Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல - தொல்காப்பியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                  மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல - தொல்காப்பியன்

      சில காலங்களுக்கு முன் ஊடகவியல் துறை (Department of communication) நண்பர் ஒருவர், " மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் தானே ! அதை ஏன் அரசியல்வாதிகள் வழிபாட்டுக்குரியதாக புனிதப்படுத்த வேண்டும்?" எனக் கொந்தளித்தார். தற்கால அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் அவருக்கு நியாமான கோபம் இருக்கலாம். ஆனால் மொழியை அவர்களுக்குரிய விடயமாக விட்டு விடுவது எவ்வகையில் சரி ? மேலும் அது வெறும் தகவல் ஊடகம் என்பது கார்ல் மார்க்ஸ், அண்ணா போன்றோரை வழிபடும்(!!) என் போன்றோர்க்கே வறட்டுத்தனமாகத் தோன்றுகிறதே! ஒருவனுக்கு அவன் தாய்-தந்தை போல, அவன் வேர்விட்ட மண் போல, நம்புகிறவனுக்கு அவன் 'சாமி' போல மொழியும் ஒரு உணர்வாயிற்றே! ஒருவன் சாமியை நிராகரித்து நாத்திகனாய் வாழ்ந்துவிடலாம். மொழி நாத்திகனாய் (இச்சொல்லாடலுக்கான காப்புரிமை தயவு கூர்ந்து அடியேனுக்கே உரித்தாகுக!) எவ்வாறு வாழ முடியும் ? உணர்வுடன் பேசித்தானே ஆக வேண்டும் ? அதிலும் குறிப்பாக " என் பிள்ளை தமிழ் படிக்கவில்லை " ," எனக்கு தமிழ் அவ்வளவாகப் பேச வராது " எனப் பெருமையாகச் சொல்லும் மானங்கெட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வரும் நிலையில் தமிழின் தொன்மையும் மேன்மையும் பேசப்படத்தான் வேண்டும். தமிழுக்குத் துளியும் தகுதியில்லாத தமிழனிடம் அம்மொழி மாட்டிக்கொண்டது என்பதை எடுத்துச்சொல்லத்தான் வேண்டும் . தமிழைத் தமிழனிடமிருந்து காப்பாற்றவாவது தொல்காப்பியனை அழைக்கத்தான் வேண்டும்.

      உலகின் எந்த மொழியிலக்கணமும் எழுத்து பற்றிப் பேசும்; சொற்களின் அமைப்பு பற்றிப் பேசும். தொல்காப்பியம் பொருளையும் பேசியது. தமிழ் பேசிய நிலத்தின் பாகுபாட்டை எடுத்தியம்பியது, அந்நிலத்தின் பூவினம், புள்ளினம் (flora and fauna), பொழுது, வெளி (time and space), தொழில் சார்ந்த சமூகப் பாகுபாடு அனைத்தும் சொன்னது. இவை போதாதா மொழி வெறும் ஊடகமல்ல என்று உலகோர்க்குச் சொல்ல? எல்லாவற்றிற்கும் மேலாக தமிழனின் சமூகவியலும் பேசியது தொல்காப்பியம். கற்பு, களவு, திணை வகைகள் இவையனைத்தும் சமூகவியல் அன்றி வேறென்ன? தொல்காப்பியச் சமகாலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் அது குறிக்கத் தவறவில்லை என்பது மொழியிலக்கணம் கற்க முனைந்த எவரையும் வியப்பில் ஆழ்த்தும் விடயம். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம்" என்பது தொல்காப்பியம் சுட்டும் சமூக (அவல) மாற்றங்களில் ஒன்று. களவியலில் மடலேறுதல், உடன்போக்கு போன்ற துறை சார்ந்து ஒழுகிய தமிழ்ச் சமூகத்தில் பொய்களும் குற்றங்களும் தோன்றியமையால் பெற்றோர், உற்றோர் போன்ற மூத்தோர் (அய்யர் என்பதன் பொருள் ஈண்டு மூத்தோரே) மணமுறைகளை (கரணம்) இயற்ற ஆரம்பித்தனர் எனக் குறிக்கிறது தொல்காப்பியம். உன்னதமான காதல் வாழ்விலிருந்து வழுவி, வரையறுக்கப்பட்ட மணமுறைக்குள் சென்றது சங்க காலத் தமிழ்ச் சமூகம் என்பதற்குச் சான்று தொல்காப்பியம். ஒரு மொழியிலக்கணம் எவ்வாறு அமைதல் வேண்டும் என உலக மொழிகளுக்கே இலக்கணம் வகுத்தது தொல்காப்பியம். உலக அறநூல்களுக்குத் தலையாயதாய் திருக்குறளை நிறுத்தியதை போல, உலக இலக்கணங்களுக்குத் தலையாயதாய் தொல்காப்பியத்தைக் கொண்டு நிறுத்துவது தமிழுணர்வு இன்னும் எஞ்சியிருப்போரின் கடமை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

      இறுதியாக தொல்காப்பியம் மொழிந்தவாறு பொய்யும் வழுவும் தமிழ்ச்சமூகத்தில் தோன்றியமைக்குச் சான்றாக குறுந்தொகைக் காட்சியொன்று (பாடல் 25) :

 யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத் தாளன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

      அஃதாவது தலைவி தோழிக்குச் சொல்கிறாள், "அவ்விடத்தில் யாருமில்லை; தானே (தலைவனே) கள்வன். அவனே (இல்லையென) பொய்த்தால் நான் என்ன செய்ய முடியும்? தினையின் அடிப்பாகம் போல சிறிய இளங்கால்களையுடையதும் ஆற்றுநீரில் (ஒழுகு நீரில்) சிறிய மீனுக்காக (ஆரல்) காத்திருப்பதுமான குருகு (மட்டுமே) உண்டு அவன் என்னை மணந்த (அடைந்த என்பதன் இடக்கரடக்கல்) பொழுது". இவ்வாறு ஒரு வலுவற்ற சாட்சியையே முன்வைக்கிறாள் தலைவி.

          தொல்காப்பியத் திறம் பேச முயலும் போது குறுந்தொகை இலக்கியத் திறமும் கண்முன் வருமாயின், சொல்லாமல் எங்ஙனம் மறைப்பது? எல்லாம் தமிழின் திறம்தானே !                

                                                                                

   - சுப. சோமசுந்தரம்     

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.