Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

Featured Replies

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

 

 
vijaya-1jpg

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் - கோப்புப் படம்

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவ ராவ் உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர்.

   
 

இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்ததாக கூறப்பட்டது.

panmasalajpgjpg
 

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்குச் சென்றது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் டில்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக சென்னையில் உள்ள உணவு மற்றும் பாதுகாப் புத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் மாதவராவிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாதவராவ் சில தினங்களுக்கு முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Rajendran%20Housejpg

சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரனின் வீடு

 

விசாரணையில், குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்துள்ளனர். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யும் நோக்கத்துடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடர்பாளர் தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறுகையில் ‘‘குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் காலை முதல் சோதனை செய்து வருகிறோம்’’ என கூறினார்.

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு நெருக்கமான முன்னாள் மற்றும் தற்போதைய காவல்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், சில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

https://tamil.thehindu.com/tamilnadu/article24869769.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • தொடங்கியவர்

குட்கா ஊழல் முறைகேடு; விசாரணை தொடரும், சோதனை நிறைவு: சிபிஐ

 

 
Evening-Tamil-News-Paper78003656865

விஜய்பாஸ்கர், ராஜேந்திரன், ஜார்ஜ்- கோப்புப் படம்

குட்கா முறைகேடு விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி டிகேஆர், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. விசாரணை மேலும் தொடரும் என்று சிபிஐ ரெய்டுக்குப் பிறகு தெரிவித்துள்ளது.

குட்கா முறைகேடு குறித்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் முறையாக விசாரணை நடக்காததால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 அன்று குட்கா முறைகேட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

 

இதையடுத்து சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து இன்று காலை சிபிஐ சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2011 முதல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2013-ல் குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வர்த்தகத்தை சட்ட விரோதமாகத் தொடர்ந்ததாக அம்பலமானது.

இன்றைய ரெய்டில் தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளான ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், ஷேஷாத்ரி, விற்பனை வரித்துறையைச் சேர்ந்த பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், ஜேஎம் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களான ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாலையுடன் நிறைவுப்பெற்றதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் விசாரணை தொடரும் என்று தெரித்துள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24873885.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • தொடங்கியவர்

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் 25 மணி நேரம் சிபிஐ சோதனை; அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன்?

 

 
Evening-Tamil-News-Paper78003656865

விஜயபாஸ்கர், ராஜேந்திரன், ஜார்ஜ்- கோப்புப் படம்

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். அவர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனை நடத்தியதையடுத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

 

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி குட்கா ஊழல் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள்காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் மத்திய, மாநில அதிகாரிகளின் வீடுகள் உட்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

சென்னை நொளம்பூரில் வசிக்கும் முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். முதலில் 5 அதிகாரிகள் மட்டுமே சோதனை நடத்தினர். மதியத்துக்கு பின்னர் மேலும் 2 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி வரை இந்த சோதனை நீடித்தது. 25 மணி நேரம் சோதனை நடத்தி முடித்துவிட்டு வெளியே சென்ற சிபிஐ அதிகாரிகள், 2 பைகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

இதேபோல முகப்பேரில் உள்ளடிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டில் இருந்தும் ஏராளமான சொத்துஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. புழலில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது தூத்துக்குடியில் ஆய்வாளராக இருக்கும் சம்பத்குமாரின் வீடு, சென்னை ராயபுரத்தில் உள்ளது. இந்த வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு சோதனையை முடித்து சென்ற அதிகாரிகள், வீட்டை பூட்டி சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.

குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவை, சிபிஐ அதிகாரிகள் அப்ரூவராக மாற்றியுள்ளனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் பெயர்களை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. குட்கா விவகாரத்தில் மாதவ ராவ் உட்பட 7 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ள நிலையில், மேலும் 22 பேரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர். இதில், மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார் உட்பட பல அதிகாரிகள் உள்ளனர்.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில்கூற மறுத்துவிட்டனர்.

 டிஜிபி மாற்றமா?

தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்ததும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது சிபிஐ சோதனை குறித்த விவரங்களை தெரிவித்ததாகவும், தன்னை டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது கோரிக்கை

ஏற்கப்பட்டு, டிஜிபி மாற்றம் செய்யப்பட்டால் அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் உள்ளனர். இதில் ஜே.கே.திரிபாதி டிஜிபியாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24889493.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • தொடங்கியவர்

"நான் டி.ஜி.பி. ஆவதை தடுக்கவே குட்கா விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது": ஜார்ஜ்

ஜார்ஜ் Image captionபத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ்

தானோ, டி.கே. ராஜேந்திரனோ காவல்துறை தலைவராவதைத் தடுக்கவே குட்கா ஊழல் விவகாரத்தில் தங்களை சம்பந்தப்படுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டன என சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை ஜார்ஜின் வீட்டில் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா என்ற பாக்கிற்கு தடைவிதிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். அந்த காலகட்டத்தில் சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா கிடங்கு ஒன்றில் மிகப் பெரிய சோதனை நடத்தப்பட்டது. இதற்கு பிறகு இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானவரித் துறை எம்டிஎம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவின் இருப்பிடங்களில் நடத்திய சோதனையில், அவரது நாட்குறிப்பு சிக்கியது. அதில் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அந்தத் தருணத்தில் மூன்றாவது முறையாக சென்னை நகர ஆணையரான ஜார்ஜ் குட்கா முறைகேடு குறித்து அதிகாரிகள் சிலர் பெயரைக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.

 

 

இந்த நிலையில், தி.மு.க. தொடர்ந்த வழக்கை அடுத்து குட்கா ஊழல் விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரு நாட்களாக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து தன் தரப்பைத் தெரிவிப்பதற்காக முன்னாள் காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறினார் ஜார்ஜ்: "சட்டமன்ற உறுப்பினரான அன்பழகன், குட்கா விவகாரம் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். குட்கா தயாரிப்பாளர்களால் காவல்துறை ஆணையருக்கு 21.4.2016, 20.05.2016, 20.06.2016 ஆகிய மூன்று தேதிகளில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் நான் காவல்துறை ஆணையராக இருக்கவில்லை. சென்னையின் காவல்துறை ஆணையராக இருந்த நான், கால்பந்து விவகாரத்தால் 10.10. 2015 ஆன்று இடமாற்றம் செய்யப்பட்டேன். மீண்டும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிதான் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டேன்.

அந்த நேரத்தில் ஆணையராக இருந்தவர் மீது நான் குற்றம்சாட்டவில்லை. அன்பழகனின் மனுவில் நான் அந்த நேரத்தில் ஆணையராக இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்லவருகிறேன்.

குட்கா விவகாரம்படத்தின் காப்புரிமைMAIL TODAY

எதிர்கட்சியின் வழக்கறிஞராக இருந்த வில்சன் இதைப் புரிந்துகொண்டிருக்கலாம். அதனால், அவருடைய மனுவில் என் பெயர் இடம்பெறவில்லை. சி.பி.ஐயின் முதல் தகவல் அறிக்கையைப் பார்த்தாலே அது புரியும். பாரா 34ல் வில்சனின் வாதம் இடம்பெற்றிருக்கிறது. அதில் அவர் ஒரு கடிதத்தை மேற்கோள்காட்டியிருக்கிறார். அடுத்து வந்த காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் உள்துறைச் செயலருக்கு எழுதிய கடித்தின் அடிப்படையில் முதல்கட்ட ஆதாரம் இருப்பதாக வில்சன் அதில் சொல்கிறார். அதாவது, அடுத்த வந்த ஆணையர் என்கிறார்.

2016ல் நான் மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். அந்தத் தருணத்தில் குட்கா ஊழல் குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தன. ஆணையர் மட்டத்தில் மூத்த அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அந்தத் தருணத்திலேயே அரசுக்கு இதைப் பற்றித் தெரியும்; இது தொடர்பாக உயர் மட்டத்தில் விவாதம் நடந்திருக்கிறது, முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதையும் நான் அறிந்தேன். ஆனால், விசாரணை எதற்கும் உத்தரவிடப்படவில்லை.

