Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இல் மற்றுமொரு ஜெனிவா பிரேரணை வருமா?

Featured Replies

2019 இல் மற்றுமொரு ஜெனிவா பிரேரணை வருமா?

 

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது 40 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக என்ன நடக்கப்போகின்றது என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வியாக கருதப்படுகின்றது.

அதாவது 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 2015ஆம் ஆண்டு பிரேரணையைத் தவிர ஏனைய அனைத்துப் பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை அனுசரணை வழங்கியது. இந்த சூழலிலேயே 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 40 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவமிக்கதாகவும் இலங்கைக்கு தீர்க்கமானதாகவும் காணப்படுகின்றது.

அதாவது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மீறல்களை எதிர்கொண்ட மக்கள் நீதிக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். எங்கே தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படுமா என்பது இந்தமக்களின் ஆதங்கமாக இருக்கின்றது. மக்கள் நீதி கிடைக்கும் என்ற விடயத்தில் தற்போது விரக்தியான கட்டத்தில் உள்ளனர். நீதியும் இல்லை நிவாரணமும் இல்லை என்ற விரக்தி நிலைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சென்றுவிட்டனர்.

காணிப்பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.இவ்வாறு விரக்தி நிலையில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறையே என்று கூறலாம். காரணம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் உள்ளக ரீதியில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் ஐ.நா.வின் தலையீட்டை எதிர்பார்த்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்த மக்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் மிகக்குறுகிய காலத்தில் இந்த நம்பிக்கை தற்போது சிதறிக்கொண்டிருக்கின்றது. மறுபுறம் சர்வதேச சமூகத்தினதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் இந்த நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்துவிட்டது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சர்வதேச மட்டத்தில் குறைவடைந்து செல்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களோ தொடர்ந்து தமது எதிர்பார்ப்பை வெளிக்காட்டியே வருகின்றனர். தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் போன்றவற்றின் ஊடாக தமது எதிர்ப்பை மக்கள் வெளிக்காட்டியே வருகின்றனர். ஆனால் அவற்றுக்கான பதில்கள் அதிகார மட்டத்திலிருந்து வருவதில்லை.மாறாக மக்கள் போராடி போராடி விரக்தி நிலையை அடைவது மட்டுமே எஞ்சியிருக்கின்றது. 2012 ஆம் ஆண்டு முதலாவது பிரேரணை இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதில் இலங்கையானது யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போதைய அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டது. அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதனையே கூறியது. வழமைபோன்று அப்போதைய அரசாங்கம் அதனையும் நிராகரித்தது. தொடர்ந்து2014 ஆம் ஆண்டு சற்று வித்தியாசமாக இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் விசாரணை நடத்தவேண்டுமென கூறி ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதனையும் அப்போதைய அரசாங்கம் நிராகரித்தது.

எவ்வாறெனினும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அதனூடாக ஜெனிவாவிலிருந்தவாறு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையும் தயாராகியது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.நா. விசாரணை அறிக்கை தயாரான சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆட்சியை மாற்றி அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளக விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதாக அறிவித்தனர்.அத்துடன் வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை முன்வைக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் 2015ஆம் ஆண்டு ஐ.நா.விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னர் அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான ஒரு பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் முன்வைத்தன. அதில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை என்ற வார்த்தைப் பிரயோகம் இடம்பெறவில்லை. மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கலந்துகொள்ளவேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் அனுசரணையும் வழங்கியது.

அந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை காலம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இக்காலப்பகுதியில் சரியான முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படாததன் காரணமாக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு மீண்டும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இலங்கை மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது. அதற்கு இன்னும் சரியாக 10 மாதங்களே இருக்கின்றன. இந்தப் பத்துமாதங்களுக்குள் இலங்கை 2015ஆம் ஆண்டு பிரேரணையை முழுமையாக அமுல்படுத்திவிடுமா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு முழுமையாக அமுல்படுத்தப்படாவிடின் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் என்ன நடக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.

