Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!

Featured Replies

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!

 

'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார்.

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!
 

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விவகாரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு சிக்கலைத் தரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. 'இருவரும் ராஜினாமா செய்யவேண்டும்; சாதாரண மக்களாக இருந்தால், இதுபோல் செய்வீர்களா?' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பி.ஜே.பி-யிலும், ஓ.பி.எஸ்ஸூக்கு எதிராக அ.தி.மு.க-விலும் இப்பிரச்னை தொடர்பாக, உள்ளடி வேலைகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

மதுரையில் கடந்த வருடம் நடந்த அ.தி.மு.க. விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் திட்டமிட்டு பெயர்ப்பலகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் புறக்கணிக்கப்பட்டது, கட்சிக்குள் மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது, மதுரையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் ''இங்கு உள்ளவர்கள் எனக்கு முக்கியத்துவம் தராதது பற்றி கவலையில்லை. மத்திய அரசுக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அவர்கள் என்னைத்தான் முதலமைச்சராகப் பார்க்கிறார்கள். டெல்லி சென்றால் பிரதமர், மத்திய அமைச்சர்களை என்னால் உடனடியாகச் சந்திக்க முடியும்'' என்று பெருமையாகக் கூறினார். அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், ஜூலை 24-ம் தேதி டெல்லி சென்றபோது, அவரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அதை ட்விட்டரிலும் பதிவிட்டார். ஓ.பி.எஸ்ஸிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் மீது நிர்மலா சீதாராமன் கோபமாக இருக்கிறார். அவரைக் கூல் படுத்தலாமே என்று நினைத்து, 'தம்பியின் சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியதற்கு நன்றி சொல்ல வந்தேன்' என்று ஊடகத்தினருக்கு பன்னீர் அளித்த பேட்டியை, இவ்வளவு பெரிய விவகாரமாக்குவார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

 

 

'பேரிடர் காலத்திலும், போர்ச்சூழலிலும் மட்டுமே ராணுவத்திலுள்ள ஏர் ஆம்புலன்ஸ்களைப் பயன்டுத்த முடியும். தனி நபர்கள் பயன்டுத்திக்கொள்ள விதிகளில் இடமில்லை' என்று ஒரு தரப்பும், 'வி.ஐ.பி-க்கள் நினைத்தால், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அவசர நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி, மதுரைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்பது பற்றிப் பார்ப்போம்.

 

 

ஓ.பி.எஸ்ஸுக்கு ராஜா, பாலமுருகன், சண்முக சுந்தரம் என்று மூன்று தம்பிகள். இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன், அரசியல் கூட்டங்களில் தலைகாட்ட மாட்டார். விவசாயம், ஃபைனான்ஸ் என்று தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஓ.பி.எஸ்ஸுக்கு இவர் மீது மிகுந்த பாசம். சமீபகாலமாக இதயநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை கடந்த 1-ம் தேதியன்று மிகவும் சீரியஸானது. உடனே அவரை மதுரை அப்போலோவுக்குக் கொண்டுவந்தனர். அங்கு தீவிர சிகிசைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அன்று கட்சி நிகழ்ச்சியில் வெளியூரில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உடனே அப்போலோ சி.இ.ஓ. ரோஹினியிடம் பேசி, தன் தம்பிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓ.பி.எஸ். தம்பி, மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோருக்குத் தெரியாது. மதுரையிலுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் இரண்டு பேர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தனர். அதில் எஸ்.எஸ். சரவணன், எடப்பாடி அணிக்கு போய்விட்டார். மிச்சம் இருப்பது சோழவந்தான் மாணிக்கம் மட்டுமே. அதனால், மதுரையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று யாருமில்லை. அதனால் ஓ.பி.எஸ். தம்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல், அரசல் புரசலாக வெளியில் தெரிந்தும் கட்சி நிர்வாகிகள் யாரும் சென்று பார்க்கவில்லை.

