Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் ஆசைகளை பணத்தால் தணிக்கும் ஆணின் கதை #HisChoice

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன்.

அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

எனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை.

அந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தேன்.

எனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மூத்த மகனான என் திருமணத்திற்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குஜராத் மாநிலத்தில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவு. எனவே இங்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது சற்று சிரமமானது.

திருமணம் செய்துக் கொண்டால்தானே சமூகத்தில் மதிப்பும் கிடைக்கும், ஒருவருடைய பாலியல் விருப்பங்களும் நிறைவேறும்.

ஆனால் இயல்பான ஆசை கொண்டவர்களுக்கு திருமணம் ஆகாவிட்டால் என்னவாகும்?

எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுத்தது.

நடுத்தர வசதி கொண்ட சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த எனக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

அரசுப் பணியில் இல்லாத உங்கள் மகனுக்கு எப்படி பெண் கொடுப்பது? தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவனின் வாழ்க்கையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

உங்களுக்கு சொத்து என்று பெரிதாக எதுவுமே இல்லையே? என எனக்கு பெண் கேட்கச் செல்லும்போது பெற்றோர்கள் பல கேள்விகளை எதிர்கொண்டனர்.

ஆனால், என்னைவிட குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனது நண்பன் நீரஜூக்கு திருமணமானது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஏனென்றால் அவரது அப்பாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது.

நானும் எனது நெருங்கிய நண்பர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம்.

ஒருநாள் நாங்கள் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது, "ஏண்டா, கல்யாணம் ஆகலைனா என்ன குடியா முழுகிப் போயிடும். பொண்ணு கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கையை அனுபவிக்காம ஏன் தள்ளிப்போடற, அதுக்கு வேற வழியை பாக்கலாம்" என்று என் துக்கத்தை போக்கும் வழியைச் சொன்னார்கள் நண்பர்கள்.

"டேய், உலகம் ரொம்ப அழகானதுடா. வா. உனக்கு அதைக் காட்டுறோம்" என்று கூறி ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே உடலை முறுக்கேற்றும் வகையில் ஆபாசப் படங்களை பார்க்க வைத்த நண்பர்கள், திருமணம் செய்து கொள்வதும் இதற்குதான் என்று சொன்னார்கள்.

அங்குதான் ஒரு பாலியல் தொழிலாளியை சந்தித்தேன். முதல் அனுபவமே நன்றாக இருந்தது. ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆசை கட்டுக்கடங்காமல் பொங்கியது.

எனவே, பாலியல் தொழிலாளியை அணுகுவதை தொடர்ந்தேன். எனக்கு திருமணமும் நடக்கவில்லை, நானும் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை நிறுத்தவில்லை.

வயிற்று பசிக்கு ஹோட்டலுக்கு போவதுபோல், உடலின் தேவைகளை தணித்துக் கொள்ள ஹோட்டலுக்கு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ந்த எனது இந்த பழக்கம் வீட்டிற்கு தெரியவந்தபோது, என் அப்பாவின் கோபம் அணுகுண்டாய் வெடித்தது.

தோளுக்கு மேல் வளர்ந்த என்னை அவரால் அடிக்க முடியவில்லை, எனவே, அவரே அவர் கோபத்தால் கத்தி ஆத்திரத்தை தணித்துக் கொண்டார்.

   

"அவமானமாக இல்லையா? அம்மா, சகோதரிகளைப் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா? இனிமேல் சமூகத்தில் எப்படி நடமாடுவார்கள்? நாங்கள் யாரையாவது தலைநிமிர்ந்து பார்க்க முடியுமா? என்று வார்த்தைகளால் விளாசினார்.

மது அருந்திருயிருந்தபோது நண்பர்கள் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று பெண்ணையும் அனுப்பிவைத்தார்கள் என்று பதில் சொன்னதும் அவரின் கோபம் கரைபுரண்டது.

"அவர்கள் ஒருமுறை தானே கட்டாயப்படுத்தினார்கள்? அதே தவறை ஏன் ஐந்து வருடமாக தொடர்கிறாய்?" என்ற அப்பாவின் சீற்றத்திற்கு, அது உடலின் இயல்பான தாகம் என்பதை சொல்ல முடியவில்லை.

