Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம் - ஜூங்கா

Featured Replies

சினிமா விமர்சனம் - ஜூங்கா

ஜூங்காபடத்தின் காப்புரிமைFACEBOOK
   
திரைப்படம் ஜூங்கா
   
நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி
   
இசை சித்தார்த் விபின்
   
இயக்கம் கோகுல்
   
   

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு கோகுலும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் இரண்டாவது படம். சூதுகவ்வும் படத்தைப் போல இதுவும் ஒரு 'டார்க் காமெடி'.

ஜூங்காவின் (விஜய் சேதுபதி) தந்தை ரங்காவும் தாத்தா லிங்காவும் மிகப் பெரிய டான்கள். ஆனால், டானாக இருப்பதற்காக பெரும் செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். ஆகவே அவர்களைப்போல ஜூங்கா வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வரலாறே தெரியாமல் வளர்க்கிறார் ஜூங்காவின் தாய் (சரண்யா). ஒரு நாள் இந்தக் கதை ஜூங்காவுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து, தானும் ஒரு டானாக மாறி, பணம் சம்பாதித்து தந்தை இழந்த பாரடைஸ் சினிமா தியேட்டரை மீட்க முடிவு செய்கிறார்.

ஜூங்காபடத்தின் காப்புரிமைJUNGA

ஆனால், அதற்குள் அந்த தியேட்டரை வைத்திருக்கும் சோப்ராஜ் (ராதாரவி), செட்டியார் (சுரேஷ் மேனன்)என்பவரிடம் அதனைக் கொடுத்துவிடுகிறார். செட்டியார் தியேட்டரை ஜூங்காவிடம் விற்க மறுப்பதோடு அவமானப்படுத்திவிடுகிறார். இதையடுத்து, பாரீஸில் உள்ள செட்டியாரின் மகள் யாழினியை (சாயிஷா) கடத்தி தியேட்டரை மீட்க முயல்கிறார் ஜூங்கா.

படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில், படுவேகமாகவும் சுவாரஸ்யமாகவும் பறக்கும் திரைக்கதை ரொம்பவுமே ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக சலிப்பூட்டும் விதத்தில் அமையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இந்தப் படத்தில் கலகலப்பூட்டுகின்றன.

ஜூங்காபடத்தின் காப்புரிமைFACEBOOK

பணம் சேகரிப்பதற்காக டானாக உருவெடுக்கும் ஜூங்கா, அந்தப் பணத்தைச் சேமிக்கக் காட்டும் கஞ்சத்தனமும் அதனால் ஜூங்காவின் அடியாட்கள் படும் அவதியும் தியேட்டரை குலுங்க வைக்கிறது.

தவிர, சின்னச்சின்னதாக பல படங்களையும் நடிகர்களையும் ஸ்பூஃப் செய்வதும் ஜாலியாக இருக்கிறது.

ஆனால், செட்டியாரின் மகளைத் தேடி ஜூங்கா பாரீசுக்குப் போனதும் படத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அதற்குப் பிறகு க்ளைமாக்ஸ் வரும்வரை இலக்கில்லாமல் செல்லும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது.

ஜூங்காபடத்தின் காப்புரிமைJUNGA

ஆண்டவன் கட்டளை போன்ற ஒரு சில திரைப்படங்களைத் தவிர, பெரும்பாலான படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும். அது சில கதைகளுக்குப் பொருந்தும். வேறு சில கதைகளுக்குப் பொருந்தாது. இந்தப் படத்திற்கு ரொம்பவுமே பொருந்துகிறது என்பதால், விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளுக்கு திரையரங்கு அதிர்கிறது.

ஜூங்காவின் நண்பனாக வரும் யோகிபாபு வழக்கம்போது தனது 'ஒன்லைன்கள்' மூலம் பட்டையைக் கிளப்புகிறார்.

ஜூங்காபடத்தின் காப்புரிமைJUNGA

தமிழில் அறிமுகமான முதல் படத்திலிருந்தே வசீகரிப்பவர் சாயிஷா. இந்தப் படத்திலும் பின்னியிருக்கிறார். குறிப்பாக பாடல்களில் அவரது நடன அசைவுகள் வியக்கச்செய்கின்றன. ஜூங்காவின் தாயாக நடித்திருக்கும் சரண்யாவும் அவரது பாட்டியாக வரும் பெண்மணியும் துவக்கத்திலிருந்தே திரைக்கதைக்கு ஈடுகொடுக்கிறார்கள்.

