Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன?

யதீந்திரா 

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல தங்களது அமைப்பின் மத்திய குழுவிலுள்ளவர்களின் நிலைப்பாடும்தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் பேசுகின்ற போதும் சித்தார்த்தன் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தன் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுக்கள் ஒன்றின் தலைவராகவும் இருந்தவர்.

இந்த அரசாங்கத்தில் தீர்வு கிடைக்காது என்பது வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைகளில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவனால் கூட இலகுவாகச் சொல்லக் கூடிய ஒரு விடயம். இதனைச் சொல்வதற்கு புளொட்டின் மத்திய குழு கூட வேண்டியதில்லை. ஆனால் அரசியல் தீர்வு கிடைக்காது அல்லது அது சரிவராது என்று சொல்வதற்கு கட்சிகளோ அல்லது தலைவர்களோ தேவையில்லை. அரசாங்கம் தர மறுக்கும் ஒன்றை தாங்கள் எவ்வாறு அடையப் போகின்றோம் என்பதைச் சொல்வதற்குத்தான் கட்சிகளும் தலைவர்களும் தேவை. தங்களின் இன்னல்களை போக்குவதற்கான தீர்வொன்றை அடைவதற்காகவே மக்கள் கூட்டமைப்பை தங்களின் தலைமையாக தெரிவு செய்தனர். ஆனால் கூட்டமைப்பிலுள்ளவர்களுக்கே தாங்கள் எதை நோக்கிப் போகின்றோம் என்பதில் எந்தவொரு தெளிவும் இல்லாமல் இருக்கின்ற போது, மக்களின நிலை என்ன?

தமிழ் மக்களின் பிரதான தலைமையாக கூட்டமைப்பு வெளித்தெரிந்த காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின் தலைவர்கள் அரசியல் தீர்வுக்கான சுலோகங்களையே பிரதானமாக முன்வைத்து வந்திருக்கின்றனர். அரசியல் தீர்வுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் ஒரு சிறியளவு முக்கியத்துவம் கூட மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து, கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவுடனும் மார்ட்டின் லூதர் கிங்குடனும் ஒப்பிட்டுப் புகழ்ந்து கொண்டிருந்தார். மேற்குலக மற்றும் இந்திய ராஜதந்திரிகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்த அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதை தவறாமல் வலியுறுத்தி வந்தார். இதற்கும் அப்பால் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் தமிழரசு கட்சியில் தனித்து முடிவெடுக்க வல்லவரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்தார். இதன் ஊடாக அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்குமான தேன்னிலவு அந்நியோன்யம் தெளிவாக காண்பிக்கப்பட்டது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான டெலோவின் தலைவர், இலங்கை பாராளுமன்றத்தில் குழுக்களின் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பும் அரசாங்கமும் எந்தளவு ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்திருக்கின்றது என்பதற்கு டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வகித்துவரும் பதவிதான் தெளிவான ஆதாரம்.

இவ்வாறு, அரசாங்கத்தின் இணைபிரியாத பேடு (பேட்டுக் கோழி) போன்றிருந்த கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றின் தலைவரான சித்தார்த்தன்தான் தற்போது இந்த அரசாங்கத்தில் தீர்வு சாத்தியமில்லை என்கிறார். அவ்வாறாயின் இதுவரை இந்த அராசாங்கம் தொடர்பில் சம்பந்தன் - சுமந்திரன் தரப்பு மேற்கொண்டு வந்த அணுகுமுறைகளிலுள்ள தவறுகள் தொடர்பில் சிந்தார்த்தன் விவாதிக்கத் தயாரா? அதேவேளை குறித்த மத்திய குழுக் கூட்டத்தில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் புளொட் தீர்மானித்திருப்பதாகவும் சித்தார்த்தன் குறித்த ஊடக சந்திப்பில் தொவித்திருக்கின்றார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தரமுடியாத கூட்டமைப்புக்குள் விக்னேஸ்வரன் ஏன் இருக்க வேண்டும்? ஆனால் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சராக இருக்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட மாட்டாது என்று மிகவும் கறாராக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில்தான் புளொட் விக்னேஸ்வரனையும் உள்ளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகின்றதாம். சித்தார்த்தன் நினைப்பது போல் நடக்காவிட்டால் புளொட் என்ன முடிவை அறிவிக்கும்?

கூட்டமைப்பு என்பது ஒரு தேசிய இனத்திற்கு தலைமை தாங்குமளவிற்கான வலுவானதொரு அமைப்பு இல்லை என்பதை கூறுவதற்கு இந்தப் பத்தியாளர் தேவையில்லை. அது அனைவரும் நன்கறிந்த சங்கதி. இதனை நன்கறிந்துதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்டும், டெலோவும் கூட்டமைப்புக்குள் சீவித்துவருகின்றன. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தங்களது கட்சிக்கான ஆசனங்களுக்காக தமிழரசு கட்சியுடன் மல்லுக்கட்டுகின்றன. இந்த மல்லுக்கட்டலில் ஒவ்வொரு முறையும் பல்லுப் போவது என்னவோ புளொட்டுக்கும் டெலோவுக்கும்தான். ஒப்பீட்டு அடிப்படையில் அதிகம் புளொட்டின் பல்லுத்தான் வழக்கமாகப் போவதுண்டு. ஒரு காலத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு வலுவான பின்தளம் தேவையென்று உணர்ந்து, மாலைதீவு சதிப்புரட்சியில் பங்குகொண்டு பிடிபட்ட புளொட் இயக்கம், இப்போது பிரதேச சபையொன்றில் ஆசனங்களை பெறுவதற்காக தமிழரசு கட்சியிடம் மல்லுக் கட்டி, ஒவ்வொரு முறையும் பல்லை இழந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்று சித்தார்த்தன் கூறுகின்றார். உண்மையில் சித்தார்த்தன் இதனை வேறு விதமாக கூறியிருக்க வேண்டும். கூட்டமைப்பால் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை. அதாவது சம்பந்தர் அண்ணரால் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை. இனியும் அரசியல் தீர்வு விடயத்தில் சம்பந்தர் அண்ணரை எவரும் நம்ப வேண்டாம்.

