Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடந்த நளபாகம்

Featured Replies

நான் கடந்த நளபாகம்

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கடைகளுக்குச் சென்று உணவு உண்ணுவது, அதுவும் குடும்பமாகச்சென்று உணவுண்ணுவது மிக அரிதானதொன்றாகவே இருந்துவந்தது. அது மரியாதைக்குறைவாகவும் பார்க்கப்பட்டது. தெருவுக்குத் தெரு இருக்கின்ற சாப்பாட்டுக்கடைகள் பெரிதும் ஆண்களின் ராஜ்ஜியமாகவே இருந்தன. அதுவும் அசைவம் பரிமாறுகின்ற கடைகளில் என்றால் அரிது அரிதிலும் அரிதாகிவிடும். வேலைக்குச் செல்லும் பெண்களை அவர்களது அலுவலகங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற தேநீர்ச்சாலைகளில் சிலசமயங்களில் காணமுடியும். குளிர்பானசாலைகளில் ஓரளவுக்கு பெண்களைக் காணலாம். மற்றும்படி கடைச்சாப்பாடோ அல்லது கடையில் சென்று சாப்பிடுவதோ தேவையின் காரணமானதாக அமைந்ததே அன்று, கொண்டாட்டமாக அமையவில்லை. கடை உணவு என்று மாத்திரமல்ல உணவு என்பதைக் கொண்டாட்டமாக அணுகும் வழக்கம் குறைவானதாகவே இருந்தது. புலம்பெயர் நாடுகளில் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடிகட்டியதாக சொல்லப்படும் ஈழத்தமிழர்கள் “தமிழ்உணவுகளை” பரிமாறும், அமர்ந்து உணவு உண்ணக்கூடிய உணவு விடுதிகளில் (Restaurant) சொல்லிக்கொள்ளும்படியான எந்த வெற்றியையும் பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே.

ஆனைக்கோட்டை என்றவுடன் புகழ்பெற்ற ஆனைக்கோட்டை நல்லெண்ணை அனேகம்பேருக்கு நினைவுவரும். ஆனைக்கோட்டைக்கு சென்று அங்கே மூத்த விநாயகர் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள குளத்துடன்கூடிய சிறியகடையில் வடை சாப்பிட்டவர்களுக்கு ஆனைக்கோட்டை என்றாலே வடைக்கடை தான் ஞாபகம் வரும். மிகச் சிறியகடை. அங்கே தாமரை இலையில் தான் வடையைப் பரிமாறுவார்கள். எப்போது போனாலும் சுட்ட வடையை கொண்டுவந்த வெளியில் இருக்கும் கண்ணாடி அலுமாரியில் தூக்கிக் கொட்டியபடியே இருக்கும் ஒரு கடைவேலையாளைக் காணக்கூடியதாக இருக்கும். வடையுடன் சட்டினியும் பரிமாறப்படும். ஒரு வடை 5 ரூபாய் என்றும், தேநீர் 3 ரூபாய் என்றும் நினைவு. நண்பர்களாகச் சென்று சாப்பிடுவோம். ஒருமுறை பந்தயம் வைத்து தெய்வீகன் என்ற நண்பன் 20 வடைக்கு மேலாக சாப்பிட்டதாக ஞாபகம். அதுவரை எம்மால் மறக்கமுடியாத கடையாக இருந்தவர்கள் அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களுக்கு மறக்கமுடியாதவர்களாக நாங்களும் மாறிப்போனோம். அருமையான இட்லி செய்வார்கள் என்றும் நினைவிருக்கின்றது. அப்போது சிறுவர்களாக இருந்த நாம் அங்கே சென்று சாப்பிடும்போது தயிர்வடையை விரும்பிச் சாப்பிடுவோம். தயிர் வடை சாப்பிட்டுவிட்டு தேநீர் கேட்டால், கடையில் இருக்கும் ஐயா பால் கலக்காத வெறுந்தேநீர் மாத்திரம் தருவார். தயிர்வடை சாப்பிட்டுவிட்டு பால் கலந்த தேநீர் அருந்தினால் வயிற்றுக்கோளாறு வருமாம்.