இந்த காலகட்டத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அந்தத் தருணத்தில் மாநகர ஆணையராக இருந்த நான், சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவிவரும் இந்த வதந்திகளையும் தவறான செய்திகளையும் நிறுத்த ஏதாவது விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நினைத்தேன். அந்தத் தருணத்தில் ஆணையர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்ததால், நானே விசாரணைக்கு உத்தரவிட்டால் சரியாக இருக்காது என நினைத்தேன்.

ஆகவே, வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தினால் நன்றாக இருக்குமென நினைத்தேன். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு ஒரு அறிக்கை அளித்தேன். அவை ஊடகங்களில் வந்துவிட்டன.

 

 

இதற்கு முன்பாக ஒரு ஆரம்பகட்ட விசாரணை நடத்தினேன். உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருந்த விமலாவை அழைத்து விசாரித்தேன். அவர் அதற்கு முன்பாக மாதாவரம் பகுதியின் துணை ஆணையராக பல நாட்கள் பணியாற்றியவர். அவர் ஒரு நல்ல அதிகாரி. "நீங்கள் நீண்ட காலம் துணை ஆணையராக இருந்தவர். உங்களுக்கு எப்படி குட்கா விவகாரம் குறித்து தெரியாமல் போனது?" என்று கேட்டேன். அவர் தெரியாது என்று பதிலளித்தார்.

விமலா அளித்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: 'நான் உளவுப் பிரிவின் துணை ஆணையராக 20.8.2015ல் செயல்பட ஆரம்பித்தேன். அதற்கு முன்பாக, மாதாவரம் காவல் மாவட்டத்தில் பணியாற்றினேன். அப்போது மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செங்குன்றத்தில் உள்ள தீர்த்தங்கரையம்பட்டுவில் சோதனை ஒன்றை மேற்கொண்டனர். அங்கிருந்த பான் மசாலா பொருட்களைக் கைப்பற்றினர். நான் அங்கு புழல் பகுதியின் இணை ஆணையர் மன்னர் மன்னுடன் சென்றேன். ஆய்வாளர் சம்பத்தும் உடன் வந்தார். இது 2014 ஜூன் எட்டாம் தேதி நடந்தது. அந்த நேரத்தில் மத்தியக் குற்றப் பிரிவின் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமாரும் அங்கு வந்தார்.

அந்த கிடங்கில் பாக்குப் பொடி, எலக்காய், கிராம்பு போன்ற பொருட்கள் இருந்தன. இதைக் கலக்க சிறிய எந்திரங்களும் இருந்தன. புகையிலைப் பொருட்கள் எதையும் நான் பார்க்கவில்லை. இது குறித்து தன் உயரதிகாரிகளுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் (திருவள்ளூர்) அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியான சிவகுமார் அங்கு வந்து அந்தப் பொருட்கள் தடைசெய்யப்பட்டவையா என ஆராய்ந்தார்.

அதில், அந்த பொருட்கள் பான் மசாலா தயாரிக்க ஏற்றவை என சான்றிதழ் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது என அறிக்கை அளிக்கப்பட்டது."

குட்கா விவகாரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அங்கு சென்ற மற்றொரு அதிகாரியிடமும் நான் விசாரித்தேன். அவர் நான்கு ஆய்வாளர்களுடன் அங்கு சென்றார். ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு, மாதவரத்தில் நடந்துகொண்டிருந்த செம்மரக்கட்டை தொடர்பான சோதனைக்குச் செல்லும்படி கூறப்பட்டார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு இந்த சோதனை குறித்துத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் அந்த அணியை அங்கிருந்து செல்லும்படி கூறியிருக்கிறார் என்பதுதான்.

இந்த குட்கா விவகாரம் 2011லிருந்து பல ஆண்டுகளுக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் எனது புரிதல். அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த ஆணையர், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், ஆய்வாளர்களின் பட்டியலையும் விமலா என்னிடம் அளித்தார். கூடுதல் ஆணையர்கள் தாமரைக் கண்ணன், ஆபாஷ்குமார், ரவிகுமார், கருணாசாகர், சேஷசாயி, ஸ்ரீதர், வடபகுதி இணை ஆணையர்கள் செந்தாமரைக் கண்ணன், கே. சங்கர், ஸ்ரீதர், தினகரன், ஜோஷி நிர்மல் குமார், மாதாவரம் இணை ஆணையர்கள் ராஜேந்திரன், லட்சுமி, புகழேந்தி, ராமகிருஷ்ணன், விமலா, உதவி ஆணையர்கள் கந்தசாமி, மன்னர்மன்னன், லிங்கத்திருமாறன் ஆகியோர் இந்த காலகட்டத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் மாநகர ஆணையராக ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன், திரிபாதி, ஷுக்லா ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

