்னேஸ்வரனும் அப்படியொரு முயற்சியைத் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். முன்னைய இணைப்புகளின் போது கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பெருந் தலைவராக விக்னேஸ்வரனை ஏற்றுக்கொள்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் தயாராகக் காணப்பட்டது.

கஜேந்திரகுமாரிடமும் அதற்கு வெளிப்படையான எதிர்ப்புக் காணப்படவில்லை. இப்பொழுது கஜேந்திரகுமாரும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இரு வேறு திசைகளில் சிதறிக் காணப்படும் ஒரு பின்னணியில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கி ஒரு புதிய கூட்டணியைத் திரட்டுவதற்கு விக்னேஸ்வரனால் முடியக்கூடும். பேரவையின் பின்பலத்தோடு பேரவைக்குள்ளேயும், வெளியேயும் உள்ள புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள், மதகுருக்கள் போன்றவர்களின் பக்கபலத்தோடு விக்னேஸ்வரன் ஒரு பலமான கூட்டை கட்டியெழுப்ப முடியும்.

தமிழ் அரசியல் பரப்பில் அப்படியொரு கூட்டைக் கட்டியெழுப்பத் தேவையான ஜனவசியம் அவருக்குத்தான் உண்டு. ஆனால் சம்பந்தர் எனப்படும் ஒரு பழுத்த முதிர்ச்சியான தந்திரமான ஒரு தலைவருக்கு நிகராக அக்கூட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவப் பண்பு விக்னேஸ்வரனிடம் உண்டா என்பதனை அவர் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

சம்பந்தரை எதிர்ப்பது வேறு அவருக்கு எதிராகத் தலைமை தாங்குவது வேறு. விக்னேஸ்வரனை சம்பந்தர் வலிந்து அரசியலுக்குள் கொண்டு வந்த போது சிவகரன் அவரிடம் பின்வருமாறு கூறினாராம். ‘நீங்களெல்லாரும் வழக்கறிஞர்கள். அவர் ஒரு நீதிபதி. அவர் உங்களுடைய சொல்லைக் கேட்க மாட்டார்’ என்று. எனவே ஒரு நீதிமானாக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்றெடுத்த விக்னேஸ்வரன் ஒரு தலைவராகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு காலகட்டம் வந்து விட்டது.

http://athavannews.com/?page_id=600055&cat=162901&post=659550

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.