சித்தார்த் விபினின் இயக்கத்தில் சில பாடல்கள் பரவாயில்லை ரகம்.

ஜூங்காபடத்தின் காப்புரிமைJUNGA

கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் எல்லாம் படத்தின் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். அந்த பலவீனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. மற்றபடி, ரசிக்கத்தக்க படம்தான்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44980673

  • தொடங்கியவர்

 

ஜூங்கா திரை விமர்சனம்

  • தொடங்கியவர்

விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ – சினிமா விமரிசனம்

 

 
junga_new234

 

தமிழ்த் திரையில் இதுவரை மிகையாக ஊதப்பட்ட நாயக பிம்பங்கள் நொறுங்கி வீழத் துவங்கியிருக்கும் பின்நவீனத்துவக் காலக்கட்டம் இது. முந்தைய சினிமாக்களில், நாயகன் என்பவன் நன்மையின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பான். தீயகுணம் ஒன்று கூட அவனிடம் இருக்கவே இருக்காது. உதாரணம் எம்.ஜி,ஆர். இதைப் போலவே வில்லன், தீமைகளின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரனாக, கொடூரமானவனாக இருப்பான். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் வகையறாக்கள் இதற்கு உதாரணம். துல்லியமாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கறுப்பு, வெள்ளைச் சித்திரங்கள் இயல்புக்கு மாறானவை.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இந்தச் சித்திரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் மற்றும் சந்தர்ப்பம் காரணமாக நாயகனும் தீமையின் பால் தற்காலிகமாக வசீகரிக்கப்பட்டு பிறகு திருந்துவான். வில்லனிடம் இருந்த லேசான நற்குணங்களும் சித்தரிக்கப்பட்டன. மணிரத்னம் இயக்கிய ‘பகல்நிலவு’ திரைப்படத்தில் வில்லன் சத்யராஜ், ஒரு நல்ல குடும்பத்தலைவருக்கான இயல்புடன் அறிமுகம் ஆவார். விநோதமான விளக்குகள் மின்னும் பின்னணியில், அரைகுறை ஆடை அணிந்த பெண்களும், மதுபாட்டில்களும், அடுக்கி வைக்கப்பட்ட மரப்பெட்டிகளுமாகக் காட்சியளிக்கும் வில்லனின் இருப்பிடங்கள் மெல்ல மறையத் துவங்கின.

இது போலத்தான் ‘டான்’ பாத்திரமும். பயங்கரமான வில்லர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இந்தப் பாத்திரத்தில் பிற்பாடு  நாயகர்களும் நற்குணம் கொண்ட ‘டான்’களாக நடிக்கத் துவங்கினர். ராபின்ஹூட் சாயலில் பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளைக் காப்பாற்றினார்கள். இந்த வகையில் ரஜினியின் ‘பாட்ஷா’ ‘தளபதி, கமலின் ‘நாயகன்’ போன்றவை முக்கியமான திரைப்படங்கள்.

ஆனால் அசலான டான்களின் மறுபுறத்தில் நகைப்பிற்கு இடமான விஷயங்களும் இருந்தன. எந்த நேரத்திலும் நிகழக்கூடிய உயிராபத்தின் காரணமாக உள்ளூற மறைத்துக் கொண்ட அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருக்கிற ‘டான்’களும் நிஜத்தில் இருக்கிறார்கள். இந்தச் சித்திரத்தின் கச்சிதமான உதாரணமாக வடிவேலுவின் ‘கைப்புள்ள’ பாத்திரத்தைச் சொல்லலாம். பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற இந்தக் குணாதியசத்தைப் பிறகு பல படங்களில் நடித்து தீர்த்து விட்டார் வடிவேலு.