உண்மையில் இங்கு அரசாங்கம் தொடர்பில் பேசுவதற்கு எதுவுமில்லை. அதாவது, அரசாங்கம் சமஸ்டி அடிப்படையலான வடக்கு கிழக்கு இணைந்ததான ஒரு அரசியல் தீர்வை தருவதாக எங்குமே சொல்லியதில்லை. ஏனவே இந்த அரசாங்கத்தில் தீர்வு சாத்தியமில்லை என்று கூறுவதில் என்ன பொருள் உண்டு. தாங்கள் முன்வைத்த அரசியல் தீர்வை தங்களால் பெற முடியவில்லை என்பது மட்டும்தான் உண்மை.

மேற்குலக அரசியல் தலைவர்களிடம் ஒரு உயர்ந்த பண்புண்டு. தாங்கள் முன்வைத்த ஒரு விடயத்தில் தோல்வியடைந்தால் உடனடியாகவே தங்களின் பதவியை அவர்கள் துறப்பார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் மேற்குலக அரசியலில் இடம்பெற்றிருக்கிறன. மிக அண்மைக்காலத்தில் கூட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரோன் பதவி விலகியிருந்தார். உண்மையில் இதுவரை காலம் ஒரு அரசியல் தீர்வு வரமென்னும் போலி நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டிவந்த சம்பந்தன், கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகவேண்டும். கூட்டமைப்பின் பேச்சாரளராகவும் அதன் சர்வதேச தொடர்புகளை தனியாக கையாண்டு வருபவருமான சுமந்திரன் அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும். தீர்வு சாத்தியமில்லை என்று குறிப்பிடும் சித்தார்த்தன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் கூட்டமைப்பின் பொறுப்புக்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று அறிவிக்கத் தயராக இருக்கின்றாரா? தற்போதிருக்கின்ற கூட்டமைப்பால் ஒரு தீர்வு சாத்தியமில்லை என்பதில் சித்தார்த்தன் உறுதியாக இருந்தால் அதன் பின் அந்த கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பதன் அர்த்தம் என்ன? ஒன்றில் கூட்டமைப்பின் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் அல்லது தனியான ஒரு வழியில் சித்தார்த்தன் பயணிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் வெறுமனே தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டு, அதற்குள்ளே சமரசம் செய்துகொள்வது சொந்த மக்களை ஏமாற்றுவதாக அல்லவா அமையும்!

முதலில் தங்களால் என்ன மாதிரியான ஒரு அரசில் ஏற்பாட்டை செய்ய முடியுமென்பதில் கூட்டமைப்பின் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் காலத்தில் உச்சரிக்கப்படும் சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை தங்களால் உண்மையிலேயே வென்றெடுக்க முடியுமா என்பதில் முதலில் தங்களுக்குள் சிந்தித்து பதில் காணவேண்டும். ஒரு இடைக்கால எற்பாடு, நீண்ட கால ஏற்பாடு என்னும் அடிப்படையில் தீர்வை கையாளும் உபாயங்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் கூட்டமைப்பிற்குள் இதுவரை நிகழ்ந்ததில்லை. உண்மையில் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன் எவ்வாறு சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றாரோ அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றன.

இந்த அராசாங்கம் மட்டுமல்ல இனி வரப் போகும் எந்தவொரு அரசாங்கமும் சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளடங்கிய அரசியல் தீர்வொன்றை தரப் போவதில்லை. இதுதான் இந்த நாட்டின் யதார்த்தம் என்றால், கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு நல்ல தலைமைக்கு அழகு முதலில் அது தன்னால் முடியுமானதை தன்னை நம்பும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். பிற அழுத்தங்களால் ஒரு விடயம் நடக்கும் என்பது ஒரு ஊகம், கணிப்பு அவ்வளவே! ஆனால் ஒரு மக்கள் தலைமை வெறுமனே வெளி அழுத்தங்களுக்காக மட்டுமே காத்துக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறான அழுத்தங்கள் வருகின்ற போது அவற்றை, மக்களின் நலனில் நின்று கையாளும் தகுதியுடன் அந்தத் தலைமை இருந்தால் போதுமானது. இறுதியாக, சுலோகங்களை எவரும் முன்வைக்கலாம் ஆனால் அந்தச் சுலோகங்களை நடைமுறையில் வெல்வதென்பது எழுதுவது, பேசுவது போன்று இலகுவான விடயமல்ல.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=e4f2f052-24a0-4119-876b-0d4e66df8f67

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 அரைச்சு அரிச்சு  அரைச்ச  மாவையே திருப்பி  அரைச்சுக்கொண்டிருக்கிறார் கட்டுரையாளர்...... 

எவர் என்ன செய்வார் செய்தார் என்பது ஒவ்வொரு ஈழ பால்குடிக்கும் தெரிஞ்ச விசயம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.