அக்கா, அவரது கணவர் என அடுத்து சுற்று படலம் தொடர்ந்தது. இப்படி பல சுற்றுகளாக அனைவரும் என்னை திட்டித் தீர்த்தது நான் ஏதோ கொலைக்குற்றம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

திட்டித் தீர்த்தாலும், உடலின் தாகம்தான் மோகமாக மாறி என்னை அலைகழித்தது என்பதை புரிந்துக்கொண்ட அப்பா, மூன்றாவது நாளே ஒரு பெண்ணைப் பற்றி என்னிடம் சொன்னார்.

"கணவனை இழந்த பெண், ஐந்து வயது மகன் இருக்கிறான். நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன். பெண்ணின் தந்தைக்கும் உன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டேன்.

பரவாயில்லை, திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார். இந்த பெண் நம் குடும்பத்திற்கும் ஏற்றவளாக இருப்பாள். இவளை திருமணம் செய்துக் கொள்" என்று அப்பா சொன்னார்.

"இப்போது நன்றாக சம்பாதிக்கிறாய், நல்லபடியாக குடும்பம் நடத்து" என்றும் அப்பா அறிவுரை சொன்னார்.

ஆனால் இந்த காலகட்டத்தில் எனக்கு வேறொரு பெண்ணை பிடித்துப்போய்விட்டது.

   

நான் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் அந்த பெண் வேலை பார்த்தாள். ஹவுஸ் கீப்பிங் பணியிலிருந்த அவளுக்கு சம்பளம் சுமாராக இருந்தாலும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பாள்.

நான் பாலியல் உறவுக்காகவே ஹோட்டலின் வாடிக்கையாளராக இருப்பதை தெரிந்துக் கொண்ட அவள், திருமணம் செய்து கொள்ளக் கோரிய எனது விருப்பத்தை நிராகரித்துவிட்டாள்.

அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டது எனக்கு வருத்தம் அளித்தது. வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. பிறகு வாழ்க்கையே தனிமையாகிவிட்டது.

திருமணம் இல்லாமல் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்தேன். ஆனால், எனக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

என்னை மையமாக வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பல்வேறு பிரச்சனைகளையும், அவமானங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே வேறுவழியில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டு வாரத்தில் பெற்றோர் என்னை வீட்டிற்கு அழைத்தனர். திரும்பி வந்தாலும், அவர்கள் என்னால் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பார்க்க முடியவில்லை.

சமூகத்தில் உள்ளவர்களுக்கு எனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலையைவிட, பொழுதுபோக்குவதற்கும், பேசுவதற்கும் பேசுபொருளாகிவிட்டது என் குடும்பம்.

பிறகு மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்ற முடிவு எடுத்தாலும், குடும்பத்திற்கும் பிரச்சனை இல்லாமல் ஊரில் இருந்தே வெளியேறிவிடலாம் என்று முடிவு செய்தேன். புதிய ஊர், புதிய மனிதர்கள்...

இப்போது என் மனதிற்கு தோன்றினாற்போல் வாழ்கிறேன்.

பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறேன். சில முறை என் முதலாளியும் என்னுடன் நான் செல்லும் இடங்களுக்கு என்னுடன் வருவார்.

திருமண பந்தத்தை தாண்டி உறவு வைத்துக் கொள்ளும் பெண்களிடமும் தொடர்பு வைத்திருக்கிறேன்.

வயது 39 ஆகிவிட்டது. இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை, கட்டுப்பாடான, நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், இன்று குடும்பமே இல்லாமல் வாழ்கிறேன். ஆனாலும் நான் இப்போது தனிமையில் வாடவில்லை.

திருமணம் என்பது என் வாழ்க்கையில் எட்டாக் கனியாகிப்போனதால், நான் பாலியல் இச்சைகளை வேறு பெண்களிடம் தீர்த்துக் கொள்கிறேன்.

வாழ்க்கை இயல்பாகவே சென்றுக் கொண்டேயிருக்கிறது...

என் குடும்பத்தினரும் காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டார்கள். என் தம்பி, ஒரு பழங்குடியினப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான்.

இதுவே என்னுடைய விவகாரம் வெளியாவதற்கு முன்னர் இது சாத்தியமாகியிருக்காது.

தற்போது நான் ஒரு நாடோடி... இப்போது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணமே எனக்கு போய்விட்டது. மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எந்தவொரு குறையும் இல்லை... குற்றவுணர்ச்சியும் இல்லை...

எனக்கு திருமணமாகி இருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால், இன்று சமுதாயத்தில் நான் சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

https://www.bbc.com/tamil/india-45763581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.