இந்த நிலையில் பாலமுருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டு போனது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் அல்லது சென்னை அப்போலோவுக்குக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை மருத்துவர்கள் கூற, உடனே ஓ.பி.எஸ்., 'சென்னை அப்போலோவில் அட்மிட் செய்யுங்கள்' என்று கூறிவிட்டார். அதேநேரம், 'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார். இதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் குரங்கணி மலையில் தீ விபத்து ஏற்பட்டபோது, நிர்மலா சீதாராமனால் அனுப்பி வைக்கப்பட்ட விமானப்படையைச் சேர்ந்த மீட்பு ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதை நேரில் பார்த்திருந்தார். அதை நினைவில் வைத்தே, நிர்மலா சீதாராமனிடம் உதவி கோரினார். இதையடுத்து உடனே அதற்கு ஏற்பாடு செய்தார் மத்திய அமைச்சர். இந்த ஏற்பாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே தெரியாதாம். இது சம்பந்தமாக அவரிடம் எந்த உதவியும் ஓ.பி.எஸ். கோரவில்லை. 

 

 

ஓ.பாலமுருகன்

அன்று மாலை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பெங்களூரிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட அப்போலோவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் 20 நிமிடத்தில் விமான நிலையத்தின் பாதுக்காக்கப்பட்ட வழியாக ரன்-வேக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் பாலமுருகனின் குடும்பத்தினரும் சென்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ஒருவர் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல்முறை. இந்த விஷயம் விமான நிலைய அதிகாரிகளுக்குக் கடைசி நேரத்தில்தான் தெரியவந்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்ததால், எந்தக் கேள்வியும் கேட்காமல் சோதனையும் செய்யாமல் அனுப்பி வைத்தனர். "மிக முக்கியமானதாகக் கருதப்படும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்குக்கூட ராணுவ ஹெலிகாப்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை" என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். 

ராணுவ ஹெலிகாப்டரில் ஓ.பி.எஸ். தம்பி கொண்டு செல்லப்பட்ட விவகாரம், அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். ஓ.பி.எஸ் உடன் முறைத்துக் கொண்டிருந்த மற்றொரு தம்பி ஓ.ராஜா கூட அதன் பின்னர் அவருடன் ராசியாகி விட்டாராம். சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்ட பாலமுருகனை, எடப்பாடி, உட்பட அமைச்சர்கள் வந்து பார்த்தபோதுதான், அவரை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வந்ததை ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ். நேரடித் தொடர்பு வைத்திருப்பதைப் பார்த்து, அப்போதே அதிர்ந்திருக்கிறார் எடப்பாடி. தம்பியின் உடல்நிலை ஓரளவு தேறிவந்த நிலையில்தான், இதுவரை பாதுகாத்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் ரகசியத்தை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

https://www.vikatan.com/news/politics/132328-opaneerselvam-opens-up-about-military-ambulance-issue.html

  • தொடங்கியவர்

எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!

 
 

 

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்பதை, ஜூலை 23-ம் தேதி மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உணர்த்தியிருக்கிறது.

‘பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி போகிறார் பன்னீர். முக்கியமான சந்திப்புகளை நிகழ்த்துகிறார்’ என்ற செய்திகளை, அவர் விமானம் ஏறுவதற்கு முன்பாகவே சேனல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. அடுத்தடுத்து ரெய்டுகள் நடந்த சூழலில் பன்னீர் டெல்லி கிளம்பியதால், முதல்வர் எடப்பாடிக்கும் அவருக்குமான மோதல் குறித்த தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால், ‘‘டெல்லியில் பன்னீரை அவமானப்படுத்த இதைச் சரியான சந்தர்ப்பமாக எடப்பாடி பயன்படுத்திக் கொண்டார்’’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.