வடிவேலு ஏற்ற இந்தப் பாத்திரத்தின் பெரும்பாலான சாயலை ஒரு நாயகனே ஏற்றால் எப்படியிருக்கும்? அதுதான் ஜுங்கா. இத்திரைப்படத்தில் வரும் சிக்கனமான, அற்பமான கஞ்சத்தனம் உடைய ‘டானை’ நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு ரகளையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘நானும் ரவுடிதான்’ என்று இதே போன்றதொரு பாத்திரத்தில் அவர் ஏற்கெனவே நடித்திருந்தாலும் முற்றிலும் வேறு மாதிரியான சித்திரம் இது. இதையொட்டி தமிழ் சினிமாக்களின் தேய்வழக்குகளை கிண்டலடித்திருக்கிறார்கள். கூடவே சில அரசியல் பகடிகளும். ‘தமிழ் படம் 2’ வெளிப்படையாக முன்வைத்ததை, ரசிக்கக்கூடிய அமைதியுடன் சாதித்திருக்கிறது, ஜுங்கா.


**

‘டான்’ ஜுங்காவை ‘என்கவுன்டர்’ செய்ய முடிவு செய்கிறது தமிழக காவல்துறை. துரைசிங்கம் (?!) எனும் அதிகாரியை இதற்காக அனுப்புகிறார்கள். “யார் இந்த ஜுங்கா?” என்று அவர் விசாரிக்கிறார். ‘பிளாஷ்பேக்’ வழியாக ஜுங்காவின் அறிமுகம் விரிகிறது. பொள்ளாச்சியில் பேருந்து நடத்துநராக இருக்கிறார் விஜய் சேதுபதி. பேருந்தில் தினமும் வரும் மடோனா செபாஸ்டியனைக் காதலிக்கிறார். இது தொடர்பாக ஏற்படும் சில்லறைத் தகராறில் முகத்தில் குத்து வாங்குகிறார். தம்மை அடித்தவர்களைப் பழிவாங்கச் செலவு செய்து ஆட்களை ஏற்பாடு செய்கிறார். அதில் பலனில்லாமல் போக தாமே எதிரிகளை அடித்து வீழ்த்துகிறார். ‘நம்முடையது ‘டான்’ குடும்பம்’ என்ற ரகசியத்தை இதுவரை தெரியவிடாமல் வளர்த்தேனே’ என்று தாய் சரண்யா புலம்ப, தன் தந்தையான ரங்காவும், தாத்தா லிங்காவும் ‘டான்’களாக இருந்தவர்கள் என்பதை அறிந்துகொள்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் அவர்களின் வரலாறு பெருமைக்குரியதாக இல்லை. வெட்டி வீறாப்புடன் சுற்றும் ‘நகைச்சுவை’ டான்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிற சொத்தையெல்லாம் காலி செய்து குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போல் அல்லாமல் சிக்கனமாகச் சேமித்து, தன் குடும்பச் சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்கிற திரையரங்கை மீட்பதை லட்சியமாகக் கொண்டு சென்னைக்குச் செல்கிறார் விஜய் சேதுபதி. ‘ரூ.500/-க்கு கொலை, அடிதடி’ என்று சகாய விலையில் சேவை செய்ய பணம் குவிகிறது.  இதனால் இதர டான்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்கிறார். திரையரங்கை வைத்திருக்கும் செட்டியார், அதைத் திரும்பத் தர மறுப்பதோடு விஜய் சேதுபதியை அவமானப்படுத்தியும் விடுகிறார்.

பாரிஸில் தங்கியிருக்கும் செட்டியாரின் மகளைக் கடத்துவதின் மூலம் தன் லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விஜய் சேதுபதி. ஆனால்  வடிகட்டிய கஞ்ச ‘டானான’ இவர் எப்படி வெளிநாட்டுக்குச் செல்கிறார்? அங்கு இத்தாலிய மாஃபியாவிற்கும், பிரெஞ்சு போலீஸிற்கும் இடையில் சிக்கி எப்படித் தப்பிக்கிறார்? செட்டியாரின் மகளைக் கடத்தினாரா, திரையரங்கத்தை மீட்டாரா என்பதையெல்லாம் நையாண்டி பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

junga_new789.jpg

‘கஞ்ச’ டான் பாத்திரத்தில் விஜய் சேதுபதி கலக்கியெடுத்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.