இளையதம்பி போசனசாலை என்றொரு கடை மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்தது. அசைவ உணவுகளும் பரிமாறுவர். தற்போது சரியாக நினைவில் இல்லாத ஏதோ காரணங்களால் சிறுவயதில் ஓரிரு தடவைகள் அங்கு சென்று மீன் சாப்பாட்டுப் பார்சல்கள் வாங்கியிருக்கின்றேன். வாடிக்கையாளார்களுக்கு என்ன உண்ணக் கொடுக்கின்றோம் என்பதில் அக்கறைகொண்டவர்கள் கடையை நடத்திய தம்பதியினர். ஒருநாள் நான் உணவு தயாராவதற்காகக் காத்திருந்தபோது ஒரு நடுத்தர வயதினர் உணவுவாங்க வந்தார். தனக்கு நீரிழிவு இருப்பதாகவும், சில கறிகளை பார்சலில் கட்டவேண்டாம் என்றும் கூறினார். அவரை சில நிமிடங்கள் பொறுக்கும்படி கூறிவிட்டு, உடனேயே முருங்கையிலையை கடகடவென வெட்டி கண்முன்னாலேயே வறை செய்துகொடுத்தார் உரிமையாள பெண்மணி. அவர் விறுவிறுவென முருங்கையிலையை வெட்டியதும், வேகவேகமாக வறையைச் செய்துமுடித்ததும் இப்போதும் எனக்குள் காட்சிப்படமாக இருக்கின்றது. அந்தக் கடைபற்றிய என் இறுதி நினைவு இதுவாக இருந்து 95ம் ஆண்டு இடம்பெற்ற ஷெல்தாக்குதலில் அந்தக் கடை பலத்த சேதமடைந்ததென்ற செய்தியை நான் அறியாமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

“மிதிவெடி” என்றொரு சிற்றுண்டி. ஈழத்திற்கே பிரத்தியேகமானது. ஈழத்தமிழர்களால் புலம்பெயர் நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. எனக்குத் தெரிந்து இதனை தயாரித்த முதல் கடை ஆனைக்கோட்டையில் இருந்த “சும்மா டீ ரூம்” என்ற கடையினர். சும்மா டீ ரூம் என்ற கடையும் அதற்கடுத்ததாக ஒரு மதுபானசாலையும் இருக்கும். ஒரே உரிமையாளர்கள் என நினைக்கின்றேன். அதனால் அப்போது சிறுவர்களான எனக்கும் பிரசன்னா என்ற என் நண்பனுக்கும் அங்கே சென்று உண்பதில் ஒரு சின்ன “த்ரில்”. மிதிவெடி என்றால் மதிய உணவுக்காக தயாரிக்கப்பட்ட அசைவ உணவுகள் அனைத்தையும், குறிப்பாக கணவாய், இறால், மீன், இறைச்சி வகை என்பவற்றுடன் அவித்த முட்டையின் ஒருபங்கும் சேர்த்து “கட்லட்” செய்யும் நுட்பத்துடன் ஆனால் சற்று தட்டையான உருளை வடிவில் பொறித்து வைத்திருப்பார்கள்.