ஜூலை 23 திங்கள்கிழமை இரவு கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சகிதமாக டெல்லி வந்த பன்னீரை, முதல்வருக்கு இணையாக விமான நிலையத்திலேயே மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி-க்கள் மலர்க்கொத்துகளுடனும் சால்வைகளுடனும் வந்து வரவேற்றனர். நேராக தமிழ்நாடு இல்லம் வந்தவர், இரவு விருந்துக்கு மைத்ரேயன் வீட்டுக்குச் சென்றார். அன்று வேறு எந்தச் சந்திப்புகளும் நடைபெறவில்லை. ‘‘அமித் ஷாவைச் சந்திப்பதாக எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ‘பன்னீரைப் பார்க்க அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் வதந்தி கிளப்பினார்கள்’’ என்று பன்னீர் ஆதரவு எம்.பி-க்கள் சிலர் புலம்பினர்.

p6a_1532689429.jpg

மறுநாள் காலையில் தம்பிதுரையும், வேறு சில எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு முன், தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து பன்னீரைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். காலையிலேயே, ‘‘பிற்பகல் 2.30 மணிக்குப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை பன்னீர் சந்திக்கவிருக்கிறார்’’ என்பது செய்தியாளர்களுக்குச் சொல்லப்பட்டது. ‘எதற்காக இந்தச் சந்திப்பு’ என்று டெல்லி செய்தியாளர்களுக்குக் கேள்வி எழ, அதற்கு விடை சென்னையில் கிடைத்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டிக்கு ‘ஜெயா’ எனப் பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி, எதிர்பாராதவிதமாக நிருபர்களைச் சந்தித்தார். பன்னீரின் டெல்லி விசிட் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காகவே காத்திருந்ததுபோல பதில் சொன்னார் எடப்பாடி. ‘‘துணை முதல்வர் டெல்லிக்குத் திடீரென்று போகவில்லை. அவர் தம்பி உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் இருந்தபோது, உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்னை மருத்துவமனையில் அவரைச் சேர்க்க உதவினார், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்கு நன்றி தெரிவிக்கவே அவர் டெல்லி சென்றிருக்கிறார்’’ என்றார் எடப்பாடி.  

இதற்கிடையே தமிழ்நாடு இல்லத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு நிர்மலா சீதாராமனைச் சந்திக்கப் புறப்பட்டார் பன்னீர். எடப்பாடி பிரஸ்மீட் விஷயம் அப்போது பன்னீருக்குத் தெரிந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு இல்ல வாசலில் இருந்த செய்தியாளர்கள், ‘‘எதற்காக இந்தச் சந்திப்பு என இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் செல்லுங்களேன்’’ என்று கேட்டபோது அவர் மறுக்கவில்லை. ‘‘இது அரசு முறை சந்திப்பு இல்லை. தனிப்பட்ட சந்திப்பு. என் தம்பிக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கி உதவியதற்கு நன்றி சொல்லவே வந்தேன்’’ என்று சொல்லி விட்டு நேராகப் பாதுகாப்பு  அமைச்சகத்துக்குச் சென்றார். ‘யார் யார் அமைச்சரைச் சந்திக்க வருகிறார்கள், எந்த எண் கொண்ட வாகனங்களில் வருகிறார்கள்’ என்பதை நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே மைத்ரேயன் தரப்பிலிருந்து வழங்கியிருந்தனர். இதனால் அவர்கள் சென்ற வாகனங்கள் சோதனைக்குப் பின் உடனே அனுமதிக்கப்பட்டன. அப்போது மணி பிற்பகல் 2.15. ஓ.பி.எஸ், மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரவேற்பறையில் உட்காரவைக்கப்பட்டனர். 10 நிமிடங்கள் கழித்துத் தன் அலுவலகத்துக்கு நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அப்போதே கோபமாக இருந்த அவர், தன் உதவியாளர்களுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். உடனே அமைச்சரக அதிகாரி ஒருவர், தமிழக செய்தியாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் கூறியிருந்த விவரங்களைக் கேட்டிருக்கிறார். அந்தச் செய்தியாளர் உடனே பேட்டியை வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அடுத்த 40 நிமிடங்களில், ‘ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க நேரம் வழங்கவில்லை. மைத்ரேயனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது’ என்று நிர்மலா சீதாராமன் அலுவலகத்திலிருந்து ட்விட்டரில் தகவல் வெளியான பின்னர்தான், அனைவரும் பரபரப்பானார்கள். என்ன என்று விசாரித்தபோது தான், ஏர் ஆம்புலன்ஸ் வழங்கியதை வெளிப்படை யாக ஓ.பி.எஸ் போட்டு உடைத்ததுதான் காரணம் என்று தெரியவந்தது.