ஒரேயொரு காட்சியின் மூலம் ஜுங்காவின் குணச்சித்திரத்தை உதாரணம் காட்ட முயல்கிறேன். ஒருவனைக் கொலை செய்வதற்காக பழைய ஜீப்பில் இரண்டு அடியாட்களுடன் கிளம்புகிறான் ஜூங்கா. ‘வண்டி சும்மாதானே போகிறது’ என்று அதை ‘ஷேர் ஆட்டோவாக்கி’ வழியில் பயணிகளை ஏற்றிச் செல்கிறான். கொலை செய்யப்படவிருக்கிறவனின் வீட்டில் தன் கைபேசிக்கு ‘சார்ஜ்’ போடச் சொல்கிறான். மதிய உணவை அந்த வீட்டின் பிரிட்ஜில் இருந்து எடுத்து வரச் சொல்கிறான். இப்படிப் பல காட்சிகளின் வழியாக ‘டானின்’ அற்பத்தனங்களைச் சித்தரித்துச் சிரிக்க வைக்கிறார்கள்.

திரையரங்கை மீட்பதற்காகக் கஞ்சத்தனமாகப் பணம் சேர்க்கும் இவனின் இம்சைகளைத் தாங்க முடியாமல் யோகி பாபு உள்ளிட்ட உதவியாளர்கள் தவிக்கிறார்கள். இந்திய ரூபாய்க்கும் யூரோவிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செலவு செய்து விட்டு பயங்கரக் கோபத்துடன் கண்ணீர் விடுவது, ‘டான்’களின் கூட்டத்தில் கெத்தாகப் பேசி விட்டு அங்குள்ள குளிர்பானத்தையும், பிஸ்கெட்டையும் லவட்டிக் கொண்டு வருவது, செட்டியாரிடம் சவால் விடுவது, காதலியிடம் தன் கதையைச் சொல்வது.. எனத் தன்னுடைய பாத்திரத்தை ரகளையாகக் கையாண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ‘உதவி’ டானாக வரும் யோகி பாபுவின் எதிர்வினைகள் நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன.

‘உனக்கு ஜுங்கா’ன்னு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா?’ என்று குடும்ப வரலாற்றின் கேவலத்தைக் கூறும் சரண்யாவின் வசன உச்சரிப்பும் நடிப்பும் அட்டகாசமான நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது. சமயத்திற்கு ஏற்றாற் போல் தோரணையை மாற்றும் ஜுங்கா-வின் பாட்டி (விஜயா) மிகவும் ரசிக்க வைக்கிறார். சிறிது நேரமே வந்தாலும், ‘காட்ஃபாதர்’ திரைப்பட ‘டானை’ நினைவுப்படுத்தும் ராதாரவியின் கோணங்கித்தனம் புன்னகைக்க வைக்கிறது. ஜுங்காவின் ‘பாரிஸ்’ காதலியாக நடித்திருக்கும் சயீஷாவின் ஆடம்பரமான தோற்றமும் நடனமும் வசீகரிக்கிறது. ‘தெலுங்கு’ பேசும் பெண்ணாக, சிறிது நேரம் வந்தாலும் மடோனா செபாஸ்டியன் கவர்கிறார். செட்டியாராக, இயக்குநர் சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார்.


**

முதல் பாதியில் ரகளையாக நகரும் திரைப்படம், பாரிஸிற்கு இடம் மாறியவுடன் தொய்வடைந்து விடுகிறது. மீண்டும் இறுதிப்பகுதியில்தான் ‘கலகல’வுணர்வு திரும்புகிறது. ஒரு காமெடியான ‘டான்’, இத்தாலிய மாஃபியா மற்றும் பிரெஞ்சுக் காவல்துறை ஆகியவர்களுடன் மோதி சாகசம் செய்வது, பணக்கார ஹோட்டலில் தங்குவது உள்ளிட்ட பல காட்சிகளில் தர்க்கமில்லை. இது போன்ற காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து சோர்வூட்டுகின்றன.  ‘நகைச்சுவை திரைப்படம்தானே’ என்று இந்த லாஜிக் மீறல்களைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், பலவீனமான திரைக்கதை உண்டாக்கும் சோர்விலிருந்து வெளியே வர முடியவில்லை. இதற்கு மாறாக படத்தின் முதல் பாதியின் வேகத்தை அப்படியே தக்க வைத்திருந்தால் இன்னமும் ரசிக்கக்கூடிய திரைப்படமாகியிருக்கும் ஜுங்கா.