92-93ம் ஆண்டுகளில் உருளைக்கிழங்கிற்கு பொருளாதாரத்தடை காரணமாக பெரும்பற்றாக்குறை நிலவியது. இறைச்சிகளை விட விலை கூடியதாக உருளைக்கிழங்கு இருந்திருக்கும் என நினைக்கின்றேன். சில கடைகளில் “இன்றைய ஸ்பெசல் உருளைக்கிழங்குக் கறி” என்ற விளம்பரப் பலகைகள் இருப்பதைக் கண்டிருக்கின்றேன். சோபிதா புத்தக நிலையத்தைக் கடந்து கஸ்தூரியார் வீதியால் செல்லும் வழியில் ஒரு கடையில் “இங்கே உருளைக்கிழங்கு கறியுடன் மசாலா தோசை கிடைக்கும்” என்ற அறிவிப்பைக் கண்டதும் ஞாபகம் இருக்கின்றது. மசால் தோசை என்றவுடன் உடனே நினைவுவரும் இன்னொரு கடை தாமோதரவிலாஸ். தெருவோரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு ஓடையால நடந்துபோகவேண்டும். உள்ளே மிக பிரபலமான மரக்கறி உணவுக்கடை. சிறுவயதில் அப்பாவுடன் பலதடவைகள் அங்கே சென்றிருக்கின்றேன். அனேகம் மசால்தோசையும் தயிர்வடையும் சாப்பிடுவோம். வீடு திரும்பும்போது கார முறுக்கும், பூந்தி முறுக்கும் வாங்கிச்செல்லுவோம். வேறு கடைகளுக்குப் போகின்றபோது என்னவேண்டும் என்று கேட்டு வாங்கித்தருவார் அப்பா. தாமோதரவிலாசில் மாத்திரம் அவர் கேட்டு நாம் ஒன்றும் வேண்டாம் என்றாலும் இவற்றை வாங்கித்தருவார். தாமோதரவிலாஸ் போல பிரபலமாக இருந்த இன்னும் இரண்டு உணவகங்கள் மலாயன் கபேயும், சரஸ்வதி விலாஸ் என்ற கடையும். மலாயன் கபேயில் அதிகம் சாப்பிட்டதில்லை. சிறுவயதில் ஒருமுறை பெரியப்பாவும் பெரியம்மாவும் மலாயன் கபே கோழி வாங்கிவந்துள்ளதாக சொன்னார்கள். நானும் கொழும்பு சென்றிருந்தபோது அங்கு தெருக்களில் முழுக்கோழியை அப்படியே வாட்டி விற்பதைக் கற்பனையில் நிறுத்தி அதுபோல ஒரு கோழி என்று நினைத்திருந்தேன். கடைசியில் அவர்கள் ஒரு சிறிய காகிதப் பையைத் தந்தார்கள். திறந்துபார்த்தபோது உள்ளே மஞ்சளாக என்னவோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, அவர்கள் மலாயன் கபே போளி என்று சொன்னதை நான் கோழி என்று நினைத்துக்கொண்டிருந்துவிட்டேன் என்று. ஆனால் சரஸ்வதி விலாசிற்கு 96ம் ஆண்டு “ட்யூசன்” காரணமாக தொடர்ந்து சென்றுள்ளோம். வடைக்குப் பிரபலமான இன்னுமொரு கடை. அங்கே வடைக்கு அதிகாலை 4 மணி முதலே மா அரைப்பதாக ஒரு நண்பன் சொல்வான். இல்லை இல்லை, இரண்டு மணிக்கே ஆயத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்று இன்னொரு நண்பன் சொல்வான். வடையை சட்னியில் குளிப்பாட்டி உண்டபடியே இது பற்றி ஆராய்ந்து கொள்வோம். கடையில் ஒரே ஒரு பிரச்சனை, இலையில் ஏதாவது உணவு மிச்சம் வைத்தால் கடையில் மேற்பார்வையாளராக இருந்த ஐயா திட்டத்தொடங்கிவிடுவார். அதற்கும் ஒரு வழி பிடித்தோம். அவரிடம் தண்ணீர் கொண்டுவரும்படியோ அல்லது “பில்” கொண்டுவரும்படியோ கேட்போம். அவர் எம்மைவிட்டு நகர்ந்ததும் மின்னல் வேகத்தில் எல்லா இலைகளையும் தூக்கி எறிந்துவிடுவோம்.

இதுபோல கொக்குவிலில் நந்தினி பேக்கறி என்று பேக்கறி இருந்தது. அப்போது கொக்குவில் எடிசனில் படித்துக்கொண்டிருந்த நாம் மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது அங்கே சுடச் சுட பாண் தயாராகி அந்த நறுமனம் அவ்விடம் முழுவதும் பரவிவிடும். அங்கே “ரோஸ்” பாணும், வாழைப்பழமும் வாங்கிக்கொள்ளுவோம். அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருக்கவில்லை. அதனால் அஸ்ட்ரா மாஜரின் சிறிய பக்கற்றுகளில் வரும். விலை 7 ரூபாய். அவற்றை தண்ணீருக்குள் போட்டு வைத்திருப்பார்கள். அப்படியானால் மாஜரின் உருகி திரவமாகாது மாஜரினுக்குரிய கெட்டித்தன்மையுடன் இருக்கும். அவற்றிலும் சிலவற்றை வாங்கிக்கொண்டு ஆனைக்கோட்டையில் இருக்கின்ற மண்பிட்டிகள் நோக்கிச் செல்லுவோம். சுடச்சுட இருக்கின்ற ரோஸ் பாணை குறுக்காக இரண்டாகப் பிளந்து அதற்குள் அஸ்ரா மாஜரினை அப்படியே இடுவோம். பாணின் சூட்டில் மாஜரின் உருகி பாணுக்குள் ஊறும். அதனை வாழைப்பழத்தையும் கடித்துக்கொண்டு உண்டபடியே வெட்டிக் கதைகள் முதல் பின்னாளில் காவியங்களாகப்போகும் பல காதற்கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம். இந்தக் கதைகளை மறைந்திருந்த யாராவது கேட்டிருந்தால் இயக்குனர் விக்கிரமனிற்கு ஏற்ற சில காதல் கதைகளும், 90களில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் சிலவற்றுக்கான வசனங்களும் இலவசமாகக் கிடைத்திருக்கும்.