அதன்படி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் வகையில் மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்படுமா அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை விடயத்தை இந்த இடத்தில் கைவிட்டு விடுமா? அல்லது இந்த விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகளே தற்போது அனைவர் மத்திலும் காணப்படுகின்றன.

இந்த இடத்தில் எதனையும் தற்போதைய சூழலில் உறுதியாக கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது. காரணம் உறுப்பு நாடுகள் இந்த விடயத்தில் என்ன செய்யப்போகின்றன என்பதை தற்போதே ஊகிக்கமுடியாது உள்ளது. காரணம் பூகோள அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் சில விடயங்களிலான எதிர்வுகூறலை வரையறை செய்வதாக அமைந்திருக்கின்றது.எனவே ஏற்கனவே இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீண்டும் இலங்கை தொடர்பில் 2019ஆம் ஆண்டில் பிரேரணையொன்றை கொண்டுவருமா? அதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தவரையில் பிரேரணையின் செயற்பாட்டுக்காலம் முடிவடைந்தால் அதற்கு அப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது.மாறாக ஒரு விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டு அதனூடாக ஆணை கிடைக்கும் பட்சத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பட முடியும் என கூறப்படுகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் உச்சபட்ச இலங்கை குறித்த நடவடிக்கையாக 2014ஆம் ஆண்டு பிரேரணையே சுட்டிக்

காட்டப்படுகின்றது. அந்தப் பிரேரணை யில்தான் இலங்கை விவகாரம் தொடர்

பில் ஐ.நா. அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. எப்படியிருப்பினும் தற்போதைய சூழலில் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சர்வதேச அழுத்தங்கள் கூடுமா? சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப் போகின்றன? சர்வதேச நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பவற்றுக்கு இன்னும் விடைகள் கிடைக்காமல் உள்ளன. ஒருவேளை இலங்கை விடயம் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அங்கு சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை இலங்கைக்கு சார்பாக பயன்படுத்தும் நிலையிலேயே உள்ளன.

இதற்கிடையில் சர்வதேச நியாயாதிக்கம் தொடர்பிலும் பேசப்படுகின்றது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத பட்சத்தில் சர்வதேச நாடுகளில் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என கூறப்படுகின்றது. ஆனால் அது இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும். இதுதொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது குறித்து ஆராயப்படவேண்டியது அவசியமாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நீதியை மறுக்கவும் கூடாது. தாமதிக்கவும் கூடாது. தற்போது காணி மீளளிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.நட்டஈடு வழங்கும் அலுவலகமும் நியமிக்கப்படவுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அங்கமாகவே உள்ளன. ஆனால் இவை விரைவாக செயற்படுத்தப்பட்டு 2019ஆம் ஆண்டுக்குள் பெறுபேறுகள் எட்டப்படுமா? காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் தேட முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இதனையே அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை காணப்படுகின்றது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முற்றுமுழுதாக குறைகூற முடியாது. ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அடிப்படை விடயங்களில் இன்னும் எந்தவொரு நகர்வும் இடம்பெறாமல் உள்ளது. குறிப்பாக பொறுப்புக்கூறல் பொறிமுறை வடிவம் எவ்வாறு அமையும் என்பது கூட இதுவரை சரியாக உருவாக்கப்படாமல் உள்ளது. பகுதி பகுதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் முழுமையான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் நீதியை தாமதிக்கக்கூடாது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் ஒருவேளை இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படலாம். அல்லது மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்படலாம். அல்லது அடுத்த கட்டத்திற்கு செல்வது குறித்து ஆராயப்படலாம். அல்லது அந்த இடத்திலேயே அனை த்து விடயங்களும் ஸ்தம்பித்தும் போகலாம். என்ன நடக்கப் போகின்றது என்பதை எதிர்வரும் 10 மாதங்களில் உலக அரசியல் நகர்வுகளே தீர்மானிக்கப்போகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-09#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.