‘மெளனராகம்’, ‘பாட்ஷா’ போன்ற திரைப்படத்தின் காட்சிகள் ரசிக்க வைக்கும் வகையில் மெலிதாகக் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. விஜய் சேதுபதிக்கும், மடோனா செபாஸ்டியனுக்கும் இடையிலான காதல் முறிந்து போவதற்கான காரணம் இதுவரை உலக வரலாற்றிலேயே சொல்லப்பட்டதில்லை. ‘அவன் கிட்ட கதையில்லை போலிருக்கிறது, ‘பார்ட் டூ’விற்கு அடிபோடறான், மாட்டிக்காத’ மற்றும் ‘சாதிக்காமலேயே சக்ஸஸ் பார்ட்டி’ போன்ற வசனங்களின் மூலம் சமகாலத் தமிழ்த் திரையுலகின் போக்குகளையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள்  எதுவும் கவரவில்லை. தமிழ் சினிமாவின் வழக்கம் போல், ஒரு டூயட் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வந்து, வேகத்தடையாக அமைந்து ‘கொட்டாவி’ விட வைக்கிறது. பாரிஸ் உள்ளிட்ட இடங்களை ஒளிப்பதிவு அபாரமாக பதிவு செய்திருக்கிறது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுல் ‘ஜுங்கா’வை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கெனத் தயார் செய்யப்பட்ட பிரத்யேகமான திரைக்கதை கவர வைக்கிறது. இவரது திரைப்படங்களின் சில பகுதிகள் ரசிக்க வைக்கும். ஆனால் ஒட்டுமொத்த நோக்கில் திருப்தியைத் தராது. ஜுங்காவும் இதற்கு விதிவிலக்கில்லை.

தன்னுடைய பாரம்பரியச் சொத்தை மீட்பதற்காக, ‘கஞ்ச’ டான் செய்யும் நகைச்சுவைகளும், விஜய் சேதுபதியும்தான் இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலம். ஏறத்தாழ  படத்தின் முழுச்சுமையையும் அநாயசமாக சுமந்திருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், முழு திரைப்படத்தையும் நகர்த்தியிருந்தால் மேலதிகமாக ரசிக்க வைத்திருப்பான் ‘ஜுங்கா’.

http://www.dinamani.com/cinema/movie-reviews/2018/jul/28/junga-movie-review-vijay-sethupathi-is-hilarious-in-this-gangster-spoof-2969556.html

 

 

திரை விமர்சனம்: ஜுங்கா

 

 
junkajpg

ஜுங்காவின் (விஜய்சேதுபதி) அப்பா ரங்காவும், தாத்தா லிங்காவும் பெரிய தாதாக்கள். ஆனால், வெட்டி பந்தாவுக்காக பணத்தை வீணாக செலவழிக்கிறார்கள். இதனால் போண்டியாகி, ரங்கா மனைவியின் (சரண்யா பொன்வண்ணன்) பரம்பரை சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்ற தியேட்டரை செட்டியாரிடம் இழக்கிறார்கள்.

மகன் ஜுங்காவும் அவர்களைப் போல தாதா ஆகிவிடக் கூடாது என்பதற்காக இந்த பிளாஷ்பேக் தெரியாமல் வளர்க்கிறார் சரண்யா. பின்னர் இதை தெரிந்துகொள்கிறார் ஜுங்கா. பஸ் கண்டக்டராக இருக்கும் அவர், சென்னைக்கு சென்று தாத்தா, அப்பா வழியில் பிரபல தாதா ஆகிறார். ஆனால், அவர்களைப் போல ஊதாரிச் செலவு செய்யாமல், கடைந்தெடுத்த கஞ்சனாக மாறுகிறார். இழந்த தியேட்டரை மீட்கவும் முயற்சிக்கிறார். இதற்காக செட்டியார் மகள் சாயிஷா சைகலைக் கடத்த பாரிஸ் செல்கிறார். தியேட்டரை மீட்டாரா என்பதுதான் ‘ஜுங்கா’.