நான் மூன்றாவது முறையாக சென்னை மாநகர ஆணையராக ஆன பிறகு, மத்திய குற்றப் பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்த நல்லசிவத்தை அழைத்து, ஜெயக்குமார் சோதனை நடந்த இடத்திற்குச் சென்றது தொடர்பாக எனக்கு ஏன் சொல்லவில்லையென்று கேட்டேன். அவர், ஜெயக்குமார் தனக்கு இதைச் சொல்லவில்லை என்றார். ஃபோனில்கூட யாரும் இது தொடர்பாக சொல்லவில்லையென்றார்.

குட்கா விவகாரம்

உளவுத் துறை அதிகாரியாக இருந்த வரதராஜு, அப்போதைய ஆணையர் டி.கே. ராஜேந்திரனுக்கு இவ்வளவு பெரிய நடவடிக்கை குறித்து அறக்கை அளித்தாரா என, ராஜேந்திரனிடம் கேட்டேன். அவர் இல்லையென்றார். விமலா தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கிறார். யார் அந்த உயர் அதிகாரிகள்? இவையெல்லாம் அடிப்படையான கேள்விகள்.

சென்னையில் சுமார் 300 காவல் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய சட்டவிரோத நடவடிக்கை ஆணையரின் ஆதரவுடன் மட்டும் நடந்துவிட முடியுமா? அதற்குக் கீழே ஆறேழு மட்டங்கள் இருக்கின்றன. பல்வேறு காலகட்டங்களில் இது நடந்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இது தெரியுமா? அவர்கள் என்ன செய்தார்கள்?

ஒரு குடும்பம் போல ஒன்றாகப் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றியே நான் சொல்ல வேண்டியிருப்பது குறித்து நான் வருந்துகிறேன்.

எனக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு, அவர்களது பணி குறித்து நல்ல மதிப்பீடுகளையே வழங்கியிருக்கிறேன். ஆனால், துரோகம் செய்த அதிகாரிகளைப் பற்றி என்ன சொல்வது? ஆணையர் அலுவலகத்தில் இருந்தபடியே பணியாற்றிய ஜெயக்குமாருக்கு மிக மோசமான பணி மதிப்பீட்டை அளித்தேன். சென்னை நகரில் நடக்கும் திட்டமிடப்பட்ட, பெரிய குற்றங்களையும் கும்பல் குற்றங்களையும் குறைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் அவருக்குத் தெரிந்தபோதும் அவர் அதனை தன் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. அவர் நம்பிக்கைக்கு உரியவகையில் நடந்துகொள்ளவில்லை. அவருக்கு சராசரிக்கும் குறைந்த மதிப்பீட்டையே நான் அளித்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தின. என் முகத்தைப் போட்டு போஸ்டர்கள் அடித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டன.

ஜார்ஜ்

குட்கா ஊழல் விவகாரம் எப்போது வெளியானது என்று பாருங்கள். 2017 ஜூன் 27ஆம் தேதி. அதாவது புதிய காவல் துறை தலைவர் நியமனம் செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியானது.

நேற்று சிபிஐ சோதனை நடத்தியபோது என்ன எடுத்துச் சென்றார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. 1994ல் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடத்தின் விற்பனைப் பத்திரம், சில ஒத்தி பத்திரங்கள், காரின் காப்பீட்டு ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன."

ஜார்ஜ் இந்தத் தகவல்களைத் தெரிவித்த பிறகு, செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.

18.12.2015 அன்று முன்னாள் ஆணையருக்கு கிறிஸ்துமஸிற்காக 15 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பது குறித்து குறிப்பாகக் கேட்டபோது ஜார்ஜ் கோபமடைந்தார். "இது முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தவர், ஒரு முன்னாள் ஆணையருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டுமெனக் கேள்வியெழுப்பினார். நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே என் மதத்தை தொடர்புபடுத்தி யாராவது பணம் வாங்கியிருக்கலாம். அப்படியிருந்தால் அது பற்றி விசாரிக்கட்டும்." என்று கோபத்துடன் பதிலளித்தார்.