தாவடிச் சந்தியில் அப்போது ஒரு கொத்துரொட்டிக்கடை இருந்தது. பிளாஸ்ரிக் உணவுத்தட்டுகளில் “சொப்பிங் பை” ஒன்றினையோ அல்லது சாப்பாட்டுப் பொதிகட்டும் பொலித்தீன் பேப்பர் ஒன்றினையோ போட்டு அதன்மேல் கொத்துரொட்டியைப் பரிமாறுவார்கள். முட்டைக்கொத்து 15 ரூபாய் என்றும், ஸ்பெசல் கொத்து 25 ரூபாய் என்றும் நினைவு. அதுபோல பின்னர் உயர்தர வகுப்பில் படிக்கும்போது சயன்ஸ் ஹாலிற்கு அருகில் இருக்கின்ற ஒருகடையிலும் ரொட்டியும் “மாட்டு ரோஸ்” உம் உண்போம். கடையில் போய் மாட்டு ரோஸும், ரொட்டியும் சாப்பிட்டாலே ஒரு “கெத்தான” உணர்வு வரும் (இப்போது பரோட்டா என்றே யாழ்ப்பாணத்திலும் அழைக்கப்படுகின்றது ஆனால் அப்போது ரொட்டி என்றே அழைக்கப்பட்டது). இவ்வாறு கடைகளில், அதுவும் சிறுவர்கள் அசைவ உணவகங்களில் உணவுண்பது எல்லாம் கலகம் செய்வதாகப் பார்க்கப்பட்ட காலம் அது.

அதுபோல கொக்குவில நாச்சிமார் கோவிலடி தாண்டிச்செல்பவர்கள் அனேகம் தவறவிட்டிருக்கமுடியாத ஒருவர் நாச்சிமார்கோவிலுக்கு எதிராக சிறிய மோர்க்கடை வைத்திருப்பவர். மோர் ஒன்றினை அவர் தயாரிப்பதே அவ்வளவும் அழகாக ரசிக்கக்கூடியதாக இருக்கும். சிறிய சிறிய கண்ணாடிப்போத்தல்களில் ஊறவிட்ட வெந்தயம், தண்ணீரில் ஊறவிட்ட ஊறுகாய், வெட்டிய சிறுவெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், உப்புக்கரைசல் என்பவற்றை வைத்திருப்பார். மோர் கேட்டால் கண்ணாடிக் குவளையை எடுத்து நன்றாக துடைப்பார். பின்னர் நிதானமாக ஒவ்வொரு கரைசல்களில் இருந்தும் கரண்டியால் எடுத்து கண்ணாடிக்குவளையில் ஊற்றுவார். அதன் பிறகு குவளை நிரம்பும் வரை மோரை ஊற்றித் தருவார். ஐந்தே ஐந்து ரூபாய் என்று ஞாபகம்.

உணவு என்பது இன்றுவரை எனக்கு ரசனைபூர்வமாக அணுக்ககூடிய ஒன்றாகவே இருக்கின்றது. நான் உண்ட அனேகமான நல்ல உணவுகளை தயாரித்தவர்களை விசாரித்துச் சென்று பாராட்டியிருக்கின்றேன். அவர்கள் அந்த உணவை எப்படி ஆக்கினார்கள் என்று குறிப்புகளைக் கேட்டிருக்கின்றேன். பின்னொருநாளில் அதை எவ்விதம் வீட்டில் எனக்குப் பிடித்தவர்களுக்குச் செய்துதர முயன்றிருக்கின்றேன். ரொரன்றோவில் எனக்குப்பிடித்த தமிழ் உணவகங்களின் சமையல் கலைஞர்களை என் திருமணவரவேற்பு விழாவிற்கு அழைத்து மகிழ்ந்திருக்கின்றேன். அவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை வைத்திருக்கின்றேன். எனக்குப்பிடித்த இலக்கியப் படைப்பொன்றைச் செய்தவரையும், எனக்குப்பிடித்த திரைப்படங்களின் இயக்குனர்களையும் கொண்டாடுவதுபோல எனக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்தவர்களையும் கொண்டாடிய்யிருக்கின்றேன். என் வாழ்வில் இனிமையான பல பொழுதுகளை உருவாக்கியவர்கள் அவர்கள். கலைஞர்கள். படைப்பவர்கள். அதனால் அவர்களும் இறைவர்கள்.

https://arunmozhivarman.com/tag/ஆனைக்கோட்டை-வடைக்கடை/

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.