 

அவல நகைச்சுவையை (டார்க் காமெடி) முதன்மைப்படுத்தும் கதையை கோகுல் இயக்கியுள்ளார். முதல் பாதி, லாஜிக் மீறல்கள் இல்லாமல் பயணிக்கிறது. இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறு. பாரிஸில் ஜுங்காவும், உதவியாளர் யோகிபாபுவும் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியை போலீஸ் சுற்றிவளைக்க, இருவரும் உடலில் தூசிகூட படாமல் தப்பித்து வருவது, கடத்தப்பட்ட சாயிஷா அடைக்கப்பட்டுள்ள இடத்தை சிரமமின்றி ஜுங்கா கண்டுபிடிப்பது என பல உதாரணங்கள் கூறலாம். ஆனால், இதையும் தாண்டி, படம் தொடங்கியது முதல் இறுதி வரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய்சேதுபதி, இதில் ‘கஞ்ச தாதா’வாக அசத்தியிருக்கிறார். பாரிஸில் யோகிபாபுவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் சுவாரசியம். இதற்கு முன்பு தாதா படங்கள் வழியே தமிழ் சினிமா செய்து வைத்திருக்கும் சட்டகங்களை கேலி செய்வதன்மூலம், ‘தாதா பட ஸ்பூஃப்’ என்ற எல்லைக்குள்ளும் கம்பீரமாகப் பிரவேசிக்கிறது படம்.

முதல் பாதியில் தெலுங்கு பேசும் பெண்ணாக மடோனா செபாஸ்டியன் வரும் காட்சிகள் இடைச்செருகல் என்றாலும், அலுப்பூட்டவில்லை. துணுக்கு தோரணங்களாக இடைவேளை வரை காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன. அதன் பிறகு, படம் முழுக்க பாரிஸில் ரிச்சாக நகர்கிறது.

திரையரங்கை மீட்கத் தேவைப்படும் பணத்துக்காக, குறைந்த கட்டணத்துக்கு குற்றங்கள் செய்வது, கொலை செய்யச் செல்லும் நபரின் வீட்டிலேயே செல்போனை சார்ஜ் செய்வது, ‘ஒருமுறை கட்டிய புடவையை மறுமுறை கட்டமாட்டேன்’ என்று கூறும் காதலியைவிட்டு தலைதெறிக்க ஓடுவது, பாரிஸில் உதவியாளர் யோகிபாபுவுக்கு ‘பன்’னை மட்டுமே உணவாகக் கொடுப்பது, சகாக்களுக்கு சக்ஸஸ் பார்டி கொடுக்க, தாளிக்காத உப்புமா செய்து போட்டு, அவர்கள் அப்ரூவராக மாறும் அளவுக்கு வெறுப்பேற்றுவது என ஜுங்காவின் கஞ்சத்தனம், படத்தின் இறுதிகாட்சி வரை கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

சரண்யா, 87 வயது பாட்டி விஜயா, செட்டியாராக வரும் சுரேஷ் மேனன், போலீஸாக வரும் மொட்டை ராஜேந்திரன் என அனைவரின் பங்களிப்பும் சிறப்பு. நடிப்பு சொல்லும்படி இல்லாவிட்டாலும், டான்ஸில் ஈடுகட்டிவிடுகிறார் சாயிஷா. யோகிபாபு அறிமுகத்திலேயே அப்ளாஸ் அள்ளுகிறார்.

படம் முழுக்க அவரது காமெடி பஞ்ச்கள் நன்கு ஒர்க்அவுட் ஆகிறது. இரு காட்சிகளில் மட்டுமே வரும் ராதாரவிக்கு காட்ஃபாதர் கெட்அப்பும், அதில் அவர் மார்லன் பிராண்டோவின் உடல்மொழியை முயன்று பார்ப்பதும் கேலி கலந்த அழகு.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஓ.கே. டட்லியின் ஒளிப்பதிவில் பாரிஸ் நகரக் காட்சிகள் பிரமிப்பு!

படம் பார்க்க வரும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்பினால் போதும் என முடிவு கட்டிவிட்டதால், திரைக்கதையில் இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை போல. தேர்ந்தெடுக்கும் கதை, ஏற்கும் கதாபாத்திரத்தை நம்பகமாக வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றால் விஜய்சேதுபதி எனும் நடிகனின் படமாக மாறிவிடுவதால் குறைகளைத் தாண்டி ஈர்க்கிறது ‘ஜுங்கா’.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24545063.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.