"இந்த எல்லா விவகாரமுமே பெரிதாக்கப்பட்டது, நானோ டி.கே. ராஜேந்திரனோ காவல்துறைத் தலைவராக ஆவதைத் தடுப்பதற்காகத்தான். டி.கே. ராஜேந்திரன் ஓய்வுபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்த விவகாரம் வெளியானது. நான் குட்கா ஊழலே நடக்கவில்லையெனக் கூறவில்லை. ஆனால், எப்படி ரகசியமான ஆவணங்கள் எப்படி வெளியாகின?" என ஜார்ஜ் கேள்விகளை எழுப்பினார்.

தானோ, டி.கே. ராஜேந்திரனோ டி.ஜி.பியாவதைத் தடுக்கவே இந்த விவகாரம் வெளியிடப்பட்டது என்பதை செய்தியாளர் சந்திப்பின் இறுதியிலும் ஜார்ஜ் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-45447793

  • தொடங்கியவர்

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் விசாரணை: போலீஸ் அதிகாரிகள் விரைவில் கைது; ஆதாரங்களை திரட்டும் பணியில் டெல்லி சிபிஐ தீவிரம்

 

 
e985f22fP1512012mrjpg

செங்குன்றம் அருகே, மாதவ ராவுக்குச் சொந்தமான குட்கா குடோன்.(கோப்புப் படம்)

குட்கா ஊழல் விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களை கைது செய்ய டெல்லி சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, கலால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னை, மும்பை, பெங்களூரு, புதுவை என 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரி கள், நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, உணவுப் பாதுகாப்பு மற்றும் கலால் வரித்துறையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் மாதவ ராவை, செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான குட்கா கிடங்குக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் குடோனில் வைத்து மாதவ ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

லேப்-டாப்பில் பதிவு

குட்கா பொருட்களை குடோனுக்கு கொண்டு வருவது முதல் அதை அனைத்து இடங்களுக்கும் எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பது வரை அதிகாரிகள் கேள்விகள் கேட்ட னர். அதற்கு மாதவ ராவ் விளக்கமாக பதில் அளித்தார். அப்படி கொண்டு செல்லப்படும்போது யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்படும் என்பதையும் மாதவ ராவ் தெரிவித்தார். அதை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தங்களது லேப்-டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொண்டனர்.

சிபிஐ காவலில் மாதவ ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குட்கா ஊழலில் யார் யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும் ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இன்று அல்லது நாளை ஆஜராவார்கள் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். உயர் மட்டத் தில் இருக்கும் போலீஸ் அதிகாரி களுக்கு குட்கா லஞ்சப்பணம் கைமாறி யதில் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னனுக்கு தொடர்பு இருப்ப தாக கூறப்படுகிறது. எனவே, சிபிஐ விசாரணையில் அவர் உண்மைகளை கூறிவிட்டால் மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளது என்று காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தென்மண்டல சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாதவ ராவின் டைரியில் எழுதப்பட்டிருப்பதை ஒரு ஆதாரமாக வைத்து போலீஸாரை கைது செய்ய முடியாது. எனவே, போலீஸாருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தேடுகின்றனர். குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்யும் முடிவில்தான் சிபிஐ உள்ளது.. ஒருவேளை வலுவான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால், உயர் மட்டத்தில் இருந்து அனுமதி கொடுக்கும் பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது” என்றார்.

சிபிஐ காவலில் உள்ள மாதவ ராவ் உட்பட 5 பேரையும் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். எனவே, அதற்கு முன்னதாக அனைத்து தகவல்களையும் அதற்கான ஆதா ரங்களையும் திரட்டும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். இதற்காக டெல்லி சிபிஐ அதிகாரி கள் 13 பேர் தமிழகத்தில் முகாமிட்டு உள்ளனர்.

மேலும், தற்போது கைதாகியுள்ள 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று விடியவிடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை இன்னும் சில தினங்களில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24940435.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.