p6sss_1532689514.jpg

முதல்வர் சென்னையில் அளித்த பேட்டியும், ஓ.பி.எஸ் அளித்த டெல்லி பேட்டியும் நிர்மலாவுக்கு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த நிர்மலா, பன்னீரைச் சந்திக்க மறுத்து, மைத்ரேயனை மட்டும் தன் அறைக்கு அழைத்திருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் இருந்த நிர்மலா, ‘‘ஏதோ அவசரத்துக்கு உதவி செய்தால், அதை இப்படியா அம்பலப்படுத்துவது? இதனால், நாளை எனக்குப் பிரச்னை வரும் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்களாவது சொல்லக் கூடாதா? நாளை ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ யாரேனும் இதேபோன்று உதவி கேட்டு, என்னால் உதவ முடியாமல்போனால், என்மீது விமர்சனங்கள் வராதா? நான் பன்னீரைப் பார்க்க விரும்பவில்லை. அவரிடம் சொல்லிவிடுங்கள்’’ என்று 10 நிமிடங்களுக்கு மேல் மைத்ரேயனை வறுத்தெடுத்து விட்டாராம்.

சோகமாக வெளியே வந்த மைத்ரேயன், நடந்தவற்றை பன்னீரிடம் சொல்லியிருக்கிறார். அதற்குள் நிர்மலாவின் ட்வீட் வெளியானது. ஒரு செய்தி சேனலில், நிர்மலாவை பன்னீர் சந்தித்ததாகச் செய்தி வெளியாக, அதை மறுத்தும் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் ட்வீட் வெளியிட்டது. இதிலிருந்தே நிர்மலாவின் கோபம் வெளிப்படை யாகத் தெரிந்தது. ‘‘இந்தச் சங்கடத்துடன் தமிழ்நாடு இல்லம் செல்ல வேண்டாம். நேராக விமான நிலையம் சென்றுவிடலாம்’’ என்று ஓ.பி.எஸ் கூற, கார் நேராக டெல்லி விமான நிலையம் சென்றது. மாலை 5.30 மணிக்குத்தான் விமானம் என்றாலும், 4 மணிக்கே அங்கு சென்று காத்திருந்தனர். 

மறுநாள் மக்களவை அ.தி.மு.க குழுத் தலைவர் வேணுகோபாலைச் சந்தித்தபோதும், அவரிடமும் ஓ.பி.எஸ் மீதான தன் வருத்தத்தை நிர்மலா வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போது, ‘நிர்மலா சீதாராமனின் கோபத்தைத் தணிக்க என்ன செய்வது’ என்ற யோசனையில்தான் இருக்கிறார் பன்னீர்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

அந்நாளில் பிரதமராயிருந்த இந்திரா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக அவரது தேர்தல் செல்லாது என அலகாபாத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார் (பின்னர் அத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று , அவசரநிலைப் பிரகடனம் செய்து பேயாட்டம் போட்டது வேறு கதை) . அரசு இயந்திரத்தைச் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்வதில் இவர்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை என்பது ஒரு விடயம். நிர்மலா சீதாராமனைப் பொறுத்தமட்டில் இன்னொரு விடயம் 

'நன்றாற்றலுள்ளும் தவறுண்டாம்

அவரவர் 

பண்பறிந்தாற்றாக் கடை' எனும் குறளை மறந்தமை.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.